Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு துயிலுமில்லத்தை கூட விட்டு வைக்கேல்ல..

Featured Replies

கந்தையா சின்னம்மா இரண்டு மாவீர்களின் தாய். வயது 69. யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்த இவர், யாழ்ப்பாண இடப்பெயர்வை அடுத்து, இப்பொழுது வன்னியிலேயே இருக்கின்றார்.

இவருடைய மூத்த மகன் லெப். அருள் 1993 இல் மணலாற்றில் வீரச்சாவடைந்தார். வித்துடல் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டது. அடுத்த மகள் கப்ரன் இசைமலர் ஜெயசிக்குறு சமரின்போது 1998 இல் வீரச்சாவடைந்து முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டார்.

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் 1996 இல் சிறிலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டபோது மிகவும் வருந்தியவர் சின்னம்மா. இறந்தோரின் நினைவிடத்தை அழித்ததற்காக சிங்களப் பண்பாடு தலைகுனியும் என்று யாரோ ஒருவர் ஒரு கூட்டத்தில் சொன்னதை இப்போதும் நினைவு கூரும் சின்னம்மா, இன்று முழுதாகவே அழிக்கப்பட்டிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களைப் பற்றிக் கதைக்கும்போது கதறி அழுகிறார்.

இந்த மாதிரிக் கொடுமையும் வெட்கக் கேடான செயலும் வேறெங்கும் நடக்குமா? என்பது இந்தத்தாயின் கேள்வி.

ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மாவீரர் நாளில் துயிலுமில்லங்களுக்குச் செல்லும் இந்தத்தாய் இந்த முறை எங்கே போவதென்று தெரியாமல், எப்படித் தன்னுடைய பிள்ளைக்கு விளக்கேற்றுவது என்று புரியாமல் உள்ளுக்குள்ளே வெந்து கொண்டிருக்கிறார்.

இப்போது வவுனியாவில் இருக்கும் இந்தத்தாயின் உணர்வுகள்....

எனக்கு ஐஞ்சு பிள்ளையள். மூத்தவன்தான் மாவீரர். பேர் லெப்ரின்ட் அருள். மணலாற்றிலதான் வீரச்சாவடைந்தான். இவனை கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைச்சது. அப்ப நாங்கள் சாவகச்சேரியில இருக்கிறம்.

இவன், 89 இல் இந்தியன் ஆமிக்காலத்தில இயக்கத்துக்குப் போனவன். பிறகு 91 இல ஒருக்கா வீட்டை வந்தான். நாலைஞ்சு நாள் நிண்டிருப்பான். பிறகு மணலாற்றுக்கே போட்டான். அதுக்குப் பிறகு தொடர்பில்லை. ஆனா, அவன்ரை கூட்டாளியள் வீட்டை வந்திட்டுப் போவினம். பிறகு 92 ஒருக்கா வந்து ஒரு கிழமை வரை நிண்டிருப்பான்.

அப்ப தன்னோட படிச்ச பெடியளிட்ட எல்லாம் போய் இயக்கத்தைப் பற்றியெல்லாம் சொல்லி எல்லாரும் இயக்கத்துக்கு ஆதரவளிக்க வேணும். எல்லாரும் சேர்ந்து போராடினால்தான் விடுதலை கிடைக்கும். இன்னும் அது இது எண்டு கனக்கக் கதைச்சிருக்கிறான்.

அவன் லீவு முடிஞ்சு போனகையோட ஊருக்குள்ள ஏழெட்டுப் பொடியளும் பெட்டையளும் இயக்கத்துக்குப் போட்டுதுகள்.

அப்படியான ஆள், 93 இல மணலாற்றுப் பக்கத்தில நடந்த அடிபாட்டில வீரச்சாவடைஞ்சிட்டான்.

அவனை கொடிகாமத்தில இருந்த துயிலுமில்லத்திலதான் அடக்கம் செய்தது. பிறகு ரண்டு வருசம் நாங்கள் அங்கதான் போய் விளக்கேத்தினம்.

பிறகு யாழ்ப்பாணத்தில இருந்து வன்னிக்கு வந்திட்டம். வன்னிக்கு வந்தாப்பிறகு, அங்க, கொடிகாமத்தில இருந்த துயிலுமில்லத்தை ஆமியள் இடிச்சழிச்சுப் போட்டாங்கள் எண்டு சொல்லிச்சினம்.

இந்தக் கதையைக் கேட்டோடண எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல. இந்தக் கதை உண்மையா இருக்கக் கூடாதெண்டு கடவுளை நேந்தன். ஐயோ என்ரை பிள்ளை செத்ததுக்குப் பிறகும் நிம்மதியாத் தூங்க முடியாதா?

பிறகு பிறகு அது உண்மைதான் எண்டுது உறுதியாப்போச்சு. ஆனா, என்னத்தைச் செய்யிறது.

வன்னியில அவன்ரை நினைவா முள்ளியவளைத் துயிலுமில்லத்துக்குப் போவம். அங்க போய், ஆட்களில்லாத கல்லறைகளாப் பாத்து அதுக்கு விளக்கேத்துவம். மட்டக்களப்பு யாழ்ப்பாணத்து ஆட்களின்ர பிள்ளையளுக்கு உரித்தாக்கள் வாறது குறைவு. அங்கயிருந்து எல்லாராலயும் வரேலாது.

அதாலை நாங்கள் அந்தப் பிள்ளையளுக்கு விளக்கேத்துவம். பிள்ளை எண்டால் எல்லாம் ஒண்டுதான். அங்க போனால், வேறுபாடுகள், பாரபட்சங்கள் ஒண்டுந் தெரியாது.

எல்லாக் கல்லறையும் ஒரே மாதிரித்தான். எல்லா விளக்குகளும் ஒரே மாதிரித்தான். அப்ப நாங்கள் அந்தப் பிள்ளையையும் நினைச்சுக் கொண்டு, எங்கட அருளையும் நினைச்சுக்கொண்டு விளக்கேத்துவம்.

பிறகு, 2002 எண்டு நினைக்கிறன். சமாதானம் வந்ததுக்குப் பிறகு, யாழ்ப்பாணத்துக்குப் போகலாம் எண்டவுடன அங்க கொடிகாமத்திக்குப் போய், அந்தக் கல்லறையைப் பாக்கோணும் போல இருந்துது. ஆனா, அங்க போறதைப்பற்றி கனபேர் பயப்பிடுத்திச்சினம்.

சமாதான காலத்தில இயக்கமும் அங்க போய், அந்தத் துயிலுமில்லத்தைத் துப்பரவாக்கிச்சுது. அப்ப நாங்களும் போனம். என்னைப் போல இன்னும் நிறையப்பேர் வந்திச்சினம்.

எல்லாருமா அங்க போய்ப்பாத்தம். அங்க என்ரை பிள்ளையைச் சிதைச்சுப் போட்டாங்கள்...

(அழுகின்றார்)

ஆராக இருந்தாலும் முதல்ல மனுசப் பண்பு வேணும். உயிரோட இருக்கேக்க ஒருதரைக் கோவிக்கலாம். தண்டிக்கலாம். ஆனா, செத்துப் புதைச்ச இடத்தைத் தோண்டிச் சிதைத்து, எல்லாத்தையும் அழிக்கிறது கொடுமை. மனிசர் செய்யாத காரியம்.

அப்ப சந்திரிகா ஆட்சியில இருந்தா. அவவும் ஒரு பொம்பிள. அவவும் ஒரு தாய். ரண்டு பிள்ளைகளைப் பெத்தவா. இப்பிடியொரு காரியத்தைச் செய்யலாமோ!

பிறகு நாங்கள் அந்த இடத்தைப் போய்ப்பாத்திட்டு, பூ வைச்சுக் கும்பிட்டிட்டு வந்தம். இயக்கம் அந்த இடத்தைத் துப்பரவாக்கிச்சுது. அதுக்கும் பிரச்சினை. ஆமி கனக்கப் பிரச்சினை குடுத்துது.

இதெல்லாம் நீங்கள் அறிஞ்ச கதை. இதுக்குப் பிறகு 98 இல மகள் வீரச்சாவடைந்தாள். அவளை நாங்கள் முள்ளியவளையில இருக்கிற துயிலுமில்லத்தில விதைச்சம்.

அப்ப நாங்கள் முள்ளியவளையிலதான் இருந்தம். அங்க வருசம் வருசம் போய் விளக்கேத்துவம். அடிக்கடிபோய் மாலை போட்டு பூவைச்சுக் கும்பிட்டிட்டு வருவம்.

(விம்முகிறார். மௌனம். பிறகு சொல்கிறார்).

எங்களைப் போல வேற ஆட்களும் அடிக்கடி வருங்கள். வீரச்சாவடைந்த பிள்ளையளின்ர நினைவு நாள், பிறந்த நாள் எல்லாத்துக்கும் தாய் தகப்பன், சொந்தம் உறவு எண்டு எல்லாரும் வந்து அங்க அந்தக் கல்லறைக்கு வந்திட்டுப் போங்கள்.

அது ஒரு அமைதிப் பூங்கா மாதிரித்தான் இருந்தது. அங்க போய் இருந்தா துக்கம் வந்தாலும் பிள்ளையோட இருக்கிற மாதிரித்தான் இருக்கும். மனசில ஒரு ஆறுதல்.

என்ர பிள்ளை மட்டுமில்ல, ஏராளம் பிள்ளையள். எல்லாம் ஒரு நோக்கத்துக்காகப் போன பிள்ளையள். ஒண்டா ரண்டா கடவுளே... எத்தினை பேற்றை பெத்த வயிறு...

(அழுகிறார்)

எத்தினை பேற்ற வயிறு சுமந்த பிள்ளையள்? எல்லாம் பூவும் பிஞ்சுமாய்... வாழவேண்டிய வயசில....

நாட்டுக்காக எண்டு போய்... போராடி.... காயம்பட்டு... கஸ்ரப்பட்டு.... கடைசியில தங்கட உயிரையே குடுத்துப் போட்டு மண்ணுக்கடியில கிடக்குதுகள்....

(அவர் நிறுத்தி விட்டார். தொடர்ந்து பேச விரும்பவில்லை எனத்தெரிந்தது. எழுந்து வீட்டுக்குள்ளே சென்று விட்டார். நாங்கள் அமைதியாகவே இருந்தோம். அங்கே வேறு எதைத்தான் பேச முடியும்? சற்று நேரத்தின் பின்னே வந்து மீண்டும் பேசினார்.....)

கடவுளே..!

வரிசையா அத்தனை பிள்ளையளும் நிண்டால் எப்பிடியிருக்கும்? எனக்கு அங்க போனா அதெல்லாம் கல்லறையாத் தெரியாது. எல்லாம் ஒவ்வொருத்தற்ற முகங்களாத்தான் தெரியும். ஒவ்வொரு பிள்ளையும் எங்களைப் பாத்துச் சிரிக்கிற மாதிரி இருக்கும். வரிசையா ஒரு படையணியைப் போல பள்ளிக்கூடப் பிள்ளையள் அணிவகுத்து நிக்கிற மாதிரி இருக்கும்.

இப்பிடியே இந்தப் பிள்ளையள் உறங்கிற அந்த இடத்துக்கு நான் பிறகு அடிக்கடி போய்வரத் தொடங்கீட்டன்.

என்னைப்போல வேற ஆக்களும் வந்து போவினம்.

துயிலுமில்லத்தில இருக்கிற ஒழுங்கும் அமைதியும் வேற எங்கயும் இல்லை. அது ஒரு புனித இடந்தான். என்ரை பிள்ளையும் அங்க உறங்கிறதை நினைச்சு ஆறுதலடைஞ்சன். ஆனா இப்ப...

(அவர் அழுகிறார். படையினரையும் அரசாங்கத்தையும் திட்டித்திட்டி அழுகிறார்)

துலைவார், அந்தப் புனிதமான இடத்தை அழிக்க மனம் வந்திதே. அதுகள் எதுக்காகச் செத்துதுகள்? ஏன் செத்துதுகள்? வாழவேண்டிய வயதில போய்ச் சாகிறதுக்கென்ன அதுகளுக்குப் பைத்தியமா?

தங்கட இனம், தங்கட சொந்தங்கள் வாழக் கஸ்ரப்படுகுதுகள் எண்டுதானே செத்துதுகள்.

அதுகள் என்ன வாழ விருப்பமில்லாமலா தங்கட உயிரை மாய்ச்சுதுகள்?

இல்லை, தாங்கள் என்ன ஆண்டு அனுபவிக்கவா துவக்குத் தூக்கினதுகள்?

சனங்களுக்காகச் செத்ததுகளுக்கெண்டொரு மதிப்பு வேண்டாமா? எல்லாத்தையும் விட எப்பிடியோ இறந்து உயிரை விட்டாப்பிறகு, என்ன கோவதாபம்?

அதுதானே இறந்தவைக்கு எண்டு தனியா மரியாதை குடுக்கிறது? அது எதிரியாக இருந்தாலும் சரி. ஆனா, இந்த நடைமுறை இங்க, இலங்கையில மட்டுந்தான் இல்லை.

இதைப் போய் ஆரிட்டக் கேட்கிறது?

இப்ப எங்களுக்கு எண்டு என்னதான் இருக்கு? வீடில்லை. வாழ்ந்த ஊருமில்லை. கோயில் குளம் எல்லாம் பிரச்சினையில கிடக்குது.

நான் ஊருக்குப் போக விரும்பேல்லை. முந்தி ஒரு காலம் என்ர கடைசிக்காலம் எப்பிடியும் ஊரிலதான் இருக்கோணும் எண்டு விரும்பினன். பிறகு வன்னியில இருந்தாலும் பரவாயில்லை. பிள்ளையளின்ர கல்லறையையாவது பாத்துக் கொண்டிருக்கலாம் எண்டு நினைச்சிருந்தன்.

ஆனா, இப்ப ஒண்டுமில்ல. அங்க துயிலுமில்லங்கள் இருந்த இடமெல்லாத்தையும் இடிச்சழிச்சுப் போட்டாங்கள்.

ஓரு துண்டு அடையாளங்கூட இல்லை. நான் அங்க போக இல்லை. அதை அந்தக் கொடுமையை என்னால பாக்கேலாது. போய்ப்பாத்திட்டு வந்தவை சொன்ன கதையைக் கூட என்னால கேட்கேலாமற் கிடக்கு.

வன்னியில இருந்த எல்லாத் துயிலுமில்லங்களையும் இடிச்சழிச்சுப் போட்டாங்கள். இதென்ன கேவலம்?

இப்ப அங்க அந்தத் துயிலுமில்லங்களில எருக்கலம் பத்தைதான் முளைச்சிருக்காம்.... கடவுளே... பாருங்கோவன் எங்கட விதியை?

(மீண்டும் அழுகிறார். இப்போது அவருடைய மகளும் அழுகிறார்)

இப்பிடியெல்லாம் நடக்குமெண்டா எங்கட பிள்ளையள் தங்கட உயிரை விட்டுதுகள்?

துயிலுமில்லங்களுக்கு வரேக்கை ஒவ்வொரு போராளியும் சொல்லிற கதைகளை நினைக்க நெஞ்சு வெடிச்சிடும்போலயிருக்கு.

அம்மா எனக்கு நீங்கள் மறக்காம வந்து மாலை வைக்க வேணும். ஆர் மறந்தாலும் நீங்கள் கட்டாயம் வந்து விளக்கேத்த வேணும் எண்டு எத்தினை பிள்ளையன் என்னைக் கேட்டிருக்குங்கள்...

இப்ப அதுகளுக்கெல்லாம் நான் என்னத்தைச் சொல்லுவன்...?

இவ்வளவும் நடந்ததுக்குப் பிறகும் நாங்கள் ஏன் இன்னும் உயிரோட இருக்கோணும்?

இந்த இப்ப கார்த்திகை வந்திட்டுது? கண்ணுக்குள்ள அந்த மஞ்சல், சிவப்புக் கலர்தான் நிக்குது.

ஒரு துயிலுமில்லத்தைக் கூடப் பாவியள் விட்டு வைக்கேல்ல. நாங்கள் எல்லாத்தையும் அழிச்சுப் போட்டம். ஒரு நினைவுச்சின்னம் கூட மிஞ்சேல்லை.

இப்பிடியொரு நிலைக்கே இவ்வளவு கஸ்ரங்களைப் பட்டம்? ஊரை விட்டு, பிள்ளைகளை விட்டு... இப்ப பிள்ளையளைப் புதைச்ச துயிலுமில்லங்களைக் கூடத் துலைச்சுப் போட்டம்.

இனி எங்களுக்கென்னதான் இருக்கு?

இப்ப பாருங்கோ நெஞ்சு நிரம்பத் துக்கந்தான் கிடக்கு.

எதையெல்லாம் காப்பாத்த வேணுமெண்டு நினைச்சமோ அதையெல்லாம் துலைச்சுப் போட்டம். ஐயோ என்ர பிள்ளையள் செத்ததுக்குப் பிறகும் நிம்மதியில்லாமற் போச்சே.

இனி எங்களுக்கு எங்க நிம்மதி வரப்போகுது?

நான் வன்னிக்கோ ஊருக்கோ போகப் பேறதில்லை. என்ர பிள்ளையளும் இல்லை. பிள்ளையளை அடக்கம் செய்த இடமும் இல்லை.

இப்பிடியொரு வாழ்க்கை வேணுமே?

இந்த உயிர் இனியும் என்னத்துக்கு? இப்ப கார்த்திகை பிறந்திட்டுது. அதுகளுக்கு ஒரு விளக்கை எங்க ஏத்திறது?

வன்னியில நாங்கள் பட்டதைவிட இப்பதான் துக்கப்படுறம். போராட்டம் தோற்கிறதும் வெல்லிறதும் வேற. ஆனா செத்தாக்களின்ர நினைவிடங்களை அழிக்கிறது வேற.

நாங்கள் துக்கப்படத்தான் பிறந்திருக்கிறம் போலை. நாங்கள் நிம்மதியாக இருக்க வேணும் எண்டுதான் இந்தப் பிள்ளையள் தங்களை மாய்ச்சதுகள்.

ஆனாக் கடைசியில....

(அந்த முதிய தாய் துக்கத்தால் உடைந்தே போனார்...)

இந்தத் துயரங்களுக்கெல்லாம் முடிவு எப்போது?

(பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு திருமதி கந்தையா சின்னம்மா அவர்களின் புகைப்படத்தை வெளியிடாது தவிர்த்துள்ளோம்)

http://www.ponguthamil.com/mugangal-nirangal/mugangalnirangalcontent.asp?sectionid=3&contentid={6F612561-280A-4B16-90D3-BEC79EE1EE4B}

  • கருத்துக்கள உறவுகள்

வரிசையா அத்தனை பிள்ளையளும் நிண்டால் எப்பிடியிருக்கும்? எனக்கு அங்க போனா அதெல்லாம் கல்லறையாத் தெரியாது. எல்லாம் ஒவ்வொருத்தற்ற முகங்களாத்தான் தெரியும். ஒவ்வொரு பிள்ளையும் எங்களைப் பாத்துச் சிரிக்கிற மாதிரி இருக்கும். வரிசையா ஒரு படையணியைப் போல பள்ளிக்கூடப் பிள்ளையள் அணிவகுத்து நிக்கிற மாதிரி இருக்கும்.

இப்பிடியே இந்தப் பிள்ளையள் உறங்கிற அந்த இடத்துக்கு நான் பிறகு அடிக்கடி போய்வரத் தொடங்கீட்டன்.

வெறும் கல்லறைகள் அல்ல அவை .கலங்கரை விளக்கங்கள். அதையே சிதைச்சுட்டாங்கள்.

  • தொடங்கியவர்

எங்கள் தியாக தீபங்களின் கல்லறைகளை அழிக்கலாம்.

ஆனால், மாவீரர்களின் விடுதலை வேட்கையை அவர்கள் தியாகங்களை இந்த காட்டுமிராண்டி சிங்களம் அழிக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.