Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறாத ரணம் - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்! 26 ஆண்டுகள்!!

Featured Replies

ஆறாத ரணம் - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்! 26 ஆண்டுகள்!!

 


கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. 

செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது. 

என்ன நடந்தது?

1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.

வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். 

வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர். பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (UTHR) நேரில் கண்ட சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தது.

"ஏழு நாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 55,000 அகதிகள் நிறைந்திருந்தனர். எட்டாம் நாள் வெள்ளைக் கொடியையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் வளாகத்தினுள் நுழைந்தனர். அவர்களுள் தமிழ் துணை இராணுவக் குழுவினரும், முஸ்லிம் ஊர்காவல்படையினரும் வந்திருந்தனர். யார் யார் இங்கு இருப்பதாக எம்மிடம் அவர்கள் கேட்டனர். வாழைச்சேனை ஆறுமுகத்தான் குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் நாம் எனப் பதிலளித்தோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேருந்துகள் வளாகத்துக்குள் வந்தன. எம்மை அவர்கள் வரிசையில் நிற்க வைத்து எம்மில் 138 இளைஞரை (இவ்வெண்ணிக்கை 158 ஆகப் பின்னர் திருத்தப்பட்டது[3]) தேர்ந்தெடுத்து பேருந்துகளினுள் ஏறச் சொன்னார்கள். உறவினர்களும் பெற்றோர்களும் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கதறினர். ஆனாலும் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் சேகரித்துள்ளோம். பின்னர் அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களைப் பற்றி விசாரித்தோம். ஆனாலும் அவர்கள் எவரையும் தாம் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் கூறினர்.”

மூடப்பட்ட அகதிமுகாம்
 
முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது. 

பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர். ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர்.

நீதி தராத அரச விசாரணை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிட்ணர் தலைமையில் மூன்று பேரடங்கிய சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார். 

எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின, கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 83 பேர் சாட்சியமளித்தனர். இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர். இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது. 

குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது. ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

ஆண்டுதோறும் நினைவு நாள்

158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள்  நடைபெற்று 26 வருடங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும். 

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135595/language/ta-IN/article.aspx

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இராணுவத்தால் அன்று நடந்தது என்ன…

5347_1473021384_PhototasticCollage-2016-09-04-22-34-41.jpg

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் வந்தாறுமூலை பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்கள் 158 பேர் சிங்களப் படைகளாலும் முஸ்லீம் காடையர்களாலும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த சிறிலங்காப் படையினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள்இ மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர். பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பல்கலைக்கழகத்திற்குள் இரண்டு போருந்துகளில் சென்ற சிறிலங்காப் படையினரும் முஸ்லீம் ஒட்டுக்குழுவினரும் அங்கிருந்த 158 தமிழ் இளைஞர்களை கைது செய்து சென்று வெட்டியும் சுட்டும் தீயிட்டு கொழுத்தியும் படுகொலை செய்தனர்

சிங்கள, முஸ்லீம் காடையர்களின் இந்த படுகொலை வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட மக்களின் 24ம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. “பட்டியலிடப்பட்ட படு கொலைகளும் கொடுமைகளும் எம்மின வாழ்வியலை வலி கொள்ளச் செய்தாலும் தமது உரிமைகளுக்காய் தமிழினம் உயிர்பெறும்”

5347_1473021384_East-US_DaTh-01.jpg

http://battinaatham.com/description.php?art=5347

  • தொடங்கியவர்

இராணுவம் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை – இரா.துரைரத்தினம்

plot mohan

கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்கள் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் ஆகியன பிரகடனப்படுத்தி இருந்தன.

1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் முஸ்லீம் பயங்கரவாத குழுக்களும் வகைதொகை இன்றி படுகொலைகளை நடத்தி வந்தன.
கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் உச்சக்கட்ட படுகொலையாக கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலை கருதப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்த 158 இளைஞர்கள் இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
றிசாட் டயஸ் அல்லது கப்டன் முனாஸ் என்று அழைக்கப்படும் இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இவர்களை 11 பேருந்தில் கொண்டு சென்றனர்.
1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்தனர்.

சம்பவ தினம் காலை 6மணிக்கு முன்னரே அகதி முகமை இராணுவத்தினரும் புளொட் இயக்கத்தினரும் முஸ்லீம் ஜிகாத் குழுக்களும் சுற்றிவளைத்திருந்தன.
சம்பவ தினம் கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் களுவாராச்சி தலைமையிலான இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளான கப்டன் முனாஸ் என அழைக்கப்படும் றிச்சட் டயஸ் கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்தனர். plot mohan

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ஜெயசிங்கம், கலாநிதி சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர். அகதி முகாமுக்குள் நுழைந்த இவர்கள் தம்மை யார் என அறிமுப்படுத்தி கொண்டதாக அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான கலாநிதி ஜெயசிங்கம் தெரிவித்திருந்தார்.

இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேர் இராணுவ உடையுடன் கதிரையில் அமர்த்தப்பட்டிருற்தனர். இவர்களுக்கு பின்னல் ஏறாவூரைச்சேர்ந்த 7 முஸ்லீம்கள் நின்றனர். ஆண்கள் அனைவரும் வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டனர். 12வயதிருந்து 25வயதுடையவர்கள் முதலாவது வரிசையிலும் 26வயதிலிருந்து 40வயதுவரையானவர்கள் இரண்டாவது வரிசையிலும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது வரிசையிலும் நிறுத்தப்பட்டனர்.

இவர்கள் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப்பட்ட போது அவர்கள் தலைமை ஆட்டினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று தலையாட்டிகளின் பின்னால் நின்ற முஸ்லீம்களும் சிலரை காட்டினர்.

இவ்வாறு தலையாட்டிகளால் அல்லது முஸ்லீம்களால் காட்டப்பட்ட 158பேர் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு அப்போது இராணுவ தளபதியாக இருந்த ஹரி சில்வா சென்றிருந்தார். அப்போது அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற 158பேரின் நிலமை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி 158பேரும் குற்றவாளிகள் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் பற்றி இனி பேசக்கூடாது என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார்.

இதன் பின்னர் செப்டம்பர் 23ஆம் திகதியும் அங்கு வந்த இராணுவத்தினர் மேலும் 16 இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் உட்பட நேரில் கண்ட சாட்சிகள் 40பேர் சாட்சியமளித்தனர்.

இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம் திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத் குழுவும் பதில் கூற வேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமை நிர்வாகித்து வந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி சிவலிங்கம், கலாநிதி ஜெயசிங்கம் ஆகியோரில் இன்று கலாநிதி ஜெயசிங்கம் மட்டுமே வாழும் சாட்சியாக உள்ளார். தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருக்கும் ஜெயசிங்கம் இச்சம்பவம் பற்றி 1996ஆம் ஆண்டு பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் 2004ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்தார்.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 26வருடங்கள் கடந்து விட்ட போதிலும் காணாமல் போனவர்கள் அங்கிருக்கிறார்கள், இங்கிருக்கிறார்கள் என அலைந்து திரியும் அவலமே தொடர்கிறது. உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கலாநிதி ஜெயசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக சம்பவம் நடந்து சரியாக நான்கு தினங்களின் பின்னர் 1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது.

சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவத்திலும் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல் படை என்பனவும் சம்பந்தப்பட்டிருந்ததாக அக்கிராமமக்கள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகள் ஒருவயதிற்கு குறைந்தவர்கள். எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்ட சிவகுமார் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.

சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் பற்றி அக்கிராமத்தை சேர்ந்த ஆசிரியரான சிவக்கொழுந்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.
இக்கிராமத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து வீடு வீடாக சென்று அனைவரையும் இராணுவ முகாமுக்கு வருமாறு உத்தரவிட்டனர். இராணுவத்தினருடன் புளொட் மோகன் தலைமையில் புளொட் இயக்கத்தினரும் ஏறாவூரை சேர்ந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும் ஆயுதங்களுடன் வந்திருந்தனர்.

இராணுவ சுற்றிவளைப்பிலிருந்து தப்பி காட்டிற்குள் தான் ஒளித்திருந்ததாகவும் இரவு 7மணிக்கு பின்னர் இராணுவ முகாமிலிருந்து அவலக்குரல்கள் கேட்டதாகவும் ஆசிரியர் சிவக்கொழுந்து தெரிவித்தார். இந்த அவலக்குரல்கள் இரவிரவாக கேட்டன. நள்ளிரவுக்கு பின்னர் இராணுவ முகாமுக்கு பின்பக்கத்தில் தீச்சுவாலை தெரிந்ததாகவும் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிவக்கொழுந்து தெரிவித்திருந்தார்.
இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.

சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இக்காலப்பகுதியில் சுமார் 2600பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1990ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் மட்டுமன்றி கைது செய்யப்பட்டு ரயரில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களும் அதிகமாகும். 1990ஆம் ஆண்டு யூலை மாதத்திற்கு பின்னர் மட்டக்களப்பு புதுப்பாலத்தை அண்டிய வாவிக்கரைகளில் தினமும் ரயரில் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.

மட்டக்களப்பு பற்பொடி கொம்பனி என அழைக்கப்பட்ட இராணுவ புலானாய்வு பிரிவினரின் முகாமில் கப்டன் முனாஸ், மற்றும் புளொட் மோகன் இருந்தனர். இவர்களால் கைது செய்யப்படும் அப்பாவி பொதுமக்கள் சித்திரவதையின் பின்னர் உயிருடன் கழுத்தில் ரயரை போட்டு எரிக்கும் சம்பவங்கள் தினசரி நடந்தன. சடலங்கள் எரிந்த நிலையில் அரைகுறை உயிருடனும் காணப்படும்.

மிகப்பெரிய இனப்படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் நடந்த அக்காலத்தை மறக்க முடியாது. இக்கொலைகளை இராணுவத்தினருடன் சேர்ந்து புளொட் போன்ற தமிழ் இயக்கங்களும் செய்தன.

புளொட் போன்ற தமிழ் இயக்கங்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்றன. கிழக்கில் நடந்த படுகொலைகளில் இந்த தமிழ் இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு இராணுவம் மட்டுமன்றி இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் இயக்கங்களும் சம்பந்தப்பட்டிருந்தன என்பதை பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிவலம் வரும் பலரின் கைகளில் இரத்தகறை படிந்திருக்கிறது என்பதை கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

– இரா.துரைரத்தினம்-

கிழக்கு பல்கலைக்கழக படுகொலை 1

கிழக்கு பல்கலைக்கழக படுகொலை

http://www.thinakkathir.com/?p=66245

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.