Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரினவாதச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் பெரும்பான்மை இனத்தவரின் கட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் பெரும்பான்மை இனத்தவரின் கட்சிகள்

[10 நவம்பர் 2008, திங்கட்கிழமை 9:15 மு.ப இலங்கை]

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சிங்களப் பெரும்பான்மையினரின் இரண்டு பெரும் கட்சிகளுமே ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்’ என்று இப்பத்தியில் பல தடவைகள் நாம் குறிப்பிட்டு வந்துள்ளோம்.

வெளிவேஷத்துக்கு சில தரப்புகள் அவ்வப்போது பல இனங்களையும் அரவணைத்துத் தாராளமாக நடப்பவை போலத் தம்மைக் காட்டிக்கொண்டாலும், அவற்றின் அடி மனதுக்குள் பேரினவாத மேலாதிக்கமும், பௌத்த - சிங்களச் செருக்குமே ஊறிக் கிடக்கின்றன என்பதை இங்கு வெளிப்படையாக உணர்த்தி வந்திருக்கிறோம்.

ஏதோ, இப்போது ஆட்சியில் ஏறியிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அணியினரும் மட்டுமே பேரினவாதிகள் என்பது போலவும் -

எதிரணியில் நிற்கும் ரணில் விக்கிரமசிங்கவும் ஏனையோரும் சமரசவாதிகள் என்பது போலவும் -

ஒரு கருத்துருவாக்கம் பல தரப்புகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்தது; மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால் அது தப்பு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும், அதனைத் தக்கவைப்பதற்காகவும் பெரும்பான்மை இனத்தவர்களின் இரண்டு பெரிய கட்சிகளுமே பேரினவாதத்தைத் தமது பேராயுதமாகக் கைக்கொள்ளப் பின்நிற்கா என்பதை இப்பத்தியில் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டி வந்தோம்.

பேரினவாதமும், அதன் வெளிப்பாடான அடக்குமுறையும், அந்த அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் புரட்சியை அழித்து ஒழிப்பதற்கான கொடூர யுத்தமும் என்று சிங்களத்தின் அரசியல் செயற்பாடுகள் மிகக் கொடூரமானவையாகவும் மோசமானவையாகவும் கட்டவிழும்போது, அதில் நீதிக்கும், நியாயத்துக்கும், சமரசத்துக்கும், பிற சமூகங்களை சமனாக மதிக்கும் தாராளத்துக்கும் இடமேயில்லை என்பதுதான் இலங்கைத் தீவின் நிதரிசனம்.

2000 ஆம் ஆண்டில் - மிலேனியப் பிறப்போடு - பேரினவாதத்தின் ஒரே ஆட்சிப் பிடியான யுத்த நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் பேரடியும், பேரிடியும் கொடுத்து, இலங்கைப் படைகளைப் போரியல் பின்னடைவுக்குள் தள்ளி, இராணுவ வலுச் சமநிலையைத் தமக்குச் சாதகமாக மாற்றியபோது, பேரினவாதத்தின் உச்ச வெளிப்பாட்டு வடிவமான போர் மூலம் சிறுபான்மையினரை அடக்குவதோ, அந்தப் போர்த் தோல்விப் போக்கோடு பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறுவதோ ஆட்சியாளர்களுக்குச் சாத்தியமற்றது - சந்தேகமானது - என்ற இரண்டுங்கெட்டான் நிலைமை உருவானது.

அப்போதுதான் சமரசத்தோடு சிறுபான்மையினரை அணுகி, அரவணைக்கும் கருத்துருவ நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தரப்பில் இருந்த ஐ.தே.கட்சியும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அணியினரும் சந்தர்ப்பவாத செயற்பாடாக - வேறு வழியில்லை என்ற கட்டாயத்தின் பேரில் - முன்வைத்தனர் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

1977 முதல் 1994 வரை சுமார் 17 ஆண்டுகள் ஐ.தே.கட்சி ஆட்சியில் இருந்தபோதும் சரி -

பின்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசு, ஈழத் தமிழர்களுக்கு சற்றேனும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விதத்தில் புதிய அரசமைப்புத் திருத்த நகலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அதை சபைக்குள்ளேயே கிழித்தெறிந்து, அதிகாரப் பகிர்வை நிராகரித்து, கொதித்தெழுந்தபோதும் சரி -

சிறுபான்மையினருக்கு நீதி, நியாயம் செய்யவேண்டும் என்ற தாராள மனப்பான்மை மிக்க சமரசவாதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்படவேயில்லை, அவர் இனவாதியாகவே அப்போதும் செயற்பட்டார் என்பது மறைக்கற்பாலதல்ல.

பேரினவாதக் கெடுபிடிப் போக்கும், அதன் விளைவாக வெடித்த கொடூர யுத்தமும் தென்னிலங்கைக்குப் பெரும் பின்னடைவைத் தந்து, போரியல் போக்கு தென்னிலங்கைச் சிங்களத்துக்கு சாதகமாக அமையாது என்ற நிலையில் -

அதைத் தென்னிலங்கை மக்கள் பட்டறிந்து உணர்ந்தபோது, அந்த உணர்வு நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வாக்குகளைத் திரட்டி, ஆட்சியைப் பிடிப்பதற்காகவே அன்று தாராளவாதிபோல - சமரச செயற்பாட்டாளர் மாதிரி - சிறுபான்மையினரையும் அரவணைத்து நடக்கும் தலைவர் போன்று - நடந்து கொண்டார் ரணில்.

இன்று, ஈழத் தமிழரின் போரியல் வலிமையை அடக்கி, அவர்களது போரியல் சக்தியான புலிகள் அமைப்பை நிர்மூலமாக்கி, சிறுபான்மைத் தமிழர்களின் கிளர்ச்சிக்கு எதிரான போரில் நிரந்தர வெற்றியை ஈட்டிவிடலாம் என்ற நம்பிக்கைக் கனவு தென்னிலங்கையில் மலர்ந்து வருகிறது. அதை உணர்ந்து கொண்டதும் ‘வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியமை போன்று’ சமரச நிலையிலிருந்து இறங்கி பேரினவாத முருங்கையில் ஏறிவிட்டார் ரணில்.

புலிகளோடு 2002 பெப்ரவரியில் தாம் செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை, மஹிந்த அரசு இந்த ஆண்டு முற்பகுதியில் நிராகரித்து அதிலிருந்து வெளியேறியபோது -

"இலங்கை இராணுவம் பல யுத்த தோல்விகளைச் சந்தித்து, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இழந்து, பல பின்னடைவுகளைக் கண்ட நிலையிலேயே இலங்கையில் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காக்கும் நோக்கோடு புலிகளுடன் நான் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்தேன்" - என்று பகிரங்க அறிக்கை மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ரணில் விக்கிரமசிங்க -

இன்று புலிகளைப் போரியல் ரீதியில் நிர்மூலமாக்கி, அடக்கி, ஒடுக்கி விடலாம் என்ற நம்பிக்கைக் கனவை மஹிந்தர் அரசு ஏற்படுத்தியதும் "ஜனநாயகக் கட்டமைப்பு அல்லாத புலிகளை இராணுவமே கையாளவேண்டும்." - என்ற தொனியில் பேசி, தம்மையும் ஜனாதிபதி மஹிந்தருக்கு இணையான யுத்தவாதியாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

இந்த இரண்டு தரப்புகளுமே பேரினவாதச் சகதியில் ஊறிய மட்டைகள்தாம். ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல இத்தரப்புகள்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.