Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமருடன் வைகோ சந்திப்பு

Featured Replies

பிரதமர் மன்மோகன் சிங்கை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில் நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், எதிர்காலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் தளம் அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குக் கேடு செய்யும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று (22.1.2011) காலை பத்து மணி அளவில், டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் சந்தித்தார்.

பத்து மணிக்கு சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், 9.55 மணிக்கே அங்கு வந்த பிரதமர், வருகின்ற வழியில் வாயிலில் நின்று, வைகோவைக் கட்டி அணைத்து வரவேற்றார்.

'நீங்கள் சொன்ன தமிழ்ப்பெண் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டு விட்டார்' என்று கூறினார்.

'அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மேலும், நேற்று, நீங்கள் உடனடியாகத் தொலைபேசியில் பேச நேரம் ஒதுக்கியதற்கும், இன்று காலையில் நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவிக்கிறேன்' என்றார் வைகோ.

'உங்கள் தாயார், குடும்பத்தினர் எல்லோரும் நலமா? உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் நான் உங்கள் தாயாரைப் பார்த்தேனே?' என்றார் பிரதமர்.

அவர்கள் நலமாக இருக்கிறார்கள். நான் ஒரு சாதாரண ஆள். நாடாளுமன்ற உறுப்பினரும் அல்ல. என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு கொண்டு இருப்பதற்கு நன்றி' என்றார் வைகோ.

'நீங்கள் ஒரு கொள்கைக்காக வாழும் தலைவர்' என்றார் பிரதமர்.

'நான் டாக்டர் மன்மோகன்சிங் மீது மிகுந்த அன்பு கொண்டு உள்ளேன், மதிக்கிறேன். ஆனால், இந்தியப் பிரதமரைத்தான் நான் கடுமையாக விமர்சிக்கிறேன் என்றார் வைகோ.

'உங்கள் நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன்' என்றார் பிரதமர்.

பாரக் ஒபாமா குறித்து வைகோ எழுதிய 'Yes; We Can' என்ற நூலைக் கையெழுத்திட்டு பிரதமரிடம் கொடுத்தார்.

'அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றி பெறுவார் என்பதை முதலிலேயே கூறியதுடன், கருப்பர்களின் துயர்மிகுந்த போராட்ட வரலாறையும் இந்த நூலில் எழுதி இருக்கிறேன். இந்தப் புத்தகத்தை, டெல்லி கபூர்தலா இல்லத்தில் வெளியிட பஞ்சாப் முதல் அமைச்சர் பாதல் ஏற்பாடு செய்தார். உங்கள் அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் பரூக் அப்துல்லாதான் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்' என்றார் வைகோ.

இலங்கை பிரச்னை...

'இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யாதீர்கள் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்டும், அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் செய்தீர்கள். லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை சிங்கள அரசு கொன்று குவித்து விட்டது. இப்போது, செஞ்சீனம் அங்கே வலுவாகக் கால் பதித்து விட்டது.

எதிர்காலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் தளம் அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குக் கேடு செய்யும். ஆபத்து, தெற்கே இருந்துதான் வரப்போகிறது. அப்போது, இந்த ராஜபக்சே கூட்டம், சிங்கள அரசு, இந்தியாவுக்கு எதிராகத்தான் செயல்படப்போகிறது. அப்போதுதான் இந்திய அரசு இதை உணரும்.

ஈழத்தமிழர்கள் அங்கு வலுவாக இருந்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களோடு இரத்த பந்த உறவு உள்ளதால், இந்தியாவுக்குத்தான் பக்கபலமாக இருப்பார்கள்.

இப்போது, தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை வந்து சுடுவதும், கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது' என்றார் வைகோ.

'தமிழக மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்களே?' என்றார் பிரதமர்.

'குஜராத்தி மீனவர்களும் எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளே சென்று விடுகிறார்கள்' என்றார் வைகோ.

'அவர்களையும்தான் கைது செய்கிறார்கள்' என்றார் பிரதமர்.

'ஆமாம். ஆனால், ஒருமுறையாவது குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அடித்தது உண்டா? தாக்கியது உண்டா? துப்பாக்கிச் சூடு நடத்தியது உண்டா? ஒரு உயிரையாவது பறித்தது உண்டா? கிடையாது.

ஆனால், 1980 முதல், இதுவரை ஆயிரம் தடவைகளுக்கும் மேல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கி இருக்கிறது. 500 பேர்கள் வரையிலும் கொன்று விட்டனர். 97 ஆம் ஆண்டு, ஆறுகாட்டுத்துறை என்கிற இடத்தில், நம் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையின் இலங்கு ஊர்தி ஒன்று தாழப் பறந்து வந்து குண்டு வீசியதில், ஆறு மீனவர்கள் துண்டுதுண்டாகச் சிதறிப் போனார்கள்.

இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இது தொடர்பான புகாரைக் கூட வாங்கவில்லை. நான், பிரதமர் குஜ்ரால் அவர்களை தில்லியில் சந்தித்து, இந்தியக் கடற்படையையும், இந்திய அரசையும் கண்டித்தேன். இந்தியக் கடற்படையோ, கடலோரக் காவல்படையோ, இலங்கைக் கடற்படையின் தாக்குதலைத் தடுக்கவோ, தமிழக மீனவர்களைக் காக்கவோ, ஒருதடவையாவது முயற்சித்தது உண்டா? கிடையாது.

எனவே, தமிழக இளைஞர்கள் உள்ளத்தில், நாம் இந்தியாவின் குடிமக்கள்தானா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்தியக் கடற்படை, நமது கடற்படையா? என்ற எண்ணமும் எழுகிறது,' என்றார் வைகோ.

அப்போது அங்கே இருந்த சிவசங்கர மேனன், 'இப்போது கடைசியாக நடந்த துப்பாக்கிச்சூட்டை, நாங்கள் நடத்தவில்லை என்று இலங்கை அரசு மறுக்கிறதே?' என்றார்.

'என்றைக்குத்தான் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்? எப்போதுமே அவர்கள் பழியை வேறு யார் மீதாவதுதான் போடுகிறார்கள். சுடுவது அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்திய அரசு அதைக் கண்டிப்பதே இல்லை. அதனால்தான், அவர்கள் இப்படித் திமிரோடு பொய் சொல்லுகிறார்கள்' என்றார் வைகோ.

மேலும், 'பிரதமர் அவர்களே, நீங்கள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். இனி, தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்' என்றார்.

'இதை ஒரு கடுமையான பிரச்னையாகக் கருதி, நாங்கள் இலங்கை அரசோடு பேசுவோம்' என்றார் பிரதமர்.

முல்லைப் பெரியாறு பிரச்னை...

அடுத்து, தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடு ஏற்படும் வகையில், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க, கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது. அது வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், லண்டன் பொறியாளர் பென்னி குக் கட்டிய வலுவான அணை. ஆயிரம் ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி தண்ணீர் உரிமை உண்டு. உச்சநீதிமன்றமும் அவ்வாறே தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், கேரளத்தின் அச்சுதானந்தன் அரசு, பொய்யான தகவல்களைச் சொல்லி, அணையை உடைக்க முயற்சிக்கிறது.

இதோ, சிவசங்கர மேனன் இங்கே இருக்கிறார்கள். தமிழகத்தில், மலையாளிகளும் வாழ்கிறார்கள். கேரளத்தில் தமிழர்களும் வாழ்கிறார்கள். இன அடிப்படையில், நாங்கள் ஒரே குடும்பம்தான். தமிழ்நாட்டில் இருந்து, அரிசி, பருப்பு, பால், காய்கறி அனைத்தும் தருகிறோம். கேரளத்தில் சாகுபடிக்கு ஏற்ற நிலம் இல்லை. உணவு விளைச்சலைப் பெருக்க முடியாது. ஆனால், ஏராளமான நல்ல தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. அதைப் பகிர்ந்து கொண்டால், இரண்டு மாநிலங்களும் வளமாக இருக்கலாம். முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டால், அது தமிழகத்துக்கும் கேடு; கேரளத்துக்கும் கேடு.

பகையும் ஏற்படும். எனவே, மத்திய அரசு இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று, வைகோ தெரிவித்த கருத்துகளைப் பிரதமர் கனிவுடன் கேட்டார்.

வைகோவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். வைகோவும், புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

http://vikatan.com/news.php?nid=777

Edited by akootha

  • தொடங்கியவர்

வைகோ பேட்டி...

சந்திப்பு முடிந்து வெளியில் வந்தபோது, வைகோவிடம் செய்தியாளர்கள், 'நீங்கள் வேறு அரசியல் பற்றிப் பேசினீர்களா?' என்று கேட்டனர்.

'இல்லை. நாங்கள் அண்ணா தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். தி.மு.க., காங்கிரசைத் தமிழ்நாட்டில் தோற்கடிக்க உறுதியோடு இருக்கிறோம்.

அந்த அணி, படுதோல்வி அடையும். அண்ணா தி.மு.க. அணி வெல்லும். அண்ணா தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதனால், நான் வேறு அரசியல் எதுவும் பிரதமரிடம் பேசவில்லை' என்றார் வைகோ.

கோரிக்கை மனு...

இந்தச் சந்திப்பின்போது, பிரதமரிடம் வைகோ கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கயல்விழி (எ) அங்கயற்கண்ணி, இலங்கை இராணுவத்தினரால், ஓமந்தையில் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை, மிகுந்த வேதனையோடும், கவலையோடும், தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.

தமிழ் அறிஞர் பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அவர்களுடைய பேத்தியான திருமதி கயல்விழியும், அவரது உதவியாளர் திருமலையும், கடவுச்சீட்டு, நுழைவு உரிமை போன்ற தகுந்த ஆவணங்களுடன் இலங்கைக்குச் சென்று இருந்தனர். எனவே, அவர்களை உடனடியாக விடுவித்து, பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பிட ஆவன செய்திடுமாறு தங்களிடம் கேட்டுக் கொண்டேன்.

நேற்று இரவு, அவர் பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பி விட்டார்கள். அதற்காகத் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைத் தீவில் இனவெறி சிங்கள அரசு, மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து, நசுக்கிக் கொண்டு இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த உண்மையைத் தக்க சான்று ஆவணங்களுடன் ஒளிப்படக் காட்சிகளாக, இங்கிலாந்தில் உள்ள சேனல் 4 என்ற தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்து உள்ளது.

எனவே, ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக, மூன்று உறுப்பினர் குழுவை நியமித்து உள்ளார்.

இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்காதீர்கள் என்று நான் பலமுறை விடுத்த வேண்டுகோள்கள் வீணாகிப் போயின.

விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போரிடுகிறோம் என்ற போர்வையில், இலங்கை அரசு தமிழர் இனக்கொலையை நடத்தி இருக்கிறது. அந்தப் படுகொலைகளைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்திய அரசு, இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறது.

அதற்கும் மேலாக, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சிறப்பு விருந்தினராக, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுப் பெருமைப்படுத்தியது, தமிழரின் மனக்காயங்களை மேலும் குத்திக் கிளறி இருக்கிறது.

'தமிழர்கள் வடித்த கண்ணீரால்தான், கடல்நீர் உப்பாகக் கரிக்கறிது' என்று தமிழர்களின் மாபெரும் தலைவர் மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள். கடந்த முப்பது ஆண்டுகளில், தமிழ்நாட்டு மீனவர்கள் சிந்திய வியர்வையும், சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்கள் உடலில் இருந்து கொட்டிய இரத்தமும், பாக் நீரிணையில் கலந்து இருக்கிறது.

இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும், அத்தனைக் கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததே தவிர, சிங்களக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை.

இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டியது, இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படையினரின் கடமை இல்லையா?

குஜராத் மாநில மீனவர்கள் எத்தனையோ முறை கடல் எல்லையைத் தாண்டிச் சென்றபோதிலும்கூட, பாகிஸ்தான் கடற்படை ஒருபோதும் அவர்களைத் தாக்கியது இல்லை. ஆனால், இலங்கைக் கடற்படை, 500 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று விட்டது.

மேலும் கணக்கற்றமுறை, எங்களது மீனவர்களின் ஆடைகளைப் பறித்து அம்மணமாக்கி, கடுமையாகத் தாக்கிக் கடலில் துhக்கிப் போட்டார்கள்; படகுகளை உடைத்து நொறுக்கினார்கள்.

எனவே, தமிழகத்தின் இளைய தலைமுறையினரின் உள்ளத்தில், நாங்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இந்தப் பிரச்சனையின் கடுமையை உணர்ந்து, இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை அல்லவா?

கீழ்காணும் கருத்தைச் சொல்லுவதற்காகப் பிரதமர் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இலங்கை இனப்பிரச்னையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால், அள்ளிக் கொடுத்த ஆயுதங்களால், இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறியதால், தமிழகத்து இளைஞர்களின் உள்ளத்தில் இந்திய அரசு மீது ஏற்பட்டு உள்ள கடுமையான கோபமும், கொதிப்பும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு உடைவதற்குக் காரணமாகி விடும் என்பது, காலம் காட்டும் எச்சரிக்கை என்பதைக் கவனிக்கத் தவறி விடாதீர்கள்.

எனவே, இந்தப் பிரச்னையை தொலைநோக்குப் பார்வையோடு அணுகுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன். தங்களது பொன்னான நேரத்தை எனக்காக ஒதுக்கி, எனது கருத்துகளைச் செவிமடுத்ததற்காக, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று வைகோ குறிப்பிட்டு உள்ளார்.

இவ்வாறு மதிமுக தலைமைக்கழகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://vikatan.com/news.php?nid=777

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.