Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம்! - `102 Not Out' படம் எப்படி? #102Notout

Featured Replies

102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம்! - `102 Not Out' படம் எப்படி? #102Notout

 
 

பாலிவுட்டின் இரண்டு மூத்த நடிகர்கள் கதாநாயகர்கள். படத்தில் ஒருவர் 102 வயது தந்தை, மற்றொருவர் 75 வயது மகன். சண்டைக் காட்சிகள், கிளாமர் பாடல்கள், அசரடிக்கும் பிரமாண்டம் என பாலிவுட்டின் கிளிஷேக்கள் எதுவும் கிடையாது. கதாநாயகி... கிடையாது! ஏன், நடிகைகளே கிடையாது. மூன்றே மூன்று முக்கிய ஆண் கதாபாத்திரங்கள், இரண்டு மணி நேரத்திற்குள் அடங்கியிருக்கும் திரைக்கதை. ஆனாலும், நம்மை நெகிழச் செய்து, திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கடத்தத் தவறவில்லை, `102 Not Out' திரைப்படம்.

102 Not Out

102 வயதாகிவிட்ட தத்தாத்ரேயா வக்காரியா (அமிதாப் பச்சன்), தன் 75 வயது மகனான பாபுலால் வக்காரியாவுடன் (ரிஷி கபூர்) வசிக்கிறார். பேரன் வழக்கம்போல அமெரிக்காவில் செட்டில்! மகன் ரிஷி கபூர் ரூல்ஸ் ராமானுஜம் என்றால், அப்பா அமிதாப் அடாவடி ஆள். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷி கபூர் டிராவிட் என்றால், அமிதாப்தான் சேவாக். அமிதாப்பிற்கு 118 வயது வரை உயிர் வாழ்ந்து உலக சாதனை படைத்த சீனாக்காரர் ஒருவரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்கு ஒரே இடைஞ்சல் எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் போட்டு கட்டுக்கோப்பாக வாழும் தன் மகன். அவனை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டால், தான் நிம்மதியாக இஷ்டம்போல வாழலாம் என்று திட்டம் தீட்டுகிறார். அப்படி தந்தையால் முதியோர் இல்லத்துக்கு அனுப்பப்படாமல் இருக்க, ரிஷி கபூர் தந்தை சொல்லும் சில டாஸ்குகளை முடிக்க வேண்டும். அதை அவர் செய்தாரா, அமிதாப்பின் உண்மையான திட்டம்தான் என்ன, அமெரிக்கா பேரன் திரும்ப வந்தானா? போன்ற சில கேள்விகளுக்கான விடையே படம்.

102 Not Out

இரண்டு முதுபெரும் நடிகர்களை எல்லாக் காட்சிகளிலும் நிரப்பியிருக்கிறார்கள். நடிப்புக்கா பஞ்சம்? அமிதாப்பும், ரிஷி கபூரும் போட்டி போட்டுக்கொண்டு பின்னி எடுக்கின்றனர். ஒரு காட்சியில் ரிஷி கபூர் அசத்தினால், மற்றொரு காட்சியில் அமிதாப் அதை ஈடு செய்கிறார். சீரியஸான மனிதராக தன் தந்தை செய்யும் லூட்டிகளுக்கெல்லாம் டென்ஷன் ஆகி, `எனக்கு வயசாயிடுச்சு. என் முதுமையை நான் ஏத்துக்கிட்டேன்! நீ ஏன் மறுக்கிற?' என்று அமிதாப்பை கேள்வி கேட்கும் ரிஷி கபூர், நம் பரிதாபத்தை சம்பாதிக்கத் தவறவில்லை. குறிப்பாக, அமிதாப் நிஜமாகவே முதியோர் இல்லத்துக்குப் போன் செய்யும்போது, நிற்காமல் பயத்தில் ஆடும் குழந்தைபோல அந்த உடல் மொழியில் ரிஷி கபூர் எனும் மாபெரும் நடிகர் வெளிப்படுகிறார். 

தன் தந்தை இடும் கட்டளைகளை வேறுவழியின்றி கேட்டு நடந்து, அதன்மூலம் தன் இறந்த காலத்தை நினைவு கூர்ந்து, கண்களில் நீருடன் அவர் நிற்கும் காட்சிகள், நமக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. பிற்பாதியில், அமெரிக்க மகனுக்காக மாத்திரைகள் வாங்குவது, பழைய அறையைத் திறந்து மகனின் பொருள்களை ரசிப்பது... என நிஜமாகவே வாழ்வின் விளிம்பில் இருக்கும் ஒரு தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார், ரிஷி. இது ஒரு பரிணாமம் என்றால், தெளிவு பெற்றவுடன் இவர் ஏர்போர்ட்டில் செய்யும் அதகளம் வேறு பரிணாமம். 

102 Not Out

வில்லாதி வில்லனாக, இயல்பான குறும்பு மனிதராக இனிக்கிறார், அமிதாப். `விக்'தான் என்றாலும் அந்த வெள்ளைத் தலை முடியையும், தாடியையும் சிலுப்பிக்கொண்டு அவர் செய்யும் ரவுடித்தனங்கள் அட்டகாசம். சீனா மனிதன் கட்அவுட்டுடன் நடுரோட்டில் செல்லும் ஆட்டோவை நிறுத்தி ஏறும் அந்த முதல் காட்சியிலேயே நம்மை அவரது ரசிகனாக்கிவிடுகிறார். முதல்பாதி முழுக்க மகனை டார்ச்சர் செய்து அழ விடும் அமிதாப், பிற்பாதியில் தெளிவாகப் பேசி, அதே மகனுக்கு உண்மையைப் புரியவைக்கிறார். கண்களில் எட்டிப்பார்க்கும் கண்ணீருடன் சேர்ந்து கோபமும் மிதக்க, இறந்த காலத்தை நினைவூட்டி, எதிர்காலத்திற்குத் தன் மகனைத் தயார்படுத்தும் பொறுப்புள்ள தந்தையாக அவர் தோன்றும் காட்சிகள்... வழக்கம்போல அமிதாப் என்னும் சீரியஸ் நடிகர் ஸ்கோர் செய்யும் இடம்! அவருக்குத் துணையாக அந்த மருந்துக்கடை `திரு' கதாபாத்திரமும் சரியான தேர்வு.

புகழ்பெற்ற மேடை நாடகம் ஒன்றை `Oh My God' என்ற பெயரில் படமாக எடுத்துப் புகழின் உச்சியை அடைந்த இயக்குநர் உமேஷ் சுக்லா, இம்முறையும் வேறொரு மேடை நாடகக் கதையை கையில் எடுத்திருக்கிறார். நாடகத்தை எழுதிய சௌமியா ஜோஷியே கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதிவிட, இருபெரும் நடிப்பு ஆளுமைகளைக் கையாளும் பெரும் பொறுப்பை உமேஷ் சுக்லா ஏற்றிருக்கிறார். சுக்லா செய்திருக்கும் ஒரே தவறு, அந்த நாடகத்தை, திரைப்பட மொழிக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யாதது மட்டுமே!

பொதுவாக மேடை நாடகங்களில் வசனங்கள் அதிகமாக இருக்கும். அங்கே காட்சிகளால் விவரிக்க முடியாததைப் பேசியே விளக்கி விடுவார்கள். ஆனால், திரைப்படத்தில் காட்சிகளுக்கு அல்லவா முக்கியத்துவம் இருக்க வேண்டும்? இங்கேயும் வளவளவென நாடக பாணியில் பேசிக்கொண்டிருந்தால் எப்படி பாஸ்? அதுவும், ஃபிளாஷ்பேக் கதை சொல்லும்போதும் வெறும் வசனங்கள்தானா? அங்கேயாவது காட்சிகளாக விரித்திருக்கலாமே?

102 Not Out

நடிப்புக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், திரைக்கதை அந்த நடிப்பை மேலும் கவுரவப்படுத்தும் விதமாக இருக்க வேண்டாமா? அதிகச் செலவில்லாமல் ஒரு நல்ல படத்தை எடுத்திருப்பது, பாராட்டப்பட வேண்டியதுதான். அதற்காக ஒரு நாடகத்தைப் போலவே, சினிமாவையும் அணுகவேண்டுமா? சில ஓவியங்கள் வெறும் கோடுகளாக இருக்கும்போது அதி அற்புதமாக இருக்கும். ஆனால், ஏனோ வண்ணங்கள் கொடுத்து உயிர்ப்பிக்க முயற்சிக்கும்போது, அதிலிருந்த அழகில் பாதியை இழந்துவிடும். இந்தப் படம் அதற்கு நல்ல உதாரணம். ஒரு ஸ்கிரிப்ட்டாக அற்புதமான ஒன்லைனுடன் இருக்கும் கதை, காட்சிகளாக விரியும்போது தன் அழகை சற்றே இழக்கிறது. அந்தக் காயங்களுக்கு அமிதாப் மற்றும் ரிஷி கபூரின் நடிப்பை பிளாஸ்திரியாகப் பயன்படுத்தி ஒட்டியிருக்கிறார், இயக்குநர்.

 

மொத்தத்தில்... `102 NotOut' டக் அவுட் ஆகவில்லை. இரண்டு அற்புதமான பேட்ஸ்மேன்களின் சிக்ஸர்களுக்காக, அமிதாப்போல நாமும் ஒரு விசில் அடிக்கலாம்!

https://cinema.vikatan.com/bollywood-news/124368-how-is-amitabh-and-rishi-kapoor-starrer-102-not-out.html

  • தொடங்கியவர்

திரைப் பார்வை: எதுவும் முடிந்துவிடவில்லை! - 102 நாட் அவுட் (இந்தி)

11chrcj102%20Not%20Out

‘இந்தியன்’ போன்ற சாகசப் படம் நீங்கலாக, முதியவர்களின் உலகை, ஒட்டுத் தாடியுடன் கூடிய செயற்கை ஒப்பனை இன்றி முதியவர்களை வைத்தே பதிவுசெய்த தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு (வீடு, சந்தியா ராகம், தலைமுறைகள், பவர் பாண்டி, தேவர் மகனில் கொஞ்சம் சிவாஜி கணேசனைச் சொல்லிக்கொள்ளலாம்). ஆனால், இந்தியில் அக்கலைஞர்களின் இயல்பான வயதில், ஒப்பனை செயற்கையாகத் துருத்திக் கொண்டு தெரியாத அசலான முதியவர் உலகைக் காட்டும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.

 

‘சீனி கம்’, ‘கிங் லியர்’, ‘பிளாக்’, ‘சர்க்கார்’, ‘ஷமிதாப்’, ‘பா’, ‘பிக்கூ’ போல அமிதாப் பச்சனுக்காகவே எழுதப்படும் கதைகள் திரை வடிவம் கண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் சசி கபூரின் ‘இன் கஸ்டடி’, ரிஷி கபூரின் ‘கபூர் அண்ட் சன்ஸ்’, நஸ்ருதீன் ஷா வின் ‘வெயிட்டிங்’ எனப் பட்டியல் நீள்கிறது. வணிகத்துக்காக நூறு பேர் நடித்து, ஆடிப்பாடும் ஆடம்பரக் கல்யாண வீட்டுக் கதைகளில் இடம்பெறும் முதியவர்களின் உலகுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து விடுவோம்.

இந்தக் கதை, ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் உறவுச் சிக்கல்கள், முரண்கள் பற்றியும் அவை தொடர்பான இருவரின் பார்வை பற்றியதும்தான். என்ன ஒன்று மகனின் வயது 75 , அவர் தந்தையின் வயது வெறும் 102!

கதை: குஜராத்திலிருந்து மும்பையில் குடியேறிய பரம்பரையில் பிறந்த 102 வயது தாத்தாரேயாதான் அமிதாப். சென்சுரி அடித்த வயதிலும் மனத்தில் இளமையாகவும் வண்ணமயமாகவும் வாழும் அவருக்கு உலகிலேயே வாழும் வயதானவர் என்ற சாதனை படைக்க ஆசை. இதற்குத் தடையாக இருப்பது, நேர்மறை எண்ணத்துடன் எல்லாம் முடிந்துவிட்ட ஒரு விரக்தி மனப்பான்மையில் வாழும் அவரது 75 வயது மகன் பாப்பு.

தந்தை மகனை (ஆமாம்! மகனைத்தான்!) முதியோர் இல்லம் அனுப்பாமல் இருக்க சில கட்டளைகள் விதிக்கிறார். அவ்விருவருக்கும் இடையிலான உறவுச் சிக்கல்களும் 102 வயது அமிதாப்பின் அந்தக் கட்டளைகளால் மாறும் 75 மகன் ரிஷி கபூரின் வாழ்வும் என்ன ஆனது என்பதே கதை.

பார்வை: குஜராத்திக் கவிஞர், இயக்குநர், நடிகர், நாடக ஆசிரியர், திரைக் கதாசிரியர் சவும்யா ஜோஷி என்பவரின் வெற்றிகரமான மேடை நாடகம் இது. திரையிலும் இவரே கதை, வசனத்தைப் பார்த்துக்கொள்ள உமேஷ் சுக்லா இயக்கியிருக்கிறார்.

முதலில் பாராட்டப்பட வேண்டியது முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு. தேர்ந்துகொண்ட நடிகர்கள் இருவரும் வழங்கியிருக்கும் குறைவில்லாத பங்களிப்பு. கிட்டத்தட்ட 26 வருடங்களுக்குப் பிறகு இரு கதாநாயகர்களும் இணையும் படம் இது. தன் கதாபாத்திரத்தின் வீச்சை அறிந்து மகன் கதாபாத்திரத்துக்கு அதிகம் இடம் கொடுக்கும் அமிதாப் பச்சனும் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி அமிதாப்பைவிட அழகாக நடித்த ரிஷி கபூரும் மனத்தில் நின்றுவிடுகிறார்கள். பார்வையாளர் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘திரு’வாக நடித்த ஜிமித் திரிவேதியும் நிறைவான நடிப்பை அளித்திருக்கிறார்.

கதை மெல்ல பம்பாய் முதல் மும்பைவரை மாறும் 100 வருட நகரத்தை கோட்டோவியமாகக் காட்டி, இந்தக் கதை மாந்தர்களின் வாழ்வில் நுழைந்து, முதுமை என்றாலும் எதுவும் முடிந்துவிடவில்லை என்பதைப் பேசுகிறது. அதீத சந்தோஷம், இளமையான பேச்சு, பாடல் கேட்பது என வாழும் தத்தாத்ரேயா கதாபாத்திரத்தைவிட பாப்பு என்ற 75 வயது மகனாக வரும் ரிஷி கபூரின் பாத்திரப் படைப்பும் அவரின் மாறுதல்களும் இயல்பாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு கட்டளையாகத் தந்தை சொல்வதும் அதை மகன் சிரமப்பட்டு முடிப்பதும் என நகைச்சுவையாகவே நகர்கிறது. இறுதிக் கட்டளை இருவரது வாழ்வின் சற்றே கசப்பான பக்கங்களைத் திறக்கிறது.

திரு என்ற கதாபாத்திரத்துக்கு அதிக வேலை இல்லையென்றாலும் நகைச்சுவைக்காகவும், பார்வையாளர்களின் பிரதிநிதியாகவும் அவர் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதாசிரியர் எத்தனை முக்கியம் என்பதை நிறுவுகிறது. மொத்தமாகவே 11 பேர்தான் நடிகர்கள். அதில் ஒருவருக்கு வீட்டுப்பணிப் பெண் வேடம். அவருக்கும் வசனம் எதுவும் கிடையாது.

குறைகளும் உண்டு. நாடகத்தில் இருந்து வந்த படம் என்பதால் படம் நெடுகிலும் திரைமொழி குறைந்து, பெரும்பாலும் வசனங்களாலும், ஒரு வீட்டுக்குள்ளே நடைபெறும் காட்சிஅமைப்புகளாலும் மேடை நாடகம் பார்க்கிற உணர்வே மேலிடுகிறது. அதே போல பாப்புவின் மகனை வழக்கமான குடும்பப்பட நியதியின்படி அப்பாவைப் புரிந்துகொள்ளாமல், வெறும் சொத்துக்காக ஆசைப்படும் மகனாக மட்டும் காட்டியிருப்பது குறை.

லக்ஷ்மன் உடேகரின் ஒளிப்பதிவும் சலீம்-சுலைமான், ரோஹன்-விநாயக் ஆகிய இணைகளின் இசையும் ஜார்ஜ் ஜோசஃப்பின் பின்னணி இசையும் படத்தில் இயல்பாய் ஒலிக்கின்றன. ஆகச் சிறந்த படமாக இது இல்லாமல் போனாலும் இந்த வகைப் படங்கள் எடுப்பதையே ஒரு நல்ல முயற்சியாகக் கருதி வரவேற்கலாம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23839526.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.