Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Posts posted by கிருபன்

  1. இலங்கைக்கான மீள் கட்டமைப்பு நிவாரணமாக 450 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் இந்தியா!

    டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது.

    கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.

    இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    https://www.samakalam.com/இலங்கைக்கான-மீள்-கட்டமைப/

  2. தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி காணி குறித்து வெளியிட்டுள்ள கருத்து!

    22 Dec, 2025 | 11:24 AM

    image

    (இராஜதுரை ஹஷான்)

    விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். திஸ்ஸ விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும் திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரர் குறிப்பிட்டார்.

    யாழ் - தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரருக்கு அமரபுர ஸ்ரீ கல்யாணவங்ச நிகாய உத்தரலங்கா உப பிரதான சங்க நாயக்க பதவி ஞாயிற்றக்கிழமை (21) கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    இந்நிகழ்வில் உரையாற்றிய தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கிந்தொட்ட நந்தாராம தேரர்,

    திஸ்ஸ விகாரையை அடிப்படையாகக் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பிரச்சினை தோற்றம் பெறாத வகையில் தீர்வு காண்பது மிகவும் சிறந்ததாக அமையும்.

    சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். இந்த பிரச்சினைக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும்.

    விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக அமையும்.

    திஸ்ஸ விகாரையை முன்னிலைப்படுத்தி தொடர்ச்சியான முரண்பாடுகள், பிரச்சினைகள் தோற்றம் பெறுவது முறையற்றது. இதற்கு உரிய தலைமைத்துவத்தின் ஊடாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும் என்றார்.

    https://www.virakesari.lk/article/234074

  3. புதிய கல்வி திட்டம் சமூகத்தை சீரழிக்கும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு

    22 December 2025

    1766379123_4953352_hirunews.jpg

    அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாலியல் கல்வி பாடத்திட்டத்திற்குக் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

    ஹங்வெல்ல, பஹத்கம புனித ஜோசப் தேவாலயத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

    புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கான அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

    ஆறு வயது முதலே மாணவர்களுக்கு பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் புதிய பாடத்திட்டம், சிறுவர் மனதில் தேவையற்ற மற்றும் 'இயல்புக்கு மாறான' விடயங்களைப் புகுத்துவதாக அவர் கவலை தெரிவித்தார்.

    பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கையின் கலாசாரக் கட்டமைப்பை இத்தகைய திட்டங்கள் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதற்காக, நாட்டின் கலாசார விழுமியங்களை அரசாங்கம் அடகு வைக்கக் கூடாது என அவர் எச்சரித்தார்.

    அரசியல் தலைவர்கள் தமக்குரிய எல்லைக்குள் நின்று செயற்பட வேண்டும் என்றும், குடும்பம் மற்றும் மத விழுமியங்களுக்கு முரணான விடயங்களில் தலையிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    சிறுவர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், அந்த உரிமைகள் அவர்களை பெற்றோருக்கு எதிராகத் திருப்புவதற்கோ அல்லது குடும்பக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என கர்தினால் வலியுறுத்தினார்.

    https://hirunews.lk/tm/437007/new-education-plan-will-destroy-society-malcolm-ranjith-alleges

  4. கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ஜெனரல் பலி

    image?url=https%3A%2F%2Fada-derana-tamil

    கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

    சர்வரோவ் ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

    இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 

    ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

    https://adaderanatamil.lk/news/cmjguuaos02zvo29nzfr3b689

  5. பெயரில் மட்டுமே மாற்றம் : ஆனால் ஆபத்து

    லக்ஸ்மன்

    தமது உரிமைகளுக்காகப் போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி, அச்சுறுத்தி, உரிமைகளை நசுக்க அரசால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம் என்ற நிலைப்பாடே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில்தான், “பயங்கரவாதமானது, அதன் பல்வேறு வடிவங்களிலும் வெளிப்படுத்தல்களிலும் நாடுகளினது சமுதாயத்தின் சமாதானத்துக்கும் பந்தோபஸ்துக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாதலாலும், அத்துடன் இலங்கையையும், அதன் மக்களையும், அவர்களின் ஆதனங்களையும் பயங்கரவாதச் செயல்களிலிருந்தும் தொடர்புபட்ட செயல்களிலிருந்தும் பாதுகாத்தல் இலங்கை அரசாங்கத்தின் முதன்மைக் கடமையொன்றாக உள்ளதாதலாலும் என்ற முன்னுரை அடியைக் கொண்டு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    நாட்டின் முன்னேற்றத்துக்காக எதனை முதலில் செய்யவேண்டும். எது இப்போது தேவையானது என்பதனைப்பற்றிய யோசனைகளின்றி சில விடயங்கள் இந்த ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியேற்பு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாகப் பல அசம்பாவிதங்கள், அனர்த்தங்கள் நிகழ்கின்றன. இது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டவைகள் இல்லையானாலும், மக்களது பிரச்சினை என்பது பொதுவானதாக இருந்து விடுகிறது.

    அனர்த்தத்தினை அரசியலாக்க முயற்சி நடக்கிறது. இராணுவத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாட்டின் முன்னேற்றமே நோக்கம் என்று கூறிக் கொண்டு அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறுகின்றன என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றினை காதில் வாங்கிக் கொள்ளாது நடைபெற்று வருகின்ற செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே தற்போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில், பயங்கரவாதக் குற்றங்கள் எனும் பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்ற  பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டத்தையும் பார்க்கலாம்.

    இலங்கையை பொறுத்தவரையில், பிரித்தானியரிடமிருந்து கையளிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர், 70களில் நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஒரு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அடுத்தது வடக்குக் கிழக்கை தாயகமாக் கொண்ட தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர். ஆரம்பத்தில் அது அகிம்சை வழியாக இருந்த போதிலும் அரசின் அடக்குமுறைகள், இராணுவ மயமாக்கல், நெருக்கடிகள் ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமாகின. அந்த ஆயுதப் போராட்டத்தினை அடக்குவதற்காக 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) கொண்டுவரப்பட்டது. இருந்தாலும், இதுவரையில் அச்சட்டம் நீக்கப்படவில்லை.

    கடந்த அரசாங்க காலங்களில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி தமிழ்த் தேசியத் தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்திருந்ததுடன், போராட்டங்களையும் நடத்தினர். அக் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்புச் செய்திருந்தனர். ஆனால் அந்த வேகம் இப்போது இல்லாமலிருப்பது கவலையளிப்பதாகத் தமிழ்த் தலைவர்கள் கருத்து வெளியிட்டுமிருந்தனர். இருந்தாலும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்களின் பின்னர், நாட்டில் நிகழ்ந்த ஈஸ்ர் குண்டுத் தாக்குதல்கள் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கான தேவையைத் தூண்டின. அப்போது பயங்கரவாத தடைச்சட்டம் முஸ்லிம்கள் மீது பாயத் தொடங்கியது. அதே நேரத்தில் கோட்டாபய  ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்து வேளையில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் சிங்களவர்களையும் அச்சட்டம் பதம்பார்க்க வழியைக் கொடுத்தது. அதுவரையில் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றிய கவலையேயின்றி இருந்து வந்த முஸ்லிம், சிங்கள மக்கள் தங்கள் மீது அச்சட்டம் பாய்ந்த வேளையில் விழித்துக் கொண்டனர்.

    தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் விடுவிக்கப்படாமைக்கு தென்பகுதியிலிருக்கும் புலிகளின் மீளுருவாக்கம் என்ற அச்சம் காரணமாக இருந்தது. இப்போதும் தொடர்கிறது. ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கான காரணிகளை அவ்வாறே வைத்துக்கொண்டு நாட்டில் அனைத்து மக்களிடமும் சமாதானத்தை ஏற்படுத்த முயல்வதும், நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களையும் ஏனைய மக்களையும் கிலிகொள்ளச் செய்து மீண்டுமொரு நெருக்கடி, ஆபத்து மிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு நடைபெற்றுவருகின்ற முயற்சி முறியடிக்கப்படவேண்டும் என்பது பெரும்பான்மையானவர்களின் எண்ணமாக இருந்தாலும் நடைபெறப் போகும் ஆபத்து தடுக்கப்படுமா என்பதுதான் சந்தேகமானது.

    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே செயற்படுவோம் என்ற நிலைப்பாட்டிலிருக்கும் தமிழ்த் தரப்பு தங்களது பக்க நியாயங்களைச் சொல்கின்றன. அமைப்புகள் ரீதியாவும், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், கட்சிகளாகவும் கருத்துகள் வெளிவருகின்றன.

    அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஒரு மாத காலம் கருத்தறிய வழங்கியிருந்த போதிலும் தற்போது பெப்ரவரி 28ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டவரைவு குறித்து கடந்த ஒகஸ்ட் மாத்தில் அரசாங்கம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் இப்போது வரைபு

    வெளியிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒருசிலருடைய கருத்து இது சரியான காலமா என்பதே.  தித்வா சூறாவளியால் நாடு பாதிக்கப்பட்டு நெருக்கடி நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், இச்சட்டம் கொண்டுவருவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்பது அதன் பொருள்.

    பயங்கரவாதத்தடைச் சட்டத்திற்குப் பதிலீடாக முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அனைவராலும் எதிர்க்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அரசைப்பாதுகாக்கும் சட்டமானது அச்சட்டங்களை விடவும் மோசமானதாகவே சொல்லப்படுகிறது.  பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பிரத்தியேக சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த  'தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த போதிலும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிறி தொரு சட்டத்தின் ஊடாக பதிலீடு செய்ய முனைவது வாக்குறுதிகளை மீறும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

    எந்தவொரு சட்டமும் வெளிப்படையானதும் கலந்துரையாடலுக்குள்ளாக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில விடயங்களை கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு ஒரு சட்டம் ஏற்படுத்தப்படுமாக இருந்தால், அதனை சகலரையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மைவாய்ந்ததாகக்  கொள்ள முடியாது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த இடத்தில் பயங்கரவாத்தத தடைச்சட்டம் போன்றதொரு சட்டம் தேவையில்லை என்ற அழுத்தம் காணப்படுகின்ற வேளையில், இச்சட்டத்தை அரசாங்கம் ஏன் கொண்டுவர முயற்சிக்கிறது என்பதுதான் கேள்வி.

    இருந்தாலும், வழமைபோலவே முக்கியமான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற வேளைகளில் அது குறித்து பொதுமக்களுடக்  கலந்துரையாடல்கள் நடத்தி, விளிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடும் சிவில் அமைப்புகளில் பெரும்பான்மையானவைகள் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பான வேலைகளில் இருக்கின்ற வேளையில் இச்சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தறியும் செயற்பாடு சிறப்பாக நடைபெறுமா என்பதும் கலந்துரையாடலுக்கானதே.

    இந்நிலையில், சட்டமூலம் தொடர்பில் வெளியிடப்பட்டு வருகின்ற கருத்துக்களின் முக்கியமாக, சட்டமூலத்தை  பொதுத்தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டமைக்குப் பாராட்டியுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கருத்துக்களை முன்வைப்பதற்கும், கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் மேலும் கால அவகாசத்தைச் கோரியிருக்கிறது. அத்தோடு, இந்த சட்டமூலமானது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட முன்னேற்றகரமானதாக இருக்கின்றதா? எனும் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படக் கூடாது. மாறாக நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் இலங்கை கொண்டிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் சார் கடப்பாடுகளுக்கு அமைவாக  அமைந்திருக்கின்றதா என்ற அடிப்படையில் மதிப்பிடவேண்டும். பயங்கரவாதத்தடைச் சட்டம் அரசியலமைப்பின் பிரகாரம் வரையப்பட்டது அல்ல என்பதையும், அதனை அடிப்படை உரிமைகள் சார் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    இச் சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில், அரசாங் கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் கூறியிருக்கின்றார். ஒட்டு மொத்தத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட்ட வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில்  பயங்கரவாதம் என்பதனை பயங்கரவாதத்திலிருந்து மாற்றி மேலும் மோசமானதொரு சட்டத்தை ஏற்படுத்த முனையும் அரசின் செயற்பாடு  இடதுசாரித்தனம்தானா என்றே கேட்கத் தோன்றுகிறது.

    எது எவ்வாறானாலும், சர்வதேச தரநெறிகளினதும் நியமங்களினதும், உள்நாட்டுத் தேவைகளினதும் அடிப்படையின்மீது, பயங்கரவாதத்துக்கு எதிராகக் குற்றவியல் நீதியை நிருவகிப்பதற்கான பயனுள்ள முறைமையொன்றை வலுவுறுத்துவதனூடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையில் அடியோடு அழிப்பதற்கும் தடுப்பதற்கும் உறுதி பூண்டு உருவாக்கப்படுகின்ற இச்சட்டத்தால் நாடு எப்பாடுபடப்போகிறதோ என்பதை எதிர்காலமே  தீர்மானிக்கும்.  

    https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெயரில்-மட்டுமே-மாற்றம்-ஆனால்-ஆபத்து/91-369951

  6. “சோத்துக்கு வழி இல்லாதவர்களா?” பளையில் கிராம சேவையாளருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்!

    adminDecember 22, 2025

    பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவி நகர் மற்றும் ஆராதிநகர் கிராம மக்கள், தமது கிராம சேவையாளரின் பொறுப்பற்ற செயல்பாடுகளைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 21) பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

    மக்கள் முன்வைக்கும் அதிரடிப் புகார்கள்:

    தனது அவல நிலையைத் தொலைபேசியில் விவரித்த பெண்ணொருவரிடம், “சோத்துக்கு வழி இல்லாதவர்களுக்கு சாமான் கொடுக்க முடியாது” என கிராம சேவையாளர் மிகக் கேவலமாகப் பேசியதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

    வெள்ள நீரை வெளியேற்ற குளத்தைப் புனரமைக்க ஏனைய அரசுத் தரப்புகள் அனுமதி அளித்தும், கிராம சேவையாளர் அதற்குத் முட்டுக்கட்டை போடுவதாகக் கிராம அமைப்புகள் தெரிவிக்கின்றன.

    ஜனாதிபதியின் ஆலோசனைக்கு முரணான செயல்?

    பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்திக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், குறித்த அதிகாரி மக்களை அலட்சியப்படுத்துவதுடன், ஏழை மக்களை இழிவுபடுத்துவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடரும் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் “பொறுப்பான அரசாங்கம்” முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    https://globaltamilnews.net/2025/224692/

  7. 2 hours ago, Kavi arunasalam said:

    இவர் இப்படித்தான் என்று முத்திரை குத்தாமல் இருக்க, ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை’யும், ‘சித்தாந்த வினாவிடை’யும் தேவைப்படுகிறது. பிழைக்கத் தெரிந்த ஆள்.

    ஆசான் ஜெயமோகனின் வெண்முரசு தொடர் காவியம் இன்னும் வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.

    18 ஆம் நாள் போர் முடிந்து துரியோதனன் மனிதர்கள் நுழையாத காலகம் என்னும் அடர்காட்டினுள் ஒரு ஏரிக்குள் மறைந்திருக்கின்றான். அவனை ஒரு நாளுக்கு மேலாக தேடி கிருஷ்ணனுடன் வரும் பாண்டவர்கள் ஏரிக்குள் இருந்து துரியோதனனை வெளிவரச் செய்து பீமனுடனான கதைப் போருக்கு தயாராகும் இடத்தில் நிற்கின்றேன்.

    துரியோதனன் 18ஆம் நாளிலா அல்லது 19ஆம் நாளிலா மரணமடைந்தான் என்பது மயக்கமாக உள்ளது.

    தொடர்ந்து மகாபாரதத்தைப் படிக்காமல் கிடைக்கும் இடைவெளியில் சிறுகதைகள், தத்துவங்களைப் படிக்கின்றேன். ஆனால் எல்லாம் புரிவதில்லை!

    படிப்பவற்றில் சிலவற்றைத்தான் யாழில் பதிவதுண்டு..😃

  8. 2026 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி விவரம்- தமிழக வீரர்கள் யார் யார்?

    21 Dec 2025, 12:52 AM

    T20 India Squad

    2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று (டிசம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது. துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறும்.

    இந்தியா, இலங்கையில் இந்த போட்டிகள் நடைபெறும்.

    இந்திய அணி வீரர்கள்:

    கேப்டன்: சூர்யகுமார் யாதவ்
    அபிஷேக் சர்மா
    சஞ்சு சாம்சன்
    திலக் வர்மா
    ஹர்திக் பாண்டியா
    சிவம் துபே
    அக்சர் படேல்
    ரிங்கு சிங்
    ஜஸ்பிரித் பும்ரா
    ஹர்ஷித் ராணா
    அர்ஷ்தீப் சிங்
    குல்தீப் யாதவ்
    வருண் சக்கரவர்த்தி
    வாஷிங்டன் சுந்தர்
    இஷான் கிஷன்

    • சுப்மன் கில் இந்த உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    • தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் பங்கு பெறும் அணிகள்:

    குரூப் A:

    இந்தியா
    நமீபியா
    நெதர்லாந்து
    பாகிஸ்தான்
    அமெரிக்கா

    குரூப் B:

    ஆஸ்திரேலியா
    அயர்லாந்து
    ஓமன்
    இலங்கை
    ஜிம்பாப்வே

    குரூப் C:

    வங்கதேசம்
    இங்கிலாந்து
    இத்தாலி
    நேபாளம்.
    மேற்கிந்தியத் தீவுகள்

    குரூப் D:

    ஆப்கானிஸ்தான்
    கனடா
    நியூசிலாந்து
    தென்னாப்பிரிக்கா
    ஐக்கிய அரபு அமீரகம்

    இந்தியாவும் இலங்கையும் போட்டி நடத்தும் நாடுகள் என்பதால் டி20 உலகக் கோப்பை தொடர்ல் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

    ICC T20 உலகக் கோப்பை – சாம்பியன் பட்டியல்

    வரிசை

    நாடு / அணி

    மொத்த வெற்றிகள்

    வெற்றி பெற்ற ஆண்டுகள்

    1

    இந்தியா

    2 முறை

    2007, 2024

    2

    மேற்கிந்தியத் தீவுகள்

    2 முறை

    2012, 2016

    3

    இங்கிலாந்து

    2 முறை

    2010, 2022

    4

    பாகிஸ்தான்

    1 முறை

    2009

    5

    இலங்கை

    1 முறை

    2014

    6

    ஆஸ்திரேலியா

    1 முறை

    2021

    https://minnambalam.com/2026-icc-mens-t20-world-cup-indian-team-squad-details/

  9. 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்- இன்று திமுக மா.செ.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

    21 Dec 2025, 7:19 AM

    DMK DS Meeting

    தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை SIR- இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதேநேரத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் வாக்காளர்கள் நீக்கம், மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க திமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடியோ கான்பரன்ஸ் மூலம் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

    https://minnambalam.com/97-37-lakh-voters-deleted-cm-stalin-to-hold-consultation-with-dmk-district-secretaries-today/

  10. கொஞ்சம் மாற்றங்கள் உள்ள இன்னோர் அலசல்..

    தமிழ்நாட்டை நோக்கிச்சென்ற தமிழ்த்தேசியப் பேரவை - நிலாந்தன்

    600143479_1255608483372907_8348978700758

    “சென்னையில் திறவுகோல்” என்ற தலைப்பில் மு.திருநாவுக்கரசு, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 2006ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் இந்தியாவின் வெளியுறவு முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்றால் தமிழகம் பெருமெடுப்பில் கொந்தளிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதாவது டெல்லியைக் கையாள்வதற்கான திறவுகோல் தமிழகத்தில்தான் உண்டு என்ற பொருள்பட கட்டுரையின் சாராம்சம் அமைந்திருந்தது. தமிழக வெகு சனங்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்தளித்து எழுந்தால் இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று கட்டுரை கூறுகிறது. இது எழுதப்பட்டது 18.11.2006 இல். அதாவது 2009 மே மாதத்துக்கு முன்.

    இறுதிக்கட்டப் போரில் தமிழகம் நொதிக்கத் தொடங்கியது. எனினும் அதனை அப்போது இருந்த திமுக அரசாங்கம் மடை மாற்றியது என்றும், அதனால்தான் இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற முடிந்தது என்றும் ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு. இக்குற்றச்சாட்டு காரணமாக கலைஞர் கருணாநிதியை இப்பொழுதும் விமர்சிக்கும் ஈழத் தமிழர்கள் உண்டு.

    இவ்வாறான குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையிலான உறவு பெருமளவுக்கு பலவீனமடைந்திருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாடு ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை; கொந்தளிக்கவில்லை.

    தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் உருவாக்கப்பட்டமை, ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை போன்ற இரண்டு குறிப்பிடத்தக்க விடயங்களைத்தவிர கடந்த 16 ஆண்டுகளாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக நொதிக்கவில்லை.

    கடந்த 16 ஆண்டு கால ஈழத்தமிழர்களின் ஐநாமைய அரசியலில்,ஐநா கூட்டத்தொடர்களின்போது இந்திய மத்திய அரசாங்கம் 13ஆவது திருத்தத்தைத்தான் ஒரு தீர்வாக தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. கடந்த ஐநா தீர்மானத்தின் போதும் அதுதான் நிலைமை. கடந்த 16 ஆண்டுகளிலும் இந்தியா ஐநாவில் ஒரு முறை மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    கடந்த பதினாறு ஆண்டுகளிலும் இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்து வருகின்ற பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தின் கீழ், ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாடுகளில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. ஐநாவில் இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் மாறாத நிலைப்பாடு அதைத்தான் உணர்த்துகின்றது. அவ்வாறு இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் தக்க விதத்திலோ அல்லது ஈழத் தமிழர்களோடு தனது சகோதரத்துவத்தை நிரூபிக்கும் விதத்திலோ தமிழ்நாடு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு கொதிக்கவில்லை.கொந்தளிக்கவில்லை.

    2009க்குப் பின் திமுகவுக்கு எதிராகவும் ஏனைய திராவிடக் கட்சிகளுக்கு எதிராகவும் “தமிழ் எதிர் திராவிடம்” என்ற துருவநிலை அரசியலை முன்னெடுக்கும் சீமான், தன்னை ஈழப் போரின் ஆகப் பிந்திய வாரிசாகக் காட்டிக்கொள்கிறார். ஆனால் அவரால் சில பேரணிகளை ஒழுங்குபடுத்தியதற்குமப்பால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழுத் தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் விதத்தில் பேரெழுச்சிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ ஒருங்கிணைக்க முடியவில்லை.

    எனினும் ஈழத் தமிழர்கள் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்தும் ஒரு பேசு பொருளாக அல்லது பேசப்பட வேண்டிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது என்பதைத்தான் நடிகர் விஜய் அண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தெரிவித்த கருத்துக்கள் காட்டுகின்றன. அதாவது தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் சூழல் இப்பொழுதும் உண்டு. ஆனால் அது ஒர் உள்ளுறையும் சக்திதான். அதனை மகத்தான ஒரு மக்கள் சக்தியாக, எழுச்சியாக, கொந்தளிப்பாக மாற்ற சீமானால் முடியவில்லை. திராவிட இயக்கக் கட்சிகளும் அதில் ஆர்வம் காட்டவில்லை.

    தமிழ்நாட்டில் இறுதிக்கட்டப் போர் வரையிலும் 19க்கும் குறையாத தமிழர்கள் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எந்த ஒரு தமிழ்ச் சமூகமும் அவ்வாறு ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை. ஒரு நீரிணையால் பிரிக்கப்படுகின்ற தமது சகோதர மக்களுக்காக அவ்வாறு அதிக தொகையினர் தீக்குளித்தமை என்பது தமிழகத்தில் மட்டுமே நடந்திருக்கிறது. நவீன அரசியலில் ஒப்புவமை இல்லாத போற்றுதலுக்குரிய தியாகம் இது.

    facebook_1766118925953_74076396756028843

    facebook_1766118734333_74076388718912576

    facebook_1766143770448_74077438809674807

    முதலாவது முள்ளிவாய்க்கால் நினைவாலயம் தமிழகத்தில் தஞ்சாவூர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சசிகலாவின் கணவருடைய காணியில் கட்டப்பட்டது. தமிழ் இனஅழிப்புக்கு எதிராக உலகின் முதலாவது தீர்மானம் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. எனவே ஈழத் தமிழர்களுக்காக பல விடயங்களை முதலில் செய்தது தமிழகம்தான்; தீக்குளித்தது தமிழகம்தான். அப்படிப்பட்ட தமிழகம் கடந்த 16 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது.

    இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் சூழலில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையானது கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக ஒரு விஜயத்தை மேற்கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியப் பேரவையில் பங்காளிகளாக இருக்கும் ஏனைய கட்சித் தலைவர்களும் தமிழகம் செல்வதற்குத் தயாராக இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், தவறாசா ஆகிய மூவரும் மருத்துவக் காரணங்களுக்காகப் பயணம் செய்யமுடியாத ஒரு நிலைமை தோன்றியதால் ஐங்கரநேசன் மட்டும் அந்தத் தூதுக்குழுவில் இணைந்தார்.

    இத்தூதுக்குழுவானது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினும் உட்பட ஏனைய கட்சித் தலைவர்களையும் மூத்த ஈழ உணர்வாளர்களும் சந்தித்திருப்பதாகத் தெரிய வருகிறது. 2009க்குப் பின்னர் தமிழ்நாட்டை நோக்கிச் சென்ற ஒப்பீட்டளவில் பெரிய தமிழ்த் தேசிய அரசியல் தூதுக்குழு இதுவெனலாம். ஏற்கனவே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனித்தனியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தை நோக்கித் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகத் திரண்ட ஒரு சந்தர்ப்பம் சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் கைதியாகிய சாந்தனின் விடயத்தில் இடம்பெற்றது. சாந்தனை விடுவிக்கக்கோரி அப்போது இருந்த தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தார்கள்.

    அதன்பின் இப்பொழுது ஒரு தூதுக்குழு தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது. இத்தூதுக்குழு தமிழ் நாட்டுக்குச் சென்றிருக்கும் அதே காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இவ்வாறு ஒரே சமயத்தில் பிராந்திய அரசியலைக் கையாள முற்படுவது வரவேற்கத்தக்கது.

    அரசியல் என்பது சாத்யக்கூறுகளின் கலை.பிராந்தியத்திலும் அனைத்துலக அளவிலும் காணப்படும் வாய்ப்புக்களை கெட்டித்தனமாகக் கையாளாமல் ஈழத் தமிழர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது.

    கடந்த வாரம்,யாழ்ப்பாணத்தில் நடந்த மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர்,யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை அகற்ற வேண்டும், இங்கு சீனத் தூதரகத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருக்கும் ஒரு காலச்சூழலில்,கிழக்கைரோப்பாவில், உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதில்லை என்ற முடிவை அறிவித்திருக்கும் ஒரு காலச் சூழலில், தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

    https://www.nillanthan.com/8024/

  11. 46 minutes ago, goshan_che said:

    பழைய பூங்கா ஒரு வரலாற்று, மரபியல், சுற்றுச்சூழல் பூங்கா - அதை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

    யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை அழிக்காமல் விகாரமகாதேவி பூங்கா மாதிரி மாற்றலாம்.. ஆனால் மரங்களுக்குக் கீழே குடைக்குள் குலாவும் நிலையை உருவாக்கக்கூடாது!

  12. வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன்

    vedan-accusations.jpg

    சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள்  சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.

    வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீனம் என்று உலகளாவிய அரசியலைப் பேசும் பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய முக்கியத்துவமே அவ்வாறான போராடும் மக்களின் குரலாக ஒலிப்பதுதான்.கரிய தேகம்;சீவப்படாத தலைமுடி; கழுத்தில் பெரிய உலோக மாலை; சில மேடைகளில் மேல் சட்டை இல்லாமலேயே காணப்படுகிறார். தனது உடல் மொழி, பாடல் வரிகள்,உச்சரிப்பு போன்ற எல்லாவற்றிலும் அவர் தன்னை ஒரு கட்டுடைப்பாளனாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிக்காட்டுகிறார்.

    எனினும் அவர் மீது பாலியல் வகைப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. அவரால் பாதிக்கப்பட்டதாக கூறி பெண்கள் சிலர் நீதிமன்றங்களை நாடியிருந்தார்கள். அவை தமது புகழை மங்கச் செய்வதற்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று வேடன் தரப்பு கூறுகிறது.

    வாகீசன் வேடனை விடவும் வயது குறைந்தவர். எங்கே வேடனிடமிருந்து வித்தியாசப்படுகிறார் என்றால்,அவர் நேரடியாக புரட்சிகரமான விடயங்களைப் பாடுவதில்லை. ஜனரஞ்சகமான விடயங்களைத்தான் பாடுகிறார். ஆனால் அதிகம் பிரபல்யமடைந்த அவருடைய முருகன் பாடல் “காக்கும் வடிவேல்” முருக பக்திப் பாடல் மட்டுமல்ல அங்கே அரசியல் உண்டு. அந்தப் பாடலுக்கு மதப்பரிமாணம் மட்டுமல்ல. அரசியல் பரிமாணமும் உண்டு. அங்கே முருகன் மீட்பின் கடவுளாக, போராடும் மக்களின் தலைவனாக, போராடி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை கட்டமைத்த தலைவனாகக் காட்டப்படுகிறார். அதில் மறைமுகமாக அரசியல் உண்டு. வேடனைப்போல வாகீசன் வெளிப்படையாக,நேரடியாக அரசியலைப் பாட முடியாத அரசியல் சூழலுக்குள் வாழ்பவர்.

    601136910_3766859750274748_8295561209694

    வாகீசனின் முருகன் பாடலில் பாரம்பரிய இசைக் கூறுகளும் உண்டு. அது ஒரு ஹைபிரிட் பாடல். ரப் பாடலாகவும் இருக்கிறது. அதேசமயம் சாஸ்திரிய சங்கீதத்தின் கூறுகளும் உண்டு. அதன் கலப்பு வடிவம்தான் அதற்குள்ள கவர்ச்சி. வாகீசனைத் தூக்கிய பாடல் அது. அந்தப் பாடலில் உள்ள ஹைபிரிட்தனம்தான் அந்தப் பாடலைப் பரவலாக்கியது. இப்பொழுதும் அந்தப் பாடலுக்கு ஆடும் பெரும்பாலான தென்னிந்திய நடனக் கலைஞர்கள் அப்பாடலில் உள்ள மரபு இசை வகைப்பட்ட பகுதிக்குத்தான் ஆடுகிறார்கள். ரப் இசைக்கு அல்ல.

    ஒரு சமையல் நிகழ்ச்சியின் ஊடாக அதிகம் பிரபல்யமான அவருடைய தனித்துவம் எதுவென்றால், அசல் யாழ்ப்பாணத்து தமிழில் அவர் கதைப்பது. அதில் ஒருவித அப்பாவித்தனமான ஆர்வம் இருக்கும். அதேசமயம் வேரை விட்டுக் கொடுக்காத தனித்துவமும் இருக்கும். தமிழ்நாட்டில் வசிக்கும் அல்லது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி சென்றுவரும் ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் உரையாடும்போது அல்லது தமிழகத்தவரோடு உரையாடும்போது ஒரு தமிழ்நாட்டுக்காரரை போலவே பெரும்பாலும் உரையாடுவார்கள். முதலாவதாக தங்களுடைய தமிழ் அவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற கரிசனை. இரண்டாவதாக தன்னுடைய ஈழத்தமிழ் அடையாளம் காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும் தற்காப்பு உத்தி போன்ற பல காரணங்களினாலும் அவ்வாறு தமிழ்நாட்டு தமிழைக்  கதைப்பதுண்டு.”டூரிஸ்ட் பாமிலி” திரைப் படத்தில் வருவதுபோல.

    ஆனால் வாகீசன் ஒரு ஜனரஞ்சக மேடையில் யாழ்ப்பாணத்துத் தமிழை பேசுகிறார். அந்தத் தமிழில் எழுதப்பட்ட வரிகளை இசைக்கிறார். அவருக்கு கிடைக்கும் பிரபல்யத்துக்கு அவருடைய தமிழும் ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம் அவரைத் தூக்கிய பாடல் ஒரு முருக பக்திப் பாடலாக இருப்பது. அதில் அரசியல் வாடையும் இருப்பது. அந்தப் பாடலுக்குள்ள மதப்  பரிமாணமும் அது திடீரென்று பெற்ற எழுச்சிக்கும் பிரபல்யத்துக்கும் ஒரு காரணம். அதற்கு இந்தியாவின் இப்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் அனுகூலமானது.

    கடவுளர்கள் ஏற்கனவே ரப் இசைக்குள் வந்துவிட்டார்கள். கிறிஸ்தவ ரப் பாடல்கள் ஏற்கனவே வந்து விட்டன. சிவன்,ஹனுமான் போன்ற கடவுளர்க்கும் ரப் பாடல்கள் உண்டு. தமிழ் பக்தி இலக்கிய மரபில்,அருணகிரிநாதரின் திருப்புகழில் ரப் சாயல் உண்டு. முருக பக்தி மரபில் ஏற்கனவே சுசீலா ராமன் என்ற பெண் இசையமைப்பாளர் தமிழ் முருக பக்திப் பாடல்களை ஆடலுக்கு ஏற்ப மீள உருவாக்கிப் பாடியிருக்கிறார்.

    சுசீலா ராமன் இந்திய வேரிலிருந்து வந்த பிரத்தானிய இசையமைப்பாளர். பல்வேறு இசைப் பாரம்பரியங்களையும் கலந்து பரிசோதனை செய்தவர். ஏற்கனவே உள்ள முருக பக்தி பாடல்களை துள்ளிசையாக ரீமேக் செய்தவர். அவரும் தன் பாடலுக்கு ஒத்திசைவான கோலத்தோடு மேடையில் தோன்றுவார். அடங்காத சுருள் முடி. எப்பொழுதும் ஆடத் தயாரான நெகிழும் உடல். சுசீலா மேடையில் பரவசமாகி தன்னை மறந்து துள்ளிக்குதித்துப் பாடுவார். அவருடைய பாடல்கள் இப்பொழுது நமது உள்ளூர் கோவில்களில் ஒலிக்க விடப்படுகின்றன. கோவில் மேடைகளிலும் ஏனைய இசை மேடைகளிலும் நமது உள்ளூர் பாடகர்கள் அவற்றைப் பாடக் கேட்கலாம். புதிய தொழில்நுட்பமும் அந்தத் தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள புதிய தலைமுறையும் ரசனைகளிலும் பாடல்களிலும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றத்தை விரும்புகின்றது.

    17659818511335870807909022864343-952x102

    இது ரசனை மாற்றத்தை, புதிய தொழில்நுட்ப வருகைகளால் ஏற்பட்டிருக்கும் லயமாற்றத்தை காட்டுவது. ஒரு தலைமுறை பக்திப் பாடல்களையும் ரப் இசையில் கேட்க விரும்புகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் ஈழத்து உச்சரிப்பில் ரப் பாடலைக் கேட்கும் ரசிகர்களின் தொகை அதிகரிக்கின்றது.சமூக வலைத்  தளங்களில் அலையும் ஒரு தலைமுறையின் இசை,அரசியல்,அறிவியல் தொடர்பான பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

    ஏற்கனவே “சரிகமப” நிகழ்ச்சியில் ஈழத்துப் பாடகர்கள் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள்.அதில் வணிக உள்நோக்கங்கள் இருக்கலாம். ஆனாலும் பாக்கு நீரிணையின் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு கடந்த 16 ஆண்டுகளாக அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கும் ஓர் அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில், ஈழத்துப் பாடகர்கள் தமிழக மேடைகளை நோக்கிச் செல்வது பிணைப்புகளைப் பலப்படுத்தும். சரிகமப மேடை என்பது அதிகபட்சம் ஜனரஞ்சக வணிக சினிமாவின் நீட்சியும் அகற்சியுந்தான். அங்கே மரபுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவது குறைவு. ஆனால் ரப் இசை எப்பொழுதும் மரபுகளை உடைப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

    அதன் தொடக்கமே புரட்சிகரமானது. மேற்கில் அது எதிர்ப்பின் வடிவமாகத்தான் எழுச்சி பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள்,நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிக்காட்டும் இசை வடிவமாக அது மேலெழுந்தது. அங்கே இசை அல்லது தாள லயத்துடன் உச்சரிக்கப்படும் வரிகள் எதிர்ப்பின் கருவிகளாக மேல் எழுகின்றன.

    ஈழத் தமிழ் வேரில் பிறந்த வேடனும் வாகீசனும் இந்திய உபகண்டப் பரப்பை நோக்கி, பெருந் தமிழ்ப் பரப்பை நோக்கிப் பாடுகிறார்கள். சரிகமப மேடையில் ஈழத்துப் பாடகர்கள் பாடுகிறார்கள். ”டூரிஸ்ட் பமிலி” திரைப்படம் ஈழத் தமிழர்களை நோக்கிக் கேட்கிறது “உங்களை யார் அகதி என்று சொன்னது?” என்று. இவை யாவும் கடந்த 16ஆண்டுகளாக மெலிந்து போயிருக்கும் தமிழக-ஈழத் தமிழ்ப் பிணைப்புக்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான நம்பிக்கைகளைப்  புதுப்பிக்கின்றன;பலப்படுத்துகின்றன.

    https://www.nillanthan.com/8018/

  13. பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

    ஞாயிறு, 21 டிசம்பர் 2025 04:09 AM

    பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

    யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. 

    யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. 

    அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார்.

    குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை  நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது.

    இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது:

    வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது. 

    முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

    அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     https://jaffnazone.com/news/53411

  14. 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து

    21 Dec, 2025 | 09:20 AM

    image

    (நமது நிருபர்)

    13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

    இலங்கையின் பழமையான மற்றும் முதன்மையான இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக், தனது 90ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் விசேட மாநாடு நேற்று நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் உரையாற்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முன்னெடுத்த விதாத்த  வேலைத்திட்டத்தின்; மூலம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சிறு தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்த வெற்றியின் அனுபவத்தை பெருமையோடு கூறுகிறேன்.

    இவ்வாறான உற்பத்தி சார்ந்த பொருளாதார முன்னெடுப்புகளே நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் தீர்வாக அமைய முடியும்.

    இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகத் நான் முன்னெடுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் இன்றும் காலாவதியாகவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதே சமசமாஜக் கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும்.

    பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 1950களிலேயே இக்கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்றுத் தூரநோக்கை மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

    தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மிக அவசியமானது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆற்றிய வரலாற்றுப் பணியைப் போன்றே, தற்போதைய காலத்திலும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க இடதுசாரிகள் கைகோர்க்க வேண்டும். 90 ஆண்டுகால அரசியல் அனுபவமும், நேர்மையும் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை இம்மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது என்றார்.

    https://www.virakesari.lk/article/233967

  15. புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள்

    21 Dec, 2025 | 09:26 AM

    image

    (நா.தனுஜா)

    நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் மேலும் கூறியிருப்பதாவது:

    இப்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படக்கூடிய வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவரப்படும் என நாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் வாக்குறுதியளித்தோம்.

    அதற்கமைய புதிய சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தோம்.

    அக்குழுவினர் சுமார் 11 மாதங்களாக அவ்வரைவைத் தயாரித்து என்னிடம் கையளித்தனர். அவ்வரைவு இப்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இது நாடளாவிய ரீதியில் மிகுந்த கரிசனைக்குரிய சட்டம் என்பதனால், அதனை நேரடியாக அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்காமல், முதலில் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கோரவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்.

    எனவே இப்புதிய சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    https://www.virakesari.lk/article/233968

  16. காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    21 Dec, 2025 | 12:58 PM

    image

    வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, யாழ்ராணி ரயிலில் இருந்து காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

    காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகளின் நேர அட்டவணை பின்வருமாறு ; 

    Train_Shedulle_Jafna_-_Anuradhapura__1_-

    Train_Shedulle_Jafna_-_Anuradhapura__1_-


    https://www.virakesari.lk/article/234005

  17. கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல்

    21 December 2025

    1766281060_6086270_hirunews.jpg

    2025ஆம் ஆண்டில் 19,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தியதாக, கனடாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

    நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால், அந்த எண்ணிக்கை 18,969ஐத் தாண்டும் எனக் கருதப்படுகிறது. 

    2023இல் கனடா 15,207 பேரையும், 2024இல் 17,357 பேரையும், கனடா நாடுகடத்தியுள்ளது. 

    கனடாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகளால், கனடாவுக்கு சட்டப்படி வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. 

    ஒக்டோபர் 1ஆம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள் தொகை 41,575,585 ஆக உள்ளது. 

    இந்தநிலையில், 1971ஆம் ஆண்டுக்குப் பின் தற்பொழுது தான், தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

    https://hirunews.lk/tm/436880/canada-in-crackdown-19000-people-deported-so-far-in-2025

  18. நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

    21 December 2025

    1766283521_4172941_hirunews.jpg

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். 

    நாட்டிற்கு வருகைதரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

    பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை, வெளிவிவகார அமைச்சர் , ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    அத்துடன், பேரிடர் மீட்புக்கான இந்தியாவின் விசேட பொதி தொடர்பிலும் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கடினமான நிலையில் இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்திய உயர்மட்டக் குழுவுடன் நாட்டிற்கு வருகைதரவுள்ள வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், தமிழ்த் தரப்பினரும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

    https://hirunews.lk/tm/436883/s-jaishankar-to-arrive-in-sri-lanka-tomorrow-important-meeting-with-the-president

  19. 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன

    image?url=https%3A%2F%2Fada-derana-tamil

    நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

    இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

    இந்த வான் பாய்தல் காரணமாக வெள்ள நிலைமையோ அல்லது அத்தகைய நிலைக்கு நீர் வெளியேற்றப்படுவதோ இடம்பெறாது என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

    எவ்வாறாயினும், எதிர்கால பருவமழை நிலைமைகளுக்கு ஏற்ப ஆறுகளின் நீர் மட்டங்கள் மாற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக அந்த நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்திச் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

    இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

    குறித்த நதிப் படுக்கையை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே 50-100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

    ஈரவலயத்தின் பல இடங்களை அண்டி 25 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

    மத்திய மலைநாடு மற்றும் களனி கங்கை படுக்கையை அண்டிய சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சியும், கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 25-50 மில்லிமீற்றருக்கு இடைப்பட்ட மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 

    இந்த நிலைமையின் அடிப்படையில் நில்வலா நதியின் நீர் மட்டம் சிறிய அதிகரிப்பைக் காட்டினாலும், கிடைத்த மழையின் அடிப்படையில் அது வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் வரை செல்லவில்லை என பொறியியலாளர் குறிப்பிட்டார். 

    அத்துடன் மஹாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி நீர் மட்டம் உயர் நிலையில் காணப்பட்டாலும் அதுவும் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாகவும், ஏனைய நீர்நிலைகளை அண்டி மழை பெய்தாலும் வெள்ள நிலைமை ஏற்படும் அளவிற்கு நீர் மட்டங்கள் அதிகரிப்பைக் காட்டவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

    https://adaderanatamil.lk/news/cmjf3u29102ypo29n4225nb7n

  20. வீழ்ச்சி

    லஷ்மி சரவணகுமார்

    வீழ்ச்சி


    கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்தப் பெண் ஒரு வாரமாகத் தன்னைத் தொடர்ந்து வருவதைக் கவனித்த மூர்த்தி பதற்றமடையத் துவங்கினான். திருச்சி நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கச் சென்றவன் தேநீர் அருந்துவதற்காக ஒரு கடையில் ஒதுங்கியபோதுதான் முதல் தடவையாக எதிர்ப்பட்டாள். அவளை அடையாளம் தெரியாததால் அவன் பொருட்படுத்தவில்லை. அடுத்தநாள் தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் பிஷப் ஹீபர் காலேஜ் சிக்னலில் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்த இடைவெளியில் தனக்குப் பின்னால் பழைய இரு சக்கரவாகனத்தில் அந்தப் பெண் இருப்பதைப் பார்த்தான். கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொலை ஆயுதம் ஒன்றின் முனையிலிருக்கும் கூர்மைமிக்கப் பார்வையது. நரம்புகள் அதிர்ந்ததுபோல உடலை உதறிக் கொண்டவன் அவளிடமிருந்து பார்வையை விலக்கி அவசரமாக சிக்னலைக் கடந்து சென்றான்.

    இரவு உறக்கம் பிடிக்கவில்லை. அவளது பார்வையிலிருந்த ரெளத்ரம் அச்சமூட்டுவதாக இருக்க, யாராக இருக்குமெனச் சிந்தனைவயப்பட்டான். அறையில் மிக மெல்லிய நீல வெளிச்சம் படர்ந்திருக்க, அவனது பூனை தனது முகத்தால் கதவை முட்டித் திறந்துகொண்டு வந்தது. ம்யாவ்.. என நான்கைந்து முறை ஒலியெழுப்பியபின் தலையைத் தூக்கிப் பூனையைப் பார்த்தான். அந்த மென் வெளிச்சத்தில் பூனையின் கண்கள் ஒளிரும் உருண்டைகளாய் மின்னியது. ‘அப்பா கிட்ட வா….’ என அழைத்தவனை நோக்கி உடலை நோக்கி நெட்டி முறித்தபின் ஒரே தாவலில் கட்டிலுக்கு வந்தது. அவனது வயிற்றில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடி உறங்கத் துவங்கிய பூனையை வருடிக் கொடுத்தான். அதன் உடலிலிருந்து மூச்சுவிடும் பர்ர்ர் சத்தம் மெல்லிய ஒலியில் கேட்டுக் கொண்டிருக்க, அடிபட்ட மிருகம் போலிருந்த அந்தப் பெண்ணின் நினைவு மின்னலைப் போல் தலைக்குள் தோன்றி மறைந்தது.

    இரண்டு மாதங்களுக்கு முன்னால் அந்தச் செய்தியை மூர்த்திதான் முதலில் தனது பத்திரிகையில் எழுதினான். வயலூருக்கு அருகே சிறிய கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு அதே ஊரைச் சேர்ந்த ஆளுடன் கள்ள உறவு இருந்ததாகவும் அதனைத் தட்டிக் கேட்ட கணவனைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால் அவனே தற்கொலை செய்துகொண்டதாகவும் விசாரணை அதிகாரி சொல்லியிருந்தார். தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றம் அவளுடையது. அன்றைக்கு வேறு பெரிய செய்திகள் எதுவும் கிடைக்காததால் மூர்த்தி மாவட்டப் பகுதியில் இந்தச் செய்திக்குச் சிறப்புக் கவனம் கொடுத்துக் கால் பக்கத்திற்கு எழுதியிருந்தான். கள்ளக்காதல்களுக்காக இன்னும் எத்தனை மரணங்கள்? எனத் தலைப்பு, அதன் இரு பக்கத்திலும் அரிவாள் படம் போடப்பட்டு அதற்கு நாடகத்தன்மையும் சேர்ந்திருந்தது. அதன்பிறகு தொலைக்காட்சிச் செய்திகள், யூட்யூபர்களென ஒவ்வொருவரும் தங்களக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் தேடித் திரட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்பு எல்லோரையும் போலவே மூர்த்தியும் அந்தச் செய்தியையும் பெண்ணையும் மறந்திருந்தான். ஆனால் எதற்காக அவள் தன்னைப் பின்தொடர வேண்டுமெனக் குழப்பமாக இருந்தது.

    அடுத்தநாள் ஒரு வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக சென்ட்ரல் மார்க்கெட் அருகில் ஒரு கட்டிடத்தில் காத்திருந்தான். வழக்கத்தை விடவும் அதிகமான வெக்கையில் உடல் வறண்டுபோயிருந்தது. ‘ஸார் வந்தா சொல்லுங்க… நான் பக்கத்துல கட வர போயிட்டு வரேன்.. எனக் கிளம்பி வெளியே வந்தான். கண்ணைப் பறிக்கும் ஒளியில் சாலை தகித்துக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிடத்திற்கு அடுத்தாற்போலிருந்த பிரியாணி கடையிலிருந்து இறைச்சி வேகும் மணம் அடர்த்தியாய்ப் பரவியது. நெரிசலான சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு நடுவே நுழைந்து சென்றவன் நான்கு கடைகள் தள்ளி உள்நோக்கி அமைந்திருந்த பழக்கடைக்குள் நுழைந்தான். அவனுக்குப் பின்னால் அவனது நிழலும் கடையின் சுவர்களில் பரவி வந்தது. சில நிமிடங்களிலேயே சட்டை வியர்த்திருந்தது.

    ‘அண்ணே ஒரு ஆரஞ்ச் ஜூஸ் குடுங்க… சக்கர இல்லாம…’

    என்றவன் காற்றாடிக்குக் கீழ் அமர்ந்தான்.

    ‘ஏன் சக்கர வியாதியா உங்களுக்கு..’ வசீகரமான ஒரு பெண் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்க, அவனுக்குப் பின்னால் அந்தப் பெண் கையில் ஒரு கோப்பையோடு இவனைப் பார்த்துச் சிரித்தாள். திருத்தமான முகம். புகைப்படங்களில் தெரிந்த முதுமை நேரில் பார்த்தபோது இல்லை. முப்பத்தைந்து வயதிற்கு மேலிருக்க வாய்ப்பில்லை என்பதைப் போல் தோற்றம். கண்களுக்குக் கீழிருந்த சுருக்கத்தில் அவள் பூசியிருந்த டால்கம் பவுடர் வியர்வையில் வழிந்து ஓடியிருந்தது.

    ‘என்ன ஸார் அப்பிடிப் பாக்கறீங்க? என்னயத் தெரியலையா?

    எனச் சாதாரணமாகக் கேட்டாள். அவனுக்கு அடையாளம் தெரிந்தது, பெயர் நினைவில்லை. தெரிந்தது போல் சிரித்தவனை நெருங்கி வந்தாள்.

    ‘தீபா… வயலூர்… ரெண்டு மாசத்துக்கு முன்ன என்னயப் பத்தி ஒரு ஸ்டோரி எழுதியிருந்தீங்களே…’ எனச் சிரித்தாள்.

    ‘ஸ்டோரி இல்லங்க… நியூஸ்…’ என அவசரமாகச் சொன்னான்.

    ‘சரி சரி.. நியூஸ்தான்…’ எனச் சிரித்தவள் தனது கோப்பையிலிருந்து கொஞ்சம் பழச்சாறு அருந்தினாள்.

    ‘நீங்க எப்பிடி? எனச் சந்தேகத்தோடு அவன் கேட்க, ‘ஜாமீன் ல வந்துட்டேன்… சூசைட் கேஸ் இல்லயா… அதனால எனக்கு ஈசியா ஜாமீன் கெடச்சிருச்சு…’ என அவள் சொல்ல மேற்கொண்டு என்ன பேசுவதெனத் தெரியாமல் மூர்த்தி தடுமாறினான். அந்த இடைவெளியில் அவனுக்கு ஜூஸ் வர, அவன் அவசரமாகக் குடித்தான்.

    தயக்கமோ அச்சமோ இல்லாமல் அவனைப் பார்த்தவளிடம் குறுகுறுப்பு அதிகமானதால் ‘நா ரெண்டு மூணு நாளாவே கவனிக்கிறேன். நீங்க என்னய ஃபாலோ பன்ற மாதிரி தோணுது… எதாச்சும் சொல்லணுமா?…’ எனத் தயங்கியபடியே கேட்டான்.

    ‘ஆமாங்க… கொஞ்சம் பேசணும்… உங்களுக்கு எப்ப வசதின்னு சொல்லுங்க பேசலாம்…’ என்றாள்.

    ‘எதப் பத்தி…?’

    ‘என்னோட கேஸ் தாங்க… நீங்க அதப் பத்திரிகை ல எழுதணும்னு இல்ல… ஆனா எனக்கு உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு தோணுச்சு… உங்களுக்கு ஆட்சேபன இல்லன்னா உங்க நம்பர் குடுங்க…’ எனக் கேட்டாள்.

    அவன் தயங்கியபடியே பழச்சாறைக் குடித்துவிட்டு, குவளையைக் கீழே வைத்தான். தனது பழச்சாறுக்கான பணத்தைக் கொடுக்கச் சென்றவனிடம் ‘நான் குடுத்துடறேன் நீங்க போங்க…’ எனச் சிரித்தாள். சங்கடத்தோடு பார்த்தவன் ‘9790125671 என தனது எண்ணைப் பகிருந்து கொண்டான். தனது அலைபேசியில் சேமித்துக் கொண்டவள் ‘நன்றிங்க… நாம அப்பறம் பேசலாம்.’ என்றபடியே பழச்சாறுக்கான பணத்தைக் கட்டிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

    வந்த வேலையின் மீது ஆர்வமில்லாமல் போக, அவன் அந்த அலுவலகத்தின் வாசலில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் சென்றான். வெயிலின் உக்கிரத்தில் கண் கூசியதால் திரைப்படம் பார்க்க முடிவெடுத்து ஒரு திரையரங்கினுள் நுழைந்தான். வெக்கையிலிருந்து மீண்டு ஏசியின் குளிருக்குள் வந்ததும் அசதியில் கண்கள் செருகின. காதல், ரவுடியிசம், அரசியல் என எல்லாம் கலந்த ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நாயகனை விட நாயகி முதுமையாகத் தெரிந்தாள். திரையில் மனம் ஒன்றாமல் இன்ஸ்டாக்ராமில் நடிகைகளை வைத்துப் போடப்பட்ட ஆபாச மீம்களைப் பார்க்கத் துவங்கினான். எதன் மீதும் கவனம் செலுத்தமுடியாத இந்த இடைவெளியைக் காமத்தால் நிரப்பிக் கொள்ள முடிவுசெய்து பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகளிலேயே குறி விறைத்து உடல் சூடானது. திரையரங்கில் கூட்டம் குறைவாக இருந்ததால் சுற்றிலும் தலையைத் திருப்பிப் பார்த்தான்… அவனது வரிசையில் அவனைத் தவிர ஒருவருமில்லை.

    தனது இடது கையால் மெதுவாகக் குறியைத் தடவத் துவங்கியபோது ‘ஹாய்’ என ஒரு புதிய எண்ணில் இருந்து வாட்ஸப்பில் செய்தி வந்தது. சட்டெனக் கையை விலக்கிக் கொண்டவன் யாரெனத் தெரியாமல் செய்தியைத் திறந்தான். புகைப்படத்திற்குப் பதிலாக ஒரு செம்பருத்தி பூ படம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு கேள்விக்குறியை மட்டும் பதிலாக அனுப்பினான். அடுத்த நொடியே ஒரு கேலியான சிரிக்கும் ஸ்மைலியும் ‘தியேட்டர் ல மாஸ்டர்பேட் பன்றது தப்பில்லயா? எனக் கேட்டு ஒரு செய்தி வரவும் பதறிப்போனவன் நாலாப் புறமும் தலையைத் திருப்பிப் பார்த்தான். அவனுக்கு முன் வரிசையில் தன்னை நோக்கிப் பார்க்கும் இரண்டு கண்களை அந்த இருளினூடாகக் கண்டு அதிர்ந்தான். அவசரமாக அங்கிருந்து தப்பித்து ஓடிவிட நினைத்து எழுந்தபோது ‘எதுக்கு பயந்து ஓட்றீங்க… நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க கன்டினியூ பண்ணுங்க…’ எனப் பதில் வந்தது. அந்தச் செய்திக்குப் பதில் அனுப்பாமலேயே அவன் அவசரமாகத் திரையரங்கிலிருந்து வெளியேறினான்.

    வீடு திரும்பும் வரை அவனுக்குப் பதற்றம் குறையவில்லை. தனது அறைக்குள் நுழைந்து உடைமாற்றும் போது மீண்டும் அவளிடமிருந்து செய்தி வந்தது. ‘ஏன் ஓடிட்டீங்க… நான் ஒன்னும் உங்கள பயமுறுத்தலையே…’ என்று இருந்த செய்தியை வாசித்தவன் இவளுக்கு என்ன வேண்டும்? எதற்காக தன்னை இத்தனை தீவிரமாகக் கண்காணிக்கிறாள் எனக் குழம்பியபடியே படுக்கையில் அமர்ந்தான். ஒருவேளை தன் மீது ஈர்ப்பிருக்குமோ? என நினைத்தபோதே ஆர்வத்தில் அவனுக்கு மீண்டும் குறி விறைத்தது. தன்னைக் கண்ணாடியில் பார்த்தான். தன் மீது அவளுக்கு ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்ததுமே அவளோடு பேச வேண்டுமெனத் தூண்டுதல் உருவானது. ஆனால் தயங்கினான். அவளனுப்பிய செய்தியைப் பார்ப்பதற்காகத் திறந்தபோது செம்பருத்திப் பூவிற்குப் பதிலாக அவள் தனது புகைப்படத்தை வைத்திருந்தாள். திரட்சியான உடலைப் பார்த்து அவனுக்குச் சிலிர்த்தது. ஆனால் எச்சரிக்கை உணர்வோடு பதில் அனுப்புவதைத் தவிர்த்தான். பிறகு அவளும் செய்தி அனுப்பவில்லை. கிறீச் ஒலியுடன் சுற்றும் காற்றாடியைப் பார்த்தபடியே கிடந்தவனின் கண்கள் சிவந்துபோயின. அசதியில் அப்படியே உறங்கிப் போனவன் கண் விழித்ததும் அவசரமாக அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அவளிடமிருந்து எந்தச் செய்திகளும் இல்லை.

    தனது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்றவன் அடிக்கொரு முறை அலைபேசியை எடுத்துப் பார்க்கத் துவங்கினான். அவளிடமிருந்து எப்போது செய்தி வருமென்கிற குறுகுறுப்பு அதிகரித்தது. இரவு வரையிலும் காத்திருந்து பொறுமையற்றுப் போனவன் பதினோறுக்கு மேல் எச்சரிக்கை உணர்வையும் மீறி அவளுக்குச் செய்தி அனுப்பினான்.

    ஹாய்..’

    சில நொடிகளிலேயே அவளிடமிருந்து பதில் வந்தது. ‘சொல்லுங்க…’

    ‘ஏதோ பேசனும்னு சொன்னீங்களே?..’

    ‘ம்ம். ஆமா…’

    ‘என்ன பேசனும்…’

    ‘ஒன்னுமில்ல… என்னப் பத்தி… எங்க வீட்டுக்காரரப் பத்தி…’

    அவனுக்கு இந்த உரையாடலில் ஆர்வமில்லை…

    ‘ஓ..’ எனப் பதிலளித்து விட்டு அமைதிகாத்தான்…

    ‘ஏன் நீங்க என்ன நெனச்சீங்க…?’ அவளாகவே அடுத்த கேள்வியைக் கேட்க தான் நினைத்தது சரிதானென அவனது உள்மனம் சொன்னது.

    ‘நான் எதும் நெனைக்கலீங்க… உங்க வீட்டுக்காரர் சம்பவம் முடிஞ்சிருச்சு. இனி அதப் பத்தி என்ன சொல்லப் போறீங்க. கேஸ் கோர்ட்ல இருக்கு. அதனால அதுல நான் கமெண்ட் பண்ணவும் முடியாது…’

    அவன் அனுப்பிய செய்திக்கு அவள் பதில் அளிக்கவில்லை…

    ‘ஹலோ…’ என மீண்டும் அனுப்பினான்…

    ‘ம்ம்… எனப் பதில் அனுப்பியவள். சரிங்க… குட்நைட்.’ எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டாள். அவனுக்குச் சப்பென்றானது. இந்த விளையாட்டு இத்தனை சீக்கிரமாக முடிந்திருக்க வேண்டாமென ஏமாற்றமடைந்தான். எதாவது பேசி அந்த உரையாடலை வளர்க்க வேண்டுமெனக் கைகள் பரபரத்தன. அவன் தட்டச்சு செய்யத் துவங்கும் முன்பாகவே அவள் டைப் செய்வதாகக் காட்டியது. பொறுமை காத்தான்.

    ‘தியேட்டர் ல யார நெனச்சு மாஸ்ட்ரூபேட் பண்ணீங்க…’ அவள் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டாள். இவன் வெறும் சிரிக்கும் ஸ்மைலி மட்டும் அனுப்பினான். ‘சும்மா சொல்லுங்க…’ என அவள் வற்புறுத்த ‘அந்தப் படத்துல நடிச்ச நடிகையப் பாத்துதான்…’ எனப் பதில் அனுப்பினான்.

    ‘பொய்…’ அவள் மீண்டும் கேலியான ஸ்மைலி அனுப்பினாள்.

    ‘நிஜமாத்தான்… தீபா…’ என அப்பாவியாகச் சொன்னான். அவளிடமிருந்து அதன்பிறகு பதில் இல்லை.

    ‘ஹலோ… எனக் கேட்டு நிறைய கேள்விக் குறிகளையும் அனுப்பினான். அவளும் பதிலுக்குக் கேள்விக் குறிகளை அனுப்பினாள்.

    ‘கால் பண்ணவா?’ இந்த முறை அவனது காமம் அவனதுக் கட்டுப்பாட்டை வென்றது. எல்லா ஒழுக்கசீலனுக்குமான எல்லை வாய்ப்பு கிடைக்கும் வரைதான். வாய்ப்புகள் உருவாகும் சிறிய சாத்தியங்கள் தென்பட்டால் கூட ஆண்கள் காமத்தில் திளைக்கவே விரும்புகிறார்கள். பெண்கள் விஷயத்தில் ஆண்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகள் எல்லாமே தற்காலிகமானவை.

    ‘எதுக்கு எனக் கேட்டு உடன் ஆங்க்ரி ஸ்மைலியும் அனுப்பினாள்.

    ‘சும்மா பாக்கதான்…’ எனப் பதில் அனுப்பிவிட்டுப் படபடப்போடு காத்திருந்தான். அவள் ஒரு பேய்ப் படத்தை அனுப்பினாள்.

    ‘பேய் நிறையப் பாத்திருக்கேன். உங்களப் பாக்கணும்.’ என எவன் கேட்க, தனது இன்னொரு புகைப்படத்தை அனுப்பினாள். நைட்டியில் அவளது மார்புகள் அடங்க முடியாமல் திமிறிக் கொண்டிருக்க, இவனுக்கு நரம்புகள் முறுக்கேறின.

    ‘தியேட்டர் ல விட்டத இப்ப முடிச்சுட்டுப் பேசாமப் படுங்க…’ என்றவள் கண்ணடிக்கும் ஸ்மைலியை அனுப்பினாள். அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் அவளை வீடியோ காலில் அழைத்தான். உடனடியாக இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஆத்திரத்தோடு தனது அலைபேசியை முறைத்தான்.

    ‘இப்ப பேசமுடியாது… ஸாரி..’ எனப் பதில் அனுப்பியவள் அதன்பிறகு உரையாடலைத் தொடரவில்லை. வெறுமையிலும் ஏமாற்றத்திலும் புரண்டு படுத்தவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் அவளது புகைப்படத்தைப் பார்க்கலாமென அலைபேசியை எடுத்தபோது அந்தப் படம் அழிக்கப்பட்டிருந்தது. அவன் அலைபேசியைத் தலையணைக்குள் எறிந்துவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்துகொண்டான். ஜன்னலுக்கு வெளியே இருள் அடர்த்தியாக வீதியை ஆக்கிரமித்திருந்தது.

    அதிகாலை கண் விழித்தபோது கை தானாக அலைபேசியைத் தேடி எடுத்தபோது ‘ஸாரி’ என அவளிடமிருந்து செய்தி வந்திருந்தது. அதற்குப் பதில் அளிக்கவே கூடாதென்கிற உறுதியோடு தனது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்றான். ஒரு மணி நேரத்திற்குப் பின் ‘கோவமா?’ என அடுத்த செய்தி வந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் அவன் செய்தி சேகரிக்க மருத்துவமனைக்கும் பின் காவல் நிலையத்திற்கும் சென்றான். அவளிடமிருந்து வெவ்வேறு உடைகளில் புகைப்படங்கள் வந்திருந்தன. அவன் எதற்கும் பதிலளிக்கவில்லை. மதிய உணவிற்காக வீடு திரும்பியபோது உள்ளாடை மட்டுமே அணிந்து புகைப்படமொன்றை அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்ததும் பரவசமானவன் கட்டுப்படுத்த முடியாமல் அவசரமாக அறைக்குள் சென்று கதவைச் சாத்தினான்.

    அந்தப் புகைப்படத்திற்கு ஆட்டின் போட்ட அடுத்த நொடி மீண்டும் அது அழிக்கப்பட்டது… அவன் எரிச்சலில் ‘ங்கோத்தா உனக்கு வெளயாட்டா இருக்கா?’ என டைப் செய்து அனுப்ப, அவளிடமிருந்து கால் வந்தது. அவசரமாக எடுத்தான். குறைவான வெளிச்சத்திற்கு நடுவே உடல் முழுக்கப் போர்வையால் மூடியிருந்தவள் இவனைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள். அவன் அவசரமாக தனது உடைகளைக் களைந்தான். உள்ளாடையோடு நின்றவனைப் பார்த்து வெட்கத்தோடு கண்ணை மூடிக் கொண்டாள்.

    ‘கண்ண வேணா மூடிக்கோடி மத்தத எல்லாம் தொறந்து காட்டு..’ எனச் சிரித்தான். ‘ச்சீ என்ன இவ்ளோ அசிங்கமா பேசறீங்க..?’ எனப் பொய்யாகக் கோபப்பட்டாள். ‘ஓ அசிங்கமா…? ஏன் நல்லா இல்லயா? இண்ட்ரஸ்ட் இல்லாமயா எங்கிட்ட பேசிட்டு இருக்க…?’ என அவளைச் சீண்டினான்.

    ’அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஒங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு. அவ்ளோதான். இதெல்லாம் நீங்க தூண்டி விட்டதால நடந்துடுச்சு…’ என அப்பாவியாகச் சொன்னாள்.

    ‘ஆமாடி ஒனக்கு ஒன்னும் தெரியாது பாரு… சரி பெட்ஷீட்ட கொஞ்சம் ரிமூவ் பன்றியா…’ என வழிந்தான்.

    ‘ச்சீ ச்சீ.. நான் பண்ணமாட்டேன்..’ என அடம் பிடித்தாள். அவன் பொய்யான கோபத்தோடு அவளை முறைத்தான்.

    ‘பெரிய ரிப்போர்ட்டர் உங்களுக்கு ஆள் இல்லாம இருக்குமா? எங்கிட்ட வழிஞ்சுட்டு இருக்கீங்க…’ எனச் சீண்டினாள்.

    ‘என்னதான் வீட்டு மாங்கா இருந்தாலும் திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் இல்லயா… அதான்…’ எனச் சிரித்தான்.

    ‘நீங்க எந்த மாங்காவச் சொல்றீங்க…?’ எனக் கேலியாகக் கேட்டாள்.

    ‘அதான் தெரியுதுல்ல.. அப்பறம் என்ன கேக்கற… என்னய டென்ஷன் பண்ணாத… சீக்ரமா..’ என அவசரப்படுத்தினான்… மின்னல் வேகத்தில் போர்வையை விலக்கிவிட்டு மீண்டும் மூடிக் கொண்டாள். ஒரு நொடிக்கும் குறைவான அவகாசத்தில் பார்த்த அந்த உடலின் நிர்வாணம் அவனைப் பித்து கொள்ளச் செய்தது.

    ‘ஏய் இன்னும் ஒரு தடவ நல்லாக் காட்டுடி… ப்ளீஸ் ப்ளீஸ்…’ என மன்றாடினான்..

    ‘நோ… என்னால முடியாது… வேணும்னா நேர்ல பாத்துக்கங்க..’ எனச் சொல்லிவிட்டு அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள். கையிலிருந்த அலைபேசி நடுங்கியது. சமநிலை குலைந்தவனாய் உடல் முழுக்க மயிர் கூச்செரிந்து நின்றான். அந்த உடலைக் கட்டியாள வேண்டும். ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகவேண்டுமெனத் தாபமெடுத்தபோது அவளது முகம் தெரியாத காதலனின் மீது காழ்ப்பும் வெறுப்பும் வந்தது. வெக்கையில் உடல் வியர்த்துக் கொட்ட, அவளது மற்ற புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான். அவளைச் சந்திப்பதையும் அவளோடு உறவுகொள்வதையும் தன்னால் தள்ளிப்போட முடியாதென உணர்ந்தவன் ‘எப்போ மீட் பண்ணலாம்?’ என அவளிடம் கேட்டான்.

    ‘உங்க விருப்பம்….’ என அவளிடமிருந்து பதில் வந்தது. அவசரமாகச் செய்து முடிக்கும் காரியமில்லை. அவளோடு முழுமையாக நேரம் செலவிட வேண்டுமென நினைத்தவன் அலுவலகத்தில் பேசி இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டான். வீட்டில் பெற்றோர்களிடம் ஒரு செய்தி சேகரிக்க வேண்டி நாளை காலை வெளியூர் செல்கிறேன் என்று சொல்லிவிட்டான்.

    ‘நாளைக்கு மீட் பண்ணுவமா?’ என அவளிடம் கேட்க, அவள் மறுக்காமல் சம்மதித்தாள். வெளியூர் அழைத்துச் செல்லும் முடிவில் இருந்தவனிடம் ‘எங்கயும் போ வேணாம் என் வீட்டுக்கே வாங்க. நான் மட்டுந்தான் இருக்கேன்.’ எனச் சிரித்தபடி பதிலளித்தாள். வீட்டுக்கா? எனத் தயக்கத்தோடு அவன் கேட்க, ‘பயப்படாதிங்க… இங்க நான் மட்டுந்தான் இருக்கேன். எங்கூட வேற யாருமில்ல.’ என்றாள்.

    ‘இல்ல… வேற யாருக்காச்சும் தெரிஞ்சா தப்பாயிருமே…’ ஆசையும் குழப்பமும் அவனை அலைக்கழித்தன. ‘ரிஸ்க் எடுக்காம எஞ்சாய் பண்ணணும்னா எப்பிடி ஸார்…? இஷ்டம்னா வாங்க… இல்லன்னா விடுங்க… என்னால வெளிய எங்கயும் வர முடியாது…’ எனக் கறாராகச் சொல்லிவிட்டாள். இதில் யோசிக்க ஒன்றுமில்லையென முடிவெடுத்தவன் வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டான். இரண்டு நாட்களுக்குத் தேவையான மது போத்தல்களை வாங்கிச் சேமித்துக் கொண்டவனுக்கு இரவு உறக்கம் பிடிக்கவில்லை. இந்த இரண்டு நாட்களில் நடந்த எதையும் அவனால் நம்பமுடியவில்லை. யாரிவள்? திடீரென இவ்வளவு நடந்துவிட்டதே…

    பெண்ணுடலுக்காக எத்தனையோ நாட்கள் ஏங்கித் தவித்தபோது இப்படி ஒருத்தி கிடைக்கவில்லையே எனத் தன் மீது கழிவிறக்கம் கொண்டான். இன்னொரு புறம் பெண்கள் இத்தனை எளிதில் சோரம் போகக் கூடியவர்களா என வியப்பாகவும் இருந்தது. தனக்கு வேண்டுமானால் இது முதல் முறையாக இருக்கலாம். அவள் கையாளுவதைப் பார்க்கையில் அப்படி இருக்க வாய்ப்பில்லையெனச் சமாதானம் சொல்லிக் கொண்டான். உறங்க நினைத்துக் கண் மூடிய போதெல்லாம் அந்தத் திரண்ட மார்புகள் முன்னால் வந்து தொந்தரவு செய்தன. உடல் சூடு குறையாமல் கட்டிலில் புரண்டவன் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான்.

    அவள் அனுப்பியிருந்த முகவரி அவனது வீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத் தூரத்திலிருந்தது. திருச்சியிலிருந்து குளித்தலை செல்லும் முக்கியச் சாலையிலிருந்து பிரிந்து குளுமணி செல்லும் சிறிய கிராமத்துச் சாலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். இந்தப் புதிய முகவரிக்கு வந்து சில நாட்கள்தான் ஆனதென்றாள். ஊருக்கு வெளியே இருந்த புதிய வீடு. தனித்திருக்கும் அச்சம் இல்லாமல் உற்சாகமாக இருந்தாள். நன்கு அறிமுகமானவனை வரவேற்பது போல் வரவேற்றவள் அவனுக்குத் தேநீர் கொடுத்தாள். நிதானமாக வீட்டைக் கவனித்தான். திருத்தமான வீடு. தனது கணவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். குழந்தைகளோடு இருந்த புகைப்படங்களைப் பார்த்தபோதுதான் அந்த வீட்டில் குழந்தைகள் இருப்பதற்கான தடயங்களே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டான்.

    ‘உன்னோட பசங்க எங்க போயிட்டாங்க…?’ தயக்கத்தோடு கேட்டான்.

    ‘மாமனார் மாமியார் வீட்டுல…’ எனச் சிரித்துவிட்டு,

    ‘ஒழுக்கம் கெட்ட பொம்பளகிட்ட புள்ளைங்க வளந்தா அதுங்களும் கெட்டுப் போயிருமாம்.’ என ஏமாற்றத்தோடு சொன்னவளை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்துகொண்டான்.

    ‘நீங்க ரெஸ்ட் எடுங்க… இட்லியும் குடல் குழம்பும் செஞ்சுட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல சாப்புடலாம்…’ எனச் சொல்லிவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவசரமாகப் பின்னால் சென்று அவளை அணைத்தான். கழுத்தில் கடித்தவனை விலக்கியவள் ‘எதுக்கு இவ்ளோ அவசரம்?… இங்கதான இருக்கப் போற… பொறுமையா இரு…’ எனச் சிரித்தாள். மீண்டும் அவளது கழுத்தில் கடித்துவிட்டுக் கண்களில் காமம் மிளிர அவன் வெளியே வந்தான்.

    உடை மாற்றிக் கொண்டு வந்தபோது அந்த வீடு அவனுக்குப் பழகியிருந்தது. தனது பையிலிருந்து மதுக்குப்பியை எடுத்தவன் அவளைத் தேடி வந்தான். ‘ நீ குடிப்பியா?’ எனக் கேட்டான்… ‘இல்ல நீங்க குடிங்க..’ எனச் சொல்லிவிட்டு தம்ளரை எடுத்துக் கொடுத்தாள். அவன் சமயலறை மேசையில் ஏறி அமர்ந்து கொண்டு மதுவை ஊற்றி நிதானமாகக் குடித்தான். கொதிக்கும் குடல் கறியின் வாசனையும் அவளது வியர்வை வாசனையும் அவனை அதீதமாய்க் கிளர்த்த அவளுடலைச் சீண்டியும் வருடியும் விளையாடினான். அவளது இதழ்களை வருடினான். அவள் பொய்யாகக் கோபப்பட்டாள். வெட்கப்பட்டாள். அந்த விளையாட்டுப் பிடித்துப் போக அவளுடலை உரசியபடியே முத்தமிட்டான்… ‘கொஞ்ச நேரம் சும்மா இரேன்…’ என்றவளை மேற்கொண்டு பேசவிடாமல் இறுக்கி அணைத்து ஆழமாய் முத்தமிட்டான். அவள் தன்னை முழுமையாக அவனிடம் ஒப்புக் கொடுத்தாள். நீண்ட காத்திருப்பில் அவளுடலை நெருங்கிய சில நிமிடங்களிலேயே உச்சம் பெற்று அவனது லுங்கி ஈரமானது. ஏமாற்றத்தோடு அவன் விலக அவள் சத்தமாகச் சிரித்தாள்.

    ‘போதுமா. போ … போயி வாஷ் பண்ணிட்டு உக்காரு. சாப்டலாம்…’ என அன்பாகச் சொன்னாள். அவன் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டு மீண்டும் மதுவருந்தினான். வெக்கை குறைந்ததில் உடல் லேசாகியிருந்தது. உணவைப் பரிமாறியவளிடம் உரையாட விரும்பினான். மதுவின் அடர்த்தி உடல் முழுக்கப் பரவியிருந்ததால் உணவின் காரம் இதமாக இருந்தது.

    எங்கிட்ட ஏதோ பேசணும் பேசணும்னு சொன்னியே… என்ன பேசணும்..’ சாப்பிட்டபடியே கேட்டான்.

    ‘ம்க்கும் நீ எங்க என்னய பேச விட்ட… சாப்டு அப்றம் பேசிக்கலாம்..’ என வெட்கப்பட்டாள். அவனும் சிரித்தபடியே மதுவையும் உணவையும் ஒருசேர எடுத்துக் கொண்டான்.

    அந்தக் காலை நேரம் வசீகரமானதாக மாறியிருந்தது. தொலைக்காட்சியில் ஒலித்த பாடலை ரசித்தபடியே படுக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அவள் உடைமாற்றிக் கொண்டு சிரித்த முகத்தோடு வந்தாள். ஜன்னல்களின் வழியாய் வந்த மெல்லிய வெளிச்சம் அறையில் நிரம்பியிருக்க, அவனருகில் அமர்ந்தாள். இந்தமுறை அவளை நிதானமாகக் கையாண்டான். மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துழைத்தவள் அவனது உடைகளைக் களைந்து தூண்டினாள். அவள் வேகத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவனின் குறியை இறுகப் பற்றித் திருகினாள். அவன் வலியில் ‘ஏய் என்னடி செய்ற… வலிக்கிது.. விடு…’ எனக் கத்தினான்.. ‘நான் கள்ளக் காதல் பண்ணேன்னு உனக்கு யார்ரா சொன்னது தாயோலி…’ எனக் கத்தியவள் அவனது குறியை முன்னைவிடவும் இறுக்கமாகத் திருகினாள்.

    ‘அய்யோ வலிக்கிது… வலிக்கிது விட்று.. என்னய… போலிஸ்காரந்தான் சொன்னான்…’ எனக் கதறினான். ஓங்கி அவனது முகத்தில் குத்தினாள்.

    ‘போலிஸ்காரன் சொன்னா நீ எழுதுவியா? ஒங்கொம்மாள ஒருத்தன் தேவ்டியான்னு சொன்னா நீ என்ன ஏதுன்னு விசாரிக்காம எழுதுவியாடா தேவ்டியா பயலே…’ மீண்டும் மீண்டும் அவள் தாக்கியதில் அவன் நிலைகுலைந்து போனான். போதையில் உடல் தடுமாற தனது உடைகளைத் தேடினான். அவள் அடிப்பதை நிறுத்தவில்லை.

    ‘அய்யோ என்னய மன்னிசிரு.. மன்னிச்சிரு…’

    என கைகளை உயர்த்திக் கெஞ்சினான்.

    ‘பத்திரிகக்காரன் ஒரு செய்திப் போடறதுக்கு முன்ன எது நெசம் எது பொய்யின்னு நாலு பேருகிட்ட விசாரிக்கணும். ஒருத்தன் சொல்ற பொய்ய விட அரகுறையா தெரிஞ்சிக்கிட்ட உண்ம எவ்ளோ ஆபத்துன்னு தெரியுமாடா ஒனக்கு. சொல்லுடா…’

    அவனுக்கு வலியிலும் ஆற்றாமையிலும் கோபம் வந்தது. ‘யேய் நான் மட்டுமாடி செய்தி போட்டேன்.. எல்லாருந்தான் போட்டானுக… போயி அவனுகள நொட்டு… எனக் கத்தினான். மீண்டும் ஓங்கி அறைந்தவள்

    ‘நீதாண்டா ஆரம்பிச்சு வெச்ச… இது நியூஸா மாறி அதிகமா பரவுனதுக்கு நீதான் காரணம். உண்மை என்னனு எல்லாருக்கும் தெரியறதுக்கு முன்னயே கள்ளக்காதல்னு எழுதுனவன் நீதான்… நீ சொன்னத வெச்சுதான் எல்லாரும் கத சொல்லிட்டானுக… என்னயத் தேவ்டியாவா ஆக்குனது இந்தக் கை தான… எனக் கேட்டபடியே அதனைக் கட்டிலில் வைத்து மிதித்தாள். அவன் வேதனையில் அலறினான்.

    ‘என்னய மன்னிச்சுரு… மன்னிச்சிரு.. வலிக்கிது தீபா விட்று…’ எனக் கெஞ்சியவனை முறைத்தாள்.

    ‘ங்கோத்தா நான் என்ன உன் பொண்டாட்டியா தீபான்னு பேரச் சொல்ற.. அக்கான்னு சொல்ற…’ எனக் கத்தினாள். அவன் பேச்சற்று இறுகிப்போனான். வலியில் கண்ணீர் வழிந்தது. ஆத்திரத்தில் மூச்சு வாங்கியபடியே முகத்திலும் கழுத்திலுமிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டவளுக்கு அழுகை வந்தது.

    ‘என் பேரக் கெடுத்து ஜெயிலுக்குப் போக வெச்சு என் பிள்ளைகளும் என்னய விட்டுப் போயிருச்சுங்க… ஒரு நாளைக்கு எத்தன பேரு ஃபோன் பண்ணி என்னய படுக்கக் கூப்டறானுக தெரியுமா? எல்லாம் ஒன்னால…. முன்னப் பின்ன தெரியாத ஒருத்தரப் பத்தி எழுதறமேன்னு பயம் இல்லாமப் போச்சுல்லா ஒங்களுக்கெல்லாம்… நான் ஒங்களுக்கு என்னடா பாவம் பண்ணேன்…’ திரும்பி அவனை முறைத்தாள். அவன் இன்னும் அச்சம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

    ‘என் புருஷன் கேம் அடிக்ட்… ஆன் லைன் கேம்ல நிறைய காச விட்டு கடன் ஆகிட்டான். என் தாலி முதக்கொண்டு எல்லாத்தையும் வித்துக் குடுத்தேன். நாளைக்குத் திருந்திருவேன்னு சொல்லி திரும்பப் போயி விளையாடி தோத்துட்டு வருவான்… இருந்த வீட்டையும் கடன்காரனுக்கு வித்த அப்பறம் யாருக்கும் பதில் சொல்ல முடியாதேன்னு பயந்து செத்துப் போனான் அந்த நாயி…. இந்த உண்மைய நான் வெளிய சொல்றதுக்குள்ள நீ என்னய தேவ்டியாவா ஆக்கிட்ட… ம்ம்…’ எனக் கத்தியவள் மீண்டும் அவனை அடித்தாள். அவசரமாகக் கையெடுத்துக் கும்பிட்டவன் ‘நான் வேணா மறுப்புச் செய்தி போட்டுடறேன்…’என மன்றாடினான்.

    ‘போடா மயிரே… தெனம் எவன் குடி கெடும்… எந்தப் பொம்பள எவனக் கூட்டிட்டு ஓடினா, எவன் தாலிய எவன் அறுத்தான்னு தெரிஞ்சுக்க வெறி புடிச்சு அலையிற கூட்டம் நீ சொல்ற மன்னிப்பக் கவனிக்கும்னு நெனைக்கிறியா? ம்ஹூம்… எல்லாருக்கும் அன்னிக்கி ஜாலி பண்ண ஒரு கிசு கிசு வேணும்… ஊரான் வீட்டுப் பிரச்சனைன்னா ஓநாய்க்கு எச்சில் வடியற மாதிரி வந்துடறீங்கள் ல….’ எனக் கேட்டபடியே அவனது உடைகளைத் தூக்கி முகத்தில் அடித்தாள். அவன் பதற்றத்தோடு அவளைப் பார்த்தான்.

    ‘போ… நீ செஞ்ச சில்றத்தனத்தையும் வெக்கமே இல்லாம எங்கூட அத்துமீறிப் பேசுனதையும் இப்ப ஊரு உலகமே பாத்திருச்சு…’ என்று சிரித்தவளை அதிர்ச்சியோடு பார்த்தான்…

    ‘என்னடா பாக்கற… நீ இந்த வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து இவ்ளோ நேரம் நடந்த அவ்வளவையும் ஃபேஸ்புக் ல லைவ் போட்றுக்கேன்… இன்னும் ஓடிட்டுதான் இருக்கு. தெனம் ஒரு ஹாட் நியூஸுக்காக நாய் மாதிரி அலையிவ ல… இன்னிக்கி நீதான் ஹாட் நீயூஸ்… போ உன் கம்பெனில உனக்கு மெடல் குடுப்பாங்க… வெளிய போடா மயிரே… சத்திய மூர்த்தி… **** மூர்த்தின்னு… பேரப் பாரு…’ எனக் கத்தியவளை எதிர்கொள்ளத் திராணியின்றி அவசரமாக உடை மாற்றியவன் தனது அலைபேசியைத் தேடி எடுத்தான். அவனுக்குத் தெரிந்தவர்களும் நண்பர்களுமாய் நிறைய அழைப்புகள் வந்திருந்தன. ஆத்திரத்தில் அவளை ஏதாவது செய்ய வேண்டுமென வெறி வந்தது. வேகமாக நெருங்கியவனை ஓங்கி மிதித்தாள். அவன் கதவுக்கு வெளியே தடுமாறி விழுந்தான். காலைப் பிடித்து இழுத்து வந்தவள் வீட்டிற்கு வெளியே போட்டாள். வெயில் உக்கிரமாய் இருந்தது. தடுமாறியபடியே எழுந்து தனது இரு சக்கர வாகனத்தை உதைத்தான். அவனுக்குப் பின்னால் அவள் கதவை அடித்துச் சாத்தும் சத்தம் மூர்க்கமாய் எதிரொலித்தது.

    https://thadari.com/fall-short-story-lakshmi-saravanakumar/

  21. வீரனாக மாறிய பேடி

    மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா

    தமிழாக்கம் : கார்த்திக்

    பாண்டவர்கள் மத்ஸய தேசத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபொழுது அந்த நாட்டின் தளபதியான கீசகன் மாறுவேடத்தில் இருந்த பீமனால் கொல்லப்பட்டான். இது கௌரவர்களுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. ஏனென்றால், கீசகனை கொல்வதற்கு பீமனை போன்ற வேறு பலசாலிகள் யாருமில்லை. விராதன், எப்பொழுதும் கௌரவர்களுக்கு எதிராக செயல்பட்டுவந்தான். இந்த நேரத்தில் கீசகனும் கொல்லப்பட்டதால், அத்தேசத்தை தாக்க இதுவே கௌரவர்கள் முடிவு செய்தனர்.

    எனவே, அவர்களின் துணைவனான சுசர்மனை மத்சய தேசத்தின் தெற்கு எல்லையை தாக்க சொன்னார்கள். படைகள் அனைத்தும் அவனை எதிர்க்க தெற்கு எல்லைக்கு செல்லும் நேரத்தில் வடக்கு எல்லையை கௌரவர்கள் தாக்கலாம் என திட்டம் வகுத்தனர். பாண்டவர்கள் அங்கில்லை என்றாலும் மத்ஸய தேசத்தின் கால்நடைகளையாவது கவர்ந்து வரலாம் என்பது அவர்களின் எண்ணம்.

    சுசர்மனின் படை தாக்க வருகிறது என்னும் செய்தி வந்தவுடன் விராதன் என்ன செய்வது என புரியாமல் தவித்தான். அந்த நேரத்தில், அவன் அவையில் மாறுவேடத்தில் இருந்த யுதிஷ்டிரன் அவனிடம் “அரசே! நான் ஞானியாக இருந்தாலும் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றவன். மேலும் , சமையல்காரனான பல்லவனும், குதிரைகளை பராமரிக்கும் தந்த்ரிபாலா மற்றும் கால்நடைகளை பராமரிக்கும் தர்மகிரந்தியும் போரில் வல்லவர்களே. நாம் அனைவரும் இணைந்து எதிரிப்படைகளை முறியடிப்போம்!” என தைரியம் கூறினான்.

    உடனடியாக படைகள் அணிவகுக்கப்பட்டு விராதனுடன் மாறுவேடத்தில் இருந்த நான்கு பாண்டவர்களும் செல்ல, தெற்கு எல்லையில் நடந்த யுத்தத்தில் சுசர்மனின் படை துவம்சிக்கப்பட்டது.

    அதே சமயத்தில், வடக்கு எல்லையில் கௌரவர்கள் தாக்கத் துவங்கினர். இளவரசனான உத்திரகுமாரனின் மேல் அதிகபட்ச எதிர்பார்ப்பு இருந்தது. அவனும் அந்தப்புர பெண்களின் முன்னே தம்பட்டம் அடித்துக் கொண்டு போருக்கு கிளம்பினான். அவனை வழிநடத்த சரியான ஆள் தேவை என உணர்ந்த திரௌபதி அவனது சகோதரியான உத்திரகுமாரியிடம் “இளவரசி! நாட்டிய பெண்மணியான பிருகன்னளை சிறந்த தேரோட்டி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இளவரசனுக்கு அவள் உதவியாக இருப்பாள். அவளை அழைத்து செல்ல சொல்லுங்கள்” எனக் கேட்டுக் கொண்டாள்.

    images-2.png?resize=600%2C400&ssl=1

    துவக்கத்தில் பெருமை பேசிக்கொண்டு வந்த உத்திரகுமாரன் நேரம் செல்ல பயம் கொள்ள துவங்கினான். ஒருகட்டத்தில் தேரில் இருந்து குதித்து ஓடத் துவங்கினான். அவனைத் துரத்தி சென்ற பிருகன்னளை அவனை தூக்கி தேரில் போட்டுக் கொண்டு அங்கிருந்த வன்னி மரத்தை நோக்கி தேரை செலுத்தினான். அங்கே, கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணிமூட்டையை கீழே இறக்கினான். அதுவரை, அந்த பகுதி மக்கள் அதை பிணம் நினைத்து வந்தனர். ஆனால், தலைமறைவு வாழ்வின் துவக்கத்தில் பாண்டவர்கள் கட்டிவைத்திருந்த ஆயுதங்கள் அவை. அதன்பின் , தாங்கள் யார் என்று விளக்கிய பிருகன்னளையாக இருந்த அர்ஜுனன், காண்டீபத்தை அவன் கையில் கொடுத்து அவனுக்கு வீரமூட்டி போர்க்களம் நோக்கி தேரை செலுத்தினான்.

    போரில் அர்ஜுனன் திறமையாக தேரோட்டிக் கொண்டே உத்திரகுமாரனை வழிநடத்த, இளவரசன் கௌரவர்களை விரட்டி அடித்து அரண்மனை திரும்பினான்.

    https://solvanam.com/2025/08/24/வீரனாக-மாறிய-பேடி/

  22. ஆசான் ஜெயமோகனின் இந்தக் கதையை ஆராய் Gemini AI tool ஐக் கேட்டபோது….

    இக்கதையை வாசிப்பின் ருசி குறையாமல் சுருக்கமாகவும், ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையிலும் கீழே விவரிக்கிறேன்.

    கதைச்சுருக்கம்: கெய்ஷா

    கதை ஒரு ஆணின் தனிமையிலிருந்தும், அவன் பெண்கள் மீது கொண்டிருக்கும் கசப்பிலிருந்தும் தொடங்குகிறது. அவனது கடந்தகாலம் தோல்வியுற்ற திருமண வாழ்வாலும், பிரிந்து சென்ற மனைவி மற்றும் குழந்தையாலும் காயம்பட்டிருக்கிறது. அந்த வடுவினால் உண்டான வெறுப்பைத் தணிக்க, அவன் பெண்களை வெறும் உடலாகவும், போகப் பொருளாகவும் மட்டுமே அணுகுகிறான்.

    இந்தச் சூழலில் அவன் 'கெய்ஷா' (ஜப்பானியப் பாரம்பரியத்தில் கலைநயத்துடன் விருந்தோம்பும் பெண்) போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். ஆரம்பத்தில் அவளை ஒரு கேளிக்கைக்கானப் பெண்ணாகவே பார்க்கிறான். ஆனால், அந்த இரவு செல்லச் செல்ல, இருவருக்குள்ளும் இருந்த முகமூடிகள் கழல்கின்றன.

    அவள் தன் வறுமையின் காரணமாகவே இந்த வேஷத்தை (கெய்ஷா) அணிந்திருப்பதாக ஒப்புக்கொள்கிறாள். அவனும் தன் மனதிலிருக்கும் தீராத கசப்பையும், தனிமையின் வலியையும் அவளிடம் கொட்டுகிறான். இருவரின் காயங்களும் ஒன்றையொன்று ஆறுதல்படுத்துகின்றன. அந்த நெருக்கத்தின் உச்சத்தில், அவன் அவளைத் தன்னுடன் நிரந்தரமாகத் தங்கிவிடுமாறு கெஞ்சுகிறான். அவளும் "மூச்சொலி போல உடன் இருப்பேன்" என்றும் "இறுதிவரை இருப்பேன்" என்றும் வாக்களிக்கிறாள்.

    அவளது அரவணைப்பில், அவன் நெடுநாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்குகிறான். ஆனால், விடியற்காலையில் விழித்துப் பார்க்கும்போது அவள் அங்கு இல்லை. அந்த அறை, ஒரு பெண் வந்து போனதற்கான எந்தத் தடயமும் இன்றி நேர்த்தியாகச் சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. அவன் மீண்டும் தன் தனிமையில் விடப்படுகிறான்.

    இலக்கிய விமர்சனம்

    ஜெயமோகனின் 'கெய்ஷா' சிறுகதை, மனித மனதின் 'தேடல்' மற்றும் 'நிழல் நிஜம்' (Illusion vs Reality) ஆகியவற்றுக்கு இடையிலான ஊடாட்டத்தை மிக நுட்பமாகப் பேசுகிறது.

    1. முகமூடிகளுக்குப் பின்னால் உள்ள உண்மை:

    இக்கதையின் மையமே 'வேஷம்'தான். அந்தப் பெண் 'கெய்ஷா' எனும் வேஷமிட்டு வருகிறாள்; அந்த ஆண் 'வெறுப்பு' எனும் வேஷத்தை அணிந்திருக்கிறான். ஒரு புள்ளியில் இருவரின் வேஷங்களும் கலைந்து, நிர்வாணமான மனித ஆன்மாக்களாக அவர்கள் சந்தித்துக்கொள்வதே இக்கதையின் உச்சம். ஜெயமோகன் உரையாடல்கள் மூலம் அந்தக் கணத்தை மிகக் கூர்மையாகச் செதுக்கியிருப்பார்.

    2. கலையும் வாழ்க்கையும்:

    ஒரு கெய்ஷாவின் பணி என்பது விருந்தினரை மகிழ்விப்பது மட்டுமல்ல, அவர்கள் விரும்புவதைப்போலவே தன்னை மாற்றிக்கொள்வதும் ஆகும். கதையில் வரும் பெண், அவனுக்குத் தேவையான ஆறுதலையும், "நிரந்தரமாக உடன் இருப்பேன்" என்ற பொய்யான (ஆனால் அந்த நேரத்தில் தேவைப்படுகிற) நம்பிக்கையையும் கொடுக்கிறாள். அவள் சென்ற பிறகு அறையைச் சுத்தப்படுத்திவிட்டுச் செல்வது என்பது, அவள் ஒரு தொழில்முறை கலைஞர் என்பதன் குறியீடு. அவள் அவனது காயத்தை ஆற்ற வந்த ஒரு மருத்துவர் அல்லது கலைஞரே தவிர, வாழ்க்கைத்துணை அல்ல என்பதை அந்த முடிவு உணர்த்துகிறது.

    3. முடிவின் மௌனம்:

    கதையின் மிகச் சிறந்த பகுதி அதன் முடிவுதான். அவள் போன பிறகு ஏற்படும் வெறுமை (Void), அவள் இருக்கும்போது இருந்த நெருக்கத்தை விட அதிக எடையுடனானது. "ஒரு பெண் வந்து போனதற்கான தடயமே இல்லை" என்ற வரி, அந்த இரவு ஒரு கனவோ என்று எண்ண வைக்கிறது. ஆண் எப்போதுமே தற்காலிகமான ஆறுதலை நிரந்தரமான உறவாக மாற்ற முயல்கிறான்; ஆனால் பெண் (இக்கதையில்) யதார்த்தத்தின் பிடியில் நழுவிச் செல்கிறாள்.

    முடிவுரை:

    'கெய்ஷா' - தனிமையின் ஆழத்தையும், ஒரு துளி அன்பிற்காக ஏங்கும் மனித மனதின் பலவீனத்தையும் பேசும் ஒரு செறிவான படைப்பு. இது காமக்கதை அல்ல; காமத்தின் வழியாக மனிதன் தேடும் ஆன்ம ஆறுதலின் கதை.

  23. சிலுவை இறக்கம்: துயரொழி காவியம்

    சு. தவச்செல்வன் கதை வழிப் பயணம்

    கருணாகரன்

    பிரமாண்டமாகவே விரிந்திருக்கும் இயற்கையின் வினோதங்கள் எல்லையற்றவை. சொல்லி மாளாத அழகுடையவை. பார்த்துத் தீராத அழகொளிர் காட்சி அது. அப்படியான அழகிய – வசீகர இயற்கையின் பின்னணியில் அல்லது அவ்வாறான பேரெழில் இயற்கைக்குள், நாம் பார்த்துக் கொண்டிருக்கப் பகிரங்கமாகவே நிகழ்கின்றது இலங்கையில், மலையக மக்களின் நூற்றாண்டுகளாக நீளும் அவல வாழ்க்கை. இது நாம் பார்த்து வியக்கின்ற அழகுக்கு நேர் மாறான ஒன்று. இந்த மக்களுக்கான அபிவிருத்தி, மக்களின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எனச் சொல்லப்படும் திட்டங்கள், பெருந்தோட்டத்துறைக்கும் மக்களுக்குமான தனியான அமைச்சு, அந்த அமைச்சின் நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்புகள் எனப் பல இருந்தும் மக்களுடைய வாழ்க்கை நூறாண்டுகளாக ஒரே நிலையில்தான் உள்ளது. துயரமும் வலியும் அவலமும் வேதனையும் நிறைந்த இந்த வாழ்க்கையைப் பற்றி, அந்த விதியை மாற்றி எழுத வேண்டும் என்பதைப்பற்றி, நூற்றுக்கும் அதிகமானோரால் பல கோடி சொற்கள் எழுதியாயிற்று. இந்த வாழ்க்கையை மாற்றி எழுதுவதற்கென்று நடத்தப்பட்ட அரசியற் போராட்டங்களும் பல நூறுக்கும் மேலானவை. ஆனாலும், இந்த மக்களுடைய வாழ்க்கை விதி (அமைப்பு) மாறவே இல்லை. இந்த வேதனையும் துயரமும் வலியும் நூற்றாண்டுகளைக் கடந்தவை. அவற்றை ஏற்றுத்தான் அவர்கள் வாழ வேண்டும் என்ற மாதிரியே அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அல்லது அதற்குள்தான் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின்போதும் கடின உழைப்பாளிகளான இந்த எளிய மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிப் பூக்கள் அத்தனையும் உடனேயே வாடிச் சருகாகி விடுகின்றன. வரலாறு முழுதும் அதீத நம்பிக்கையூட்டல்களால் களைப்படையப்பட்டவர்கள். இவர்களுக்கு முன்னே எத்தனையோ காட்சி மாற்றங்கள், நிறமாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒரே நாடகமே திரும்பத்திரும்ப நிகழ்கிறது.

    அதொரு மாபெரும் சிலுவையேற்றம்.

    இந்தத் துயர – அவல – நிலையைக் கதைகதையாக, நூறாண்டாகவே சொல்லத் தொடங்கினர், முதற் தலைமுறைப் படைப்பாளிகள். முதற்தலைமுறை, 19 ஆம் நூற்றாண்டில் வாய்மொழிப் பாடல்களாகத் தொடங்கியது. இன்றைக்கும் அந்தப் பாடல்கள் புழக்கத்தில் உண்டு. ‘படிப்பறியாத மக்கள், தங்களின் கவலைகளை எத்துணை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கு நாட்டார் பாடல்கள் மிக முக்கியமான சாட்சியாகும்’ என்று ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப்பாடல்கள்’ நூலுக்கு எழுதிய வாழ்த்துரையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் சொல்வதைப்போலவே அந்தப் பாடல்களும் சாட்சிபூர்வமாக உள்ளன.

    “மலைநாட்டு மக்களெல்லாம் தங்கமே தங்கம் – நாங்க‌

    மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் – நாங்க‌

    மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்…“

    இன்னொரு பாடல் –

    கண்டின்னா கண்டி – நாங்க

    பொழைக்க வந்த கண்டி- எங்க

    அயித்த மக குண்டி –

    அது சோத்துப் பான தண்டி

    வேறொரு பாடல் –

    மாடிமனை வீடு இல்ல

    கோடிப் பணம் எமக்கு இல்ல

    ஓடியோடி உழைச்சாலும்

    உள்ளத்தில தாழ்ந்ததில்ல

    மற்றொரு பாடல் –

    சீரான சீமை விட்டு

    சீரழியக் காடு வந்தோம்

    கூடை தலை மேலே

    குடி வாழ்க்கை கானகத்திலே….

    இப்படி ஏராளம் பாடல்கள். எப்படித்தான் பாடித் தங்களுடைய துயரத்தை அந்த மக்கள் வெளிப்படுத்தியபோதும் அந்த நிலை, அந்த வாழ்க்கை முடியவில்லை; மாறவில்லை. தங்களுடைய கவலைகளை இப்படிப் பாடியாவது உளரீதியாக ஆற்றிக் கொண்டனர். அதாவது தங்கள் அளவில் பாடி மனமாறிக் கொண்டனர். அவ்வளவுதான்.

    இந்தப் பாடல்கள் தமிழ்நாட்டில் பாடப்படும் நாட்டார் பாடல்களை அடியொற்றிய வடிவத்திலானவை. காரணம், இந்த மக்கள் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கையின் மலைப்பகுதிகளான கண்டி, மாத்தளை, ஹற்றன் போன்ற இடங்களில் தோட்டப்பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்டவர்கள் என்பதே. என்பதால், அவர்களுடைய நாட்டார் பாடல்களும் வாய்மொழி இலக்கியமும் தமிழ்நாட்டின் சாயலையும் சாரத்தையும் கொண்டமைந்தது. அதே மொழி, அதே மரபு. அதே தொனி.

    1823 தொடக்கம் கடல்வழியாகப் படகுகளில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த மக்களுடைய வாழ்க்கையைச் சாராம்சப்படுத்தி எச். டி. டானியல் (H.D.Deniel) எழுதிய Red Tea (எரியும் பனிக்காடு – தமிழ் மொழிபெயர்ப்பு: இரா. முருகவேல்) உங்கள் நினைவுக்கு வரலாம். பின்னர் இயக்குநர் பாலா இதனை அடியொற்றி ‘பரதேசி’ என்ற சினிமாவை உருவாக்கியிருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

    வாய்மொழிப்பாடல்களுக்குப் பிறகு, பல்வேறு கலை, இலக்கிய வடிவங்கள் உருவாகின. இதற்கான பெரும் பங்களிப்பைச் செய்தவர் தஞ்சாவூரிலிருந்து வந்து இந்த மக்களோடு இணைந்து வாழ்ந்த கோ. நடேசய்யர். நடேசய்யரே இந்த மக்களின் ‘விடிவெள்ளி‘ என்ற அளவுக்கு அன்றைய சூழலில் கல்வி, சமூக மேம்பாடு, கலை, இலக்கிய வெளிப்பாடு, இதழியல், தொழிற்சங்கங்கள், அரசியற் பிரதிநிதி, எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர், தொழிலாளர் நலனுரிமைக்கான போராட்டக்காரர் எனப் பல தளங்களில் செயற்பட்டார். இதனால் மலையகத்தில் ஒரு புதிய வெளிப்பாடு வளர்ச்சி அடைந்தது. மக்களுடைய வாழ்க்கையில் பெரிய மாறுதல் இல்லாது விட்டாலும், சமூக ஊடாட்டங்களினால் இலக்கிய வெளிப்பாட்டில் மாறுதல்கள் ஏற்பட்டன. பின் வந்த தலைமுறையினர் அதைத் தொடர்ச்சியாக எழுதி ‘மலையக இலக்கியம்’ என்றொரு இலக்கிய வரைபடத்தையே உருவாக்கினர். இந்த வரைபடத்தை உருவாக்குவதற்குப் பங்களித்தவர்களில் முக்கியமானவர்களாக கோ. நடேசய்யர், கே. கணேஸ், சி.வி. வேலுப்பிள்ளை, மீனாட்சி அம்மை, பொ. கிருஷ்ணசாமி, த. ரஃபேல், என். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், ஏ. பி. வி. கோமஸ், சி. பன்னீர்ச்செல்வம், எம் வாமதேவன், அ. சொலமன்ராஜ், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், கோகிலம் சுப்பையா, அந்தனி ஜீவா, மு. நித்தியானந்தன், அல் அஸூமத், மல்லிகை சி. குமார், மு. சிவலிங்கம், மொழிவரதன், மலரன்பன், க.ப. லிங்கதாசன், குறிஞ்சித் தென்னவன், லெனின் மதிவானம், சு. முரளிதரன் எனப் பல நூறுபேரைக் குறிப்பிடலாம். தொடரும் இந்தநெடு வரிசையில் இப்பொழுது வே. தினகரன், சு. தவச்செல்வன், சிவனு மனோஹரன், பிரமிளா, பதுளை சேனாதிராஜா, சந்திரலேகா கிங்ஸ்லி, நாகபூசணி, மஞ்சுளா, எஸ்தர் லோகநாதன், சண்முகப்பிரியா, இஸ்மாலிகா, இராகலை தயானி, சர்மிளாதேவி எனப் பலர் இணைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோருடைய எழுத்துகளிலும் சில பொதுவான பண்பை, குணத்தை அல்லது அடிப்படையை நாம் பார்க்க முடியும். அது தலைமுறை வேறுபாடுகளைக் கடந்தும் தொடர்கிறது என்பது கவனத்திற்குரியது.

    முதலாளிகள், கங்காணிகள், அரசு, காலனிய சக்திகள் எனப் பல அடுக்குகளில் உள்ள அதிகாரத்துக்கு எதிரான குரல்.

    துன்பியல் வாழ்வின் கதைகள்.

    எழுச்சி, புரட்சி என்ற கனவோடு தொடரும் போராட்டங்களும் அவற்றின் பலவீனங்களும்.

    பெண்களின் பாடுகள்

    மலையக மக்களின் விடுதலைக்கென உருவாகிய தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், தலைமைகள் மீதான விமர்சனம்.

    சிங்கள இனவாதத்தின் அச்சுறுத்தலும் அதற்கெதிரான எதிர்ப்புணர்வும்.

    கேள்விக்குறியின் முன்னே நிற்கும் இளைய சமூகத்தினர்.

    ஆக, மலையக மக்களின் – தோட்டத் தொழிலாளரின் – வாழ்க்கையை நெருக்கும் விடயங்களையே மலையக இலக்கியம் பிரதிபலித்தது. இந்த மரபு அவர்களுடைய வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களிலிருந்து உருவாகியது. மக்களின் துயரங்களையும் பிரச்சினைகளையும் பேசுவது, அவற்றுக்குக் காரணமான சக்திகளை விமர்சனத்துக்குள்ளாக்குவது என்பதே நாட்டார் பாடல்களின் பிரதான அடிப்படையாக இருந்தது. மலையக நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல, அன்றைய நாடகங்களும் கடுமையான அரசியல் விமர்சனத் தொனிப்பைக் கொண்டவையே. என்பதால், அதற்குப் பிறகு வந்த நவீன இலக்கியமும் தவிர்க்க முடியாமல், அதே செல்வழியில், வலிமையான முறையில் அரசியலைப் பேசும் இலக்கியமாகவே – எழுத்தியக்கமாகவே வெளிப்பட்டது. அது கவிதையாக இருந்தாலென்ன, சிறுகதை, நாவலாக இருந்தாலென்ன, இதை விட்டு விலகவில்லை. என்பதால்தான் அது அந்த மக்களையும் அவர்கள் வாழும் பிரதேசத்தையும் அடையாளப்படுத்தும் வகையில் ‘மலையக இலக்கியம்’ என்று உணரப்பட்டது; அடையாளம் பெற்றது. இதையே பின்வந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களும் தொடருகின்றனர். அதை விட்டு விலக முடியாத அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் நெருக்குவாரங்கள் உள்ளன.

    இலங்கையில் மிக மோசமான ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் மக்கள் (சமூகம்) என்றால், அது மலையக மக்களே. மட்டுமல்ல, நீண்டகால ஒடுக்குமுறையை (இரண்டு நூற்றாண்டுகளுக்கும்மேல்) எதிர்கொள்கின்றவர்களும் இந்த மக்களே! ஆகவேதான் மலைய இலக்கியம் தலைமுறை வேறுபாடுகளைக் கடந்தும், புதிய போக்குகள், கோட்பாடுகள் போன்றவற்றின் செல்வாக்குகளின் மத்தியிலும் சில பொதுக் கூறுகளில் மாறாது நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

    இந்த மக்கள் இலங்கைக்கு வந்து – தோட்டத் தொழிலாளர்களாகி இரண்டு நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 1800 களில் எப்படி இருந்தார்களோ, எப்படிக் கையாளப்பட்டனரோ அவ்வாறே இப்போதும் உள்ளனர். அவ்வாறே கையாளப்படுகின்றனர். இடையில் பிரித்தானியரின் காலனித்து ஆட்சி மாறி, சுதேச ஆட்சி வந்த பிறகும் நிலைமை பெரிய அளவில் மாற்றமுறவில்லை. சுதேச ஆட்சி வந்த பிறகுதான் 1949 நவம்பர் 15 இல் இந்த மக்கள் ‘நாடற்றவர்‘ ஆக்கப்பட்டனர். (இதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் தனியானவை). சுதேச ஆட்சியில் மலையக மக்களுடைய விடுதலைக்கும் நலனுக்குமென்று தொழிற் சங்கங்களும் அரசியற் கட்சிகளும் வந்த பின்னரும் கூட நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை என்பது பெருந்துயரம். ஆனால், மலையகத்தில் ஒரு படித்த மத்தியதர வர்க்கம் உருவாகியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். அதனுடைய குரலே இன்றைய (1980 க்குப் பிந்திய) இலக்கியத்திலும் வெளிப்படுகிறது. அது மத்தியதர வர்க்கத்தின் குரலாக மட்டுமில்லாமல், ஒடுக்கப்படும் மக்களின் குரலாக 2000 வரையிலும் இருந்தது. இது முக்கியமானது. அந்தக் குரல் தன்னைப் பின்வரும் உள்ளடக்கத் தன்மைகளை வெளிப்படுத்தியது.

    மலைகள் அழகு. அதற்கு மாறான வகையில் அங்குள்ள மனிதரின் கதைகள் வலியும் துயரும் மிக்கவை.

    அவலமும் துயரமும் நிறைந்த நூற்றாண்டுகளைக் கடந்த வாழ்க்கை.

    எத்தகைய அரசியல் முன்னெடுப்புகளும் தொழிற் சங்கப் போராட்டங்களும் அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை.

    ஆட்சி மாற்றங்கள், அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை.

    குடியுரிமை, நில உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்காகவே போராட வேண்டிய வாழ்க்கைப் பின்னணி.

    தொடர்ந்தும் சுரண்டப்படும் மக்களாகவே இருப்பது.

    மலையகத்தை விட்டு வெளியிடங்களுக்கு – கொழும்பு போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை. குறிப்பாக சிற்றூழிய வேலைகளுக்காக.

    இந்திய வம்சாவழி மக்களாக இருந்ததால் நாடற்றவர்கள் என்று ஒரு தொகுதியினர் மறுபடியும் இந்தியாவுக்குப் பலவந்தமாகவே திருப்பி அனுப்பட்டமை.

    ஏனைய மக்கள் தம்மை இலங்கையர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரி வேண்டிய நிலை.

    இனவன்முறைகளின் தாக்கமும் பாதிப்பும்.

    தோட்டங்களை – மலையகத்தை – விட்டு வெளியேறிக் கொழும்புக்கும் பிற இடங்களுக்கும் செல்வோர் பற்றியது.

    நெடுங்காலமாகப் பேசப்பட்டும் பேணப்பட்டும் வந்த இந்தத் தன்மை இப்போது சற்று மாறுதலடைந்துள்ளது. இதைப்பற்றி மலையக எழுத்தாளரான சு.தவச்செல்வன் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ‘இன்றைய கதைகள் அல்லது இலக்கிய வெளிப்பாடுகள் தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவனவாகவும் மக்கள் அல்லது தொழிலாளர் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்த்து, உதிரிகள் பற்றிய கதைகளைப் புனைவதும் அல்லது முக்கியத்துவமற்ற பிரச்சினைகளுக்கு முனைப்புக் கொடுத்து படைப்புகளை உருவாக்குவதுமாக மாறியுள்ளது’ என்கிறார் தவச்செல்வன். உருவாகியிருக்கும் அல்லது வளர்ச்சியடைந்திருக்கும் மத்தியதர வர்க்கத்தின் குணாம்ச வெளிப்பாடு இது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

    2000 க்குப் பிறகு உருவாகிய புதிய தலைமுறையில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்ளே புத்திஜீவிகளாவும் விமர்சகர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கும் மக்களுக்குமிடையிலான நெருக்கம் குறைவடையத் தொடங்கி, இன்று அது குறைந்தே விட்டது. இவர்கள் மலையகத்தை – தோட்டங்களை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர்; செல்கின்றனர். இதனால் தோட்டங்களைப் பற்றிய அனுபவங்களும் சமூக உறவும் இவர்களிடம் குறைவடைகிறது. பதிலாக வெளியே சென்று குடியேறுகின்ற – வேலை செய்கின்ற – இடங்களில் சந்திக்கின்ற – சந்திக்க நேர்கின்ற பிரச்சினைகளே இவர்களுடைய எழுத்தைச் சாரப்படுத்துகின்றன. அதுவே இவர்களைச் சீண்டும், தீண்டும் பிரச்சினைகளாக உள்ளன. அத்துடன் இன்றைய உலகமயமாதல் உருவாக்கியிருக்கும் குழப்பமான சூழல், நவீனத்துக்குப் பிந்திய படைப்பாக்கம் பற்றிய கருத்தாக்கம், பின்நவீனத்துவச் சிந்தனைகள் போன்றவற்றின் செல்வாக்கும் இந்தப் புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் தாக்கம் செலுத்துகின்றன.

    என்பதால் இப்பொழுது மலையகத்தில் தொழிலாள வர்க்கம் ஒன்றாகவும் அதனுடைய பிரச்சினைகள், அவனுடைய வாழ்க்கை போன்றவை அது சார்ந்தவை அதனோடு இணைந்ததாகவும் உள்ளது. மத்தியதர வர்க்கம் இன்னொன்றாகவும் அதனுடைய பார்வைகளும் அணுகுமுறைகளும் அனுபவங்களும் பிரச்சினைகளும் வேறொன்றாகவும் உள்ளன. என்பதால் மலையக இலக்கியம் இந்த நூற்றாண்டில் இன்னொரு வடிவில், இரு நிலைகளை (தன்மைகளை) உடைய புதிய தன்மையைக் கொண்டுள்ளது.

    இந்தப் பின்னணியில் மலையக எழுத்தாளரான சு. தவச்செல்வனின் சிறுகதைகள் குறித்துப் பார்க்கலாம். சு. தவச்செல்வன், 2010 இலிருந்து எழுதி வருகிறார். மலையகத்தில் உள்ள ஹற்றன் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் பிறந்து வளர்ந்து, அங்கேயே படித்து, அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பட்ட மேற்படிப்பை மட்டும் யாழ்ப்பாணத்திலும் பேராதனை (கண்டி) பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்திருக்கிறார். சிறுகதை, விமர்சனம், கவிதை, ஆய்வு ஆகிய துறைகளில் தவச்செல்வனின் எழுத்து முயற்சிகள் பல்தன்மை விரிவில் உள்ளன. இதுவரையில், சிவப்பு டைனோசர்கள் (கவிதை), மலையகத்தில் பாரதியின் சிந்தனை (ஆய்வு), ஆடுபாலம் (சிறுகதை), டார்வினின் பூனைகள் (கவிதை), படைப்பும் படைப்பாளுமைகளும் (விமர்சனம்), புனைகதையும் சமூகமும் (ஆய்வு), இலக்கியம் – கலகம் – அரசியல் ( விமர்சனம்), இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் (ஆய்வு), சிங்கமலை (சிறுகதை) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

    15574.jpeg?resize=300%2C420&ssl=1

    பன்முக ஆற்றலுடைய தவச்செல்வன், இன்னமும் தோட்டத்து மக்களைக் (மலையகத்திலேயே வாழும் மக்களை) குறித்து எழுதுவதும் மலையச் சமூக, இலக்கிய, அரசியல் வரலாற்றைக் குறித்து ஆய்வுகளைச் செய்வதும் அவருடைய சமூகக் கரிசனையையும் இலக்கிய நோக்கையும் அடையாளப்படுத்துகிறது. என்பதால் தவச்செல்வனுடைய கதைகள் தொழிலாளர் பிரச்சினை, முதியவர்களின் வாழ்க்கை, மலையகப் பெண்களின் பாடுகள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள நெருக்கடி, தோட்ட மற்றும் அரச அதிகாரத்தரப்புகளின் நடத்தைகள், சிறாரின் உலகம், மலைகளின் கதைகள் (அந்தச் சூழலின் வரலாற்றுணர்வு பற்றியவை), இளையோரின் சவால்கள், வறியவர்களின் வாழ்க்கை, இந்திய வம்சாவழி என்ற அடையாளத்தினால் ஏற்படும் சிக்கல்கள், புதிய அரசியல் பொருளாதாரச் சூழலில் தோட்டங்கள் மூடப்படுதலின் விளைவுகள், இந்திய வம்சாவழி உறவுகளைப் பேணவும் முடியாது, கை விடவும் முடியாது தத்தளிக்கும் உளநிலை எனப் பலவற்றைப் பற்றிப் பேசுகின்றன.

    இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கான கதைகளா இவை? அல்லது தன்னுடைய கதைகளில் இவற்றையெல்லாம் பேசுகிறாரா? என்று தெரியாத வகையில், கலைத்துவமாக அழகியலோடு எழுதியிருக்கிறார் தவச்செல்வன். வர்க்க நிலைப்பட்ட பார்வையே தவச்செல்வனுடைய கதைகளின் பொதுத் தன்மை. இதனை அவர் இரண்டு வகையாக நிகழ்த்துகிறார். ஒன்று, உழைப்பாளிகளாக உள்ள மக்களின் பாடுகளைச் சொல்வது. இதன் மூலம் அந்த மக்களின் நிலைமையை உலகின் முன்னே வைப்பது. உலகின் முன்னே வைப்பதென்பது, அரசு, சமூக அமைப்புகள், கட்சிகள், கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், மனித உரிமைவாதிகள், சட்டவாளர்கள், நீதியாளர்கள், ஊடகங்கள், சர்வதேசச் சமூகம் எனச் சகல தரப்பின் முன்னும் வைப்பதாகும். முக்கியமாக இந்திய அரசின், தமிழக அரசின் முன்னாலும். “உங்களின் முன்னே நூற்றாண்டுகளாக ஒரு சமூகம் மிகக் கீழ்நிலைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் பங்களிப்பே அதிகமானது. அதற்குப் பெரும் பங்களிப்பை நூற்றாண்டுகளாக இந்த மக்களே வழங்கி வருகின்றனர். அப்படிப் பெரும் உழைப்பை வழங்கி வரும் மக்கள், அதற்கான தகுதிநிலையைப் பெற முடியாமல், ஒதுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, கீழ்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இது என்ன நீதி? இதற்கு என்ன நியாயம்?…“ என்று முகத்தில் அறைந்தாற்போலக் கேட்கின்றன. இதன் மூலம் அந்த மக்களின் பிரதிநிதியாக நிற்கிறார் தவச்செல்வன். இது உழைப்பாளர்களின், ஒடுக்கப்பட்டோரின் நிலை நிற்றலாகும். இரண்டாவது, நூற்றாண்டுத் துயரைத் தன்னுடைய முன்னோடிகள் – முதற் தலைமுறையினர் மட்டுமல்ல, தானும் சொல்லவும் பேசவும் வேண்டியுள்ளது. அது தன்னுடைய பொறுப்பு, கடமை என்று உணர்வது. ‘இது தலைமுறையாகத் தொடரும் ஒரு தீராத நோய். தலைமுறைகளாகக் கிடைக்கப்பெறாத நீதி‘. என்பதால் தானும் இதைப்பேசுவதன் மூலம் தன்னுடைய பங்களிப்பைச் செய்வதோடு, இதற்கெதிரான போர்க்குரலை, போராட்ட உணர்வை உருவாக்கும் போராளிக்குரிய நிலையிற் செயற்படுவதாகும். இந்த இரு தன்மைகளில் உள்ள கதைகள், ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்புக் குரலாகவும் போராட்ட எழுச்சிப் படைப்புகளாகவும் சமனிலையில் தொழிற்படுகின்றன. இவற்றை அக – புற நிலையில் பயணித்து எழுதி அளித்திருக்கிறார். தொகுத்துச் சொல்வதாயின், இவை ‘கலகக் கதைகள், எதிர்ப்புக் கதைகள்‘ எனலாம். ஆக கலகக் குரலே தவச்செல்வனுடையது. எதிர்ப்பிலக்கியமே தவச்செல்வன், எழுதி அளித்திருப்பது. ஆனால், வாசிக்கும்போது முதல் நிலையில் இவை ‘துன்பியல் கதைகள்‘ என்றே தோன்றும். மக்களின் வாழ்க்கைப் பாடுகளை விவரிக்கும்போது, அவற்றை நாம் நேரில் காண்பதைப்போல, அதற்குள் வாழ்வதைப்போல உணரும்போது அந்த மக்களின் துயரம், நம்முள் சுவறுகிறது. ஆனால், அப்படியே துன்பத்தைப் பகிர்வதோடு எந்தக் கதையும் முடியவில்லை. அப்படித்துன்பியலைப் பரப்பி, கழிவிரக்கத்தைக் கோருவதற்குத் தவச்செல்வன் விரும்பவில்லை. அப்படிக் கழிவிரக்கப்படுவது தேவையில்லை என்பதே அவருடைய நிலைப்பாடுமாகும். ‘உழைப்புக்கு மதிப்புத் தாருங்கள். மனிதருக்கு உரிமையை வழங்குங்கள்‘ என்பதே அவருடைய வலியுறுத்தல். அதைப் பெறுவதற்கு ‘நாமெல்லாம் தகுதியுடையோர்‘ என்பதே அவர் தன்னுடைய மக்களுக்கும் உலகத்துக்கும் சொல்லும் சேதி.

    15431.jpeg?resize=300%2C459&ssl=1

    இதைத்தானே முந்திய தலைமுறை மலையக எழுத்தாளர்களும் செய்திருக்கிறார்கள்! இதில் தவச்செல்வன் என்ன புதிதாகச் சொல்லியிருக்கிறார்? மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக வளர்ச்சியை, மத்திய தர உருவாக்கத்தை, அந்த மத்தியதர வர்க்கத்தினர் மலையகத்தை விட்டு வெளியேறிச் செல்வதை, அந்த வெளியேற்றம் மலையகச் சமூகத்தில் அகத்திலும் புறத்திலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை, கூலி உழைப்பாளிகளும் கூட தோட்டங்களை விட்டு புறநகர்களை நோக்கிச் செல்கிறார்களே அந்த வெளியேற்றம் உண்டாக்கும் சமூகப் பண்பாட்டு நொதிப்புகளை, புதிய உலக ஒழுங்கில், உலக மயமாதற் சூழலில் மலைகத்தின் நிலையை தவச்செல்வனின் கதைகள் என்ன விதமாகப் பேசியுள்ளன? மொத்தமாக மலையகக் கதைகளில் தவச்செல்வனின் கதைகளுக்கான இடமென்ன? தவச்செல்வனுடைய கரைதகளின் தனித்தன்மை என்ன? போன்ற கேள்விகள் பலருக்கும் எழலாம்.

    தவச்செல்வன் புதிதாக அதிகம் சொல்லவில்லைத்தான். ஆனால், சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார். அதற்கான சொல்முறையையும் வெளிப்பாட்டு வடிவத்தையும் செம்மையாகக் கையாள்கிறார். அவர் ஒரு சமூகவியல் ஆய்வாளர் என்ற வகையிலும் இலக்கிய விமர்சகன் என்ற அடிப்படையிலும் தன்னுடைய கதைகளின் உள்ளீட்டிலும் வெளிப்பாட்டிலும் கவனம் கொண்டு இந்தச் செழுமையாக்கத்தைச் செய்திருக்கிறார். இதற்குச் சான்றாக, ‘சாக்குக்காரன்’, ‘ புதைமேடு’, ‘அப்பாவின் ரேங்குப்பெட்டி’, ‘வரிச்சி வரிசை’, ‘முதிர்கன்னி’, ‘காலையும் கிழவனும்’, ‘வெறுங்கல்லும் வேட்டை நாய்களும்’, ‘ஆடுபாலம்’, ‘காணிக்கொழுந்து’ போன்ற கதைகள் இதில் முக்கியமானவை. ‘சாக்குக்காரன்’ கதை, மலையகத்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிளை, அந்தத் தோட்டத்தில் வேலையாட்களுக்குப் பொறுப்பாக இருக்கும், வேலையாட்களைக் கண்காணிக்கும் அதிகாரிகள் எப்படி அடிமைகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறது. தோட்ட விதிமுறைகளுக்கு மாறாக நடைமுறைகளை மாற்றித் தங்களுடைய குடும்பத்துக்கான சேகவத்தைச் செய்விக்கும் இடைநிலை அதிகாரிகள், கங்காணிமார், ‘சாக்குக்காரன்‘ என்ற நேர்மையான உழைப்பாளியின் குடும்பத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவனுக்கும் குடும்பத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரமில்லை. அவனுடைய அப்பாவித்தனத்தை அவர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அன்று நள்ளிரவு வரையில் அவனுடைய வருகைக்காக மனைவியும் குழந்தைகளும் காத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்தபோதுதான் அவனுக்குப் புரிகிறது, குழந்தைகளுக்கும் அன்றைய சமையலுக்குமாக வாங்கிய பொருட்களை தான் வேலை செய்யும் வண்டியில் கொழுவி விட்டு, மறந்து வந்துவிட்டேன் என்பது. அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அன்றைய இரவும் பசித்திருத்தல், துயரில் வாழ்தல்தான் கதை. இந்த அநீதி விளையாட்டுத் தலைமுறையாகத் தொடருகிறது. தொழிற்சங்கங்களுக்கும் அரசியற் கட்சிகளுக்கும் இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் என்ன? இருளும் துயரும்தான் விதி. இந்த விதி இப்படியே தொடர வேண்டுமா? என்பதைப் படிக்கும்போது நாம் உணர்ந்து கொள்கிறோம்.

    ‘அப்பாவின் ரேங்குப்பெட்டி’ – இலங்கையின் வாழ்ந்தாலும் இந்தியாவில்தான் வம்சாவழி உறவுகள் என்பதைச் சொல்லும் கதை. ஒரு தடவையேனும் போய் அந்த உறவுகளைப் பார்த்து வரமுடியுமா என்று ஏங்குகிறார் தந்தை. அங்கே, தமிழ்நாட்டில் உள்ள உறவுகளின் மரணச் சேதிகள், திருமண நிகழ்வு பற்றிய அறிவிப்புகள் எல்லாம் வரும்போது உறவுகளைப் பார்க்க வேண்டும் என்ற தாகம் மேலெழுந்து தவிக்க வைக்கிறது. பயணத்துக்கான பாஸ்போட்டை எடுத்தாலும் பயணத்துக்கான சாத்தியங்களில்லை. எல்லாவற்றையும் (தன்னுடைய ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும்தான்) அந்த ரேங்குப் பெட்டிக்குள் போட்டிப் பூட்டி வைத்திருக்கிறார் அப்பா. அதை அவர் பக்குவமாகவே வைத்திருக்கிறார். இந்தப் பெட்டிக்குள் என்னதான் இருக்கிறது என்று அறியத் துடிக்கின்றன பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளின்பார்வையிலிருந்தே கதை சொல்லப்படுகிறது.

    15337.jpeg?resize=300%2C467&ssl=1

    பிந்திய தலைமுறைக்கு இந்த உறவின் தன்மையோ, விவரமோ தெரிவதற்கு வழியில்லை. காலமும் சூழலும் நாட்டு நிலைமைகளும் சட்டங்களும் அவற்றைச் சிதைத்து விட்டன. ஆனால், அப்பாவுக்கு அந்த நினைவுகளிலிருந்து விடுபட முடியவில்லை. அவர் தன்னுடைய இந்த உறவுகள் அனுப்பிய கடிதங்களோடும் பொருட்களோடும் வாழ்கிறார். அதற்கென ஒரு ரேங்குப் பெட்டியை வைத்திருக்கிறார். அது அவருடைய ரகசியப் பொக்கிஷம். அதைப் பிள்ளைகள் திறந்து பார்த்து விடுகிறார்கள். இப்படியே செல்லும் கதை இந்த மக்களின் பூர்வீகத்தைப் பற்றியும் அந்த நினைவுகளின் பாடுகள் எப்படி மனித மனங்களில் வலியாக மாறி நீடிக்கின்றன என்பதையும் ஆராய்கிறது. மட்டுமல்ல, அந்த நினைவுகளோடு வாழ்தலையும் அதன் வலிகளையும் உறவுகளைப் பிரிந்திருத்தலின் துயரையும் புதிய தலைமுறைகள் இதையெல்லாம் தொடர முடியாத நிலையையும் சிறப்பாகச் சொல்கிறது.

    மானுடத் துயரங்கள் எப்படியெல்லாம் உள்ளன!

    ‘வரிச்சி வரிசை‘ – விழிப்புணர்வுக் கதை எனலாம். பொதுவாகவே எல்லாக் கதைகளிலும் விழிப்புணர்வுத் தன்மை அடிப்படையாக இருந்தாலும் இந்தக் கதையில் அது சற்று நேரடியாகச் சொல்லப்படுவதைப்போல ஓருணர்வு ஏற்படுகிறது. சுரண்டப்படும் மக்களுக்குள் அல்லது ஒடுக்கப்படும் உழைப்பாளர்களுக்குள் ஏற்படுகின்ற கொதிப்பு, எதிர்ப்புணர்வாக எப்படி மாறுகிறது? எப்படிப் புரட்சிக்கான உணர்வெழுச்சியை உருவாக்குகிறது என்பதை இயல்பாகச் சொல்கிறது. அப்படி உணர்வெழுச்சி அடையும் இளைஞரின் தலையில் சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டிருப்பது, சிவப்ப ரீசேர்ட் அணிந்திருப்பது என்பது சற்று மிகைப்படுத்தப்பட்டதுதான். அல்லது அந்தக் குறியீட்டுக்கான அழுத்தம் செயற்கையாக உள்ளதென உணரப்பட வாய்ப்புண்டு. இருந்தாலும் கதைப்போக்கில் கொதிப்பு எதிர்ப்புணர்வாக உருவாகி வரும் விதம் இயல்பாக – யதார்த்தமாகவே உள்ளது.

    முன்னோரின் வாய்மொழிக் கதையாக தாத்தாவின் மூலமாகச் சொல்லப்படுகிறது ‘சிங்கமலை’. மலைக்காடுகளை எப்படி ‘முன்னோடிகளான முதற் தலைமுறை தொழிலாளர்கள் தோட்டங்களாகவும் இன்று நாம் பார்த்து வியக்கின்றன செழிப்பான மலையகமாகவும் மாற்றினார்கள். அதில் இந்த மாதிரி மலைக்குன்றுகள்தான் அன்று அவர்களுடைய வாழிடமாக இருந்தன. அப்பொழுது வீடுகளே இருக்கவில்லை. காடுகளிலும் மலைக்குன்றுகளின் கீழும் குகைகளிலும்தான் மக்கள் வாழ வைக்கப்பட்டனர். அப்படி வாழ்ந்துதான் இந்த மலையகத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பேரனுக்குச் சொன்னதாக, பேரனின் வழியாகச் சொல்லப்படுகிறது.

    கடந்து வந்த காலத்தின் வரலாறும் துயர்வழிப் பாதையும் அப்படியே நமக்குள் விரிகிறது. மலையகத்தைப் பற்றிய, அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நம்முடைய பார்வையும் அனுபவமும் மாறுகிறது. இனி மலையகத்துக்குச் செல்லும்போது அல்லது மலையகக் காட்சிகளை எங்கேனும் பார்க்கின்றபோது, நாம் அந்தப் பசிய மலைமுகடுகளையோ, வரிசையாக நின்று தேயிலைக் கொழுந்து கொய்யும் பெண்களையோ ஒரு அழகிய காட்சி என்ற கோணத்திலிருந்து பார்க்காமல் நம்முடைய பார்வையை மாற்றி விடுகிறது கதை. பதிலாக அந்த மனிதர்களின் வாழ்க்கை நிலையின் ஊடாகவே பார்க்க வைக்கிறார் தவச்செல்வன். இது அவருடைய நோக்கத்தின் – எழுத்தின் – வெற்றி. இலக்கியத்தின் நுட்பமும் அடிப்படையும் இதுதானே. அக விரிவுகளை உருவாக்குவது. புதிய பார்வைகளை (நோக்குகளை) வழங்குவது. இருட்பிராந்தியங்களை ஒளிப்படுத்திக் காட்டுவது. நீதிக்கான பக்கத்தில் நம்மை நகர்த்துவது. நம்முடைய மனதை திருப்பிப் போடுவது….

    ‘பொடிமாத்தயாவும் மாடசாமியும்‘ சிங்கள வன்முறையை, சிங்கள ஆதிக்கத்தைச் சொல்லும் கதை. தமிழ் பேசும்மக்கள் செறிவாக வாழும் மலையகப் பகுதிகளில் சிங்கள இனவாதிகள் எப்படி மேலாதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனாலும் தொழிலாளி என்ற அடிப்படையில் அந்த வன்முறையை பொடிமாத்தயா என்ற சிங்களவர் எதிர்க்கிறார். அவர் தமிழ் மக்களின் பக்கமாகவே நின்று போராடுகிறார். இங்கே தொழிலாளர்களுக்கிடையிலான உறவும் உணர்வும் வர்க்க உணர்வாக அமைந்திருக்கிறது. இது தவச்செல்வனின் வர்க்கப்பார்வைக்கு அடையாளமான கதை எனலாம்.

    ‘காணிக் கொழுந்து‘ வெளியார் உற்பத்தி முறை(Outsider production system) மூலமாக நிலமற்ற மக்களின் பிரச்சினையையும் அதனால் ஏற்படும் வாழ்க்கைச் சிக்கல்களையும் சொல்கிறது. முக்கியமாக இதில் உள ரீதியாக உருவாக்கும் தாக்கங்களைக் கவனப்படுத்துகிறார் தவச்செல்வன்.

    இன்னொரு முக்கியமான கதை, ‘ஆடுபாலம்‘. காலனத்துவ காலத்தில் பிரிட்டிஷாரினால் அமைக்கப்பட்ட ‘ஆடுபாலங்கள்‘ இன்னும் மலையகத்தில் உண்டு. ஆறுகளின் மேலாக அமைக்கப்பட்ட இந்தப் பாலங்கள் பாதுகாப்பற்றவை. இந்தப் பாலத்தின் வழியே பயணித்தவர்கள் இறந்த சம்பவங்கள் பலவுண்டு. அப்படியான ஒரு சம்பவத்தில் எட்டுப்பேர் ஒன்றாக பலியானதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது.

    ‘காலையும் கிழவனும்‘ மலையகத்துக் கதையாக இருந்தாலும் வழமையான – அறியப்பட்ட – கதைப் பிராந்தியத்துக்கு வெளியே உள்ள ஒன்று. மலையகத்தில் காளை மாடுகளை வளர்ப்பது ஒரு சிறிய தொழில் முயற்சியாக அங்குள்ள ‘லயம்‘ வாழ் மக்களிடம் இருந்தது. காளை மாடுகளைக் கொண்டு பசுமாடுகளைச் சினைப்படுத்துதல் (கருவூட்டுதல்) தான் காளை மாடுகளை வளர்ப்பதற்கான காரணம். செயற்கை முறைச் சினைப்படுத்தல் வந்தபோது காளை மாடு வளர்ப்புச் சவாலுக்குரியதாகி விடுகிறது. உலகமயமாதல், புதிய தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றினால் ஏற்படுகின்ற தொழில் நெருக்கடி, சுதேச, பாரம்பரியத் தொழிலில் எத்தகைய சிக்கல்களை உண்டாக்குகிறது என்பதை உணர்த்துவது. கவனம் பெற்ற கதைகளில் இதுவும் ஒன்று.

    இதைப்போலப் பெண்களின் பாடுகளையும் அவர்களுடைய உளநிலையையும் சிறார்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய சவால்களையும் அகமெடுத்துத் தவச்செல்வன் எழுதியிருக்கிறார். தொழிற்சக்க அரசியலின் பலவீனம், தொழிலாளர்களை எப்படிப் பாதிக்க வைத்தது, தோட்டங்கள் மூடப்படுவதற்குப் பயன்படுத்தும் அதிகார வர்க்கத்தின் பொறிமுறை, அந்தச் சவாலை எதிர்கொள்வதற்குப் பெண்கள் உட்படத் தொழிலாளர்கள் படுகின்ற அவதியும் போராட்டமும், சம்பளப்பிரச்சினை, வாழிடப்பிரச்சினை, பாலியற் சுரண்டல்கள், சிறாரைத் தொழிலுக்கு அமர்த்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்க இழப்பீட்டில் நடக்கும் ஒழுங்கீனங்களும் ஏமாற்றும் – அதற்கான நிவாரணத்தைப் பெறுவதில் உள்ள நெருக்கடிகள் என ஏராளம் ஏராளம் பிரச்சினைகள் அறியத்தரப்படுகின்றன. ஒவ்வொன்றும் எத்தகைய அக – புறத் தாக்கத்தை ஒரு சமூக மனிதர்களிடம் உருவாக்குகின்றன. அது எப்படிச் சமூகத துயரமாக உறைந்து கிடக்கிறது. இதையெல்லாம் தாங்கியும் தாங்கிக்கொள்ள முடியாமலும்தான் அந்த மக்கள் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நாம் வாழும் இந்த உலகத்தில்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நம்முடைய வினைகள் என்ன? என்பதைக் கேள்விகளாக எழுப்பி விடுகின்றன இந்தக் கதைகள். ஒவ்வொரு சொல்லையும் படித்துச் செல்லும்போது நம்முடைய மனம் கனக்கத் தொடங்கி விடுகிறது. குற்றவுணர்ச்சியும் கோபமும் சமாந்தரமாக எழுகின்றன. நம்முடைய ரத்தக் கொதிப்பின் அளவு உயர்கிறது. தனியே ரத்தக் கொதிப்பை அதிகரிக்கப்பண்ணுவதுதான் இந்தக் கதைகளா என்றால், நிச்சயமாக இல்லை. நிதானமாகச் சிந்தியுங்கள். அந்த மக்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களோடு இணைந்திருங்கள். அவர்களுக்காக போராடுங்கள் – குரல் எழுப்புகள். அவர்களும் சக மனிதர்கள். சக மனிதர்களின் மீது கொள்ளும் நேசமே மானுட மகத்துவம். அதுவே அன்பின் அடையாளம். அதற்கே அன்புறவிலும் பண்பாட்டிலும் இடமுண்டு. பண்பாடு என்பதே சக மனிதர், சக சமூகத்தினரின் மீது கொள்ளும் கரிசனையிலும் அன்புறவிலும் அவர்களுடைய துயர் களைதலிலும்தான் சிறப்புறுகிறது என்பதை உணர்த்துகின்றன. அப்படி உணர்த்தப்பட்டதானால்தான் இந்தக் கதைகளைப் பற்றிய இந்த வார்த்தைகளை எழுத முடிகிறது. அவையே இந்தச் சொற்களை இங்கே தூண்டுகின்றன.

    தவச்செல்வனுடைய கதைப்பரப்புகளில் மேலும் சில அம்சங்களைக் காணலாம்.

    சூழல் தேசியவாதம் குறித்த அக்கறையும் அக்கறைப்படுத்தலும்.

    மலையக மக்களின் சமகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, வாழ்க்கைச் சித்திரங்கள்.

    மலையக மக்களின் தேசிய இருப்பும் சவால்களும்.

    மலையக மக்களின் தலைமுறைகள் – அவற்றிடையே ஏற்படுகின்ற மாற்றங்களும் மோதல்களும் விலகல்களும்.

    இவை பற்றித் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். விரிவு காரணமாக இங்கே அதை இந்த அடையாளப்படுத்துலோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    வெவ்வேறு கதைப் பரப்புகளிலும் கவனம் கொண்டிருப்பது தவச்செல்வன் கதைகளின் முக்கியத்துவம் அல்லது தனித்துவம் எனலாம். ஆனால், மலையகத்தில் ஏற்பட்டுள்ள மத்தியதர வர்க்க வளர்ச்சியையும் அதனுடைய விலகிச் செல்லும் அக – புற நிலைகளையும் கவனிக்கவில்லை என்பது ஒரு குறையே. ஆனால், அவருடைய கட்டுரைகளிலும் ஆய்வுகளிலும் இதைப்பற்றிய முறையான அவதானங்கள் உண்டு. கதைகளில்தான் இல்லை. அதைப்போல, தோட்டங்கள் காலனித்துவம், சுதேச அரசு, அரசுடமை, கம்பனிகள் ஆகியவற்றின் கீழ்மாறிச் சென்றதைப் பற்றிய சித்திரங்களும் பெரிய அளவில் இல்லை. ஒரு சமூகத்தின் அத்தனை பிரச்சினைகளையும் உள்ளெடுத்துப் படைப்பாளி பேச வேண்டும் என்ற நிபந்தனையை யாரும் விதிக்க முடியாது. அப்படியான கேள்விகளையும் எழுப்ப முடியாது. அப்படிச்செய்வது அவருடைய முழுநேர வேலையும் அல்ல. அவருடைய பரப்பெல்லைக்குள் கவனப்படுத்தய விடயங்களைக் குறித்து, அவற்றின் செழுமை, உள்ளடக்குகள், அவை பேச விழைகின்ற அரசியல், பண்பாட்டு விடயங்கள் போன்றவற்றின் மீதுதான் நாம் கவனம் செலுத்திப் பேசலாம். அவற்றில் குறித்த எழுத்தாளருடைய வெற்றி – தோல்விகளைப் பற்றி உரையாடலாம். அப்படிப் பேச விளையும்போது மலையக எழுத்தாளர்களில் தவச்செல்வனுடைய இடம் வலியது. அவருடைய கதைகள் மலையக இலக்கியத்தில் தனி முகமுடையவை.

    இதை மேலும் சான்றுப்படுத்துவதாக இருந்தால், மக்கள் அழகியல் என்று உணர்ந்து கொள்வதற்கான பண்பாட்டு அம்சங்கள், வாழ்க்கைக் கோலங்கள், மக்களுடைய பண்பு, நம்பிக்கைகள், வரலாறு, நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழும் திறன் போன்றவற்றைப் படைப்பாக்கி, மலையக மக்களின் முழுச்சித்திரமொன்றை நமக்குத் தருகிறார். ஒரு கதைத் தொகுதியை வாசிப்பதன் வழியாக அந்தச் சமூகத்தின் வரலாறு, பண்பாடு, அதனுடைய மொழி, சடங்குகள், அந்த மக்களுடைய வாழ்க்கை, தொழில்முறைகள், அவற்றில் ஏற்படுகின்ற சவால்கள், அவர்களைப் பலியிடுகின்ற அல்லது ஈடேற்றுகின்ற அரசியல், அவர்களிடையே ஏற்படுகின்ற வளர்ச்சி, சூழல் தாக்கங்கள், அமைவிடம், இயற்கையின் செல்வாக்கு எனப் பலதையும் அறிய முடியுமாயின் அது மிகப் பெரிய வெற்றியே. இவற்றில் குறித்த சமூகத்தின் ஆன்மா தொழிற்படும் விதமே அதனுடைய வரலாறாகவும் பண்பாடாகவும் வளர்ச்சியாகவும் அமைகின்றது. அதைக் கண்டுணர்வதே எழுத்தாளரின் சிறப்புப் பணி. தவச்செல்வனிடம் இதைச் செழிப்புறக் காண்பது மகிழ்ச்சிக்குரியது.

    மலையகக் கதைகள் ஈழத்தின் பிற தமிழ்மொழிச் சமூகங்களான இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்களின் கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. வாழிடம் (திணை –குறிஞ்சி), மொழி (தமிழ் மொழியாக இருந்தாலும் ஆட்களின் பெயர்கள், சொற்கள் போன்றவை தமிழ்நாட்டுடன் நெருக்கமானவை அல்லது தமிழ்நாட்டைச் சாரப்படுத்தியவை), பண்பாடு (இதுவும் ஏறக்குறைய தமிழகப் பண்பாட்டை அடியொற்றியதே), அரசியல், வாழ்க்கை அமைப்பு (இதிலும் தமிழகச் சாயல்கள் உண்டு), நம்பிக்கைகள், சவால்கள் எனப் பலவற்றாலும் வேறானவை. ஆனால், மலையக இலக்கியமும் ஈழ இலக்கியமே. அந்த மக்களும் இன்று இலங்கையின் பன்மைச் சமூகங்களில் ஒன்றாகவே உள்ளனர். தேசிய அரசியற் பிரச்சினைகளில் அவர்களுடைய பங்கேற்பும் இடையூடாட்டமும் உண்டு. மட்டுமல்ல, வலிமையானது. பிரத்தியேகத்தன்மைகள்தான் அவர்களைத் தனிச் சமூகத்தினராகவும் தனிப் பண்பாட்டுக்குரியவர்களாகவும் தனியான இலக்கிய அடையாளத்தைக் கொண்டவர்களாகவும் தனித்துக் காண்பிக்கின்றன. இந்தக் காண்பித்தலை – உணர்தலை – தவச்செல்வன் கதைகள் முறையாகச் செய்கின்றன.

    ஆபிரிக்க இலக்கியம், அரபு இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், தமிழிலக்கியம், வங்க இலக்கியம் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்வதில் அந்தப் பிரதேசங்களும் அங்குள்ள அரசியல், பண்பாடு, தொழில்முறை போன்றவை எப்படிச் செல்வாக்குப் பெறுகின்றனவோ, அப்படியான அடையாளப் பெறுமானத்தை மலையக இலக்கியமும் கொண்டுள்ளது. மலையக இலக்கியத்தின் பொதுப் பண்பில் ஒன்று, அவற்றைப் படிக்கும்போது கொள்ளும் துயரமும், துயரத்துக்கு எதிரான தூண்டலும் மட்டுமல்ல, இன்னொன்றும் உள்ளது. அது இந்த மக்களைத் தங்களுடைய முதலாளித்துவப் பொருளாதார உற்பத்திக்காக நாடு விட்டு நாடு (தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு) மாற்றிக் கொண்டு வந்து கைவிட்டுச் சென்ற பிரித்தானியர்கள் கொள்ளக் கூடிய குற்றவுணர்ச்சியாகும். அதை எழுப்பக் கூடிய சாட்சியங்களே மலையக இலக்கியத்தின் ஒரு பொருள். இந்தக் கதைகளைப் படிக்கும் ஒரு பிரித்தானியர் தமது மூதாதையர் இழைத்த கொடுமைக்கும் அநீதிக்குமாக வெட்கப்படுவார், துயருறுவார். தலைமுறைகளாக – நூற்றாண்டாகத் தலையையும் தோள்களையும் அழுத்தும் சுமையோடு தங்களின் முன்னே – எதிரே – உற்று நோக்கியவாறு நிற்கும் மனிதர்கள் அவர்களுடைய அகக் கண்களில் தோன்றுவர். அது அவர்களுடைய இதயத்தை உருக்கும். அது இதயமாக இருந்தால். கண்களில் நீரைக் கசியச் செய்யும். அவை ஒளியுடைய கண்களாக இருந்தால்.

    இன்னொன்று அந்த மக்களை வேண்டா வெறுப்போடு ஏற்றுக் கொண்ட இலங்கை ஆட்சியாளர்கள் கொள்ளக் கூடிய குற்றவுணர்ச்சி. இந்த மனிதர்கள் 200 ஆண்டுகளாக தங்களுடைய இரத்தத்தை அட்டைக்கும் நாட்டுக்குமாகச் சிந்தியிருக்கிறார்கள். அட்டையும் இந்த நாடும் அவர்களுடைய இரத்தத்தை உறிஞ்சியிருக்கின்றன. அதற்குப் பதிலாக இந்த மனிதர்களுக்கு எதையும் இந்த நாடு கொடுக்கவில்லை. அந்தக் குற்றவுணர்ச்சி தலைமுறைகள் கொள்ளக் கூடியது. அதற்கடுத்து, சக மனிதர்கள் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் கொள்ள வேண்டிய குற்றவுணர்ச்சி. இதை விட முக்கியமானது, இந்திய ஆட்சியாளர்களும் தமிழக ஆட்சித்தரப்பினரும் கொள்ள வேண்டிய குற்றவுணர்ச்சி.

    ஒடுக்கப்பட்டோரின் இலக்கியத்தில், பிரதானமாக இருக்கும் ஓரம்சமும் அடிப்படையும் இந்தக் குற்றவுணர்ச்சியைத் தூண்டுதல் ஆகும். அது எதிர்த்தரப்பையும் (எத்தரப்பையும்) பணிய வைக்கக் கூடியது. தவச்செல்வனும் மலையக இலக்கியமும் அழகிய பிராந்தியத்தின் (வளமான குறிஞ்சித் திணையின் – மலைநாட்டின்) மலர்ச் செண்டுகளை ஏந்தி நிற்கவில்லை. இலங்கையின் விக்டோரியா என்று வர்ணிக்கப்படும் அழகிய – செழிப்பான நுவெரெலியாவிலும் அதைச் சூழலும் மலர்கின்ற அழகிய ரோஜாக்களில் நிரம்பியிருப்பது பனித்துளிகளோ, மழைத்துளிகளோ அல்ல. அது அங்குள்ள மலையக மக்களின் கண்ணீர்த்துளிகளும் வியர்வைத்துளிகளும். மலர்த் தோப்பென விரிந்திருக்கும் கண்டி – பெரெதெனியாவில் மலர்கின்ற மலர்களில் நீங்கள் கண்டு வியக்கும் அழகின் அடியில் கேட்பது மலையக மக்களின் நூற்றாண்டுகாலத் துயரப் பாடலிசை. மலையகத்தில்தான் மிகச் செழிப்பான மரக்கறிச் செய்கை நடக்கிறது. ஆனால், அங்குள்ள மலையக மக்களின் வீடுகளில் கஞ்சிப் பானையே உண்டு. அதைப் பொங்கல் பானையாக்குவதற்கு தவச்செல்வன்கள் தலைமுறைகளாக முயற்சிக்கிறார்கள். அதற்குச் சாட்சியமான சொற்களே இந்தக் கதைகளிலும் கதைகளாகவும்.

    தலையில் மூங்கில் கூடை

    இடுப்பில் ரெட்டு படங்கு

    மட்டக்குச்சி

    மட்டக்கத்தி

    அவளை விடியல் அலங்கரிக்கிறது

    அவளின் விடியலில் ஆகத்துயரம்

    பிள்ளை மடுவத்தில் தேவீயின்

    குழந்தையை கைவிடுதல் தான்

    என்ற கவிதையை எப்போதோ படித்த நினைவு இங்கே எழுகிறது. இது காலத்துயரா? மானுடத்தின் இயலாமையா?

    00

    சு. தவச்செல்வன் புத்தகங்களை நூலகம் தளத்தில் வாசிக்க ,

    கருணாகரன்

    https://akazhonline.com/?p=11032

  24. 'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!

    சனி, 20 டிசம்பர் 2025 04:43 AM

    'தென்மராட்சி கிழக்கு' பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்!

    யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க நான்கு நன்கொடையாளர்கள் இது வரையில் முன் வந்துள்ளார்கள் எனவும் , காணிகளை வழங்க விரும்புவோர் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகம் புதிதாக அமையவுள்ளது. 

    அதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல், தென்மராட்சி பிரதேச செயலர் சந்திரா சத்தியஜோதி தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , சாவகச்சேரி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது 

    அதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன் , யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் , யாழ் . மாநகர சபை உறுப்பினருமான எஸ், கபிலன் , அரச அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

    அதன் போது , புதிய பிரதேச செயலகத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க இது வரையில் நால்வர் முன் வந்துள்ளனர் எனவும்  , எதிர்வரும் 31ஆம் திகதி க்கு முன்னர் வேறு யாரேனும் காணிகள் வழங்க விரும்பின் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது. 

    அடுத்த வருடம் முதல் வார கால பகுதியில் பொருத்தமான காணியினை தெரிவு செய்த பின்னர் , பிரதேச செயலகம் அமைப்பதற்கான அடுத்த கட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

    https://jaffnazone.com/news/53388

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.