Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை 'றோ' சீர்குலைக்கிறது? – கூட்டமைப்பின் பதில் என்ன? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை 'றோ' சீர்குலைக்கிறது? – கூட்டமைப்பின் பதில் என்ன? - யதீந்திரா

யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை
 

 

சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) தலைவரும் எதிர்க்கட்சியின் கொரடாவுமான அனுரகுமார திசநாயக்க, யாழ்ப்பாணம் இந்திய வெளியக உளவுத்துறையான 'றோ'வின் கூடாரமாகிவிட்டதாகவும் (Den of RAW) அங்கு முகாமிட்டிருக்கும் 'றோ' முகவர்கள் யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை சீர்க்குலைத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுன அடிப்படையிலேயே ஓர் இந்திய எதிர்ப்புவாத சிங்கள அரசியல் கட்சியாகும். 1971இலும் பின்னர் 1989இலும் தெற்கில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மேற்படி அமைப்பு, சிங்கள இளைஞர்களை கவர்வதற்கு முன்வைத்த பிரதான போதனைகளின் ஒன்று, இந்திய எதிர்ப்பு வாதமாகும். எனவே அனுரவின் கருத்துக்கள் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல. ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின்னரான சூழலில், நாடாளுமன்றத்தில் 'றோ' தொடர்பில் பேசப்படுவது இதுவே முதல் தடவையாகும். அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சூழலில் இவ்வாறானதொரு வாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

சக்திவாய்ந்த நாடுகள் ஒவ்வொன்றினதும் தேசிய பாதுகாப்பின் முதுகெலும்பாக அதன் உளவுத்துறைகளே இருக்கின்றன. அந்த வகையில் இந்திய தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதன் வெளியக உளவுத்துறையான 'றோ' செயலாற்றுவதில் விசித்திரங்கள் எதுவுமில்லை. அவ்வாறு நிகழாவிட்டால்தான் அது விசித்திரம். ஓர் உடனடி அயல்நாடு என்னும் வகையில் இலங்கை தொடர்பில் இந்தியா அதிக அவதானத்துடன் இருப்பது அதன் தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான ஒன்றாகும். பாக்கிஸ்தானிய உளவுத்துறையான (ஜ.எஸ்.ஜ) முகவர்கள் மற்றும் பாக்கிஸ்தானிய உளவுத் துறையினால் வழிநடத்தப்படும் அமைப்புக்கள் இலங்கையை, தங்களின் ஊடுருவல் தளமாக பயன்படுத்துவதுவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் பல எச்சரிக்கைகள் ஏலவே விடுக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, இந்திய அணு உலைகள் தென்னிந்தியாவில் இருக்கின்ற நிலையில் அதன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இலங்கையின் உள்ளக நிலைமைகளை கண்காணிப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியப்பாட்டை இந்தியாவால் நிராகரிக்க முடியாது. இலங்கையின் ஊடாக தென்னிந்தியாவிற்குள் உளவு நோக்கங்களுக்காக ஊடுருவிய சிலர் ஏலவே கைது செய்யப்பட்டுமிருக்கின்றனர். எனவே இப்படியான விடயங்களை கருத்தில் கொண்டு இந்தியா பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை திட்டமிடக் கூடும். ஆனால் அப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஜே.வி.பி போன்ற ஒரு சிறிய அமைப்பினால் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கப் போவதில்லை. சக்தி வாய்ந்த உளவுத்துறையான றோவின் நடவடிக்கைகளை ஜே.வி.பியால் கண்டுகொள்ளவும் முடியாது. ஆனால் இன்றைய சூழலில் இது போன்றதொரு கருத்தை கூற வேண்டியதன் அவசியம் என்ன என்பதில்தான் தமிழர் தரப்பு கவனம்கொள்ள வேண்டும்.

'றோ' தொடர்பில் ஏற்கனவே தெற்கில் ஒரு விதமான பயம் நிலவுகிறது. அதற்கு மகிந்த ராஜபக்சவின் கருத்துக்களே பிரதான காரணம். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த தன்னுடைய தோல்விக்கு றோவின் சதி முயற்சிகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் மகிந்த றோவை மட்டும் குற்றஞ்சாட்டியிருக்கவில்லை. மாறாக, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த உளவுத்துறையும் உலகின் பல பாகங்களில் அதிர்ச்சிகரமான அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததுமான அமெரிக்க வெளியக உளவுத்துறையான மத்திய புலனாய்வு பணியகம் (சி.ஜ.ஏ) மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் நிகழ்சிநிரலுக்கு பக்கபலமாக தொழிற்படும் பிரித்தானிய உளவுத்துறையான 'எம்.ஐ. 6' ஆகியவற்றினதும் கூட்டு வேலைத்திட்டமொன்றின் விளைவாகவே தான் தோற்கடிப்பட்டதாக மகிந்த பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான கருத்துக்கள் தெற்கின் சிங்கள கடும்போக்குவாதிகள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தையும் கூடவே கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். பொதுவாகவே தெற்கின் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் இந்தியா தொடர்பில் எப்போதும் ஒருவிதமான சந்தேகத்துடன் கூடிய அச்சமே நிலவுகிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில் மகிந்தவின் கருத்துக்கள் அந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருந்தது. இவ்வாறானதொரு சூழலில் ஜே.வி.பியின் கருத்து அப்படியான அச்சங்களுக்கு பால் வார்ப்பதாகவே அமையலாம். ஒருவேளை ஜே.வி.பியின் நோக்கம் கூட அதுவாகவே இருக்கவும் கூடும். தேசிய அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் விவாதங்களை ஆரம்பித்திருக்கின்ற சூழலில், அதற்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாதவாறும் அதேவேளை, அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலுமே இவ்வாறானதொரு வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு ஆழ்ந்து கவனிக்க வேண்டிய பிறிதொரு விடயமும் இருக்கிறது. அதாவது, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க, யாழ்ப்பாணம் றோவின் கூடாரமாகிவிட்டது என்று குறிப்பிடும் போது அதனோடு சேர்த்து குறிப்பிட்டிருக்கும் 'யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் றோ செயற்படுகின்றது' என்னும் கருத்தே இங்கு ஆழ்ந்து நோக்க வேண்டியது. யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மை சீர்குலைத்தல் என்பதன் மூலம் குறித்துரைக்க முற்படுவது என்ன? அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் என்ன நடைபெற்றிருக்கிறது? விடயத்தை ஆழ்ந்து நோக்கினால் அனுரகுமார திசநாயக்க மறைமுகமாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை இலக்கு வைத்திருப்பதை நோக்கலாம். ஏனெனில் அண்மைக்காலமாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் தெற்கிற்கு மட்டுமன்றி தமிழரசு கட்சியின் மூவர் அணிக்கும் ஒரு தலையிடியாகவே மாறியிருக்கிறது. ஆனால் விக்னேஸ்வரன் வடக்கின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் எதனையும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர் தெரிவித்துவரும் கருத்துக்கள் தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் இருப்பை அடிக்கோடிடுவதாகவே அமைந்திருக்கிறது.

அரசியல் ரீதியில் அவர் தெரிவித்துவரும் கருத்துக்களை மட்டுமே இப்பத்தி கருத்தில் கொள்கிறது. இனப்படுகொலை தீர்மானம், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் போர்க்குற்ற மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மீதான விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை இப்படியான பல விடயங்களில் விக்னேஸ்வரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் தெற்கின் ஆட்சியாளர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மை. இதனைத்தான் அனுரகுமார திசநாயக்க யாழ்பாணத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்ட பங்கமென்று கூற முற்படுகின்றாரா? அனுரகுமாரவின் கருத்துக்களை உற்று நோக்கினால் விக்னேஸ்வரனின் சில உறுதியான நிலைப்பாடுகள் மற்றும் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டங்கள் அனைத்திற்கும் பின்னால் 'றோ' இருக்கிறது என்பதே பொருளாகும். ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் தமிழ் மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தால் அதனை றோவுடன் தொடர்புபடுத்தும் ஜே.வி.பி வடக்கில் தமிழர் நிலங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் குறித்தோ, அவர்களது இருப்பு வடக்கின் அமைதிக்கு குந்தகமாக இருக்கிறது என்பது பற்றியோ வாய்திறந்ததில்லை.

ஆனால் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்தியாவிற்கும் - இலங்கைக்குமான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மகிந்த ஆட்சியில் இந்திய - இலங்கை உறவானது மிகவும் பலவீனமடைந்திருந்தது. குறிப்பாக ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ஏற்கனவே பேச்சளவில் மட்டுமிருந்த சில முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக ராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாரிற்குமான நெடுஞ்சாலைத் திட்டம், பலாலி விமானநிலைய புனரமைப்பு போன்ற திட்டங்கள் தொடர்பில் ஜே.வி.பி எதிர்ப்பு மனோபாவத்தை கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே தெற்கில் பதட்டங்களை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றது. அடிப்படையில் ஜே.வி.பி ஒரு சீனசார்பு அமைப்பு. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்சவிற்கு முண்டுகொடுத்த ஜே.வி.பி, இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்ட போது, அதனை மௌனமாக ஆதரித்து நின்றது. பின்னர் மகிந்தவுடன் தொடர்ந்தும் இருப்பதன் மூலம் கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து வெளியேறியது. ஏனெனில் மகிந்த தன்னுடன் இணைந்திருந்த கட்சிகளின் பலத்தை மெது மெதுவாக சிதைக்கும் ஒரு வேலைத்திட்டத்தையும் வைத்திருந்தார். இதன் விளைவே ஜே.வி.பியிலிருந்து விமல் பிரித்தெடுக்கப்பட்டார்.

'றோ' யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாக கூறுவதானது, உண்மையில் மிகவும் திட்டமிட்ட வகையில் ஜே.பி.பியால் மேற்கொள்ளப்பட்டும் ஒரு பிரச்சாரமாகும். இதற்கு பின்னால் சீன ஆதரவு நிகழ்ச்சிநிரல் ஒன்றும் இருக்கக் கூடும். ஜே.வி.பி மகிந்தவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்திருந்த போதிலும் கூட, மகிந்தவின் சீன சார்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராமுகமாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கையை இலக்காகக் கொண்ட மூலோபாய நகர்வுகள் தொடர்பிலும், அதன் மீது இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான அபிப்பிராயங்களுமின்றி இருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல. குறிப்பாக ஆட்சிமாற்றத்தின் மீது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அதிக ஆர்வம் கொண்டிருந்தமைக்கு பின்னால் ஒரு தெளிவான காரணம் இருந்தது. அது மகிந்தவின் முற்றிலுமான சீனா நோக்கிய சரணாகதியாகும். எனவே எதிர்க்கட்சித் தலைவரைக் கொண்டிருக்கும் மூன்றாவது நிலை கட்சியென்னும் வகையில் கூட்டமைப்பு இலங்கையின் மூலோபாய விடயங்கள் தொடர்பில் கரிசனையற்றிருப்பது அதன் பலவீனத்தையே காண்பிக்கின்றது.

யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை

'றோ' வடக்கின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாக குறிப்பிட்டு, தமிழ் மக்களின் பிரச்சினையை வெறுமனே இந்திய உளவுத்துறையின் சதியென்றவாறு சர்வதேசத்திற்கு காண்பிக்க ஜே.வி.பி முற்படும் போது, சம்பந்தன் இது தொடர்பில் எதிர்வினையாற்றாமல் இருப்பது பொருத்தமான ஒன்றல்ல. சர்வதேச விவகாரம் என்பது வெறுமனே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குகொள்வதும் பின்னர் அது தொடர்பில் விளக்கமளிப்பது மட்டுமல்ல. மாறாக, இலங்கையை மையப்படுத்தியிருக்கும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயலாற்றுவதும் தக்க தருணத்தில் அது தொடர்பில் எதிர்வினையாற்றுவதும்தான். குறிப்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்பான விவகாரங்கள் விவாதத்திற்கு வரும் போது கூட்டமைப்பு இந்தியாவின் பக்கமாக நிற்பதும் அதற்கான தர்க்க விவாதங்களில் ஈடுபடவேண்டியது எந்தவகையிலும் தவிர்த்துச் செல்ல முடியாது, செல்லவும் கூடாத விடயமாகும். ஏனெனில் தமிழ் மக்களின் அரசியல் விவகாரம் என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=2e66ae91-a69b-40d7-b874-79b15c4c220c

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.