Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைப்பார்வை : அர்ஜுன் ரெட்டி (தெலுங்கு) சமகாலத்தின் ‘தேவதாஸ்’

Featured Replies

01chrcjarjunreddy%201

சு

ட்டுவிரல் அசைவில், ரயிலை வந்தவழியே திருப்பி அனுப்பும் மகா கனம் பொருந்திய கதாநாயகர்களைக் கொண்டது தெலுங்கு சினிமா. பல நேரங்களில் அவர்களது அறிமுகக் காட்சியில், காய்ந்த சருகுகளை அள்ளியிறைத்தபடி எங்கிருந்தோ உள்நுழையும் சூறாவளிப் புயல், அவர்களது காலடியில் அமைதியடையும். உலகமே மாறினாலும் தெலுங்கு சினிமாவின் இதுபோன்ற பிரதாபங்கள் மட்டும் மாறாது என்று நம்பிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனக்கான அடையாளத்தை அது தேடத் தொடங்கியிருப்பதற்கு சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அசத்தலான சான்று.

கச்சாத்தனம் மிகுந்த கதாபாத்திரங்களைச் சமகால வாழ்க்கைமுறையிலிருந்து எழுதுவதும், அக்கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் திரிக்காமல் ஒளிக்காமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் துணிவுடன் சித்தரிப்பதும் ஓர் அசலான சினிமாவுக்கான அடிப்படைத் தேவை என்பதை ‘அர்ஜுன் ரெட்டி’ உணர்த்திவிடுகிறது.

அர்ஜுன் ரெட்டி எனும் கதநாயகனை, அவனது முரட்டுத் தனத்தை, திறமைகளை, உண்மையைப் பிடிவாதமாக நேசிக்கும் அவனது துணிவை, அவனது பலவீனங்களை, அவன் காதலை, பிரிவை, அதன்பின் தன்னை வருத்தி, சீரழித்துக்கொள்வதை, பின் அதிலிருந்து அவன் மீண்டெழுவதை எல்லாம் எவ்விதப் பாசாங்கும் இல்லாமல் நம் முன்னால் வைக்கிறது படம். அர்ஜுனின் வீழ்ச்சி, எழுச்சி மூலம் பார்வையாளர்கள் கற்றுக்கொள்ளவும் கைவிடவும் நிறையவே இருக்கின்றன படத்தில்.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தின் இரண்டாவது வாரிசான அர்ஜுன் மருத்துவக் கல்லூரி மாணவன். அங்கே பயில வரும் முதலாண்டு மாணவி ப்ரீத்தி மீது காதல் கொள்கிறான். கல்லூரி வளாகத்தின் முரட்டுக் காதல்போல் முதலில் தோற்றம் காட்டும் அர்ஜுன் – ப்ரீத்தி இடையிலான உறவு, ஒரு தற்காலிகப் பிரிவுக்குப்பின் நீண்ட முத்தங்களோடு தீவிரம் கொள்கிறது. மனங்கள் கலந்த பிறகு உடல்கள் கலப்பதும் அந்தக் காதலர்களுக்கு உறுத்தலாக இல்லை.

அந்த ஆண்டு கல்லூரி முடிந்ததும் ப்ரீத்தியை மணந்துகொள்ளும் விருப்பத்துடன் அவளது வீட்டுக்கு வருகிறான். ஆனால், ப்ரீத்தியின் தந்தையை அர்ஜுனால் சமாதானப்படுத்த முடியாமல் தோற்றுப்போகிறான். அவனது தோல்விக்குக் காதலர்களுக்கு இடையிலான நெருக்கமும் சாதியும் காரணமாகிவிடுகின்றன.

அதன் பிறகு நவயுகத்தின் ‘தேவதாஸ்’ ஆக மாறித் தன்னை வருத்திக்கொள்ளும் அர்ஜுன், எப்படி மீண்டு வருகிறான் என்பதற்கு அவனது உணர்வு நிலைகளையே ஆதாரங்களாகப் பயன்படுத்தி, யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாகக் காட்சிகளை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா.

முதன்மைக் கதாபாத்திரங்கள், அவர்களைச் சுற்றிச் சுழலும் துணைக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையில் முதல் காட்சியிலிருந்தே நம்பகத் தன்மையை உருவாக்கிவிடுவதால் பாடல் காட்சிகளின்போது கூடப் பார்வையாளர்கள் கதையோட்டத்திலிருந்து விலக முடியாத அதிசயத்தைப் படம் நிகழ்த்துகிறது.

முத்தக் காட்சிகளிலோ காதலர்கள் உடல்ரீதியாகத் தங்களைப் பகிர்ந்துகொள்ளும் நெருக்கமான காட்சிகளிலோ பார்வையாளர்கள் நெளியவில்லை. அர்ஜுன் -ப்ரீத்தியின் காதலுக்குள் சினிமாத்தனம் என்ற வாசனையை உள்நுழைத்துவிடாமல் நெருக்கமான காட்சிகளைச் சட்டெனக் கடந்துசெல்லும் காட்சிகளாக அமைத்திருக்கிறார் இயக்குநர். அதேநேரம் கதையில் நிகழும் சிறுசிறு திருப்பங்களாக அந்தக் காட்சிகளைக் கையாண்டிருக்கும் உத்தி, நவீன காதல் காவியமாக படம் உருக்கொள்ள உதவியிருக்கிறது.

குத்துப்பாடல், கொண்டாட்டப் பாடல் என எதுவும் இல்லாத இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் கதையின் போக்கைத் தாங்கிப்பிடிக்கும் திரைக்கதையின் ஒரு பகுதியாக மாறியிருக்கின்றன. கதையின் நாயகன் மருத்துவக் கல்லூரி மாணவன் என்பது, பின்னர் அறுவைசிகிச்சை நிபுணராக அவன் பணியாற்றுவது, மருத்துவராக அவன் தகுதியிழப்பது ஆகியவை கதையின் பின்புலத்துக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளன.

அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்குக் கூடுதல் காரணங்களாக அமைந்தவை நட்சத்திரத் தேர்வும் கலைஞர்களின் நடிப்பும். அடங்க மறுக்கும் கோபத்தை, அடங்கிய பின்னான அன்பு கலந்த கெஞ்சலை, உண்மைக்கும் சுதந்திரத்துக்கும் ஏங்கும் புதிய தலைமுறை இளைஞனாக கடைசிவரை இருக்க விரும்புவதை, அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது நடிப்புக்கு விருது அங்கீகாரங்கள் கிடைக்கலாம். தன்னை எதிர்த்துக்கொண்டேயிருக்கும் முரட்டு மாணவனை அடித்துவிட்டு, பின் அவனுக்கு சிகரெட் பற்றவைத்து சமாதானப்படுத்தி, “ ப்ரீத்தி என் உயிர்டா. அவளுக்கு உன்னால எதுவும் ஆகிடக் கூடாது. பிராமிஸ் பண்ணு” எனக் கைகள் நடுங்கியபடி அவனிடம் கெஞ்சுவது, ப்ரீத்தியின் வீட்டுக்கு முதல்முறை வரும்போது, மொட்டை மாடியில் அவளை முத்தமிடும் தருணத்தில் அங்கே எதிர்பாராமல் அவருடைய அப்பா வந்துவிட, அந்தக் காட்சியைக் கண்டுகொதித்தெழும் அவரிடம், “இது எங்கள் பிரைவேட் ஸ்பேஸ், இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்று குரலை உயர்த்தாமல் வாதிடுவது, பாட்டியின் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றும்போது, ஒருவர் “பாடிய பார்த்துத் தூக்குங்க” என்று சொல்ல, “ எவண்டா பாடின்னு சொன்னது..?” என்று சீறுவதுவரை எல்லாக் காட்சிகளிலும் அர்ஜுன் ரெட்டியாக வாழ்ந்திருக்கிறார்.

ப்ரீத்தியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டேவின் நடிப்பு மட்டுமல்ல அவரது தோற்றமும் தெலுங்கு சினிமா உருவாக்கி வைத்திருக்கும் ஜிகினா கதாநாயகியின் இலக்கணத்துக்குள் அடங்காத ஒன்று. துணைக் கதாபாத்திரங்களில், அர்ஜுனின் நண்பன் சிவாவாக நடித்திருக்கும் ராகுல் ராமகிருஷ்ணா, வாழ்வின் அசலான தருணங்களில் இயல்பாக எதிர்ப்படும் நகைச்சுவையை வசனங்களால் நிரப்பும்போது, அர்ஜுனின் வலிமிகுந்த போராட்டம் ‘அழுவாச்சி காவியமாக’ மாறாமல், அதை இலகுவானதாக மாற்றிவிடுகிறது.

அர்ஜுனின் பாட்டியாக நடித்திருக்கும் பழம்பெரும் கதாநாயகி ‘காதலிக்க நேரமில்லை’ காஞ்சனா, தலைமுறை இடைவெளியைக் களைந்தெறிந்த முதிர்ச்சியுடன் வருகிறார். அர்ஜுன் பிரிவால் தன்னை வருத்திக்கொண்டு துன்புறும்போது, அர்ஜுனின் நண்பன் சிவாவிடம் “Suffering is personal, Let him suffer” எனும்போது திரையரங்கில் ‘க்ளாஸ்” என்ற கமெண்ட் ஒலிக்கிறது. ‘அர்ஜுன் ரெட்டி’போன்ற படங்கள் அதிகரித்தால் தெலுங்கு சினிமா சீக்கிரமே தன் பழைய அடையாளத்தை உதறித்தள்ளும்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19594530.ece

 

அர்ஜுன் ரெட்டி - தவிர்க்கக் கூடாத சினிமா!

காதலைக் கடந்து வர முடியாமல் தன்னைத் தானே சீரழித்துக்கொள்ளும் மருத்துவரின் ரத்தமும் சதையுமான கதையே 'அர்ஜுன் ரெட்டி'.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் விஜய் தேவரகொண்டா. ஜூனியர் மாணவி ஷாலினியைக் காதலிக்கிறார். நாயகியின் அப்பா கோபிநாத் பட் இவர்கள் காதலை எதிர்க்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுன் போதையின் பாதையில் தன்னிலை மறக்கிறார். இந்த சூழலில் ஷாலினிக்கு திருமணம் நிச்சயமாகிறது. அதை அர்ஜுன் எப்படி எதிர்கொள்கிறார், ஷாலினி என்ன ஆகிறார், தன் மருத்துவப் பணியை அர்ஜுன் தொடர முடிகிறதா, வீழ்ச்சியிலிருந்து மீண்டாரா என்பது மீதிக் கதை.

வழக்கமும் பழக்கமுமான எல்லா மொழி சினிமாவிலும் வந்துவிட்ட ஒரு காதல்கதைதான். ஆனால், அதைக் காட்சிகளாலும், திரைக்கதையாலும் புத்துயிர் ஊட்டி காதலின் உன்னதத்தை கவித்துவமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சந்தீப் வங்கா. தெலுங்கு சினிமாவை அடுத்த கட்ட பாய்ச்சலுக்கும், பரிசோதனை முயற்சிகளுக்கும் அழைத்துச் செல்லும் காரணகர்த்தவாக சந்தீப்பின் பங்களிப்பு சிறப்பாய் அமைந்துள்ளது.

அசாதாரணமான நடிப்பால் அசர வைக்கிறார் விஜய் தேவரகொண்டா. கால்பந்து போட்டியில் வரும் சண்டைக்கு முரட்டுத்தனமாக பதிலடி கொடுப்பது, மெடிக்கல் கேம்ப் அறிவிப்பு என்று சொல்லி தன் காதலியை யாரும் பார்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுப்பது, கண்ணாடிக் குடுவையை உடைத்த பணிப்பெண்ணை தெரு முனைவரை ஓடி ஓடி விரட்டுவது, பாட்டியின் உடலை யார் பாடி என்று சொல்வதா என்று கோபத்துடன் கொந்தளிப்பது, 'தனிப்பட்ட பகுதியில் தான் நான் ஷாலினிக்கு முத்தம் தந்தேன். அந்த நேரத்தில் அவள் அப்பா வந்தது எப்படி சரியாகும்' என தந்தையிடம் விளக்குவது, 'உன் அக்காவுக்கு மட்டுமில்லை உனக்கும் முத்தம் கொடுத்தேன்னு உன் அப்பா கிட்ட சொல்லு' என முத்தக் காரணத்தை நியாயப்படுத்துவது என கதாநாயகனுக்கான அத்தனை குணநலன்களையும் எளிதில் கைவரப் பெற்றிருக்கிறார்.

விளையாட்டு மைதானத்தில் இன்னொரு மருத்துவக் கல்லூரி மாணவனான அமித்தை அர்ஜுன் ஓட ஓட விரட்டி தாக்குகிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஷாலினி மீது சாயம் பூசி டீஸ் பண்ணும் அமித்தை அடித்துவிட்டு, இனி ஷாலினியை எப்போதும் தொந்தரவு செய்யக் கூடாது என்று சத்தியம் வாங்கி, அவனுக்கு சிகரெட் பற்ற வைக்கிறார். அப்போதைய உரையாடலில் அழுகையும் காதலுமாகப் பேசும் போது தான் ஒரு பெரும் காதலன் என்பதை நிரூபிக்கிறார். முரட்டுத்தனம், கோபம், அழுகை, காதல் என தன் உணர்வுகளை மிகச் சரியாக கையாளும் அர்ஜுன், 'இன்னொருத்தன் மனைவியா இருந்தாலும் அது சதையும் ரத்தமும்தான். ஆனா, அப்பவும் இப்பவும் அவ என் காதலிதான்' என்று சொல்லும் இடத்தில் அர்ஜுன் கதாபாத்திரம் நிமிர்ந்து நிற்கிறது.

நாயகிக்கான வரையறைக்கு அப்பாற்பட்டவராக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடித்திருக்கும் ஷாலினியின் நடிப்பு அதன் இயல்பில் தனித்து நிற்கிறது. டீ குடிக்க வரும்போது நிகழும் பார்வை பரிமாற்றங்கள், எந்த எதிர்ப்பும் இல்லாமல் அர்ஜுனுடன் பயணிப்பது, சாயம் பூசி தனக்கு நேர்ந்த தொந்தரவை அழுகையாக வெளிப்படுத்துவது, பாதுகாப்பு உணர்ந்து அர்ஜுனுக்கு முத்தம் தருவது, அப்பாவால் காதலனுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க சமாதான முயற்சியில் கொஞ்சுவது, கெஞ்சுவது, நீண்ட பயணத்துக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஆகச் சிறந்த சிலாகிக்கக்கூடிய, இயல்பான நடிப்பு என்றால் ராகுல் ராமகிருஷ்ணாவின் நடிப்பைச் சொல்லலாம். கலாய்ப்பது, கவுன்டர் கொடுப்பது, நகைச்சுவை என்ற பெயரில் பன்ச் பேசுவது அல்லது பல்பு வாங்குவது என்பதை மட்டுமே செய்யாமல் யதார்த்தமான நண்பனாக கவர்கிறார்.

'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமாகி 'பாமா விஜயம்', 'சிவந்த மண்', 'சாந்தி நிலையம்', 'அதே கண்கள்' உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்த காஞ்சனாவின் மறுவருகை இந்தப் படத்தில் சாத்தியம் ஆகி இருக்கிறது. அர்ஜுனின் பாட்டியாக தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். அர்ஜுனின் செயல்களுக்கு ஆதரவு தருவது, காதலர்களை ஆசிர்வதிப்பது, காதல் குறித்த அர்ஜுனின் எண்ணங்களை அச்சரம் பிசகாமல் மற்றவர்களுக்கு விளக்குவது என அன்பின் பாட்டியாய் மிளிர்கிறார்.

போதையின் பாதையில் உச்சகட்டத்துக்கு சென்ற அர்ஜுனை தடுத்தாட்கொண்ட புவன், அர்ஜுனின் அண்ணனாக வரும் கமல் காமராஜு, ஷாலினியின் தந்தையாக வரும் கோபிநாத் பட், அர்ஜுனின் தந்தையாக வரும் சஞ்சய் ஸ்வரூப் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

மங்களூர், டேராடூன் அழகையும், மருத்துவக் கல்லூரியின் சூழலையும் ராஜூவின் கேமரா துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது. ரதனின் நுட்பமான இசை படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கிறது. இரண்டாம் பாதியின் சில இடங்களில் மட்டும் ஷஷாங்க் கத்தரி போட்டிருக்கலாம்.

சந்தீப் வங்கா படம் முழுக்க தன் ஆளுமையை செலுத்தி இருக்கிறார். கதாபாத்திரத் தேர்விலும், அவர்களிடம் நடிப்பின் முழுத் திறமையை வெளிக்கொணர்ந்ததிலும் வியக்க வைக்கிறார். நாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு சிக்கலானது. அதை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறார். தன் அவஸ்தையை இறக்கி வைக்க முடியாமல் அல்லல்படும் நாயகன் ஐஸ்கட்டியின் வழியாக தணிவது, மதுவும் கையுமாகவே மருத்துவப் பணி செய்வது, நர்ஸ் பார்க்கிறார் என்பதற்காக அவர் பக்கம் திரும்பி பேண்ட் ஜிப்பை கழற்றுவதாக சேட்டை செய்வது, ஆப்ரேஷன் முடிந்ததும் மருத்துவ உதவியாளர்கள் தம் பற்றவைப்பது என பதிவு செய்யத் தயங்கும் சங்கதிகளை எந்த சமரசமும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்.

நாயகன் மது அருந்திவிட்டு எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற கேள்வி நியாயமானது. அதற்கான பதிலையும், தண்டனையையும் இயக்குநர் நாயகனின் உண்மையான பதில் மூலமாக சொல்லி இருப்பது திரைக்கதை நம்பகத்தன்மை கொண்டதாக அமைகிறது. ஆனால், ஷாலினி கர்ப்பம் குறித்து சொல்லும் விளக்கம் மட்டும் வழக்கமான சினிமாவாகி விடுகிறது. நாயகனின் எண்ணப்படி அது சதையும் ரத்தமும்தான். ஆனால், அவள் என் காதலி என்றபடியே காரணம் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இதைத் தவிர்த்துப் பார்த்தாலும் பறந்து பறந்து அடிப்பது, பந்தாடுவது, அநியாயத்துக்கு வலிந்து குத்துப் பாடல்களை திணிப்பது, பன்ச் பேசியே பயமுறுத்துவது என்றில்லாமல் நேர்மையும் உண்மையும் மிகுந்த அசலான காதலை அப்படியே மாறாத் தன்மையுடன் கொடுத்ததில் 'அர்ஜுன் ரெட்டி' தவிர்க்கக் கூடாத சினிமா.

http://tamil.thehindu.com/cinema/south-cinema/article19595248.ece

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.