Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                   நூல் அறிமுகம்
                                                                                                                   - சுப.சோமசுந்தரம்
         

           எனது நெருங்கிய நண்பர் பேரா.ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் காலத்துக்கேற்ற எளிய உரையொன்று அளித்திருக்கிறார்கள். இவ்வுரைநூல் இம்மாதம் (ஜூலை 2022) 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு அடியேன் அளித்துள்ள அணிந்துரையும், நூலாசிரியர் பேரா.ச.தில்லைநாயகம்  அளித்துள்ள நூன்முகமும் நூலுக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

                                                                                     

                                                                                     அணிந்துரை
             இவ்வையத்திற்கு வாழ்வியல் பாடம் சொன்ன நூல் திருக்குறள் என்பதும், அது காலந்தோறும் காலத்திற்கு ஏற்ப சான்றோரால் பல மொழிகளில் உரை செய்விக்கப்பட்டது என்பதும் உலக அளவில் அறிஞர் பெருமக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் பாமரரும் கூட அறிந்த ஒன்று. அவ்வாறு நம் காலத்திற்கு உகந்த பார்வையுடன் பேராசிரியர் ச. தில்லைநாயகம் அவர்கள் பாமரரும் உணரும் செவ்விய உரையினைத் தமிழிலும்  ஆங்கிலத்திலும் தர வருகிறார் எனக் கட்டியம் கூறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை என் பேறு.
        இவ்வுரையின்   சிறப்பியல்புகளான  எளிமையையும், காலம் தழுவியமையையும் எடுத்தியம்புவது இந்த அணிந்துரையின் மூலமாக எனது சீரிய பணியாக அமையும் என நம்புகிறேன். அதிலும் இங்கு எளிமை எனும் பண்பு உள்ளங்கை நெல்லிக்கனியாய்க்  காணக் கிடைக்கும் ஒன்று. தமிழானாலும் ஆங்கிலமானாலும் உரையினை வாசித்தவுடன் பொருளுணர்ந்து வாசகன் ஒவ்வொரு குறளையும் சரளமாகக் கடந்து செல்லுகையில் உணரற்பாலது இந்த இனிமை கலந்த எளிமை.
           எனவே இது காலத்துக்கேற்ற உரை எனும் கருத்தினை ஒன்றிரண்டு  மேற்கோள்களுடன் சுட்டுவது இந்த அணிந்துரைக்குப்  பொருந்தி அமையும். இஃது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கும் முயற்சியாம்.

          "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
          சான்றோன் எனக்கேட்ட தாய்"

        "மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
         என்நோற்றான் கொல்எனும் சொல்"

என நவிலும் 'மக்கட்பேறு' அதிகார உரைகளில் பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாசிரியர்களும், மு. வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற சில இக்கால உரையாசிரியர்களும் உள்ளது உள்ளவாறு 'மகனை'யே குறிக்கின்றனர். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற தற்கால அறிஞர் பெருமக்கள் மகனுக்குச் சொன்னவாறே உரைத்து, மகளுக்கும் பொருந்தும் எனச்  சுட்டுகின்றனர். நம் உரையாசிரியர் பேரா. தில்லைநாயகம் அவர்கள்  'மகன்' என்ற இடத்தில் பிள்ளைகள் என்று உரைக்கும் உரிமையை எடுத்துக் கொள்வது குறிக்கத்தக்கது.
 குறள் தோன்றிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்குகள் தவிர சான்றோர் அவையிலும், சமர் களத்திலும் ஆண்மகனே வந்து நின்றான். எனவே இவ்வகை அறங்களை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்பது அன்றைக்கு செயற்கையானதொரு  படைப்பிலக்கியத்திற்கு வழி கோலுவதாய் அமைந்திருக்கும். 
"இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை" என்று யவனிகா ஸ்ரீராம் என்ற தற்காலக் கவிஞர் 'தடம்' ஏட்டின் நேர்காணலில் சொன்னதை வாசித்த ஞாபகம். படைப்பாளி தன் காலத்திற்குத்தானே எழுத முடியும்? ஊகத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை எப்படி அவன் நிர்ணயிக்க முடியும்? படைப்பு அவனது காலத்தைக் கடந்து நின்றால், அது அவனை மீறிய தற்செயல் நிகழ்வாகத்தானே அமையும்? காலச்சிறையில் வள்ளுவனே  கட்டுண்ட சில இடங்களில் அவனை விடுவிப்பதற்கான நமது உரையாசிரியரின் முயற்சி போற்றத்தக்கது. அவ்விடுதலையே தற்காலச்  சமூக விடுதலைக்கு வித்திடும் என உணர்வது ஒரு உரையாசிரியரின் கடமையாகிறது. 
அதேவேளை பண்பாட்டு மாற்றத்தை அளவறிந்தே செய்துள்ள விதமும் குறிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக 'வாழ்க்கைத் துணைநலம்' அதிகாரத்தில் பெண்ணுக்கு சொல்லப்பட்டதே ஆணுக்கும் என்று ஆசிரியர்  மெனக்கெடவில்லை. அக்கனவு மெய்ப்படும் வருங்கால உரையாசிரியர்களுக்கு  அதனை முன்பதிவு செய்து வைப்பதே இயற்கையானதாய் அமையும்; ஈண்டு  அமைந்துள்ளது. மேலும், திருக்குறள் கூட அனைத்து இடங்களிலும் காலத்தைக் கடந்து யோசிக்க இயலாது என்பதை வாசகனுக்கு எங்காவது உணர்த்தத்தானே வேண்டும்!

                 "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
                       பெய்யெனப் பெய்யும் மழை"
 என்ற குறளுக்கு, "இத்தகையவள் பெய் என்றவுடன் மழை பெய்யும்" என்று உயர்வுநவிற்சியாகப்  பெரும்பாலும் ஏனையோர் கூற, நம் உரையாசிரியர், "இத்தகையவள் கணவன்  விரும்பும்போதெல்லாம் பெய்யும் மழை போன்றவள்"  என்று இயல்பு கூட்டுகிறார். அவ்விடத்தில், "இத்தகையவள்,  வேண்டும் நேரத்தில் வேண்டிய அளவு பெய்யும் மழை போன்றவள்" என்று மெருகேற்றலாமோ என்று நம் சிந்தனைக்கும் வித்திடுகிறார்.
          தன் காலத்தின்  பகுத்தறிவுவாதியான வள்ளுவன், பெரிதும் ஆணாதிக்க சமூகமாக இருந்த கால கட்டத்தில் ஆணுக்குச் சொன்னதை இப்போது பொதுவில் வைப்பது வள்ளுவனுக்கு உடன்பாடாகத்தான் இருக்க வேண்டும். எனவே அவனை, காலத்தை வென்று நிற்க வைத்துள்ளது கருத்து வேறுபாடு ஆகாது என்பதையும் குறித்தாக வேண்டும்.
           காலம் கருதிய பொருள் கொண்டமைக்கு மேலும் சில மேற்கோள்கள் இவ்வணிந்துரைக்கு அணி சேர்க்கும் என நினைக்கிறேன்.
“மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ 
டியைந்துகண் ணோடா தவர்” (அதிகாரம்: கண்ணோட்டம்; குறள் 576)

     "உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்
     மரம்மக்க ளாதலே வேறு" (ஊக்கமுடைமை; குறள் 600),

    "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண் பில்லா தவர்" (பண்புடைமை; குறள் 997)

என்ற மூன்று குறட்பாக்களிலும் அநேகமாக உரையாசிரியர்கள் அனைவரும் இரக்கமற்ற, ஊக்கமில்லாத மற்றும் பண்பாற்றோருக்கு மரத்தையே உவமையாகக் கூறியுள்ளனர். இயற்கையில் மரத்தின் மேன்மை கருதிய நம்  உரையாசிரியர், வள்ளுவர் இவ்விடங்களில் கூறிய 'மரம்' என்பதை பட்டமரம், மரக்கட்டை என்று விரிவுரைத்தமை  அவரது நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்று பகர்வது.
              பெண்வழிச்சேறலில்  (அதிகாரம் 91) மனைவி சொற்படி நடப்பவரைப்  பொத்தாம் பொதுவாக இழிவாகக் கூறாமல், பண்பற்ற மனைவியின் சொற்படி நடத்தலை இழிவு எனக் கூறுவது நம் கருத்தினைக்  கவர்வது. 
     "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
     வேண்டாப் பொருளும் அது"
என்பதில், "மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார்" என்று கூறும் உரைகளுக்கு மாறாக, "இல்லற சுகத்தில் அளவுக்குமீறி ஈடுபடுவோர் புகழ்பெறார்"  என்று உரையாசிரியர் ச. தில்லைநாயகம் அவர்கள் கூறுவது சமூகத்தில் மனையாளின் மாண்பினையும் காத்து நிற்கும் திறம்.
             வரைவின் மகளிரையும்  (அதிகாரம் 92) தற்கால நோக்கில் பாலியல் தொழிலாளர்களாக அணுகும் பாங்கினைக் காணமுடிகிறது.  அதே சமயம் அவர்களிடம் மதிமயங்குவதை  எக்காலத்திலும் நியாயப்படுத்த இயலாது என்பது மட்டுமின்றி, சில இடங்களில்  நியாயப்படுத்துதல் கருத்து வேறுபாடு ஆகும் என்பதையும் உணர்ந்து கயிற்றின் மேல் திறம்பட நடக்கிறார் நம் ஆசிரியர்.
           ஆங்கிலப் பேராசிரியரான ச. தில்லைநாயகம் அவர்கள், ஓரளவு சுமாரான ஆங்கிலம் அறிந்தவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் உரை செய்திருப்பது இவ்வுரைக்கு அணி  சேர்ப்பதாகும். மேலும், தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்கும் இடையே, சொற் தேடலில் பொருள் சிறிதளவும் வேறுபடவில்லை என்பது சிறப்பு. உதாரணமாக, ஜி.யு. போப் அவர்கள்,
       "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
       மன்னுயிர்க் கெல்லாம் இனிது" எனும் குறளுக்கு

"தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்" என்று கொண்டு கூட்டித் தமிழிலும்,

"Their children's wisdom greater than their own confessed through the wide world is sweet to every human breast" என்று ஆங்கிலத்திலும் தந்துள்ளார். இந்த இரண்டிலும் உள்ளது போன்ற  பொருள் வேறுபாடு நமது உரையாசானிடம் தென்படவில்லை.
          எனவே பொய்யாமொழிக்குத்  தற்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த உரைகளின் வரிசையில் புதிய பரிமாணங்களுடன் இந்நூல் மிளிரும் என்பதில் ஐயமில்லை. இச்சீரிய இலக்கியப் பணியை சமூகப் பணியாகச் சிரம் மேற்கொண்ட பேரா.ச. தில்லைநாயகம் அவர்களுக்கு நம் பாராட்டும் வாழ்த்தும். 


சுப.சோமசுந்தரம்
கணிதப் பேராசிரியர் (ஓய்வு)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி.

 

                                                                                     நூன்முகம் 

 அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
     குறுகத் தறித்த குறள்.    
திருக்குறளின் செழுமையையும் செறிவையும் பலநூற்றாண்டுகளுக்கு முந்தைய தமிழ் மூதாட்டி அவ்வையின் குறட்பா அமைப்பில் அமைந்த இவ்வரிகளைவிட  சுருக்கமாகவும் திருத்தமாகவும் யாராலும் சொல்லிவிட முடியாது. இதற்கும் மேலாக  இக்குறட்பா பண்டைத் தமிழர்களின் கவித்துவத்துக்கும் அறிவியல்  தொழில்நுட்பத்திறனுக்கும் தலைசிறந்த சான்று.
 பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மணக்குடவர், பரிமேலழகர் போன்றோர் முதல் இன்றைய பல்வேறுபட்ட தமிழ்ச் சிந்தனையாளர்களும் தமிழர் அல்லாதவர்களும் திருக்குறளுக்கு உரை எழுதுவதிலும் பிறமொழிகளுக்குப் பெயர்த்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் பேராசிரியர் மு. வ. வின் “திருக்குறள் தெளிவுரை” தற்காலத் தேவைக்கேற்ப எளிமையான மாற்றம் பெற்றது. கடந்த பலபத்தாண்டுகளில் தமிழாசிரியர்கள் மட்டுமின்றிப் பிறதுறை தமிழறிஞர்களும் பிறமொழி தமிழ்ப்பற்றாளர்களும் திருக்குறளுக்கு  எண்ணற்ற உரைகள் எழுதியுள்ளனர்.  பரிமேலழகரைப்போலவே இவர்களும்  தாம் புரிந்து கொண்டவாறு பொருளும், தம் நோக்கத்திற்கு உகந்தவாறு விளக்கங்களும் கொடுத்துள்ளனர்.
    அயல்மொழிகளில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு மலையாளத்தில் 1595இல் தோன்றியது. வீரமாமுனிவர் 1730இல் லத்தீன் மொழியில் அறிமுகப்படுத்தினார். 1794இல் கிண்டெர்ஸ்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல்வராகிறார். தொடர்ந்து பிற மொழி பேசும் இந்திய மற்றும் அயலகத் தமிழ் ஆர்வலர்களும்  இதன் மொழிபெயர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். உலகப்பொதுமறை என்ற புகழுக்கு ஏற்ப பைபிளுக்கும், குரானுக்கும் அடுத்தபடியான இடத்தை மொழிபெயர்க்கப்பட்ட உலகமொழிகளின் எண்ணிக்கையிலும்  மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கையிலும் பெற்றுள்ளது. திருக்குறளுக்கு எனது சிறிய பங்களிப்பாக தமிழ், ஆங்கில உரைகளோடு ஒருசில வரிகளில் ஒவ்வொரு அதிகாரத்தின் கருத்தையும் கொடுத்துள்ளேன்.  .
    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தும் இன்றளவும் தமிழில் வெளியாகும் நூல்களில் திருக்குறளே அதிக அளவில் எடுத்தாளப்படும் பெருமைக்குரியதாக இருக்கின்றது. ஆண்டுதோறும் திருக்குறளை மையமாக வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவருகின்றன. தமிழகக் கோவில்களிலும் பொதுவெளிகளிலும்  திருக்குறள் சொற்பொழிவுகள் பெருமளவில் நடைபெறுகின்றன. ஒரு சில குறள்களையாவது மனத்தில் இருத்தி வேண்டிய வேளைகளில் பொருத்தமாகப் பயன்படுத்தாத தமிழர்களே இல்லை எனலாம். ஒருவரை அறிவுரை சொல்லித் திருத்த வேண்டிய வேளையில் திருக்குறளின் துணையை நாடுவோரை எங்கும் பார்க்கலாம். குறள்களில் காணப்படும் கருத்தைக் கவித்துவத்துடன் எளிதாக விளக்கிச்சொல்லும் பல சொற்றொடர்கள் தமிழ்ப் பேச்சுவழக்கில் எண்ணிலடங்கா. எடுத்துக்காட்டாக, ‘நீர் இன்றி அமையாது உலகு’, ‘கற்க கசடற’, ‘கற்றனைத்தூறும் அறிவு’, ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
    தமிழகத்தின் தலையாயச் சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் தாம் திருக்குறள் வாசிப்பிலிருந்து பெற்ற பயன்களை மிகச்சிறப்பாக இயம்புகின்றனர். பல அறிஞர்களின் நுட்பமான, புதுமையான, வியக்கத்தக்க விளக்கங்கள் நம்  சிந்தனையைத் தூண்டிப் பரவசப்படுத்துவதாக இருக்கின்றன. 
    அதேநேரத்தில் தமிழகத்தை ஆளத்துடிக்கும் அரசியல்வாதிகள் தமிழக மக்களைத் திசைதிருப்பி  தம்வயம் கொண்டுவருவதற்கும் திருக்குறளைப் பயன்படுத்துகின்றனர்.
      இன்றைய சூழலில் நானும் திருக்குறளின் பெருமைகளைப் புகல்வது மிகையானது. ஆனால் இந்நூலை முயன்று முடித்ததற்கான காரணம் என்னிடமும் சில புதிய விளக்கங்கள் உள்ளதால் தான். “தொட்டனைத்தூறும் மணற்கேணி” எனும் வள்ளுவர் வாய்மொழிக்கு வள்ளுவமே நிகரற்ற சான்று.. 
       திருக்குறளை அறிந்துகொள்ள ஆர்வம் அதிகரித்து வரும் இச்சூழலில் நான் பல தமிழ், ஆங்கில உரைகளைப் படித்த போது அவற்றைவிட இன்னும்  எளிமையாக, தெளிவாக, சுருக்கமாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சொல்லமுடியும் என்று தோன்றிய நம்பிக்கையும் இம்முயற்சிக்கு மற்றொரு காரணம். 
    இந்நூலின் தனித்துவம், திருக்குறளை இன்றைய முற்போக்குக் கருத்துக்களுக்கும் பெண்ணுரிமைச் சிந்தனைகளுக்கும் இடம்கொடுத்து முற்போக்காளர்களும் பெண்ணியமும் முன்னெடுத்தச் சொற்களைப் பயன்படுத்தி உரை காணமுடியுமென்று காட்டியுள்ளதே. எந்தவொரு பிரதியும் வாசகனின் வாசிப்பில் தான் பொருள் கொள்கிறது. இவ்வழியில் அறநூல்களின் எல்லாக்காலத்துக்குமான பொருத்தப்பாட்டையும் தேவையையும் நிலைநாட்ட முடியும்.
இந்நூல்வழி தமிழக மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். உரையாடலில் முடிந்தளவு ஆங்கிலக்கலப்பைத் தவிருங்கள். தமிழிதழ்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் முதலாக எங்கும் எதிலும் காணப்படும் கட்டுப்பாடற்ற ஆங்கிலக்கலப்பு தமிழ்மொழியை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்பது திண்ணம். “சூப்பர்”, “ரீட்பன்னி”, “ரைட்பன்னி” போன்ற சொல்லாடல்களையாவது முற்றிலும் நீக்கிவிடுங்கள் என வேண்டி நிற்கிறேன்.
                                                                                                                                                                                                                                                                   அன்புடன்,
                                                                                                                                                                                                                                                             ச. தில்லைநாயகம்


 

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.