Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜராஜ சோழன் பிறந்த ஊர் எது? இப்போது எப்படி இருக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சோழர் வரலாறு
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன். க
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சோழ சாம்ரஜ்ஜியத்தின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற மன்னர்களில் ராஜராஜ சோழன் மிக முக்கியமானவர்.

அவருடைய பிறப்பும், பதவி ஏற்பும், இறப்பும் இன்றளவிலும் பேசு பொருளாகவே இருந்து வருகிறது.

அவரது தாய், அவரது பூர்வீக ஊர், ஆகிய விஷயங்களைப் பற்றிய முழு தகவல்களை அறிந்துகொள்ள, அக்காலத்தில் மலையமானாடு என்று அழைக்கப்பட்ட நடுநாட்டின் தலைநகரான திருக்கோவிலூருக்கு பயணித்தோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இறங்கி தென்பெண்ணை ஆற்றை நோக்கி நடந்தோம். மிகப் பரந்த மணல் பரப்பை கொண்ட தென்பெண்ணை ஆற்றின் கரை அருகில் கபிலர் குன்றை தாண்டி வீரட்டானேஸ்வரர் கோவிலை அடைந்தோம். அங்கு தற்போது கோவிலை புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

 

அகநானூற்றுப் பாடலில் துஞ்சா முழுவிற் கோவல் என்றும் புறநானூற்றில் முரண்மிகு கோவலூர் என்றும் குறிப்பிட்ட இந்தப் பகுதி கோவில் கல்வெட்டில் படிக்கும் பொழுது திருக்கோவிலூர் என்றே பொறிக்கப்பட்டுள்ளது. அழகிய கோவில்கள் நிறைந்த இந்த ஊர் வரலாற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய வரலாற்றில் சோழர்கள் வம்சம் நீண்ட காலம் புகழ்பெற்று இருந்ததற்கும் தற்பொழுது பேசப்பட்டு வருவதற்கும் மிக முக்கிய காரணமே இந்த திருக்கோவிலூர் தான். மலையமான்கள் ஆண்ட இந்த பகுதியில் திருக்கோவிலூரை ஆண்ட மலையமானின் மகளாகப் பிறந்த வானவன் மாதேவி தான், தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயத்தை இன்றளவிலும் தலை நிமிர்ந்து பார்க்கும் படி செய்த ராஜ ராஜ சோழனின் தாயார்.

சோழர் வரலாறு

திருக்கோவலுர் இளவரசியை மணந்த சுந்தர சோழன்

திருக்கோவலூரைப் பற்றி விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் கூறும் போது, கடந்த காலங்களில் திருக்கோவிலூர் பகுதி மலையமானாடு என்று அழைக்கப்பட்டது, என்றார்.

“கி.பி. 912 முதல் கி.பி. 949 தக்கோலப் போர் நடக்கும் வரை சோழர்கள் மலையமானாட்டை ஆண்டு வந்தனர். கிபி 949 தக்கோலப் போரில் மூன்றாம் கிருஷ்ண தேவனால் முதல் பராந்தகனின் முதல் மகன் ராஜாதித்தன் கொல்லப்பட்டான். இதனால் சோழர்களின் ஆட்சி மலையமானாட்டில் சிறிது காலம் இல்லாமல் போயிற்று என்ற போதிலும் கி.பி. 965 -ஆம் ஆண்டுக்கு பிறகு சோழர்களுடைய ஆட்சி திருக்கோவிலூர் பகுதியில் நிரந்தரம் ஆகிவிட்டது,” என்றார்.

சோழர் வரலாறு

மேலும் பேசிய அவர், சுந்தர சோழன் திருக்கோவிலூர் மலையமானின் மகளை மணந்தவன். இவருக்கு தேவிஅம்மன், வானவன்மாதேவி என்ற இரண்டு மனைவிகள் உண்டு என திருக்கோவிலூர் கல்வெட்டு கூறுகிறது. இதில் வானவன் மாதேவி திருக்கோவிலூரை ஆண்ட மலையமானின் மகள் என்பதை தெளிவுபடுத்துகிறது," என்றார்.

“மேலும் வானவன்மாதேவி கணவன் சுந்தர சோழன் மீது மிகுந்த அன்பு கொண்டவள் அதனால்தான் இந்த மன்னன் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலமாகவும் அறியலாம். மேலும் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயில் கல்வெட்டிலும் இது தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும் பேசிய அவர், சுந்தர சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்தவர்களே ஆதித்த கரிகாலன், அருண்மொழி தேவன் எனும் ராஜராஜ சோழன் என்ற இரண்டு மகன்களும், குந்தவை எனும் பெண்ணும் ஆவார்கள் . தொடர்ந்து கல்வெட்டு பாடலையும் தெளிவாக படித்துக் காட்டினார்.

ஆதாரமான கல்வெட்டு

ராஜராஜ சோழன், சோழர்கள், திருக்கோவிலூர், வரலாறு, தஞ்சாவூர்
 
படக்குறிப்பு,

திருக்கோவிலூர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ராஜராஜன் பிறப்பைப் பற்றிய சான்றுகள் உள்ளன

தொடர்ந்து, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் வெங்கடேசன் ராஜராஜ சோழன் பிறந்த ஊர் திருக்கோவிலூர் என்பதற்கு ஆதாரமாக இருக்கும் கல்வெட்டை முழுவதுமாக படித்து அதை விளக்கிக் கூறினார்

"திருக்கோவிலூர் மலையமான் வம்சத்தில் பிறந்த வானவன் மாதேவிக்கும் சுந்தர சோழனுக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் ராஜராஜ சோழன். இது பற்றி திருக்கோவிலூர் கோவிலில் உள்ள கல்வெட்டில், இந்தக் குழந்தை இந்திரனுக்கு ஒப்பானவன். மான் வயிற்றில் பிறந்த புலியானவன்," என்றும் கூறப்பட்டுள்ளது என்றார்.

"இந்நிலையில் காஞ்சிபுரத்தில் மாளிகையில் இருக்கும் பொழுது சுந்தர சோழன் இறக்கின்றான்.

"தன் கணவன் இறந்த செய்தியறிந்து உடன்கட்டை ஏற வானவன் மாதேவி தயாராகிறார். வீரட்டானேஸ்வரர் கோவில் அருகில் தென்பெண்ணை ஆற்றில் உள்ள கபிலக்கல்லில் உடன்கட்டை ஏறுகிறார். இதை திருக்கோவிலூர் கீழையூர் கோவில் கல்வெட்டு தெளிவாக கூறுகிறது. இதையே திருவாலங்காடு செப்பேடுகளும் கூறுகிறது என்று அந்தப் பாடலைப் படித்தும் காண்பித்தார்.

'திருக்கோவிலூரின் தொப்புள் கொடி உறவு தான் ராஜராஜன்'

ராஜராஜ சோழன், சோழர்கள், திருக்கோவிலூர், வரலாறு, தஞ்சாவூர்
 
படக்குறிப்பு,

வீரட்டானேஸ்வரர் கோவிலின் தலைமை குருக்கள் சுந்தரமூர்த்தி

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலின் தலைமை குருக்கள் சுந்தரமூர்த்தி கல்வெட்டு இருக்கும் இடத்தை காண்பித்து அதைப்பற்றி எடுத்துக் கூறினார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்வெட்டை ஆய்வாளர் நாகசாமி கண்டுபிடித்தார், என்று கூறிய சுந்தரமூர்த்தி, மேலும் தொடர்ந்தார்.

“தொடர்ந்து 10 நாட்கள் இங்கு தங்கி இந்த கல்வெட்டு முழுக்கவும் படித்து ஆவணப்படுத்தினார்கள். இந்தக் கல்வெட்டில் இருந்து தான் ராஜராஜசோழன் இங்கே பிறந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல வருடங்களாக ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து இந்த கல்வெட்டு மற்றும் கோவில் கட்டமைப்புகளையும் ஆர்வமுடன் பார்த்து வியந்து வருகின்றார்கள். இது எங்களுக்கு பெருமையாக உள்ளது,” என்று கூறினர்.

மேலும், "மலையமானாட்டின் தொப்புள்கொடி உறவாகத்தான் தஞ்சாவூரை நாங்கள் பார்க்கின்றோம்," என்று கூறி முடித்தார்.

சோழ வரலாற்றின் நான்கு காலகட்டங்கள்

சோழர் வரலாறு

சோழர்களின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர்கள் நான்கு காலகட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

ஆரம்பகால சோழ வம்சம் என கருதப்படுபவர்கள் சங்ககால சோழர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றின தெளிவான ஆதாரப்பூர்வமான தகவல்கள் ஆவணப்படுத்தப்படவில்லை.

சங்ககாலத்திற்கு பின்பு 600 ஆண்டுகளாக சோழர்கள் என்ன ஆனார்கள், எங்கு சென்றார்கள் என்ற விவரம் இல்லை. இது சோழ வரலாற்றின் இருண்ட பகுதியாகவும் இரண்டாவது பாகமாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள்.

கி.பி. 846ஆம் ஆண்டுக்கு பிறகுதான் சோழ வம்சம் நிகழ்த்திய சாதனைகளை வரலாற்றுப் பக்கங்கள் தனித்தன்மையுடன் சுமந்து நிற்கின்றது. 846ஆம் ஆண்டு சோழ வம்சத்தின் மறுபிறப்பாகும். மன்னர் விஜயாலயன் காலத்திலிருந்து தொடங்கும் சோழர்களின் காலம் பொற்காலம் என்று கருதப்படிகிறது. இது அவர்களின் மூன்றாம் பாகமாக கருதப்படுகிறது.

அதன் பிறகு நான்காவதாகவும் இறுதியானதாகவும் சுட்டிக்காட்டப்படும் காலம். பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய குலோத்துங்க சோழனின் சாளுக்கிய சோழ வம்ச காலமாகும். கி.பி. 1279ஆம் ஆண்டு மூன்றாம் ராஜேந்திர சோழ மன்னனுக்கு பின் சோழ வம்சத்தின் ஆளுமை முடிவுக்கு வந்தது.

பிற்கால சோழர்களில் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் மிக முக்கியமானவர்கள். இதில் சோழ நாட்டுப்பகுதியை செழுமையான, வலிமையான நாடாக உருவாக்கியதில் ராஜராஜ சோழனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ராஜராஜன் தனது ராணுவத்தில் 30-க்கும் மேற்பட்ட படைப்பிரிவுகளை வைத்திருந்ததை தஞ்சை கோவில் கல்வெட்டு மூலம் அறியலாம்.

https://www.bbc.com/tamil/articles/c97nn23en90o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜ சோழன்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை துல்லியமாக அளவிட பயன்படுத்திய 'உலகளந்தான் கோல்'

ராஜராஜ சோழன்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மாயகிருஷ்ணன். க
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 ஜூலை 2023

500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வீர சோழபுரத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய அரசு வரிச்சலுகை வழங்கியதையும் நிலங்களை அளக்க பயன்படுத்திய நில அளவுகோல்கள் நீளத்தை மாற்றி அமைத்து அதை வரைபடமாக வெட்டி வைத்ததையும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் நாட்டில் அரசாங்கம் என்பது அந்த காலம் முதல் இந்த காலம் வரை மக்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது. தற்பொழுது வழங்கப்படும் இலவச திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் என பல்வகைப் பெயர்களில் வழங்கப்படும் திட்டங்கள் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக செயல்பட்டது சோழ அரசு. அவர்கள் பயன்படுத்திய நில அளவுகோல் மற்றும் நாயக்கர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் உள்ளிட்ட விவரங்களை இந்த கட்டுரையில் காண்போம்.

 

16 சாண் அளவுகோல்

நில அளவுகோல்கள் மற்றும் வரிச்சலுகைகள் குறித்த கல்வெட்டு பற்றி தெரிந்து கொள்வதற்காக கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள நகரீஸ்வரமுடைய நாயனார் கோவிலுக்கு நேரடியாக சென்றோம். வேலைப்பாடுகள் நிறைந்த வீரசோழபுரம் நகரீஸ்வரமுடைய நாயனார் கோவிலின் உள்ளே செல்லும் பொழுது ஆங்காங்கே சிதிலமடைந்த சிலைகள் சிதறி கிடந்தன.

எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் ஆலயச் சுவர்கள் வெடிப்பு நிறைந்து காணப்பட்டன. சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய வணிக நகரமாகவும் பெரிய போர்க்களமாகவும் இருந்த இந்த வீர சோழபுரம் தற்பொழுது கேட்பாரற்று கிடக்கின்றது என்ற போதிலும் அவ்வப்பொழுது வரலாற்று ஆர்வலர்களும் தொல்லியல் துறை சார்ந்தவர்களும் வந்து பார்த்து செல்வதாக கூறுகின்றனர்.

 
சோழர்கள்
 
படக்குறிப்பு,

பேராசிரியர் ரமேஷ்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், சோழர்கள் கால நில அளவுகோல் குறித்து விரிவாக பிபிசியிடம் பேசினார்.

“இந்தியாவிலேயே சோழர்கள் ஆட்சி காலத்தில்தான் சோழ மண்டலத்தை பல வள நாடுகளாக பிரித்து நிலங்கள் முழுவதையும் 16 சாண் அளவுடைய கோலால் அளக்கப்பட்டது. இந்த கோல் உலகளந்தான் கோல் எனப்படும். ராஜராஜ சோழன் காலத்தில் இந்த கோலின் உதவி கொண்டு சேனாபதி ராஜராஜ மாராயன் என்பவரின் தலைமையிலான குழு கி.பி.1001- ல் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நில அளவீட்டு பணியை முழுவதுமாக முடித்தது.

அப்போது நாட்டில் உள்ள அனைத்து வகை நிலங்களும் முழுமையாக அளக்கப்பட்டு அதனுடைய எல்லைகள், உரிமையாளர்களுடைய பெயர், விளை பொருட்களாகிய அனைத்து விபரங்களும் ஆவணப்படுத்தப்பட்டன. இதனால் ராஜராஜனுக்கு உலகளந்தான் என்ற பட்ட பெயரும் ஏற்பட்டது. மேலும் நிலப்பரப்பை கணக்கிட வேலி, குழி, சதுரச்சான், சதுரவிரல், சதுர நூல் போன்றவை அலகீடாக பயன்படுத்தப்பட்டது .

இதை தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடியும். இந்த கல்வெட்டின் படி 16 சாண் கோலால் 256 குழி மாவாக என்ற வாக்கியத்தில் இருந்து 16 சாண் நீளம் ஒரு கோலாக கணக்கிடப்பட்டுள்ளது. 256 சாண் ஒரு குழி என பெறப்படும். இது சோழர்கள் கால நில அளவை முறையாகும்” என்று கூறினார்.

சோழர்கள்
 
படக்குறிப்பு,

நிலப்பரப்பை கணக்கிட வேலி, குழி, சதுரச்சான், சதுரவிரல், சதுர நூல் போன்றவை அலகீடாக பயன்படுத்தப்பட்டது .

நில அளவீட்டின் முன்னோடி ராஜராஜன்

மேலை நாடுகளில் நில அளவீடு செய்யும் பணி தொடங்குவதற்கு முன்பே மிக துல்லியமாக ராஜராஜ சோழன் அதை செய்துள்ளதாகவும் பேராசிரியர் ரமேஷ் கூறுகிறார்.

“இங்கு நாம் கூர்ந்து நோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நிலத்தை அளந்து அதை பதிவு செய்த வழக்கம் மேலை நாடுகளில் தோன்றியது என்றும் கி.பி. 1085- ஆம் ஆண்டில் தான் நில அளவீடு செய்யப்பட்டதாகவும் கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கு 85 ஆண்டுகளுக்கு முன்பே அதைவிட மிகத் துல்லியமான முறையில் ராஜராஜன் நில அளவைப் பணியை தெளிவாக செய்துள்ளார். இதை தமிழகத்தின் பல்வேறு கல்வெட்டுகள் மூலம் நாம் அறிய முடியும்.

மேலை நாடுகளில் 1620-வரை நிலப்பகுதிகளை கயிறுகள் பயன்படுத்தியே அளந்தனர். ஆனால் ராஜராஜன் காலத்தில் அளவீட்டுக்கு உலகளந்தான் கோல் பயன்படுத்தப்பட்டது. இந்த கோலை கொண்டு கணிதத்தின் உதவியோடு சோழ அதிகாரிகள் துல்லியமாக கணக்கிட்டு நிலத்தை அளந்தனர். இறையிலி நீளமாக இருந்த ஒரு நிலத்தின் பரப்பளவை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு 'முக்காலே இரண்டு மக்காணி அரை காணிக்கு கீழ் அறையே மூன்று மாவின் கீழ் மூன்று மா அரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்காணிக் கீழ் முக்காலே ஒருமா' என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு சதுர அங்குலத்தின் 50 ஆயிரத்தில் ஒரு பகுதி(1/50000Sqr inch) ஆகும்.

இந்த அளவு சிறிய பரப்பு கூட அளவிடப்பட்டு குறிக்கப்பட்டுள்ளது, ராஜராஜன் காலத்து நில அளவைத் தன்மையின் துல்லியத்திற்கு மிகப்பெரிய சான்றாகும். மேலும் உலகளந்தான் கோலின் நீளம் சுவர்களில் கோடுகளாக பொறிக்கப்பட்டு உள்ளது”என்று கூறினார்.

சோழர்கள்
 
படக்குறிப்பு,

முனைவர் அருண்குமார்- கல்வெட்டு ஆய்வாளர்

கூடுதல் வரி வசூலித்த அதிகாரி.. மக்களின் வரிச் சுமையை குறைத்த அரசர்....

நிலங்களை அளப்பதற்கு பயன்பட்ட நில அளவுகோல் வரைந்து வைக்கப்பட்டுள்ள வீரசோழபுரம் கோவில் கல்வெட்டுகள் பற்றி கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் அருண்குமார் தெளிவாக எடுத்துரைத்தார்.

“தற்பொழுது சிறிய கிராமமாக நாம் பார்க்கின்ற இந்த வீரசோழபுரமானது அக்காலத்தில் மிகப்பெரிய வணிக நகரமாகும். எனவே தான் கல்வெட்டிலும் இது வீரசோழபுர பற்று என்று பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஏழு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி. 11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராஜாதி ராஜன் கல்வெட்டு சிறு பகுதி மட்டுமே உள்ளது இது முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியாகும். பெரும்பான்மையான பகுதிகள் சிதைவடைந்துள்ளதால் செய்தியை முழுமையாக அறிய முடியவில்லை” என்று கூறினார்.

இந்த வீரசோழபுரம் கோவிலில் ஏழு கல்வெட்டுகள் உள்ளன. அதில் நான்கு கல்வெட்டுகள் அரசு நிர்வாகத்தை பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

அர்த்தமண்ட வடக்கு சுவர் பகுதியில் கி.பி. 1474-இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு , ‘வீரசோழபுரத்தில் இருந்த அதிகாரி பல ஆண்டுகளாக நாட்டவர்கள் கடைபிடித்து வந்த ஒப்பந்த வரிமுறைகள் அடிப்படையில் அல்லாமல் பலவந்தமாக அல்லது மொத்தமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையாக வரிகளைப் பெற்று வந்ததை அவரின் கல்வெட்டு மூலம் அறிந்து இதனால் இப்பகுதி மக்கள் துன்புறுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, பழைய வழக்கமான வரி வழிமுறையை மீண்டும் கை கொள்ளுமாறும், அதன்படி தற்போது சோடிக் காணிக்கை வரியாக பெறும் 200-பொன்னில் 100-கழித்து மீதம் 100- பொன் மட்டும் வரியாக பெறுமாறும் ஸ்ரீமந் கண்ட நாராயணன் ஆனந்த தாண்டவப் பெருமாள் தொண்டைமானார் உத்தரவிட்டுள்ளார்’ என்ற செய்தியை கூறுகிறது.

அதேபோல் அர்த்தமண்டப தெற்கு அதிஷ்டமான குமுதப்ப பட்டை கல்வெட்டில் இப்பகுதியில் வரி வசூலிக்கும் அதிகாரி எந்த காரணத்தினாலோ ஓடி போனதால் நந்தன வருஷ வருவாய்க்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்ட உத்தரவு, கல்வெட்டாக பொறித்து வைக்கப்பட்டுள்ளது.

சோழர்கள்
 
படக்குறிப்பு,

வீரசோழபுரம் நகரீஸ்வரமுடைய நாயனார் கோவில் (சிவன் கோவில்)

18 அடி நில அளவுகோல் 20 அடிகோலாக மாறிய வரலாறு....

விவசாயத்தில் விளைச்சல் என்பது எல்லா காலமும் இருந்ததில்லை. அந்த காலத்திலும் விவசாயிகள் வறட்சியின் காரணமாக கடும் அவதிப்பட்டு உள்ளனர். அப்பொழுதெல்லாம் வரி கட்ட முடியாமல் அவதிப்பட்டதையும் இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன, என்ற போதிலும் அந்த மக்களை காக்க சலுகைகளும், மானியங்களும் வழங்கி நல்லாட்சியும் தந்துள்ளனர். அதை வீரசோழபுரம் கருவறை தெற்கு அதிஷ்டான கல்வெட்டின் மூலம் அறியலாம் என்று முனைவர்அருண்குமார் கூறுகிறார்.

தொடர்ந்துபேசிய அவர், “பெருவணிக நகரமான இந்த வீரசோழபுரம் பகுதியில் வறட்சி அதிகமானதால் மக்கள் அவதிப்பட்டனர் உடனடியாக ஊர் முக்கியஸ்தர்கள், மக்கள் நேரடியாக அரசரை சந்தித்து முறையீடு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்த அரசர் மகதை மண்டல வீரசோழபுரம் பற்றில் நில வரிகளை குறைக்கும் பொருட்டு அதுவரை வழக்கத்தில் இருந்த 18 அடி நில அளவுகோலை 20 அடி கோலாக மாற்றி நிலங்களை அளந்து வரி நிர்ணயம் செய்யவும், நெல் விலையை சோடி 250 பொன் என்பதிலிருந்து 150 பொன்னாக குறைத்துக் கொள்ளவும் உத்தரவிட்டு வரி செலுத்துமாறு கூறினார். அந்த அளவுகோல் மாதிரியும் 20 அடி நீளத்திற்கு வரைந்து வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மீண்டும் மாற்றி அமைக்கப்பட்ட அளவுகோல்

இதேபோல் வடக்கு அதிஷ்டான குமுதப்பட்டையிலும் நில அளவுகோல் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன் அடி 24 அடியாக உள்ளது. சில வருடங்களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக மக்கள் அரசரிடம் முறையிட்டதன் எதிரொலியாக மீண்டும் அளவுகோலை மாற்றி அமைத்துள்ளதையும் அதை படமாக கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளதையும் இங்கு நாம் காண முடிகிறது.

“இந்த தகவல்கள் அந்த காலத்தில் அரசுக்கும் மக்களுக்கும் இருந்த நேரடி தொடர்பையும் அரசின் வெளிப்படை தன்மையும் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது . கடந்த காலங்களில் மன்னர்கள் ஆட்சி காலத்திலும் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டதையும், நிலங்கள் அளவீடு செய்து கணக்கில் வைக்கப்பட்டதையும் இந்த கல்வெட்டுகள் தெளிவாக உணர்த்துகின்றன”என்று கூறினார்.

நில அளவுகோல்கள் தரும் தகவல்கள்.....

வீரசோழபுரம் நகரிஸ்வரமுடைய நாயனார் கோவிலில் அதிஷ்டான ஜகதியில் இரண்டு நில அளவுகோல்கள் குறித்த கல்வெட்டுக்கள் அதன் நேர் மேலே அதிஷ்டன குமுதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த அளவுகோல்கள் மற்றும் கல்வெட்டுகள் வசுதேவ நாயக்கர், திம்மப்ப நாயக்கர் காலத்தில் ஏறக்குறைய கிபி 1440 ஆண்டு ஆட்சியாளர்கள் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அளவுகோல்களையும் அளந்து பார்த்ததில் நில அளவுகோல்கள் முறையே 20 அடி (237 அங்குலம்) மற்றும் 24 அடி (286 அங்குலம்)நீளம் உள்ளன. மேற்கண்ட அளவுகோல்களையும் அதன் நீளங்களையும் அந்த தகவலையும் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சி ராயபாளையம் ஸ்ரீ கச்சி பெருமாள் கோவிலில் உள்ள கி.பி.1447- ஆம் ஆண்டு கல்வெட்டு கூடுதல் தகவலையும் தருகின்றது.

மகதை மண்டல நாட்டவர்கள் ஒன்று திரண்டு அரசிடம் இப்பகுதி மக்கள் வரிச்சுமையால் துன்புறுவதை எடுத்துக் கூறி அதனைப் போக்க தற்போது உபயோகித்து வரும் 18 அடி நில அளவுகோலை 20 அடியாக மாற்றி அதன் அடிப்படையில் புதிய வரிகளை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி கேட்ட தகவலையும் அதற்கு அரசர் இசைந்து அவ்வாறே செய்து கொள்ளுமாறும் கூறியதை கச்சி ராயபாளையம் கச்சிபெருமாள் கோவில் குமுதப்பட்டையில் ஆணையாக உள்ளதை இன்றும் காணலாம்.

அதேபோல் கள்ளக்குறிச்சி அருகே கூகையூர் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோவிலிலும் நில அளவுகோலும் அது குறித்த கல்வெட்டுகளும் தெளிவாக காணப்படுகிறது. அதை தற்பொழுதும் நாம் காண முடியும் என்று அருண்குமார் கூறினார்.

சோழர்கள்
 
படக்குறிப்பு,

நில அளவீடு செய்ய பயன்படுத்தப்பட்ட செயின்கள்

சோழர்கள் காலத்தில் இத்தகைய நில அளவீடு முறைகள் இருந்த நிலையில் தற்போது எத்தகைய அளவீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன என்று கள்ளக்குறிச்சி மாவட்ட நில அளவை துறையின் உதவி இயக்குனர் நாகராஜனிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “தமிழ்நாட்டில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஷ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : சதுர மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்.

தற்போது எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் அளவீடு செய்யப்படுகிறது. லிங்க்ஸ் என்று சொல்லப்படக் கூடிய செயின் மூலமான அளவிற்கு பிறகு தற்பொழுது மெட்ரிக் அதாவது டேப் வைத்து நிலங்கள் அளவீடு செய்யப்படுகிறது . தற்பொழுது அதைத் தாண்டி ஜியோ மெட்ரிக் என்று சொல்லப்படக்கூடிய மிக துல்லிய அளவிடும் பயன்படுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.

அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில் பல்வேறு அளவீடு முறைகள் பயன்பாட்டுக்கு வந்த போதிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள் மிக துல்லியமான அளவீடு செய்ததையும் அதன் அளவீட்டு முறையையும் தஞ்சை பெரிய கோவிலில் பொறித்து வைத்துள்ளார்கள். இது சோழர்கால நில அளவீடுகளின் துல்லியமான தன்மைக்கு மிகப் பெரிய சான்றாகும்.

https://www.bbc.com/tamil/articles/cv2kyegl1zyo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.