Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7  06 OCT, 2024 | 05:14 PM

image

ஆர்.ராம்-

‘தமிழ்த் தேசியம்’ தான் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிரதான கோசமாகும். ஆனால் அந்த அரசியல் கட்சிகளுக்குள் தங்களில் யார் தமிழ்த் தேசியவாதிகள் என்பதில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகக் கூடிய ஆகக்கூடுதலான விடயங்களை உள்வாங்கியிருக்கின்ற அரசியல்கட்சிகள் ‘தூய தமிழ்த் தேசியவாத சக்திகளாக’ அல்லது ‘தமிழர்களின் உரிமைக்கான குரல்களாக’ அடையாளப்படுத்தப்படுகின்றன.

அதே நேரம், மத்திய அரசாங்கத்துடன் ஒன்றித்துப் பயணிக்கக் கூடிய அரசியல் கட்சிகள் அல்லது அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கக் கூடிய தரப்புக்கள் ‘தமிழ்த் தேசிய விரோதிகளாக’ அல்லது ‘தமிழ்த் தேசிய துரோகிகளாக’ சித்தரிக்கப்படுகின்றன.

மேற்படி வகையறாக்களுக்குள் தான் ‘மிதவாத’ அல்லது ‘முற்போக்கு’ சிந்தனை சக்திகளும் உள்ளடக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிட்டுக் கூற வேண்டியதொரு விடயமாக உள்ளது.

தமிழ்த் தேசியத்தின் உண்மையான வாரிசுகள் யார், போலித் தமிழ்த் தேசியவாதிகள் யார் என்று ஆராய்வது இந்தப் பத்தியின் நோக்கமல்ல. ஏனெனில் அது தமிழ் மக்களின் ஆணையுடன் சம்பந்தப்பட்ட விடயம். 

மாறாக, வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ‘தமிழ்த் தேசிய மையவாத அரசியல் கட்சிகளுக்கு’ முன்னால் காணப்படுகின்ற பாரிய சவால்களையும், ஆபத்துக்களையும் வெளிப்படுத்துவது தான் இந்தப் பத்தியின் பிரதான நோக்கமாக உள்ளது.

நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி, சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியனவும் அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய தனிநபர்களும் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்த  ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் அவர் 84,588 வாக்குகளையும், வன்னியில் 52,573வாக்குகளையும், மட்டக்களப்பில் 91,132வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். திருகோணமலையில் 40,496 வாக்குகளையும், அம்பாறையில் 86,589 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க பெற்றிருந்தாலும் அதில் தமிழ்த் தரப்பு வாக்குகள் சொற்பமானவையே.

இவ்வாறான நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படியான பெறுபேற்றுக்கு  டக்ளஸ் தேவானந்தா, சிவநேசத்துரை சந்திரகாந்தன், அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய நான்கு நபர்கள் தான் பிரதான காரணிகளாக உள்ளனர். 

இதில், டக்ளஸ், சந்திரகாந்தன் ஆகியோர் தனியாக தமது கட்சிகளின் ஊடாக பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுகின்றார்கள். அவர்களுக்கும், அவர்களின் கட்சிகளுக்கும் நிலையான வாக்குவங்கியொன்று உள்ளது. ஆகவே அவ்விருவரினது வெற்றி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டது எனலாம். 

ஆனால், வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோர் கடந்தமுறை தேசிய கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதித்திருந்தாலும் இம்முறை அவர்கள் புதுப்பொலிவுடன் வரவுள்ள பழைய தேசிய கட்சியொன்றின் கூட்டுடன் தான் கைகோர்க்க வேண்டியுள்ளது. 

அந்தக் கைகோர்ப்புக்கான அங்கீகாரம் எவ்வளவு தூரம் வெற்றியை உறுதி செய்யும் என்பதில் கேள்விகள் உள்ளன. ஏனெனில்,  வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோருக்கு மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களுடன் கொண்டிருந்த ஊடாட்டம் தான் வெற்றியை உறுதி செய்தது. 

ஆகவே, அவர்களின் வாக்காளர்கள் மத்தியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதை தான் எதிர்பார்பாக கொண்டிருப்பார்கள் என்று கொள்கின்றபோது, இம்முறை அதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படவில்லை. ஆகவே அவர்களின் ஆதரவாளர்கள் எவ்விதம் சிந்திப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

அடுத்து ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாமிடத்தைப் பிடித்தவர் சஜித் பிரேமதாச. இவரை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் அணி மட்டும் தான் ஆதரித்திருந்தது. அதில் யாழில் சுமந்திரனும், மட்டக்களப்பில் சாணக்கியனும் ஆதரித்து வாக்குச் சேர்த்தார்கள்.

அதற்கு அமைவாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 121,177வாக்குகளை அவர் பெற்றார். இதில் கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி பெற்றுக்கொடுத்த 30ஆயிரம் வரையிலான வாக்குகளும் உள்ளடக்கம். வன்னியில் 94,422வாக்குகளையும், மட்டக்களப்பில் 139,110வாக்குகளையும் திருகோணமலையில் 120,588 அம்பாறையில் 200,348 வாக்குகளையும் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்டுள்ளார்.  இதில் முஸ்லிம் கட்சிகளின் வாக்குச் சேகரிப்பும் உள்ளடங்கியுள்ளது.

ஆகவே, சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் தங்களின் அறிவிப்புக்கு மக்கள் திரண்டு வாக்களித்ததாக தர்க்கத்துக்காக கூறினாலும் சஜித்துக்கான வாக்குகளில் தங்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதை உறுதியாக கூற முடியாதவொரு நிலைமையே உள்ளது.

ஏழு அரசியல் கட்சிகளும், 83சிவில் அமைப்புக்களும் இணைந்து களமிறக்கிய தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் 116,688 வாக்குகளும், வன்னியில் 36,377வாக்குகளும், அவரது பிறந்த மண்ணான மட்டக்களப்பில் 36,905வாக்குகளும் திருமலையில் 18,524வாக்குகளும் அம்பாறையில் 9,985வாக்குகளும் கிடைத்துள்ளன. 

கொழும்பு மாவட்டத்தில்  3,168வாக்குகளும் கொழும்புக்கு வெளியே வடக்கு,கிழக்கு அல்லாத ஏனைய மாவட்டங்களில் 4,696 வாக்குகளும்  உள்ளடங்கலாக அவர் 2,26,243வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சிறிதரன் ஆதரவு அணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, சிவில் அமைப்புக்களின் கூட்டான தமிழ்த் தேசிய பொதுச்சபை ஆகிய நான்கு தரப்புக்கள் அந்த வாக்குகளுக்கு உரிமை கோருகின்றன. இதனைவிட, புலம்பெயர் சமூகத்தின் வகிபாகமும் உள்ளது.

ஆகவே, ‘தேசமாக’ அணி திரட்டிய அரியநேத்திரனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் எந்தத் தரப்பிற்குச் செல்லும் என்பதிலேயே அதற்கான உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும், சிறிதரன் தரப்பும், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் தனித்தனியாகவே போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுக்குள் சில சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

அதுமட்டுமன்றி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பொதுவேட்பாளரின் ‘சங்கு’ சின்னத்தை தனதாக்கியுள்ளது. இது ஏனைய தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே பிரசார மேடைகளில் ‘சங்கு’ சின்னத்தை மையப்படுத்திய வாதப்பிரதிவாதங்களும் தாராளமாக எழுவதற்கு இடமுள்ளது.

இம்முறை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த தரப்பில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்களின் தேர்தல் செலவீனங்களை பெருவர்த்தக நிறுவனமொன்று தத்தெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகள் சாத்தியமாகின்றபோது குறித்த தரப்புக்கள் பெருவர்த்தக நிறுவனத்தின் ‘கை பொம்மைகளாக’ மாறும் நிலைமையே ஏற்படும்.

இவற்றைவிடவும், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த அணியும், ரணிலை ஆதரித்த அணியும் உள்ள அரசியல்வாதிகள் சம்பிரதாய தமிழ்த் தேசிய அரசியல் கலாசாரத்திற்கு அப்பாற்சென்று பெற்றுக்கொண்ட சலுகைகள் பற்றிய தகவல்களும் மெல்லக் கசிய ஆரம்பித்துள்ளன. அவையும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள அநுரகுமார திசாநாயக்க வடக்கு,கிழக்கில் நேரடியாகவே களமிறங்கிப் பிரசாரம் செய்திருந்தார். யாருடனும் கூட்டணி அமைத்திருக்கவில்லை. அவருக்கு யாழில் 27,086வாக்குகளும் வன்னியில் 21,412வாக்குகளும் மட்டக்களப்பில் 38,832வாக்குகளும் கிடைத்துள்ளன. திருகோணமலையில் 49,886வாக்குகளும், அம்பாறையில் 108,971வாக்குகளும் கிடைத்துள்ளன. 

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பாராளுமன்ற ஆசனமொன்றைப் பெறுவதற்கு சொற்பமான வாக்குகளே அவருக்குத் தேவையாக உள்ளன. தற்போதைய சூழலில் வடக்கு,கிழக்கில் உள்ள துறைசார்ந்த நிபுணத்துவத் தரப்புக்கள் ஜே.வி.பியின் பெலவத்த தலைமையகத்திலும், ஜனாதிபதி செயலகத்திலும், நீண்ட வரிசையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கோரி நிற்கின்றன. 

அவ்விதமானவர்களில் ஜே.வி.பி.அடையாளம் கண்டு பொருத்தமான மக்கள் அபிமானத்தை வென்றவர்களை களமிறக்கும்போது வெற்றி உறுதியானதாக மாறுவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன.

ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கில் தலா ஒவ்வொரு ஆசனங்களை வெற்றி கொள்வது தான் முதற்கட்ட இலக்காக கொண்டுள்ள நிலையில் அந்த இலக்கு இலகுவில் அடையப்படும் என்பதே கணிப்பாக உள்ளது.

இதேநேரம், தேர்தல் புறக்கணிப்பைக் கோரிய தமிழ்;த் தேசிய மக்கள் முன்னணி தனித்து களமிறங்குகின்றது. அது தன்னுடைய வழமையான ஆதரவாளர்களை நோக்கியே நகருவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமுள்ளது. 

இவ்விதமான சூழலில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் ஏதேவொரு வகையில் அழுத்தங்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாகவே உள்ளன. 

அத்தோடு தமிழ்த் தேசியத்தை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் அபிமானமும் தற்போதைய சூழலில் குறைமதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலைமை தமிழ் மக்கள் மத்தியிலும் ‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்ற சிந்தனையை வெகுவாக தோற்றுவித்து வருகின்றது.

மூன்று சதவீதத்தினைக் கொண்டிருந்த ஜே.வி.பி.அரியணைக்கு செல்லுமளவிற்கு உருவெடுத்திருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கிலும் மாற்றத்தை மையப்படுத்திய சிந்தனைகள் வலுப்பெற்றுள்ளன.

ஆகவே, வடக்கு,கிழக்கு எதிர்பார்க்கும் மாற்றம் தமிழ்த் தேசியத்துக்குட்பட்டதாக இருந்தால் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. சிலவேளைகளில் அந்த மாற்றம் தென்னிலங்கை காண்பித்த ‘திசைகாட்டியை’ நோக்கியதாக இருந்தால் தமிழ்த் தேசிய மையவாத அரசியல் கட்சிகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

https://www.virakesari.lk/article/195636

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.