Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘காவி’ அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘காவி’ அரசியல்

முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:07Comments - 0

முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும்.  ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும் சில செயற்பாடுகள் கோமாளித்தனமானவையாக உள்ளன.  

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது, இனவாதிகளுக்கு இருந்து வந்த ஆத்திரத்தை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களைக் காரணமாக வைத்து, தீர்க்க நினைக்கின்றமை, மிகப்பெரும் அயோக்கியத்தனமாகும். ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்று, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருந்தமை, ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகும்.  

‘காவி’களின் காலடியில்தான் நாட்டின் நிர்வாகம் இன்னும் கிடக்கிறது என்பதற்கு, ரத்ன தேரரின் உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்து இடம்பெற்ற முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாமாவும் மிகப்பெரும் உதாரணங்களாகும்.   

image_c0836f9ec5.jpg

இன்னொரு புறம், முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாமா பற்றிய விமர்சனங்களும் மக்கள் மத்தியில் உள்ளன. ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், அவரின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் மீது நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களின் வேறொரு வடிவம் என்பதால்தான், ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா செய்தார்கள் என்கிற பேச்சு அதிகளவில் உள்ளது.  

ஆனால், ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீட்டிய திட்டத்தின் அடிப்படையில்தான், முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறு கூட்டாக இராஜினாமாச் செய்தார்கள் என்கிற சந்தேகங்களும் அரசியலரங்கில் உள்ளன.   

காரணம், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம், ரணிலுடைய ‘நண்பர்’ ரவூப் ஹக்கீம் போன்றோர், பிரதமரின் ஆசீர்வாதமின்றி, தமது பதவிகளைத் துறந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் அந்தச் சந்தேகங்களுக்குக் காரணமாகும்.   

எவ்வாறாயினும், முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாமாவானது, இனவாதிகள் எதிர்பாராததொரு திருப்பமாகவே அமைந்தது. முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாமா அறிவிப்பானது, இனவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவு வழங்கியோருக்கும் அதிர்ச்சியான செய்தியாகவே இருந்தது என்பதை, அவர்களின் எதிர்வினைகளை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாக, அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்த பௌத்த மகாநாயக்க பீடங்கள், முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாமாவின் பின்னர், திடீரென இறங்கி வந்து, “இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள், தங்களின் பதவிகளைப் பொறுப்பேற்க வேண்டும்” என்று, கோரிக்கை விடுத்தமையின் மூலம், ‘கூட்டு இராஜினாமா’ நடவடிக்கை ஏற்படுத்தியிருந்த அதிர்ச்சி, எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  

இன்னொரு புறம், குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள், தாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்த பின்னர், தமது அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று, மகாநாயக்க பீடத்தினர் இதன்போது முன்வைத்த நிபந்தனையானது, எங்குமில்லாத புதுவகை நியாயமாகும்.   

யாராவது ஒருவர், யாராவது இன்னொருவர் மீது குற்றமொன்றை சுமத்துவாராக இருந்தால், குற்றம் சாட்டியவர்தான், குற்றம் சாட்டப்பட்டவர் புரிந்ததாகக் கூறப்படும் குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அதுதான் நீதி; அதுதான் உலக வழக்கம்.   

குற்றம் சாட்டியவர் முறையாகவும், சாட்சி, சான்றுகளின் அடிப்படையிலும் தனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் போதுதான், குற்றம் சாட்டப்பட்டவர் அதனை மறுத்து, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முயற்சிப்பார்.   

ஆனால், மகா சங்கத்தினரின் கூற்று இதற்கு மறுதலையாகவே உள்ளது. உதாரணமாக, ரிஷாட் பதியுதீன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அவர் தொடர்ச்சியாக மறுத்தே வருகின்றார். தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை முறையாக நிரூபிக்குமாறும், குற்றம் சாட்டுகின்றவர்களிடம் அவர் கோரி வருகின்றார். “என் மீதான குற்றம் முறையாக நிரூபிக்கப்படுமானால், அரசியலை விட்டும் நான் ஒதுங்கி விடுவேன்; மரண தண்டனை தந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.   

இதற்குப் பிறகும், “நாங்கள் உன்மீது குற்றம் சாட்டிக் கொண்டேயிருப்போம். ஆனால், நீதான் உன்னைச் சுற்றவாளி என்று நிரூபிக்க வேண்டும்” என்று, இனவாதிகளும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் கூறிக் கொண்டேயிருப்பது எரிச்சலடைய வைக்கும் கோசமாகும்.  

இலங்கையில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையொன்று, சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்ததில்லை எனக் கூறப்படுகிறது. இலங்கை அமைச்சரவையிலிருந்து முஸ்லிம்கள் கூட்டாக இராஜினாமாச் செய்தமையானது, இலங்கை மீது முஸ்லிம் நாடுகளுக்கு அதிருப்தியை நிச்சயமாக ஏற்படுத்தி இருக்கும்.  

இவ்வாறானதொரு நிலை இலங்கைக்கு நல்லதல்ல. இஸ்ஸாமிய நாடுகள் வழங்கும் நிதி உதவிகள் மூலம், இலங்கையில் ஏராளமான அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றினை முஸ்லிம் நாடுகள் நிறுத்தி விடுவது, இலங்கைக்கு மிகப்பெரும் ஆபத்தாக அமைந்து விடும்.  

உதாரணமாக, இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் வழங்கி வரும் உதவிகளில் சிலவற்றை மட்டும், தனது உரையொன்றில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அண்மையில் தெரிவித்திருந்தார். அவையாவன:  

1. இலங்கைக்கு, ஈரான் ஆறு மாதக் கடன் அடிப்படையில் எண்ணெய் வழங்கி வருகிறது.  

2. பதுளை - செங்கலடி நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கு சவூதி அரேபியா 2,000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.  
3. மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு 200 கோடி ரூபாவை குவைத் அரசு வழங்கியுள்ளது என்று தெரிவித்த ஹிஸ்புல்லாஹ், “இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில், இஸ்லாமிய நாடுகள் இரண்டாம் இடத்தில் உள்ளன” என்ற தகவலையும் கூறினார்.  

இலங்கை முஸ்லிம்களை வஞ்சிப்பதாக நினைத்துக் கொண்டு, அரபு மொழி மீதும் இனவாதிகள் தமது கோபத்தை காட்டிக் கொண்டிருப்பது, முட்டாள்தனமான செயற்பாடாகும். உலகின் மிகப்பெரும் மொழிகளில் அரபும் ஒன்றாகும். 21 நாடுகளில் ஆட்சி மொழியாக அரபு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளில் அரபும் ஒன்றாகும்.   

முஸ்லிம்கள் இறைவேதமாக நம்புகின்ற புனித குரான், அரபு மொழியில் உள்ளமையால், அதனை ஓதுவதற்கும் விளங்கிக் கொள்வதற்குமாக, பிற மொழியைப் பேசுகின்ற முஸ்லிம்கள், அரபு மொழியைக் கற்கின்றனர்.  

மறுபுறமாக, இலங்கையில் முஸ்லிம் நாடுகள் வழங்கிய நன்கொடையின் கீழ், ஓர் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படும் போது, நிதி வழங்கிய நாட்டினர் புரிந்து கொள்ளும் அரபு மொழியில், அந்தத் திட்டம் பற்றிய குறிப்புகளை அறிவிப்புப் பதாதைகளில், கல்வெட்டுகளில் தெரியப்படுத்துவதுதான் நியாயமானதாகும். அநேகமாக அப்படித்தான் இதுவரை நடந்து வந்தது.சீன அரசாங்கத்தின் திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் போது, அவை தொடர்பான கல்வெட்டுகளில் சீன மொழி இடம்பெற்றுள்ளமையைக் கண்டுள்ளோம்.   

ஆனால், இப்போது பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு எழுத்துகள் அனைத்தையும் அகற்றுவதற்கு அரசாங்கமே உத்தரவு பிறப்பித்திருப்பது பெரும் மடமையாகும்.  

பேரினவாதிகள் சொல்லுகின்ற ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை’ ஒழிப்பதற்காக, அரபு மொழியை நாட்டிலிருந்து அகற்றுவதென்பது, அறியாமையின் உச்சமாகும். அது, ‘சீப்பை ஒளித்து வைப்பதன் மூலம், திருமணத்தை நிறுத்தி விடலாம்’ என்று நினைக்கும் மடமைக்கு ஒப்பானதாகும்.  

குர்ஆன் பிரதிகளை வைத்திருந்தவர்களைப் படையினர் கைது செய்தமை, தமது வாகனங்களில் அரபு மொழியில் எழுதப்பட்ட நல்வாசங்களைக் காட்சிப்படுத்தியவர்கள் அச்சுறுத்தப்பட்டமை போன்ற சம்பவங்கள், அரபு மொழியிடமிருந்து இலங்கை முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்கான உளவியல் தந்திரமாகும். ஆனால், அந்தத் தந்திரம் ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதற்கு, ஏராளமான காரணங்களைக் கூற முடியும்.   

இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் பற்றி, ஜனாதிபதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டமையை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்டோர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கியுள்ள சாட்சியங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.   

வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பங்களில்தான் ஈஸ்டர் தினத் தாக்குதல்களும், அதற்குப் பின்னர் முஸ்லிம் மீது நடத்தப்பட்ட வன்முறைகளும் இடம்பெற்றுள்ளமை, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சியாளர்களின் ஆசீர்வாதங்களுடன்தான் ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் நடந்துள்ளனவா என்கிற கேள்விகள் சாதாரண பொதுமக்களிடமும் ஏற்படத் தொடங்கியுள்ளன.  

இந்த நிலையில், ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் பற்றிய உண்மைகளை வெளிக் கொண்டுவரும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பது மக்களிடையே இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் என்பது, ‘வேலியே பயிரை மேய்ந்த கதை’யாக இருக்குமோ என்கிற சந்தேகம்தான் அதுவாகும்.  

இந்தக் கூத்துகளையெல்லாம் காணுகின்ற முஸ்லிம் மக்கள், ‘ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தியதில், நாங்கள் தவறிழைத்து விட்டோம்’ என்று, புலம்பத் தொடங்கியுள்ளனர்.    

கூட்டு இராஜினாமா: புத்திஜீவிகளின் பார்வைகள்

முஸ்லிம் அமைச்சர்கள் தாம் வகித்து வந்த பதவிகளைக் கூட்டாக இராஜினாமாச் செய்தமை குறித்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்களும் விமர்சனங்களும் உள்ளன. அவை தொடர்பில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் தமது கருத்துகளை வழங்கியிருந்தனர்.   

“முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த இராஜினாமா வரவேற்கத்தக்க விடயமாகும். என்றாலும் கூட, இதன்போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை இன்னும் விசாலப்படுத்தியிருக்கலாம்” என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில். அவர் மேலும் கூறுகையில்,  

“முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை முன்வைத்தே, முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறு இராஜினாமாச் செய்துள்ளனர். இருந்த போதும், இதனைத் தாண்டிய ஒரு தந்திரோபாயத்தை அவர்கள் கையாண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது. தாக்குதலின் பின்னணி குறித்துக் கண்டறியப்பட வேண்டும். அதுபற்றி அறிக்கை வெளியிடப்பட வேண்டும். இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்கிற உண்மை கண்டறியப்பட வேண்டும் என்கிற நிபந்தனையொன்றையும் முஸ்லிம் அமைச்சர்கள் முன்வைத்திருக்க வேண்டும். அதனூடாக, இலங்கை முஸ்லிம்களுக்கும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இடையில் சம்பந்தம் இருக்கிறதா? image_f28b6a1c96.jpgஇல்லையா? என்ற விடயம் துல்லியமான முறையில் வெளிக்கொண்டு வருவதற்காக வாய்ப்பு இருக்கின்றது. அது மாத்திரமன்றி, பயங்கரவாதத் தாக்குதல்களுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாட், இராஜினாமா செய்த இரண்டு முஸ்லிம் ஆளுநர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவை பற்றிய தகவல்களையும் மேலே சொன்ன அறிக்கையினூடாக வெளிக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன” என்று கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவித்தார்.   

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான எம்.எம். பஹீஜ், இது குறித்துத் தனது கருத்தைக் கூறுகையில், “இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றார்கள் என்கிற செய்தியை வெளிநாடுகளுக்கும், விசேடமாக முஸ்லிம் நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பமாக இந்த இராஜினாமா அமைந்திருக்கின்றது. இதேவேளை, தங்களைக் காரணம் காட்டி, தங்கள் சமூகம் அடிபடுவதைத் தாங்கள் விரும்பவில்லை என்பதற்காகவும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் ஏனைய அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு விட்டுக் கொடுக்காமல், அரசாங்கத்தையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொண்டு  இந்த நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்” எனவும் பஹீஜ் தெரிவித்தார்.  

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அபூபக்கர், இந்தக் கூட்டு இராஜினாமாவானது நான்கு வகையில் முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது எனச் சுட்டிக்காட்டினார். அவையாவன:  

1. முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த அமைச்சர்கள் தமது குற்றங்களை மறைப்பதற்கு, பதவிகளில் இருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கூறப்பட்டது. எனவே, இவ்வாறு இராஜினாமாச் செய்தமையின் ஊடாக, சுயாதீன விசாரணையொன்றுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.  

2. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்கள் மீது பாரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. முஸ்லிம்களின் உயிர்கள் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது. ஆனால், வன்முறையாளர்களை அடக்குவதற்குச் சட்டமும் ஒழுங்கும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதேவேளை, அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இவற்றைக் கண்டிக்கும் வகையிலும் அமைச்சர்களின் கூட்டு இராஜினாமா அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.  

3. இவ்வாறு அமைச்சர்கள் கூட்டு இராஜினாமா செய்யாமல் விட்டிருந்தால், ஒவ்வோர் அமைச்சருக்கு எதிராகவும் தனித்தனியாகப் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலைமை உருவாகியிருக்கும். அவர்களைப் பதவி விலகுமாறு உண்ணாவிரதங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திக் கொண்டே இருந்திருப்பார்கள். இதன் மூலம், முஸ்லிம் அரசியலைத் துச்சமாக மதித்து, அதனை அழிக்கும் செயற்பாடுகளைச் செய்திருப்பார்கள். எனவே, அமைச்சர்கள் எல்லோரும் மொத்தமாக இராஜினாமாச் செய்தமையானது, மேற்படி செயற்பாடுகளைத் தடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.   

4. குறித்த தினத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக, ஜுலைக் கலவரம் போன்று, திகனக் கலவரம் போன்று, அளுத்கம கலவரம் போன்று, இன்னுமொரு கலவரத்தை இனவாதிகள் ஏற்படுத்தி இருப்பார்கள். அதற்கு அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும், மொத்தமாக இராஜினாமாச் செய்தமையின் காரணமாக, அந்த நிலைமை தடுக்கப்பட்டு விட்டது.  எனவே, இவர்களின் கூட்டு இராஜினாமாவானது, இந்த நான்கு விடயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது என்று, றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.  

இந்த நிலையில், அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையார் எம்.ஏ.எம். பௌசர் கூறுகையில், “இந்த இராஜினாமாவின் பொருட்டு, முஸ்லிம் அமைச்சர்கள் முன்வைத்த நிபந்தனைகள் குறித்து, வெளிப்படைத்தன்மை பேணப்பட வில்லை” என்றார்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காவி-அரசியல்/91-234021

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.