Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

  வீரமும் ஈரமும்                                              - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                 வீரமும் ஈரமும்
                                                                                           - சுப. சோமசுந்தரம்

        தமிழரின் சங்க கால வாழ்வியலில் காதலும் வீரமும் தலையாயவை என்பதை மன்பதை அறியும். காதல் ஒரு மென்மையான உணர்வு என்பது வையத்தார்க்கு யாரும் சொல்லாமலே தெரிவது. சிலரே அதனை முழுமையாய் உணர்வர் என்பது தனிக் கதை. அக்கதை
"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்"
                                   (குறள் 1289)
எனும் வள்ளுவத்தால் உணரற்பாலது. தொடக்கம் முதலே மென்மையானதாய்க் காதலை வகைப்படுத்தலாம். கடமை, கொள்கை உறுதிப்பாடு போன்றவற்றால் வீரமானது முதலில் சற்றே கடுமையாய்த் தோன்றினாலும், தமிழர் தம் வாழ்வியல் நெறியில் அதுவும் மென்மையாய் நிறைவுறுவதே என்று சுருக்கமாய் எடுத்தியம்புவது இந்த எழுத்தின் நோக்கம். மென்மையாய் நிறைவுறும் வீரம் அதற்கான ஊடகமாய் காதல், தாய்மை போன்ற மெல்லிய உணர்வுகளின் துணைக் கொண்டே வருவது இன்றியமையாதது.

           புறநானூற்றுத் தாய் ஒருத்தி தன் மகன் தான் களத்தில் விழுவதற்கு முன் களிற்றியானை (ஆண்யானை) ஒன்றை வேல் எறிந்து வீழ்த்தினான் என்று அறிந்து அவனை ஈன்ற பொழுதை விடப் பெரிதும் உவந்தாள். அது வீரம் பற்றிய புறநானூற்று பாடல் ஒன்றின் முதற்பகுதி. அத்தோடு முடிந்தால், "அவள் ஒரு வீரத்தாய் மட்டும்தானா ? தாய் இல்லையா ? மகனை இழந்த செய்தி கேட்டதும் தனது உலகமே இருண்டது போன்ற இயற்கை உணர்வெல்லாம் ஒரு வீரப் பெண்மணிக்கு ஏற்படாதா ? வீரம் என்பது உணர்வற்ற வறட்டுத்தனம்தானா ?" என்ற கேள்விகள் எழ வாய்ப்பு உண்டு. இக்கேள்விகளுக்கு விடையைப் பாடலில் பிற்பகுதி தருகிறது. மூங்கிலின் உட்தங்கிய மழைநீரானது காற்றில் மூங்கில் அசையும் போது வடியும் அல்லது சிதறுமே, அதைவிடப் பல மடங்கு அவளது கண்கள் நீரை வெளிப்படுத்தின.
"மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே"
                              (புறநானூறு 277)

பொருள் விளக்கம் :
மீன் உண் கொக்கின் தூவி அன்ன - மீனை உண்ணும் கொக்கின் இறகினைப் போன்ற;
வால்நரைக் கூந்தல்தூய்மையாகவும் நரைத்தும் இருக்கும் கூந்தலை உடைய;
முதியோள் சிறுவன் - முதியவளின் மகன்;
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - ஆண்யானையை வேல் எறிந்து வீழ்த்திய பின்னரே தான் விழுந்தான் என்னும் செய்தி அறிந்த மகிழ்ச்சி;
ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதே;
வெதிரத்து - புதரில்;
துயல்வரும் - அசைந்தாடும்;
நோன் - வலிய;
கழை - மூங்கில் கழியில்;
வான் பெய - மழை பெய்யும் போது;
தூங்கிய - தங்கிய;
சிதரினும் பலவே - மழை நீரை விட அதிகமானது (அவளது கண்ணீர்).

             கடமைக்குப் பின் கண்ணீர் எனும் இப்பாடலை நினைவுறுத்திய ஒரு கதையை இங்கு சுருக்கமாகப் பதிவு செய்வது பொருந்தி அமைவது. அக்கதை எங்கோ எப்போதோ வாசித்தது அல்லது கேட்டது. அக்கதையில் ஒரு தந்தை திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் துடித்தார். மகள், "ஐயோ, அப்பா !" என்று அலறினாள். மகன் உடனே அழவில்லை, அலறவில்லை. அவன் கண்களில் பீதி; முகத்தில் கலவரம். சுதாரித்தவன் ஒரு காரை உடனே வரவழைத்துத் தந்தையாரை ஏற்றினான். துணைக்குத் தங்கையை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான். தீவிர சிகிச்சைப் பிரிவில் தந்தை சேர்க்கப்பட்டார். இப்போதுதான் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, வெளியே போட்டிருந்த சோபாவில் அமர்ந்தான். அவனது நெற்றி அவன் கைத்தாங்கலில்; விழியோரம் நீர். சொல்ல வந்த கதை அவ்வளவுதான். ஒரு பெண்ணின் பாச வெளிப்பாடு மென்மையாகவும் ஒரு ஆணின் பாசம் கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியாக வெளிப்படும் என்று அக்கதைசொல்லி கூற வந்ததாக நினைக்கிறேன். ஆண், பெண் என்ற பேதமின்றி வீரம் செறிந்த இடத்தில் கடமை முந்தும்; கண்ணீர் பிந்தும் என்று அதனை எடுத்துக் கொள்ளலாம். புறநானூற்றின் வீரத்தாய் அப்படித்தான் சொல்கிறாள்.

            அடுத்து நம் மனத்திரையில் விரியும் காட்சி இதோ :
போர்க்களத்தில் வினையாடிய அகநானூற்றுத் தலைவனொருவன் கார்காலத்தில் தன் தலைவியைக் காண வீடு திரும்புகையில், வழியே பூத்திருக்கும் சோலையில் கூடி மகிழும் வண்டினங்கள் தேரில் கட்டியிருக்கும் மணியொலியில் கலக்கமுறுமே எனத் தானும் கலக்கமுறுகிறான். ஆகையால் மணியின் நாவினைக் கட்டி வைத்துப் பயணிக்கிறான்.
          
"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்"
       (அகநானூறு;பாடல் 4;வரிகள் 10-12)
பொருள் விளக்கம் :
பூத்த பொங்கர் - பூத்திருக்கும் சோலையில்;
துணையொடு வதிந்த - துணையோடு இணைந்த;
தாது உண் பறவை - மலரின் மகரந்தத்தை உண்ணும் பறவையாகிய வண்டு;
பேதுறல் அஞ்சி - கலக்கமுறும் என தான் கலங்கி;
மணிநா ஆர்த்த - மணியில் உள்ள நாவினைக் கட்டி வைத்த;
மாண்வினைத் தேரன் - மாட்சிமை பொருந்திய வினை செயல்வகை கொண்ட, தேரினையுடைய தலைவன்.

             போரில் களமாடியது தலைவனின் வீரம். தலைவியைக் காண அவனது வேட்கையும், வண்டினத்து உள்ள அதே வேட்கையினை உணர்ந்த செயல் திறனும் அவனது இதயத்தின் ஈரம்.

          அகநானூற்றுத் தலைவன் அவ்வழியென்றால் ஐங்குறுநூற்றுத் தலைவன் எவ்வழி ?
"அரும்படர் அவலம் அவளும் தீரப்
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க
ஏமதி வலவ தேரே
மாருண்டு உகளும் மலரணிப் புறவே"
                (ஐங்குறுநூறு 485)
பொருள் விளக்கம் :
அரும்படர் அவலம் தீர -  (பிரிவினால்) பெரிதும் துயருற்ற அவளது துன்பம் நீங்கவும்;
பெருந்தோள் நலம் வர - (வாடித் தொய்வுற்ற) அவளது பெருந்தோள் நலம் பெறுமாறும்;
யாமும் முயங்க - யான் அணைக்கவும்;
மாமருண்டு உகளும்விலங்கினங்கள் (=மா) மருண்டு திரியும் (=உகளும்);
மலர்அணிப் புறவே - மலர்களால் பொலிவு (=அணி) பெற்ற முல்லை நிலத்தின் (=புறவு) வழியே;
தேரே - தேரினை;
ஏமதி - ஏவுவாயாக;
வலவ - தேரோட்டியே !

           அவளைப் பிரிந்ததால் அவனுக்கு ஏற்படும் துன்பத்தை விட அவளது பிரிவுத் துயரையே முன்னிறுத்துகிறான் தலைவன். அவளது அவலம் தீரவும், வாடிய அவளது தோள் நலம் பெறவும் அணைக்க எண்ணுகிறான். கலவியிலும் அவள் நலம் பேணும் ஈரத்தை அவ்வீரனிடம் படம் பிடிக்கும் நுண்மாண் நுழைபுலம் புலவனுக்கே உரித்தானது போலும்.

         மேற்கூறிய இரு பாடல்களையும் வேறொரு தலைப்பில் சற்றே விலகிய கோணத்தில் கையாண்ட நினைவு. பல்வேறு கோணங்களில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுவதுதானே பாத்திறம் !

          'கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்' என்ற உலகோர் கூற்றினையொட்டி, 'வீரம் இருக்கும் இடத்தில் ஈரம் இருக்கும்' என்று பறைசாற்றுவோமா ?

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.