Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தல்: கூட்டமைப்பு எடுக்கக்கூடிய புத்திசாதுரியமான முடிவு எதுவாக இருக்கமுடியும்? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல்: கூட்டமைப்பு எடுக்கக்கூடிய புத்திசாதுரியமான முடிவு எதுவாக இருக்கமுடியும்? - யதீந்திரா

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு உத்தியோகபூர்வமான முடிவையும் இதுவரை அறிவித்திருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப் போக்கிற்கும் எதிராக எழுந்துள்ள எழுச்சிமிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான அபிப்பிராயங்களை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிப்பதானது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தல் தொடர்பில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாதென்னும் முடிவில் இருக்கின்றார்.

கூட்டமைப்பை பொறுத்தவரையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் இராணுவத் தளபதியும், புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் களநிலையில் முக்கிய பங்காற்றியவருமான சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்திருந்தது. ஆனால் அன்று எடுக்கப்பட்ட முடிவு அரசியல்ரீதியாக புத்திசாதுரியமானதொரு முடிவாக அமைந்திருக்கவில்லை. ஏனெனில் சரத் பொன்சேகா - மகிந்த முரண்பாடு என்பது அவர்களின் தனிப்பட்ட அதிகார நலன்களை கையாளுவதில் ஏற்பட்ட முரண்பாடேயன்றி, நாட்டின் எதிர்காலம் தொடர்பில் ஏற்பட்ட கொள்கைசார்ந்த முரண்பாடு அல்ல. அதுவரை ஒரு தட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சரத் பொன்சேகாவிற்கும் ஜனாதிபதியின் சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாகவே சரத் பொன்சேகா அரசியலில் பிரவேசித்தார். எனவே சரத் பொன்சேகாவின் அரசியல் இலக்கு என்பது மிகவும் தெளிவானது. அதாவது, மகிந்த ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து இறக்குவதன் மூலம், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவை பழிதீர்ப்பது. முதலில் பழிதீர்த்தல், பின்னர்தான் நாடு எதிர்காலம் என்பதெல்லாம்.

ஆனால், இந்த விடயத்தை துல்லியமாக மதிப்பீடு செய்யாத கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு தமிழ் மக்களைக் கோரியது. அதேவேளை, சரத் பொன்சேகாவின் மக்களாதரவு தொடர்பிலும், கூட்டமைப்பிடம் மிகை மதிப்பீடு இருந்திருக்க வேண்டும். இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். மகிந்த ராஜபக்சவை இல்லாதொழிக்கும் நோக்குடன் களமிறங்கிய சரத் பொன்சேகாவை தமிழ் மக்கள் ஆதரித்ததன் மூலம், மகிந்த ராஜபக்சவையும் அவரது சகோதரர்களையும் இல்லாதொழிக்கும் பொன்சேகாவின் நிகழ்சிநிரலுக்கு ஆதரவு வழங்கினர். இதன் விளைவாக கூட்டமைப்பு, மகிந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது. இதனை கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவரின் வார்த்தையில் சொல்வதானால், அப்படியொரு முடிவை எடுத்ததால், நாங்கள் பட்ட கஸ்டம் கொஞ்சநஞ்சமல்ல.

ஆனால் பொன்சோகாவை ஆதரிக்கும் முடிவை கூட்டமைப்பு எடுத்தவேளையில், அதற்கு வித்தியாசமான தர்க்கம் ஒன்றை சிலர் முன்வைத்தனர். அதில் ஒரு பிரமாதமான சாணக்கியம் இருப்பதாக வாதிட்ட அவர்கள், பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரித்ததன் வாயிலாக, இலங்கை இராணுவத்திற்குள் ஒரு பிளவை ஏற்படுத்துவதில் தாம் வெற்றிபெற்றுவிட்டதாக கூறினர். ஆனால் உண்மையில், பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரித்ததன் பின்புலத்தில்தான், இராணுவம் முன்னரைவிடவும் அதிகம் அரசியல்மயப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்கு பின்னரும் இராணுவக் கட்டமைப்புக்கள் அதிகம் பலப்படுத்தப்பட்டன. மேலும் தமிழர்களின் வாக்குகள் தேவையில்லை என்னும் மனோநிலையும் அரசாங்கத்தில் வலுவடைந்தது. இன்று கிட்டத்தட்ட ஆனால், சிறியளவு வேறுபாட்டுடன் நிலைமைகள் முன்னரைப் போன்றே காணப்படுகின்றன.

இன்று சரத் பொன்சோவின் இடத்தில் மைத்திரிபால சிறிசேன அமர்ந்திருக்கிறார். முன்னரும் ராஜபக்சேக்களை வீழ்த்துவதற்காக, ஐக்கிய தேசியக்கட்சி சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக களமிறக்கியது. சரத் பொன்சேகாவை களமிறக்கிய போது, ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்த கணக்கு, யுத்தவெற்றியில் பிரதான பங்குவகித்த பொன்சேகாவை பொதுவேட்பாளராக களமிறக்குவதன் ஊடாக மகிந்தவின் வாக்குவங்கியில் பெரும் உடைவை ஏற்படுத்த முடியும். பொன்சேகாவால் உடைக்கப்படும் வாக்குகளுடன், ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருக்கின்ற வாக்குவங்கியையும் இணைக்கும்பட்சத்தில், மகிந்தவை இலகுவாக அதிகாரத்திலிருந்து வெளியேற்றிவிட முடியும். ஆனால் ஐக்கிய தேசியக்கட்சி போட்ட கணக்கு முற்றிலும் தவறாகிப்போனது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவறான கணக்கின் விளைவை, தோல்வியுற்ற பொன்சேகா அனுபவிக்க நேர்ந்தது.

இன்று மைத்திரிபால சிறிசேன விடயத்திலும் முன்னைய கூட்டல், கழித்தல் கணக்கே போடப்படுகிறது. சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவைக் கொண்டே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள மகிந்தவை வீழ்த்துவதற்கான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியிருக்கிறது. சிறிசேன மற்றும் அவருடன் இணைந்துநிற்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் ஊடாக மகிந்தவின் வாக்குவங்கியை உடைத்து, ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சி வசமிருக்கும் வாக்குவங்கியுடன் இணைக்கும்போது, மகிந்தவை இலகுவாக வீழ்த்திவிட முடியுமென்பதே தற்போதைய கணக்கு. ஆனால் இந்த கணக்கும் முன்னரைப்போன்று புஸ்வாணமாகுமா அல்லது இல்லையா என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கணக்கு பிழைத்தால் அதன் விளைவை மைத்திரிபால அனுபவிப்பார்.

இந்த இடத்தில் எழும் கேள்வி, எதிரணியினர் போடும் பழைய கணக்கிற்கு கூட்டமைப்பு எவ்வாறு பதிலளிக்கப் போகின்றது? முன்னரைப் போன்றே பதிலளிக்கப் போகின்றதா அல்லது புத்திசாதுரியமாக செயலாற்றப் போகின்றதா? சரத் பொன்சேகா திரைமறைவில் வைத்திருந்தது போன்றதொரு நிகழ்சிநிரல் மைத்திரிபால சிறிசேன குழுவினரிடமும் இருக்கிறது. அதாவது, ராஜபக்சேக்களின் அதிகாரத்தை இல்லாதொழிப்பது. ராஜபக்சேக்களின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதென்பது, அவர்களையே இல்லாதொழித்தல் என்னும் பொருள் கொண்டதாகும். மைத்திரிபால வெற்றிபெற்றால் சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஒருவேளை மைத்திரிபால வெற்றிபெற்று, பொன்சேகா பாதுகாப்புத் துறை அமைச்சரானால் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பதை விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. எனவே ராஜபக்சேக்கள் தங்களின் அதிகாரத்தை பாதுகாக்க உச்சளவில் முயற்சிப்பர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஒருவேளை இன்னும் சில நாட்களில் தெற்கின் அமைதி முகம் முற்றிலும் மாறலாம். இந்த நிகழ்சிநிரலுக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது புத்திசாதுரியமான ஒன்றாக அமையுமா? கூட்டமைப்பிடம் ஏற்கனவே ஓர் அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டே கூட்டமைப்பு தன்னுடைய முடிவு குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஆட்சியில் எவர் இருந்தாலும், அவருடன் பேசி பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய பொறுப்பில் இருக்கிறது. எனவே கூட்டமைப்பு எடுக்கும் எந்தவொரு முடிவும், எதிர்காலத்தில் ஆட்சியிலிருப்பவருடன் பேசுவதற்கு ஏற்றவாறான, சூழ்நிலையை உருவாக்குவதற்கு வழிசமைப்பதாக இருக்கவேண்டும். அவ்வாறில்லாது 'எதிரி' என்னும் நிலையை பேணிக்கொண்டால், எதிரிகளுக்கான பதிலையே தமிழர்கள் பெற நேரிடும். ஏனெனில் ஆட்சிமாற்றத்திற்கான தேர்தல் என்பது வெளியில் ஜனாநாயகம், நல்லாட்சி என்னும் சொற்களை துணைக்கழைத்து கொண்டாலும் கூட, குறிப்பிட்ட ஒருசிலரை அதிகாரத்திலிருந்து அகற்றி, இல்லாதொழிக்கும் நிகழ்சிநிரல் ஒன்றுடன் தொடர்புபட்டிருக்கிறது. இந்த இடம்தான் தமிழர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டிய இடமாகும்.

b2bbc2f8-9b1a-4421-9848-0ca83ac340f44.jp

ஜனநாயம் மற்றும் நல்லாட்சிக்கான ஆதரவை தமிழ் மக்கள் எப்போதும் வழங்கவேண்டியது அவசியம் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. ஆனால் தெற்கின் அதிகாரப் போட்டியில், தமிழர்கள் வெறும் பகடைக்காயாகிவிடக் கூடாது. இந்த அதிகார மோதலில் எவர் வெல்லுவார் என்பதை எவராலும் தற்போதைக்கு ஊகிக்க முடியாது. எதுவும் நிகழலாம். ஆனால் ஒருவேளை எதிரணியினரின் கணக்கு முன்னரைப்போல் பிழைத்துப் போய், மீண்டும் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றால், தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் பேசக் கூடிய நிலையில் தமிழர்தரப்பு இருக்கவேண்டும். ஆனால் முன்னர் சரத் பொன்சேகாவை ஆதரித்து 'எதிரி' மனப்பான்மை வளர்வதற்கு வழிவகுத்தது போன்று, இம்முறையும் முடிவு அமையுமானால், அதன் விளைவையும் தமிழர்கள் அனுபவிக்கவே நேரிடும். ஏனெனில் எவர் அதிகாரத்தில் இருக்கப் போகின்றார் என்பதை எவரும் அறியார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=b2bbc2f8-9b1a-4421-9848-0ca83ac340f4

கூட்டமைப்பு அமைதியாக இருப்பதே  நல்லது.மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்கு போட வேண்டும் என்று,
சும்மா அடக்கி வாசிப்பதே நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.