Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளம்பியது திரையுலகத் தமிழீழ ஆதரவுப் படை - கலக்கத்தில் காங்கிரஸ்..!

Featured Replies

நேற்றைக்குக்கூட ஈழத்தில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த தற்காலிக மருத்துவமனையில் சிங்கள ராணுவம் குண்டு வீசியதில் அப்பாவி நோயாளிகள் 64 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஆனாலும் இன்று வரையிலும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்ற கோயபல்ஸ் பிரச்சாரம் இந்தியாவில் நடந்து கொண்டுதான் வருகிறது.

பிச்சைக்காரர்களே இருந்திராத தேசத்தில் அத்தனை மக்களையும் பிச்சைக்காரர்களாக மாற்றிய சிங்கள இனவாத அரசுக்குத் துணை போகும் காங்கிரஸ் அரசையும், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வையும் தோலுரிக்க வேண்டிய கட்டாயம் அத்தனை பேருக்கும் உண்டு.

சிங்கள அரசு சொல்லும் அனைத்துப் பொய்களுக்கும் ஆமாம் சாமி போட்டு ஆதரவு அளிப்பது மத்திய, மாநில அரசுகள்தான்.. bharathiraja-seeman-10.jpg

இப்படி தங்களது சுயலாபத்திற்காக அப்பாவி தமிழக மக்களின் கண்ணீரைக்கூட பகடைக்காயாகப் பயன்படுத்தும் நம்மிடையே இருக்கின்ற தமிழர் விரோத அரசியல் வியாதிகளைத்தான் முதலில் கண்டிக்க வேண்டும்.. மக்களிடம் அவர்களுடைய முகமூடிகளை கிழிக்க வேண்டும் என்கிற ஆவலில் தமிழகத் திரைப்படத் துறையில் இருக்கும் தமிழீழ ஆதரவு இயக்கத்தினர் இறங்கியுள்ளனர்.

சென்ற வாரம் அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவுதான் கலைஞரை அண்ணா சமாதிவரைக்கும் கொண்டு வந்து தூங்க வைத்தது. அந்தப் போராட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்ற தொகுதிகளில் அவர்களுக்கெதிராக பிரச்சாரம் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

23-ம் தேதியன்று நடந்த தொடர் முழக்கப் போராட்ட தினத்தன்றுகூட காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலு மீது மட்டுமே கோபத்தில் இருந்தது திரையுலகப் படை.. ஆனால் அன்று காலையில் வெளிவந்த நக்கீரன் இதழில் காங்கிரஸ் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் “யார் அந்த முத்துக்குமார்..?” என்று கேள்வி கேட்டதாக வெளி வந்த செய்தியைப் பார்த்ததும் அத்தனை பேருமே கொதித்துப் போனார்கள்.

முதலில் இந்த காங்கிரஸ்காரர்களின் இந்தத் திமிரை அடக்கியாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அவர்களை எதிர்த்து தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். அப்படித்தான் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அந்த போராட்ட மேடையில் எதிர்பாராதவிதமாக கவிஞர் தாமரையின் பேச்சு பெரும் புயலைக் கிளப்பிவிட உலகத் தமிழர்களிடையே அந்தப் போராட்டத்திற்கு விளம்பரமும், ஆதரவும் கிடைத்துவிட்டதாலும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரு ரவுண்டு அடிப்போம் என்று இப்போது முடிவு செய்துள்ளார்கள்.

சொன்னதைப் போலவே அந்த இயக்கத்தினர் தங்களது பிரச்சாரப் பயணத்தை நாளை மதியம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து துவக்குகிறார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டம் முடிந்ததும் அத்தொகுதிக்கென்று சிலரைப் பொறுப்பாளர்களாக நியமித்து அவர்கள் தலைமையில் இளைஞர் பட்டாளத்தினரை நியமித்து அந்தத் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அனுப்பிவிட்டு அடுத்தத் தொகுதிக்கு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறது திரையுலக் குழு.

அதற்கேற்றாற்போல் எத்தனை பேர் வருகிறார்கள்? யார் யார் எந்ததெந்தத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்..? அவர்களுக்குக் கீழ் உள்ள இளைஞர் பட்டாளத்தினர் யார், யார் என்பதையெல்லாம் ரகசியமாக வைத்துள்ளனர்.

இதில் அதிகம் பேர் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 24 சங்ககங்களில் ஏதேனும் ஒரு சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்கள். அது போலத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். போலீஸார் மூலம் கைது, வழக்கு, சிறை என்று வந்தால் அதனைச் சமாளிப்பதற்கும், முறியடிப்பதற்கும் எந்த விதத்திலும் தயாராகவே உள்ளது இப்படை.

இதற்கிடையில் வருகின்ற 6-ம் தேதி புதன்கிழமை சோனியா சென்னை வருகிறார். தீவுத்திடலில் பொதுக்கூட்டம். சோனியா வரும்போது எங்களது எதிர்ப்பை எப்படி காட்ட வேண்டுமோ அப்படி காட்டுவோம் என்று இந்த அமைப்பினர் ஏற்கெனவே சொல்லியிருப்பதால், போலீஸாரும் தற்போது பதட்டத்தில் உள்ளனர்.

வேறு கட்சியினராகவோ, அமைப்பினராகவோ இருந்திருந்தால் முன் எச்சரிக்கைக் கைது என்று சொல்லி இளிச்சவாயர்கள் நான்கைந்து பேரை கைது செய்து சிறையில் தள்ளி கணக்குக் காட்டியிருக்கும் காவல்துறை. ஆனால் இப்போது திரைப்படத் துறையினர் என்பதால் தேர்தல் நேரத்தில் “அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் ஒட்டு மொத்தமாக சிலிர்த்து எழும் வாய்ப்பை தரவே கூடாது. எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்..” என்று மேலிடம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம்.

முன் எச்சரிக்கை கைதுகள் நடைபெறப் போவதில்லை என்பது நன்கு தெரிந்ததினால்தான், பகிரங்கமாக போராட்டத்தினை அறிவித்துள்ளது இந்தத் திரையுலகப் படை.

இது பற்றி நேற்று முன்தினம் திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் அமைப்பாளர், இயக்குநர் இமயம் பாரதிராஜா அளித்துள்ள பேட்டி இது..

“தமிழர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர் விரோத சக்தியாக வளர்ந்துள்ள அரசியல் சக்திகளை அடையாளம் காட்டவும் திரையுலகத் தமிழ் இன உணர்வாளர்கள் இன்று ஒன்றுபட்டுள்ளோம்.

எந்தவித அதிகாரப் பங்கீடோ, அரசியல் ஆதாயமோ இல்லாமல், ஓர் இன விழிப்புணர்வை தமிழக மக்களிடம் கொண்டு வரும் நோக்கத்தில், தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

இலங்கையில் போர் நிறுத்தம் என்பது பொய். ஆறு மாத காலமாக தமிழகத்தில் பேரணிகள் உண்ணாவிரதங்கள் மேற்கொண்டும் பல உயிர் பலிகள் கொடுத்தும் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்கள்தான் நடத்துகிறார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு சூழ்நிலைக் கைதியாக உள்ளது. ஆகையால் தமிழின விரோதிகளை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்.

எங்களது பிரச்சாரப் பயணம் நாளை மறுதினம் காஞ்சிபுரத்தில் இருக்கும் அண்ணா சிலையில் துவங்கி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, கடலூர் எனத் தொடர்ந்து வரும் 11ம் தேதி புதுவையில் முடிவடைகிறது.

இப்பிரச்சாரக் கூட்டத்தில் சீமான், செல்வமணி, சேரன், அமீர், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், சரவணசுப்பையா, செல்வபாரதி, பிரவீன்காந்த், மனோஜ்குமார், நடிகர் வடிவேலு, கவிஞர்கள் அறிவுமதி, கவிஞர் சினேகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழர்கள் அல்லாத பிற இனத்தவர்களும் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு சோனியா வரும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்..”

என்று கூறியுள்ளார் பாரதிராஜா.

தொடர் முழக்கப் போராட்ட தினத்தன்று பாதியிலேயே ஜூட் விட்ட நடிகர் வடிவேலு இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது ஊர், ஊராக வருவதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்.

எப்படியோ இவர்களது பிரச்சாரத்தின் பயனாக சில தொகுதிகளிலாவது காங்கிரஸ் கட்சி தோற்றால்தான், தமிழர்கள் மீது அக்கட்சித் தலைவர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும். அதன் பின் ஏதேனும் அரசியல் மாற்றங்கள் நிகழுமா என்று பார்ப்போம்..

எனக்கும் உடன் செல்லத்தான் ஆசை. ஆனால் வயித்துப்பாடு என்ற ஒன்று இருக்கிறதே.. அதுதான் இடிக்கிறது.. வருத்தமாகத்தான் உள்ளது. ஒரு நாள் என்றால் பரவாயில்லை.. விடுமுறை எடுத்துவிடலாம். தொடர்ச்சியான 7 நாட்கள் என்பதுதான் என்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. அந்தக் குற்றவுணர்வோடுதான் இதனை தட்டச்சு செய்கிறேன்.

இந்தத் திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

படங்கள்........................

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

Edited by தராக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.