Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கள்ளத்தோணி” மனம் பெரும் சுமையாகி கனக்கிறது! – தமிழ்க்கவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“கள்ளத்தோணி” மனம் பெரும் சுமையாகி கனக்கிறது! – தமிழ்க்கவி

Thamilkavi-kallathoni.jpg

கள்ளத்தோணி’ ‘தோட்டக்காட்டார்’ ‘புளிச்சக்கீரை’ ‘கொண்டைகட்டி’ இதெல்லாம் நாங்கள் எம்முடன் பாடசாலையில் படிக்கும் இந்திய வம்சாவழித்தமிழ் சக மாணவர்களை விளிக்கும் சொற்கள். அதன் அர்த்தம் எமக்கு தெரியாவிட்டாலும் எமது பெரியவர்களின் உரையாடல்களிலிருந்து பெற்றவைதான் அந்தச் சொற்கள். பிள்ளைகள் பிறந்தால் அவர்களது தலைமுடியை திருப்பதிக்கோ சிறீரங்கத்துக்கோ நேர்த்தி செய்து வைப்பார்கள். பெண்பிள்ளையானால் போச்சு. ஆனால் ஆண்பிள்ளைகளுக்கு அந்த முடியை ஒரடி ஒன்றரையடி நீளத்தில் பின்னி ரிபண் வைத்துக்கட்டி பாடசாலைக்கு விடுவார்கள். ஆறாம் ஆண்டு படிக்கும் பையன் பின்னலுடன் வருவான். அவனை நண்பர்கள் சக மாணவர்கள் கொண்டைகட்டி என்பார்கள். அப்படியும் ஏழை பணக்காரர் என்ற விதத்தில் நான் இரண்டாந்தரப்பிரசைதான். எனக்கு முதல் வாங்கு கிடைக்காது. அதிகமாக கடைசி அல்லது அதற்கு முன் எனவே என்னைப்போலவே இருக்கும் கறுத்த (வெய்யிலில்அலைவதால்) நாகரீக உடையில்லாத ஒழுங்காக எல்லாப்பாடங்களுக்கும் புத்தகம் கொப்பி இல்லாத அந்த குழுவுடன்தான் எனது சகவாசம் இருந்தது. நானும் அப்படித்தான்.

என் சரவணனின் கள்ளத்தோணியை படிக்கும் போதுதான் அதன் ஆழமும் நீளமும் புரிந்தது. பின்னொரு காலத்தில் நம்மவர்களும் கள்ளத்தோணியில் அவர்களுடைய நாட்டுக்குள் போகப்போவதை அப்போது யாரறிவார். அவர்கள் மீதான எமது அணுகுமுறைகளை இப்போதல்ல, அன்றே நான் வெறுப்பும் ஒரு வருத்தமும் கலந்தே பார்த்திருக்கிறேன். எமது கிராமத்தில் சரளமாக தெருவுக்குத்தெரு அவர்கள் கலந்திருந்தார்கள். அவர்களது விவசாய தொழில் நுட்பங்கள் துலாவில் ஓடி இறைத்த எம்மவருக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இதுபற்றி நான் எனது காடுலாவு காதையில் விபரித்துள்ளேன். எமது கிராமத்துக்கு வந்து குடியேறியோர்  பெரும்பாலும் வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே மன்னார் யாழ்ப்பாணக்கரைகளில் வந்திறங்கியவர்கள். தமக்கென காணிகளைப் பெற்று வாழ்ந்தவர்களும், நிலமுள்ளவர்களின் நிலங்களை குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்தவர்களும் தத்தம் குலத் தொழிலாக செருப்பு தைப்பது வளையல் விற்பது, போன்ற தொழில்களையும் பெருமளவில் துப்பரவுப்பணிகள் செய்வோரும் இருந்தனர். இன்றும் இவர்களுடைய சந்ததியினரே இந்தப்பணியில் உள்ளார்கள்

பெரியாருடைய கொள்கைகளின் வீச்சால் கவரப்படும்வரை எமது வன்னி யாழ்ப்பாணச்சமூகம் இவர்களை தம்முள் ஒருவராக நடத்தியதே இல்லை. கள்ளத்தோணி பல அரசியல் பொருளாதார சமூக நிலைகளின் அடிப்படைகளை கிளறி விட்டாலும், எனக்கு என் சிறு வயதில் அவர்களுடன் வாழ்ந்த காலமும் நாம் அறியாமலே அல்லது எமக்குப் புரியாமலே என் கண்முன் நடந்த அநேக விடயங்கள் நினைவுக்கு வந்து என் தூக்கத்தை கெடுத்தன. இப்போதுமணி இரவு பன்னிரண்டரை தூக்கம் வருவதாயில்லை.

இந்த சம்பவங்களில் எத்தனை அரசியல்வாதிகள் குளிர்காய்ந்துள்ளார்கள். இன்றைய தமிழ்தலைவர்கள் அன்றைய தமிழ் தலைவர்கள் எவராலும் கவனிக்கப்படாத ஒரு இனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பந்தாடப்பட்டதன் பின்னணியில் எவ்வளவு தில்லு முல்லுகள் சுத்துமாத்துகள். ஏவ்வளவு காலமாக மிக கஸ்டப்பட்டு அத்தனை விடயங்களையும் ஆதாரபூர்வமாக கொண்டுவந்திருக்கும் சரவணன் இதை ஒரு ஆன்மீக சுத்தியோடு மலையக மக்களின் மாவீரர்களுக்கு வழங்கியிருக்கிறார். ஏப்போதாவது ஒரு பத்திரிகையின் ஒரு மூலையில் படித்த அந்த செய்திகள் இப்போது வீரியம் பெற்று நிமிர்கின்றன.

“மன்னாருக் கோச்சியேற மனசு சரியில்ல 

 என்மனசுக்குகந்த கண்ணே உன்னை மறக்கமுடியவில்லை.- அடி 

 வாழ வந்த பொண்ணே என்ன மதிமயக்கிய கண்ணே 

 பூமரத்து சிட்டே என் புனுகு சாந்துப் பொட்டே

தேனே ஒன்ன பிரிந்து போக தேம்புதடி எம்மனசு

தேற ஒரு வழியுமில்லடி தேமதுரகிளியே

ஓன்ன அக்கரை இறக்க ஒட்டார் என்ன இக்கரை இறங்க ஒட்டார்

இது இமிக்கிரேசன் சட்டம் அது ஒனக்கும் எனக்கும் நட்டம்”

இது மலையகத்திலிருந்து வன்னிக்கு வந்து எமது தோட்டத்தில் கூலியாக வந்த ஓருவர் பாடிய பாடல்களில் ஒன்று. ஆக அரசாங்கமும் இனத்தில் பிறழ்சாதியினரும் மட்டுமல்ல ஒரே மொழியைப் பேசும் சக தமிழர்களால் வஞ்சிக்கப்பட்ட பலரை எனக்குத் தெரியும். குடியுரிமையற்றவர்களை கைது செய்து நாடுகடத்திய காலத்தில் ஒருநாள் எமது வீட்டின் முன்னே ஒருவரது வாகனத்தரிப்பிடத்தில் சிறு மறைப்படைத்து வாழ்ந்த ஒரு குடும்பம் குத்தகைநிலத்தில் மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டிருந்தார்கள். திடீரென ஒரு மத்தியானப்பொழுது ஒரு பொலீஸ் வாகனம் வந்து அவர்களை குடும்பத்துடன் இழுத்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பறந்தது. அவர்கள் கள்ளக்குடியேற்றக்காறர்களாம்  என்றார்கள். நாங்கள் ஓடிப்போய் அந்த வீட்டை எட்டிப்பார்த்தோம். சாப்பிட்ட பாத்திரங்கள் சிதறிக்கிடந்தன. அவர்களை எச்சிக் கைகழுவக்கூட அனுமதிக்கவில்லை. முதன்முதலாக நான் கண்ட குடிப்பெயர்வு. அது என்னைக் கலக்கியது. அதன்பின் இதே போல பல. காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர்களது செழிப்பான பயிர்களை தமதாக்கிக் கொள்ள முனைந்த நிலச் சொந்தக்காரர்களின் மொட்டைக்கடுதாசிகளே. 

இனக்கலவரங்களின் பட்டியல் நான் அறிந்த வரையில் 1915என்றுதான் நினைத்திருந்தேன். அதற்கு முன்னும் நடந்த கலவரங்கள் அதன்காரணங்களோடு மிகத் துல்லியமாக தந்துள்ளது ஆச்சரியம். போராட வலுவற்ற ஒரு குழுமம் போராடியே தீர வேண்டும் என்ற அழுத்தங்களின் பின்னணியில் தன்னெழுச்சியுடன் போராடியது எனற செய்தி இதுவரை இருட்டில் கிடந்துவிட்டது. உண்மையில் கள்ளத்தோணிக்காக சரவணன் பெரும் முயற்சியை முதலீடாக்கியுள்ளார். இதற்காக மலையகம் மடடுமல்ல நாங்களும் அவருக்குத் தலைவணங்குகிறோம். 

மக்களை பங்குபோட்ட இலங்கை இந்திய அரசுகளின் பச்சோந்தித்தனத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கும் பாங்கு அருமை. ஒரு வரலாற்றை எழுதும் போது முன்பின் சாயாமல் தேதிவாரியாக நிர்ணயித்து சம்பவங்களை கோர்த்தெடுத்து வாசிப்பவர் சோர்வடையாமல் தருவது யாருக்கும் அரிதாகும். சரவணனுக்கு அது கைவந்த கலையாக படிந்திருக்கிறது. அவரிடம் தேர்ந்த அரசியற் தெளிவும் மக்களின் மீதான கரிசனமும் இதை யாருக்காக எழுதுகிறாரோ அவர்களுக்கும் புரியும் வண்ணம் இலகுநடையிலும் சொல்லியிருக்கிறார். புத்தகத்தை மூடும்போது மனம் பெரும் சுமையாகி கனக்கிறது.
 

 

http://www.namathumalayagam.com/2023/05/kallathoni.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரவணனின் “கள்ளத்தோணி” ஆதி அந்தமாக அலசும் ஒரு நூல் யமுனா ராஜேந்திரன்

038-6x9-Paperback-Upright-Front-Back-COVERVAULT.jpg

ஐந்து இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும். மூன்று லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை தரப்படவேண்டும். இதுவன்றி ஒரு இலட்சத்து ஐம்பதாயிம் பேரை இந்தியாவும் இலங்கையும் சமமாகப் பிரித்துக் கொண்டு குடியுரிமை தரப்பட வேண்டும். இரத்தமும் சதையும் உணர்வுமாக, இயற்கை ஜீவிகளாக வாழ்ந்த மானுட இனம் வெறும் எண்களாக மட்டுமே எஞ்சிய துயர நாட்கள் அவை.

அவர்கள் ஒரு நூற்றாண்டின் முன்பு பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்தால் தேயிலைத் தோட்டங்களிலும் துப்புரவுத் தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு, காலமாற்றத்தில் மலையக மக்கள் என அழைக்கப்பட்டவர்கள்.

காலனியவாதிகளால், இந்திய இலங்கை அரசுகளால் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள்.

எழுபதுகளில் இவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் சார்ந்த ஊட்டியிலும் தேயிலையும் காப்பியும் விளைகிற கோத்தகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களிலும் குடியமர்த்தப்படுகிறார்கள்.

இவர்களில் சிறுபகுதியினர் நான் வாழ்கிற இடத்திலிருந்து குறுந்தொலைவில் போப் காலேஜ் எனும் இடம் தாண்டி ஒதுக்குப்புறமான இடத்தில் குடியமர்கிறார்கள்.

இலங்கையில் இந்தியப் பூர்வீகத் தமிழர் என விரட்டப்பட்ட இவர்கள் தமிழகத்தில் சிலோன் தமிழர் எனும் அடையாளம் இடப்பட்டு ஊர்களின், நகர்களின் ஒதுக்குப் புறத்தில் காலனி என அழைக்கப்பட்ட இடங்களில் வாழலாயினர்.

இந்திய தமிழக சாதி அடுக்கில் காலனி என்பது தலித் மக்கள் வாழம் குடியிருப்புகள். மலையகத் தமிழர் அல்லது அல்லது சிலோன் தமிழர் அல்லது நாடு திரும்பிய பூர்வீக இந்தியத் தமிழர் இவ்வாறுதான் ஓரநிலை மக்களாக இந்திய அரசினால் நடத்தப்படலாயினர்.

பள்ளிப் படிப்பு முடித்த பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி அரசியலில் ஈடுபட்ட எழுபதுகளின் நாட்களில் ஒன்றில்தான், சிலோன் தமிழர் குடியிருப்புக்குச் செல்ல சேர்ந்தது. இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த எம் போன்றோர்க்கு மலையகத் தமிழர் பற்றிய எமது அறிதலின் முதல் பதிவாக பொன்விலங்கு-குறிஞ்சி மலர் போன்ற நாவல்களை எழுதிய நா பார்த்தசாரதியின் மேகங்கள் மூடிய அந்த மலைகளின் பின்னால் எனும் குறுநாவல் அமைந்தது.

எண்பதுகளின் ஈழ விடுதலைப் போராட்ட ஊழி தமிழகத்தின் சிற்றூர்கள், பெருநகர்களைப் புரட்டிப்போட்டது. இலங்கை வாழ் வட கிழக்குத் தமிழர்-மலையகத் தமிழர்-கொழும்புத் தமிழர் என மூவகைத் தமிழர்கள் பற்றிய வாசிப்பு என்பது எமக்கு அப்போதுதான் துவங்குகிறது.

ஈழப் போராட்ட இயக்கங்களில் மலையகத் தமிழர் குறித்த ஒரு முழுமையான நுாலை மார்க்சியத்தினால் உந்துதல் பெற்ற இயக்கமான ஈரோஸ் அன்று தமிழகத்தில் போராட்டத்தின ஆதரவாளர்களிடையே விநியோகித்தது.

பிற்பாடுதான் பி.ஏ.காதரின் நுால், தமிழோவியன் கவிதைகள், ஏ.சிவானந்தனின் நாவல், மு.நித்தியானந்தனின் நுால் போன்றவற்றைப் படிக்க நேர்ந்தது. அந்த நூல்களின் தொடர்ச்சியாக வந்திருப்பதுதான் மலையகம் குறித்த ஆய்வு நுாலான சரவணனின் கள்ளத்தோணி.

சரவணனின் நுால் மலையகத்தின் நூற்றைம்பைது ஆண்டுகால கால வரலாற்றை ஆதி துவங்கி சமகாலம் வரை தொகுத்துத் தருகிறது.

ஒரு நூலில் வாசகனுக்கு அறிந்துகொள்ள என்ன இருக்கிறது. அதிலிருந்து அவன் என்ன கற்றான் என்பதுதான் அவனது அறுதித் தேர்வாக இருக்கும். 254 பக்கங்களில் அணிந்துரையையும் முன்னுரையையும் விட்டுவிட்டால் நுாலில் 23 கட்டுரைகள் இருக்கின்றன.

கட்டுரைகளின் அடிநாதமாக நடந்து முடிந்து சிங்கள பௌத்தப் பெருந்தேசிய அரசினால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட தமிழர் போராட்டத்தில், வடகிழக்கு, மலையகம், கொழும்பு என முத்தரப்புத் தமிழரிடமும் இருந்திருக்க வேண்டிய புரிந்துணர்வு, ஒற்றுமை போன்றவற்றை அவாவும் கட்டுரைகள், அது இல்லாமல் போனதற்கான பிராந்திய, வரலாற்று. அரசியல் தனித்தன்மை சார்ந்த விஷங்களையும் அலசுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தவிர, பின்வந்த இந்திரா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி போன்றவர்கள் எவ்வாறு தமது சொந்த மக்களுக்குத் துரோகமிழைத்தார்கள் எனும் வரலாற்றைத் தரவுகளுடன் நிறுவுகிறது.

காலனியாதிக்க எதிர்ப்புச் சிங்கள ஆளும்வர்க்கம் எவ்வாறு இலங்கைத் தேசிய விடுதலை என்பதையே மலையகத் தமிழர்கள் அந்நியர்கள் என்பதை முகாந்தரமாக வைத்துக் கட்டைைமத்தது என்பதையும், முத்தரப்புத் தமிழர்களையும் அதன் தொடர்ச்சியான எதிர்மையாக கட்டமைத்தது என்பதையும் கட்டுரைகள் சொல்கின்றன.

துவக்கத்தில் மைையகத் தமிழர் பிரச்சினையில் ஈடுபாடு காட்டிய வடகிழக்குத் தமிழ்த் தலைவர்கள் எவ்வாறு பிற்காலத்தில் சிங்கள அரசின் சேவகர்களாக மாறி அவர்களைக் கைவிட்டார்கள் என்பதையும் பேசுகின்றன.

மேலே சொன்ன தரவுகள் யாவும் இன்று மலையகம் தொடர்பாக எழுதப்படும் வரலாற்று நுால்களில் இருந்து பொதுவாகவே நாம் தொகுத்துக் கொள்ள முடிகிறவைதான்.

இந்த நூலின் குறிப்பான சிறப்பம்சமாக நான் காண்பது, இனவாதம் என்பதையும் தாண்டி மலையகத் தமிழர் பிரச்சினையில் இருக்கிற சாதி சார்ந்த தரவுகளையும் அது சார்ந்த ஒப்பீட்டுரீதியிலான தமிழர் அரசியலையும் பேசும் கட்டுரைகளை இந்த நுால் கொண்டிருக்கிறது என்பதுதான்.

மலையகத் தமிழரில் 80 சதவீதமானவர்கள் தலித்துகள்தான். 20 சதவீதமானவர்கள் சமஸ்கிருதமயமாதலை வாழ்முறையாக் தேர்ந்த இடைநிலைச் சாதியினர். தமிழகச் சாதியப் படிநிலையில் நிலவுகிற முரண்கள், அதிகார மனநிலைகள அண்மைக் காலத்தில் மலையகத்தில் வேகம் பெற்றிப்பதை குறிப்பாக இந்நூல் தரவுகளுடன் சுட்டுகிறது.

ஈழத்திலும் தமிழகத்திலும் இப்போது முனைப்புப் பெற்றிருக்கும் சைவபார்ப்பனிய, இந்துத்துவ அரசியல் கூட்டுடன் இணைவைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இது.

வரலாற்றை இடதுசாரி நோக்கில் இருந்து அணுகுபவனாக, எனக்குப் புதியன கற்பதாகவும் மகிழ்வுக்கூடியதாவும் இருந்த கட்டுரைகள் நாடு, இன. மத, நிற, சாதிய மனநிலை தாண்டிய உன்னதமான சில மனிதர்கள் குறித்த கட்டுரைகள்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து இலங்கை வந்து மைையகத் தமிழர் வாழ்வு மேம்பாட்டுக்குத் தம்மை ஒப்புவித்துக் கொண்ட நடேசய்யர் தம்பதிகள், இங்கிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியா வழி மலையகம் வந்து ஒரு சாகசவாதியாக வாழ்ந்து மலையகத் தமிழரின் போராட்டங்களில் பங்கு கொண்ட மார்க் அந்தனி பர்ஸ்கேடல் போன்றவர்கள் பற்றிய கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட கட்டுரைகள்.

எந்த உரிமைப் போராட்டமும், மிகச் சாதரணமான மனிதர்களின் அசாரணமான தருணத்தில் நிகழும் உயிரீகத்தினால்தான் அதன் கொதிநிலையை அடைகின்றன. அப்படியான ஒரு மாமனிதன் பற்றிய எழுத்து மலையைகத் தொழிலாளி வரக்கத்தின் முதல் தியாகியான முல்லோயா கோவிந்தன் பற்றிய உணர்ச்சிகரமான கட்டுரை.

இறுதியாக இரண்டு பிரச்சினைகள். ஒன்று இனவாதத்தைக் கடக்க முடியாத வர்க்கப் பிரக்ஞையின் வரலாறாகவே இலங்கை இடதுசாரிகளின் வரலாறு இருக்கிறது என்பதை இடதுசாரிக் கட்சிகளின் தளும்பல்களை முன்வைத்து இந்நூல் சுட்டிச்செல்கிறது.

பிறிதொன்று, நூலின் அரசியல் தொனியின் நீட்சியாக சுய அனுபவத்தில் இருந்து தலித்தாகத் தானும் தலித் அல்லாத இடதுசாரிகளும் தமது அன்றாடத்தில் சாதிகடந்த பிரக்ஞை நோக்கி நகர்வதை மிகுந்த வலியிடன் நூலின் இறுதி மூன்று கட்டுரைகள் பேசுகின்றன.

இந்த நூலின் இருவகைப் பண்புகள் கொண்டவை.

ஒன்று ஆய்வுகளைத் தொகுத்துத் தரும் பண்பு. மலையக வரலாறு குறித்த கட்டுரைகள் அந்தப் பண்பு கொண்டன.

பிறிதொன்று நிலவும் வரலாறாக ஆய்வுகள் குறித்த மறு ஆய்வு. வரலாற்றின் பின்னிப் பிணைந்துள்ள, அதிகம் பேசப்படாத விஷயங்களை முக்கியத்துவப்படுத்தி நுணுகிச்சென்று பேசுபவை இவை. சாதியம். இடதுசாரிகள், உன்னதமான போராளிகள் பற்றியது அக்கட்டுரைகள்.

மலையகம் குறித்த பிரச்சினைகளை ஆதி அந்தமாக அலசும் ஒரு நூல் என சரவணனின் கள்ளத்தோணி நுலைச் சொல்வேன்.

 

நன்றி - ஜீவநதி
 

http://www.namathumalayagam.com/2023/05/kallathoni_0728729330.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.