Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர்

Featured Replies

1. ஆதிகாலப் பாண்டியர்களின் வெள்ளி முத்திரை நாணயங்கள்:

சங்க காலத்தில் தமிழகத்தை மூன்று அரச குடியினர் ஆண்டனர். சேர, சோழ, பாண்டியர்களில் மூத்தகுடி பாண்டியர்கள் தாம் என்ற வரலாற்றை அவர்கள் வெளியிட்ட கர்ஷபணம் (Punch Marked Coins) எனப்படும் வெள்ளி முத்திரைக் காசுகளால் அறிகிறோம். சேரர்களும் சோழர்களும் முத்திரைக் காசுகளை அச்சிட்டு வெளியிடவில்லை.  இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அழகான ஒளிப்படங்கள், கோட்டோவியங்களுடன் புத்தகங்களாக வெளியிட்டு சங்ககால வரலாற்றை அறியச் செய்த முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தியின் நாணய ஆய்வுச் சேவைக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் கொண்டுள்ளனர். தமிழக நாணயங்களில் மிகப் பழையவற்றை பல ஆண்டுகளாகத் தமிழகம் எங்கும் தேடித் தெளிவான படங்களுடன் நூல்கள் எழுதிய தினமலர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தொகுப்பில் பாண்டியர்களின் கர்ஷபணக் காசுகள் பல உள்ளன. அவற்றின் பின்னர் அரசாண்ட சங்க மன்னர்களின் காசுகளும், அப்போது தமிழகத்துக்கு வந்த கிரேக்க, ரோமானிய யவனர் காசுகளும் சங்க காலத்தைக் கணிக்கப் பலவகைகளில் புதிய ஒளி ஊட்டுகின்றன.

செழியன், பெருவழுதி என்ற பெயர்கள் தமிழ் பிராமி எழுத்தில் எழுதிய பல நாணயங்கள் கிடைத்துள்ளன. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னரைச் சங்க இலக்கியங்களும், வேள்விக்குடிச் சாசனங்களும் குறிப்பிடுகின்றன. நெற்றி, மார்பில் சாத்தும் சாந்து வடமொழியில் சந்தனம் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல், யாமை (ஆமை) வாகனமாகப் பெற்ற நதி யமுனா என்று வடமொழியில் வழங்குகிற தமிழ்ப் பெயராகும். யமுனைக்கு ஆமை வாகனம் போல, கங்காதேவி விடங்கர் என்னும் முதலையை வாகனமாகக் கொண்டவள். பாணினியில் இலக்கணத்துக்கு மகாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலி யமுனைக் கரையில் உள்ள மதுரை நகரத்தின் பெயரை விளக்கியுள்ளார். பண்டு என்றால் பழுத்த பழம் என்ற பொருள். பழம் போன்ற நிறம் கொண்ட பாண்டியர்களுக்கும், மகாபாரதப் பாண்டவர்களுக்கும் உள்ள உறவையும் மகாபாஷ்யத்தில் காண்கிறோம். பண்டு என்றே இலங்கை இலக்கியங்கள் வடமதுரையில் இருந்து இரும்பு, குதிரை (அய்யனார்) முதலியவற்றை அறிமுகப்படுத்தித் தமிழகமும், இலங்கையும் வந்தோரைக் குறிப்பிடுகின்றன. பாண்டுக்கல் என்று மெகாலிதிக் நாகரிகச் சின்னங்கள் குறிப்பிடப்படுகின்றன.

பழனி அருகே பொருந்தல் என்னும் ஊரில் ஈமச்சின்னத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டின் தாழியும், புரிமணையும், தாழியில் “வயிர” என்னும் எழுத்தும் 2 கிலோ நெல்லும் கிடைத்துள்ளன. பால்:வால் மாற்றம் போல, பயிரன் என்பது வயிர என்றாகியிருக்கலாம். பண்டுவின் மகள் என்பதற்காக மதுரை மீனாக்ஷி ’பாண்டேயா’ என்று கிரேக்கர்கள் குறித்துள்ளனர், வடமதுரையில் இருந்த பாண்டவர்களின் உறவின் நினைவாக, மதுரை என்ற பெயரால் பாண்டியர்கள் தங்கள் தலைநகரின் பெயரை இட்டனர். இரண்டுக்குமே மதில் சூழ்ந்த நகரம் என்பது பொருள். யமுனை நதிக்குப் பெயர் அளித்த ஆமை (சங்கத் தமிழில் யாமை) வழிபாடும், அவை வாழும் குளங்களும், அக் குளக்கரைகளில் நடந்த அசுவமேத யாகங்களையும் மிகப் பல பாண்டியர் முத்திரைக் (கர்ஷபணம்) காசுகளில் காண்கிறோம்.

இக்கட்டுரையில் சங்ககாலப் பாண்டியர் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாக மகர விடங்கர் (முதலை) நாணயங்கள் வெளியிட்ட தொல்லியலை ஆராய்வோம். மெகாலித்திக் காலத்தில் இருந்த விடங்கர் வழிபாடும், எழுத்தும் வெள்ளி முத்திரை நாணயங்களில் தொடர்கிறது. சங்ககாலத்தின் தொடக்க கட்டமாக இருந்த நிலை இது. பின்னர் விடங்கர் – முதலை வழிபாட்டுச் செய்திகள் அனேகமாக மறைந்து விடுவதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. மகர விடங்கர் சங்க இலக்கியத்தில் அணங்கு வருணன் என்று குறிக்கப்பட்டுப் பின்னர் சிவ வழிபாட்டுடன் சேர்ந்துவிடுகிறது. மிகப் பழைய சில்ப சாத்திரமாகிய விஷ்ணுதர்மோத்தரம் முதலை வாகனத்துடனும் மனைவி கௌரியுடனும் வருணதேவன் சித்திரங்கள், சிலைகள் செய்யும் விதி அளிக்கிறது.

2. சிந்துசமவெளி தமிழ்நாடு தொடர்புகள் காட்டும் விடங்கர் கொற்றவை வழிபாடு:

செம்பு உலோகப் பயன்பாட்டுக் காலமாகிய சிந்து நாகரீகத்தில் முதலை வடிவில் விடங்கரும் – கொற்றவை (துர்க்கை) வழிபாடு இருந்துள்ளது (படம் 1) . அத் தம்பதியரைக் காட்டும் சிந்து முத்திரை படம் 2-ல் காண்கிறோம்.

11.jpg

படம் 1. சிந்து சமவெளியில் மகர விடங்கர்

21.jpg

படம் 2. சிந்து சமவெளி மகரவிடங்கர் – கொற்றவை தம்பதி சம்யோகம்

சிந்து எழுத்தில் மீனும், முதலையும் இருக்கின்றன. விடங்கர் முதலை எழுத்தைப் படம் 1-ல் சிவப்பு வளையமாகக் காணலாம். 4500 ஆண்டுக்கு முந்தைய இந்தியர்களுக்கு நீர்வாழ் உயிரிகளில் இருந்து மீனும் முதலையும் சமயச் சின்னங்களாக ஆகியுள்ளன. மீன் விண்மீன்களைக் காட்டவும், முதலை கொற்றவையின் கணவரைக் காட்டவும் சிந்து நாகரிகத்தில் பயன்பட்டுள்ளன. அவ்வெழுத்துக்களைச் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள கொங்குநாட்டுச் சூலூர்க் மண்கிண்ணம், சென்னிமலை அருகே கொடுமணல்,  சாணூரில் கிடைத்துள்ள பானை ஓடு (படம் 3 – இடப்புறம்), செம்பியன் கண்டியூரில் கிடைத்துள்ள கல்லால் ஆன மழு – இவைகளில் காண்கிறோம்.

3.jpg

படம் 3. சாணூர்ப் பானை ஓட்டில் மகரவிடங்கர் எழுத்து

அண்மையில் பேரா. கா. ராஜன் மாணவர்கள் இருவர் திருப்பரங்குன்றத்தில் கோவில் குளக்கரையில் மிக அழகான தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். கொடுமணலில் பானை ஓடுகளில் கிடைக்கும் தமிழ் பிராமி எழுத்துக்கள் அசோகன் பிராமியை விட ஒரு நூற்றாண்டு காலமாவது மூத்தது என்று ரேடியோகார்பன் பரிசோதனைகள் நிரூபித்துள்ளன. இலங்கையின் பழைய தலைநகர் அனுராதபுரத்தில் கிடைத்த பிராமி எழுத்துக்களும் கி.மு. நான்காம் நூற்றாண்டாகப் பழமை இருப்பதாகத் தெரிகிறது. கங்கை நதியில் இன்றும் வாழும் கடியால் (Gharial) முதலையின் கால்கள் சிறியன, வலுவற்றவை. நதிக்கரைகளில் நகர்ந்து செல்லும். எனவே, நகர் என்றே வட இந்தியாவில் இம்முதலைக்குப் பேர் வழங்குகிறது.

நகர் என்னும் தமிழ்ச் சொல் நாக்ரா என்று பிராகிருதத்தில் ஆகி, மூத்த நாக்ரா என விடங்கரும், கொற்றவை மூத்த சக்தி என அவர் மனைவியும் குறிப்பிடப்படும் திருப்பரங்குன்றத் தமிழ் பிராமிக் கல்வெட்டு விடங்கர்-கொற்றவை வழிபாட்டைத் தமிழ்க் கல்வெட்டில் காட்டும் ஆதாரமாகும். விடங்கர்-கொற்றவை வழிபாடு குறிப்பிடுவதால் இக் கல்வெட்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். அப்போதுதான் பாண்டியர்களின் கர்ஷபண வெள்ளிக்காசுகளில் விடங்கர் வழிபாடு காட்டப்படுவதும் இக் காலக்கணிப்பிற்கு அரண்செய்கிறது. சிந்து சமவெளி விடங்கர் – கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியை ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளில் பானைச் சிற்பமாகவும் (கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு), திருப்பரங்குன்றில் எழுத்தாகவும் (கி.மு. 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டு) தொல்லியல் அகழ்வுகள் காட்டுகின்றன. தமிழ் மாதப் பேர்களில் 11 மாதங்கள் பிராகிருதப் பெயர்களாக இருக்கவே, தை என்ற மகரத்தின் பெயர் மாத்திரம் தமிழாக இருப்பது விடங்கர்-கொற்றி வழிபாட்டின் தொன்மையை முரசறைகிறது.

41.jpg

படம் 4. சிந்து நாகரிகத் தொடர்ச்சி – விடங்கர் (கி. மு. 1500, ஹரியானா)

5.jpg

படம் 5. ஆதிச்சநல்லூர் (கி. மு. 500) – மகரவிடங்கர் – கொற்றவை

3. சங்ககாலப் பாண்டியர்களின் காசுகளில் மகரவிடங்கர்:

‘தினமலர்’ ரா. கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தில் கண்டெடுத்துள்ள பாண்டியர் காசுகளில் முதலை வடிவில் மகரவிடங்கரும், அக் கடவுளுக்கு நடந்த அசுவமேத யாகங்களும் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், சிந்து சமவெளியிலிருந்து தொடர்ச்சியாக இருந்துவரும் விடங்கர் – கொற்றவை வழிபாடு பற்றிய ஆய்வுச் செய்திகள் இன்னும் பரவலாகத் தெரியவில்லை. எனவே, முதலை வடிவத்தை பல்வேறு காசுகளில் இனங்காணாமல் எழுதியுள்ளார். அக் காசுகளில் சில காண்போம். சிந்து சமவெளியில் ஏராளமான முத்திரைகளில் மீனைக் கவ்வும் முதலை உண்டு. அதே சின்னம் உள்ள பாண்டியரின் கர்ஷபணம் படம் 6-ல் பார்க்கவும்.

6.jpg

படம் 6. பாண்டியர் கர்ஷபணம். முதலை மீனைக் கவ்விக்கொண்டுள்ளது

(தவறாக, நாய் முயலைக் கவ்விக் கொண்டுள்ளது என வரையப்பட்டுள்ளது)

7.jpg

படம் 7. மகர விடங்கர் தலையைத் தூக்கிக்கொண்டும், வாலை நிமிர்த்தியும் உள்ள பாண்டியன் பெருவழுதி காசு.

குளக்கரையில் முதலையும், குளத்தில் ஆமையும் அதன் முன்னர் அசுவமேத யாகத்துக்குக் கட்டப்பட்ட குதிரையும் காணலாம். இந்த முதலையை ரா. கிருஷ்ணமூர்த்தி Triskle என்னும் சின்னம் என்கிறார். ஆனால், Triskle  வடிவம் வேறு. அதைவிட முதலை என்று கொள்தல் சிறப்பாகப் பொருள் தருகிறது.

8.jpg

படம் 8. பாண்டியர் நாணயம் – குளத்தில் முதலை, பக்கத்தில் ஆற்றில் மீன்கள்.

9.jpg

படம் 9. குளக்கரையில் முதலை (மகரம்). காளை, யானைகளுடன் அளவை ஒப்பிட்டால், திரு. கிருஷ்ணமூர்த்தி சங்கு என்று குறிப்பிடுவது பிழை எனத் தோன்றுகிறது.

சிந்து சமவெளி நாகரீகத்தில் கொற்றவையின் கணவராக விளங்கும் விடங்கர் முதலை வழிபாடு தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் மெகாலித்திக் காலத்திலும் கலை, நாணயம், எழுத்துக்களின் வாயிலாக இருக்கின்றன என்று கண்டோம். இவற்றை மேலும் ஆராய்ந்தால் சங்ககாலத்துக்கு முற்பட்ட தமிழகத்துக்கும், சிந்து நாகரிகத்துக்கும் தொடர்ச்சியாக 2000 ஆண்டுகள் தொடர்புகளை அறியத் துணைசெய்யும். சிந்து எழுத்துக்களின் உட்கருத்தைக் கண்டுபிடிக்கப் படிக்கல்லாக அவ்வகை ஆய்வுகள் அமையும்.

முனைவர் நா.கணேசன்

விஞ்ஞானி, நாசா விண்மையம் , அமெரிக்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.