Jump to content

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 26
 
 
உலகம் தோன்றின நாள் முதல் இன்றுவரை உயிர்கள் அனைத்தும் நம் கண் முன்னால் பல்வேறு இனங்களாக இன்றும் இருப்பதற்கு காரணம் அவை அனைத்தும் ஆண் பெண்ணாக பரணமித்ததே. இன்றைய அறிவு நிலையில் அல்லது பரிணாம நிலையில் , ஆண் மட்டும் பிறந்தோ அல்லது பெண் மட்டும் பிறந்தோ, அவை தமக்குள்ள காதலித்து இணைந்து வாழ்ந்து இருந்தால், இன்று நானும் நீங்களும் மற்றும் ஏராளமான உயிர் இனங்களும் இல்லை!!  
 
ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள உயிர் இனங்கள் பெரும்பாலும் உடலால் மட்டும் இணைகின்றன. ஆனால் ஆறறிவு மனிதன் மட்டுமே உடலாலும் மனதாலும் இணைகின்றன. எனவே தான் மற்ற உயிர்கள் இணைவதற்கு இனப்பெருக்கம் என்றும் மனிதன் இணைவதற்கு திருமணம் என்றும் கூறுகிறோம்.
 
இந்த மனதால் இணைதல் என்ற பண்பு மற்றவற்றில் இருந்து மனிதனை வேறுபடுத்துகின்றது. இனப்பெருக்கம் என்ற ஒரு குறிக்கோளை தாண்டி, பல்வேறு ஒழுக்கங்களை அவன் ஏற்படுத்துகிறான். எனவே அந்த ஒழுக்கங்களுடன் அமைவதே முறையான திருமண உறவு என்று கூறலாம்.
 
திருமணம் என்ற சொல்லில் உள்ள மணம், கூடுதல், கலத்தல் என்று பொருள் படும். அடிப்படையில் இவை இணைத்தல் என்ற விளக்கத்தை பெற்று, இது மங்கள நிகழ்வு என்பதால், ‘திரு’ எனும் அடையைச் சேர்த்து இருவரும் உடலாலும் மனதாலும் இணை வதை திருமணம் என்றனர் முன்னோர்.
 
இதை கரணம், வரைவு கடாதல், கற்புமணம், வதுவைச் சடங்கு, மன்றல், உடன்போக்கு மணம் என்ற சொற்களாலும் அழைத்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றைய சொல் வழக்கில் உள்ள ‘கல்யாணம்’ எனும் சொல் சங்க காலத்தில் இல்லை. அதற்கு பின் நீதி இலக்கியத்தில் ஒன்றான ஆசாரக் கோவையிலும், நாலடியாரிலும் ‘கல்யாணம்’ என்ற சொல் வழங்கப்பட்டிருக்கிறது. கடி மணம் என்ற சொல்லும் வழக்கில் இருக்கிறது. இதை பொதுவாக குடும்பத்தில் நிகழும் பெரிய மங்கல நிகழ்வாக தமிழர்கள் கருதினர். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பெண் வீட்டார் பெண் கொடுக்க ஆண் வீட்டார் பெற்று கொள்ளும் திருமண முறையும் பொருள் கொடுத்தும் திறமையின் அடிப்படையிலும், போர் நிகழ்த்தியும், காதல் நிகழ்விற்கு பின்னரும் என பல வகையில் திருமணம் நிகழ்ந்திருக்கின்றது.
 
உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து எதோ ஒருவகையில் நான் குடும்பத்தன் என்பதை காட்ட தனி முத்திரை இடப்படுவது இயல்பு. அந்த வகையில் இன்று மாப்பிள்ளை பொண்ணுக்குத் தாலிகட்டுவது தான் கல்யாணம் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால், சங்க காலத்தில், அப்படி இல்லை;
 
தாலியைப் பற்றிய எந்த குறிப்பையும் அங்கு காண முடிய வில்லை. என்றாலும் அப்படி ஒரு பழக்கம் இல்லை யென்று உறுதியாக கூறிவிட முடியாது. உதாரண மாக அகநானூறு 7 இல், ”பொன்னொடு புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி” என்ற ஒரு வரியையும், குறுந்தொகை 67 இல், புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப பொலங்கல ஒருகா சேய்க்கும் என்ற ஒரு வரியையும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். இவையே நாளடைவில் மாற்றம் பெற்று சங்கம் மருவிய சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் வருவதற்கு வழிவகுத்தும் இருக்கலாம்,
 
உதாரணமாக, சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில், “முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந் தன பணிலம், வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது” என்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருவதைக் காணலாம். அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். “முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம் அல்லது hall) மங்கல அணி எழுந்தது” என்று உணர்த்துகிறார்.
 
என்றாலும், அகநானூற்றுப் பாடல்களில் பழைய திருமணச் சடங்குகளை சொல்லும் பாடல்கள் இரண்டு (86, 136) இருக்கின்றன. இரண்டு பாடல் களிலும் ஐயரோ, நெருப்போ இல்லை. ஒரு பாடல் மட்டும் கடவுளை கும்பிட்டதாக குறிக்கிறது. ஆனால் கடவுள் பெயர் இல்லை. தாலி இல்லை. ஆனால், திருமணம் நடத்த நல்ல நாள் நாள் பார்ப்பது, புதுத் துணி உடுப்பது, உற்றார், உறவினர் வருவது எல்லாம் இருக்கிறது.
 
இரண்டு பாடல்களுமே உணவின் சிறப்பையும் முதல் இரவின் வர்ணனையையும் கூறுகிறது . பூவும், நெல்லும் சொரிந்த நீரில் மணமகள் நீராடப்பட்ட பின்னர் திருமணம் நடைபெற்றது. இந்நீரை முகந்து கொண்டு வருவதற்கும், அதை வாங்கி மணமகளின் தலையில் ஊற்றுவதற்கும் மங்கல மகளிரும் ஈடுபடுத்தப்பட்டமை காண்கிறோம். திருமண நாளன்று அரிசியும், உளுந்தும் கலந்த பொங்கல் உணவு அனைவருக்கும் அளிக்கப்பட்டது. உழுத்தம் பருப்போடு கூட்டி சமைத்த, குழைந்த பொங்கல் எனும் பெருஞ்சோற்றுத் திரளை இடையறாது உணவிட, பந்தலில் வரிசையாக மாலையிட்டு மணல் பரப்பியுள்ளனர் என்றும், திருமண நேரத்தில், முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவும், பின்னே தருவனவும் முறையாகத் தந்திட, மகனைப் பெற்ற தூய அணிகளையுடைய மகளிர் நால்வர் கூடி நின்று கற்பிலிருந்து வலுவாறு நன்றாகப் பல பேறுகளைத் தந்து, உன்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தை உடையவளாக ஆகுக” என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்கள்; அதோடு கல்யாணம் முடிகிறது.
 
மொத்தத்தில் மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற் றின் படி, மண்ணுதல் என்று சொல்லப்படும் மணம் ஆகிறது.
 
எனவே திருமணச் சடங்குகளை நிகழ்த்த புரோகிதர்கள் ஈடுபட்டதாகச் எந்த சங்க இலக்கியக் குறிப்புகளும் இல்லை. என்றாலும் சங்க மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம், “மாமுது பார்ப் பான் மறைவழி காட்டி’ யமைப் பற்றியும், மண மக்கள் தீவலம் வந்தமைப் பற்றியும், தெளிவாகக் கூறுகிறது. உதாரணமாக மங்கல வாழ்த்துப் பாடலில் வானிலுள்ள ஒரு மீனாகிய அருந்ததி போல் கற்புடையவளான கண்ணகியை, பிதாமகன் மறைநெறியிற் சடங்கு காட்டக், வானின்கட் செல்லும் திங்கள் உரோகிணியைச் சேர்ந்த நாளிலே, கோவலன் கலியாணஞ் செய்து , இருவரும் சேர்ந்து தீயை வலஞ் செய்தனர் என
 
"வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை"
 
என்று பாடுகிறது. எது எப்படி ஆயினும் ‘தாலி’ மங்கல அணிகளுள் மிக முக்கியப் பொருளென தமிழர்கள் இன்று கருதுகின்றனர். எனவே சங்க காலத்திற்கு அருகிய நிலையில் தாலியணியும் வழக்கு இருந்ததோ என கருத இடமுண்டு. தாலி பற்றிக் குறிப்பிடும் முதற் கல்வெட்டு கி.பி. 958-ஆம் ஆண்டுக்குரியது என தெரிய வருகிறது. (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், பக். 131-132) இதனடிப்படையில், சிலர் தாலி எனும் மரபு தமிழ் மக்களுக்கு உள்ள மரபாக இருந்திருக்கிறது என்றும், வேறு சிலர் சங்க காலத்தில் தாலி அணியும் வழக்கமில்லை, எனவே அது பிற்சேர்க்கை எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
 
எது எவ்வாறாயினும், இன்று தமிழர் திருமணச் சடங்கில் பொதுவாக பரிசம் போடுதல், முகூர்த்தக் கால் நடுதல், தாலி கட்டுதல் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. இவைகளில் திருமணத்திற் கான தொடக்க நிலைச் சடங்காக மணமகன் வீட்டார் தம் உறவினருடன் பெண் வீட்டிற்குச் சென்று தாம்பூலம் மாற்றி மண ஒப்பந்தம் செய்து கொள்வது பரிசம் போடுதல் [betrothal or engagement ] எனப்படும். இதனை நிச்சயதார்த்தம் அல்லது நிச்சய தாம்பூலம் என்றும் கூறுவதுண்டு. இச்சடங்கு திருமணத்திற்கு முன் ஒரு நல்ல நாளில் பெண் வீட்டில் பொதுவாக நடை பெறும். இன்னார்க்கு இன்னார் என்று மணமக்களை மற்றவர்கள் அறிய உறுதி செய்வதே இச்சடங்கின் நோக்கமாகும்.
 
இதை அடுத்து, அந்த காலத்தில் மணப் பந்தல் போட்டு திருமணம் செய்ததால், அந்த பந்தல் போடும் தொடக்க விழாவாக, அந்த பந்தலின் ஒரு கால் முதலில் ஒரு நல்ல நாளில் நாட்டப் படுவதே முகூர்த்தக் கால் எனப்படுகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன், மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில் இடப்படும் மணப்பந்தலுக்கான முகூர்த்தக் காலாக இதை நடுவார்கள். மூங்கிலும் பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கையே இந்த சடங்கின் கருத்தாகும். "ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரிட்டு, மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்க" என்று மணமக்களை வாழ்த்தும் வழக்கமும் இதனால் ஏற்பட்டதே ஆகும்.
 
திருமணத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுதல் (மஞ்சள் கயிறு கட்டுதல்) என்பது ஒரு முக்கிய இறுதி நிகழ்வு ஆகும். இங்கு மங்கல அணியான தாலியை ஒரு தாம்பூலத்தில் வைத்துத் தேங்காய், பூ, மஞ்சளில் புரட்டிய அரிசி இவற்றுடன் பெரியவர்களிடம் ஆசி வாங்குவர். பின்னர் கெட்டி மேளம் முழங்க, மங்கலப் பெண்கள் குலவை விட மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவார். தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போட வேண்டும் என்பது மரபாகும். பெரியோர்களிடம் அங்கீகாரத்தையும் வாழ்த்தையும் பெறுவதே தாலி கட்டுதலின் நோக்கமாகும். நாட்டுப்புற மக்களின் திருமணத்தில் வைதீக மரபுகள் (பிராமணர்கள் மந்திரம் ஓதுவது, வேள்வித்தீ வளர்ப்பது) இடம் பெறுவதில்லை என்பது இங்கு மனத்தில் கொள்ளத் தக்கது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 27 தொடரும்
52594369_10213577877264049_3167985800428126208_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=MeqHzGZ3ErIQ7kNvgGDthn4&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYB5Zls0CMuMBmlav2uo9KjmS_fxTIsnfbr9xCdGfsy9Gg&oe=66BCA10D 51902602_10213577878704085_2991367949123584000_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=vHhpQwh96VEQ7kNvgF_e5IP&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCVMTgyxY-Why6glOJ5GWr8Gx1yd-zyPr_jIl4rodZLvA&oe=66BC8933 52692459_10213577881504155_7409154555121762304_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=l1qsD0YnDNQQ7kNvgHCQ-92&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCkhW0J4aLWcKfbZqOTiF1m5_QRyCq8cbEHPhkZHL8aPg&oe=66BCA283 No photo description available. No photo description available.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 27
 
 
மரணம் ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்வை தொட்டு, முழு மானிட சாதியையும் "தவிர்க்கமுடியாத மாள்வு" என்ற ஒன்றின் கீழ் இணைக்கும் ஒரு இயற்கை நியதி ஆகும். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம் 30,000 நாளாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் 7000 நாட்களே. அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை / afterlife) நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது, இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும், மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுக்கிறது.
 
திருமூலர் தமது திருமந்திரத்தில், மனிதன் இறந்த பிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றிய நினைவை ஒழித்து விடுகிறார்களாம் என்று தமிழரின் மரபை அன்று கூறுகிறார். இன்றும் கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தான் சொல்கிறோம். அவரது பெயரைச் சொல்வதில்லை.
 
"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே!"
[திருமந்திரம்]
 
பண்டைய தமிழக தமிழர்கள், இறந்தவர்களை கையாளும் மரபு ஒரு கவர்ச்சிகரமாக உள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் வயது முதிர்ந்து, அசைவதை நிறுத்தி, கண் பார்வை, காது கேட்டல் போன்றவற்றை இழக்கும் போது, இவர்களை கிராமத்திற்கு வெளிய ஒரு ஒதுக்கு புறத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மதமதக்கத் தாழி [முதுமக்கட்டாழி] என அழைக்கப்படும் ஒரு சின்ன கல் வீட்டில் அவர்களை விட்டு, அவர்களின் குடுபத்தில் இருந்து ஒரு பெண் தினம் அங்கு சென்று அவருக்கு சாப்பாடு கொடுத்து கவனிக்கிறார். இப்படி அவர் சாகும் மட்டும் தொடர்கிறது. அவர் இறுதியாக சாவை தழுவும் போது, அவரின் குடும்பம் முதுமக்கள் தாழி என்ற பெரிய மட்பாண்டம் ஒன்றில் அவரை உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவரின் முக்கிய உடமைகளையும் சேர்த்து உள் வைத்து அடக்கம் செய்கிறார்கள். இந்த தாழி [urn/pot] பிரத்தியேகமாக தோண்டிய குழியில் புதைக்கப்பட்டது. பெரிய கற்பலகை [பாறை] அதன் மேல் மூடி வைத்து, மண்ணால் மூடப்பட்டது.
 
இது குப்பை கிளரும் விலங்குகள் அந்த இறந்த மனிதனின் உடலை வெளியே எடுப்பதை தடுப்பதற்கு ஆகும். அத்துடன் ஒரு சின்ன நடுகல் அங்கு நாட்டுகிறார்கள். இது அந்த அடக்கம் செய்யப்பட்ட இடைத்தை அடையாளம் காணவும், வருடாந்த நினைவு சடங்குகளை அங்கு நிறைவேற்றுவதற்கும் ஆகும். மற்றொரு முறையில் அந்த தனிப்பட்ட நபர் இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் [குடத்தில்] இட்டுப் புதைத்துள்ளார்கள். அத்துடன் சிலவேளை தனிப்பட்ட நபர் இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைத்தும் உள்ளனர். பீமண்டபள்ளி கிராமத்தில் 8 அடி நீள ஈமப்பேழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இன்றைய சவப்பெட்டியை நினைவூட்டுகிறது. இங்கு எலும்புக்கூடு காணப்பட்டது. அந்த இறந்த மனிதர் மல்லார்ந்த படுக்கை நிலையில் உள்ளார்.
 
இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டாட்டங்கள், விடுமுறைகள் ... கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையரை அல்லது தமது குடும்பத்தில் வாழும் முதியோரை, எப்படி அன்று சின்ன கல் வீட்டில் விடார்களோ, அப்படியே இன்றும் முதியோர் இல்லத்தில் விடுவதை காண்கிறோம்.
 
இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது?
 
அன்று அவர் குடும்பத்தின் ஒரு பெண், தினம் அங்கு சென்று அவரை கவனித்தார். எனவே தனிமை அவரை வாட்டி இருக்காது. ஆனால் அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை இன்று அதிகமாக மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்... ஒருக்கா எம்மை நினைக்க... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அந்த ஜீவன் தவிக்கிறது, ஏங்குகிறது இன்று !. மேலும் பண்டைய தமிழகத்தில் எப்படி இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை விரிவாக தெளிவாக ஒரு வரிசை கிரமத்தில் மணிமேகலையும் (6-11-66-69) சொல்கிறது
 
"சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் றரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்"
 
பிணங்களைச் சுடுவோரும் [cremators] வாளா இட்டுப்போவோரும் [leave dead body to decay] தோண்டப்பட்ட குழியி லிடுவோரும் [placed into a hole dug specifically for the burial], தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் [entomb the dead body in small low lying chambers] தாழியினாலே கவிப்போருமாய்ப் [embalm the dead body in burial urn and cover mouth] பல்வேறு வகையாக இறுதிக் கடன்கள் செய்ய, இரவும் பகலுமாகிய இருபொழுதும் வருவோரும் செல்வோரும் செய்யும் ஆரவாரமும் என்று ஐந்துவகையில் இறந்த உடல் அடக்கம் செய்வதை இந்த பாடல் எடுத்து கூறுகிறது.
 
மனிதன் பிறப்பதற்கு முன்பே தொடங்கும் சடங்குகள் அவன் இறந்த பின்பும் இங்கு தொடர்வதை காண்கிறோம். இறந்தோருக்காகச் செய்யப்படும் சடங்குகளே இறப்புச் சடங்குகள், ஈமச் சடங்குகள், ஈமக் கிரியைகள் என வழங்கப்படுகின்றன. நாட்டுப் புறங்களில் ஒருவர் இறந்தவுடன் நிறை மரக்காலில் நெல்லை நிரப்பி அதன்மேல் விளக்கேற்றி வைக்கும் வழக்கம் உள்ளது. இறந்தவரின் உயிர் ஒளியாக - சோதியாக மாறியுள்ளது என்பதைக் குறியீடாய் இச்செயல் உணர்த்துகிறது.
 
இறப்புச் சடங்கில் கொள்ளி வைத்தல் என்பது மிக முக்கியமான சடங்காகும். சுடுகாட்டில் உடலுக்கு எரியூட்டும் முன் இறந்தவரின் மகன் நீர் நிறைந்த கலயத்தைத் தோளில் வைத்து மூன்று முறை உடலை வலம் வந்து குடம் உடைத்துக் கொள்ளி (தீ) வைக்கும் நிகழ்வே கொள்ளி வைத்தல் என்பதாகும். தாய் இறந்தால் தலைமகனும் தந்தை இறந்தால் இளைய மகனும் கொள்ளி வைக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. ஆதி மனிதர்களிடம் முதன்முதலில் தோன்றிய சடங்குகள் ஈமச் சடங்குகளே என்று கூறுவதுண்டு. இறந்தோரைப் புனிதப் படுத்துவதற்காகவும் இறந்தோரால் எவருக்கும் எத்தகைய தீங்கும் விளையக் கூடாது என்பதற்காகவும் இறப்புச் சடங்குகள் பொதுவாக கடைப்பிடிக்கப் படுகின்றன எனலாம்.
 
ஆசாரங்கள், சடங்குகள் போன்றவை பெரும்பாலும் தொன்மையான பழங்குடிவாழ்க்கையிலிருந்து எழுந்தவை. சில நடைமுறை வசதிக்காக உருவாக்கப்பட்டவை, சில குறியீட்டு ரீதியானவை. அவை நம்மை நம்முடைய தொன்மையான இறந்த காலத்துடன் இணைக்கின்றன. இந்த வகையில் நீத்தார் சடங்குகள் ஒரு குறியீட்டு நிகழ்வுகளாகும். அவற்றின் குறியீட்டுச் செயல்பாடுகளை உணர்ந்து செய்வது நம் உள்ளத்தை மலரச்செய்கிறது. வாழ்க்கைக்குப் பொருள் அளிக்கின்றது. அவை இல்லையேல் வாழ்க்கை வெறும் அன்றாட நிகழ்வுகளால் ஆனதாக மட்டும் எஞ்சிவிடும். எனவே சடங்குகளின் தேவையை அவை அளிக்கும் பயன்களைக் கொண்டு மட்டும் மதிப்பிட்டால் போதும். ஆனால் சடங்குகள் ஆசாரங்கள் போன்றவற்றில் ஒரு கவனம் தேவை. பல ஆசாரங்களும் சடங்குகளும் சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டம் சார்ந்தவை. ஆகவே அவற்றில் இன்று மானுட சமத்துவம் மனித உரிமை போன்றவற்றுக்குச் எதிரான பல இருக்கலாம். அத்தகையவற்றை முழுமையாக நிராகரிப்பது அவசியம். என்றாலும் நடைமுறைச் சடங்குகளும் மங்கலச் சடங்குகளும் அழகியல் சடங்குகளும் குறியீட்டுச் சடங்குகளும் இல்லாமல் இன்று மனிதன் வாழ்வது கடினம். நாம் பழைய சடங்குகளை தவிர்த்தாலும் கூட புதியவை வந்து சேருகின்றன. உதாரணமாக, மலர்ச்செண்டுகளை அளிப்பது, நாடா வெட்டி திறந்துவைப்பது, படத்திறப்பு செய்வது போன்ற எத்தனை நவீனச் சடங்குகளை நாம் இன்று செய்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை ஆகும்.
 
நான் "என் இறுதி சடங்கில்" என்ன நடக்கலாம் , நடக்கும் என்று ஒரு கனவு கண்டேன் இந்த கட்டுரை எழுதும் பொழுது . அதை கீழே தருகிறேன்!
 
 
"என் இறுதி சடங்கில் என்னை
எரிவனம் எடுத்து சென்று எரிக்க
என் நேரடி தொடர்பை அறுக்க
எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது"
 
"ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து
ஒளி தீபங்கள் சுற்றி வைத்து
ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து
ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது"
 
"சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து
சிறப்பான அலங்கார பாடை தருவித்து
சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து
சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்"
 
"நரம்பு நாடி தளர்ந்து போகையில்
நம்மைநாடி நோய் வந்து சேர்கையில்
நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில்
நல்வரமாய் தான் இறப்பு இருக்குது"
 
"மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே
மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே
மதுபோதையில் தவழ்ந்து முட்டாளாய் வாழாதே
மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே"
 
"நான் தீயில் சங்கமிக்கும் பொழுது
நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது
நான் என்னை சற்று பார்த்தேன்
நாமம் அற்ற சடலமாகக் கண்டேன்"
 
"உறவினர் நண்பர்கள் முகங்களைப் பார்த்தேன்
உவகை இழந்த சிலரைக் கண்டேன்
உறக்கம் துறந்த பிள்ளைகளைக் கண்டேன்
உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்"
 
"உடம்பு கெட்டால் உயிருக்கு மரியாதையில்லை
உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை
உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில்
உண்மையை நான் இன்று அறிகிறேன்"
 
"காமம் தெளித்த உடலும் படுத்திட்டு
காதல் தந்த மனதும் உறங்கிற்று
காதற்ற ஊசியும் வர மறுக்குது
காலனின் வருகையால் எல்லாம் தொலைந்திட்டு"
 
"என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன்
என் பெயரை மறக்க வேண்டாம்
என் பெயர் எம் அடையாளம்
எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு"
 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
 
பகுதி: 28 தொடரும்
52364136_10213620132160395_7034629859267575808_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=M3NM4RtRewUQ7kNvgG937hT&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBsuD0ewZsmI1_JSsm4_obyEC8Y0xn34dHehlkCnvNQxQ&oe=66C18524 51741970_10213620134520454_2400683222913515520_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=PWQ7peZYoTUQ7kNvgE39aPE&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAh5-Acz7YxgCEytE2tZxHZmlJwIPPrEuxi3MvNBnwN3g&oe=66C18FF1 52297615_10213620135520479_5085024391205486592_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Hvwo2DN65TEQ7kNvgEsJudK&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAdRj-Sg93GeO5Zujmjd1bdzwTr_ThEnEQ5figKl0vVsA&oe=66C186D4
 
No photo description available. No photo description available. 
 
No photo description available.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 28
 
 
பாரம் பரிய உணவு என்பது, எமக்கு எம் முன்னோர்களால், பல தலை முறையாக, பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக, உன்ணப்பட்டு, அதன் சிறப்பு அறிந்து, பல பல பரம்பரை ஊடாக கடத்தப்பட்டு, இன்று எமக்கு அளித்த ஒன்று எனலாம். இவை பொதுவாக முழு தானிய உணவுகள் ஆகும். இவை எளிமையானவை, இயற்கையாக வளர்ந்தவை அல்லது வளர்க்கப் பட்டவை, ஊட்டச்சத்து நிறைந்தவை, ஆழ் சிந்தனையுடன், அவசரமற்று, நன்று ஆலோசித்து தயாரிக்கப் பட்டவை ஆகும் [They are simple, naturally grown or raised, nutrient-dense, thoughtfully prepared].
 
இவை கட்டாயம் ஒரு குறுகிய காலத்துக்கான தேவையை கொண்டதோ அல்லது காலப்பாணியோ அல்ல [They are not fads]. உதாரணமாக பாரம்பரிய உணவுகள் நாலு அடிப்படையை கொண்டவை எனலாம். அவை
 
1] இன்றைய நவீன, சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கின்றன [avoidance of modern, refined foods],
 
2] சுத்தப் படுத்தப் படாத, முழு மற்றும் இயற்கை உணவை கொண்டவை [Contains unrefined, whole and natural foods],
 
3] உணவில் ஊட்டச்சத்துவின் செறிவை கவனத்தில் எடுக்கிறது [respecting the importance of nutrient-density in our food], &
 
4] எப்படி எமது மூதாதையர்களை ஆரோக்கியமாக இருக்க உணவு தயாரித்தார்களோ உண்டார்களோ அவ்வாறே தயாரிப்பதையும் உண்ணுவதையும் கொண்டதும் ஆகும் [preparing and eating foods in the same manner that nourished our ancestors and kept them well].
 
 
உங்கள் பாட்டி, பூட்டி, ஓட்டி, சேயோள், பரை, அல்லது அதற்கும் முன் இருந்த தாய்மார்கள் இதை முழுமையாக அறியாமல், அடையாளம் காணாமல், நீங்கள் சாப்பிட கட்டாயம் தந்திருக்க மாட்டார்கள்? அது மட்டும் அல்ல உணவு பல குறியீட்டு அர்த்தங்களையும் [symbolic meanings] கொண்டு உள்ளது. உதாரணமாக இது மக்கள் மற்றும் அவர்களின் சூழலுக்கு இடையேயான உறவை நிறுவுவதுடன், மக்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகளிற்கு இடையான உறவையும் நிறுவுகிறது [It establishes the relationship between people and their environment as well as between people and what they believe].
 
எனவே உணவு ஒரு சமுதாயத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது எனலாம். ஒரு தனிப்பட்ட மனிதனால் மட்டும் உட்க்கொள்ளப்படும் உணவு ஒரு சமூக உணவாக இருக்காது. ஆனால் ஒரு மக்கள் குழுவால் ஒன்றாக உட்க்கொள்ளும் பொழுது அல்லது ஒரு மத சடங்கில் உட்க்கொள்ளும் பொழுது, அது சமூக உணவாக அடையாளம் காணப் படுகிறது. ஒரு மனித சமூகத்தில், மக்கள் ஒருவருக்கொருவர் இடையே உறவுகளை அமைத்து அதை வெளிப்படுத்த இந்த உணவு உதவுகிறது எனலாம். இந்த உறவு தனிப்பட்டவர்களிடமோ, ஒரு சமூக உறுப்பினர்களிடமோ, ஒரு மத குழுவினர்களிடமோ, அல்லது ஒரு இனக் குழுக்களிடமோ [among individuals, community members, religious groups, and ethnic groups] இருக்கலாம். எனவே பாரம் பரிய உணவு இவ்வகையில் ஒரு முக்கிய இடத்தை வகுக்கிறது.
 
இன்று மக்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என எங்கும் பரவி இருக்கும் சூழலில், இளம் சந்ததியினர் பலருக்கு தமது பாரம்பரிய உணவு என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இன்று துரித உணவு நிறுவனங்களும் மற்றும் பல நாட்டு உணவு நிறுவனங்களும் அதிகரித்து வரும் வேளையில், இந்த அவர்களின் அறியாமை உண்மையில் எமக்கு ஆச்சரியம் தரவில்லை? ஆனால் எமக்கு இது கவலை அளிக்கிறது. பாரம்பரிய உணவு மட்டும் அல்ல மற்றும் பல பாரம்பரியங்கள் எமது கையினூடாக இன்று நழுவுகின்றன. “கத கதன்னு களி கிண்டி, களிகுள்ள குழி வெட்டி, கருப்பட்டி நல்லெண்ண சேர்த்து தருவாயே, தொண்டையில அது இறங்கும் சுகமான, இளஞ்சூடு மண்டையில இன்னும் மாச மசன்னு நிக்குதம்மா” என்ற கவிஞர் வைரமுத்துவின் களி உணவு எத்தனை பேருக்கு இன்று தெரியும்?
 
எம்மை இன்னும் மகிழ்ச்சியில் வைத்திருக்கும், ஆனால் இன்று அதுவும் மெல்ல மெல்ல எம்மை விட்டு நழுவும் விடயம், தமிழரின் ஒவ்வொரு விழாவிலும் சடங்கிலும் பாரம்பரிய உணவுகள் பெரும்பாலும் இன்னும் வழங்கப் படுவதே. இவை இன்னும் எமது பாரம்பரிய உணவு வகைகளை பேணிகாக்கவும் இளைய தலைமுறை யினருக்கு இன்று அதை அறிமுகப்படுத்தவும் உதவுகிறது. ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
 
உதாரணமாக, எமது பாரம்பரிய உணவாக, பிறந்த பிள்ளைக்கு [குழந்தைக்கு] முதன் முதலாக ஆறாம் அல்லது ஏழாவது மாதத்தில் சக்கரைப் பொங்கல் அல்லது தேனும், தயிரும் நெய்யும் கலந்த சோறு ஊட்டப்படும். அதே போல குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும், பல்லுக்கொழுக்கட்டை அவித்து, அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுவார்கள். முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது சாமத்தியடைதல், பூப்பெய்தல், பருவடைதல், பெரிய பிள்ளையாதல், மஞ்சள் நீராட்டு விழா எனும் பெயர்களால் இன்னும் பாரம்பரியமாக தமிழர்களும் வேறு பிரிவினரும் [ஆப்பிரிக்கா] கொண்டாடுகிறார்கள்.
 
உளுந்தக் களி, நல்லெண்ணெய் என உணவே மருந்தாக, உடல் நலத்தை மையமாகக் கொண்டு, உணவு அங்கு கொடுக்கப்படுகின்றன. முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு, ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது. அங்கு பல வித சாதம் / பொங்கல் [புளி சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,...] இடம் பெறுகின்றன.
 
இன்று எமது பாரம் பரிய உணவாக தமிழ் நாட்டில் இட்லி, தோசை, பொங்கல், சாம்பார், வடை போன்றவை பொதுவான காலை உணவாக உள்ளது, அதே நேரத்தில் - தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளிற்கு இடையிலான வேறுபாடுகளுடன் - இலங்கை தமிழ் உணவுகள், இந்தியா தமிழ் உணவில் இருந்து பலவகையில் தனித்துவமாக உள்ளது. மதிய உணவிற்கு சோறும் கறியும் பரவலாக இருப்பதுடன், காலை உணவிற்கும், இரவு உணவிற்கும் அரிசி மாவினால் அதிகமாக 12 சதம மீட்டர் விட்டம் கொண்ட , வட்ட வடிவில் தயாரிக்கப் பட்ட இடியப்பமும் தக்காளி சொதியும் கறியும் இலங்கையில் [கேரள மாநிலத்திலும்], அதிக அளவில் காணப்படுகிறது. அத்துடன் மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழலில் அல்லது பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் அவித்த அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்ட பிட்டும் [புட்டும்], வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் சுடப்படும் அரிசி மா அப்பமும் இலங்கை தமிழர்களிடம் பிரபலமானவை.
 
மேலும் தேங்காய் பாலும் உறைப்பு கூடிய மிளகாய் தூளும் பெரும்பாலும் அங்கு சமையலுக்கு பாவிக்கப்படுவதுடன், பல தரப்பட்ட ஊறுகாய் [அச்சாறு], வடகம் மற்றும் மாவுடன், பணை வெல்லம், எள், தேங்காய், நல்லெண்ணெய் போன்றவைகளை முதன்மையாக பாவித்து வீட்டில் செய்யப்பட்ட பயத்தம் பணியாரம், மோதகம் / கொழுக்கட்டை, பால்ரொட்டி, முறுக்கு, அரியதரம், அவல் போன்ற இனிப்பு வகைகள், வேறு பிற சிற்றுண்டிகள் தனித்துவான மண் வாசனையை அவர்களுக்கு கொடுக்கிறது. இலங்கை மக்களால் மிக மிக விரும்பி உண்ணப்படும் இனிப்பு சீனி அரியதரம் அல்லது அரியதரம் ஆகும். இது திருமணம் போன்ற கலாச்சார வைபவங்களில் மிகமிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
 
தமிழர்களின் நாளாந்த உணவு மிக எளிமையானது. அது அதிகமாக வேகவைத்த அரிசி [சோறு], சாம்பார் [தமிழ் நாடு] அல்லது வேகவைத்த அரிசி [சோறு], சொதி, மரக் கறி [இலங்கை தமிழர்] ஆகியவற்றுடன், மீன் அல்லது இறைச்சி [அசைவ உணவாளர்களுக்கு], ரசம், தயிர் போன்றவற்றை கொண்டுள்ளது. சிறப்பு சந்தர்ப்பங்களில் - அரிசி, பால், சவ்வரிசி, சேமியா, சக்கரை, ஏலக் காய், முந்திரிப்பருப்பு முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும், பாயாசம் பரிமாறப்படுகிறது.
 
இன்றைய நவீன கால தமிழ் சமையல் வகையில் காபி [குழம்பி], தேநீர் போன்றவை முதன்மை குடிப்பழக்கமாக மாறியுள்ளது. இது பெரும்பாலும் காலை உணவுடனும் சிலவேளை இரவு உணவுடனும் குடிக்கப்படுகிறது. வளமான, செல்வம் மிக்க குடும்பத்தில் கூட நாளாந்த சாப்பாட்டில் பெரும் வேறுபாடு காணமுடியாது. ஆனால், விருந்தினர்கள் அவர்கள் வீட்டில் வரும் பொழுது அல்லது திருமண வைபவம் நடை பெரும் பொழுது முற்றிலும் வேறுபாடாக, அங்கு இன்சுவை சாப்பாடு பரிமாறப்படும். இன்று நகர்ப் புறங்களில் துருப் பிடிக்காத உருக்கினால் செய்யப்பட்ட கரண்டி, முள்கரண்டி, உணவு கலன்கள் போன்றவை பாவிக்கப்பட்டாலும் ஒரு விழா, சடங்கு என்பனை நடை பெரும்பொழுது, பாரம்பரிய முறைப்படி அனைவருக்கும் தலை வாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறப்படுகிறது.
 
தமிழர் வாழும் இடங்களில், உணவு பழக்கங்கள் மிக மந்தமாகவே மாற்றம் அடைகின்றன. என்றாலும் மாற்றத்தின் சில அறிகுறிகள் இப்ப தெளிவாக தென்படுகின்றன. பொதுவாக கோதுமை மா, தாராளமாக நகர்ப்புற பகுதிகளில் பாவிக்கப்படுகின்றன. இன்றைய நவீனமயமாக்கல், தமிழரின் சமையல் அறையிலும் மெல்ல மெல்ல மாற்றங்களை கொண்டு வருகின்றன. விட்டுக்கொடுப்பும் இணக்கமும் கண்டு மாற்றி அமைக்கப் படுகின்றன. விரிவாக, மிகுந்த அக்கறை யுடன், நிதானமாக சமைக்க வேண்டிய பாரம்பரிய உணவு செய்முறை மறைந்து வருகின்றன.
 
கூட்டுக் குடும்பம் மறைந்து இன்று தனிக் குடும்பம் எங்கும் பரவலாகக் காணப்படுவதும், தொழில் புரியும் பெண்கள் அதிகரித்து இருப்பதும், இப்படியான தவிர்க்க முடியாத இன்றைய சூழ்நிலை, தமிழர்களின் சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துள்ளது எனலாம். அவர்கள் இன்று இலகுவான சில உணவு வகைகளை நாடுகின்றனர். எனினும் தமிழர் உணவு நடைமுறைகள், அவர்களின் பண்பாட்டு தாக்கங்கள், ஈடுபாடுகள் இன்னும் அவைகளின் அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளன. முதலாம் நூற்றாண்டு சில உணவு செய்முறைகளை இன்னும் அப்படியே அவ்வளவு பெரிய மாற்றம் இன்றி பின்பற்றுகிறார்கள்.
 
இன்று இந்த அவசர உலகில், என்ன சாப்பிடுவது என்ற கேள்வி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எதிர்நின்று எம்மை பயமுறுத்துகிறது. லோ கொலஸ்ட்ரால் [low cholesterol], ஹை புரோட்டீன் [high Protein ], ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் [Omega-3 Fatty Acid], பாலிபினைல் [Polyphenols], ஃபோலிக் ஆசிட் [Folic Acid], குட் கொலஸ்ட்ரால் [good cholesterol] என்று ஏதேதோ  சொல்லி நம்மைப் பயமுறுத்துகிறார்கள். இன்று இரண்டு விதமான உணவு வகைகள் நம் முன்னே இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய நவீன உணவு. அதில் அதிகம் துரிதவகை உணவுகள், செயற்கை சுவையூட்டிகளால் தயாரிக்கப்பட்டது. நார்ச்சத்து வைட்டமின் குறைவு, அதிக சர்க்கரை – உப்பு சேர்க்கப்பட்டது.
 
மற்றொன்று நமது மூதாதையர் காலம் தொட்டு உண்ணப்பட்டு வரும் பாரம்பரிய உணவு. இதில் விதவிதமான சுவைகள், ருசிகள் கிடையாது. ஆனால், உடல் நலத்தை மேம்படுத்தக்கூடியது. இந்த உணவு வகைகள் பருவகால மாறுதல்களுக்கு ஏற்ப உடலைச் சீர்செய்யக் கூடியது. இந்த இரண்டில் எதை நாம் தேர்வு செய்வது என்பதை நாம் முடிவு செய்வதற்கு பதிலாக சந்தை முடிவு செய்கிறது. பகட்டான விளம்பரங்களும் போலி வாக்குறுதிகளும் கவர்ச்சியான பாக்கெட்டுகளும் மேற்கத்திய உணவே சிறந்தது என்று நம்மிடம் திணிக்கின்றன. இதுதான் இன்றுள்ள முக்கியப் பிரச்னை.
 
குறிப்பாக கி மு 300-கி பி 300 இடைப்பட்ட சங்க இலக்கியத்தில், தமிழரின் உணவு பண்பாடு பற்றிய பல பண்டைய செய்திகளை நாம் அறியக் கூடியதாக உள்ளது. அதில் அரசனும் செல்வந்தரும், பொதுமக்களுக்கு கொடுத்த உணவு வகைகளைப் பற்றிய வர்ணனைகளை காண முடிகிறது.
 
உதாரணமாக, "கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்" [63-64] மற்றும் “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” [177-178] போன்ற பட்டினப்பாலை அடிகள், அங்கு வறுத்த இறாலையும் வேகவைத்த ஆமையையும் உண்டார்கள் என்பதையும், பூம்புகாரின் அங்காடித் தெருவில் அமைந்து உள்ள மதுபானக் கடை முற்றத்தில், மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தையும் தெட்டத் தெளிவாக அது எடுத்து கூறுகிறது.
 
மேலும் மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, பெரியவருக்கு கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், மாலை சிற்றுண்டியாக பொரி, என நெல்லை தேவைக்கேற்றபடி தயாரிக்கவும், இனிப்பு கலந்த பாலில் நனைத்த அரிசி அப்பமும், நீண்ட வெள்ளை சரங்களை போன்று அவிக்கப்பட்ட இடி அப்பமும் பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. என்றாலும் இன்று அவிப்பது போன்ற நீராவியில் சமைத்த வட்ட வடிவ இடியப்பம் அன்று இருக்கவில்லை.
 
உணவியல் அறிஞர் கே.டி.ஆசயா [Dr. K.T. Achaya] தனது "Indian Food, A Historical Companion, The Food Industries of British India, and A Historical Dictionary of Indian Food(all published by Oxford University Press, India)" என்ற புத்தகத்தில், தோசை, வடை போன்றவை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார். எனினும் இட்டலி அப்படியில்லை என்கிறார். அது ஒரு வெளி நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது என்கிறார். கி பி 1250 இற்கு பின்புதான் இப்ப நாம் செய்வது போன்ற இட்டலி நடைமுறைக்கு வந்ததாக கே.டி.ஆசயா கூறுகிறார்.
 
இட்டலி இந்தோனேஷியாவில் முதலில் சமைக்கப்பட்டது என்றும், அதன் ஒரு பகுதியை ஆட்சி செய்த தென் இந்தியா அரசனின் சமையல்காரன் கி பி 800-1200 ஆண்டுகளில் நாடு திரும்பும் போது, இந்த உணவை தென் இந்தியாவிற்கு கொண்டு வந்து இருக்கலாம் என்ற ஒரு பரிந்துரையையும் அவர் முன் வைக்கிறார். மேலும் ‘மதுரைக் காஞ்சி’ வரிகள், 626-627: "கவவொடு பிடித்த வகை அமை மோதகம், தீஞ் சேற்றுக் கூவியர்" என்று சங்க காலத்தில் காய்ச்சின பாகோடே பருப்பும் தேங்காய் கூட்டி உள்ளீடாக வைத்துப் பிடித்த மோதகம் [கொழுக்கட்டை] விற்கும் வணிகர் பற்றிய தகவலையும் தருகிறது.
 
இன்றும் நாம் உண்ணும், தமிழரின் பாரம்பரிய உணவில் ஒன்றான 'தயிர் சாதமும் புளிக் குழம்பும்' என்ற, அன்றைய சங்கத்தமிழரின் உணவு மரபை ஒரு இளமனைவியின் கதையாகவே கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167, ஒரு சமையல் நூல் போல் வர்ணிக்கிறது. கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து விட்டு, புதிதாக திருமணம் செய்த தலைவி தன் காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள். பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள். தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு ... பழக்கம் வேறு இல்லை. தலைவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல் வேறு. விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது. தலைவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று அதன் பின் புளிக் குழம்பும் செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள் என்கிறது அந்த பாடல் .
 
 
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” -குறுந்தொகை 167
 
 
ஆனால் தமிழில் எழுதப்பட்ட முழுமையான சமையல் நூல் ஒன்று சங்க காலத்தில் இருந்ததாக சிறுபாணாற்றுப்படை, வரிகள் 238-241, குறிப்பிடுகிறது. அதில், ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டானாம் என்று கூறுகிறது. எனினும் இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்துவிட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனித்துவமான ஒரு நூல் இருந்தது என்ற செய்தியால், நாம் அக்கால தமிழரின் உணவு மரபின் சிறப்பைக் காணக்கூடியதாக இருக்கிறது.
 
 
“கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,"
-சிறுபாணாற்றுப்படை 238-241
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 29 தொடரும்
52964878_10213665440773082_1760263071768510464_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Z-4ABCbIqL8Q7kNvgFqJIlI&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYBhXnJhPeOoYt_mGDqP-ciE6xWk-0hEOaqcBK2Yqvy73A&oe=66CC5DEA 52890015_10213665443373147_7987419644661071872_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Tf4SwasaAHgQ7kNvgHrIerL&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDzDUGjYTs1hbJnUYiP059ULvuxOtIBmXbB4JmR0sfcgg&oe=66CC5D29 53111176_10213665441293095_5067357206442147840_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=IYb8iBzecEQQ7kNvgHek2RZ&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCZKGGUK0cHs1PRoueAT4Qe_p0OjLayAwlV-dReu0jxNA&oe=66CC4E2D No photo description available. No photo description available. No photo description available. No photo description available.
 
 
 
 
Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites

  • kandiah Thillaivinayagalingam changed the title to "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 28
  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 29
 
 
பரதநாட்டியம் தமிழரின் பாரம்பரிய நடனமாக பண்டைய தமிழக ஆலயத்தில் இருந்து வளர்ச்சி அடைந்து, இன்று தமிழரின் கலாச்சார மற்றும் பாரம்பரிய அடையாளத்தை சித்தரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. இது முன்னைய காலத்தில் தேவதாசிகளால் அல்லது கோயில் நர்த்தகிகளால், ஆலயத்தில் ஆண்டவனுக்கு நன்றியை செலுத்துமுகமாக, ஆலயத்தின் புனித இடத்தில் நடை பெற்று, நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து, பரத நாட்டியமாக முழுமை அடைந்தது எனலாம்.
 
அது மட்டும் அல்ல, இந்த ஆண்டவனுக்கு முன்னால் ஆடும் புனித நாட்டியம் தொடர்ந்து எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் தொடரும் பொருட்டு அவர்கள் ஒரு வித துறவி வாழ்க்கையையும் கடைபிடித்தனர். இவர்கள் மற்றும் பல நாட்டிய தாரகைகளுடன் அரச சபையில் பல்வேறு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு, அரசனால் அழைக்கப்பட்டு பெருமைபடுத்தப் பட்டார்கள். இந்த நாட்டியம் ஒரு மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்காகவும் அதே வேளை அது தமிழரின் பண்பாட்டை உள்வாங்கி தன்னகத்தே கொண்டும் [Dance is embodied culture] இருந்தது.
 
புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப் பட்டதாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு கதை உண்டு. என்றாலும், அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும், அதாவது , "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லி லிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (காலத்தை அறுதியிடும் அளவு) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படு கிறது.
 
இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் எனப்படும் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் விதி சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகிறது. தமிழர்களின் ஆதியும், இன்று வரை குறைந்தது 2500 ஆண்டுகளு க்கு மேலாக தொடரும் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது, பெருமை படத்தக்கது. நமது கலை கலாச்சாரத்தை எத்துனை விதமாக கூறினா லும், நடனத்தின் மூலாமாக சொல்லும் போது அழகு மேலும் அதிகரிக்கின்றது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனம் தான் பரதநாட்டியம் ஆகும்.
 
தமிழரின் தொன்மையான நாட்டியமான பாரத நாட்டியத்திற்குள் அவர்களின் வரலாறும் நடை முறை பழக்கங்களும் [history and ethos] இணைக்கப் பட்டு, அவை ஒரு மேடையில் ஆடுகையில், பார்ப்பவர்களுக்கு அவர்களின் பண்பாட்டு கூறுகள் சென்றடைகின்றன. அவர்கள் வெளிப்படுத்தும் அசைவும் இசையும் உலகிற்கு ஒரு கதையை - தமிழரின் நம்பிக்கைகள், சூழல், பொருளாதாரம், மற்றும் அவர்களின் சமூக மதிப்புகளை வெளிப்படுத்து கின்றன [The movements they use and the music are meant to tell a story to the rest of the world – a story about their beliefs, the environment, their economy, or even their social values]. எனவே பரத நாட்டியம் எமது இளம் சந்ததியினருக்கு அறிமுகப் படுத்துவதால் அவர்களுக்கு தாம் யார் ? மற்றவர்கள் யார்? என்ற வேறுபாடு தெளிவாகத் தெரியும் என்று நம்புகிறேன்.
 
கலை எமது வாழ்வின் ஆரம்பத்திலேயே எம்முடன் கலந்தது. நாம் நாடோடியாக திரிந்த பொழுது பாடினோம் ஆடினோம், வேடுவராக இருந்த பொழுது குகையின் சுவரில் ஓவியம் வரைந்தோம், உதாரணமாக, பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வீரர்களின் கதையில் இருந்து அவர்களை மகிழ்விக்க நடித்து காட்டியது முதல் கலை எம் வாழ்வில் ஆழமாக பதிந்து விட்டது எனலாம்.
 
ஒரு மனிதனுக்கு கலையும் வாழ்வும் பல பல கோணங்கள், அதை நாம் கூர்ந்து பார்த்தால், எமக்கு பல பல வர்ணங்கள் அங்கு பளபளக்கும். உதாரணமாக வாழ்வு எம் இதயத்தை தொடும் பொழுது, வாழ்வை, கலை பிரதி பலிப்பதை நாம் உணர்வோம். இன்றைய இயந்திர வாழ்வு எம்மை சூழும் பொழுது, எமக்கு 'இயல் இசை நடனம்', ஒரு புது தெம்பு கொடுக்கிறது.
 
அது மட்டும் அல்ல சூதும் வஞ்சகமும் எம் வாழ்வை கவ்வி, நாம் யார் என்பதை மறக்கும் பொழுது, இந்த கலை எமக்கு துணை நின்று, எம்மை யார் என அடையாளம் காட்டுகிறது. இது தான் பாரம்பரிய கலையின் பெருமை எனலாம். இப்படியான எல்லா கலைகளிலும் நாட்டியம் முறையான அசைவுகளை கொண்டு நாடகம் மாதிரி மற்றவர்களின் கண் முன் அரங்கேறுவதால் அவர்களின் மனதில் இலகுவாக பதியக் கூடியது. எனவே பண்பாட்டு நடனம் [Cultural Dance] ஒரு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இது எங்கள் வழி முறை மூலம் மற்றவர்களுக்கு எங்கள் பண் பாட்டில் எவை எவையை நீங்கள் அறிய வேண்டும் என்பதை எடுத்து உரைப்பதாகும். அது மட்டும் அல்ல, இதனால் மற்றவர்கள் எங்கள் மரபுகள், பாரம் பரியங்கள் மற்றும் சமூக நீதிகளை [our customs, traditions and norms] அறிந்து மதித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வழி சமைக்கிறது.
 
அறிவு வளர்ச்சியும் நாகரீகமும் முதிர்ச்சிப் பெறுவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆடலிலும் பாடலிலும் ஈடு பட்டு வந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய இசை, ஆடல் முதலியவை முன்னேற்றம் கண்டு கலை வடிவங்களாக முகிழ்ந்தன. இந்தியாவில் மிகத் தொன்மையான கூத்து நூல் எனக் கருதப் பெறும் நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவர் நாட்டியம் எனும் சொல்லுக்குப் பாடல், ஆடல், அபிநயம், உரையாடல், ஒப்பனை, காட்சித் திரைகள் ஆகியவை ஒருங்கமைந்த நாடகம் என்றே பொருள் கூறினார்.
 
பரத முனிவர் தம் நூலில், தென்னாட்டில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இசையிலும் நடனத்திலும் சிறபுற்று விளங்கினர் எனப் புகழ்ந்துரைக்கின்றார். இவ்வாறு மிகத் தொன்மை வாய்ந்ததும் புகழ் பெற்றதுமான ஆடல் வகை பரத நாட்டியம் ஆகும். இதனை நம் முன் னோர் தாசியாட்டம், சின்ன மேலம், சதிர் என்ற பெயர்களில் அழைத்தனர்.
 
பண்டைய இலக்கிய நூல்களில், மரபு நாட்டிய கலையின் பூரண நூலாக கருதப்படும் சிலப்பதிகாரம், இசையும் ஆடலையும் விவரிக்கும் கருவூலம் போன்ற நூல் எனலாம். என் றாலும் பரத நாட்டிய சாஸ் திரத்திற்கான அடித்தளமாக சாத்தனார் என்பவர் எழுதிய கூத்த நூல் அதிகமாக இருந்து இருக்கலாம் என அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள். கூத்திற்கு தரும் விளக்கமாக, ‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து’, என கூத்த நூலில் வரும் பகுதி மிக அழகாக அமைந்துள்ளது.
 
இது ஒரு மிக ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்த மறைபுதிரான அடிகளாகும். இந்த 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அடிகள் இன்றும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல அடிகலாகவே இருக்கின்றன. மேலும் சங்க இலக்­கி­ய­மான, பத்­துப்­பாட்டு, எட்­டுத் ­தொ­கையில், நாட்­டிய குறிப்­புகள் இருப்­பதையம் காணலாம். உதாரணமாக, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பதிற்றுப் பத்தில் ஆட்டக்கலை குறித்த விளக்கம் வெகுச்சிறப் பாக அமைந்திருப்பதை பதிற்றுப்பத்து. 51; 17-27, பதிற்றுப்பத்து. 47, 5-8 போன்ற அடிகளால் அறிய முடிகிறது.
 
நெய்தல் நிலமான கடற்கரையினூடே பனஞ்சோலைதனில் மணல் திட்டுகள் சூழ்ந்த-பள்ளத்தாக்குகள் நிறைந்த- ஒரு மணல் பரப்பில்- ஞாழல் மரப்பூக்களின் வாசத்தோடு ஆடுமகள் விறலி பீடுநடை போட்டு- வட்ட வடிவ வலையாட்டத் தினை நிகழ்த்திய விதம் இப்பாடல்களில் குறிப் பிடப்பட்டுள்ளது.
 
மலர்ந்த நெய்தல் மலர் போன்ற கண்களை உடைய விறலி- புன்முறுவலுடன் அமர்ந்தும், குதித்தும், வீழ்ந்தும், எழுந்தும், உருண்டும், சுழன்றும் ஆடிய ஆடல் பாம்பிற்கு இணையாகவும் கூறப்பட்டுள்ளது.
 
 
“வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாகுடன் கமழச்
சுடர் நுதல் மட நோக்கின்
வாள் நகை இலங்கு எயிற்று
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள் வேல் அண்ணல் ”
[பதிற்றுப்பத்து 51; 17-23]
 
 
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்
பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல
*நன் நுதல் விறலியர்* ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.
[பதிற்றுப்பத்து 47, 5-8]
 
 
என்றாலும் இந்த தேவதாசிகளின் நாட்டியத்தின் ஆரம்பத்தை அறிய நாம் ஆரியர்களுக்கு முற்பட்ட கி மு 3000 ஆண்டை சேர்ந்த ஹரப்பான் பண்பாட் டிற்கு போகவேண்டி இருக்கிறது. அங்கு கண்டு எடுக்கப்பட்ட கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்கள் வெவ்வேறு நாட்டியத்தின் முத்திரை களை காட்டுகின்றன. இவைகளில் மிகவும் பிரபலமானது நிர்வாணமான ஒரு நடன மாது. அவளின் இடுப்பு கவர்ச்சி யூட்டக் கூடியதாக முன்தள்ளி [முன்பிதுங்கி] இருப்பது குறிப்பிடத் தக்கது.
 
இது இந்தியாவில் நடனம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதற்கான ஒரு சான்றாகும். இந்த புகழ் பெற்ற சிந்து சம வெளி கைவினை பொருள், கிட்டத்தட்ட 4 அங்குல உயரத்தை கொண்ட செம்பு உருவம் ஆகும். இந்த ஒய்யார வார்ப்பு ஒரு கருத்த பழங்குடி பெண் ஒன்றை சித்தரிக்கிறது, அவள் உடையில்லாது தனது நீண்ட தலை முடியை கொண்டை போட்டு உள்ளாள். இடது கையை வளையல்கள் முற்றாக அலங்கரிக்க, வலது கையின் மேற் பகுதியை ஒரு காப்பும் ஒரு தாயத்தும் அலங்கரிக்கிறது. அவளது கழுத்தை சுற்றி ஒரு வகை சிப்பி அட்டிகை இருக்கிறது. எம் நாட்டில் இன்று உள்ள பல நாட்டிய கலைகளில் இந்த சிலையின் கம்பீரமான நிலையை காணலாம்.
 
வலது கையை இடுப்பிலும் இடது கையை இறுக்கமாக பிடித்திருப்பதும் தமிழரின் சம்பிரதாயமான நாட்டிய அபிநயத்தில் ஒன்றாகும். இந்த பண்டைய உலோக சிற்பம் சிறிதாக இருந்தாலும் பல தகவல்களை எமக்கு தெரிவிக்கிறது. பல சிறந்த கற்றறிவாளர்கள் இந்த உலோக வார்ப்பு ஒரு தேவதாசியை அல்லது ஒரு புனித பரத்தையை பிரதிநிதி படுத்துவதாக கருதுகிறார்கள். அந்த பெண் சிலை அம்மணமாக இருப்பதாலும் மருட்டுகின்ற ஒரு நாட்டிய தோரணையில் இடுப்பில் கையையும் தளராத் தன்னம் பிக்கையை முகபாவத்தில் காட்டுவதாலும் ஒரு வேளை அவர்கள் அப்படி கருதியிருக்கலாம் என கருதுகிறேன்.
 
பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள், முகபாவங்கள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்டும், கை முத்திரைகள் வழி கண் செல்லும், கண்கள் செல்லும் வழி மனம் செல்லும், மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர், மிக அழகாக, மிதிலைக் காட்சிப் படலம், எண்: 572 இல்,
 
"கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர".
 
எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நாட்டியத்தில் கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் வேலை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே ஒரு நர்த்தகிக்கு அசைவு உடலில் மட்டும் முக்கியமன்று மன உணர்ச்சியிலும் தான் என்பது தெரிகிறது.
 
இது இந்த குறிப் பிட்ட சிந்து வெளி நடன மாதில் வெளிப்படுவதை நீங்கள் இலகுவாக காணலாம். மேலும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் / அரங் கேற்று காதையில், சிலப்பதிகார வரிகள்: 157-159 இல்
 
"பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத் தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித் துக் காட்டினள் "
 
என்கிறார் அதாவது, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப் பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மாதவி என்கிறார்.
 
எனவே ஒவ்வொரு தமிழனும் அவர்களின் மரபு பண்பாட்டு நடனமான பரத நாட்டியத்தை, மத காரணங்களுக்காக அல்லாமல், தங்களை, தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக கடைபிடிக்க வேண்டும் என்று நம்புகிறேன் [I believe every Tamils should know their traditional dance form, not for religious reasons but as a way of expressing themselves].
 
நீங்கள் ஏதாவது காரணத்திற்காக கொண்டாட வேண்டுமாயின், அந்த கொண்டாட்டத்தை மேலும் வலுவூட்ட , சிறப்பு படுத்த நடனம் கட்டாயம் ஒரு வழியாகும். முன்பு பலரும் பரதநாட்டியம் பயின்றனர், ஆனால் இன்று அப்படியல்ல, சினிமாவில் மிகவும் பிரபலமான பாலிவுட் நடனம் [Bollywood dancing] அந்த இடத்தை எடுத்து- எமது பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாக கடத்தப் பட்டு, படிப்படியாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து தனது புனிதத் தன்மையை [sacredness] நிலை நிறுத்தி, எமது தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதியாகி, தமிழ் இனக் குழுவின் அல்லது தமிழகத்தின் பரம்பரை அடையாளத்தை [traditional identity] பிரதிநிதித்துவம் படுத்திய - அந்த பரதநாட்டியத்தை மறக்க தொடங்குகின்றனர். எனவே நாம் எமது அடுத்த தலை முறைக்கு இதை கொண்டு போக தீவீரமாக செயல்பட வேண்டும் என்று நம்புகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 30 தொடரும்
53541026_10213709076863957_7606161303375183872_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=geb-YZ49R4sQ7kNvgETghRb&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCdOs_W6AIPd98-Z-mrcZKVFW74ldfBPijHekseLtorQw&oe=66CEC2DB 53496332_10213709077583975_2246655104289603584_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=E37dhNOG4KoQ7kNvgHIxyzT&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAip5PSrl5RpUehYJeoTutdnLDkF9boXRghnYxl_8k2HQ&oe=66CEBB93  53442019_10213709078223991_6609394720772718592_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Xep0k8kZYkIQ7kNvgG4pWzf&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYD-L8hOvhcOuRmb_hTfGTcYs4adft_nZkZ46jKi-5I-fQ&oe=66CEBD02
 
 
53265515_10213709079424021_9095914544429006848_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=IearqqrSDAcQ7kNvgFm4uc6&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDIRnd9GJV5DHtutcpc6DD-qlxzIMWn1fdkULUi_R9r7w&oe=66CED705 53365802_10213709078944009_3098319901878648832_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=LiCLZvP_ht0Q7kNvgGK7Tvl&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAVN_n67dbswBJQ1efVmX56V0tHEbHmh0dfpNOsLlLIMw&oe=66CEC72D  
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 30
 
 
நீங்கள் விடுமுறை என்ற சொல்லை கேட்க்கும் பொழுது, உங்களுக்கு பொதுவாக தோன்றுவது கடையில் பொருட்கள் வாங்குதல், விருந்துகள், மலிவு விற்பனைகள்,  நண்பர்கள், உறவினர்கள், மற்றும் சிறப்பு இடங்களுக்கு போதல் ஆகும். ஆனால் உண்மையில் பெரும்பாலான விடுமுறைகள் எமது பெருமைக்குரிய பாரம்பரியத்தை கொண்டவை, ஆனால் இன்று அவை வணிக மயமாக்கப்பட்டு (commercialized), எம் முன்னோர் எமக்கு தந்த மரபு, மிக அற்பமாக மாற்றப் பட்டு விட்டது (trivialized).
 
இதனால் அந்தந்த விடுமுறையின் உண்மை அர்த்தம் மறந்து போகிறது. பாரம்பரியம் என்பது எமது வாழ்வில் பலவற்றை உள்ளடக்கியது. ஏனென்றால் நாம் எல்லோரும் எமது எமது குடும்பங்களில் பிறந்தோம். அங்கு தான் பாரம்பரியம் உருவாகிறது. தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் கடத்தப்படும் சடங்கு அல்லது மரபு தான் (ritual or custom ) பாரம்பரியம் ஆகிறது.
 
நாம், எமது குடும்பத்தின் பாரம்பரியத்தை தெரிந்தும் அதில் பங்கு பற்றியும் குழந்தை பருவத்தில் இருந்து வளர்கிறோம். எமது நோக்கமும் நம்பிக்கையும் நாம் அறிந்ததை பங்கு பற்றியதை எமது பிள்ளைகளுக்கு ஒரு நாள் கொடுப்போம் என்பதே யாகும். இந்த பாரம்பரியத்தையே நாம் கவனத்தில் எடுக்க வேண்டும், ஏனென்றால், அவை எமக்கு இடையில் ஒற்றுமை உணர்வு ஒன்றை (feeling of togetherness) ஊட்டுகிறது. அதிகமாக ஆண்டு முழுவதும் எதோ ஒரு பாரம்பரியத்தை குடும்பங்கள் பெரும்பாலும் கொண்டிருந்தாலும், விடுமுறையில் கொண்டாடும் சடங்கே நினைவில் கூடுதலாக நிற்கிறது. அது மட்டும் அல்ல, ஆய்வுகள் இதை மெய்ப்பிப்பதுடன், இவையே தலை முறைகளுக்கு இடையில் மிக நெருங்கிய ஆரோக்கியமான உறவு பாலங்களை இணைக்கின்றன எனவும் கூறுகிறது (Research shows that holiday traditions are important in building strong healthy family relationships between generations).
 
எனவே சிறுவர்கள் பொம்மைகள் மற் றும் பரிசுகளை விட, இந்த அவர்களின் சிறப்பு அனுபவங்களையே, கூடுதலாக நினைவில் கொள்வார்கள் எனவும் சுட்டிக் காட்டுகிறார்கள். உங்கள் குடும்ப பாரம்பரியம் மிகவும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் நேரம் ஒதுக்கி அதைப் பற்றி உங்கள் பிள்ளைகளுட னும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனும் கதையுங்கள், அப்படியான நடவடிக்கைகளிலும் அதை திட்டமிட்டு ஒழுங்கு படுத்தலிலும் குழந்தைகளை இணைத்து செயல்படுங்கள் (Include the children in planning and carrying out the special activities). இது அவர்களுக்கு பெருமையையும் மற்றும் தம் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்ற உணர்வையும் கொடுக்கும். அது மட்டும் அல்ல தங்கள் குடும்பம் ஏன் இந்த சிறப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கிறது என்பதன் விளக்கத்தை அறியவும் உதவுகிறது.
 
மேலும் இந்த பாரம்பரியம் மதம் அல்லது பண்பாட்டு மரபுரிமையின் (religious or cultural heritage) ஒரு பகுதியாகின், இது இளம் சந்ததியினருக்கு, அவர்களின் குடும்ப வரலாற்றின் மேல் ஒரு உணர்வை கொடுக்கும்.
 
சிலவேளை எமது குடும்பம் மாறும் பொழுது, எமது பாரம்பரியமும் எம்முடன் மாறுகிறது. அதில் தவறில்லை, ஏனென்றால், நீங்கள் இன்னும் அந்த குடும்ப ஒன்று கூடலை ஏற்படுத்தி, அந்த சிறப்பு விருந்தையும் நடத்தலாம், ஆனால், இடம் அல்லது உணவுப் பட்டியல் (menu) காலப்போக்கில் மாறு படலாம், அல்லது பெரும்பாலும் களைந்துவிடும் பாத்திரங்கள் (disposable dishes), முன்னைய பீங்கான் பாத்திரங்களுக்கு (chinaware) பதிலாக பாவிக்கலாம். எது எப்படியாயினும், இங்கு முக்கியமானது, நீங்கள் குடும்பமாக ஒன்று கூடி, உங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்தலும் குடும்ப மரபுகள் மற்றும் மதிப்புகளை இளம் சந்ததியினருக்கு கொடுப்பதும் ஆகும்.(The important thing is that you get together as a family to share memories and pass on the family traditions and values).
 
பாரம்பரிய நம்பிக்கைகள் சிலவேளை அல்லது பலவேளை உண்மைகளோடு, அறிவியலோடு முரண்படுகின்றன. அவை சிலவேளை தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களையும் கூட மக்களை செய்யும் படி ஊக்குவிக்க முடியும். பாரம்பரியம் என்பதற்கு வாய்மொழியாக அல்லது எழுத்து மூலமாக கடத்தப்பட்டவை அல்லது பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்பட்ட பழக்க வழக்கங்கள் அல்லது நிலைநாட்டப்பட்ட முறைகள் அல்லது செயல்கள் என கூறலாம்.
 
எனவே பாரம்பரியம் உண்மையானதாக இருக்கலாம் அல்லது பொய்யானதாக இருக்கலாம், நன்மையானதாக இருக்கலாம் அல்லது தீமையானதாக இருக்கலாம் என்பது தெளிவாகிறது.
 
உதாரணமாக, பிரிட்டிஷ் தத்துவஞானி பர்ட்ரன்ட் ரஸல் (Bertrand Russell), 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோப்பர்னிக்கஸ் (Nicolaus Copernicus) போன்ற அறிவியலாளர்களை பாராட்டுகிறார், ஏனென்றால் அவர்கள் குருட்டுத் தனமான பாரம்பரிய நம்பிக்கைகளை தைரியமாக உடைத்து, பண்டைய காலங்களிலிருந்து நம்பப் பட்டு வந்தவை எல்லாம் உண்மை இல்லை என்றும், பொய்யானவையாகவும் இருக்கக்கூடும் என்ற நிரூபித்ததால் ஆகும்.
 
எனவே மத நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும். சரியானவையை, தீங்கற்றவையை நாம் தெரிந்து எடுத்து, அந்த பெருமை தரும் பாரம்பரியங்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும், மற்றவையை எறிந்து விட வேண்டும்.
 
நான் சில மரபையும் பாரம்பரியத்தையும், எனக்கு தெரிந்த காரணங்களையும் தொகுத்து இந்த நீண்ட கட்டுரையில் தந்துள்ளேன், எவரையுமோ அல்லது எந்த மத நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. இது எனது உணர்வும் கருத்தும் ஆகும் (These are my personal feelings and views only). எனவே நாம் ஒரு பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு, பாரம்பரியங்களின் பின்னணியை, ஒரு நேர்மையான வழியில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நம்புகிறேன். (understanding the rationale behind them in a positive way).
 
மற்றது நான் எல்லா பாரம் பரியங்களையும் இங்கு உள்ளடக்கவில்லை, எனவே விடுபட்டவையை, அல்லது நீங்கள் சுட்டிக் காட்டுபவையை இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் தொடருவேன், எனவே இது இந்த கட்டுரையின் முடிவல்ல.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
தற்காலிகமாக முடிவுற்றது
54516785_10213747140415522_3337647539879936000_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=SRwZ-fHIDCUQ7kNvgE9fifE&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBqKA9lgrN-SIdshYaSM95vQDm69_3FdcTdNnvFIb8tEQ&oe=66D2CFF5 54233732_10213747141335545_4459569688531173376_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=HpDPdvYwU_EQ7kNvgE1V3mG&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCReFjwkDT--VeM59pNsRMZLyBfyfw6dwjExZFcECAWqg&oe=66D2E73F 
 
53739943_10213747142895584_6150386330284064768_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=LuuOGmRpdfAQ7kNvgGQKgT_&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCAmCICOQNVvFDtAjlNUWY4wrZKGrv1DcbrG1rl7j_L6g&oe=66D2E427 53897092_10213747143735605_5102994998228418560_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=oAzGZV13xUwQ7kNvgEZe8st&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBz2H84x4dUbuRsJsl5mBs-UzSljYY5OVWg_WxmUvjCrQ&oe=66D2EF76
 
No photo description available. No photo description available.
 
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.