Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

குறிப்பிட்ட 1-3 கிலோமீட்டர் பரப்பளவு. வல்லாதிக்க நாடுகளின் உதவிகளோடு முப்படைகளும் ஒருங்கிணைந்து தாக்கும் களமாக மாறி இருக்கிறது அந்த குறுகிய நிலப்பரப்பு. கந்தக நெடியும் குருதி நெடியையும் தவிர வேறெதும் இல்லாத இருண்ட பொழுது.

மூடிய பதுங்ககழி இல்லை. திறந்தநிலை பதுங்ககழி வெட்ட எங்களால் முடியவும் இல்லை. நந்திக்களி அவ்வளவு திடமான மண். அதனால் பெரும்பாலும் சின்ன சின்ன கிடங்குகளே எம் அரண். அதை விட்டால் துணிகளில் நிரப்பப்பட்ட மண். அதுவும் இல்லை என்றால் திறந்தவெளியே எம் அரண்.

திரும்பும் இடமெங்கும் பிணக்காடு. “ஐயோ அம்மா என்னைக் காப்பாத்துங்கோ “ என்ற அலறல்.

காயப்பட்டுவிட்ட போராளி மைத்துனனின் பிள்ளைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு நடைப்பிணமாக நடந்து கொண்டிருக்கிறேன் நான். இல்லை இல்லை தவழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அப்பா வட்டுவாகல் பக்கம் போவம்.

நான் வரேல்ல நீங்கள் எல்லாரும் போங்கோ…

கழுத்தில் இருந்த தகட்டையும் குப்பியையும் தடவிப்பார்த்தபடி அப்பா கூறுகிறார்.

அம்மா குளறுகிறா.

அப்பாவின் கையைப் பிடித்து இழுத்தபடி வட்டுவாகல் நோக்கி நகர்கிறா.

அப்பாவின் எழுத்துக்கள் (கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் )அடங்கிய 4-5 உரப்பைகளை நாங்கள் தங்கி இருந்த பங்கருக்குள் போட்டு அதற்குள்ளையே அப்பாவின் ஆவணங்களையும் போட்டு அவசரம் அவசரமாக கொஞ்ச மண்ணை எடுத்து மூடிவிட்டே நகர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்குள் அப்பா அண்ணனுடன் தளபதிகளுடன் போராளிகளுடன் என எடுத்த ஏராளமான படங்களும் இருந்தன. அவை கண்டெடுக்கப்பட்டால் எல்லோருக்கும் பிரச்சனை வரலாம் என்ற பயத்தில் உயிரைக் காக்கப் போராடிய நேரத்திலும் அவற்றை மண்ணுக்குள் புதைத்துவிட்டேன்.

எதற்கும் அழாத என் அப்பா தன் உயிராக காத்தவற்றை நான் மண்ணுக்குள் மூடிய போது அழுதார். அவரது அழுகை அதற்கு மட்டுமல்ல தான் நேசித்த தமிழீழம் தாம் தமிழீழத் தேசிய தலைவரின் அணியில் ஒன்றிணைந்து அமைக்கத் துடித்த சுதந்திர தேசம் மீண்டும் அடிமையாக கண்முன்னே பகைவன் காலடியில் செல்லும் அந்த பொல்லாத நிலையையும் எண்ணி விழி கலங்கினார்.

அப்பா மட்டுமல்ல தளபதிகள் போராளிகள் மட்டுமல்ல ஆயிரம் ஆயிரமாய் அவர்களை நேசித்து அண்ணனை நேசித்து நின்ற தமிழீழ மக்களும் தான். ஒருபுறம் உயிர் பிரியும் நாளி எப்போதும் வரலாம் என்ற அச்சம். மறுபுறம் எம் தாய்நிலத்தைவிட்டு வலசைப் பறவைகளைப் போல போகிறோமே என்ற அங்கலாய்ப்பு.

காலுக்கடியில் தட்டுப்படும் பிணங்களும் அறுந்து விழுந்து கிடக்கும் உடல் துண்டுகளும். ஐயோ ஐயோ ஐயோ என்ற அலறல்களும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது.

“55, பப்பா லீமா, லீமா சேரா, டாங்கோ சேரா “ என்று பல ஆயிரம் சங்கேத பாசைகளினூடாக அழைத்துக் கொண்டிருக்கும் எங்கட அண்ணாக்களின், அக்காக்களின் வோக்கிகளின் சத்தம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் துப்பாக்கிகள் ஓயவில்லை. இயங்க மறுக்கவில்லை.

வானிலிருந்தும் கடலிலிருந்தும் தரையில் இருந்தும் வரும் ஒவ்வொரு உயிர்கொல்லிக் குண்டுகளின் சிதறல்கள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் எம் தேசத்தை புண்ணாக்கிக் கொண்டிருக்கிறது.

இதேநாள் முன்னிரவு என் இரண்டு சித்தப்பாக்களின் இரண்டு தங்கைகளின் உயிரை ஒரு ஆடலரி எறிகணை என் கையருகே பறித்த போது கையறுநிலையில் இருந்த நான் இன்று என் உயிரைக் காப்பாற்றிவிட எதிரியின் கட்டுப்பாட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன்.

“அம்மா நானும் உங்களோடு வரவா” என்னையும் உங்கட பிள்ளை என்று சொல்லிக் கூட்டிப் போறீங்களா?

முடி வெட்டிய நிலையில் காயப்பட்ட பெண் போராளி ஒருத்தி அம்மாவிடம் கேட்கிறா. நான் நினைக்கிறேன் உறவுகள் என யாரும் அங்கே இல்லாத சகோதரியாக இருக்கலாம். அல்லது உறவுகளைப் பறிகொடுத்திருக்கலாம். கையில் பெரிய அளவில் காயப்பட்டிருந்தா. போராளிக்கான மிடுக்கு பறிபோயிருந்தது. என் தங்கை ஒருத்தி தன் உடைகளை அவாவுக்காக கொடுக்கிறாள். அதை அணிந்து சாதாரண பெண்ணாகிறா அந்தப் போராளி.

இறுதியாக தான் போட்டிருந்த பச்சையுடையை தன் நெஞ்சோடு அணைத்தபடி,

“ அம்மா எல்லாம் முடிஞ்சு போச்சல்ல?”

அப்பா ஒருமுறை அவாவைத் திரும்பிப் பாக்கிறார்.

அவாவின் விழிகள் கலங்கிப் போயிருந்தன.

அப்பாவுக்கோ அம்மாவுக்கோ எனக்கோ அவாவுக்குச் சொல்லுவதற்கு எதுவும் இருக்கவில்லை.

நினைவோடு: இ.இ.கவிமகன்.

16.05.2025

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.