Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் கொரியா - ஒரு அறிமுகம்

Featured Replies

ஆசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் தென்கொரியா அமைந்துள்ளது. 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை வட கொரியாவும், தென் கொரியாவும் சேர்ந்தே இருந்தன. இரண்டும் இணைந்த கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் சைனாவும், ரஷ்யாவும், கிழக்கில் கடலும், அதைத் தாண்டி ஜப்பானும், மேற்கில் மஞ்சள் கடலும், அதைத் தாண்டி சைனாவும், தெற்கில் கடலும் அமைந்துள்ளன.

south korea

தற்பொழுது கொரியா என்றாலே "ரிபப்ளிக் ஆப் கொரியா" எனப்படும் தென்கொரியாவைத் தான் குறிக்கின்றது. சுமார் 3000 தீவுகள் சேர்ந்து பரப்பளவு சுமார் 99117 ச கி.மீ. தென் வடலாக சுமார் 965 கி.மீ. உள்ள சிறிய நாடு.

கொரியா மலைப்பாங்கான நாடு. கிழக்குப் பகுதியில் மலைகளும், மேற்குப் பகுதியில் நதிகள் பாய்கின்ற பசுமையான பகுதிகளும் உள்ளன. கோடைக் காலம் அதிக வெப்பத்துடனும், மழைக் காலம் நல்ல மழையுடனும், அடுத்து இலையுதிர் காலம், கடுங்குளிருடன் பனிக் காலம் என்று தனித்தனியான பருவநிலை காணப்படுகிறது. பச்சைப் பசேர் என்றிருக்கும் இலைகள் கோடையில் மஞ்சளாகவும், ஆரஞ்சு வண்ணமாக வும் மாறி வண்ணமயமாக இருப்பது காணக் கிடைக்காத காட்சி. பனிக்காலத்தில் இலைகளெல்லாம் உதிர்ந்து, வெண்மையாகப் பனியுடன் வர்ணக் களஞ்சியமாக உள்ளது.

கொரியா, பலம் மிகுந்த சைனா, ஜப்பான் போன்ற நாடுகளின் மத்தியில் இருந்தாலும், தனக்கென்று தனித்துவத்துடன் தான் இருந்து வந்திருக்கறது. அதற்கென்று தனியாக கொரிய மொழியும், எழுத்துக்களும் உண்டு.

கொரிய மக்கள் கிறித்துவுக்கு முன், 24 நூற்றாண்டுகளுக்கு முன், ஆசியாவின் மத்தியப் பகுதியிலிருந்து கொரியத் தீபகற்பத்திற்கு வந்த மங்கோல் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது கதைப்படி 2333 BCE யில் "டான்கன் "(tangun)என்ற மனிதனும் கடவுளும் இணைந்த மனிதக் கடவுள் (man god). "சோஸன்" என்ற "காலை அமைதியின் நாட்டைப்" (land of morning calm) படைத்ததாகவும், அவரது வழிவந்தவர்களாகவும் தங்களைக் கூறிக் கொள்கின்றனர்.

சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்திலும் அங்கு மனிதர்கள இருந்திருப்பதை அங்கு கிடைத்த சரித்திர காலத்திற்கு முற்பட்ட கல்லினால் ஆன வேட்டைக் கருவிகளால் அறியலாம்.

60BCE யில் ஷில்லா, கொரியோ, பெக்சே (shilla ,koguryo, packche) என்ற மூன்று அரசுகள் தளைத்து இருந்திருக்கின்றன. 668 CE யில் மூன்று அரசுகளும் ஷில்லாவின் கீழ் இணைந்திருக்கின்றன. 918ல் கொரியோ என்ற பெயரில் புது அரசு வந்திருக்கிறது.

பல நாடுகளுக்கு மத்தியில் இருந்ததால், அந்தக் காலத்தில் வாணிக வழியில் ஒரு முக்கிய இடமாக இருந்திருக்கிறது. அச்சுத்துறையில், கூட்டன்பர்க்குக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பாகவே, அசையும் எழுத்து வகை இருந்திருக்கின்றது.

south korea

பெரிய நாடுகளுக்கு இடையில் கொரியா இருந்ததால் பல தாக்குதல்களிலும் அகப்பட்டிருக்கிறது. 1392இல் மங்கோலியப் படையெடுப்பினால் பாதிக்கப்பட்ட கொரியாவில் அதன் பின் சோஸன் அரசு ஏற்பட்டிருக்கிறது. சோஸன் அரசின் கீழ் இருந்த ஐநூறு ஆண்டுகளிலும் வர்த்தகம் குறைக்கப்பட்டு மற்ற நாடுகளுடன் தொடர்பு குறைந்திருக்கிறது. அப்பொழுது "முனிவர் அரசு "(hermit kingdom)என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் அந்தப் பகுதியில் வல்லரசாக இருந்த ஜப்பானுடன் 1910ல் இணைக்கப்பட்டிருக்கிறது.

35 வருடங்கள் ஜப்பானிடம் அடிமைப்பட்டு இருந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வி அடைந்தது. 1945ம் ஆண்டில் 38*அட்சரேகைக்கு தெற்கிலிருந்த ஜப்பானியப் படைகள் அமெரிக்காவிடமும், அதன் வடக்கில் இருந்த ப‌டைகள் ரஷ்யாவிடமும் சரணடைந்தன‌. அதன் பின் ஐ.நா. இரண்டு இடங்களிலும் தேர்தல் நடத்துவதாக அறிவித்து, தென் பகுதியில் அமெரிக்காவின் துணையுடன் தேர்தல் நடந்து "ரிபப்ளிக் ஆப் கொரியா" என்ற தென் கொரியா 1948இல் உதயமானது. ரஷ்யா வடபகுதியில் "டெமக்ரடிக் பீப்புள் ரிபப்ளிக் ஆப் கொரியா" என்ற கம்யூனிஸ்ட் அரசை ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போரினால் கொரியாவில் அமெரிக்கா, ரஷ்யாவினால் இரு வேறு அமைப்புள்ள நாடுகள் தோன்றின. அதன்பின் இரண்டு வருடங்களுக்குப் பின் ஜுன் 25, 1950ஆம் ஆண்டு வட கொரியா, தென் கொரியா மீது திடீர்த் தாக்குதல் நடத்தியது. ஐ.நா. தலையிட்டு அமெரிக்கா முதலிய பதினாறு நாட்டுப் படைகள் சென்று, வட கொரியாவின்_ ரஷ்யாவின்_ பிடியிலிருந்து விடுவித்திருக்கிறது. அந்த நேரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்த இந்தியாவும் மருத்துவ உதவி அனுப்பி இருக்கிறது.

மூன்று ஆண்டுகள் போர், பலத்த சேதங்கள், ஒரு இனமாக, மொழியாக ஒன்றுபட்டிருந்த மக்கள் இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட கொடுமை எல்லாவற்றையும் கொரியா தாண்டி வந்திருக்கிறது. பின் அமெரிக்காவின் உதவி பெறும் நாடாக இருந்து படிப்படியாக முன்னேறியிருக்கிறது. இன்றும் அமெரிக்காவின் படைத்தளம் அங்கு உண்டு.

1953ம் ஆண்டில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த கொரியா இன்று உலகப் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருக்கிறது. ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறது. உதவி பெறும் நாடாக இருந்து இன்று உதவும் நாடாக வளர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? உழைப்பு, உழைப்பு, உழைப்பையே குறிக்கோளாகக் கொண்ட அதன் மக்கள்!!

(தொடரும்)

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27508-2014-12-12-04-55-16

  • தொடங்கியவர்

கொரிய போர் நினைவகம்

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் எங்கள் மாப்பிள்ளை, மகள், பேரன்களைக் காண்பதற்காக ஆகஸ்ட் 15ம் நாள் சியோல் வந்து சேர்ந்தோம்.

south korea flagஅன்று தான் தென்கொரியாவிற்கும் "சுதந்திர தினம்" என்பதால் எங்கு பார்த்தாலும் அவர்களது கொடி பறந்து கொண்டிருந்தது.

வெண்மையான கொடியின் நடுவில் ஒரு வட்டம். நமது புடவைகளில் இருக்குமே, அந்த மாதிரி மாங்காய் டிசைனில், சிவப்பு நிறத்திலும், நீலநிறத்திலும் இரண்டு மாங்காய்களைச் சேர்த்து ஒரு வட்டம் செய்தது போல் இருந்தது. அதைச் சுற்றி நான்கு புறமும் கருப்பு நிறத்தில் மூன்று கோடுகள்.

இந்தக் கொடி 1948ல் தான் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. கொரிய மொழியில் கொடி "தேகுக்கி" (T'aegukki)என்று கூறப்படுகிறது. "தேகுக்" (t'aeguk) வட்டத்தின் நடுவில் இருக்கும் இணைந்த "கமா" (interlocked comma) (,) (நம்மூர் மாங்காய்) வைக் குறிக்கிறது. "கி"(ki) என்றால் கொடி.

கொரியாவின் கொடி கீழை நாடுகளின் தத்துவக் கருத்துக்களைக் குறிப்பதாக உள்ளது. நீல, சிவப்பு நிறக் கமாக்கள் "யின்", "யாங்"(yin yang) கீழை நாட்டுத் தத்துவத்தின் அடிப்படையாக உள்ளது. எங்கும், எதிலும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச இரட்டைகளைக் குறிக்கின்றது. பெண் ஆண், நீர் நெருப்பு, இரவு பகல், இருள் ஒளி, படைப்பு அழிப்பு, நேர் சக்தி (பாசிட்டிவ்) எதிர் சக்தி (நெகட்டிவ்),_ இந்த இரண்டு கமாக்களும் வட்டத்திற்குள் இருப்பது, முடிவில்லாத பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருந்தாலும், அதிலும் ஒரு இசைவு (harmony) இருப்பதைக் காட்டுகின்றது.

சுற்றி இருக்கும் கோடுகளைக் கூர்ந்து நோக்கினால், இடது மேற்புறம் உள்ள பிளவுபடாத கோடுகள் வானத்தையும், பிளவுபட்ட, வலது கீழ்ப் புறக் கோடுகள் _பூமியையும் _குறிக்கின்றன. வலது மேற்புறம், இரண்டு பிளவுபட்ட கோடுகள் நடுவில் முழுமையான கோடு நீரையும், இடது கீழ்ப்புறம் இரண்டு முழுமையான கோடுகள் நடுவில் பிளவுபட்ட கோடு நெருப்பையும் குறிக்கின்றன‌.

இந்தத் தத்துவங்கள் "book of changes" என்ற பழைய சீனப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் பிரபஞ்ச ரகசியத்தைப் புரிந்து கொள்ள "யின் யாங்" (yin yang) தத்துவமும்_ அதாவது எதிரெதிர் சக்திகள் தத்துவமும், எதிர்ப்பும் அதைச் சமன் செய்வதும் (opposition and balance)விளக்கப்பட்டிருக்கின்றன.

சியோலில் இந்தியக் கொடி

"Our nation honours her sons and daughters who answered the call to defend a country they never knew and a people they never met"

"தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்த தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப்படுத்துகிறது."

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரிய போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளே இவை.

war memorial of Korea

கொரியாவில் இருக்கும் எங்கள் மகள் வீட்டிற்கு வந்திருக்கும் நாங்கள், கொரியப் போர் நினைவகத்தைப் (The War Memorial of Korea) பார்த்தோம். அங்கு சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து கொரியாவில் நடந்த போர்கள், அவற்றில் பயன்படுத்திய ஆயுதங்கள், அயல் நாட்டினர் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டவர்களின் வீரச் செயல்கள் எல்லாம் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தற்போது பயன்படுத்தப்படும் கப்பல்கள், விமானங்கள், டாங்குகள் போன்றவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டிருக்கின்றான. 3டி, 4டி போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் நாமே போர் நடக்கும்போது, கப்பலில், விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. மேலும் கப்பல் போன்றவற்றை நாமே குறிபார்த்துச் சுடுவது, படகை ஓட்டுவது போன்ற நிகழ்ச்சிகள், சிறுவர்களும் உற்சாகமாகப் பங்கேற்று, போரைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப் பற்றை ஊட்டும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் வட கொரியா தென்கொரியா என்று பிரிக்கப்பட்டது. 1950இல், வடகொரியா, தென்கொரியாவை ஆக்கிரமிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பல நாட்டுப் படைகள் தென்கொரியாவிற்கு உதவுவதற்காகச் சென்றிருக்கின்றன. அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் முதலில் குறிப்பிட்ட வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.

அப்பொழுது, இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்தது. இந்தியா 329 பேர் கொண்ட மருத்துவ உதவிக் குழுவை அனுப்பி இருக்கிறது. 20.11.1950லிருந்து 23.2.1954 வரை பணியாற்றி இருக்கின்றனர். நமது கொடியுடன், அனைத்து விவரங்களையும் படங்களுடன் வைத்துள்ளனர்.

அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இந்தியரும் படம் எடுத்துக் கொண்டிருந்தார். துஷார் என்ற அவர், தன் தந்தை ஜெனரல் ராஜன்சௌத்திரி அந்தக் குழுவில் பணியாற்றியதாகவும், தற்பொழுது ஆக்ராவில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இருக்கும் தான் பணி நிமித்தமாக சியோல் வந்திருப்பதால், தந்தை கூறியபடி, இந்த நினைவகத்தைப் பார்க்க வந்ததாக‌க் கூறினார்.

எங்கேயோ இருக்கும் சியோலில் பார்த்த அந்த வார்த்தைகளும், நம் இந்தியக் கொடியும், நமது பங்களிப்பும், அதில் பங்கேற்ற ஒருவரின் மகன் துசார் என்பவரைப் பார்த்ததும், மனத்தைச் சிலிர்க்க வைத்தது. உலகம் எவ்வளவு சிறியதாகிக் கொண்டு வருகிறது!!

(தொடரும்)

 

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27528-2014-12-16-05-35-00

  • தொடங்கியவர்

எங்கள் பார்வையில் கொரியா

கொரியாவை வளமான நாடாக்கும் கொரியாவின் மக்கள் மங்கோல் இனத்தைச் சேர்ந்தவர்கள். மஞ்சள் கலந்த வெண்மை நிறத்துடன் ஆண்களும், பெண்களும் அழகாக இருக்கின்றனர். மேற்கத்திய நாட்டினரைப் போல் பருமனான அமைப்பாக இல்லாமல், சரியான உடலமைப்புடன், கண்கள் சற்று இடுங்கி, மூக்கு சற்று சப்பையாக இருக்கினறனர். நாம் பார்க்கும் போது, ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவும், பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவும் இருப்பது போல் தோன்றுகின்றது.

மக்கள் அனைவ‌ரும் நேர்த்தியாக உடை அணிகின்றனர். பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற அடர், பளிச் நிறங்களை அதிகம் பார்க்க முடிவதிலலை. தங்கள் அழகைப் பராமரிப்பதில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை, அதிகமாக இருக்கும் அழகு சாதனக் கடைகளும், அழகு நிலையங்களும் காட்டுகின்றன. மூக்கைத் திருத்துவதற்காகச் சீரமைப்பு சிகிச்சைகளும் மேற்கொள்ளுகின்றனர்.

Seoul Incheon International Airport

நாடெங்கும் மக்கள் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கின்றனர். இதை நாம் விமான நிலையத்தில் இறங்கியதுமே கண்டு கொள்ளலாம். விமான நிலையத்தை மிகத்தூய்மையாக வைத்திருக்கும் நேர்த்தி, கச்சிதமாகப் பணியாற்றுதல் போன்றவை நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. எங்கும் ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக, வரிசையில் செல்வதைக் கடைப்பிடிக்கின்றனர்.

கொரியத் தலைநகரான சியோலில், பேருந்து போக்குவரத்து தரையின் அடியில் செல்லும் ஸப்வே எனப்படும் ரயில் போக்குவரத்தும் மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருக்கின்றன. அதிலும் ரயில் இரண்டு அல்லது மூன்று தளங்கள் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ஸப்வேக்கு மேல் பல கடைகள் அமைந்த மால் அமைக்கப்பட்டிருக்கிறது.

T மணி கார்டு என்னும் கார்டுகளை நாம் வாங்கிக் கொண்டால், பஸ்ஸில் ஏறும் போதும், ரயில் நிலையத்திற்குள் செல்லும்போதும் அதை அதற்குரிய மிஷினில் காட்டி விட்டுச் சென்று, பின் இறங்குமிடத்தில் மறுபடியும் காட்டினால், குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு விடுகிறது. மக்கள் அனைவரும் வரிசையாக அதைக் காட்டிச் செல்கின்றனர். நமக்கு கார்டு தேவையில்லையென்றால், ரயில் நிலையத்தில் இருக்கும் மிஷினில் செலுத்தி, மீதியிருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கார்டுகளை டாக்ஸிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிக்குச் செல்லும் எங்கள் பேரன்கள் கூட இவற்றைப் பயன்படுத்தி டாக்ஸியில் வந்து விடுகின்றனர்.

தண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதால் நாடே வசதியாக பளிச்சென்று இருக்கிறது. தொழில் நுட்பங்கள் எல்லா இடங்களிலும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு, வாழ்க்கை வசதிகளைப் பெருக்குகின்றன.

கொரியாவின் மக்கள் மற்ற வெளிநாட்டினருடன் அதிகம் பழகுவதில்லை. எங்கள் மகள் இருந்தது பெரிய அப்பார்ட்மெண்ட் என்றாலும், கொரியர்களையோ அவர்கள் குழந்தைகளையோ அதிகம் காணவோ, பழகவோ முடியவில்லை. அவர்களுண்டு, அவர்கள் வேலையுண்டு என்று வேலையிலேயே கருத்தாக இருக்கின்றனர்.

பொதுவாக ஆண், பெண் இருவருமே வேலை பார்க்கின்றனர். அனேகமாக கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். சியோலில் வாழ்கைச் செலவு அதிகம் என்பதால் பெற்றோர்கள், சில நேரங்களில் சொந்த ஊர்களில் இருப்பதாக‌க் கூறப்படுகிறது. குடும்பத்தில் பெற்றோர்கள், மூத்தவர்கள் அதிகம் மதிக்கப்படுகின்றனர். நம்மைப் போல முன்னோர்களை வழிபடுவது போன்ற சடங்குகளில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கலந்து கொள்கின்றனர். அது "சோஸக்" என்ற பண்டிகையாக, தொடர் விடுமுறையுடன் கொண்டாடப்படுகிறது. நம் ருசிக்கு இனிப்பே இல்லாத இனிப்புகளை அச்சமயம் பரிமாறிக் கொள்கின்றனர்.

நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் மக்கள் செல்வதை அதிகம் காண முடிகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில், விருப்பப் பிராணிகள் விற்குமிடம், (நாய் பூனை மட்டுமல்ல; மலைப்பாம்பு, ஆமை கூட உணடு) அவற்றுக்குத் தேவையான பொருட்கள், ஆடை, அணிகள் இவற்றைக் கண்டால், இவர்களும், அமெரிக்கர்களைப் போல் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாகி விட்டதால், குடும்பத்தைத் தவிர்த்து, செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிக்க ஆரம்பித்து விட்டனரோ என்று தோன்றுகிறது.

கொரியர்களின் முக்கிய உணவு அரிசி தான். அரிசி ஒரு பிசுபிசுப்புத் தன்மையுடன் இருக்கிறது. சியோலைச் சுற்றிச் செழிப்பான வயல்களைப் பார்க்க முடிந்தது. அவர்களும் சாதம் தான் சாப்பிடுகின்றனர். சாப்பிடும் முறை தான் வேறு. குழம்பு, சாம்பார் போன்று ஊற்றிப் பிசைந்து சாப்பிடாமல், வேக வைத்த கீரைகள், காளான்கள், மாமிச உணவு வகைகளையும் சேர்த்து, சீனர், ஜப்பானியர் போல் குச்சி வைத்துச் சாப்பிடுகின்றனர். "கிம்ச்சி" என்று முட்டைக்கோஸ், ரேடிஷ் போன்றவற்றை ஊறுகாய் போன்று பதப்படுத்தி உபயோகிக்கிறார்கள். சூப், கிரேவி, நூடில்ஸ் எதுவாக இருந்தாலும், பன்றிக் கறியோ, மீனோ எதையாவது கலந்து விடுகிறார்கள். பொதுவாக கொரிய உணவை நாம் சாப்பிடுவது சற்று சிரமம் தான். அதுவும், சைவமாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை.

கொரிய மொழி மட்டுமே பேசப்படுவதால் சுத்த சைவமாக உணவை வாங்குவது கூடச் சிரமமாக இருக்கிறது. சொல்லப் போனால் "சைவம்" என்பதே புரியவில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் பஸ், ரயில் முதலியவற்றிலும் தெளிவாக ஆங்கிலத்தில் போர்டுகள் இருக்கின்றன. தற்போது பள்ளிகளில் ஆங்கிலமும் கற்பிக்கப்படுவதால், அடுத்த சில ஆண்டுகளில் தொழில் நுட்பத் துறையிலும் நம்முடன் போட்டிக்கு வந்து விடுவார்கள் என்பது திண்ணம்.

seoul temple

கொரியாவில் புத்த மதம் பின்பற்றப்படுகிறது. ஆனால் பெரும்பாலோர் மதச் சார்பற்றவர்களாக இருப்பதால், கிறித்துவ மதத்தைப் பரப்ப முயற்சிகள் செய்யப் படுகின்றன. நாங்கள் சென்ற சமயம் கத்தோலிக்க கிறித்துவத் தலைவர் போப் அவர்கள் கூட வந்திருந்தார்.

நாங்கள் தெருவில் செல்லும் போது ஒரு கொரிய குடும்பத்தினர், அப்பா அம்மா இரண்டு அழகிய பெண்கள், எங்களைப் பார்த்து "இந்தியா" என்று ஆசையுடன் பேசினர். தாங்களும், இந்தியாவில் கேரளாவிற்கு வந்திருப்பதாகவும், நாங்கள் தமிழ் என்றவுடன், "வணக்கம், நலமா, நன்றி" என்றெல்லாம் தமிழில் கூறினர். நாங்களும் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மதப் பிரச்சார ஏடுகளை நீட்டினர். நாங்கள் வாங்க மறுத்து, தேவையில்லை என்றதும் அப்படியே நின்று விட்டனர். எப்படியெல்லாம் பிரச்சாரம் நடக்கிறது பாருங்கள்!

முக்கிய இடங்களைப் பாதுகாக்க, சிங்கம் (நம் ஊர் யாளி போன்று பற்கள் பெரிதாக) சிலை வைத்தல், தீய சக்திகளை விரட்ட டிராகன் படம், வாஸ்து பார்த்தல் போன்ற பழக்கமெல்லாம் அங்கிருக்கிறது. ஒரு திசையில் மலை, ஒரு திசையில் ஆறு, நடுவில் சமவெளியில் நகரம் என்று சரியான வாஸ்துப்படி சியோல் நகரம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புத்தர் கோயில்களில் ஊதுபத்தி ஏற்றுதல், தங்கள் குறைகளை எழுதி வைத்தல், சில இடங்களில் வேண்டிக் கொண்டு கற்களை அடுக்கி வைத்தல் எல்லாம் செய்கின்றனர். ஆனால் எல்லா இடத்தையும் பாழ் பண்ணாமல், தனியாக நடக்கிறது.

அவர்களது கலைகள் அனைத்திலும், ஏன், தேசியக் கொடியில் கூட கீழை நாட்டுத் தத்துவங்கள் பொதிந்து இருக்கின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் சோதி ஏற்றுமிடத்தில் கூட, தீயுடன் நீரும் ஒரு ஊற்றுப் போல இருந்தது. அவர்கள், "யின் யாங்"(yin, yang) என்னும் எதிரெதிர் இரட்டைகளை மதிப்பதால், குறியீடாக அப்படிச் செய்திருக்கலாம். அவர்கள் கொடியில் கூட நீரையும், நெருப்பையும் குறிப்பதாகக் கோடுகள் உண்டு.

நாடெங்கிலும் ஒரே மொழி, ஒரே இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் நாட்டை அதகம் மதிக்கின்றனர். சாமான்கள் வாங்கும் போது கூட "கொரியாவில் செய்தது" என்று பெருமையுடன் கூறுகின்றனர். 1000 வாண் என்பது ஒரு டாலருக்குச் சமமாக இருக்கிறது. டாலர் மதிப்பிலேயே 5000 வாண், 10000 வாண் என்று விலை இருப்பதால், விலை சற்று அதிகமாக இருப்பதாகவே நமக்குப் படுகிறது.

மொத்தத்தில் கொரியா நல்ல, ஒழுங்கான, ஏமாற்றாத மக்களைக் கொண்ட, இருக்கும் வளங்களைக் கொண்டு, நாட்டின் வளங்களைப் பெருக்கிக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒரு நல்ல நாடு.

 

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27548-2014-12-19-06-49-40

  • கருத்துக்கள உறவுகள்

இரசித்து வாசிக்க  கூடியதாக இருந்தது....!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நாங்கள் கண்ட கொரியா

 

என் கணவரும், நானும் தென் கொரியா சென்ற பொழுது, அதன் தலைநகரான சியோல் மட்டுமே பார்க்க முடிந்தது. சியோல் ஒரு முன்னேறிய நாட்டின் தலைநகர் எப்படி இருக்குமோ, அப்படி பெரிய கட்டடங்களுடனும், பெரிய சாலைகளுடனும், எல்லா வசதிகளுடனும் இருக்கிறது.

சியோல் மலைப்பாங்கான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் சென்ற நேரம் கோடை முடிந்து, இலையுதிர் காலத்தின் துவக்கம். ஆதலால், மிதமான குளிர், வெப்பத்துடன் நம் கொடைக்கானல் ஊடடி போல் நன்றாக இருந்தது.

சியோலில் பழைமையான, புராதனமான இடங்கள் அதிகம் ஒன்றும் இல்லை. நம் இந்தியா மாதிரி கலை நுணுக்கங்களுடனோ, பிரம்மாண்டமானதாகவோ இல்லை. ஆனால் இருக்கும் இடத்தை அவர்கள் வைத்திருக்கும் முறை தான் சிறப்பைத் தருகிறது.

ஜோகேஸா கோயில் (Jogyesa temple)

ஜோகே ஆர்டர் புத்தக் கோயில் ( Jogye order of korean Buddhism) ஜோகேஸா சென்றோம். மலை மேல் எங்கோ இருந்த கோயிலை எடுத்து வந்து, சியோலில் புதுப்பித்திருக்கிறார்கள். ஒரு பெரிய செவ்வக வடிவ மண்டபம். மேல் பகுதி முழுவதும் மரத்தால் ஆனது. பக்கங்களில் அழகிய பலகணிகள். இவை முழுவதும் நல்ல பச்சை, மஞ்சள், நீலம்,சிவப்பு வண்ணங்கள் கொண்ட புத்தக் கோயிலுக்கே உரிய ஓவியஙகள் உள்ளன.

jogyesa

கோயிலின் முன்புறம் மேற்பகுதியில் நூற்றுக்கணக்கான, காகிதத்தால் ஆன தாமரைப்பூ, மீன் மற்றும் பலவிதமான விளக்குகள் தொங்க விடப்பட்டிருக்கின்றன. மக்கள் தங்கள் வேண்டுதல்களை தாமரைப்பூ விளக்குகளில் எழுதித் தொங்க விடுகிறார்கள். அங்கே நடக்கும் விளக்குத் திருவிழாவின் போது விளக்குகள் நிறைய ஏற்றி வைத்து மிகவும் அழகாக இருக்குமாம்.

கோயில் மண்டபத்தின் ஒரு பகுதி முழுவதும் இருக்குமாறு மூன்று பிரமாண்டமான, கூரை வரையிலான புத்தர் சிலைகள். நடுவில் இருப்பவர் புத்த மதத்தைத் தோற்றுவித்த சாக்கிய முனி புத்தர். இடது கையைத் தொடையிலும் வலது கை லேசாகத் தரையைத் தொட்ட விதத்தில் "பூமியைத் தொட்ட முத்திரை"யுடன் இருக்கிறார். புத்தர் ஆன்மீக ஒளி பெற்ற பின் பூமியைத் தொட்டதாகவும், பூமி அவரது வெற்றிக்குச் சாட்சியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சாக்கியமுனி புத்தரின் இடப்பக்கத்தில் மருந்துக் குடுவையுடன் மருத்துவ புத்தர். இவர் உயிர்களின் உடல், மன நலத்தைக் காப்பவர். வலப்புறம் இருக்கும் அமிதாப புத்தர் தூய்மையான சொர்க்கத்துக்கு வழி காட்டுபவராக வணங்கப்படுகிறார். புத்தர் என்றால் ஒருவரே என்று நினைத்து இருந்த எனக்கு மூன்று புத்தர்கள் இருந்தது புதிதாக இருந்தது. 

அந்தக் கோயிலுக்கு முன்பு "கோயில் உணவு"( temple food)என்ற பெயரில் சுத்த சைவமாக, புத்தக் கோயில்களில் வழங்கப்படும் முறையில் உணவுகளைத் தரும் உணவகம் ஒன்று இருக்கிறது. அதில் சாப்பிட்டுப் பார்த்தோம். சூப, சாதம, கிம்ச்சி, அவர்களின் ஊறுகாய் போன்ற பதப்படுத்திய காய்கறிகள், வேகவைத்த கீரைகள், காளான்கள், கொழுக்கட்டை கிரேவியுடன் பழங்கள் என்று சுத்த சைவமாக இருந்தது.

வரும் வெளிநாட்டவர்கள் புத்த மதத்தைப் பற்றியும், வழிபாட்டு முறை, புத்த துறவிகளின் வாழ்க்கை முறை இவற்றைப் பற்றியும் அறிந்து கொள்வதற்காக temple stay என்ற நிகழ்ச்சிகள் பல கோயில்களிலும் உண்டு. அங்கே போய் இருந்து தியானம், வழிபாடு, மனதை ஒருமைப் படுத்தும் தேநீர் நிகழ்வு மற்றும் பல நிகழ்ச்சிகளிலும் சில மணி நேரம் முதல் சில நாட்ககள் வரை இருந்து கலந்து கொள்ளலாம். அனைத்திற்கும் கட்டணம் உண்டு.

ஹான் ஆறு பவுண்டன்

han river

ஹான் ஆறு சியோலின் நடுவில் நிறையத் தண்ணீருடன் கரையைத் தொட்டுக் கொண்டு ஓடுகிறது. ஆற்றுன் இருபுறமும் மரங்கள், பூங்காக்கள் அமைக்கப்பட்டு, மக்கள் வந்து பொழுது போக்கும் இடமாக இருக்கிறது. ஆறும், நீரும் சுத்தமோ சுத்தம். உல்லாசமாக பெரிய படகுகளிலும் செல்லலாம்.

ஆற்றைக் கடப்பதறகாகக் கட்டப்பட்ட பாலத்தின் பக்கவாட்டில், ஆற்று நீரை விதவிதமாகப் பாய்ச்சி அடிக்கும் நீர் ஊற்றுகள்(fountain) அமைத்திருக்கினறனர். பாலத்தின் நீளம் முழுவதும் பெரிய அளவில் பலப்பல வண்ண விளக்குகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. மாலை நேரத்தில் அங்கிருக்கும் பூங்காவில் காற்று வாங்கிக் கொண்டு, வண்ண மயமான விளக்குகளுடன் நீர் பீச்சி அடிப்பதைப் பார்ப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.

 rainbow fountain seoul

கொரிய மக்கள் சாப்பாட்டுடன் வந்து, சிலர் டெண்ட் எல்லாம் போட்டுக் கொண்டு பொழுதைக் கழிக்கிறார்கள். பீட்ஸா, சிக்கன் வறுவல் முதலியவற்றையும் ஆர்டர் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றனர். இப்படி ஒரு பாலத்தைக்கூட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அழகான பார்க்க வேண்டிய ஓர் இடமாக ஆக்கியிருக்கிறார்கள்.

கியான்பாக்ஹாங் அரண்மனை

1395 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கியான்பாக்ஹாங் அரண்மனையைப் (Gyeongbokgung palace) பார்த்தோம். அதுவும் வாஸ்து முறைப்படி அமைக்கப் பட்டு, மிகப் பெரிய இடத்தில் பரந்து இருக்கிறது. ஆனால் அரசவை, அந்தப்புரம், தங்குமிடங்கள் எல்லாம் தனித்தனியாக செவ்வக வடிவ கூடங்களாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேற்பகுதி முழுவதும் மரத்தினால் செய்யப்பட்டிருக்கிறது. பெரிய குளத்திற்கு நடுவே இருக்கும் பல நாட்டுப் பிரதானிகளைச் சந்திக்கும் இடம், குளத்திின் நடுவே அரசர் ஓய்வெடுக்கும் இடம் எல்லாம் உண்டு. ஜப்பான் ஆக்கிரமித்த போது, அநேகப் பகுதி பாழ்படுத்தப்பட்டாலும், பழைய ஆவணங்களின் துணை கொண்டு புதுப்பித்து இருக்கிறார்கள். காவலர்கள் மாறும் அணிவகுப்பையும் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படி நுணுக்கமான வேலைப்பாடுகள் ஒன்றும் இல்லையென்றாலும், பராமரிக்கும் முறை சிறப்பாக இருந்தது.

Gyeongbokgung palace

கோயில், அரண்மனை எல்லா இடங்களிலும் அதைப் பற்றிய மியூசியம், நினைவுப் பொருட்கள் வாங்குமிடம், உணவகம் எல்லாம் உண்டு. தரையின் கீழ் செல்லும் ரயில் மிக முக்கியமான இடங்களுக்கு மிக அருகில் செல்லும் படி அமைத்திருப்பதால் எங்கும் செல்வது வசதியாக இருக்கிறது.

படைகள் இல்லாத இடம் (Demilitarised zone)

ஒரு நாள், வட கொரியாவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையில் இருக்கும் DMZ என்னும் இரு படைகளும் இல்லாத இடத்தைப் பார்க்கச் சென்றோம். பெயர் தான் அப்படி என்றாலும் அங்கே தான் பாதுகாப்பு மிகப் பலமாக இருக்கிறது. அமெரிக்கப் படையும் அங்கிருக்கிறது. அதையே ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்கியிருக்கிறார்கள்.

வட கொரியா, தென் கொரியாவில் புகுவதற்காகத் தோண்டிய சுரங்க வழி கண்டு பிடிக்கப்பட்டு, அதைப் பார்ப்பதற்கு ஒரு வசதியான சுரங்க வழி அமைத்திருக்கறார்கள். சரிவான பாதையில் அரை கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இறங்கும் போது ஒன்றும் தெரியவில்லை. திரும்பும் போது சற்று சிரமமாக இருந்தது.

சில வருடங்களுக்கு முன், இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பின், மறுபடியும் சிக்கல் ஏற்பட்டு, நிறுத்தப் பட்டிருக்கிறது. அந்த ரயில் நிலையம், போருக்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே ஓடிய பழைய, குண்டு பாய்ந்த ரயில் இஞ்சின் எல்லாவற்றையும் காட்டுகிறார்கள்.

Seoul DMZ Train

அங்கிருந்து பார்த்தால் வட கொரியப் பகுதியைப் பார்க்கலாம். அந்தப் பகுதியில் மரங்களே இல்லை. ஏழ்மையில் வாடும் வட கொரிய மக்கள் மரங்களையெல்லாம் வெட்டி விட்டனர் என்று கூறுகின்றனர். வட கொரியாவில் செய்யப் படும் சோயாவினால் செய்யப்பட்ட சாக்லேட் உலகத்திலேயே இங்கு மட்டும் தான் கிடைக்கும் என்று ஒரு நினைவுப் பொருள் கடையும் உண்டு.

அவற்றைப் பார்த்து விட்டுத் திரும்பும் போது, "ஜென்ஜிங்" என்ற மனிதனைப் போல் உருவ அமைப்பிலிருக்கும் வேர்,(ஆண் பெண் இரு உருவ அமைப்பும் உண்டு) அதிலிருந்து டீ, மற்றும் மருத்துவ குணமுள்ள பல பொருட்கள் செய்யப்படும் இடத்தையும் பார்த்தோம்.

போர் நினைவகம் ( War memorial of korea)

கொரியாவில் பார்த்த இடங்களில் முக்கியமானது கொரியாவின் போர் நினைவகம். அங்கு ஆதி காலத்தில் நடந்த போர்களிலிருந்து, ஜப்பானுடன் நடந்த போர், வட கொரிய ஆக்கிரமிப்புப் போர் வரைத் தனித் தனியாக வைத்திருக்கிறார்கள். பழைய, நவீன போர்க் கருவிகள், கப்பல், விமானம், போரைப் பற்றிய விவரங்கள் எல்லாம் விளக்கமாக வைத்துள்ளார்கள். அவர்கள் ஜப்பானியப் போரில் பயன்படுத்திய "ஆமை கப்பல்" (turtle ship) என்னும் மேற்பகுதி மூடப்பட்ட ஒரு கப்பலைப் பிரதானமாக வைத்திருக்கிறார்கள் .

இந்த நினைவகத்தின் சிறப்பு என்னவென்றால்,"போர் என்றால் என்ன?" என்று சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளும் பயிற்சிநேரம் உண்டு. "அனுபவ அறை" (experience room) பல வைத்து போரின் போது, நாம் கப்பலிலோ, விமானத்திலோ ஹெலிகாப்டரிலோ இருந்தால், எப்படி இருக்குமோ அதை உணரும் படி 3டி, 4 டிஎன்று ஏதேதோ தொழில் நுட்பத்தில் தத்ரூபமாகக் காட்டுகிறார்கள். நடைபெற்ற குறிப்பிட்ட சில போர்களில் எப்படி அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதையும் அப்படியே வடிவமைத்துக் காட்டுகிறார்கள்.

ரஷ்ய, வட கொரிய ஆக்கிரமிப்பு போர் நடந்த போது, ஐக்கிய நாடுகள் சபை மூலம் பல நாட்டுப் படைகள் அங்கு சென்றிருக்கின்றன. ஐநா பாதுகாப்பு சபையில் ஆக்கிரமிப்பை எதிர்த்து போர்ப் படைகள் அனுப்பும் தீர்மானத்தை நிறைவேற்றிய போது, எடுக்கப்பட்ட புகைப் படத்தை ஆளுயர நிலையில் மிகப் பெரிய படமாக வைத்திருக்கிறார்கள். அந்தத் தீர்மானம் நிறைவேற்றும்போது, பாதுகாப்பு சபையில் இந்தியாவும் உறுப்பினராக இருந்திருக்கிறது. அமெரிக்க சார்பு நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்க, இந்தியாவும், எகிப்தும் தங்கள் நாட்டின் முடிவை எதிர்பார்த்து இருப்பதாகவும், யூகோஸ்லோவாக்யோ எதிராக இருந்ததாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள். அச்சமயம் சோவியத் ரஷ்யா அவையில் இல்லை.

கொரிய தேசிய அருங்காட்சியகம் (National Museum of Korea)

அங்கு பார்த்த மற்றொரு முக்கியமான இடம் இது. காட்சியகம் மிகப் பெரியதாக, பல பிரிவுகளுடன் இருக்கிறது. அவர்கள் நாட்டு வரலாற்றுடன், கலைப் பொருட்களும் வைத்திருக்கிறார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் அங்கு மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் வைக்கப் பட்டிருந்தது. அவைகளைப் பார்த்த போது, தமிழகத்தின் தென் பகுதியில் சாயர்புரத்தருகில், தமிழக ஹெரிட்டேஜ் கழகத்துடன் சென்றபோது கண்ட கற்கருவிகள், அவை செய்யப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான கற்கள் நினைவுக்கு வந்தன. நிலத்தில் அகழ்வாராய்ச்சி செய்வதை, நிலத்தின் நெடுக்கு வெட்டுத் தோற்றத்துடன், பொருட்கள் புதைந்திருப்பதையும் அழகாகக் காட்டியிருந்தனர். கொரிய அரண்மனையின் படங்கள், அரச அணிகலன்கள், கலைப் பொருட்கள் எல்லாம் இருந்தன. நம் நாட்டுப் பொருட்களுடன் ஒப்பிடும் போது அவை மிகக்குறைந்த அளவே என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

National Museum of Korea

மியூசியத்தில் வெளிநாட்டவரைக் கவர்வதற்காகத் தனி பயிலரங்கம் இலவசமாக நடத்துகிறார்கள். எங்கள் மகள் அங்கே இருப்பதால் முன்னமே பதிவு செய்து, நாங்களும் கலந்து கொண்டோம். கொரியாவில் முத்துச்சிப்பியைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட அலன்காரப் பொருட்கள், அவை செய்யப் படும் விதத்தையும் படமாகக் காட்டினர். பின் மிக மெல்லியதாக, வட்டம், நீள் வட்டம் மற்றும் பல வடிவுகளில் வெட்டப்பட்ட சிப்பித் துண்டுகள், அவற்றை ஒட்டுவதற்கு ஓர் அழகான மர ஸ்டாண்ட், பசை எல்லாம் கொடுத்து, எங்களையே டிசைன் செய்து ஒட்டச் செய்தனர். இறுதியில் அவற்றிற்கு அழகாக வார்னீஷ் கொடுத்து அது காய்வதற்காக ஓர் அட்டைப் பையில் போட்டுக் கொடுத்ததை மறக்கவே முடியாது.

சியோல் விமான நிலையத்திலும் அவர்கள் கலாச்சாரத்தைக் காட்டும் சிறு வளாகம் ஏற்படுத்தியிருந்தனர். அதிலும் விமானத்திற்காகக் காத்திருக்கும் பயணிகள் சிறிது நேரத்திற்குள் செய்யும் படியாக, கீசெயினில் தொங்குவது போன்ற சிறு வட்டத்தில் ஒட்டும் வகையில், முத்துச் சிப்பியில் செய்த மிகச் சிறிய அன்னம், சிறிய டிசைன் துகள்கள் கொடுத்து நம்மை ஒட்டச் செய்கின்றனர். பின் அதற்கு வார்னீஷ் கொடுத்து, ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் அடியில் ஒட்டி மூடி, அவை காய்வதற்காக மேலே சிறு முடிகள் போட்ட அழகிய கயிற்றையும் (தொங்க விடுவதற்காக)ஒட்டிக் கொடுத்து விடுகிறார்கள். நாமே செய்தது, அதுவும் வெளிநாட்டில், பார்க்கும் போதே இன்னமும் புல்லரிப்பாக இருக்கிறது.

பாடலால் புகழ் பெற்ற கங்ணம், பெரிய மால்கள் கடைத் தெருக்களுக்குச் சென்றோம். இப்படியாக எங்கள் கொரியப் பயணம் வெறும் சுற்றுலாவாக மட்டும் அல்லாமல் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மறக்க முடியாத பயணமாகவும் அமைந்தது. கொரியாவிலிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பார்ப்பதற்கு சயாம்ரீப் செல்ல எங்கள் பயணத்தைத் துவங்கினோம்.

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27560-2014-12-23-05-24-44

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.