Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலோட்டமான அரசியல் சீர்திருத்தங்கள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலோட்டமான அரசியல் சீர்திருத்தங்கள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை!

on June 4, 2022

2625-scaled.jpeg?resize=1200%2C550&ssl=1

Photo, APnews

இலங்கை அரசியலமைப்புக்கு இன்னொரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு கடந்த 44 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கு கொண்டுவரப்படுகின்ற 21ஆவது திருத்தம் இதுவாகும்.

அமெரிக்காவின் அரசியலமைப்பு 234 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரையில் அதற்கு 27 திருத்தங்களே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இரண்டேகால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவரும் அந்த அரசியலமைப்புக்கு  இறுதியாக 1992ஆம் ஆண்டில்தான் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், நான்கு தசாப்தங்களுக்கும் சற்று  அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவரும் இலங்கை அரசியலமைப்பு இதுவரையில் 20 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

ஜெயவர்தன ஆட்சிக்காலத்திலேயே அடிக்கடி அரசியலமைப்புக்கு திருத்தங்கள் (16) கொண்டுவரப்படுவது வழக்கமாக இருந்தது. அவர் தனது அரசியல் வியூகங்களுக்கு வசதியாக அமையக்கூடிய வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவந்தார். அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் இருந்த 5/6 பெரும்பான்மைப் பலம் அதற்கு வசதியாகவும் அமைந்தது. ஜெயவர்தனவுக்கு பின்னரான 24 வருடங்களில் நான்கு தடவைகளே அரசிலமைப்புக்கு திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அந்தத் திருத்தங்களும் கூட அந்தந்த காலகட்டங்களில் பதவியில் இருந்த ஆட்சியாளர்களின் அரசியல் அனுகூலங்களுக்கு இசைவான முறையிலேயே கொண்டுவரப்பட்டன.

ஜெயவர்தன ஆட்சியில் அடிக்கடி திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நாட்களில் ஒரு திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் சொன்ன ஒரு சுவாரஸ்யமான கதை நினைவுக்கு வருகிறது. அதாவது லண்டனில் புத்தகசாலையொன்றுக்கு சென்று ஒருவர் இலங்கை அரசியலமைப்பு பிரதிகள் கிடைக்குமா என்று கேட்டாராம். தாங்கள் மாத சஞ்சிகைகளை விற்பனை செய்வதில்லை என்று அங்குள்ளவர்கள் அவருக்கு பதில் கூறினார்களாம். இலங்கையில் அடிக்கடி அரசியலமைப்புக்கு திருத்தங்கள் கொண்டுவரப்படுவது அவ்வாறு கேலிக்குரியதாக இருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது சட்டவாக்க நடவடிக்கையாக அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த வரைவு கடந்தவாரம் அமைச்சரவைக்கு புதிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரகள் விஜேதாச, நிமால் சிறிபால டி சில்வா, சட்டமா அதிபர், சட்டவரைஞர் மற்றும் சில சட்ட நிபுணர்களை உள்ளடக்கிய பிரதமர் தலைமையிலான குழுவே இதைத் தயாரித்தது. இறுதி வரைவு பூர்த்திசெய்யப்படுவதற்கு முன்னதாக தற்போதைய வரைவை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் தலைவர்களின் கலந்தாலோசனைக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்தாக பிரதமர் விக்கிரமசிங்க அறிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்தின் (2015 — 2019) ஆரம்பக்கட்டத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தத்தின் அம்சங்களையும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் ஆட்சியின் தொடக்கத்தில் 2020 பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட 21ஆவது திருத்தத்தின் அம்சங்களையும் கலந்ததாக புதிய திருத்தம் அமைகிறது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக இருந்தாலும் அவரே தொடர்ந்தும் அரச தலைவராக இருப்பதை திருத்தவரைவு அனுமதிக்கிறது. அதேவேளை, ஒரு நாடாளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில் அதைக் கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பார். 19ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு பிறகே ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு பற்றி பேச்சில்லை.

19ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளின் கீழான அரசியலமைப்பு பேரவையையும் (Constitutional Council), சுயாதீன ஆணைக்குழுக்களையும் (Independent Commissions) மீண்டும் கொண்டுவரும் நோக்கத்தை பிரதானமாகக் கொண்டிருக்கிறது புதிய திருத்தம்.

பிந்திய இரு அரசியலமைப்பு திருத்தங்களினதும் கலவையாக வருகின்ற 21ஆவது திருத்தம் முற்றுமுழுதான எதேச்சாதிகாரத்துக்கும் மிதவாதமான எதேச்சாதிகாரத்துக்கும் இடையிலான ஒரு ஊசலாட்ட ஏற்பாடாகவே அமையப்போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்புச் செய்வதற்கான சட்டவாக்க நடவடிக்கைகள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுவந்திருக்கின்ற போதிலும், இறுதியில் அந்த ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் மீண்டும் மீண்டும் அதிகரிக்கப்பட்டதையே எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

முனானாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலத்தில் 2001ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 17ஆவது திருத்தத்தின் மூலமாக அரசியலமைப்பு பேரவையும் சுயாதீன ஆணைக்குழுக்களும் அறிமுகப்படுத்தப்பட்டு ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிறிதளவு குறைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அந்தத் திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அரசியலமைப்பு பேரவைக்கும் நியமனங்களைச் செய்வதற்கு லிபரல் போக்குடைய ஒரு தலைவி என்று வர்ணிக்கப்படுகின்ற திருமதி குமாரதுங்கவே எவ்வாறு காலத்தை இழுத்தடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது  பதவிக்காலத்தின் தொடக்கத்தில் 2010 பிற்பகுதியில் கொண்டுவரப்பட்ட 18ஆவது திருத்தத்தின் மூலமாக சுயாதீன ஆணைக்குழுக்களும் ஜனாதிபதியின் இரு பதவிக்கால வரையறையும் இல்லாமல் செய்யப்பட்டன.

பிறகு மைத்திரி – ரணில் ஆட்சியில் 2015ஆம் ஆண்டில் 19ஆவது திருத்தத்தின் மூலமாக சுயாதீன ஆணைக்குழுக்களும் ஜனாதிபதிக்குரிய இரு பதவிக்கால வரையறையும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜனாதிபதி கோட்டபாயவின் ஆட்சியில் 20ஆவது திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஜனாதிபதிக்கு கீழ்ப்படிவனவையாக்கியது. இப்போது 21ஆவது திருத்தம் என்ற வடிவில் 19ஆவது திருத்தம் மறுஅவதாரம் எடுக்கப்பார்க்கிறது.

இதனிடையே, அண்மைக்கால இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் எம்.பிக்களின் நடத்தைகளில் அவதானிக்கக்கூடியதாகவிருந்த ஒரு விசித்திரத்தை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகவிருக்கும். ஒரு இருபது வருட காலத்திற்குள் கொண்டுவரப்பட்ட நான்கு அரசியலமைப்பு திருத்தங்களையும் (17,18,19,20) இன்று எம்.பிக்களாக இருப்பவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் ஆதரித்தார்கள். திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. 21ஆவது திருத்தத்தை ஆதரிப்பதும் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை.

புதிய திருத்த வரைவு கலந்தாராய்வுக்கு வரும்போது நாடாளுமன்ற கட்சித்தலைவர்கள் வெளிப்படுத்தக்கூடிய  நிலைப்பாடுகள் அதன் ஒப்பேறலில் பெரும் தாக்கங்களைச் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 21ஆவது திருத்த வரைவு குறித்து ஏற்கனவே அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். அதன் போதாமைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஜனதா விமுக்தி பெரமுனவை (ஜே.வி.பி.) பொறுத்தவரை தற்போதைய வடிவில் திருத்தத்தை தொட்டும் பார்க்கமாட்டார்கள் என்று நம்பலாம்.

ஜனாதிபதி கோட்டபாயவையும் அரசாங்கத்தையும் வீட்டுக்குப்போகுமாறு கோரும் மக்கள் போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது சில வாரங்களுக்கு முன்னர் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயவின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தனிநபர் பிரேரணையாக அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் ஒன்றை (21) சபாநாயகரிடம் கையளித்தார். அந்த வரைவு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு திரும்பவேண்டும் என்று கோருகிறது. நாடாளுமன்றத்தினால் தெரிவு  செய்யப்படுகின்ற ஜனாதிபதி சம்பிரதாயபூர்வ பதவிக்குரியவராக இருக்கும் அதேவேளை அரச தலைவராகவும் (Head of the State) ஆயுதப்படைகளின் பிரதம தளபதியாகவும் இருப்பதற்கு ஏற்பாடுகள் இந்த வரைவில் உள்ளன. ஜனாதிபதியை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படக்கூடிய நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி விலக்கவும் ஏற்பாடு இதில் உள்ளது.

அதேவேளை, அரசாங்கத்தில் இருந்துவிலகி நாடாளுமன்றத்தில் சுயாதீன குழுவாக இருந்த 41 எம்.பி.க்களின் சார்பில் விஜேதாச ராஜபக்‌ஷவும் 21ஆவது திருத்தத்துக்கான தனிநபர் பிரேரணையொன்றை சமர்ப்பித்தார். அந்தப் பிரேரணை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கக் கோரவில்லை. ஜனாதிபதியின் அதிகாரங்கள் கணிசமாக குறைக்கப்பட்ட 19ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும் என்றே அது கோரியது. ஜனாதிபதி பல விவகாரங்களில் பிரதமருடன் ஆலோசனை கலந்தே செயற்படமுடியும் என்று விஜேதாசவின் பிரேரணை கூறியது.

தற்போது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 21ஆவது திருத்த வரைவு  விஜேதாசவின் பிரேரணையில் உள்ள ஏற்பாடுகளையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றது என்பதை இதுவரை அறியக்கூடியதாக இருந்த தகவல்கள் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

19ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளில் பெருமளவானவற்றை 21ஆவது திருத்தவரைவில் உள்ளடக்குவது பற்றி பேசும்போது 2015 – 2019 காலகட்டத்தில் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் ஆட்சி நிர்வாக செயற்பாடுகளில் ஏற்படுத்திய குளறுபடிகளை நினைவுமீட்டவேண்டியது அவசியமானதாகும். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அதேவேளை நாடாளுமன்றத்தினதும் பிரதமரினதும் அதிகாரங்கள் கணிசமானளவுக்கு  வலுப்படுத்தப்பட்டன. அதனால் ஜனாதிபதி ஒருபுறத்திலும் பிரதமர் மறுபுறத்திலும் இரு அதிகார மையங்களாக செயற்பட்டதனால் அவர்களது ஆட்சி சீரழிந்தது. அதுவே ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பிரமாண்டமான செல்வாக்குடன் ஆட்சியதிகாரத்துக்கு வர வழிவகுத்தது. அதனால் அன்று 19ஆவது திருத்தத்தில் இருந்த ஓட்டைகளின் விளைவாக ஏற்பட்ட குளறுபடிகள் மீண்டும் தோன்றாதிருப்பதை உறுதிசெய்வது முக்கியமானதாகும். அந்த நோக்கில் அரசியல் வர்க்கம் எந்தளவுக்கு விவேகத்துடன் செயற்படுமோ தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆட்சிமுறையின் தோல்விக்கு எதிராக நாடு பூராவும் கிளர்ந்தெழுந்திருக்கும் மக்களின் அரசியல் உணர்வு வெளிப்பாட்டின் பிரகாசமான சின்னமாக கொழும்பு காலிமுகத்திடலில் ஒன்றரை மாதகாலமாக ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு நிற்கும் இளந்தலைமுறையினர் பிரதமர் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுக்கின்ற அரசியல் சீர்திருத்தங்களை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதும் முக்கியமானது.

அபகீர்த்திக்குள்ளாகியிருக்கும் அரசியல் மேல் வர்க்கத்தை பாதுகாக்கும் நோக்கில் வடிவமைக்கப்படக்கூடிய எந்தவொரு ‘மேலோட்டமானதும் துண்டுதுண்டானதுமான’ அரசியல் சீர்திருத்தங்கள் நாட்டின் பொதுவான அரசியல் நெருக்கடியையோ அல்லது ஜனநாயக நெருக்கடியையோ தீர்க்க உதவப்போவதில்லை.

Thanabalasingam-e1653297290887.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10149

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.