24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஏன் இந்தக் கஞ்சத் தனம்? "பீல்டு மார்ஷல்", "வைஸ் அட்மிரல்", "எயார் கொமடோர்" என்று உச்சத்தில் இருந்து கொடுக்காமல் கீழ இருந்து குடுக்கிறியள் பட்டம்😂?
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஈரானின் அணு நிலைகள் மீது தாக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லை. இப்போரினை முடிவிற்குக் கொண்டுவருமுன்னர் அவற்றினையாவது அழித்தால் சிறிது காலத்திற்காவது நிம்மதியாய் இருக்கலாம். அதுகூட இல்லையென்றால், இவ்வளவு பொருட்செலவுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கமெய்னி எலி கொல்லப்பட்டதைத் தவிர வேறு நல்விடயங்கள் நடக்கவில்லை என்றே தோன்றுகிறது. ரஸ்ஸியாவும் சீனாவும் ஈரானின் எண்ணெய்க்காகவே இப்போரில் அழிக்கப்பட்ட ஈரானிய ஆயுதங்களை புதுப்பித்துக் கொடுக்கும் என்று நம்பலாம். இஸ்லாமிய அடிப்படைவாத கொடுங்கோலாட்சியை அகற்றுதல் அணுவாயுத உற்பத்தியை தடுத்து நிறுத்தல் சர்வதேசப் பயங்கரவாதிகளுக்கான உதவியை நிறுத்தல் நீண்டதூர ஏவுகணை உற்பத்தியை நிறுத்தல் என்று இவை எதுவுமே இன்னமும் நடைபெறவில்லை. பார்க்கலாம், இஸ்ரேல் இருக்கிறது!
-
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை
ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை Published By: Vishnu 12 Mar, 2026 | 10:10 PM வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 135 நாடுகளின் இணையனுசரணையுடன் பஹ்ரைனால் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானம், பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் 13 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன. பாதுகாப்புச்சபையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின் பிரகாரம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஓமான், கட்டார், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள்மீது ஈரான் நடாத்திவரும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு சர்வதேச எரிபொருள் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் ஈரானின் எந்தவொரு செயலையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கும், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடாத்திவரும் தொடர் தாக்குதல்களுக்குமான பதில் நடவடிக்கையாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத்தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தி வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய ஐ.நாவுக்கான பஹ்ரைன் தூதுவர் ஜமால் ஃபாரெஸ் அல்ரோவாயி, வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது வெறும் பிராந்திய விவகாரம் மாத்திரமல்ல எனவும், மாறாக அது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நேரடித் தொடர்புடைய சர்வதேசப் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இந்தத் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என ஈரான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிக் கருத்துரைத்திருக்கும் ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டுவரும் அப்பட்டமான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை இத்தீர்மானம் திட்டமிட்டு மறைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/240830
-
'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து
அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் – ஈரான் எச்சரிக்கை Published By: Vishnu 12 Mar, 2026 | 08:11 PM ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மூடப்படாவிட்டால் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையிலிருந்து தாக்குதல்கள் தொடரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/240824
-
உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா
உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா Published By: Digital Desk 3 12 Mar, 2026 | 04:16 PM உலகின் மிக வலிமையானதாகக் கருதப்படும் T1200 தரத்திலான அதி உயர் வலிமை கொண்ட கார்பன் ஃபைபரை (Ultra-high-strength carbon fiber) சீனா புதன்கிழமை (மார்ச் 11 ) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன பொருள் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முன்னேற்றத் துறைகளில் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த T1200 கார்பன் ஃபைபர் பொருளை China National Building Material Group என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனம் சுயமாக உருவாக்கியுள்ளது. தற்போது இது தொழில்துறை உற்பத்திக்குள் நுழைந்துள்ளதுடன், ஆண்டுக்கு தொன் கணக்கில் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வலிமை நிலைக்கு உரிய கார்பன் ஃபைபரை பெருமளவில் உற்பத்தி செய்யும் உலகின் முதல் நாடாக சீனா மாறியுள்ளது. இந்த கார்பன் ஃபைபர் மிகவும் இலகுவானதுடன் அதீத வலிமையும் கொண்டதாக உள்ளது. இதன் விட்டம் மனித தலைமுடியின் விட்டத்தை விட பத்தில் ஒரு பகுதியை விட குறைவானதாக காணப்படுகிறது. மேலும், இதன் அடர்த்தி எஃகின் ( உலோகக் கலவை )அடர்த்தியின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே ஆகும். ஆனால் இதன் இழுவை வலிமை (tensile strength) எஃகை விட சுமார் 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய பொருள் விண்வெளி தொழில்நுட்பம், குறைந்த உயர விமான சேவை (low-altitude aviation), மனித வடிவ ரோபோட்கள் (humanoid robotics) உள்ளிட்ட பல மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சீனா இதற்கு முன்பு T300 முதல் T1000 வரையிலான பல தரங்களில் கார்பன் ஃபைபரை உருவாக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் முன்னையதை விட அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது வெளியிடப்பட்டுள்ள T1200 தரம், அந்த முன்னேற்றப் பயணத்தின் சமீபத்திய மற்றும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. இதில் “1200” என்ற எண், அந்த ஃபைபரின் வலிமை நிலையை குறிக்கிறது. கார்பன் ஃபைபர் கலவைகள் (carbon fiber composites) மிகவும் உயர்ந்த வலிமை-எடை விகிதம் கொண்டதால், விண்கலங்களின் கட்டமைப்புப் பொருளாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. சீனாவின் வர்த்தக விண்வெளி நிறுவனம் Welight Technology உருவாக்கிய “Weiguang-1” என்ற திரவ ரொக்கெட்டின் உடல் அமைப்பில் சுமார் 90 சதவீதம் கார்பன் ஃபைபர் கலவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பாரம்பரிய உலோக வடிவமைப்புகளை ஒப்பிடுகையில் ரொக்கெட்டின் எடை 25 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. விண்கலங்களின் எடையை குறைப்பது, வணிக விண்வெளித் துறையில் ஏவுதலுக்கான செலவைக் குறைக்கும் முக்கியமான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பெரிய அளவில் செயற்கைக்கோள் கூட்டங்களை (satellite constellations) விண்வெளியில் அமைக்கும் முயற்சிகளில் இலகுவான மற்றும் வலிமையான பொருட்களின் பயன்பாடு மிக முக்கிய பங்காற்றுகிறது. புதிய T1200 கார்பன் ஃபைபர் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் சீனாவின் விண்வெளி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளில் புதிய முன்னேற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/240802
-
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ' தொழில்நுட்பம்: அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தகவல்
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ' தொழில்நுட்பம்: அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தகவல் 12 Mar, 2026 | 04:35 PM ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுக்கும் போது, நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் அறிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப்பீடத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் கட்டமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொழில்நுட்பத்தின் ஊடாக மிகப்பாரிய அளவிலான தரவுகளை மிகக்குறுகிய காலத்தில் ஆராய்ந்து, இலக்குகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும் எனவும்,முன்னர் மணித்தியாலக்கணக்கில் எடுக்கப்பட்ட இராணுவச் செயற்பாட்டு நடைமுறைகளை, தற்போது சில வினாடிகளுக்குள் நிறைவு செய்யக்கூடியதான நன்மைகள் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னர் மணித்தியாலக்கணக்கில் எடுக்கப்பட்ட இராணுவச் செயற்பாட்டு நடைமுறைகளை, தற்போது சில வினாடிகளுக்குள் நிறைவு செய்யக்கூடியதாக உள்ளது. தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேற்றமடைந்திருந்தாலும், தாக்குதல் நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எப்போதும் மனிதர்களாலேயே எடுக்கப்படுவதாக அட்மிரல் பிராட் கூப்பர் இதன்போது உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், அமெரிக்காவின் இந்தத் தொழில்நுட்பப் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/240801
- Today
-
எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம் - தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?
எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம் - தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் ப.சிவசங்கர் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் "எங்களுக்கு கழிவறைக்குக் கூட செல்ல கூட முடியாத நிலை உள்ளது"- கூட்டம் கூட்டமாக பெட்ரோல் பங்கை நாடி வரும் மக்களுக்கு இடையே பணியாற்றி வரும் பெட்ரோல் நிலைய பணியாளர் ஆஷாவின் வார்த்தைகள் இவை. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், உலக அளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதன் அதிர்வலைகள் இப்போது தமிழகத்தின் வீதிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. பட மூலாதாரம்,Getty Images உண்மையிலேயே பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், "வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தை காட்டிலும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் வழங்குவதில் முன்னுரிமை தருகிறோம்" என மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் 'மூன்று நாட்களில் பெட்ரோல் தட்டுப்பாடு' என்ற சமூக வலைதள செய்தி மக்களை வீதிக்கு வர வைத்துள்ளது. கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்ற சமூக ஊடக பதிவுகள் தலை தூக்கின. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல், விற்பனை நிலையங்களில் மக்களை வரிசை கட்டி நிற்க வைத்துள்ளது. நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு மக்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்புகின்றனர். அகில இந்திய அளவில் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி கூறியுள்ளார். படக்குறிப்பு,'பெரும்பாலானோர் கேன்களில் பெட்ரோல் வாங்குவதுதான் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக் காரணம்' என்கிறார் பிரகாஷ். பெட்ரோல் நிரப்ப வந்தவர்கள் சொல்வது என்ன? ''கேன்களில் எரிபொருள் நிரப்புவர்களால் பல கி.மீ தூரம் பயணித்தும் எங்களுக்கு பெட்ரோல் கிடைப்பதில்லை'' என்கிறார் வரிசையில் நின்றிருந்த பிரகாஷ். பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "மடிப்பாக்கத்தில் இருந்து பெட்ரோலுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன், எங்கு பார்த்தாலும் பெட்ரோல் இல்லையென விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது, இறுதியாக மீனம்பாக்கத்தில் வந்து பெட்ரோல் நிரப்பினேன். பெரும்பாலானோர் கேன்களில் பெட்ரோல் வாங்குவதுதான் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக் காரணம்" என்கிறார். "எங்கள் வாழ்வாதாரமே வாகனங்களை நம்பிதான் உள்ளது, டீசல் இல்லையென்றால் எங்கள் பிழைப்பு நடக்காது. நாங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய டீசல் வாங்கவில்லை, எங்கள் தேவைக்கு இருப்பு வைக்கவே வாங்குகிறோம்" என்கிறார் சரக்கு வாகனம் ஓட்டும் ரவிச்சந்திரன் "இந்த தேவையற்ற அச்சம் என் பணியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார் டெலிவரி வேலை செய்யும் கெளதம். "டெலிவரி வேலை செய்வதால் எனக்கு நேரம் மிகவும் முக்கியம், தினமும் 5 நிமிடத்தில் பெட்ரோல் போடுவேன், ஆனால் இன்று ஒரு மணி நேரம் ஆனது" என்றார். "அதிக நேரத்தை பெட்ரோல் போட செலவழித்துவிட்டேன், டெலிவரி செய்யும் இடத்தில் என் மேல் கோபப்படுவார்கள்" என்கிறார் கெளதம். அதே நேரத்தில் "பெட்ரோல் தட்டுப்பாடு ஒரு வதந்தி மட்டுமே, தானாகவே இது சரியாகிவிடும்" என்கிறார் நிதித்துறையில் பணியாற்றும் திவ்யேஷ். ' யாரும் பேசுவதில்லை' "பெட்ரோல் பங்குகளை நாடி வருவோரை பற்றி மட்டுமே பேசுவோர் எங்கள் துயரை கண்டுகொள்வதில்லை" என்கிறார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் குமுதா. "இதுபோன்ற நாட்களில் அமர்வதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை" என்றார் அவர். "கழிவறை செல்லக்கூட நேரம் கிடைப்பதில்லை" என்கிறார் மற்றொரு பணியாளர் ஆஷா. "வழக்கத்தை விட ஐந்து மடங்கு கூட்டம் வருகிறது, வருபவர்கள் அனைவரும் டேங்க் புல்லாக நிரப்ப சொல்கிறார்கள், நகர்வதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை" என அவர் கூறினார். அரசும் எண்ணெய் நிறுவனங்களும் என்ன சொல்கின்றன? மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் தரவுகளின்படி, இந்தியாவில் 42 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் 3 கோடியே 35 லட்சம் வாகனங்கள். நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி "பெட்ரோல் இருப்பில் எந்த குறையும் இல்லை" என விளக்கமளித்துள்ளார். "நாட்டுக்கு தேவையான அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது" என்றும் தெரிவித்தார். நாடு முழுவதும் திடீரென ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த பீதி அவசியமற்றது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் "பெட்ரோல் டீசல் போதுமான அளவு கிடைப்பதுடன் விநியோகமும் சீராக உள்ளது, வதந்திகளில் யாரும் கவனம் செலுத்த வேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தது. பிபிசி தமிழிடம் பேசிய சென்னையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் டீலர் அரசன், "மக்கள் பதற்றமடையும் அளவுக்கு இங்கு எதுவும் நடக்கவில்லை, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எப்போதும் போல பெட்ரோல் டீசல் வந்துக் கொண்டிருக்கிறது" என்றார். "இந்த திடீர் வதந்தியால் எரிபொருள் தேவை இரட்டிப்பாகியுள்ளது அதையும் நிறுவனத்திடம் இருந்து பெற்று மக்களுக்கு வழங்கி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும் தேவைக்கு மட்டும் எரிபொருளை மக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கேன்களில் பெட்ரோல் டீசல் நிரப்புவது குறித்து விளக்கமளித்த அவர், "கேன்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற விதி ஏற்கனவே அமலில் இருப்பதால் அதனை நாங்கள் பின்பற்றி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj98xj22pjjo
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்கிற அழுத்தம் ட்ரம்பின் மேல் அதிகரித்துவருவதாகத் தெரிகிறது. உயர்ந்து செல்லும் மசகு எண்ணெயின் விலை, அது உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம், ஹோர்முஸ் நீரிணையினை ஈரான் தனது சகட்டுமேனித் தாக்குதல்கள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை என்பன எல்லாம் சேர்ந்து ட்ரம்பை யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவரவேண்டிய நிலைக்குத் தள்ளியிருப்பதாகவே தெரிகிறது. இஸ்ரேல் போர் தொடரப்பட்டு, ஈரானிய அடிப்படைவாத முல்லாக்களின் அரசு கவிழும் வரை நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினாலும், அமெரிக்கா இதிலிருந்து விலகுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. உலக பொருளாதாரம், அமெரிக்கா மீதான அழுத்தம், இஸ்ரேலின் விருப்பு என்பவற்றிற்கு அப்பால் இப்போர் முடிவேதுமின்றி நிறுத்தப்பட்டால் கடுமையாகப் பாதிக்கப்படப்போகும் மக்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது. அதுதான் ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் ஆட்சியை அகற்றவேண்டி விரும்பிய, போராடிய, அமெரிக்க - இஸ்ரேல் நடவடிக்கைக்கு ஆதரவாக நின்ற ஈரானிய மக்கள். நேற்றிலிருந்து ஈரானிய அரச தொலைக்காட்சி சில நபர்களைத் தொடர்ச்சியாக பேட்டி கண்டு வெளியிட்டு வருகின்றன. ஈரானிய காவல்த்துறை அதிகாரிகள், இராணுவ தளபதிகள், சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் என்று பலர் இதில் அடக்கம். அவர்கள் எல்லோரும் கூறும் செய்தி இதுதான், "எதிரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போரும் எதிரிகளே, ஆகவே அழிக்கப்படுவீர்கள். எமது வீரர்கள் துப்பாக்கிகளின் விசை அழுத்தியில் விரலை வைத்திருக்கிறார்கள், எந்நேரத்திலும் அவர்கள் உங்களைச் சுட்டுக் கொல்லத் தயங்கப்போவதில்லை, அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் ஆதரவாக நிற்பவர்களை அடையாளம் கண்டு கொல்லப்போகிறோம், அவர்கள் உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளியுலகில் இருந்தாலும் சரி, அவர்களின் சொத்துக்களை நாம் கையகப்படுத்துவோம், உங்களின் தாய்மார்களை உங்களின் மரணத்திற்காக வருந்தச் செய்வோம், தயவுதாட்சண்யம் இன்றிக் கொல்வோம்...." இப்படி ஏகப்பட்ட அச்சுருத்தல்களை அரச தொலைக்காட்சியில் மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். இந்த நிலையில், அமெரிக்கா போரை நிறுத்துவதால் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் கொடுங்கோலாட்சி நீடிக்கப்பட வாய்ப்புக்கள் பிறந்திருக்கின்றன. தமது அரசு கவிழப்போவதில்லை எனும் மமதையில் இந்த அச்சுருத்தல்களை கொடுங்கோலாட்சியாளர்கள் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு மாபெரும் மக்கள் படுகொலை அரங்கேரவிருக்கிறது. ஆனாலும் என்ன, அமெரிக்கா இடைநடுவே கையைக் கழுவிவிட்டாலும்கூட, தனது இருப்பிற்காகத் தொடர்ச்சியாகப் போராடிவரும் இஸ்ரேல் நிச்சயம் ஈரானின் முல்லாக்கள் மீது தனது கவனத்தை வைத்திருக்கும். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் முல்லாக்களின் தலைமையினைக் குறிவைத்து அழிக்கும் என்பதை நம்பலாம்.
-
அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - பலாங்கொட கஸ்ஸப தேரர்
அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - பலாங்கொட கஸ்ஸப தேரர் 12 Mar, 2026 | 05:31 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலையே அநுர குமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்தர். திருகோணமலை பெளத்த விகாரை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை மின்சாரசபை சில தினங்களுக்கு முன்னர் இறுதிப்பயணம் சென்றது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இணைந்து மின்சாரசபையை.இல்லாமலாக்கச் செய்ய நடவடிக்கை எடுத்தபோது, மின்சார சபை சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து 2024 ஜுன் மாதம் 6ஆம் திகதி நாங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையின்போது என்னை பாராளுமன்றத்துக்கு முன்னால் கைதுசெய்தார்கள். அதனால் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான வளம் ஒன்றை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. நாடொன்றின் மின்சார சபையானது உயிர் நாடியாகும். அதனை நூறுவீதம் தனியார் மயப்படுத்துவதற்கு தேரர்கள் என்றவகையில் நாங்கள் எதிர்ப்பு. தனியார் பயப்படுத்துவதாக இருந்தால் அதிக பங்குகளை அரசாங்கத்தின் கீழ் வைத்துக்கொண்டே வழங்க வேண்டும். தற்போதும் இலங்கை மின்சாரசபையை 6 பகுதிகளாக பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மின்சாரசபை தற்போதும் அரசாங்கத்துக்கு உரித்தானது என அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இது மறைமுகமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் இந்த மின்சாரசபை சட்டம் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து ஆராய்ந்து வருகிறோம். இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்து எங்களுடன் இணைந்து போராட்டம் மேற்கொண்டவர்கள் தற்போது அதிகாரத்துக்கு வந்த பின்னர் அரச வளங்களை விற்பனை செய்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் நாடு இருக்கும்போது, மக்கள் தொடர்ந்து இதனை பார்த்துக்கொண்டிருக்கிறதா என மக்களை கேட்கிறோம். குறிப்பாக மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து விற்பனை செய்வதன் மூலம் இவர்கள் இதனை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு இவ்வாறு மேற்கொள்வதாக தெரிவித்திருப்பதை நாங்கள் நம்பப்போவதில்லை. லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதாக இருந்தால், ஏன் 6 பகுதிகளாக பிரிக்க வேண்டும் என கேட்கிறேம். மேலும் இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் பணம் வழங்கினால் அவர்கள் இவர்களின் பொறியில் சிக்கமாட்டார்களா? அதனால் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கினால், எமது வலுசக்தி துறைக்கு என்ன நடக்கும். ஏனெனில் இவர்களின் நோக்கம் லாபமீட்டுவதாகும். எனவே வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் எரிவாயு, எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டதன் பின்னரே மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தினார்கள். அந்த நிலையே அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு தெரிவிக்கிறோம். ஏனெனில் நாடு தற்போது பயணிக்கும் போக்கை பார்க்கும்போது எங்களுக்கு நம்பமுடியாமல் இருக்கிறது. 2022 மக்கள் போராட்டத்தின் எஞ்சிய பகுதியை பூரணப்படுத்தவே வெளிநாட்டு புலனாய்வு சக்திகள் தற்போது செயற்பட்டு வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, இந்தியாவை நம்பினாலும் இலங்கையின் பின்னால் குத்தியே ஈரான் கப்பலை இலங்கைக்கு அனுப்பி அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையை இந்த யுத்தத்துடன் நேரடி மோதலுக்கு இட்டுச்செல்லவே இந்தியா முயற்சித்தது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு இடம்பெறவில்லை. ஆனாலும் அமெரிக்காவும் ஈரானும் எங்களுடன் வைராக்கித்துடனே இருக்கின்றன. அதனால் அரசாங்கம் உடனடியாக புலனாய்வு துறையை பலப்படுத்தி செயற்படுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/240813
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திமுக கூட்டணியில் 2 கட்சிகளின் வருகையால் புது பிரச்னையா? பின்னணி அலசல் பட மூலாதாரம்,@mkstalin/X கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 12 மார்ச் 2026, 14:05 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை ஓர் இடத்தைக் குறைத்து ஐந்து இடங்களைத் தருவதாக தி.மு.க கூறுகிறது. ஓர் இடத்தைக் கூடுதலாக ஒதுக்குமாறு கேட்டோம். வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். தி.மு.க உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டணிக்குள் புதுவரவான தே.மு.தி.க-வை காரணம் காட்டி தொகுதிகளின் எண்ணிக்கையை தி.மு.க குறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க தலைமை ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை தி.மு.க ஒதுக்கியது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நான்கு தொகுதிகளில் மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் ம.தி.மு.க போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ம.தி.மு.க நிலை என்ன? 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க, இந்தமுறை நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. எண்ணிக்கை குறைந்தது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதனை ''மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ளதாக'' கூறினார். "கட்சியின் பதிவைப் பாதுகாத்துக் கொள்வதற்காகு தனிச் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை" என வைகோ தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images 'பா.ஜ.க எதிர்ப்பு... இடங்கள் குறைப்பு' தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் குறைந்தது 2 முறை தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. "ஏன் இவ்வளவு தாமதம்?" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை ஓர் இடத்தைக் குறைத்து ஐந்து இடங்களைத் தருவதாக தி.மு.க கூறியுள்ளது. ஆனால், 6 பிளஸ் 1 என்ற அளவில் இடங்களை ஒதுக்குமாறு தெரிவித்துள்ளோம்" என்கிறார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு கூறியதால் ஆறு இடங்களையாவது ஒதுக்குமாறு தங்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "இந்தமுறை ஆறு இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்பது கட்சியின் முடிவாக உள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது" எனக் கூறுகிறார் மு.வீரபாண்டியன். தொடர்ந்து அவர் பேசும்போது, "சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை எதிர்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் பிரதான நோக்கமாக உள்ளது. அதற்காக ஏற்கெனவே பெற்ற இடங்களைக் குறைத்துக் கொள்வது நல்லதல்ல எனக் கூறியுள்ளோம்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,PremallathaDmdk/X படக்குறிப்பு,தே.மு.தி.க முதல்முறையாக தி.மு.க கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றது. 'இந்தமுறையும் அதே காரணம்' இதேபோன்ற நெருக்கடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கொண்டுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. "கூடுதல் இடங்களை ஒதுக்குவதில் தி.மு.க தரப்பில் உள்ள சிரமங்களைக் கூறினார்கள். புதிய கட்சிகளை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், கடந்தமுறை ஆறு இடங்கள் கொடுத்ததையே கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறிவிட்டோம்" என்கிறார். "2021 சட்டமன்றத் தேர்தலின்போது அரசியல் ரீதியாக சில காரணங்கள் இருந்ததால் தி.மு.கவிடம் ஆறு இடங்களை பெற்றுக் கொண்டோம்" எனக் கூறும் கனகராஜ், "அதே காரணத்தை இந்த முறை கூறுவதையும் சில காரணங்களைக் காட்டி இடங்களை குறைப்பதும் சரியல்ல எனக் கூறிவிட்டு வந்தோம்" என்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசிவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ள உள்ளதாக தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு தங்களிடம் கூறியதாகக் குறிப்பிட்ட கனகராஜ், "வரும் 14 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,@tncpim/X படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டு முறை தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. 'மற்றவர்களோடு கணக்கிட வேண்டாம்' தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க, ஆகிய கட்சிகளிடம் இதுவரை தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இவற்றில் மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் முதல்முறையாக தி.மு.க கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றன. வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பேசியபோது, "2021 சட்டசபைத் தேர்தலில் அன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு ஆறு இடங்களை ஏற்றுக் கொண்டோம். இந்தமுறை இதர கட்சிகளுடன் சேர்த்து விடுதலைச் சிறுத்தைகளைக் கணக்கிட வேண்டாம் என தி.மு.கவிடம் கூறிவிட்டோம்" என தெரிவித்தார். ஆனால், தி.மு.க போட்டியிடக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளிடம் பேசி வருவதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தல் முடிவில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் 170 இடங்களில் தி.மு.க போட்டியிட வேண்டும். புதிதாக கட்சிகள் இணைவது கூட்டணிக்குப் பலம் என்பதால் அவர்களைக் கணக்கில் வைத்து இடங்களை ஒதுக்குகிறோம்" என்கிறார். "கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்படுவது உண்மைதான். அதேநேரம், கூட்டணியில் யாரையும் விட்டுவிடக் கூடாது எனக் கருதுகிறோம். அவரவர் வலிமைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Kamalhaasan/X தொகுதி குறைப்புக்கு தே.மு.தி.க காரணமா? தி.மு.க கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகளைக் காரணம் காட்டி தங்களுக்கான இடங்களைக் குறைப்பதாக, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. "புதிய கட்சிகளுக்கு அதிக இடங்களை தி.மு.க ஒதுக்கினால் நெருடல் ஏற்படும். அப்படியொரு சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தி.மு.க தலைமைக்கு உள்ளது" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன். "தே.மு.தி.கவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பத்து இடங்களுடன் ராஜ்யசபா சீட் கொடுப்பதாக தி.மு.க சீனியர் நிர்வாகிகள் உறுதியளித்ததாக தகவல் வெளியானது. தற்போதைய நிலையில் இந்த எண்ணிக்கை குறையலாம்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். தே.மு.தி.கவுக்கு எட்டு இடங்களை தி.மு.க ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறும் குபேந்திரன், "தே.மு.தி.கவுக்கு இணையான இடங்களை வி.சி.கவுக்கு ஒதுக்கலாம். ம.தி.மு.கவுக்கு இடங்கள் குறைந்ததுபோல இடதுசாரிக் கட்சிகளின் தொகுதிகளும் குறையலாம்" எனக் கூறுகிறார். தே.மு.தி.கவுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து, டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கூட்டணியில் அதிக இடங்களை தே.மு.தி.க கேட்டுள்ளது. சில திட்டங்களின் அடிப்படையில் அவர்களைச் சேர்த்துள்ளோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தே.மு.தி.க இருந்துள்ளது. அதைக் கணக்கிட்டு நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறோம்" எனக் கூறுகிறார். தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "தற்போது பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார். இலக்கு 200 வியூகம் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லாவிட்டால் இடங்களைக் குறைத்துக் கொள்வதற்கு தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சம்மதம் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "தி.மு.க கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு வேறு வழியில்லை. வேறு கூட்டணிகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் இல்லை. ராஜ்யசபா சீட் கிடைத்ததால் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துவிட்டது. அதைக் காரணம் காட்டியே பிற கட்சிகளுக்கு இடங்கள் குறைக்கப்படுகின்றன" என்கிறார் ஷ்யாம். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட மூன்று இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிப் பேசிய ஷ்யாம், "பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதால் 28 இடங்களை தி.மு.க ஒதுக்கியது" எனக் கூறுகிறார். "காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கியதில் தி.மு.கவினரில் பலருக்கும் உடன்பாடு இல்லை" எனக் கூறும் ஷ்யாம், "200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது தி.மு.கவின் இலக்காக உள்ளது." என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15x15jjx95o
-
இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில் Mar 12, 2026 - 09:47 PM இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் விடுத்த கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் எரிசக்தித் தேவைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அமைச்சர் விஜித ஹேரத் கடந்த மார்ச் 06 ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் யுத்த நிலைமைத் தொடர்ந்தால், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் அங்கு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன்படி, அமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் தமது சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றியும் பாதுகாப்பாகவும் பேணுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmno5yl9000z356pxo6fr5iv
-
'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து
'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து பட மூலாதாரம்,Iranian President's Press Office / Handout /Anadolu via Getty Images மொஜ்தபா காமனெயி 12 மார்ச் 2026, 12:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தற்போது 13-வது நாளில் நுழைந்துள்ள நிலையில், பிராந்தியத்தின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியின் அறிக்கை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது, 'கொல்லப்பட்ட இரானியர்களின் ரத்தத்திற்காகப் பழிவாங்க இரான் தயங்காது' என்று மொஜ்தபா காமனெயி கூறுகிறார். போருக்கு மத்தியில் கப்பல் போக்குவரத்து மீதான சமீபத்திய தாக்குதல்களில், இராக் அருகே இரண்டு டேங்கர்கள் 'ஏவுகணைகளால்' தாக்கப்பட்டன. அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அருகே ஒரு கொள்கலன் கப்பலும் 'ஏவுகணை' ஒன்றால் தாக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. லெபனானில், சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர், இதில் பெய்ரூட்டின் கடற்கரைப் பகுதியில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததும் அடங்கும். பட மூலாதாரம்,Telegram படக்குறிப்பு,துபையில் தாக்குதல் நடந்த கட்டடம் அதேபோல, இராக், பஹ்ரைன் மற்றும் ஓமன் பகுதிகளில் இரானிய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து பல டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்துக்கான பொது ஆணையத்தை மேற்கோள் காட்டி, நாட்டின் அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது. படக்குறிப்பு,இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி இரானின் புதிய அதி உயர் தலைவர் கூறியது என்ன? இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியின் அறிக்கை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. அவரது தந்தை ஆயதுல்லா அலி காமனெயிக்கு பின் அதி உயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இரானின் புதிய அதி உயர் தலைவரிடம் இருந்து வெளியாகும் முதல் செய்தி இதுவாகும். இரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமனெயியின் செய்தி இரானிய அரசு தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளரால் வாசிக்கப்படுகிறது. "ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் உத்தியை இரான் தொடர்ந்து பயன்படுத்தும்" என்று காமனெயி கூறுகிறார். தொடர்ந்து அவர், "இரான் அண்டை நாடுகளுடன் 'நட்புடன்' இருக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்டுள்ளது, ஆனால் அமெரிக்க தளங்களை மூடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். அந்தத் தளங்களை இரான் தொடர்ந்து குறி வைக்கும்" என்று கூறுகிறார். கொல்லப்பட்ட இரானியர்களின் ரத்தத்திற்காகப் பழிவாங்க இரான் தயங்காது என்று மொஜ்தபா காமனெயி கூறுகிறார். "குறிப்பாக மினாப் பகுதியில், ஒரு பள்ளிக்கு அருகில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்" என்று அவர் கூறுகிறார். அமெரிக்க ஏவுகணையால் அந்தப் பள்ளி தாக்கப்பட்டதாக இரான் கூறுகிறது. இது குறித்து தாங்கள் விசாரித்து வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கடந்த வாரம் பிபிசியின் டாம் பேட்மேனிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரானிய டிரோன் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 12) காலை பஹ்ரைனின் தலைநகர் மனாமாவில் எழுந்த புகை மூட்டம். துபையில் நடத்தப்பட்ட தாக்குதல் துபையில் உள்ள ஓர் உயரமான கட்டடத்தில், வியாழக்கிழமை காலை ஒரு பெரிய துளை காணப்பட்டது. ஒரு டிரோன் 'கட்டடத்தின் மீது விழுந்ததாக' உள்ளூர் அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து இந்த படம் வெளியாகியுள்ளது. குறிப்பிடப்பட்ட அந்த டிரோன் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. புதன்கிழமை (மார்ச் 11) இரவு, துபை கிரீக் ஹார்பர் அருகே நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக துபை அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்தது. பிபிசியால் சரிபார்க்கப்பட்ட வீடியோவில், கட்டடம் தாக்கப்பட்டதாகத் தோன்றும் இடத்தின் உள்ளே தீப்பிழம்புகள் தெரிவதைக் காட்டுகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் வெளியிடப்பட்ட ஒரு தகவலில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் துபை அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) எடுக்கப்பட்ட இந்தப் படம், பஹ்ரைனின் மனாமாவில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட சேதத்தைக் காட்டுகிறது. பஹ்ரைனில் எச்சரிக்கை ஒலிகள் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் அந்த நாட்டில் எச்சரிக்கை ஒலி அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், "குடிமக்கள் அமைதியாக இருக்குமாறும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும், அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் சைரன் ஒலிக்கப்படுகிறது அல்லது ஏன் ஒலிக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமாவிற்கு மேலே புகை எழுவதை ஒரு புகைப்படம் காட்டுகிறது. அதே நேரத்தில் இந்த வார தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு படம் உயரமான கட்டடம் சேதமடைந்ததைக் காட்டியது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இராக் அருகே தாக்கப்பட்ட இரு கப்பல்களின் ஒரு கப்பலின் படம் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் - இந்தியர் ஒருவர் உயிரிழப்பு இராக்கில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள, இராக்கின் பாஸ்ரா அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்க டேங்கர் கப்பல் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று தூதரகம் தெரிவிக்கவில்லை. "2026 மார்ச் 11 அன்று, மார்ஷல் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட அமெரிக்க கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலான 'சேஃப்சீ விஷ்ணு' (Safesea Vishnu), இராக்கின் பாஸ்ரா அருகே தாக்கப்பட்டது," என்று சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் இந்திய தூதரகம் கூறியுள்ளது. கப்பலில் இருந்த எஞ்சிய 15 இந்தியப் பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்தாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், இராக் அதிகாரிகளுடனும் மீட்கப்பட்ட இந்திய மாலுமிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Royal Thai Navy படக்குறிப்பு,நேற்று தாக்கப்பட்ட ஒரு கப்பல் இராக் அருகே இரு கப்பல்கள் தாக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் தாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 06:19 மணிக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடற்கரையிலிருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் - ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் - ஒரு கொள்கலன் கப்பல் 'அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டு கப்பலில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக' பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (யூகேஎம்டிஓ) கூறுகிறது. பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,லெபனானில், சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர் வளைகுடா அலுவலகங்களை மூடும் சர்வதேச வங்கிகள் பஹ்ரைனில், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எண்ணெய் மற்றும் எரிபொருள் தொட்டிகளை இரான் குறி வைத்ததை அடுத்து பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புகை மிகவும் அடர்த்தியாக இருப்பதால், மக்கள் தங்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஓமனில், நேற்று (மார்ச் 11) சலாலா துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் இன்னும் பணியாற்றி வருகின்றனர். ஓமன் இப்போது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் எண்ணெய் ஏற்றுமதி முனையத்தில் உள்ள கப்பல்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இரானிய வங்கி மீதான தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய நிதி நிறுவனங்கள் இப்போது தங்களது இலக்கு என்று இரானின் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது. சர்வதேச வங்கிகள் தங்கள் வளைகுடா அலுவலகங்களை மூடி வருகின்றன - கத்தாரில் எச்எஸ்பிசி (HSBC), துபையில் சிட்டி (Citi) மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) - ஆகிய வங்கிகள் தங்களது பணியாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yjd1gm718o
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு Mar 12, 2026 - 10:11 PM ஈரானுக்கு எதிரான போரின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவினம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகள் இந்த வாரம் பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது மதிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. செனட்டர்களுக்கான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூடிய கதவு விளக்கக் கூட்டத்தில் வழங்கப்பட்ட இந்தத் தொகையில், போரின் முழுமையான செலவுகள் சேர்க்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், மோதல் குறித்து மேலதிக தகவல்களைக் கோரி வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. போருக்கான கூடுதல் நிதியுதவியைக் கோரும் கோரிக்கையை வெள்ளை மாளிகை விரைவில் காங்கிரஸிடம் சமர்ப்பிக்கும் எனப் பல பாராளுமன்ற உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கை 50 பில்லியன் டொலராக இருக்கலாம் எனச் சில அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், மற்றவர்கள் அந்த மதிப்பீடு குறைவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmmnozhp30010356puzuzkiv3
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
இரானை கெதியிலை முடிச்சிடுவம் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க!
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
டென்மார்க், அவுஸ்ரேலியாவில் இரு ஈரானிய இராஜதந்திரிகள் அசைலம் அடித்துள்ளார்களாம். ஈரானுக்கு உள்ளே தெஃரான் புறநகர் ஒன்றில் புரொஜ்டரில் பறக்க விடப்பட்ட இஸ்ரேல் கொடியாம். இது ஏ ஐ இல்லை என்கிறது க்ரொக்.
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
‘கிளீன் ஸ்ரீலங்கா’ மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை 12 Mar, 2026 | 05:51 PM இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ‘அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் மானுட கௌரவத்தைப் பாதுகாக்கும் நாடு’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வெறும் போக்குவரத்துச் சேவை மட்டுமல்லாது, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலத்திட்ட வரிசையில் மற்றுமொரு விசேட திட்டமாகும். பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள பௌதிகத் தடைகளை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கான பின்னணியை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். முதற்கட்டமாக, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் இலகுவாக ஏறி இறங்கக்கூடிய தாழ்தள வசதி கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பஸ்கள் நேற்று (10) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இவை எதிர்வரும் சனிக்கிழமை கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு 'மெட்ரோ பஸ்' நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளன. 33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பஸ் ஒன்றில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளடங்குகின்றன. ஒரு முன்னோடித் திட்டமாக இச்சேவை மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும். அதன்படி, மாகும்புரவிலிருந்து புறக்கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிப்பாக மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய பிரதான சுகாதார மையங்களை நேரடியாக உள்ளடக்கும் வகையில் இந்த போக்குவரத்துத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இச்சேவைக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் 28 சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது. சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்படும் இப்பயிற்சியில் பஸ் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்புகொள்வதற்கான சைகை மொழி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பஸ்களை நாட்டுக்குக் கொண்டு வந்து பொதுப் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்ததாக, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் பஸ் நிலையங்களையும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகக்கூடிய தரங்களுக்கு ஏற்ப புனரமைக்கவோ அல்லது புதிதாக நிர்மாணிக்கவோ திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240809
-
இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை Mar 12, 2026 - 05:29 PM இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmmney4p1000r356p8t73d1nw
-
முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி விஜயம்: ஆளணிப் பற்றாக்குறை குறித்து ஆராய்வு!
முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி விஜயம்: ஆளணிப் பற்றாக்குறை குறித்து ஆராய்வு! 12 Mar, 2026 | 03:27 PM முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை (12) நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்ததுடன் அவற்றினை நேரில் பார்வையிட்டார். வைத்தியசாலையின் நோயாளர்கள் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், அங்குள்ள தேவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார். வைத்தியசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிற்றுழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஆளணித் தேவைகள் பெருமளவில் காணப்படுவதாக இதன்போது மருத்துவ அதிகாரியால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இவ்வாறான ஆளணி வெற்றிடங்கள் நிலவுவதால், பொதுமக்களுக்கு வினைத்திறனான மருத்துவச் சேவையை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வைத்தியசாலையின் சில அறைகளில் மின்சார இணைப்புகள் சீரற்ற நிலையில் காணப்படுவதால், அந்த அறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையும் இதன்போது கண்டறியப்பட்டது. வைத்தியசாலையில் நிலவும் இக்குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் தாம் உரிய முறையில் கவனம் செலுத்துவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன், வைத்தியசாலையின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்காகத் தகுந்த 'நலன்புரிச் சங்கம்' ஒன்றினை விரைவாக உருவாக்குமாறு மருத்துவ அதிகாரியிடம் அவர் வலியுறுத்தினார். அதற்கு இணக்கம் தெரிவித்த மருத்துவ அதிகாரி, விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்தக் களவிஜயத்தின் போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/240795
-
"நிலப்பரப்பில் கப்பல்கள்" - மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னல்களை இடைமறிக்கும் மறைமுகப்போர்
"நிலப்பரப்பில் கப்பல்கள்" - மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னல்களை இடைமறிக்கும் மறைமுகப்போர் பட மூலாதாரம்,Windward படக்குறிப்பு,ஜிபிஎஸ் ஜாமிங், இரான் கடற்கரைக்கு அருகிலுள்ள கப்பல்கள் நிலப்பரப்பில் இருப்பது போலத் தோன்றச் செய்கிறது கட்டுரை தகவல் கிறிஸ் பரானியுக் தொழில்நுட்ப செய்தியாளர் 12 மார்ச் 2026, 02:06 GMT வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் நூற்றுக்கணக்கான கப்பல்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பலவும் வரைபடத்தில் தவறான இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. விண்ட்வார்டில் மூத்த கடல்சார் புலனாய்வு ஆய்வாளராக இருக்கும் மிஷெல் வைஸ் போக்மேன், இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் அருகே இருந்த வணிகக் கப்பல்களின் நேரடி இருப்பிடங்களைச் சரிபார்க்கும்போது இதைக் கவனித்தார். ஹோர்முஸ் நீரிணை மற்றும் அருகிலுள்ள கடல்வழிகளின் வரைபடத்தைப் பார்க்கும்போது சுமார் 35 அசாதாரண தொகுப்புகளை அவர் கண்டார். வரைபடத்தில், இந்தத் தொகுப்புகள் பல கப்பல் சின்னங்களால் ஆன வட்டங்களாகத் தோன்றும். ஒவ்வொரு குறியீடும் ஓர் உண்மையான கப்பலைக் குறிக்கும். ஆனால், கப்பல்கள் பொதுவாக இதுபோன்ற சரியான வட்டங்களில் கூடுவதில்லை. இந்தத் தொகுப்புகளில் சில நிலத்தில்கூடத் தோன்றும். இது கப்பல்களைப் பொறுத்தவரை சாத்தியமற்றது. இதன் பொருள் அவற்றின் நிலைகளைக் காட்டும் ஜிபிஎஸ் சிக்னல்கள் இடையூறு செய்யப்பட்டு, அவற்றின் உண்மையான இடங்களை மறைக்கின்றன. நவீன மோதல்களில், போர்கள் துப்பாக்கிகள், குண்டுகளால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. மின்னணு சிக்னல்களும் இந்த மோதலில் பங்காற்றுகின்றன. ஜிபிஎஸ் ஜாமிங் எனப்படும் ஒரு நுட்பம் வழிசெலுத்தல் சிக்னல்களில் தலையிடுகிறது. இது தொடர்பு அமைப்புகளைச் சீர்குலைத்து ஆபத்தான விபத்துகளுக்குக்கூட வழிவகுக்கும். சமீபத்திய ஆண்டுகளில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் பயன்படுத்தும் விமானம் உள்பட, ஐரோப்பாவில் உள்ள விமானங்களையும் இந்த ஜிபிஎஸ் ஜாமிங் பாதித்துள்ளது. யுக்ரேனில் நடக்கும் போரிலும் இது வழக்கமாக நடந்து வருகிறது. இப்போது மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதால், இந்த வகையான மின்னணு போர் மேலும் பல பகுதிகளுக்குப் பரவி வருகிறது. ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கப்பல்களை இப்போது பாதிக்கும் சிக்னல் குறுக்கீடு பிரச்னையை மிஷெல் வைஸ் போக்மேன் காண்பது இது முதல் முறையல்ல. கப்பல்களின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) செயல்பாட்டை ஜிபிஎஸ் ஜாமிங் பாதிக்கிறது என அவர் முன்பு கவனித்துள்ளார். இஸ்ரேல், இரான் இடையிலான குறுகிய மோதலின்போது கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் இதே பிரச்னை ஏற்பட்டது. பால்டிக் கடலிலுள்ள கப்பல்களும் இதேபோன்ற மின்னணு குறுக்கீட்டை எதிர்கொண்டன. ஆனால், இந்த முறை, நிலைமை மிகவும் தீவிரமானது என்று போக்மேன் கூறுகிறார். இது கப்பல்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்குப் பெரிய ஆபத்தை உருவாக்குவதாக அவர் எச்சரிக்கிறார். பாகிஸ்தான் தேசிய ஹைட்ரோகிராஃபிக் அலுவலகமும், பிராந்தியத்தில் உள்ள கப்பல்களை சிக்னல் குறுக்கீடு பாதிப்பதாக எச்சரித்துள்ளது. கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தவிர்க்க ஏ.ஐ.எஸ்-ஐ ஓரளவு பயன்படுத்துகின்றது. சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள், அதிகளவு எண்ணெயை சுமந்து செல்லக் கூடியவை. அவற்றால் விரைவாகத் திரும்பவோ, நிறத்தவோ முடியாது. திசையை மாற்றிய பிறகு, அவை தமது பாதையை முழுமையாக சரிசெய்யாமல் பல கிலோமீட்டர்கள் பயணிக்கக்கூடும். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,வளைகுடா பகுதியில் நடைபெறும் சிக்னல் குறுக்கீடுகள், கப்பல்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதைத் தவிர்க்கப் பயன்படுத்தும் அமைப்பில் இடையூறு ஏற்படுத்தியுள்ளன கப்பல் குழுவினரால் பிற கப்பல்கள் எங்கு அமைந்துள்ளன என்பதைத் தெளிவாகக் காண முடியாவிட்டால், குறிப்பாக இரவில் அல்லது மோசமான வானிலையில் இது மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலன் உட்வோர்ட் விளக்குவது போல, ஒரு கப்பலைச் சுற்றியுள்ள பிற கப்பல்கள் எங்கு செல்கின்றன என்பதை அறியாமல் இருப்பதே முக்கியமான ஆபத்து. ஜிபிஎஸ் ஜாமிங்குக்கு யார் காரணம் என்பது குறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. இருப்பினும், கப்பல்களின் வழிசெலுத்தல் அமைப்புகளைச் சீர்குலைப்பதற்கு இரான் காரணமாக இருக்கலாம் என்று பல ராணுவ நிபுணர்கள் நம்புகின்றனர். ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கக்கூடும் என்று இரான் எச்சரித்துள்ளது. ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தாமஸ் விடிங்டனின் கூற்றுப்படி, இரான் பயன்படுத்தும் ஜிபிஎஸ் ஜாமிங் கருவிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது ரஷ்யா அல்லது சீனாவில் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம். மேலும், இப்பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் தங்கள் ராணுவ தளங்கள், வீரர்கள் மற்றும் கப்பல்களை செயற்கைக்கோள் வழிசெலுத்தலை நம்பியிருக்கும் ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களில் இருந்து பாதுகாக்க இதேபோன்ற ஜாமிங் அமைப்புகளைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார். இதுகுறித்துக் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காகக் குறிப்பிட்ட ராணுவ அமைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை பிபிசியிடம் கூறியது. பட மூலாதாரம்,Zephr.xyz படக்குறிப்பு,ஷான் கோர்மன், ஜிபிஎஸ் குறுக்கீட்டைக் கண்டறியப் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளார் இதற்கிடையில், Zephr.xyz தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷான் கோர்மன், யுக்ரேன் போன்ற இடங்களில் ஜிபிஎஸ் ஜாமிங் குறித்து ஆய்வு செய்து வருகிறார். வழக்கமாக, விமானங்களில் இருந்து வரும் தரவுகள் ஜிபிஎஸ் ஜாமிங்கை கண்டறிய உதவுகின்றன. ஆனால், இரான் மீதுள்ள வான்வெளி தற்போது மூடப்பட்டிருப்பதால், கோர்மன் வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. சமீபத்தில், இரானில் ஜாமிங்குக்கான அறிகுறிகளைக் கண்டறிய ஒரு செயற்கைக்கோளில் இருந்து ரேடார் தரவுகளைப் பயன்படுத்தினார். பிபிசி இந்தத் தரவை சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை, ஆனால் ஜாமிங் சாதனங்கள் ரேடார் சிக்னல்களில் சிறிய இடையூறுகளை ஏற்படுத்துவதாக கோர்மன் கூறுகிறார். இந்த சிக்னல்களை ஆராய்வதன் மூலம், நாடு முழுவதும் ஜிபிஎஸ் ஜாமிங் ஏற்படக்கூடிய இடங்களை அவரால் அடையாளம் காண முடியும். கடந்த 2024ஆம் ஆண்டில், ஷான் கோர்மனும் அவரது குழுவினரும் யுக்ரேனில் ட்ரோன்களை பயன்படுத்தி ஜிபிஎஸ் ஜாமிங் பற்றி ஆய்வு செய்தனர். அவர்கள் ட்ரோன்களுடன் ஸ்மார்ட்போன்களை இணைத்து சுற்றியும் பறக்கவிட்டனர். அவை பறக்கும்போது ஸ்மார்ட்போன்கள் ஜிபிஎஸ் சிக்னல்களை பதிவு செய்தன. இது ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்னல் குறுக்கீட்டைக் கண்டறிய உதவியது. பல ஸ்மார்ட்போன்களில் இருந்து ஜிபிஎஸ் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஜாமிங் சாதனத்தின் சரியான இடத்தை அவர்களால் மதிப்பிட முடிந்தது. ஜாமிங் எவ்வளவு வலிமையானது மற்றும் பரவலாக இருந்தது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதாக கோர்மன் கூறுகிறார். பட மூலாதாரம்,Advanced Navigation படக்குறிப்பு,அட்வான்ஸ்ட் நேவிகேஷன், ஜிபிஎஸ்-க்கு மாற்றாக இருக்கவல்ல தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது இன்று, ஜிபிஎஸ் ஜாமிங்கில் இருந்து அமைப்புகளைப் பாதுகாக்கப் பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. சில அமைப்புகள் தானாகவே குறுக்கீட்டைக் கண்டறிந்து பாதிக்கப்படாத மற்றொரு சிக்னல் அதிர்வெண்ணுக்கு மாறலாம். உதாரணமாக, ரேதியோன் யுகே என்ற பாதுகாப்பு நிறுவனம் லேண்ட்ஷீல்ட் என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனம் மிகச் சிறியது. இதை கார்கள், விமானம் போன்ற பல வகையான வாகனங்களில் நிறுவ முடியும். இந்த "ஜாமிங்-எதிர்ப்பு ஆன்டெனா அமைப்பு" ஜாமிங்கின்போதுகூட வழிசெலுத்தலை வேலை செய்ய வைக்கப் பல சிக்னல்களை கொண்ட சேனல்களை பயன்படுத்துகிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது. அலெக்ஸ் ரோஸ்-பார்ஃபிட்டின் கூற்றுப்படி, ஜாமிங் எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. மற்றொரு நிறுவனமான அட்வான்ஸ்ட் நேவிகேஷன், ஒரு வித்தியாசமான தீர்வை உருவாக்கியுள்ளது. ஜிபிஎஸ்-ஐ மட்டும் நம்புவதற்குப் பதிலாக, அவர்களின் அமைப்பினால் கைரோஸ்கோப்புகள் மற்றும் முடுக்கமானிகள் (accelerometers) போன்ற சென்சார்களை பயன்படுத்தி கப்பலின் நிலையைக் கண்டறிய முடியும். இவை ஸ்மார்ட்போன்களில் இயக்கத்தைக் கண்டறிய அல்லது தொலைபேசி பக்கவாட்டில் திருப்பப்படும்போது பயன்படுத்தப்படும் அதே வகையான சென்சார்கள். இது ஜிபிஎஸ் சிக்னல்கள் தடைபட்டாலும் வழிசெலுத்தலைத் தொடர அனுமதிக்கிறது. அட்வான்ஸ்ட் நேவிகேஷனின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ் ஷா, ஜிபிஎஸ் சரியாக வேலை செய்யாதபோதும் தனது நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும் என்கிறார். சுற்றியுள்ள பகுதியின் படங்களை செயற்கைக்கோள் படங்களுடன் ஒப்பிட்டு இருப்பிடத்தை அடையாளம் காண்பது, ஒருமுறை. கணினி மென்பொருளைப் பயன்படுத்தி வானத்திலுள்ள நட்சத்திரங்களின் நிலைகளைப் பகுப்பாய்வு செய்வது, மற்றொரு முறை. இதற்குப் பயன்படுத்தப்படும் பட செயலாக்க தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டது எனக் கூறுகிறார் ஷா. இருப்பினும், நட்சத்திர-மேப்பிங் மலிவானது என்றாலும் மிகவும் துல்லியமானது இல்லை. இதன் காரணமாக, இருப்பிடத்தைக் கண்டறிவதற்கான பல்வேறு முறைகளை ஒன்றாகப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். சிறந்த பாதுகாப்பு இல்லாமல், ஜிபிஎஸ் தாக்கப்படுவது எளிது. ஜிபிஎஸ் பயன்படுத்தும் சிக்னல்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இது அவற்றைத் தடுப்பதை அல்லது இடையூறு விளைவிப்பதை எளிதாக்குகிறது. இருப்பினும், ராணுவ படைகள், எம்-கோட் எனப்படும் தனித்துவமான, பாதுகாப்பான ஜிபிஎஸ் பதிப்பைப் பயன்படுத்துகின்றன. இது என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதால் ஜாம் செய்வது மிகவும் கடினம். இரானுக்கு அருகிலுள்ள ஜிபிஎஸ் ஜாமிங் கடலில் விபத்துகளின் அபாயத்தை அதிகரிப்பதாக ராயல் நேவிகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ராம்சே ஃபராகர் எச்சரிக்கிறார். ஜாமிங் மிகவும் பொதுவானதாகி வருவதால், எதிர்காலத்தில் புதிய, மிகவும் பாதுகாப்பான வழிசெலுத்தல் அமைப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் நம்புகிறார். இந்தச் சூழ்நிலையை அவர் வை-ஃபை இணைப்பின் ஆரம்ப காலத்துடன் ஒப்பிடுகிறார். அப்போது நெட்வொர்க்குகள் திறக்கப்பட்டிருந்தன. யார் வேண்டுமானாலும் வை-ஃபை இணைப்பை அணுகும் விதத்தில் இருந்தன. பின்னர் அவை கடவுச்சொற்களால் பாதுகாக்கப்பட்டன. அதேபோல், எதிர்காலத்தில் மக்கள் இன்றைய திறந்த ஜி.என்.எஸ்.எஸ் சிக்னல்களை திரும்பிப் பார்த்து, வலுவான பாதுகாப்பின்றி அவை ஏன் பயன்படுத்தப்பட்டன என்று சிந்திக்கக்கூடும் என்று அவர் கருதுகிறார். https://www.bbc.com/tamil/articles/czx7qeqzj5xo
-
என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த
என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த Mar 12, 2026 - 03:42 PM - 0 மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமயில் உள்ள விகாரை ஒன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்திற்கு ஆற்றும் சேவை குறித்து உங்களது கருத்து என்ன? பதில்: ஏதேனும் சேவை செய்கிறார்களா? கேள்வி: பௌத்த சாசனத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை காணப்படுகிறது. உங்கள் காலத்தில் எப்படி மதிப்பளிக்கப்பட்டது? பதில்: மிக உயர்வாக மதித்தோம். இப்போது அப்படிச் செய்கிறார்களா என்பது கேள்வியே. கேள்வி: உங்கள் காலத்தில் இருந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: அவர் ஆற்றிய சேவையைப் பாராட்ட வேண்டுமே தவிர, சிறையில் அடைக்கக் கூடாது. இது சிறையில் அடைக்கும் காலமல்ல. கேள்வி: தற்போது சர்வதேசப் போரொன்று நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது காலம் இந்தப் போர் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கிறீர்கள்? பதில்: பிரச்சினை ஏற்படும் தானே. நாட்டிற்கு, நாட்டின் எதிர்காலத்திற்குப் பிரச்சினை ஏற்படும். கேள்வி: நாட்டின் தற்போதைய நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பதில்: அரசாங்கம் செய்வதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும். https://adaderanatamil.lk/news/cmmnb4386000l356p5a3lobgd
-
மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி
மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி மற்றும் காயம்; பல சிறுவர்களுக்கு 'பேரழிவு' நிலை! - யுனிசெஃப் கவலை 12 Mar, 2026 | 02:38 PM அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மில்லியன்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் "பேரழிவு" நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் எச்சரித்துள்ளது. யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இதுவரை 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வன்முறையினால் காயமடைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர். இதில் உள்ளடங்குபவை: ஈரான்: 200 சிறுவர்கள் உயிரிழப்பு. லெபனான்: 91 சிறுவர்கள் உயிரிழப்பு. இஸ்ரேல்: 4 சிறுவர்கள் உயிரிழப்பு. குவைத்: 01 சிறுவர் உயிரிழப்பு. வன்முறை மேலும் தீவிரமடைந்து வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக நூறாயிரக்கணக்கான சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன், இந்தப் போர் நெருக்கடியினால் மில்லியன்கணக்கான சிறுவர்கள் தமது கல்வி கற்கும் வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "சிறுவர்களைக் கொலை செய்வதையோ, அங்கவீனப்படுத்துவதையோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் அத்தியாவசிய சேவைகளை அழிப்பதையோ எதனாலும் நியாயப்படுத்த முடியாது. இப்பிராந்தியத்தில் உள்ள சுமார் 200 மில்லியன் சிறுவர்கள், உலகம் விரைவாகச் செயற்படும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்" என யுனிசெஃப் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/240787
-
தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!
நவீன ஆயுதங்களுடன் பிடிபட்ட படகுகள் கரைக்கு கொண்டுவரப்பட்டன Mar 12, 2026 - 01:33 PM இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (12) திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. கடற்படையின் நீண்டதூர ரோந்து கப்பல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகிலிருந்து சுமார் 600 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல், போதைப்பொருட்களுடன் அதே படகிலிருந்து 08 கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் , 02 T56 ரக துப்பாக்கிகள், 01 M16 ரக துப்பாக்கி. ( M16 ரக துப்பாக்கியானது பாதுகாப்புப் படையின் விசேட பிரிவினரால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு நவீன ஆயுதமாகும்) ஆகிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மற்றைய பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் கடத்தப்பட்ட படகிற்கு உதவியாகவும் உளவு பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmmn5w90x000g356picapg6si
-
109 ஆவது பொன் அணிகளின் சமர்
109ஆவது பொன் அணிகளின் போர் கிரிக்கெட்டில் சென். பட்றிக்ஸ் - யாழ்ப்பாணம் கல்லூரி பலப்பரீட்சை 12 Mar, 2026 | 01:10 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் போர் வட்டுக்கொட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் இன்று (12) ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டி அருட்தந்தை ரி.எம்.எவ். லோங் அடிகளார் ஞாபகார்த்த சவால் கிண்ணத்துக்காக விளையாடப்படுகிறது. 1917இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டி, வட மாகாணத்தின் மிகவும் பழைமையான மற்றும் பெருமைக்குரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக விளங்குகிறது. 2025ஆம் ஆண்டுவரை நடைபெற்று முடிந்த 108 பொன் அணிகளின் போரில் சென். பட்றிக்ஸ் கல்லூரி 35 வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் யாழ்ப்பாணம் கல்லூரி 17 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 31 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது. 1973ஆம் ஆண்டு ஈட்டிய வெற்றிக்குப் பின்னர் அடுத்த வெற்றிக்காக 52 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் கல்லூரி கடந்த வருடம் அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. சிதம்பரலிங்கம் மதுசன் தலைமையில் யாழ்ப்பாணம் கல்லூரி 59 ஓட்டங்களால் கடந்த வருடம் வெற்றியைப் பதிவு செய்தது. சென். பட்றிக்ஸ் கல்லூரி கடைசியாக 2023இல் சிவராசா கீர்த்தன் தலைமையில் வெற்றி பெற்றிருந்தது. 2025இலிருந்து இப் போட்டி மூன்று நாள் போட்டியாக நடத்தப்படுவது விசேட அம்சமாகும். இந்த வருடம் சென். பட்றிக்ஸ அணிக்கு பிரேமநாயகம் மதுசன் தலைவராகவும் யாழ்ப்பாணம் கல்லூரிக்கு ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் தலைவராகவும் விளையாடுகின்றனர். இரண்டு அணிளிலும் மிகச் சிறந்த வீரர்கள் இடம்பெறுவதால் இந்த வருடப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். மேலும் இப் போட்டியைக் கண்டுகளிக்கவென கனடா, ஐக்கிய இராச்சியம். நோர்வே, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பழைய மாணவர்கள் பெருமளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தத்தமது அணிகளுக்கு உற்சாகமூட்டுவதால் இப் போட்டி ஒரு கொண்டாட்ட விழாவாகவும் அமைகின்றது. இது இவ்வாறிருக்க, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணத்துக்கான 32ஆவது 50 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத் தொடரிலும் சென். பட்றிக்ஸ் கல்லூரி 24 - 7 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான 6ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும். இதில் சென் பட்றிக்ஸ் 4 வெற்றிகளையும் யாழ்ப்பாணம் கல்லூரி ஒரு வெற்றியையும் ஈட்டியுள்ளன. இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்திலேயே நடைபெறும். பொன் அணிகளின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமம் அனுசரணை வழங்குவதுடன் வீரர்களுக்கான சீருடைகளை அந் நிறுவனம் வழங்கியுள்ளது. இப் போட்டிக்கு டோக்கியோ சிமென்ட் குழுமம் இணை அனுசரணை வழங்குகிறது. அணிகள் சென். பட்றிக்ஸ்: பிரேமநாயகம் மதுசன் (தலைவர்), சிவநாதன் ஷெகான் (உப தலைவர்), ரொபின்சன் பியர்லி டெனோவன், காம்டின் லிக்ஷன், விமலதாஸ் டெஃபானோ, செரெனஸ் நிஷாந்தன் ஹரின் ஏட்றியன், மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா, ஜெபின்சன் கெமிஷன், டைட்டஸ் ஜோயேஷ், செல்வகுமார் ஸ்மித் செனாரி, ஜெயராஜரூபன் டினுலக்சன், ஜீவராஜ் மேகவர்ஷிகன், மெரின் ஹில்மன் தனுஷன், ரொக்ஷான் வொட்சன் செர்வின், அருள்ராஜன் அஷோபின், பிரதீப் மெலோடியஸ் ரவின், சுரேஷ்குமார் ஜானுசன், தேவராசா சஜீன் ஜோபேர்ட், ரொபின்சன் தேவ்சன், ஹென்றிக் விகாயகுமார் கியூட்வெஸ்லன். யாழ்ப்பாணம் கல்லூரி: ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (தலைவர்), வாசுதேவன் விஷ்னுகோபால் (உப தலைவர்), திவாகரன் கார்த்திகன், சசிகரன் சங்கீத், அன்ரனி ரித்மன் அபிநாத், ஸ்டெலன் கருணைதாஸ் ஹமிஷ் ஹாமிஷன், கீதேஸ்வரன் ஹரிஷன், அனுஷாந்தன் ஹாமிஷன், சுரேஷ் கபிஷன், சுபீசன் தக்சிகன், கேதீஸ்வரன் திருக்குமரன், உதயராஜா கென்றிக்சன், பாலரூபன் கெவின், சசிகரன் அஷ்மின், சத்திவேல் சதுஜன், ரவிகுமார் சாருஜன், சசிகாந்த் கிரிஷான், ராசஜெயந்தன் அஷ்வின், தயாபரன் அக்சயன். https://www.virakesari.lk/article/240784
-
அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு: விசாரணை சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு
அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு: விசாரணை சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு Published By: Vishnu 12 Mar, 2026 | 08:28 PM அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன்போது , உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னியாகி, சிறுவனின் கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி , வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களை முன் வைத்தனர். அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, பொலிஸ் உயர் அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் , என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர். அத்துடன் இன்றைய வழக்கு விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னியான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவம் நடைபெற்று ஒரு மாத கால பகுதி கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240827
-
எரிபொருள் விலை உயர்வில் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் - ட்ரம்ப்
எரிபொருள் விலை உயர்வில் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் - ட்ரம்ப் Mar 12, 2026 - 08:34 PM ஈரானின் அதி உயர் தலைவரின் உரை ஒளிபரப்பப்பட்ட அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிபொருள் விலை உயர்வின் மூலம் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது ட்ரூத் சமூக தளத்தில் அவர் தெரிவிக்கையில், அமெரிக்கா உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. எனவே எண்ணெய் விலை உயரும்போது, நாங்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால், ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு மிக முக்கியமானது, ஈரான் என்ற தீய பேரரசு அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுப்பதும், மத்திய கிழக்கு மற்றும் உலகை அழிப்பதைத் தடுப்பதும்தான். அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmnlhxnr000x356p1wine47b வியாபாரி நாட்டிற்கு தலைமை தாங்கினால்.....