Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

பி.கே.பாலச்சந்திரன்

இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

2-4.jpg

ஒரு புறத்திலே, கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டியிருப்பதுடன் அதற்கு முட்டுக்கொடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழர்களுக்கு விரோதமானவராக நோக்கப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிரக்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவுக்கு நேர்முரணாக விக்கிரமசிங்கவை தங்களது நலன்களிலும் அக்கறைகளிலும் அனுதாபம் கொண்டவராக தமிழர்கள் நோக்குகிறார்கள். ராஜபக்சவை ஆட்சியதிகாரத்திலிருந்து விலக்கிவைத்திருப்பதற்கு கூட்டமைப்பு அதனால் இயன்ற சகலதையும் செய்யவேண்டியிருக்கிறது.

ஆனால், தமிழர்களுக்கு அனுகூலமானதாக அமையக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு ராஜபக்சவின் கூட்டு எதிரணியினதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் தரவு கூட்டமைப்புக்கு தேவையயாக இருக்கிறது. ராஜபக்சவை கூட்டமைப்பு எதிர்க்கவேண்டியும் இருக்கிறது அதேவேளை,  புதிய அரசியலமைப்புக்கு அவரின் ஆதரவைப் பெறவேண்டியும் இருக்கிறது. இது  கூட்டமைப்பின் தலைவர்களைப் பொறுத்தவரை பெரிய சவாலாகும்.

கடுமையான அரசியல் தேவை

புதிய அரசியலமைப்பு வரைவுச்செயன்முறைகள் நெருக்கடியான அல்லது தீர்க்கமான ஒரு கட்டத்தை அடைந்திருக்கும் அதேவேளை, அது தொடர்பிலான அரசியல் அபிப்பிராயம் கடுமையாக வேறுபாடுகள் நிறைந்ததாக இருக்கின்ற இனறைய கட்டத்தில் கூட்டமைப்பு என்ன செய்கிறதோ அதிலேயே அதன் அரசியல் எதிர்காலம்( உண்மையில் அதன் இருப்பு) தங்கியிருக்கிறது.

ராஜபக்ச தலைமையிலான எதிரணி அரசியலபை்பை மாற்றும் முயற்சிக்கு எதிராக மெய்யாகவே போரைப் பிரகடனம் செய்திருக்கிறது.சிறிசேனவின் சுதந்திர கட்சியும் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளைப் பொறுத்தவரை உற்சாகமாக இல்லை. பிரதமர் விக்கிரமசிங்க தன்மட்டில் புதிய அரசியலமைப்பொன்றுக்கு ஆதரவானவராக இருக்கின்றபோதிலும் அவரது ஐக்கிய தேசிய கட்சியின் மௌனம் வரவிருக்கும் இடரின்  முன்னறிகுறியாகவே தெரிகிறது.

உண்மையில், அரசியலமைப்புச் சபை  வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழுவின் அறிக்கையை விக்கிரமசிங்கவைக் கொண்டு சமர்ப்பிப்பதற்கு கூட்டமைப்பு கடுமையாக கஷ்டப்படவேண்டியிருந்தது. அதற்கு அவரை இணங்கவைப்பதற்கு கூட்டமைப்பின தலைவர்கள் கடந்த வருட இறுதியில் மூண்ட அரசியலமைப்பு நெருக்கடியைப்  பயன்படுத்தவேண்டியிருந்தது.

அரசியலமைப் நெருக்கடி வழங்கிய வாய்ப்பு

2018 அக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி சிறிசேன அரசியலமைப்புக்கு விரோதமான முயைில் பிரதமர் பதவியில் இருந்து விக்கிரமசிங்கவை நீக்கியதனால் ஏற்பட்ட அக்டோபர் -- டிசம்பர் அரசியலமைப்பு நெருக்கடியின்போது பேரம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது.

திடுதிப்பென இரகசியமான நடவடிக்கையாக சிறிசேன பிரதமர் பதவியில் இருந்து விக்கிரமசிங்கவை நீக்கீவிட்டு அவரின் இடத்துக்கு ராஜபக்சவை நியமித்தபோது ஜனநாயக உலகம் சீற்றமடைந்தது.

50 நாள் நெருக்கடி இலங்கையைப் பெரும் குழப்பநிலைக்குள்ளாக்கியிருந்தது.ஆனால், அது அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளை மீளத்தொடங்கச்செய்வதற்கு மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் வாய்ப்புகள் நலிவுறுகின்ற போக்கைக் கட்டுப்படுத்துவதற்கும் கூட கூட்டமைப்புக்கு ஒரு பெரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

16 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ( பிறகு அந்த எண்ணிக்கை 14 ஆகக் குறைந்துவிட்டது) கூட்டமைப்பு விக்கிரமசிங்்கவின் அரசாங்கத்தின் இருப்பை உறுதிசெய்வதில் முக்கியமான பாத்திரமொன்றை வகித்தது.ஆனால், கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உறுதியான ஆதரவும் முக்கியமான பங்களிப்பும் இல்லாமல் இருந்திருந்தால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்களைத் தனது பக்கத்துக்கு இழுத்தெடுத்து தனது நிலையை வலுப்படுத்துவதில் வெற்றிபெற்றிருப்பார்.

கட்சி மாறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 கோடி ரூபா வரை பணம் கேட்டதாக வேறு யாருமல்ல ஜனாதிபதி சிறிசேனவே கூறியிருந்தார்.ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 45 பேர் ராஜபக்ச பக்கத்துக்குத் தாவுவது குறித்து யோசித்ததாக கூறப்பட்டது.ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் விக்கிரமசிங்கவுடனேயே தொடர்ந்தும் இருக்க உறுதிபூண்டதை அறிந்த அவர்கள் பீதியடைந்து கட்சிமாறும் எண்ணத்தைக் கைவிட்டதாகவும் தெரியவந்தது.அவர்கள் ஐக்கிய தேசிய முன்னணியிலேயே தொடர்ந்தும் இருந்ததன் மூலமாக பிரதமர் பதவியில் தொடருவதற்கு தேவையான பாராளுமன்றப் பெரும்பான்மை ஆதரவை பெறமுடியாத நிலையை ராஜபக்சவுக்கு ஏற்படுத்தினார்கள்.

பேரம்

ஆனால, கூட்டமைப்பு விக்கிரமசிங்கவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை.தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனது அரசியல் வாய்ப்புக்களை வலுப்படுத்திக்கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு அரசியல் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கூட்டமைப்பு கடுமையான பேரம்பேசலில் ஈடுபட்டது.

2013 மாகாணசபை தேர்தல் மற்றும் 2015 பாராளுமன்றத தேர்தலுக்குப்  கூட்டமைப்பின் மக்கள்ஆதரவு குறிப்பிடத்தக்களவுக்கு வீழ்ச்சி கண்டிருந்தது.2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களிலும் கூட்டமைப்பின் செயற்பாடு ஏமாற்றத்தையே தந்தது என்றுதான் கூறவேண்டும்.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகவும் போர்கால உரிமை மீறல்களைச் செய்தவர்களை  பொறுப்புக்கூறவைப்பதாகவும்  தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கூட்டமைப்பினால் முடியாமல்போய்விட்டது.கொழும்பில் உள்ள மத்திய அரசாங்கத்தினால் கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோதிலும்  உருப்படியான எந்தவொரு பொருளாதார அபிவிருத்தியையும் உறுதிசெய்ய கூட்டமைப்பின் நிருவாகத்தில் இருந்த வடமாகாண சபை தவறிவிட்டது. பெருமளவு பணம்  பயன்படுத்தப்படாமல் மத்திய அரசாங்கத்துக்கே திரும்பிச் சென்றது.

அரசியலமைப்பு நெருக்கடியின்போது விக்கிரமசிங்கவுடனும் அவரின் தளபதிகளுடனும்  நடத்திய பேச்சுவார்தைகளின்போது கூட்டமைப்பு 2020 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேரதலுக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதற்கு ஏதுவாக  அரசியலமைப்பு சபை வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழுவின்  அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தி திட்டங்களில் தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பநதப்படுத்தப்படவேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்தது.

 வடக்கு கிழக்கில் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்துவதில் கொழும்பினால் கடைப்பிடிக்கப்படுகின்ற ' மேலிருந்து கீழ் நோக்கிய ' அணுகுமுறை குறித்து மக்கள் முறைப்பாடு தெரிவித்துவந்த காரணத்தால் இது உச்சபட்ச முக்கியத்துவம் கொடுத்துப் பரிசீலிக்கப்பட்டது.

ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையின் வடிவில் எழுத்துமூலம் விக்கிரமசிங்க இந்த உறுதிமொழிகளைத் தரவேண்டும் என்று கூட்டமைப்பு விரும்பியது.ஆனால், அவ்வாறு செய்தால் நேரக்கூடிய அரசியல் ஆபத்துக்களை அவர் உணர்ந்தார்.ஆனால்,  அபிவிருத்திச் செயன்முறைகளில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வது என்றும் 2019 பெப்ரவரி 4 இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு வரைவை சமர்ப்பிப்பதாகவும் அவர் வாய்மூல  உறுதியளித்தார்.

 உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக மீண்டும் பிரதமராக வந்த பிறகு  விக்கிரமசிங்க அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை இப்போது பாராளுமனாறத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.ஆனால், அந்த ஆவணத்துக்கு அறுதிமுடிவானது என்ற அந்தஸ்தைக் கொடுப்பதைத் தவிர்க்குமுகமாக அவர் அது " அரசியலமைப்பு வரைவு ".அல்ல என்று மறுத்து  முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

வடக்கு, கிழக்குடன் தொடர்புடைய சகல விவகாரங்களிலும் தங்களுடன் பிரதமர்  கலந்தாலோசிப்பார் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கமாகக் கூறினார்கள்.

நெருக்கடிக்குள்ளாகும் இணக்கப்பாடு

ஆனால், அரசியலமைப்பு வரைவை சபையில் சமர்ப்பித்த விவகாரமும் வடக்கு, கிழக்கு விவகாரங்கள் குறித்து கூட்டமைப்புடன் கலந்தாலோசிப்பது என்ற இணக்கப்பாடும் இப்போது பிரச்சினைக்குள்ளாகியிருக்கின்றன. இரு விவகாரங்களையும் எதிர்க்கடசித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பிரதான எதிரணியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கர்ணகடூரமாக எதிர்க்கிறது.

அரசியலமைப்பு வரைவை நாட்டை " ஒன்பது அரைச் சுதந்திர மாகாணங்களாக "பிரிக்கும் ஒரு சூழ்ச்சித் திட்டம் என்று ராஜபக்ச  வர்ணித்திருக்கிறார். தமிழர்களின் பிரதான கோரிக்கை கூடுதல் அதிகாரப்பரவலாக்கத்தை உள்ளடக்கிய புதியதொரு அரசியலமைப்பு அல்ல, மாறாக பொருளாதார அபிவிருத்தியும் சமூக நலன்புரித்திட்டங்களுமே என்று ராஜபக்சவின் கட்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள்.

புதியதொரு அரசியலமைப்பு தேவையற்றது என்று கூறும் பொதுஜன பெரமுன அவ்வப்போது எழுகின்ற தேவைகளை அடிப்படையாகக்கொண்டு தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டுவந்தால் போதுமானது என்று நம்புகிறது. அவ்வாறு புதிய அரசியலமைப்பு உண்மையில் அவசியமாக இருந்தால் , அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் முன்னிலையில் அதை ஒரு பிரச்சினையாக முன்வைத்து அவர்களின் அங்கீகாரத்தைப் பெறலாம் என்று அந்த கட்சி கூறுகிறது.

தமிழ்ப்பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்களைத் தீட்டுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் கூட்டமைப்பை ஈடுபடுத்துகின்ற விடயத்தைப் பொறுத்தவரை, அந்த இணக்கப்பாட்டின் நோக்கம் மக்களுக்கு உதவுவது அல்ல, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் வீழ்ச்சிகண்டுவரும் கூட்டமைப்பின் செல்வாக்கை சீர்செய்து எதிர்வரும் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதே என்றும் பொதுஜன பெரமுன அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறது.

 

http://www.virakesari.lk/article/48331

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.