Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொழில் முன்னோடிகள்: எல்லோர்க்கும் வழிகாட்ட இவர்கள் இதோ...

Featured Replies

way_2875674f.jpg
 

வாழ்க்கை வரலாறுகள் வெறும் அனுபவங்களின் தொகுப்பு அல்ல, மாபெரும் மனிதர்கள் உங்கள் கைவிரல்களை அழுந்தப்பிடித்து அழைத்துப்போகும் வாழ்க்கைப் பயண ஒத்திகை; தங்கள் தோள்களில் உட்காரவைத்து உங்களுக்குக் காட்டும் புதிய உலகம்; தங்கள் வெற்றி ரகசியங்களையும், செய்த தவறுகளையும் பகிர்ந்துகொண்டு உங்களைப் பட்டை தீட்டும் பாசறை. அவர்கள் ஜெயித்திருந்தாலும், தோற்றிருந்தாலும், எழுந்திருந்தாலும், விழுந்திருந்தாலும், ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு பாடம்.

- ப்ரையன் ட்ரேசி, அமெரிக்கச் சுய முன்னேற்றப் பயிற்சியாளர்

வாருங்கள். இந்தியாவின் சில பிசினஸ் பிரபலங்களைச் சந்திப்போம்.

குஜராத் கிராமத்தின் ஒரு குக்கிராமத்தில் பள்ளி ஆசிரியர் மகனாகப் பிறந்த திருபாய் அம்பானிக்குக் கல்லூரிப் படிப்பைத் தொடரக் குடும்பத்தில் வசதி இல்லை. ஏடன் நாட்டுக்கு வேலைக்குப் போனார். ஓரளவு சேமிப்புடன் இந்தியா திரும்பினார். வெறும் 15,000 ரூபாய் முதலீட்டில் பிசினஸ் தொடங்கினார். பால்காரர்கள், தையல்காரர்கள் வசிக்கும் புலேஷ்வர் பகுதியில், 500 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு ரூம் குடியிருப்பு. அதில், திருபாய், அவர் தம்பி, மனைவி, இரண்டு குழந்தைகள் என ஐந்து பேர்.

இன்று, திருபாயின் மூத்த மகன் முகேஷ் வீடு மும்பையின் ஆடம்பரமான அல்ட்டாமவுண்ட் ரோடில், உயர்ந்து நிற்கும் அன்டிலியா என்னும் 27 மாடிக் கட்டடம். 550 அடி உயரம். நாலு லட்சம் சதுர அடி பரப்பு. மாடியில் மூன்று ஹெலிக்காப்டர்கள் ஏறி இறங்கும் ஹெலிப்பாட்கள். வீட்டுக்குள் நீச்சல் குளம், 168 கார்களை ஹாயாக நிறுத்தும் கார் பார்க். வீட்டுக் கார்களிலும் விருந்தாளிகள் கார்களிலும் கோளாறு வந்தால் ரிப்பேர் செய்ய ஒரு முழுத் தளம், உடற்பயிற்சி செய்ய இன்னொரு தளம், ஐம்பது பேர் ஜாலியாக உட்கார்ந்து சினிமா பார்க்கும் ஹோம் தியேட்டர். திருபாய் அமைத்த அஸ்திவாரம்!

இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தியின் அப்பா மைசூரில் பள்ளி ஆசிரியர். 9 குழந்தைகள். அரசினர் பள்ளியில் படிப்பு. ஸ்காலர்ஷிப் பணத்தில் பி.ஈ பட்டம். அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலை. 30 ஆம் வயதில் சாஃப்ட்ரானிக்ஸ் என்னும் கம்பெனி தொடங்கினார். நஷ்டம். ஒன்றரை வருடத்தில் கம்பெனியை மூடவேண்டிய கட்டாயம். வேலைக்குப் போனார். 5 வருடங்களுக்குப் பிறகு, 1981 இல், இன்ஃபோஸிஸ் தொடங்கினார். அப்போது, முதலீடு செய்ய அவரிடம் பணமே கிடையாது. மனைவி சுதா கொடுத்த பத்தாயிரம் ரூபாய்தான் கை கொடுத்தது.

பி.சி. முஸ்தஃபா கேரள மாநிலம் சென்னலோடு என்னும், குக்கிராமத்தில் 1974 இல் பிறந்தார். அரிக்கேன் விளக்கில் படிப்பு. ஆறாம் வகுப்பில் தோல்வி. படிப்பை விட்டுவிட்டுக் கூலி வேலைக்குப் போக முடிவெடுத்தார். கணித ஆசிரியர் மாத்யூ வற்புறுத்தலால், படிப்பைத் தொடர்ந்தார். இன்ஜினீயரிங், பெங்களூரு ஐ.ஐ.எம் இல் எம்.பி.ஏ எனப் படிப்பு தொடர்ந்தது. பல நிறுவனங்களில் பணியாற்றியபின், 2006 இல், 25,000 ரூபாய் முதலீட்டில் இட்லி, தோசை மாவு விற்பனை தொடங்கினார். இன்று iD Fresh Foods கம்பெனியின் ஆண்டு விற்பனை 100 கோடிக்கும் அதிகம்.

பாரத்மாட்ரிமனி.காம். இதுவரை சுமார் 30 லட்சம் திருமணங்கள் நடக்கப் பாலமாக இருந்திருக்கிறது. இந்த வெற்றிக் கதைக்கு வித்திட்ட முருகவேல் ஜானகிராமனின் அப்பா சென்னைத் துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி. 16 ஒண்டுக் குடித்தனங்களுக்கு நடுவில் ஒரே ரூம் வீடு. அங்கே பிறந்து வளர்ந்த முருகவேல் ஜானகிராமனின் இன்றைய வெற்றி, அறிவு, உழைப்பு, வித்தியாசச் சிந்தனை ஆகியவற்றால் உருவாக்கிய சுயமுயற்சி ராஜபாட்டை.

திருப்பூர் கோவை ரூட்டில் இருக்கும் முருகம்பாளையம் கிராமம். ரயில்வேயில் வேலை பார்த்த விநாயகப்பக் கவுண்டரின் மகன் பழனிச்சாமி. எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கமுடியாத குடும்ப நிலை. அண்ணனும், அவரும் திருப்பூரில் பனியன் கம்பெனி யில் வேலைக்குச் சேர்ந்தார்கள். தினச் சம்பளம் மூன்று ரூபாய். நான்கு வருட அனுபவம். 1976. ஆயிரம் ரூபாய் முதலீட்டில், ஒரே ஒரு பழைய தையல் மெஷினோடு தொடங்கினார்கள். இன்று ஜே.வி. குழுமத்தில் 5 நிறுவனங்கள், 1,000 தொழிலாளிகள். பின்னலாடைகள், பருத்தி நூல், எலாஸ்டிக் டேப்கள் தயாரிப்பு. விற்பனை 250 கோடிக்கும் அதிகம்.

1950 காலகட்டம். கோயம்பத்தூர். 11 வயது சின்னசாமி, 9 வயதுத் தம்பி நடராஜன். குடும்ப வறுமை. படிப்பை நிறுத்தவேண்டிய கட்டாயம். ஜூஸ் கடையில் வேலைக்குப் போனார்கள். பல வருடங்கள் ஓடின. இருவருக்கும் டெக்ஸ்டைல் மில்லில் வேலை கிடைத்தது. பிசினஸ் தொடங்கினார்கள். முதல் கடை எது தெரியுமா? தள்ளு வண்டி! வேலை நேரம் முடிந்து வந்தவுடன் காய்கறி வியாபாரம். 1965. தள்ளுவண்டி சின்னக் கடையாக வளர்ந்தது. இன்று, கோவை பழமுதிர் நிலையத்துக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய பகுதிகளில் 46 கிளைகள், பல நூறு கோடி ரூபாய் வியாபாரம்.

இவர்களில் ஒருவர்கூட பிசினஸ் குடும்பங்களிலோ, செல்வச் செழிப்பிலோ பிறக்கவில்லை, வளரவில்லை. இவர்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் ஜூஜூபி. தொழில் தொடங்காததற்குக் “காரணங்கள்” என்று நீங்கள் நினைப்பவையெல்லாம் வெறும் சாக்குப்போக்குகள், பயங்கள்.

முதலாளி ஆகவேண்டுமா? முதலில் இந்த பயங்களை நீங்கள் ஜெயிக்க வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, தண்ணீரில் குதித்தால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் என்று கண்ணை மூடிக்கொண்டு பிசினஸ் ஆரம்பிக்கவேண்டும். இது ரிஸ்க்கான வழி. உங்கள் வாழ்க்கையோடு நீங்கள் விளையாடலாமா? கூடாது, கூடவே கூடாது. ஆகவே, அடுத்த வழி, புத்தி சாலித்தனமான வழி. பிசினஸ் நடத்தி யவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது. இதற்கு என்ன செய்யவேண்டும்? உலக மகா பிசினஸ்மேன்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கவேண்டும்.

படிக்கப் படிக்க, ``என்னால் முடியும்” என்னும் நம்பிக்கை நம் மனங்களில் தோன்றும், தொழில் முனைவராகும் பொறி வெறியாகும், கனவுகள் நனவாகும், வானம் வசப்படும்.

உலக நாடுகளில் பல லட்சம் பிசினஸ்மேன்கள். இவர்களுள், நமக்கு வழிகாட்டும் முன்னோடிகள் யார்? உலக முன்னணி நிர்வாகக் கல்லூரியான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர்கள் அந்தோனி மேயோ, நித்தின் நோரியா இருவரும் ஆயிரத்துக்கும் அதிகமான பிசினஸ்மேன்களின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ச்சி செய்தார்கள். 7,000 மேனேஜர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். இந்த அடிப்படையில், தங்களுடைய In Their Time The Greatest Business Leaders of the Twentieth Century என்னும் புத்தகத்தில் 100 பிசினஸ்மேன்களைத் தலை சிறந்தவர்களாக அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.

இது தவிர, Entrepreneur, Fast Company, Forbes, Fortune, Inc., Success பத்திரிகைகளும், யாஹூ இணையதளமும் உலகின் மாபெரும் பிசினஸ்மேன்களை அணிவகுக்க வைத்திருக்கிறார்கள்.

ஹார்வர்ட் ஆராய்ச்சியிலும், இந்தப் பட்டியல்களிலும் இடம் கொடுக்க எந்தத் தகுதிகளை அளவுகோல்களாகப் பயன்படுத்தினார்கள்? விற்பனையிலும், லாபத்திலும் குவித்த கோடிகள், பூஜ்ஜி யத்திலிருந்து வர்த்தக சாம்ராஜ் ஜியங்கள் உருவாக்கிய அசுரச் சாதனை ஆகியவற்றைத் தாண்டி, இவர்கள் தொடங்கிய பிசினஸ்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், இவர்களின் அனுபவங்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் சென்றிருக்கும் பாடம் ஆகியவை.

இந்த எட்டு பட்டியல்களில் சிலரது அனுபவங்கள் இந்தியப் பின்புலத்துக்குப் பொருந்தாதவை. இவர்களை விடுத்திருக்கிறேன்; பல இந்தியர்களை, தமிழர்களைச் சேர்த்திருக்கிறேன். நமக்குப் பொருந்தும் ஒரு புதிய பிசினஸ் முன்னோடிகள் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த இந்த பிசினஸ் மாமேதைகளை உங்கள் முன்னால் அழைத்துவருகிறேன். இவர்களைச் சந்தியுங்கள். இவர்களின் சாதனைகளை அசை போடுங்கள். உத்தரவாதம் தருகிறேன். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம்.

slvmoorthy@gmail.com

 

http://tamil.thehindu.com/business/தொழில்-முன்னோடிகள்-எல்லோர்க்கும்-வழிகாட்ட-இவர்கள்-இதோ/article8671268.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

தொழில் முன்னோடிகள்: பெஞ்சமின் பிராங்ளின் (1706 - 1790)

sa_2894020f.jpg
 

மரணத்துக்குப் பின்னும் மக்கள் உங்களை மறக்காமலிருக்க வேண்டுமா? படிக்கத் தகுதியான புத்தகங்கள் எழுதுங்கள். அல்லது, புத்தகங்களில் எழுதப்படத் தகுதியான காரியங்கள் செய்யுங்கள்.

- பெஞ்சமின் பிராங்ளின்

பதினேழாம் நூற்றாண்டு. அமெரிக் காவின் பாஸ்டன் நகரம். ஜோசையா என்பவர் தன் வீட்டில் குடிசைத் தொழிலாக சோப், மெழுகுவர்த்திகள் தயாரித்து விற்று வாழ்க்கையை ஓட்டி வந்தார். வருமானம் குறைவானாலும், வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. இரண்டு மனைவிகள், பதினேழு குழந்தைகள். பெஞ்சமின் பதினைந்தாவது குழந்தை. எட்டு வயதில் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார்கள். பையனுக்குக் கற்பூர புத்தி. எழுதப் படிக்க உடனேயே கற்றுக்கொண்டான். படிப்பில் அபார ஆர்வம். துண்டுக் காகிதம் கிடைத்தாலும், படித்து முடிக்காமல் விடமாட்டான். ஆனால், இத்தனை சூட்டிகையான சிறுவனுக்கு ஏனோ, கணிதம் மட்டும் மூளையில் ஏறவேயில்லை.

பையன் படித்து என்ன கிழித்து விடப்போகிறான்?” அப்பா படிப்பை நிறுத்தினார். தன் சோப், மெழுகுவர்த்தி தயாரிப்பில் உதவியாளாக வைத்துக் கொண்டார்.

பெஞ்சமினுக்கு பனிரெண்டு வயதானது. அண்ணன் ஜேம்ஸ் நடத்திய அச்சகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்க்கப்பட்டான். அச்சகத்தில் பிரசுரமா கும் துண்டுப் பிரசுரங்கள், நோட்டீஸ்கள் அத்தனையையும் படிப்பான். அடுத்தபடி யாக வீட்டில் இருந்த புத்தகங்கள். அறிவுத்தாகம் தீரவில்லை. ஊரில் இருந்த துறைமுகத்துக்கு அடிக்கடி போவான். அங்கே வரும் பயணிகள், மாலுமிகளிடம் அவர்கள் படித்து முடித்த பழைய புத்தகங்களைக் கெஞ்சிக் கேட்டு வாங்குவான். புரிந்தாலும், புரியாவிட்டாலும், தவம்போல் படித்து முடிப்பான். அச்சுக்கோர்க்கும், கட்டுரை கள் எழுதும் அளவுக்கு அவன் திறமை வளர்ந்தது. வீட்டில் அவனைப்பற்றி யாருமே கவலைப்படவில்லை. ஆகவே, பெஞ்சமினின் திறமைகள் பற்றி யாருக்குமே தெரியாது.

1721. பெஞ்சமினுக்கு வயது 15. பாஸ்டன் நகரிலிருந்து அப்போது இரண்டு நாளிதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. அவை வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை மறுவெளியீடு மட்டுமே செய்துகொண்டிருந்தன. பெஞ்சமினின் அண்ணன் படா சாமர்த்தியசாலி. உள்ளூர்ச் செய்திகளை வெளியிடும் செய்தித்தாள் தொடங்கினார். விற்பனை சூடு பிடித்தது.

பெஞ்சமின், அண்ணனின் இதழில் கட்டுரைகள் எழுத விரும்பினார். அண்ணனுக்கோ, தம்பி பள்ளிக்கூடமே போகாத அடிமுட்டாள் என்று நினைப்பு. ஆகவே, தன் படைப்புகளைப் படிக்காமலேயே, குப்பைக் கூடைக்குக் கடாசி விடுவார் என்று பெஞ்சமினுக்கு பயம். ஆகவே, Silence DoGood என்னும் புனைபெயரில் எழுதத் தொடங்கினார். கட்டுரையை எழுதி, இரவில் அச்சகத்தின் கதவுக்கு வெளியே வைத்துவிடுவார். அண்ணன் படித்தார், ரசித்தார். யார் எழுதினால் அவருக்கென்ன? நல்ல கட்டுரை ஓசிக்குக் கிடைக்கிறது. தொடர்ந்து வெளியிட்டார். பெண்ணுரிமைக்காக ஒரு பெண் வாதாடும் பாணியில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளுக்கு வாசகர்களிடம் எக்கச்செக்க வரவேற்பு.

ஒரு நாள். பெஞ்சமினின் குட்டு வெளிப்பட்டது. அண்ணன் என்ன செய்தார்? கட்டிப் பிடித்து, உச்சி மோர்ந்தாரா? இல்லை. இல்லை. பொறாமையால் கொதித்தார். திட்டினார், அடித்தார், உதைத்தார். உடலிலும், மனதிலும் தாங்கமுடியாத வலிகள்.

பெஞ்சமினுக்குப் பதினேழு வயதானது. அண்ணன் எப்போதுமே தன்னை அடிமையாகத்தான் நடத்துவார், சிறகு விரிக்க அனுமதிக்கமாட்டார் என்று தெளிவாகத் தெரிந்தது. அப்பாவிடம் முறையிட்டார். அவர் தலையிட மறுத்துவிட்டார். தன் தலைவிதியைத் தானேதான் நிர்ணயித்துக்கொள்ளவேண்டும் என்று பெஞ்சமினுக்குத் தெரிந்தது. பாஸ்டன் நகரில் இருந்த பிற அச்சகங்களில் வேலை தேடினார். பலர் வேலை கொடுக்க தயாராக இருந்தாலும், அண்ணன் அந்த வேலைகளை கிடைக்க விடாமல் செய்தார்.

வீட்டிலேயே இருந்தால் தன் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்று பெஞ்சமினுக்குத் தெரிந்தது. வீட்டைவிட்டு ஓடிப்போக முடிவு செய்தார். எங்கே போவது? என்ன செய்வது? குடும்பம் தவிர அவருக்கு யாரையும் தெரியாது, படிப்பு கிடையாது, அச்சுப்பணி தவிர வேறு தொழில் தெரியாது.

பிலடெல்பியா நகரம் வந்து சேர்ந்தார். ஒரு அச்சகத்தில் உதவியாளர் வேலை கிடைத்தது. சில வருடங்களில் சொந்த அச்சகம் தொடங்கத் திட்டமிட்டார். ஊருக்குப் போய், அப்பாவிடம் மூலதனத்துக்குப் பணம் கடனாகக் கேட்டார். அப்பா மறுத்துவிட்டார்.

பெஞ்சமினுக்கு வயது இருபது. நெஞ்சில் இப்போது ஒரு வெறி தன் அண்ணன் முன்னால், அப்பா முன்னால் வாழ்ந்து காட்டவேண்டும், ஏறும் இடமெல்லாம் எவரெஸ்ட் ஆக்கவேண் டும். என்ன செய்யலாம்? அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் 13 நற்குணங்கள் தேவை என்று பட்டியலிட்டார். (பெட்டி)

பலர் திட்டம் போடுவதில் கெட்டிக்காரர்கள். ஆனால், கனவுகளை நனவாக்க அர்ப்பணிப்பு வேண்டும், கட்டுப்பாடு வேண்டும், கடும் உழைப்பு வேண்டும். பெஞ்சமின் என்ன செய்தார் தெரியுமா? ஒரு கையளவு நோட்டுப் புத்தகம். அதில் ஒவ்வொரு “நற்குணத்துக்கும்” ஒவ்வொரு பக்கம். அதில் வாரத்தின் ஒவ்வொரு நாளும், குறிக்கோளை எட்டுவதில் செய்த சாதனைகள், சறுக்கல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வார். இவற்றை அடிக்கடி படித்துப் பார்த்துத் தன் பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் கொண்டுவருவார். இந்தக் கடும் முயற்சியால் விரைவில் இந்தப் பதின்மூன்று நற்குணங்களும், பெஞ்சமின் ஆளுமையின் அம்சங்களாயின, அவருடைய . ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்தன.

பெஞ்சமின் கடன் வாங்கினார். சொந்த அச்சகம் தொடங்கினார். தொழில் நேர்த்தி, சகாய விலை. குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கும் வாக்குத் தவறாமை ஆகியவற்றால் ஆர்டர்கள் குவிந்தன.

1732. புதிதாக என்ன செய்யலாம் என்று பெஞ்சமினுக்கு எப்போதும் ஒரு துடிப்பு. வருடாந்தர பஞ்சாங்கம் வெளியிட முடிவு செய்தார். அன்றைய பஞ்சாங்கங்களில் நாள்காட்டி, விவசாயிகள் விதை விதைக்க ஏற்ற நாட்கள், பருவநிலை விவரங்கள் ஆகிய சமாச்சாரங்கள் இருந்தன. இவற்றைத் தாண்டி, சுய முன்னேற்ற அம்சங்கள், பழமொழிகள், கவிதைகள், கணித விடுகதைகள், சமையல் குறிப்புகள், ராசிபலன் எனப் பல புதுமைகளைச் சேர்த்தார். அடுத்த 27 வருடங்களுக்கு, பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் விற்பனையான புத்தகம், பெஞ்சமினின்Poor Richard's Almanac.

1748. பெஞ்சமினுக்கு 42 வயது. தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தார். பணம் கொட்டும் தொழில். வசதிகள். அன்பான மனைவி, குழந்தைகள், சமுதாயத்தில் மதிப்பு. மாபெரும் சபையினில் நடந்தால் மலையென வந்து குவியும் மாலைகள்.......சாதாரண மனிதனுக்குத் திருப்தி வரும். இந்தச் சகலகலா வல்லவர் மனதிலோ, தன்னலம் தாண்டிப் பொதுநலச் சேவையில் முத்திரை பதிக்கும் ஆசைகள், பேராசைகள்.

வெற்றிகரமான தொழிலிலிருந்து விலகினார். பிலடெல்பியா நகரத்தில் நூலகம், பொது மருத்துவமனை, தீயணைப்புத் துறை, ஆயுட்காப்பீட்டு நிறுவனம், கல்வி நிறுவனம் ஆகியவற்றை மக்கள் ஆதரவைத் திரட்டி உருவாக்கினார்.

இந்தப் படிக்காத மேதைக்கு அறிவியல் ஆராய்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு. சோதனைகள் பல நடத்தினார். எரிபொருள் சிக்கனமான ஸ்டவ், இடிதாங்கி, கருவி, பைஃபோக்கல் மூக்குக் கண்ணாடி ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். ``தன் சுயநலத்துக்கு அல்ல, சமுதாய நன்மைக்கே” என்னும் உறுதியோடு, இந்தக் கருவிகளுக்குக் காப்புரிமை வாங்க மறுத்தார். இவற்றைத் தயாரிக்கும் உரிமையை அனைவரும் பயன்படுத்தும் இலவசச் சொத்தாக்கினார்.

1750 காலகட்டத்தில் அமெரிக்கா பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. விடுதலைப் போராட்டம் முளைவிடத் தொடங்கியிருந்தது. பெஞ்சமின் இதன் முன்னணி வீரர்களில் ஒருவரானார். இங்கிலாந்துடன் நடந்த பல பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றுச் சுதந்திர முழக்கமிட்டார். சுதந்திரப் பிரகடன வரைவுக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி, அமெரிக்க விடுதலைப் போருக்கு அவர்களிடம் ஆதரவும், நிதியுதவியும் வாங்கி வந்தார்.

அமெரிக்கா, தேசத் தந்தையராக எழுவரைக் கொண்டாடுகிறது. அவர்கள் பெஞ்சமின் பிராங்ளின், ஜார்ஜ் வாஷிங்டன், ஜான் ஆடம்ஸ், தாமஸ் ஜெஃபர்ஸன், ஜேம்ஸ் மாடிசன், அலெக்சாண்டர் ஹாமில்ட்டன், ஜேம்ஸ் மன்றோ. இந்த நன்றியின் அடையாளமாக, 1914 இல், 100 டாலர் கரென்சி நோட்டில் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் உருவப்படத்தோடு வெளியிட்டார்கள். 102 ஆண்டுகளாகத் தொடர்ந்து, இன்றைய 100 டாலர் நோட்டுகளிலும் பெஞ்சமின் உலா வருகிறார்.

பெஞ்சமின் அச்சக, பதிப்புத் தொழில்களில் மாபெரும் வெற்றிகள் கண்ட மாபெரும் பிசினஸ்மேன். ஆனால், இதையும் தாண்டி, ஒரு கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், அயல் நாட்டுத் தூதர், அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி, அமெரிக்காவின் தேசத் தந்தையர் எழுவரில் ஒருவர்.

பிசினஸ் தொடங்குபவர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் பெஞ்சமின் பிராங்ளின் சுய சரிதம். தமிழ் மொழிபெயர்ப்பிலும் கிடைக்கிறது.

முன்னேற்றத்துக்குத் தேவையான 13 நற்குணங்கள்

* உணவில் கட்டுப்பாடு

* தேவைப்படும்போது மட்டுமே பேசுதல்

* செய்யும் காரியங்களில் ஒழுங்குமுறை

* மன உறுதி முடிவெடுத்தல், அந்தத் தீர்மானங்களைச் செயல்படுத்துதல்

* சிக்கனம்

* கடும் உழைப்பு

* சொல்லிலும் செயலிலும் நேர்மை

* பாரபட்சமின்மை

* கருத்துகளில் மிதவாதம்

* சுத்தம்

* பதட்டமில்லா மனநிலை

* கற்பு

* தன்னடக்கம்

slvmoorthy@gmail.com

http://tamil.thehindu.com/business/தொழில்-முன்னோடிகள்-பெஞ்சமின்-பிராங்ளின்-1706-1790/article8727665.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

தொழில் முன்னோடிகள்: மாத்யூ போல்டன் (1728 1809)

poltan__2902673f.jpg
 

பதினெட்டாம் நூற்றாண்டின் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, மனித இனம் அதுவரை பத்தாயிரம் ஆண்டுகளாக கண்டிராத மாற்றத்தை, முன்னேற்றத்தை கொண்டு வந்தது. அந்த புதுமை ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த, மாத்யூ போல்டன் தயாரித்த நீராவி இயந்திரம்.

- வில்லியம் ரோஸென், அறிவியல் எழுத்தாளர்.

அமாவாசை ராத்திரி. கரண்ட் கட். எங்கும் நிசப்தம். பக்கத்து ஜங்ஷன் மணிக்கூண்டுக் கடிகாரம் பன்னிரெண்டு அடித்து அமைதியைச் சில விநாடி களுக்குக் கலைக்கிறது. காஞ்சனா-3 பிசாசு புளியமர உச்சியிலிருந்து இ-ற-ங்-கி வருகிறது. ஏதோ அப்ரகடப்ரா உச்சரிக்கிறது. இன்டர்நெட், இணைய தளம், ஈ மெயில், மொபைல் ஃபோன் உலகத்திலிருந்து காணாமல் போச்.....

ஐயோ, ஐயோ, என்ன செய்வீர்கள்? இன்டர்நெட், இணையதளம், ஈ மெயில், மொபைல் ஃபோன் இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியவில்லையா? 1980 களுக்கு முன்னால் நம் அம்மா, அப்பாக்கள் இவை ஒன்றுமே இல்லாத வாழ்க்கைதான் நடத்தினர்கள் ப்ரோ.

இந்த மாற்றங்களைத் தகவல் செய்தித் துறைகளின் புரட்சிக்காலம் அல்லது அறிவுப் புரட்சிக் காலம் என்று அழைக்கிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டின் மாற்றம். 1760 முதல் 1840 வரையிலான காலகட்டத்திலும் இப்படியொரு புரட்சி நடந்தது. அது தொழில் புரட்சி (Industrial Revolution) என்று அழைக்கப்படுகிறது.

வரலாற்றின் ஆரம்ப காலங்களில், தொழில் உற்பத்தியில் இயந்திரங்களை இயக்கும் சக்திகளாக மனிதர்கள், குதிரைகள், மாடுகள் உழைப்பு ஆகியவைதாம் பயன்பட்டன. இதனால், அனைத்துமே சிறிய குடிசைத் தொழில்களாக மட்டுமே இருந்தன. 1755 இல், ஜேம்ஸ் வாட் வடிவமைத்த நீராவி இயந்திரம்தான் மனித சக்தியையும், மற்ற மிருக சக்திகளையும் தாண்டிய நீராவி சக்தியை உலகத்துக்குக் காட்டி யது. குறைந்த மனிதர்கள், நிறைந்த இயந்திரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தொழிற்சாலைகள் உருவாகின. இந்த மாற்றம்தான் தொழிற் புரட்சி. இதற்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட்தான் தொழிற்புரட்சியின் தந்தை என்று நாம் போற்றிக் கொண்டாடுகிறோம்.

ஜேம்ஸ் வாட் வெற்றிக்கு மூன்று முக்கிய காரணங்கள் அவருடைய அறிவியல் மூளை, கண்டுபிடிப்புத் திறமை, மாத்யூ போல்டன் என்னும் தொழில் அதிபர் தந்த பக்கபலம்.

யார் இந்த மாத்யூ போல்டன்?

1728 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரத்தில் பிறந்தார். அவருடைய அப்பா வெள்ளி சாமான்கள் தயாரிக்கும் சின்னப் பட்டறை வைத்திருந்தார். பொம்மைகள், மூக்குப் பொடி டப்பாக்கள், ஜாதிக்காய் உடைக்கும் கருவிகள் தயாரித்தார். மாத்யூ உள்ளூர் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றார். விஞ்ஞானத்திலும், கணிதத்திலும் அபாரத் திறமை காட்டினார். ஆனால், ஆங்கிலப் பாடம் அவருக்குக் கசந்தது. அதுவும், எழுதத் தொடங்கினால், பிழைகளோ பிழைகள். தன் 14 ஆம் வயதில் படிப்புக்குக் குட்பை சொல்லிவிட்டு அப்பாவின் பட்டறையில் உதவியாளராகச் சேர்ந்தார். புதிய புதிய பொருட்களைத் தயாரிக்கவேண்டும் என்னும் தேடல், துடிப்பு.

மாத்யூவுக்கு வயது 21. அப்பா தன் தொழிலில் மகனைப் பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டார். ஒரு பணக்கார வியாபாரியின் மகளை மகனுக்குத் திருமணம் செய்துவைத்தார். பத்து வருடங்கள் இப்படியே ஓடின. அப்பா மரணமடைந்தார். தொழில் மொத்தமும் மாத்யூ கைக்கு வந்தது. தொழிலை விரிவாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கினார்.

மாத்யூ பிரம்மாண்டக் கனவுகள் காண்பவர். தன் கனவுகளை நனவாக்கக் கொஞ்சமும் தயங்காமல் ரிஸ்க் எடுத்துச் செயலில் இறங்குபவர். அவரிடம் அப்போது சேமிப்பாக 1400 பவுண்ட் இருந்தது. (இன்றைய மதிப்பில் சுமார் 1,31,600 ரூபாய்.) அன்றைக்கு மிகப் பெரிய பணம். அதுவும், மாத்யூவின் முழுச் சேமிப்பு. அத்தனை பணத்தையும் தொழிலிலேயே முதலீடு செய்ய முடிவெடுத்தார். ``பேராசைக்காரன். அகலக்கால் வைக்கிறான்” என்று பலர் கேலி செய்தார்கள். தன் இலக்கில், போகும் பாதையில் தெளிவாக இருந்த மாத்யூ மனதில் கொஞ்சமும் சலனம் இல்லை. உறுதியோடு தொடர்ந்தார்.

13 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே, Soho Manufactory என்னும் தொழிற்சாலை தொடங்கினார். தன் முயற்சி கனகச்சிதமாக இருக்கவேண் டும் என்பதற்காக, ஒவ்வொரு சிறு அம்சத்திலும் சிரத்தை காட்டினார். அடுக்களை சாமான்கள், சாப்பாட்டுத் தட்டுகள், கத்தி, கரண்டி, நாணயங்கள், மெடல்கள் ஆகிய வெள்ளித் தயாரிப்பு களை அறிமுகம் செய்தார். இவற்றை வடிவமைக்கும் டிசைன் வல்லுநர்களைப் பணிக்கு எடுத்துக்கொண்டார். இவர் களின் கற்பனை சிறகடித்துப் பறக்க, ஊக்கமும், வசதிகளும் அளித்தார்.

அன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அடிப்படை வசதிகளே இல்லாத தொழிற்சாலைகள், குறைந்த சம்பளம், கணக்கே இல்லாத வேலை நேரம், இலக்கை எட்டாவிட்டால் தண்டனை, காரணமே இல்லாத வேலை நீக்கம், அடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். மாத்யூ கொண்டுவந்தார் புரட்சிகர மாற்றம் சுத்தமும், சுகாதாரமுமான தொழிற்சாலை, வேலை பார்க்க வசதியான லைட்டிங், திறமைக்கும், உழைப்புக்கும் மரியாதை, 12 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு மட்டுமே வேலை, காப்பீடு மூலமாகக் காயம்பட்ட ஊழியர்களுக்கு இலவச மருத்துவ வசதி.

தன் நிறுவனம் வேகமாக வளர்ச்சி காணவேண்டுமானால், இங்கிலாந்தில் மட்டும் விற்பனை செய்தால் போதாது என்று உணர்ந்த மாத்யூ விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்தார். இவர்கள் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப் பயணம் செய்தார்கள். ஆர்டர்கள் வாங்கி வந்தார்கள். புதிய தயாரிப்புப் பொருட்கள், கனகச்சிதமான தரம், நியாய விலை, மார்க்கெட்டிங் யுக்திகள், Soho Manufactory 1000 பேர் பணி புரியும் பிரம்மாண்டக் கம்பெனியாகக் கிடுகிடுவென வளர்ந்தது.

ஆனால் மாத்யூவுக்குத் திருப்தி வரவில்லை. தன் கம்பெனியை இன்னும், இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோகவேண்டும் என்னும் பசி, அகோரப் பசி. இந்தப் பசியைத் தீர்க்கும் வாய்ப்பு ஜேம்ஸ் வாட் வடிவில் வந்தது. நீராவி சக்தியால் இயங்கும் இயந்திரங்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் தண்ணீர் இறைக்கப் பயன்பட்டன. ஜேம்ஸ் வாட் என்னும் இளைஞர் இந்த நீராவி இன்ஜின்களில் சில வடிவமைப்பு மாற்றங்கள் செய்தார். செயல்திறன் ஆறு மடங்கு அதிகமானது. சுரங்கங்கள் தன் இன்ஜின்களை அள்ளிக்கொண்டு போவார்கள் என்று வாட் நினைத்தார். அதற்குக் காப்புரிமை வாங்கவேண்டும், சில இன்ஜின்களைத் தயாரித்துச் சுரங்கங்களில் பரிசோதனை ஓட்டங்கள் நடத்தித் தன் இயந்திரத்தின் சிறப்பை நிரூபிக்கவேண்டும் என்னும் நிதர்சனம் புரிந்தது. ஆனால், அதற்குத் தேவையான பணம் அவரிடம் இருக்கவில்லை.

வெறும் கையால் எப்படி முழம் போடுவது? இரும்புப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்திய டாக்டர் ரோபக் முன்வந்தார். ஆறு வருடங்களில் ஜேம்ஸ் வாட்டுக்கு நீராவி இயந்திரத்துக்கான காப்புரிமை கிடைத்தது. ஆனால், ஒரு சோகம். பணத்தைத் தண்ணீராகச் செலவழித்த டாக்டர் ரோபக் திவாலாகிவிட்டார். அவர் மாத்யூவிடம் 1,200 பவுண்ட்கள் கடன் வாங்கியிருந்தார். இதற்கு ஈடாக, நீராவி இயந்திர நிறுவனத்தின் பங்குகளை மாத்யூவிடம் தந்தார்.

நீராவி இயந்திரம் ஜெயிக்கும் குதிரை என்று மாத்யூ மனக்குறளி சொன்னது. போல்டன் அண்ட் வாட் என்னும் பெயரில் ஜேம்ஸ் வாட்டோடு சேர்ந்து பார்ட்னர்ஷிப் கம்பெனி தொடங்கினார். ஏராளமான முதலீட்டில் உற்பத்தி ஆரம்பம். வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றை ஜேம்ஸ் வாட், மார்க்கெட்டிங், முதலீடு ஆகியவற்றை மாத்யூ பார்த்துக்கொண்டார்கள். எரிசக்தியில் ஏற்படும் சேமிப்பைச் சுரங்க அதிபர்கள் உணர்ந்தார்கள். ஆர்டர்கள் கொட்டின.

ஒரு நாள், மாத்யூ மூளையில் மின்வெட்டு இங்கிலாந்தில் நெசவு ஆலைகள் அதிகம். அவர்கள் உற்பத் திக்கு அதிகச் சக்தி தேவை. அவர் களைப் புதிய நீராவி இயந்திரம் வாங்க வைத்தால்.....இந்த யுக்தி பலித்தது. வாங்கினார்கள். அடுத்து, பல்வேறு நாடு களுக்கு நாணயங்கள் செய்து தரும் பிசினஸ் தொடங்கினார்கள். மாத்யூ ஜேம்ஸ் வாட் கம்பெனிக்குப் பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்.

1800 - ஆம் ஆண்டில், தங்கள் கனவுகளை நிஜமாக்கிவிட்ட ஆத்ம திருப்தியோடு மாத்யூ, ஜேம்ஸ் வாட் இருவரும் நிர்வாகப் பொறுப்பைத் தங்கள் மகன்களிடம் ஒப்படைத்தார்கள், ஓய்வு பெற்றார்கள். அடுத்த 9 ஆண்டுகள் குடும்பத்தோடு நிம்மதியான வாழ்க்கை. மாத்யூ மறைந்தார். அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட ஒரு வாசகம்;

பிறர் திறமைகளை அடையாளம் கண்டவர்.

இந்த ஒரு குணம் மட்டும் இருந்தால் போதும். தொழிலில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் வெற்றி தேடிவரும்.

கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

* பிரம்மாண்டக் கனவுகள் கண்டு அவற்றைச் செயலாக்குதல்

* ரிஸ்க் எடுக்கும் குணம்

* ஜெயிக்கும் தயாரிப்புப் பொருட்களை அடையாளம் காணும் உள்ளுணர்வு

* தயாரிப்புப் பொருட்களுக்குப் புதுப் புது மார்க்கெட்களைக் கண்டுபிடிக்கும் தேடல்

* தொழில் வெற்றிக்குப் பணம் மட்டும் போதாது, ஊழியர்களின் திறமை, அர்ப்பணிப்பு, உழைப்பு ஆகியவை தேவை என்று உணர்ந்து அவர்களுக்குத் தந்த மதிப்பு

slvmoorthy@gmail.com

 

http://tamil.thehindu.com/business/தொழில்-முன்னோடிகள்-மாத்யூ-போல்டன்-1728-1809/article8755345.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.