Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனித்துளிக்குள் ஒரு கடல்: கண்ணதாசனைப் பற்றி நா. முத்துகுமார்

Featured Replies

Nx400xa1_1959005g.jpg.pagespeed.ic.SjZFC

 

qww_1959006g.jpg.pagespeed.ce.LHy1evqRgz

 

கண்ணதாசன் பிறந்த நாள் : ஜூன் 24

பதினைந்து ஆண்டுகள். இரண்டாயிரம் பாடல்கள். கோலிவுட்டின் சளைக்காத பாடலாசிரியர் நா.முத்துகுமார். கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்களை எழுதிவரும் கவிஞராகவும் தொடர் முத்திரையை பதித்து வருகிறார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருது பெற்றிருக்கும் இவர், இயக்குநர்கள் விரும்பும் எல்லா வகைப்பாடல்களையும் எழுதிக் குவிக்கிறார். என்றாலும் கண்ணதாசனைப் போலத் தத்துவப் பாடல்களில் தனி அடையாளம் பெற வேண்டும் என்பது இவரது முனைப்பு. கண்ணதாசனைப் பற்றிக் கேட்டதும் ஒரு நொடிகூட யோசிக்காமல் பேச ஆரம்பித்துவிட்டார்...

கண்ணதாசன் பற்றி எந்த வயதில் அறிந்துகொண்டீர்கள்?

பத்து வயதே நிரம்பிய பள்ளி நாட்களில் கண்ணதாசன் தெரிந்துவிட்டார். கவிதை மாதிரி ஒன்றை எழுதும் யாரையும் “இவர் பெரிய கண்ணதாசன்!” என்று கிண்டல் செய்வது கிராமப்புறங்களில் இன்றும் வழக்கமாக இருக்கிறது. அந்த அளவுக்குக் கடைக்கோடித் தமிழனின் மனதிலும் கல்வெட்டாகப் பதிந்துவிட்டது அவரது பெயர். கண்ணதாசன் பாடல்களைத் திரையில் பார்க்கும்போது முதலில் நடிகர்கள் தெரிந்தார்கள். இப்போது நட்சத்திரங்கள் கூடவே என் மனத்திரையில் கண்ணதாசனின் புன்னகை ஒளிரும் முகம் தெரிகிறது.

கண்ணதாசனின் திரைப்பாடல்களில் பளிச்சென்று தெரியும் சிறப்பு என்று எதைச் சொல்வீர்கள்?

எந்த மொழியில் எழுதினாலும் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் படைப்பாளிகளுக்கு மாபெரும் சவாலாக இருப்பது எளிமை. ஜென் மனநிலையைத் தனதாக்கிக்கொண்டால் மட்டுமே ஒரு படைப்பாளி எளிமையைச் சென்று அடைய முடியும். போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, அழுக்காறு, அகந்தை போன்ற குணங்களைத் தூக்கி எறியும்போது நீங்கள் ஜென் மனநிலையை அடைய முடியும். இதைத்தான் “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என பாரதி சொல்லிச் சென்றார். கண்ணதாசன் உள்ளத்தில் உண்மை கம்பீரமாகக் கொலுவீற்றிருந்தது. அதனால் அவரது வாக்கினில் ஒளி பிறந்தது. அதனால்தான் அவரால் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா” என்று எழுத, எளிமை அவரிடம் தலைவணங்கி நின்றது. இப்படி கண்ணதாசனுடைய எந்தப் பாடலை எடுத்துக் கொண்டாலும் எளிமைதான் அவரது சிறப்பு. எளிமையின் வாயிலாகப் படைத்தவனுக்கும் படிப்பவனுக்கும் இடையில் நேரடியான அனுபவப் பங்கீடு நிகழ வேண்டும். இந்தச் செயல்முறையைச் சாத்தியப்படுத்தும் எளிமையோடு கண்ணதாசனின் எல்லாப் பாடல்களும் இருக்கின்றன. அதேநேரம் பனித்துளிக்குள் ஒரு கடல் என்பதைப்போல அவரது எளிமையில் இருக்கும் ஆழம் நமக்குத் தரும் கலையனுபவம் விலைமதிக்க முடியாதது.

கண்ணதாசனின் பாடல்களில் காலம் கடந்தும் அப்படியே இருக்கும் அம்சம் எது?

கவிதையில் ‘எமோஷனல் பொயட்ரி’ என்றொரு வகை உண்டு. உணர்வுபூர்வமான கவிதை மொழிக்கு ஈடு இணை எதுவுமில்லை. காலம் கடந்து கண்ணதாசன் பாடல்கள் அப்படியே உயிர்ப்புடன் இருப்பதற்கு இந்த உணர்வுபூர்வமான கவிதை மொழி தான் காரணம். உணர்வுபூர்வமாக மொழியில் எழுதப்பட்ட கவிதைகள், பாடல்கள் என எந்த இலக்கியமாக இருந்தாலும் கற்பனையைவிட உண்மையின் ஆட்சியே அதில் கம்பீரமாக இருக்கும். இப்படிப் படைப்பில் உண்மை இருக்கும் பட்சத்தில், அது கண்ணாடி போன்றது. எப்போதோ எழுதப்பட்ட படைப்பாக இருந்தாலும் எல்லாக் காலத்திலும் வாழும் மனிதர்களுக்கு வாழ்க்கையின் பிடிபடாத பக்கங்களைக் காலம்தோறும் புதிதாய்ப் புரிய வைக்கும். சங்கத் தமிழ் இலக்கியத்திலிருந்து இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.

“குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்ற குறளை நான் பள்ளியின் பேச்சுப் போட்டிக்காக மனப்பாடம் செய்தபோது அதன் அர்த்தத்தின் உணர்ச்சியை உணர முடியவில்லை. ஆனால் எனக்கு மகன் பிறந்து அவன் பேச ஆரம்பித்தபோது அதன் அர்த்தத்தை உணர்ந்து கிளர்ந்தேன். இதே கவிதை என் முதுமையில் எனக்கு வேறு உணர்வைத் தந்துவிடலாம். ஆனால் அப்போதும் அது உண்மையாகவே இருக்கும். கண்ணதாசனின் பாடல்களும் அப்படித்தான். வயதுக்கேற்ற வாழ்வனுபத்தின் வழியாக அனுபவப் பங்கீட்டைத் தந்துகொண்டே இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள்.

ஒரு சில பாடல்களை உதாரணமாகக் காட்டி விளக்க முடியுமா?

“நேரமிது நேரமிது நெஞ்சிலொரு பாட்டெழுத....” என்ற ரிஷிமூலம் படப் பாடலை நான் பள்ளி, கல்லூரி நாட்களில் எந்தச் சலனமுமின்றிக் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் அதே பாடல் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தந்தையான பிறகு எனக்களித்த அனுபவப் பங்கீடு வேறு.. அந்தப் பாடலின் சரணத்தில் வரும் ஒரு வரியில்.. நாயகி நாயகனைப் பார்த்து “திங்கள் ஒளி திங்களைப் போல், உங்கள் பிள்ளை உங்களைப்போல் உங்களைத்தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை” என்று பாடுகிறார். அதற்கு நாயகன் “நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும் உன்னைப் போலத் தோன்றுதே!” என்கிறார். இது ஒவ்வொரு மனிதனும் உணரக்கூடிய வாழ்வின் உன்னதமான பரிமாணம். அதே பாடலில் வரும் “ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன.. பிள்ளைகூட இன்பமே” என்ற வரியின் ஆழத்தை வாழ்ந்து பார்த்தவர்கள்தான் முழுமையாக உணர முடியும்.

கொண்டாட்டத்துக்கு எத்தனையோ பாடல்கள் வந்துவிட்டாலும் இன்றைக்கும் “எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்...” பாடாத பப்பே இல்லை. ஒரு ஒப்பாரி என்றால் “வீடுவரை மனைவி, வீதிவரை உறவு.. காடுவரை.. பிள்ளை.. கடைசிவரை யாரோ”தான். பாசம் என்றால் “மலர்ந்தும் மலராத பாதி மலர்போல” பாடல்தான். கண்ணதாசனின் முன்மாதிரிகளுக்கு இப்போதைக்கும் மாற்றில்லை. காரணம் அவரது இடம் யாராலும் நிரப்ப முடியாதது.

கண்ணதாசன் காலத்திலேயே வாலியின் சாதனைகளும் தொடங்கிவிட்டன. வாலியுடன் மிகுந்த நட்பாய் இருந்தவர் நீங்கள். கண்ணதாசன் பற்றி அவர் உங்களிடம் பகிர்ந்துகொண்டதுண்டா?

நிறைய. கண்ணதாசனுக்கும் வாலிக்கும் ஒரு பெரிய ஒற்றுமையுண்டு. நான் நல்ல பாடல்களை எழுதும்போதெல்லாம், “என்னைய்யா... இத்தனை அருமையா எழுதிட்டே!” என்று பாராட்டுவார் வாலி. என்ன சார் இவ்வளவு மனம் திறந்து பாராட்டுறீங்க என்று நான் கேட்பேன். “நான் போன்லதான்யா பாராட்றேன். கண்ணதாசன் வீடு தேடி வந்து என்னை எத்தனை முறை பாராட்டியிருக்கார் தெரியுமா?” என்று என்னிடம் நெகிழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

கண்ணதாசன் பற்றி அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட இன்னொரு முக்கியமான நிகழ்வு இருக்கிறது. பட்டுக்கோட்டையார் பிரபலமாகிவிட்டிருந்த நேரம் அது. கண்ணதாசனைப் பாட்டெழுத அழைத்திருக்கிறது ஒரு முன்னணி பட நிறுவனம். “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று ஒரு கவிஞர் வந்திருக்கிறாரே, அவரைப் போல இந்தப் பாடலை எழுதித்தர வேண்டும்” என்று இயக்குநர் வாயை விட்டுவிட்டார். சரி என்று சொன்னவர் “இப்ப வந்துடுறேன்” என்று கிளம்பிப் போயிருக்கிறார். அடுத்த ஒரு மணிநேரத்தில் பட்டுக்கோட்டையாரை அழைத்துக்கொண்டுவந்து “நீங்கள் தேடிக்கொண்டிருந்த கவிஞர் இவர்தான். இந்தப் பாடலை இவர் எழுதுவதுதான் சரி” என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதுதான் கண்ணதாசன்.

கண்ணதாசனின் திரைப்பாடல்களைத் தவிர்த்து அவரது எழுத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கண்ணதாசன் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அவரது அர்த்தமுள்ள இந்துமதம்தான். தமிழ்ப் பதிப்பகச் சூழலில் நூற்றுக்கணக்கான பதிப்புகளைக் கடந்து மூன்றாம் தலைமுறைத் தமிழர்களால் வாசிக்கப்படும் மிகச் சிறந்த நூலாக அது இருக்கிறது. அதேநேரம் மதங்கள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம், ஆனால் இறைவனை நினைத்து உருகும் ஆன்மிகம் என்பது ஒன்றுதான் என்பதை அவர் படைத்த ‘இயேசு காவியம்’ படிக்கும் எவரும் உணர முடியும். அடுத்து அவருடைய ‘வனவாசம் மனவாசம்’. இவ்வளவு நேர்மையாக ஒருவர் தனது சுயசரிதையை ரத்தமும் சதையுமாக ஒளிவு மறைவின்றி எடுத்து வைக்க முடியுமா என்று வியந்துபோயிருக்கிறேன்.

 

Nx261xa_1959004g.jpg.pagespeed.ic.gnRbkB

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6132882.ece?homepage=true

 

 

  • தொடங்கியவர்
xasa_1959011h.jpg.pagespeed.ic.Be6ltWobq
 
நம் அனுபவத்தின் பிரதிபலிப்பு

 

 

தமிழ்த் திரையுலகை நம் வாழ்வுக்கு அருகில் கொண்டுவந்ததில் கண்ணதாசனின் பங்கும் அளப்பரியது. ஏனெனில், அவருடைய கவித்துவமான பாடல் வரிகள் வாழ்வின் எல்லா அனுபவங்களிலிருந்தும் திரண்டு வந்தவை. ஆனால் அவர் தன் பாடல்களால் தமிழ்த் திரையில் நிலைபெற வேண்டிய நெருக்கடி ஒன்று இருந்தது. அந்த நெருக்கடியைக் கொடுத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

அன்று இருந்த அரசியல் சூழ்நிலையையும், சுதந்திரம் பெற்றதன்பின் உண்டாகியிருந்த சில ஏமாற்றங்களையும் பட்டுக்கோட்டையின் பாடல்கள் திறம்பட வெளிப்படுத்தின. அவை சினிமா ரசிகர்களையும் தாண்டி பொது மக்களின் கவனத்துக்கும் வந்தபோது பட்டுக்கோட்டை பெரும்புகழைப் பெற்றார். அவர் மக்கள் மன்றங்களில் புகழ்பெற, கூடவே அவர் கையாண்ட எளிய பதங்களும், மக்களின் சொல்வழக்குகளும் துணைபுரிந்தன. பட்டுக்கோட்டையின் மறைவுக்குப் பின் கண்ணதாசன் மீது இந்தப் பொறுப்பு கண்ணுக்குத் தென்படாத சுமையாக இறங்கியது. கண்ணதாசன் அந்த நெருக்கடியை வென்றாரா?

இலக்கிய அதிர்ஷ்டம்

வென்றார். அதற்காக அவர் கல்யாணசுந்தரத்தின் முழுநகலாக ஆகிவிடவில்லை; தன்னுடைய தனித்துவத்தோடு திரையுலகை ஆக்கிரமித்தார். அவருடைய அரசியல் கருத்துக்களும் பொருளாதார நிலையும் திருகல்முருகல்களாகக் கிடந்தன. வெற்றியும் தோல்வியும் பெரிய ஏமாற்றங்களும் வஞ்சக வலைவிரிப்புக்களும் அவரைப் பின்தொடர்ந்தன. இது ஒருவகையான இலக்கிய அதிர்ஷ்டம் (என்று நாம் கருதிக்கொள்ள வேண்டும்). படங்களின் வாய்ப்புகள் குவிந்தபோது அவர் காட்சிகளுக்கேற்ற பாடல் வரிகளை எழுதினார். அவை நினைத்துப்பார்க்க முடியாத எளிமையும் ஆழமும் கொண்டவை. அதற்கு மேற்குறித்த கசப்பான அனுபவங்கள் உதவின.

கே.பாலசந்தரின் ‘அவர்கள்’ படத்திற்கான பாடல்கள் சாகாவரம் பெற்றவை. பொதுவாக, பாலசந்தரின் கதைகள் தந்திரமான உறவுச் சிக்கல்களைப் பேசுபவை. அதில் ஏற்கெனவே மணம்புரிந்து விலகியிருக்கிற முரட்டுக் கணவன், அலுவலகத் தொடர்பில் நெருங்கி வருகிற இன்னொரு அப்பாவி இளைஞன் ஆகிய இருவருக்கும் இடையில் ஒரு பெண். அவளின் மனம் அந்த அப்பாவி இளைஞனை அவளறியாமல் நாடிச் செல்லும் தருணத்தில் பழைய கணவன் மீண்டும் அவளிடம் குறுக்கிடுகிறான். அவனுடைய மனநிலை முன்புபோல இல்லை; மாறியிருக்கிறது. இது அப்பெண்ணை ஊசலாட்ட மனநிலைக்குத் தள்ளும்போது பின்னணியில் ஒலிக்கிற அந்தப் பாடலின் வரிகள்தான் எவ்வளவு அபாரமானவை!

ரகசியப் புதைமணல்

“கல்லைக் கண்டாள் / கனியைக் கண்டாள் / கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மை கண்டாள்/ கதை எழுதிப் பழகிவிட்டாள் / முடிக்க மட்டும் தெரியவில்லை.”

கல், கனி ஆகிய இரண்டு பொருள்களையும் அவர் கையாண்ட விதம், படத்தின் காட்சிகளோடு ஒன்றி நிற்கிற ஒரு ரசிகனின் மன ஓட்டத்துக்கு இசைந்து வருவது; அல்லது இயக்குநரின்தேவைக்கு அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தி நிற்பது. கல் கனியாகவும் மாறிவருகிற அந்த ரசவாதம் நாயகியின் குழப்பமும் தயக்கமும் கொண்ட ஊசலாட்டத்துக்குப் பொருந்தி நிற்பது. கல் கனியாக மாறிவிட்டால் ஒரு பெண்ணின் வாழ்வில் இன்னொரு கனி தேவையா? இந்த நிலையில் கவனம் வைத்தால், வரிகள் அவ்வளவு சாதாரணமானவை! ஆனால் ஆழம் அவ்வளவு சாதாரணமானதா?

இந்தப் படத்தின் வளர்ச்சிப்போக்கில் அந்த முரட்டுக் கணவனின் தந்திரமான ஊடுருவல்கள் அவள் விரும்பும் இளைஞனின் ஸ்தானத்தைக் காலிசெய்துவிடும் அபாயம் நேர்கிறது. அதை இன்னமும் அற்புதமான கற்பனைகளோடுஎழுதுவார்; இதற்காக அவர் கையாளும் உருவகங்கள் இன்னும் சிறப்பானவை.

அன்பின் பரிமாணம்

ஒரு கவிஞனின் மனம், அனுபவத் தழும்புகள் ஏறி முதுமையடைந்த உடலையும் தாண்டி இளமையின் சுழற்சியில் மிதக்கக்கூடியது. அதற்கு பாலும் பழமும்’ படத்தில் இடம்பெற்ற \நான் பேச நினைப்பதெல்லாம்’ பாடல் நிறைவான உதாரணமாகும். அதில் இடம்பெறும் “பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் / மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்”. அன்றைய இளைஞர்களின் சொந்தப் பாடலாக இது மாறியிருந்தது. அதுவும்போக எண்ணற்ற தம்பதியரிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகளை இதுபோன்ற பாடல் வரிகள் மருந்தாக இருந்து மாற்றியமைத்திருக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. “நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்” என்கிற வரி அன்பின் பரிமாணத்தை மிக உயர்ந்த நிலையில் வெளிப்படுத்துகிறது.

குறையாத ஆற்றல்

பொதுவாகவே கண்ணதாசன் என்றதும் நாம் அவருடைய பாடல் வரிகளுக்குள் தாவிக்குதிக்கும் வேலையைத்தான் உடனடியாகச் செய்கிறோம். ஆனால் அவர் பன்மைத்துவம் மிக்கவர். அவரை ஒரு குறிப்பிட்ட எல்லையில் நிறுத்தி சாதனைகளை அளப்பது ஒருவகை அநீதி. அவரை ஆத்திகனாக எண்ணும் சமயத்தில் ஒரு நாத்திகனாகவும் அவரைக் கருத முடியும். அவர் வேதாந்தியாக இருக்கும்போதே சித்தாந்த வாதியாகவும் மாற்றிக்கொள்ள முடியும். பணத்தின் மடியில் புரண்ட அதே வேகத்தில் எல்லாவற்றையும் இழந்து கையேந்தாத யாசகனாகவும் தவித்திருக்கிறார்.

இன்னமும் பல உண்டு. தான் முன்பு எழுதிய பல கவிதைகளை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்து பாடலாக்கித் தந்தார். பல அரசியல் கட்சிகளுக்கும் மாறிமாறிச் சென்றாலும் கடைசிவரை யாராலும் அவரைப் பகைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் குழந்தைமைத் தன்மை கொண்ட ஆபத்தில்லாத எதிரி. ஆனால் கண்ணதாசனின் ரசிகர்கள் அவருடைய எல்லா பலவீனங்களையும் கழித்துவிட்டு அவரின் இலக்கிய உலகத்தோடு மட்டும் தொடர்புகளை வைத்துக் கொண்டனர்.

கண்ணதாசன் கோலோச்சிய காலத்தில் பலவகையான திரைப்படங்களும் தமிழ்க் குடும்பங்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தின. அவை மிக உயர்ந்த கலை வடிவத்தை எட்டாதது தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்களின் சொந்தப் பிரச்சினை. ஆனால் கிடைத்த காட்சியமைப்பைக் கண்ணதாசன் தன் அனுபவ ஞானத்தால் நன்றாக உள்வாங்கிக் கொண்டார். அதன் விளைவாக அவர் ஆழ்ந்த தத்துவங்களையோ, சிலுசிலுக்கும் காதலையோ, உறவுகளின் மோதலையோ அற்புதமான பாடல் வரிகளுக்குள் படம்பிடித்துத் தந்தார். ஆகவே நம்மனைவரின் வாழ்க்கைச் சிக்கல்களின் ஒவ்வொரு இழையிலும் கண்ணதாசனின் பாடல் வரி ஒன்று இசைந்து வந்தபடியே உள்ளது. “பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்தபாசமே ஏனடா? பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா”. இந்த நிலையை அனுபவிக்காத குடும்பமோ தனிமனிதனோ இன்றில்லை. இந்தத் துயரை விவரிக்கக் கண்ணதாசனை விட்டால் நமக்கும் வேறு ஆள் இல்லை.

“அமைதி இல்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் என்னையே படைத்துவிட்டான் / நிம்மதி இழந்தே நானலைந்தேன் / இந்த நிலையினில் ஏன் உன்னை தூதுவிட்டான்” என்ற வரிகள் பிரியமான மனைவியை இழந்தவனிடம் காலம் தன் அடுத்த கருணையை விரிக்கும் தருணம்; இதற்கான எளிய உவமையை நாம் எங்குபோய்த் தேடுவது?

ஒரு பெண்ணாகவும்...

இத்தனைக்கும் நடுவிலும் கண்ண தாசனிடம் ஓர் அற்புதம் இருந்தது. அவர் தன் மனதில் ஒரு காதலியை எப்போதும் குடிவைத்திருந்தார்; அல்லது அவரே பாலினம் மாறிய இன்னொரு பிம்பமாய் இருந்தார். நம் வாழ்வில் (சினிமாவில்தான் ) நம் காதலிகள் பட்ட மனத்துயரை - இழப்பை அவரைப்போல் பரிதவித்து அல்லது ஞானநிலை பெற்று வடித்த கவிஞன் வேறு யார்? பெண்மையின் தவிப்பென்ன, அதன் உச்சம் என்ன, காதலை இயற்கையோடு கலந்துறவாடும் தன்மை என்ன? எல்லாவற்றிற்கும் அவரிடம் விடை உண்டு; ஆறுதல் உண்டு. பாக்கியலட்சுமி திரைப்படத்தில் வரும் “காணவந்த காட்சியென்ன வெள்ளி நிலவே” பாடலும், பாலும் பழமும் படத்தில் வரும் “காதல் சிறகைக் காற்றினில் விரித்து பாடலும்” நேர் உதாரணங்கள்.

நம் அனுபவங்களின் பிரதிபலிப்பாக நம்முடன் எப்போதும் இருந்து வரும் கண்ணதாசனின் கவித்துவம்தான் நம் வாழ்வின் மீது கவிந்த இனிய சுமை.

அவர் தன் மனதில் ஒரு காதலியை எப்போதும் குடிவைத்திருந்தார்; நம் வாழ்வில் நம் காதலிகள் பட்ட மனத்துயரை - இழப்பை அவரைப்போல் பரிதவித்து வடித்த கவிஞன் வேறு யார்?

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6132894.ece?homepage=true

  • தொடங்கியவர்
xkan_1965436h.jpg.pagespeed.ic.SWQdSuyab
ஓவியம்: ரவி

இன்று கண்ணதாசனின் 87-வது பிறந்த நாள்

அர்த்தங்களின் சுமையற்ற கண்ணதாசனின் வரிகள் தருவது தித்திப்பும் மயக்கமும்…

அது என்ன பருவம் என்று அப்போது தெரியவில்லை. சென்னையில் ஒருநாள் காலையில் பெட்டிக்கடையில் செய்தித்தாள் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். எதிர்ப்புறச் சாலையோரத்தில் மஞ்சள் கொன்றையொன்று தகதகக்கும் மலர்களோடு நின்றுகொண்டிருந்தது. எட்டு மணி வாக்கில் சூடில்லாத வெயிலில் மஞ்சள் வண்ணம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சட்டென்று என் மனதில் ஒரு பாடலின் வரிகள் சம்பந்தமில்லாமல் வந்து விழுந்தன: ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்'

எத்தனையோ முறை நான் கேட்ட பாடல் அது. அழகான சொற்களைக் கொண்டு நிரப்பப்பட்ட பாடல் அது என்றுதான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்று அந்த மஞ்சள் கொன்றை அந்தப் பாடலை எனக்குத் திறந்து காட்டியது. அந்த மஞ்சள் கொன்றையின் மலர்கள்தான் வசந்த காலத்தின் வைரமணி நீரலைகள் என்று எனக்குத் தோன்றியது. மனம் எவ்வளவு விசித்திரமானது. தனது நினைவறையில் எல்லாவற்றையும் கொட்டிவைத்து, சம்பந்தமில்லாததுபோல் தோன்றும் இரு விஷயங் களுக்குள்ளும் உறவு இருக்கிறது என்பதை ஏதோ ஒரு தருணத்தில் திடீரென்று உணர்த்திவிடுகிறது. மஞ்சள் கொன்றை அந்தப் பாடலைத் திறக்க, அந்தப் பாடல் எனக்கு வசந்த காலத்தைத் திறந்தது. நிழற்சாலை ஒன்றின் நடைபாதையில் பரவசத்துடன் நடக்க ஆரம்பித்தேன். கொய்யா, மாம்பழம், நாவற்பழம், சப்போட்டா, சீத்தாப்பழம் என்று வசந்தத்தின் வெவ் வேறு வண்ணங்கள் அந்த நடைபாதையில் போகும் வழியெல்லாம் தள்ளுவண்டிகளில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன. வசந்தம் இன்னும் விரிந்து கொண்டே போனது. அன்று, வசந்தத்துக்கு என் கண்களைத் திறக்கச் செய்தார் கண்ணதாசன்.

காதுகளின் கவிஞன்

கண்ணதாசன் பாடல்களில் இசையையும் தருணங்களையும் அகற்றிவிட்டு வெறும் வரிகளாக வாசிக்கும் விமர்சகர்களுக்குப் பலமுறை அவரது வரிகள் ஏமாற்றம் தரலாம். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணதாசன் கண்களின் கவிஞன் அல்ல; செவியின் கவிஞன். கவிதைகள் காலம்காலமாகச் செவிக்கு உரியவையாகத்தான் இருந்திருக்கின்றன. செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லியது கவிதைகளுக்குத்தான் முற்றிலும் பொருந்தும். நீரில் நீலம் பிரியும் மைத்துளி போல செவியில் விழும் சொற்கள் மனதுக்குள் விரியும். எழுத்து, அச்சு என்பவையெல்லாம் அந்தச் சொற்களின் ஆவணக்காப்பகங்கள் போன்றுதான்.

தற்போது கவிதைகள் தமக்குரிய இசைத் தன்மையை விட்டுப் பார்வையை நோக்கித் திரும்பி விட்டன. கவிதைகள் காட்சிகளையே பெரிதும் தற்போது உருவாக்குகின்றன. கண்ணதாசன் அந்தக் காலத்துப் பாணர்களின் தொடர்ச்சி. அவரது பாடல்களைப் படிப்பதைக் காட்டிலும் இசையோடு கேட்கும்போது ஏற்படும் பரவசம் விளக்க முடியாதது. அது இசையால் மட்டுமே வருவதல்ல. முதற்காரணம், கண்ணதாசனின் வரிகள்தான். எடுத்துக்காட்டாக, ‘போலீஸ்காரன் மகள்' என்ற திரைப்படத்தில் வரும் ‘இந்த மன்றத்தில் ஓடிவரும்…' பாடலைப் பார்க்கலாம். அழகான மெட்டு, பி.பி. நிவாஸ், ஜானகி இருவரின் மதுரக் குரல்கள். இப்படி இருக்கும்போது இந்த வரி ‘இந்தச் சபைதனில் ஓடிவரும்…' என்றோ, ‘இந்தத் தோட்டத்தில் ஓடிவரும்…' என்றோ இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! ‘மன்றம்' என்ற எளிய சொல்லில் இசை வந்து விழும்போது மாயாஜாலம் நிகழ்கிறது. மேலும், விசித்திரமான சூழலைக் கொண்டது அந்தப் பாடல். ஒரு தங்கை தன் காதலனை நினைத்து இப்படிப் பாடுகிறாள்:

நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கிறாள்

அவள் விடிந்த பின் துயில்கின்றாள்

என் வேதனை கூறாயோ?

ஒருத்தி தன் காதல் வேதனையைச் சொல்லும் இந்தப் பாடலின் இடையே அவளுடைய அண்ணன் வேறு நுழைந்துகொள்கிறான். தென்றலிடம் தன் தங்கைக்காக அவனும் தூதுவிடுகின்றான். இந்த அண்ணனையே மறந்துபோகும் அளவுக்கு அவள் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய காதலின் ஆழத்தைச் சொல்லும் அதே வேளையில், தனது தங்கைக்கு இந்த அண்ணனின் நினைவு இல்லாமல் போய்விட்டதே என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். காதல் பாடலில் அண்ணன் வந்தாலே ஓர் அபஸ்வரம்போல் ஆகிவிடும், இதில் அவன் தனது பொறாமை உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறானே! ஆனால், இசகுபிசகான இந்தத் தருணத்தையே பாடலுக்கு உயிரூட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்:

தன் கண்ணனைத் தேடுகிறாள்

மனக் காதலைக் கூறுகிறாள்

இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று

அதனையும் கூறாயோ...

தேன்பனி!

சொற்கள் இசைக்கு உயிர்கொடுக்க வேண்டுமே யொழிய, சொற்களுக்கு இசை உயிர்கொடுக்கக் கூடாது. அதனால்தான் ‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்றான் பாரதி. கண்ண தாசனுடையதோ பனி போன்ற சொல்லின்பம். சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். லெப்பர்டி என்ற இத்தாலியக் கவிஞனின் வரிகளைப் பற்றி இதாலோ கால்வினோ இப்படிச் சொல்கிறார்: ‘அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத் தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் பொருந்தும்.

பனி என்றால் தேன் கலந்த பனி! அப்படித்தான் சொல்ல வேண்டும் கண்ணதாசனின் வரிகளை. ‘பனிபோல் குளிர்ந்தது கனிபோல் இனித்ததம்மா' என்ற வரிகளை வேறு எப்படிச் சொல்வது? இந்த வரிகளின் அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சொற்களை மெலிதாக முணுமுணுத்துப் பாருங்கள். எவ்வளவு தண்மை! எவ்வளவு தித்திப்பு! இதேபோல் சொல்லின்பம் தரும் ஒரு சில உதாரணங்களையும் பாருங்கள்:

‘மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு’

(பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம்)

‘பாலாடை போன்ற முகம் மாறியதேனோ

பனிபோல நாணம் அதை மூடியதேனோ’

(பாவாடை தாவணியில் - நிச்சயத் தாம்பூலம்) ‘முதிராத நெல்லாட ஆடஆட

முளைக்காத சொல்லாட ஆடஆட’

(கட்டோடு குழலாட- பெரிய இடத்துப் பெண்)

‘இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்’

(நாளாம் நாளாம்… - காதலிக்க நேரமில்லை)

தேன்மூடிய சிருங்காரம்

காதல், காம உணர்வுகளைப் பூடகமாகவும் இனிக்கஇனிக்கவும் சொன்னவர் கண்ணதாசன். ஒரு பெண் தன்னுடைய காம உணர்வுகளைச் சொல்வதைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், ‘அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்' என்ற வரிகள் கண்ணதாசன் சொற்களில் சுசீலாவின் குரலில் வந்து விழும்போது ஒழுக்கவாதிகளுக்கும் மயக்கம் வருமே, அதை என்னவென்று சொல்ல! ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன வளுக்கு, அவன் ‘ஒன்று' தந்த பிறகு உன்மத்தம் ஏறிக்கொள்கிறது. பிறகு, போதாது இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறாள். உண்மையில் அவள் வேண்டாம் என்று சொன்னதெல்லாம் கட்டுப் பாடுகளுக்குப் பயந்தல்ல; தனக்கு உன்மத்தம் ஏறி விடும் என்று பயந்துதான் என்பது பிறகு தெரிகிறது:

‘தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்

ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்

அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்

ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள், போதாதென்றாள்...

அர்த்தத்துக்கு அடுத்த இடம்தான்

கண்ணதாசன் இப்படியெல்லாம் மயக்கம் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக்கொண் டிருப்பார்கள். இப்படிச் சொல்வது கண்ணதாசன் அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரில்லை என்பது அர்த்தம் அல்ல. அவரது தத்துவப் பாடல் களுக்குள் புகுந்தால் அவற்றிலிருந்தும் மீள முடியாது. சொற்களிலே கவிஞன் கிறுகிறுக்க வைக்கும் போது அங்கே அர்த்தம் நமக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விடும். ‘உன்னை நான் கொல்லவா?' என்பதை கண்ணதாசன் தனக்கேயுரிய மொழியில் கேட்டால் ‘கொல்லுங்கள்' என்றுதானே நமக்குச் சொல்லத் தோன்றும்.

கண்ணதாசனுக்குத் திரைப்படம், இசை, ‘சிச்சுவேஷன்' எல்லாம் தனது உணர்வுகளையும், சோகங்களையும் கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. கண்ணதாசன் தனது இறுதிப் பாடலில் இப்படி எழுதியிருப்பார்:

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே!

உண்மையில், இது நம்மை நோக்கி அவர் வைக்கும் வேண்டுகோள். எப்படி மறக்க முடியும் கண்ணதாசன், உங்களை!

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6144561.ece?homepage=true&theme=true

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.