stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
ஹரிணியை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் 'ஸம-லிங்கிக' சர்ச்சை: விளக்கமில்லாத குழப்பம்! 🖊️எழுத்து: M.L.M. மன்சூர் (கண்டி) இன்று சிங்கள சமூக ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சொல் 'ஸம - லிங்கிக' என்பது. தன்பாலீர்ப்பை (Homosexuality) குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் சிங்களச் சொல் அது. ஆண்கள் பெண்களை மோகிப்பதும், பெண்கள் ஆண்களை மோகிப்பதும் (எதிர்ப்பாலீர்ப்பு - Hetero sexual) இயல்பானது என்பதும், ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் என்ற விதத்தில் ஏற்படும் பாலியல் ஈர்ப்பு இயற்கைக்கு மாறானது என்பதும் பொதுச் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கும் விதி. ஆனால், எதிர்ப்பால் ஈர்ப்புக்கு அப்பால் பல்வேறு வினோதமான பாலியல் நாட்டங்களுடன் கூடிய ஒரு பிரிவினர் சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உயிரியல் ரீதியான யதார்த்தத்தை எவரும் மறுக்க முடியாது. சமயக் கிரந்தங்கள் கூட வரலாற்றில் அத்தகைய கூட்டத்தினரின் இருப்பு குறித்து (எதிர்மறையாக) குறிப்பிட்டிருக்கின்றன. இந்து சமயத்தில் மாற்றுப் பாலீர்ப்பாளர்களுக்கான பிரத்தியேகமான சடங்குகளும், திருவிழாக்களும் உள்ளன (உதாரணம்: தமிழ் நாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கூவாகத் திருவிழா). அந்த மாற்றுப் பாலீர்ப்பாளர்களை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதும், அவர்கள் தொடர்பாக சகிப்புத் தன்மையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பதும் ஹரிணி அமரசூரிய போன்றவர்களின் கருத்து. அவர் மட்டுமல்ல இலங்கையின் பெரும்போக்கு அரசியல் கட்சிகள் பலவற்றின் முக்கியமான தலைவர்கள், முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் அத்தகைய நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார்கள். பழங்குடிகள், மாற்றுத்திறனாளிகள், மொழிச் சிறுபான்மையினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் போன்ற விளிம்பு நிலைச் சமூகங்கள் தேசிய பெருவாழ்வுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் (Inclusion) என்ற கருத்தாக்கத்தின் ஒரு நீட்சியாகவே பாலியல் சிறுபான்மையினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கும் ஆண்டு ஆறு ஆங்கில பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய மொடியூளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை. 'ஹரிணி ஒரு லெஸ்பியனாக' இருந்து வருவதனால் LGBTQA கலாச்சாரத்தை இலங்கையில் போஷித்து வளர்க்கும் உள்நோக்கத்துடன் இந்தக் காரியத்தை செய்திருக்கிறார்' என்பது அவர் மீது முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. தான் ஒரு லெஸ்பியன் என ஹரிணி எந்த இடத்திலும் பகிரங்கமாக கூறியிருக்கவில்லை (அவரை நெருக்கமாக அறிந்து வைத்திருப்பவர்கள் பலரும் 'அவர் அப்படியானவர் அல்ல' என்று தான் சொல்கிறார்கள்). அவருடைய அந்தரங்க வாழ்க்கையில் அவர் அப்படி நடந்து கொண்டாலும் கூட - பிரதம மந்திரிக்கு இருந்து வரக்கடிய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி தனது பாலியல் இச்சைகளை அவர் நிறைவேற்றிக் கொள்ளாத வரையில் - அது நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்து வர முடியாது. சம்பந்தப்பட்ட பாடநூல் தொடர்பாக 'அந்தத் தவறுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்தவர்கள் உரிய விதத்தில் தண்டிக்கப்படுவார்கள்' என ஹரிணி திட்டவட்டமாக கூறிய பின்னரும் கூட, எதிர்க்கட்சி தரப்பும், ராஜபக்ச முகாமைச் சேர்ந்த ஒரு சில முன்னணி பிக்குகளும், சில அரச எதிர்ப்பு யூடிபர்களும் அதை மேலும் மேலும் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எளிதில் மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய ஒரு தலைப்பு (Sensitive Topic) தொடர்பான விவாதமும், உரையாடலும் பிழையான நபர்களின் கைகளுக்கு போனால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தச் சம்பவம். "உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்" என்று பிரதமருக்கு புத்திமதி சொல்கிறார் அரசியல் கோமாளியான பத்தரமுல்லே சீலரத்ன தேரர். ‘பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது‘ என்பது அவருடைய வாதம். "ஹரிணி நோநா, நீங்கள் ஏன் இந்த ஆபாச இணையதளத்தை ஆரம்பித்தீர்கள்" என்று அவர் கேட்பது அடுத்த அபத்தம். ஹரிணி மீது கல்லெறிந்திருக்கும் (ராஜபக்ச முகாமைச் சேர்ந்த) மற்றைய இரு பிக்குகள் பலங்கொட கஸப்ப தேரர் மற்றும் 'மிகிந்தலே ஹாமிதுருவோ' என பிரபல்யமடைந்திருக்கும் வளவாஹெங்குனவெவே தர்மரதன தேரர். மிகிந்தலே தேரரின் கருத்துக்கள் முகம் சுளிக்க வைப்பவை. ஒரு துறவி கட்டாயமாக தவிர்த்திருக்க வேண்டிய சொற்பிரயோகங்கள். தன்பால் புணர்ச்சி ஆர்வலர்களான ஆண்களையும், பெண்களையும் குறிப்பதற்கென சிங்கள பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்களை அவர் நன்கு ரசித்து, பொருத்தமான உடல் மொழியுடன் விளக்கிக் கூறுகிறார் (எஸ் பொ வின் சிறுகதை ஒன்றில் 'Gay' ஆட்களைக் குறிக்கும் வடக்கு கிழக்கு தமிழ் பேச்சு வழக்குச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது). மறுபுறம், எதனை இயற்கைக்கு மாறானதென கூறி அவர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்களோ அந்த வழக்கம் நீண்ட காலமாக இலங்கை சமூகத்தில் நிலவி வருகிறது என்பதற்கான அத்தாட்சி இந்த ஹாமிதுரு பயன்படுத்தியிருக்கும் 'சொல்லகராதி'! 'கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்' என இத்தேரர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் சுதத்த திலகசிரி போன்ற ஒரு சில (அரச சார்பு) யூடிபர்கள் சமய ஸ்தாபனங்களுக்குள் - குறிப்பாக பன்சல வளாகங்களுக்குள் - இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வரும் அதே நபர்கள் இன்று Homosexuality க்கு எதிராக உரத்துக் குரலெழுப்புவது பெரும் நகைமுரண் என்கிறார்கள். 'ஹரிணி போன்றவர்களின் கொடிய கரங்களிலிருந்து' இலங்கை சிறுவர் சமுதாயத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்று தொண்டை கிழியக் கத்துபவர்கள், 'பாடசாலைகளில் பாலியல் கல்வி கூடாது' என்ற கோரிக்கையை முன்வைப்பவர்கள் ஆகிய தரப்புக்கள் எளிதில் மறந்துவிடும் ஒரு விடயம் இருந்து வருகிறது. 'பாடசாலைகளில் பாலியல் கல்வி என்பது சிறுபிள்ளைகளுக்கு உடலுறவில் ஈடுபடும் விதத்தை சொல்லிக் கொடுக்கும் அசிங்கமான காரியம்' என இந்தப் பிக்குகளையும் உள்ளிட்ட பலர் நினைக்கிறார்கள். இலங்கையில் அண்மைக் காலத்தில் துரித வேகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை / சுரண்டலை தடுப்பதற்கான ஒரு வழியாக பிள்ளைகளுக்கு குறைபட்சம் Good Touch, Bad Touch போன்றவை குறித்து அறிவூட்டி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான பிள்ளைப் பருவத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இங்கு உதாசீனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தின் மீதான வன்மத்தை கொட்டித் தீர்ப்பதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாக இது வாய்த்திருப்பதுடன், எதிர்க்கட்சிகள் மிகவும் தந்திரமான விதத்தில் தமது பினாமிகளை களமிறக்கி, இந்த எதிர்ப்பை முன்னெடுத்து வருகின்றன. சமூக ஊடகங்களில் ஹரிணிக்கு எதிராக பல பெண் புத்திஜீவிகளும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். (பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ராதிகா குமாரசுவாமி, எம் ஏ சுமந்திரன் ஆகியோரையும் உள்ளிட்ட) பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்கள் 58 பேரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கை "பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அவதூறுப் பிரச்சாரம் ஒரு ஜனநாயக சமூகம் அனுமதிக்கும் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபணை செயற்பாடுகள் தொடர்பான தார்மீக வரம்புகளை" மீறிச் சென்றிருக்கும் விடயத்தை சுட்டிக் காட்டுவதுடன், "அந்த வன்மப் பிரச்சாரம்" உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளது. சி பி டி சில்வாவையும் உள்ளிட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி யுஎன்பி நிகழ்த்திய ஒரு அரசியல் சூழ்ச்சியின் விளைவாக 1964 டிசம்பர் மாதத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான SLFP/LSSP/CP கூட்டணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதனையடுத்து 1965 மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் யுஎன்பி முன்வைத்த முதன்மை பிரச்சார சுலோகம் - கம்யூனிஸ எதிர்ப்பு. என் எம் பெரேரா, பீட்டர் கெனமன் போன்ற நாத்திக மார்க்சிஸ்ட்களிடமிருந்து பௌத்த மதத்தையும், சிங்கள பௌத்த கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஒரு பிரச்சார உத்தி. இதற்கென நாடெங்கிலும் 'ஸங்க ஸபாக்கள்' ஏற்பாடு செய்யப்பட்டன. அதாவது புத்த பிக்குகள் மட்டும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் பிரச்சாரக் கூட்டங்கள். அப்போதைய நட்சத்திர பேச்சாளர்களான பல முன்னணி தேரர்கள் அக்கூட்டங்களில் உரை நிகழ்த்தினார்கள். அவர்களில் ஒருவர் தல்பாவில சீலவங்ச தேரர். அவருடைய பேசுபொருள் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகம் தொடர்பானது. மேடைகள் தோறும் அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று முதல் பக்கத்தை விரித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளிப்பது அவருடைய வழக்கம். அந்தப் பாடப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் ஒரு குடும்பத்தைக் காட்டும் மூன்று படங்கள் இருந்தன. முதல் படம் மகன் - Nimal; இரண்டாவது படம் மகள் - Manel மூன்றாவது படம் அப்பா - Perera. இந்தப் படங்களை எடுத்துக்காட்டி, அந்தத் தேரர் நிரூபிக்க முயன்ற விடயம் N M Perera தனது பெயரை பிரபல்யப்படுத்துவதற்கான ஒரு தந்திரமாக இந்தக் காரியத்தை செய்திருக்கிறார் என்பது (இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான அந்தப் பெருமகனார் யு என் பி முன்னெடுத்த அந்த மலினமான பிரச்சார உத்தியை பார்த்து உடலின் எந்தப் பாகத்தால் சிரித்திருப்பார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை). இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது இலங்கை வாக்காளர்கள் எந்த அளவுக்கு சிறுபிள்ளைத் தனமான பிரச்சாரங்களை சகித்துக் கொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு விதத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தோன்றுகிறது. 'வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது' என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து தல்பாவில சீலவங்ச தேரர் செய்த அதே அபத்தமான பிரச்சாரத்தை இப்பொழுது ஆறாம் ஆண்டு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து பத்தரமுல்லே சீலரத்ன தேரர் செய்து கொண்டிருக்கிறார். 'பௌத்த மதத்தையும், பௌத்த கலாச்சாரத்தையும் மத வெறுப்பு (நிராகமிக்க) பேர்வழிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்ற அதே பழைய துருப்புச் சீட்டு. கூட்டு எதிர்கட்சி என்ற வெட்கம் கெட்ட லேபளில் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இப்பொழுது தமது புதிய கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டிருக்கும் நாமல் ராஜபக்ச, சாகர காரியவசம், சரத் வீரசேகர, பலங்கொட கசப்ப, ஞானசார, இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ கும்பல் முன்வைக்கும் புளித்துப் போன துருப்புச் சீட்டு. 2022 அறகலய மக்கள் எழுச்சியுடன் இணைந்த விதத்தில் இலங்கை சமூகத்துக்குள்- - குறிப்பாக சிங்கள சமூகத்திற்குள் படிப்படியாக நிகழ்ந்து வரும் வலி மிகுந்த ஒரு நிலைமாற்றமே இப்பொழுது ஒரு அரசியல் நெருக்கடியாக வெடித்திருக்கிறது. அந்தச் சமூக பரிமாணத்தை உதாசீனம் செய்து விட்டு, வெறுமனே அரசாங்க கட்சி - எதிர்க் கட்சி என்ற அரசியல் அணுகுமுறைக்கூடாக மட்டும் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. "தாழ்ந்த சாதிக்காரன் ராஜாவாக வந்தால் அந்த நாடு ஒருபோதும் உருப்பட முடியாது" என்று தீவிர ராஜபக்ச ஆதரவாளரான சிரி சமந்தபத்த தேரர் கூறியிருப்பதும், தலதா கண்காட்சியின் போது 'இது வரையில் மன்னர்களின் அனுசரணையின் கீழ் இடம்பெற்ற புனித தந்த தாதுக்களின் கண்காட்சி இப்பொழுது முதல் தடவையாக அரசவை கோமாளியின் (அந்தரேயின்) அனுசரணையின் கீழ் இடமபெறுகிறது' என ஞானசார தேரர் கூறியதும் வெறும் உளறல்கள் அல்ல. விளங்கிக் கொள்ளக் கூடியவர்களுக்கு ஒரு பூடகமான செய்தியை முன்வைக்கும் வன்மம் கலந்த கூற்றுக்கள் அவை. அரச எதிர்ப்பு சிங்கள யூடிபர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வரும் சொல் 'மாளிமா டோபிகள்' என்பது. என்பிபி அரசாங்கத்தின் அழுக்குகளை கழுவி, அதனை தூய்மைப்படுத்துபவர்கள் என்ற கருத்தில் அப்படிச் சொன்னாலும் 'Dhobies' என்ற சொல் ஒவ்வொரு தடவையும் மிகவும் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. அநுரகுமாரவைப் போல ஹரிணியை அவருடைய குடும்பப் பின்னணியின் அடிப்படையில் இழிவுபடுத்த முடியாது. காலி அத்மீமன அமரசூரிய வளவ்வ என்ற பெரிய வீட்டின் உயர் குடி செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். பள்ளிப் படிப்பை கொழும்பிலும், பல்கலைக்கழக படிப்பை வெளிநாடுகளிலும் மேற்கொண்டவர். அதனால் அவர் மீது அவதூறு பொழிவதற்கு வேறு ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும். பார்வையாளர்களின் ஆர்வத்தை பெருமளவுக்குத் தூண்டக் கூடிய ஒரு ஆயுதம் அவருடைய பாலியல் வாழ்க்கை தொடர்பான புனைவுகள். 'அவருடைய காதலி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்' என்ற மேலதிக தகவலை வழங்குவதன் மூலம் மேலும் பார்வையாளர்களை ஈர்த்துக் கொள்ள முடியும். சிங்கள சமூக ஊடகங்களில் அந்தப் புனைவுகள் தான் இப்பொழுது மிகவும் அசிங்/கமான விதத்தில் அரங்கேறி வருகின்றன. 1960 ஜூலை மாதம் சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கை பிரதமராக (உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன்) பதவியேற்ற சந்தர்ப்பத்தில் " பாராளுமன்றத்தில் பிரதம மந்திரி அமரும் கதிரையை ஒவ்வொரு மாதமும் கழுவி, துப்புரவு செய்ய வேண்டி நேரிடும்" என்ற விதத்தில் பிரேமதாச போன்றவர்கள் தெரிவித்த அதே விதத்திலான அநாகரிகமான கருத்துக்களே இப்பொழுது ஹரிணியை இலக்கு வைத்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அநுர - ஹரிணி தலைமையிலான அரசாங்கம் குறைகள் எதுவும் அற்ற, சர்வ சம்பூர்ணமான ஒரு அரசாங்கமாக இருந்து வருகிறது என்று எவரும் சொல்ல முடியாது. அது கடந்த 15 மாத காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கடும் தடுமாற்ற நிலைளை எதிர்கொண்டிருந்தது. ஒரு சில இடங்களில் சறுக்கியிருக்கிறது. பல தடவைகள் முக்கியமான அமைச்சர்கள் சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு துளியும் பொருத்தமற்ற விதத்தில் ஆணவமாக பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகள்; குற்றங்கள் அல்ல. எனவே, இப்பொழுது முதலில் இலங்கை மக்கள் தோற்கடிக்க வேண்டிய சக்தி NPP அரசாங்கம் அல்ல. அதற்குரிய தருணம் இன்னமும் வரவில்லை (It is too early). அதற்குப் பதிலாக ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட மத வெறியர்களின் ஆசீர்வாதத்துடன் நாமல் ராஜபக்ச தலைமையில் புதிதாக தலைதூக்கி வரும் வலதுசாரி மதவாத சக்திகள் உடனடியாக தோற்க்கடிக்கப்பட வேண்டும். தன்னை மதச்சார்பற்ற ஒரு கட்சியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கும் SJB போன்ற கட்சிகள் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, எதிர்கால இலங்கைக்கு பெரும் ஆபத்தாக அமையக் கூடிய மேற்படி சக்திகளை எதிர்கொண்டு, அவற்றை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அதனை வெளிப்படையாக கூறவும் வேண்டும். சந்தர்ப்பவாத அரசியலை கைவிடுவதற்கான தருணம் இப்பொழுது வந்திருக்கிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே என் பி பி க்கு எதிரான வலுவான ஒரு மாற்று அணியாக களமிறங்குவதற்கான தார்மீக உரிமை SJB க்குக் கிடைக்கும். 📌அதிகம் பகிருங்கள்! https://www.facebook.com/share/p/1AF66tytrG/?mibextid=wwXIfr
-
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள்
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி I) 9 Jan 2026, 7:14 AM ஆறு மைல்கற்களும் அவற்றால் எழும் சவால்களும் ருக்மிணி எஸ் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் நெருக்கமாகக் கண்காணிக்கிறோம்: உலகளாவிய தரவுகளுக்கு உலக மக்கள்தொகையின் சாத்தியப்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் 2024ஆம் ஆண்டின் அறிக்கை (திருத்தப்பட்டது) (United Nations World Population Prospects, 2024 Revision), இந்தியத் தரவுகளுக்கு 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System), தேசியக் குடும்ப நல ஆய்வின் (National Family Health Survey) மக்கள்தொகை மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம், மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம். பகுதி Iஇல், தற்போதுள்ள நிலைமையையும், கவனிக்கப்படாமல்போனதாக நாங்கள் கருதும் முக்கியமான அண்மைக்காலத் தரவுகளையும் விவரிக்கத் தேவையான தரவுகளை வழங்குகிறோம். பகுதி IIஇல், குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்வதுடன், இந்தியா ஒருபுறம் தனித்துவமானதாகவும் மற்றொரு புறம் உலகளாவிய போக்கின் அங்கமாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்கிறோம். பகுதி IIIஇல், இந்திய மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வேறுபாடுகள், அவை தற்போதைய சமூக-பொருளாதார, அரசியல் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் விதங்கள் ஆகியவை பற்றிய தரவுகளை ஆராய்கிறோம். மக்கள் தொகை விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முக்கியமான ஆறு திருப்புமுனைகளைக் கண்டுள்ளது. இவை உலகளாவிய மக்கள்தொகையியல், மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள். 1. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறுதல் 2020களின் தொடக்கத்தில், இந்தியா சீனாவை விஞ்சி 1.4 பில்லியன் மக்களுடன் உலகிலேயே மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக ஆனது. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதில் ஐயம் இல்லை. மேலும் பல தசாப்தங்களுக்கு அது அவ்வாறே தொடரும். 2060களின் தொடக்கத்தில் உச்சத்தை அடையும்போது இந்தியாவின் மக்கள்தொகை 1.7 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்கால மக்கள்தொகை தொடர்பான கணிப்புகள் அதிகபட்சமாக 2100வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தக் கட்டத்தைத் தாண்டியும் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையின் அளவு மற்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆனால் நைஜீரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட இதர பெரிய நாடுகளும் வளர்ந்துவருகின்றன. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு 2030க்குள் உச்சத்தை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ந்தாலும், இந்த வளர்ச்சியின் வேகம் ஏற்கெனவே கணிசமாகக் குறைந்துவிட்டது. நம்பகமான, ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த ஆரம்ப ஆண்டுகளில், அதாவது இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகும் 1950களின் தொடக்கத்திலும் இந்தியாவின் மக்கள்தொகை ஆண்டுக்கு 2 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துவந்தது. அதே காலகட்டத்தில் உலகின் மொத்த மக்கள்தொகை ஆண்டுக்கு சுமார் 1.75 சதவீதம் வளர்ந்துவந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களில், இந்தியாவின் மக்கள்தொகை இருமடங்காக அதிகரித்தது. 1980களிலிருந்து இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறையத் தொடங்கியது. 2020க்குள், இந்தியாவின் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1 சதவீதத்திற்குக் கீழே குறைந்தது. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்திற்குக் கீழே இது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்போது இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியா தனது மக்கள்தொகையில் ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் மக்களைச் சேர்த்துவந்தது. பிறகு இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2024ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா ஆண்டுக்கு 13 மில்லியனுக்கும் குறைவான மக்களையே சேர்த்தது. இந்தப் போக்கு தொடரும் நிலையில், இந்தியா மக்கள்தொகையைக் கூட்டுவதை 2060க்குள் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அதன் மொத்த மக்கள்தொகை குறையத் தொடங்கும். மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் குறைவு நாடு முழுவதும் நிகழ்கிறது. இருப்பினும், இப்படிக் குறைவதில் இரண்டு வேறுபட்ட வேகங்கள் உள்ளன. வரலாற்று ரீதியாக, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் வளமானவையாக இருந்துவருகின்றன. பெண்களின் கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. இதன் விளைவாகத் தெற்கு, மேற்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும், ஏழ்மையான, குறைந்த வளர்ச்சியடைந்த கிழக்கு, வடக்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. இந்திய மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் 1970கள்வரை ஒரே மாதிரியாகவே இருந்தன. 1980களிலிருந்து இந்தியாவின் தெற்கு மாநிலங்களின் மக்கள்தொகை மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மிக மெதுவாக வளர்ந்துவருகிறது. உதாரணமாக, இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்தில் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1970களில் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்தது. இந்தியாவின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றான, கிழக்கில் உள்ள கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள பிகாரில், வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2010களின் பிற்பகுதியில்தான் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறையத் தொடங்கியது. கேரளத்தில் மக்கள்தொகை இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்த நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிகாரில் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகையில் அதிக பங்கைக் கொண்டிருக்கும் என்பதே இதன் பொருள். 2011முதல் 2036வரையிலான இந்தியாவின் மொத்த மக்கள்தொகை அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே நிகழ்ந்திருக்கும். இதே காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகையில் அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைந்திருக்கும். (இந்தத் தொடரின் பகுதி III இந்தப் பிளவை இன்னும் விரிவாக விவாதிக்கிறது.) 2. கருவுறும் எண்ணிக்கை மக்கள்தொகையைப் ‘பதிலீடு செய்யும் விகிதத்திற்குக்’ கீழே குறைதல் பிறப்பு விகிதங்களில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சிதான் மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் இந்த வேகக் குறைவுக்குக் காரணம். மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்க வாய்ப்புள்ள குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது. நாடுகள் வளரும்போதும் பெண்களுக்குச் சிறந்த சுகாதாரமும் கல்வியும் கிடைக்கும்போது கருவுறுதல் விகிதங்கள் குறையத் தொடங்குகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் போக்கு. ஒரு நாட்டின் TFR 2.1 ஆகக் குறையும்போது, அதாவது பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்றால், அந்த நாடு “மக்கள் தொகையைப் பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல்” (replacement fertility) என்னும் நிலையை அடைந்துவிட்டது என்று மக்கள்தொகையியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு பெரியவர்கள் தங்கள் வாழ்நாளில் 2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது, குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான சில வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்தத் தம்பதியினர் இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இதனால் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும் என்பதே பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல் என்பதன் பொருள். இது ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பயணத்தில் முக்கியமான மைல்கல். பதிலீடுசெய்யும் நிலைக்குக் கீழே கருவுறுதல் குறைந்தால், மக்கள்தொகையின் மொத்த எண்ணிக்கை குறையத் தொடங்கும். சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப தசாப்தங்களில் அதிகமாக இருந்த இந்தியாவின் TFR பிறகு வேகமாகக் குறைந்து, சமீபத்திய அதிகாரப்பூர்வ இந்தியத் தரவுகளின்படி, இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே 1.9 ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவைவிடக் கிராமப்புற இந்தியாவில் கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ளது; கிராமப்புற இந்தியாவிலும், கருவுறுதல் இப்போது பதிலீட்டு விகிதத்தை நெருங்கிவிட்டது. கருவுறுதல் எல்லா இடங்களிலும் குறைந்தாலும், இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. தெற்கு, மேற்கு மாநிலங்களில் TFR பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது. இந்த மாநிலங்களில், கருவுறுதல் நிலைகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதைப் போலவே குறைவாக உள்ளன. உதாரணமாக, மும்பையைத் தலைநகராகக் கொண்ட மேற்கு மாநிலமான மகாராஷ்டிரத்தின் கருவுறுதல் விகிதம் நார்வேயைவிடக் குறைவாக உள்ளது. (இந்தத் தொடரின் பகுதி II கருவுறுதல் விவாதத்தை இன்னும் விரிவாக ஆராய்கிறது.) வரலாற்று ரீதியாக அதிகக் கருவுறுதலைக் கொண்டிருந்த வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் கருவுறுதல் குறைந்துள்ளது. கருவுறுதலில் இந்தியாவின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மாநிலமான பிகாரிலும்கூட TFR இப்போது ஒரு பெண்ணுக்கு 3.0 குழந்தைகளுக்கும் குறைவாகவே உள்ளது. எனினும், வடக்கு, தெற்கு மாநிலங்களின் கருவுறுதல் விகிதங்களில் உள்ள இந்தத் தொடர்ச்சியான இடைவெளி இந்திய அரசியலில் முக்கியமானதொரு வேறுபாடாகும். கிராமப்புற பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் TFR இப்போதும் ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம் கூடுதலாக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் கிராமப்புறங்களில்கூட TFR இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது. 3. குழந்தைகளின் எண்ணிக்கை குறைதல் பிறப்பு விகிதங்கள் இவ்வளவு தீவிரமாகக் குறைந்ததன் விளைவாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2000களின் முற்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 29 மில்லியன் குழந்தைகள் என்னும் உச்சநிலையை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கியது. இந்தியாவின் குழந்தைகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த அளவிலும் ஒப்பீட்டளவிலும் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதே இதன் பொருள். 1960களின் முற்பகுதியில், இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். 2025க்குள் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள குழந்தைகளைவிட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்திய மாநிலங்களின் சமூக-பொருளாதார, மக்கள்தொகை நிலவரங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், குழந்தைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்துவருகிறது. இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கருவுறுதல் விகிதங்கள் தாமதமாகக் குறைந்ததன் காரணமாக, ஒட்டுமொத்த எண்ணிக்கையிலும், மொத்த மக்கள்தொகையில் அவற்றின் பங்கிலும், குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் உள்ள 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூவரில் ஒருவர் பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே வாழ்கிறார்கள். எனினும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே குழந்தைகளின் எண்ணிக்கை சீராகக் குறைந்துவருகிறது. 4. மக்கள் தொகையின் சாளரத்தை மூடுதல் பொருளாதார நிபுணரும் மக்கள்தொகையியலாளருமான டேவிட் இ. ப்ளூமும் அவரது இணை ஆசிரியர்களும் 2003ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், “மக்கள்தொகையின் பலன்” (demographic dividend) என்ற சொல்லாடலை உருவாக்கினார்கள். ஆய்வுத் துறையில் பெரும் செல்வாக்கு செலுத்திய கட்டுரை இது. சரியான கொள்கைகள் அமலில் இருக்கும் பட்சத்தில், ஒரு நாட்டின் மக்கள்தொகையில் உழைக்கும் வயதினரின் பங்கு அதிகம் இருப்பதால் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியின் ஊக்கத்தை இந்தச் சொல்லாடல் குறிக்கிறது. இந்தச் சொல்லாடல் இந்தியாவின் இளைஞர் மக்கள்தொகை தொடர்பில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிப் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இது ஐரோப்பிய, வட அமெரிக்க, கிழக்காசிய நாடுகளைவிட இந்தியாவை மிகவும் இளைய நாடாக ஆக்குகிறது.எடுத்துக்காட்டாக, சராசரி அமெரிக்கர் அல்லது சீனரைவிடச் சராசரி இந்தியர் பத்தாண்டுகளுக்கும் மேல் இளையவராக இருக்கிறார். இருப்பினும், மக்கள்தொகையின் இந்தச் சாளரம் இந்தியாவில் இப்போது மூடப்பட்டுவருகிறது. மக்கள்தொகை மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி “உழைக்கும் வயதுடையவர்கள்” என்று வரையறுக்கப்படும் 15-64 வயதுக்குட்பட்ட இந்தியர்களின் பங்கு, ஐ.நா.வின் மக்கள்தொகைக் கணிப்புகளின்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உச்சத்தை அடையவிருக்கிறது. இது மிக ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, கடந்த காலத்தை ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது: தனது உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக் குழுமத்திலிருந்து திட்டமிடப்பட்ட “பலனை” இந்தியாவால் பெற்றெடுக்க முடிந்ததா? அடுத்து, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. சார்ந்திருப்போரின் விகிதம் என்பது மக்கள்தொகையியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கூர்ந்து கவனித்துவரும் முக்கியக் காரணி. உழைக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக்கும் இடையேயான விகிதம்தான் சார்ந்திருப்போரின் விகிதம். இந்த விகிதம் அதிகமாக உள்ள மாநிலங்கள் அல்லது நாடுகளில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையின் மீது அதிக நிதிச்சுமை இருக்கும். சார்ந்திருப்போருக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டியிருப்பதால் அரசின் நிதிச்சுமையும் கூடுதலாக இருக்கும். இந்தியாவின் பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை, சுருங்கிவரும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் இணைந்ததன் விளைவாக, நாட்டின் சார்ந்திருப்போரின் விகிதம் குறைந்துள்ளது. 2026க்குள், இந்தியாவின் சார்ந்திருப்போரின் விகிதம் 543ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உழைக்கும் வயதுடைய ஒவ்வொரு 1,000 பேருக்கும் 543 குழந்தைகளும் முதியவர்களும் இருப்பார்கள். இந்திய மக்களின் வயது தொடர்ந்து அதிகமாகும்போது, சார்ந்திருப்போரின் விகிதம் மீண்டும் உயரத் தொடங்கும். இந்த முறை வளர்ந்துவரும் முதியோர் மக்கள்தொகையால் இது நிகழும். ஆனால் இது சீரற்ற முறையில் பரவும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இப்போதுதான் பிறப்பு விகிதங்கள் குறைவதால், அவற்றின் சார்ந்திருப்போரின் விகிதங்கள் குறையும். ஏனெனில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளர்ந்து, சார்ந்திருப்போரை ஆதரிப்பதற்கான கூடுதல் திறன் உருவாகியிருக்கும். தெற்கு, மேற்கு மாநிலங்களில், அவற்றின் மக்களுக்கு வயதாகி, அவற்றின் பணியாளர்கள் சுருங்கும்போது, சார்ந்திருப்போரின் விகிதங்களும் அதற்கேற்ப உயரும். 5. தொற்றுநோயியல் மாற்றம் உலகம் முழுவதும், காலப்போக்கில், வளர்ச்சியும் மேம்பாடும் மக்கள் எதனால் நோய்வாய்ப்படுகிறார்கள் மற்றும் இறக்கிறார்கள் என்பதை மாற்றியமைக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் (WHO) இறப்புக்கான காரணங்களை மூன்று பரந்த வகைகளாகப் பிரிக்கிறது: (i) தொற்று நோய்கள், பேறுகாலப் பிரச்சினைகள், பிறப்புக்குப் பிந்தைய சிக்கல்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு – மலேரியா போன்ற கிருமிகளால் பரவும் நோய்கள், கர்ப்பம், பிரசவம், பிறந்த்தும் ஏற்படும் சிக்கல்களால் ஏற்படும் இறப்புகள் ஆகியவை அடங்கும். (ii) தொற்றா நோய்கள் – இருதய நோய்கள், புற்றுநோய்கள் ஆகியவையும், நேரடித் தொடர்பு, காற்று அல்லது நோய்க்கிருமிகள் மூலம் பரவாத பிற நோய்கள் ஆகியவை இதில் அடங்கும். (iii) காயங்கள் – இதில் கொலைகள், தற்கொலைகள் மற்றும் சாலை விபத்துகள் ஆகியவை அடங்கும். ஒரு குழுவினர் புவியியல் ரீதியாகவோ சமூக ரீதியாகவோ குறைந்த வருமானம், மோசமான ஊட்டச்சத்து, சுத்தமான சுற்றுச்சூழல் இன்மை, சுகாதாரம் பேணுவதற்கான வாய்ப்பு குறைவாக இருத்தல் ஆகிய சூழ்நிலைகளில் இருக்கும்போது, தொற்று நோய்களும் பிரசவத்தை ஒட்டி நடக்கும் அசம்பாவிதங்களுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. இந்தக் குழுக்கள் பணக்காரர்களாகி வயதாகும்போது, இந்த காரணங்களால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க முடியும்; அவை குறைந்துவிடுகின்றன. இதன் விளைவாக, இதய நோய், புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்புகளின் பங்கு ஒப்பீட்டளவில் உயரத் தொடங்குகிறது. இந்தியா இந்த மாற்றத்தின் நடுவில் உள்ளது. இது பொது சுகாதாரத்தில் தொற்றுநோயியல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், பிரதான இறப்புக்கான காரணங்கள் தொற்று நோய்கள், பிரசவம் தொடர்பான நிலைமைகள் ஆகியவற்றிலிருந்து தொற்றாத நோய்களுக்கு மாறுகின்றன. பேறுகால வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், மலேரியா போன்ற தொற்று நோய்களிலிருந்து ஏற்படும் இறப்புகள் பெருமளவு குறைதல் ஆகியவற்றில் இது பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வளமான மாநிலங்கள் இந்தத் தொற்றுநோயியல் மாற்றத்தில் மேலும் முன்னேறியுள்ளன; அங்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலான இறப்புகளுக்குத் தொற்றாத நோய்கள் காரணமாகிவிட்டன. ஏழ்மையான மாநிலங்களிலோ மிக அண்மைக் காலத்தில்தான் தொற்றுநோயியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு இன்றும் தொற்று நோய்களே காரணமாக இருக்கின்றன. இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் 20 சதவீதத்திற்கும் குறைவான இறப்புகளுக்கு மட்டுமே தொற்று நோய்கள் காரணமாக உள்ளன. தொற்றாத நோய்கள் இப்போது இந்தியாவின் குறைந்த, அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்கள் இரண்டிலுமே மொத்த இறப்புகளில் பாதிக்கும் மேலாகக் காரணமாகின்றன. ஆனால் தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்பின் அளவு பணக்கார மாநிலங்களில் கணிசமாக அதிகமாக உள்ளது. 6. உயரும் இறப்பு விகிதம் 1950கள் முதல் 2000களின் முற்பகுதிவரை இந்தியா தனது இறப்பு விகிதத்தில் (மக்கள் தொகைக்கு விகிதாசாரமாக ஆண்டுதோறும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை) சீரான வீழ்ச்சியைக் கண்டது. இந்தியாவில் ஆயுட்காலம் காலப்போக்கில் சீராக வளர்ந்துள்ளது. 1970இல் ஆயுட்காலம் 50 வயதுக்குக் குறைவாக இருந்தது. இன்று 70க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த 1970களில், இந்திய ஆண்களின் ஆயுட்காலம் பெண்களைவிட அதிகமாக இருந்தது. 1980களின் முற்பகுதியில் இந்த நிலை தலைகீழாக மாறியது. 2010களின் பிற்பகுதியில் பிறந்த ஒரு பெண் குழந்தை, அதே ஆண்டில் பிறந்த ஒரு ஆண் குழந்தையைவிடக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அதிக காலம் வாழும் என்று எதிர்பார்க்கலாம். குழந்தைகளின் உயிருக்கான ஆபத்துகள் பெரிதும் முறையில் குறைக்கப்பட்டதே இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவதற்கு முக்கியக் காரணம். 2025இல் இந்தியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்தன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் கைக்குழந்தைகளும் குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கும் குழந்தைகளும் இறக்கும் அபாயம் பெருமளவு குறைந்துள்ளது. 1950களில், இந்தியாவில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்; ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இப்போது ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இறப்புகள் இந்தியாவில் ஏற்படும் பத்து இறப்புகளில் ஒன்றுக்கும் குறைவாகவே உள்ளன. குழந்தை இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட இந்தப் பெரிய முன்னேற்றங்களின் விளைவாக, இந்தியாவில் இறப்பின் அபாயம் ஒப்பீட்டளவில் முதியோர் குழுக்களுக்கு மாறிவருகிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் குழந்தை இறப்பு அபாயம் முதிய வயதில் இறக்கும் அபாயத்தைவிட அதிகமாக உள்ளது. பணக்கார மாநிலங்களில், இறப்புக்கான அபாயம் குழந்தைகளைக் காட்டிலும் முதியோரிடத்தில் அதிகமாகியிருக்கிறது. உதாரணமாக, கேரளத்தில், குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) இப்போது ஐந்தாகக் குறைந்துள்ளது. (அதாவது, ஓராண்டில் உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் இறந்துபோகின்றன.) இது வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. கேரளம்தான் இப்போது இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கான இறப்பு அபாயத்தைக் காட்டிலும் ஒரு குழந்தைக்கான இறப்பு அபாயம் குறைவாக இருக்கும் முதல் மாநிலமாகும். பெரும்பாலான வளரும் நாடுகளில் குழந்தைப் பருவத்தினருக்கு இருக்கும் தீவிர அபாயத்தைக் கேரளம் நீக்கிவிட்டது. ஆனால் நாடு முழுவதும் வயதானவர்கள் எண்ணிக்கை உயரும் நிலையில், ஒட்டுமொத்த மக்கள்தொகையின் இறப்பு விகிதங்கள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. 1950களிலிருந்து சீராகக் குறைந்துவந்த இந்தியாவின் மொத்த இறப்பு விகிதம் (Crude Death Rate – CDR) – மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை – கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்தது. 2023க்குள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு CDR திரும்பியது. ஆனால் 2024இலிலிருந்து, இந்தியாவின் CDR உயரும் என்றும், எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விகிதாச்சார அளவில் அல்லாமல் முழுமையான எண்ணிக்கையிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் இறப்புகளின் எண்ணிக்கை 2010களிலிருந்து அதிகரித்துவருகிறது. முடிவும் தரவு எச்சரிக்கைகளும் இந்த ஆறு போக்குகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது நாடு ஒரு சிக்கலான தருணத்தில் இருப்பது தெரிகிறது. இந்திய மக்கள்தொகை முழுமையான எண்ணிக்கையில் இன்னும் வளர்ந்துகொண்டிருந்தாலும், உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு விரைவில் குறையத் தொடங்கும். உலகம் உணர்ந்துகொண்டிருப்பதைவிட வேகமாகக் கருவுறுதல் குறைந்துவருகிறது. இந்தியாவிற்குள்ளும் இந்த மாற்றத்தின் அளவை ஒரு சிலரே புரிந்துகொண்டிருக்கிறார்கள். குழந்தை மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துவருகிறது. மக்கள்தொகையால் கிடைக்கும் பலனுக்கான சாளரம் (உழைக்கும் வயதிலுள்ள மக்கள்தொகையால் கிடைக்கும் பலன்) மூடிக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால் மக்களுக்கு வயதாகும்போது இறப்பு விகிதங்கள் உயரும். இந்தப் போக்குகள் அனைத்தும் இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களின் மாறுபட்ட யதார்த்தங்களால் மேலும் நுணுக்கமான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும், இந்தியக் கல்வித்துறை, ஊடகங்கள் அல்லது அரசியல் ஆகிய களங்களில் நடக்கும் பொது விவாதம் மாறியுள்ள இந்த யதார்த்தங்களுடன் இணைந்து பயணிக்கவில்லை. பிறப்பு விகிதங்கள் குறைவது முக்கியமான விவாதமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், “மக்கள்தொகை வெடிப்பு” தொடர்பான விவாதமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. தெற்கு மாநிலங்கள் பலவற்றைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது: மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகளிலிருந்து மிகவும் மாறுபட்ட பொது சுகாதார முன்னுரிமைகள், வயதான மக்கள்தொகை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசு, சந்தை சார்ந்த தீர்வுகளின் தேவை, உழைக்கும் வயதுள்ள மக்கள்தொகை குறைவதைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் இடம்பெயர்வு குறித்து முன்பே நடந்திருக்க வேண்டிய விவாதம் ஆகியவை முக்கியமானவை. இவை தவிர, பெரும்பாலான மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் தேர்தல் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் தனி. இந்தத் தொடர் மூலம் நாங்கள் முதலில் தரவுகளைப் பொது வெளிக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம். இந்தியாவிற்கான மக்கள்தொகைத் தரவுகள் சில கடுமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளன. இந்தியா 2011க்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தாததால், 2011க்குப் பிந்தைய தரவுகள் இந்தியாவின் பதிவாளர் ஜெனரலால் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்ட கணிப்புகளிலிருந்து வருகின்றன. இந்த மதிப்பீடுகள் அடிப்படை ஆண்டிலிருந்து விலகிச் செல்லச் செல்ல, அவற்றின் நம்பகத்தன்மை குறைந்துபோவதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. நேரடியான தரவுகள் இல்லாததால் இறப்பு பற்றிய தரவுகளும் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இறப்பும் பதிவுசெய்யப்பட்டு, அதன் காரணத்தை ஒரு சுகாதார நிபுணர் உறுதிப்படுத்துவதே இறப்பைக் கணக்கிடுவதற்கு மிகவும் நேரடியான வழி. இந்தியாவைப் போன்ற குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் எல்லா இடங்களிலும் சீரான முறையில் இதைச் செய்வது சாத்தியமில்லை. அனைத்து இறப்புகளும் சிவில் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படுவதில்லை. ஏழ்மையான மாநிலங்களில் இறப்புப் பதிவு விகிதங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளிகளை நிரப்ப, இந்தியாவில் மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System – SRS) உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான பிரதிநிதித்துவம் கொண்ட பெரிய அளவிலான மாதிரிக் கணக்கெடுப்பை நடத்துகிறது. இதில் கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று, முந்தைய ஆண்டில் அந்த வீட்டில் நடந்த இறப்புகள் குறித்து விசாரித்து, தேசிய இறப்பு குறித்த மதிப்பீடுகளை உருவாக்குகிறார்கள். எங்கள் பெரும்பாலான ஆய்வுகள் இந்தத் தரவை நம்பியே உள்ளன. இருப்பினும், இதிலிருந்து கிடைக்கும் இறப்புத் தரவுகளில் அமைப்புரீதியான சிக்கல்களும் உள்ளன. தரவு மூலங்களையும் மூலத் தரவுகளையும் தீவிரமாக அலசி, அதை எங்கள் பகுப்பாய்வில் இணைத்துக்கொண்டு இந்தியாவின் மக்கள்தொகைச் சிக்கல்கள் பற்றிய உரையாடலைக் கணிசமாக முன்னோக்கிக் கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கட்டுரையாளர்: ருக்மிணி எஸ். ‘தரவு இந்தியா’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தமிழில்: டி.ஐ. அரவிந்தன் நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் https://minnambalam.com/indias-population-problems-part-1/
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அப்படியா! தந்தை செல்வாவும் கடைசி காலத்தில் முதுமையால் கஷரப்பட்டே இறந்தார். இறுதியில் 40 நாள் ஆஸ்பத்திரி படுக்கையில் கிடந்தே உயிர்விட்டார். அவருக்கும் உங்கள் தியறி பொருந்துமா? அதை போல கடைசிக்காலத்தில் நோயின் தாக்கத்தால் கஷரப்பட்டு இறந்த பலரை எமது வாழ்வில் நடைமுறையில் காண்கிறோம். அவர்கள் எல்லோருக்கும் உங்கள் தியறி பொருந்துமா அல்லது நீங்கள் செலெக்ற் பண்ணுபவர்களுக்கு மட்டும் பொருந்துமா? யார் யாருக்கு இந்த தியறி பொருந்தும் என்று தீர்மானிப்பதற்கு கடவுளால் உங்களைப் போன்ற ஒரு சிலருக்கு authority வழங்கப்பட்டுள்ளதா? இது உங்களுக்கான கேள்வி மட்டும் அல்ல இப்படி உங்களைப்போல் புசத்தும் எல்லோருக்குமான கேள்வியும் கூட.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அனேகமாக இறப்புவரும் இறுதிநேரத்தில் மனிதர்கள் தாங்கள் புரிந்த தவறுகளை வெளியிட்டு, தங்கள் மனதிற்கென்றாலும் அமைதியைத் தேடுவதை அறிந்துள்ளோம். சோனியா தேடினாரா.? அவருக்கு மனம் என்று ஒன்று உள்ளதா.??🤔
- Today
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
தகுமோ… இது முறையோ! sudumanal கிரீன்லாந்து விவகாரம் image: axious. co 1721 இல் டென்மார்க் இனால் காலனியாக்கப்பட்டு, பின் இணைக்கப்பட்டதுதான் கிரீன்லாந்து தீவு. வரலாற்றுப் போக்கில் டென்மார்க் இத் தீவுக்கு ஒரு சுய ஆட்சிப் பிரதேசம் (Autonomous Territory) என்ற அந்தஸ்தைக் கொடுத்து வைத்திருக்கிறது. அவை இரண்டும் டென்மார்க் இராசதானி (Kingdom of Denmark)என்ற வடிவத்துள் இணைக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்தின் வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, நீதித்துறை என்பன டென்மார்க் இன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. பெருமளவு நிதி உதவியை டென்மார்க் வழங்குகிறது. அதிக இயற்கை கனிம வளங்களைக் கொண்டது இத் தீவு. அத்தோடு மேற்குப் பிராந்தியத்திற்கு மூலோபாய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இதன் காரணமாக ட்றம்ப் கிரீன்லாந்த்து மீது கண் வைத்திருப்பதும் அதை அவர் கையகப்படுத்த உறுதியுடன் இருப்பதும் அழுத்தமாகத் தெரிகிறது. அவரது நிகழ்ச்சி நிரலில் அடுத்தது அதுதானா என்பதும், அத் தீவு போர் மூலம் கைப்பற்றப்படுமா என்பதும் சந்தேகத்துக்கு உரியன. அடுத்தது கிரீன்லாந்துதான் என எழுப்பிவிடப் பட்டிருக்கிற செய்தி ஒரு கவனத் திசைதிருப்பலாகவும் இருக்கலாம். எதிர்பாராமல் ஈரான் மீதோ கொலம்பியா மீதோ தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியமில்லை. ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பின் சாதகமான நிலையை ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான போராட்டம் சிஐஏ க்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கொலம்பியா அரச தலைவர் Gustavo Petro அவர்கள் முன்னாள் M-19 விடுதலை இயக்கப் போராளியாவார். இடதுசாரிய சிந்தனை முறை கொண்டவர். அதனால் ட்றம் க்கு அவர் ஒரு sick man ஆக தெரிகிறார். இதுகுறித்து ட்றம்ப் க்கு மிக காட்டமான முறையில் அவர் பதிலளித்திருக்கிறார். தான் சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு ஆயுதம் ஏந்துவதில்லை என முடிவெடுத்து இருந்ததாகவும், அமெரிக்கா போருக்கு வந்தால் அதன் பிறகு தான் மீண்டும் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார். வெனிசுவேலா தலைவரையும் துணைவியாரையும் கடத்தியது குறித்து ஒரு காட்டமான அரசியல் விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார். “விரும்பினால் வந்து கைது செய்” என ட்றம்ப் க்கு சவால் வேறு விடுத்திருக்கிறார். இது ஓர் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை இல்லாதிருக்கலாம். வாய்ச் சவடால் ஆகவும் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவுடனான போரில் வெற்றி பெறுவதான சவடால் அல்ல அது. தன்னை கைதுசெய்ய முடியாது என்பதான சவடாலுமல்ல. ஒரு போராளியாக இருந்த ஆன்மாவின் குரல் அது, அடங்க மறுக்கும் உணர்வு அது என புரிந்துகொள்ள இடமுண்டு. அதனால் கிரீன்லாந்தையும் விட, ட்றம்ப் கொலம்பியா அல்லது ஈரான் மீது முதலில் கவனத்தைக் குவித்திருக்க சாத்தியம் அதிகம் உள்ளது. ட்றம்பின் இந்த ஒரு வருட ஆட்சியில் அவரது அணுகுமுறை இப்படி தடாலடியாகவேதான் நிகழ்த்தப்படுகிறது. கிரீன்லாந்து மீது ட்றம்புக்கு இருக்கிற கவனத்தை இது குறைத்து மதிப்பிடுவதாகாது. ஆனால் பலரும் எதிர்பார்ப்பதுபோல் கிரீன்லாந்தை ட்றம்ப் விரைந்து கைப்பற்றுவாரா என்பதுதான் கேள்வி. ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருடத்தில் அவர் ஆறு நாடுகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார். அதை போர் என்ற நிலைக்குள் நகர்த்தாமல் அச்சமூட்டுகிற வேலையோடும், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடும் மட்டும் நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஈரான், ஈராக், சிரியா, நைஜீரியா, யேமன், இப்போ வெனிசுவேலா என குண்டுவீசி திரும்பியிருக்கிறார். வெனிசுவேலா மீது எல்லை மீறி நடந்திருக்கிறார். ஒரு நாட்டின் அதிபரை இன்னொரு வல்லாதிக்க நாட்டின் தலைவர் நாடு புகுந்து கடத்திக் கொண்டு வரலாம் என்ற செயலும், அதில் அரசியல் நியாயம் காண்பதும், ஆதரிப்பதும் மிக ஆபத்தானது. இதை மற்றைய வல்லாதிக்க நாடுகளும் கடைப்பிடித்தால் இந்த உலகம் என்னவாகும். இனி, வெனிசுவேலா மீது அவர் எடுக்கப்போகும் அடுத்த நடவடிக்கை எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். வெனிசுவேலா மண்ணில் அவர் இராணுவ ஆக்கிரமிப்பை அல்லது நிலைகொள்ளலை மேற்கொள்வதன் மூலம் அவர் சேற்றுள் கால்வைக்கப் போகிறாரா இல்லையா என்பது தெரிய வரும். “ஆக்ரிக் பகுதியிலுள்ள கிரீன்லாந்துக்கு குறுக்குமறுக்கான ரசியாவும் சீனாவும் ஓடித்திரிகிறது. அது மேற்கு பிராந்தியத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது. அவர்களை டென்மார்க் இனால் கையாள முடியாது. நேட்டோவின் அங்கமாக இருக்கிற எம்மால்தான் கையாள முடியும்” என்று நியாயம் கற்பிக்கிறார். “We need Greenland” என ஒரே போடாய்ப் போட்டிருக்கிறார். ஐரோப்பாவோ ஒரு நேட்டோ நாட்டை இன்னொரு நேட்டோ நாடு தாக்குவது “தகுமோ… இது முறையோ” என்ற றேஞ்ச் இல் வார்த்தைகளை அளந்து பேசுகிறார்கள். “அமெரிக்காவுக்கும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கும் உறவு இருக்கிறது. அதன் அடிப்படையில் கிரீன்லாந்தில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. கிரீன்லாந்தின் இறைமையை அமெரிக்கா மீறுவது சர்வதே சட்டவிதிகளுக்கு முரணானது” என்கிறார், Mette Frederiksen அவர்கள். அவரின் உயர்ந்தபட்ச மென்மையான எச்சரிக்கை “அது நடந்தால் அதுவே நேட்டோவின் முடிவாக இருக்கும்” என்பதுதான். அதற்கு அப்பால் போகவில்லை. அவர் வெனிசுவேலா மீதான ட்றம்ப் இன் செயலையும் கண்டிக்கவோ, ஆதாரம் காட்டிப் பேசவோ இல்லை. நேட்டோவின் 5வது சரத்துப்படி நேட்டோவிலுள்ள ஒரு நாட்டை தாக்கினால் அது நேட்டோவின் எல்லா நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குலாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். நேட்டேவுக்குள் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் இராணுவ தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தால், எப்படி அது கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து இந்த தலைவர்கள் எவரும் பேசிக் கேட்டதில்லை. பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஸ்பெயின், போலந்து, இத்தாலி மற்றும் டென்மார்க் தலைவர்கள் ஒன்றுகூடி விட்டிருக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் இந்த முயற்சியை நேரடியாகக் கறாராகக் கண்டிக்காமல் வார்த்தைகளை கவனமாக வெளியிட்டிருக்கின்றனர். “கிரீன்லாந்து மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும், மற்றவர்கள் அல்ல” என்கிறது அந்த அறிக்கை. அத்தோடு சர்வதேச சட்டவிதிகளை சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் இறைமை பற்றி பேசுவதோடு அந்த அறிக்கை தீர்ந்து போகிறது. இதே சர்வதேச சட்டத்தை மதிக்காமல், ஐநாவின் பாதுகாப்புச் சபை அனுமதி பெறாமல், யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அமெரிக்கா தலைமையில்; நேட்டோ ஜக்கற் அணிந்து போருக்குப் போனபோது இந்த அறம் எங்கே ஒளிந்திருந்தது. இப்போதுகூட பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்களுக்கு வெனிசுவேலா மீதான இதே சர்வதேச சட்டவிதிகள், இறைமை என்ற அளவுகோல்கள் “செல்லாது செல்லாது” என்றே இருக்கிறது. டென்மார்க் உட்பட்ட ஐரோப்பிய தலைவர்கள் கிரீன்லாந்துப் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்க்க ட்றம்பை சந்தித்து பேச இடமுண்டு. அதற்குமுன் அரச செயலர் மார்க்கோ ரூபியோ இவர்களைத் தேடி வரவிருக்கிறார். ட்றம்ப் கொம்பனி மூன்று தேர்வுகளை முன்வைத்திருக்கிறது. முதலாவது தேர்வு கிரீன்லாந்தை வாங்குவது. ஆனால் கிரீன்லாந்து மக்கள்” எமது நிலம் விற்பனைக்கு இல்லை” என திடமாகக் கூறுகிறார்கள். டென்மார்க்கும் அதை பலமுறை கூறிவருகிறது. இரண்டாவது தேர்வு, ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தை (COFA-compact of free association) செய்வது ஆகும். பசிபிக் பிராந்தியத்திலுள்ள Micronesia, Palau, Marshall Islands ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இம்மாதிரியான ஒப்பந்தத்தை செய்து ஆளுகைக்குள் வைத்திருக்கிறது. ஆனால் அவை முழு இறைமையுள்ள நாடுகள் என அமெரிக்கா சொல்கிறது. பொருளாதார உதவியையும் பாதுகாப்பையும் அமெரிக்கா இந் நாடுகளுக்கு வழங்குகிறது. இதேபோன்றதொரு தீர்வுக்குள் கிரீன்லாந்தை இட்டுச் செல்ல ட்றம்ப் முயற்சிக்கலாம். இந்த இரு தேர்வுகளும் சரிவராத பட்சத்தில் அமெரிக்கா போரை அடுத்த தேர்வாக நாடலாம். அது போராக இருக்குமா என்பதுதான் கேள்வி. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 1946 இல் அமெரிக்கா கிரீன்லாந்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்தது. இப்போதும் படைத்தளத்தை கிரீன்லாந்தில் அமெரிக்கா வைத்திருக்கிறது. 836000 சதுர மைல்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய இத் தீவின் சனத்தொகை வெறும் 57000 மட்டுமே. அதற்கென தனித்த இராணுவம் கிடையாது. டென்மார்க் இராணுவம்தான் அங்கும் உள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பை ஐரோப்பா தனித்து நின்று முழுமையாக உத்தரவாதப்படுத்தவில்லை. நேட்டோ என்ற அமைப்பின் கீழ் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதையும் மிகத் திருத்தமாகச் சொன்னால் நேட்டோவிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தேசிய ரீதியிலான பாதுகாப்பை மேவி, தமது வளத்தை நேட்டோவுக்குள் தாரைவார்க்கிறது என்பதே பொருத்தமானது. இந் நாடுகள் நேட்டோவின் பாதுகாப்பு நிதியை தமது தேசிய வருமானத்தின் (GDP) ஐந்து வீதமளவில் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆயுத உற்பத்தியைக்கூட தன்னிறைவாக உருவாக்காமால் அமெரிக்காவிடம் பெருமளவு ஆயுதத்தை வாங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப ரீதியிலும், உற்பத்தித் திறனிலும், அணுவாயுத வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இந்த பலவீனங்கள் நேட்டோவின் சாரதியாக அமெரிக்கா குந்தியிருப்பதற்கான ஒரு பகுதிக் காரணங்கள் ஆகும். 2024 இல் நேட்டோவுக்கான 1.4 திரில்லியன் டொலர் பாதுகாப்புச் செலவில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 66 சதவீதமாக இருக்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட வேவு பார்க்கும் கருவிகள், விமானங்கள், உளவுப்படை தகவல் பரிமாறல்கள், ஆயுதங்கள் எல்லாவற்றுக்கும் தமது உற்பத்திகளை விடவும் பெருமளவில் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்கள். ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கை கூட ஐரோப்பாவை மையமாக வைத்து சுயாதீனமாக வரையப்பட்டிருக்கவில்லை என்பது குறித்து அரசியல் அறிஞர்கள் நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார்கள். அமெரிக்காவின் ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா நேட்டோவுக்குள் செயற்படுகிறது. பாதுகாப்பில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவிடம் பெருமளவு தங்கியிருக்கிறது. எனவே ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து திடீரென நாணயக் கயிற்றைக் கழற்றி எறிந்துவிட்டு சுதந்திரமாக ஓடமுடியாது. அதை செய்வதாக இருந்தாலும் அதற்கொரு கால அவகாசம் தேவை. அதைத்தான் மக்ரோன் (இப்போ ஜேர்மன் சான்சலர் மேர்ற்ஸ் உம்) வலியுறுத்தி வருகிறார். ஐரோப்பாவுக்கான இராணுவமும் சுயமான பாதுகாப்பு கட்டமைப்பும் தேவை என்கின்றனர். ஐரோப்பாவில் நின்று இதை உறுதியாகச் சொல்லும் மக்ரோன் ட்றம்ப் முன்னால் -வளைந்து நெளியும் உடல் மொழியைத் தாண்டி- நிமிர்ந்து நின்று சொல்ல முடியாதவராக இருக்கிறார். ஆக அமெரிக்காவுக்கு ஐரோப்பா தேவைப்படுவதை விட, ஐரோப்பாவுக்கு அமெரிக்கா வேண்டும். அமெரிக்கா -நேட்டோவுக்கு வெளியில்- சுயாதீனமாக 80 நாடுகளில் 750 க்கு மேற்பட்ட படைத்தளங்களை கொண்ட வலிமையான நாடு. எனவே அமெரிக்காவுக்கும் (மிகுதி நேட்டோ நாடுகளான) ஐரோப்பாவுக்கும் போர் வரும் என ஒரு ஜனரஞ்சகக் கனவை காணலாம். அதைத் தாண்டி எதுவும் நடைபெற சாத்தியமில்லை. image:npr. org கிரீன்லாந்தின் மீதான ஆசை ட்றம்ப் இலிருந்து தொடங்கியதல்ல. அது 19ம் நூற்றாண்டில் தொடங்கியது. 1867 இல் அமெரிக்கா ரசியாவிடமிருந்து அலாஸ்காவை பணம் கொடுத்து வாங்கியபோதே, டென்மார்க் இடமிருந்து கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை அமெரிக்க அரச செயலர் William H. Seward என்பவர் முன்வைத்திருந்தார். சரிவரவில்லை. பிறகு, 1910 இல் டென்மார்க்கின் அமெரிக்க தூதர் Maurice Francis Egan இன்னொரு திட்டத்தை முன்வைத்தார். அமெரிக்கா கைப்பற்றி வைத்திருந்த பிலிப்பைன்ஸ் இன் Mindanao தீவை கொடுத்து டென்மார்க் இன் காலனியான கரீபியன் தீவுகளையும் (Danish Vergin Islands) கிரீன்லாந்தையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளலாம் என்பது அவரது ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது. அதுவும் சரிவரவில்லை. இருந்தபோதும் Danish Vergin Islands இனை அமெரிக்கா 1917 இல் டென்மார்க்கிடமிருந்து -25 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்தைக் கொடுத்து- வாங்கிக் கொண்டது. 1946 இல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி Harry Truman கிரீன்லாந்துக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கட்டிகளை பேரமாக வைத்து விலைபேசினார். டென்மார்க் ஏற்கவில்லை. இவ்வாறு காலனியாதிக்க பேரங்களினூடு வளர்ந்த மனக்கட்டமைப்போடு நவீன காலனியவாதி ட்றம்ப் வெளிக்கிளம்பியிருக்கிறார். மேற்குலகம் முன்வைக்கும் எல்லா ஜனநாயகக் கட்டமைப்புகளும் நடைமுறைகளும் “காலனிய மனக்கட்டமைப்பு” என்ற உளவியல் நோயைத் தாண்டி இருப்பதில்லை. அது தமது நாடுகளின் இறைமையைப் பேணும் வலுவான ஐனநாயகக் கட்டமைப்பைக் கொண்டதாகவும், அதேநேரம் மற்றைய (தாம் தவிர்ந்த) நாடுகளின் இறைமையை, குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீனமெரிக்க நாடுகளின் இறைமையை மறுப்பதாகவும், வளச் சுரண்டலை இயல்பாக்கம் செய்ததாகவும் இரட்டைத்தன்மை வாய்ந்த அளவுகோலைக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் இந்த சாகா வரம் பெற்ற காலனிய மனக் கட்டமைப்புத்தான் (colonial mindset). அதனால் மேற்குலக ஜனநாயகம் என்பது ஒரு பண்பாக வளர்ச்சியடையவில்லை. நிர்வாகக் கட்டமைப்பாக குறுக்கப்பட்டுவிட்டது. மற்றைய பண்பாடுகளை, தனித்துவங்களை, அதனூடான நாகரிக வளர்ச்சியை, அரச கட்டமைப்பின் வரலாற்று ரீதியான வளர்ச்சியை, அதன் வடிவங்களை, சுயாதீனங்களை, முழு இறைமையை ஏற்கவில்லை. தமது நியமங்களுக்கு (norms) வெளியேயான மனிதர்களை அது சக மனிதராக முழுமையாக ஏற்கவில்லை. தம் அளவுக்கு நாகரிகம் அடையாதவர்கள் என்றே கணிக்கிறது. ஐரோப்பிய மையவாத சிந்தனைக்குள்ளும் (euro-centric mentality), அதன் அளவுகோலுக்குள் மட்டும் நின்று, மற்றைய நாடுகளுக்கு வகுப்பு எடுப்பதாகவும், கருத்தியலை உருவாக்குவதாகவும், கதையாடல்களை கட்டமைப்பதாகவும், அதையே எமக்கு ஊட்டுவதாகவும், உலகப் பொதுமையாக இயல்பாக்கம் செய்வதாகவும் தன் பணி செய்கிறது. அதுவே “காலனிய மனக்கட்டமைப்பு” ஆகும். வெனிசுவேலா மீது அமெரிக்கா அத்துமீறியதற்கும், அந்த வளங்களை கொள்ளையடிக்க முனைவதற்கும், அந்த நாட்டை நிர்வகிக்குமளவுக்கு செல்வதற்கும், மிரட்டுவதற்கும் இதே காலனிய மனக்கட்டமைப்புத்தான் அவர்களது மூளைக்குள் ஓடித் திரிகிறது. இந்த இறைமை மீறலையும் அடாத்தையும் கண்டித்து பேச தயக்கம் காட்டுகிற ஐரோப்பிய மனநிலை இப்போதும் இதே கட்டமைப்புச் சேற்றுக்குள்தான் உழல்கிறது. உதாரணமாக ரசியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுந்த குரல்கள் அமெரிக்காவின் வெனிசுவேலா மீதான அத்துமீறலின் பக்கம் போகவே இல்லை. கமாஸின் ஒக்ரோபர் தாக்குதலில் இறந்த 1200 இஸ்ரேலிய மக்களை பேசுமளவுக்கு காஸா இனப்படுகொலை பற்றி அது பேசுவதில்லை. ‘ஆசியாவின் ஐரோப்பியர்கள்’ என்ற புனைவுவாத அரவணைப்போடு, இஸ்ரேலிய சியோனிஸ்டுகளை கண்டிப்பதுமில்லை. மாறாக ஆதரவு கொடுக்கிறது. கிரீன்லாந்து விடயத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இருக்கும் இந்த சமாந்தரமான மனக்கட்டமைப்பானது தமக்குள் போரைவிட சமரசத்தையே முன்வைக்கும் சாத்தியம்தான் அதிகம். அந்த பேரத்தில் டென்மார்க் காலனியவாதிகள் அபகரித்த கிரீன்லாந்து தீவினது மக்கள் பகடைக் காய்களாக மாறினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை! ravindran.pa 08012026 https://sudumanal.com/2026/01/08/தகுமோ-இது-முறையோ/#more-7568
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
ஓம் என்ன செய்வது ஈழ தமிழர்கள் இளமையில் அக்களிப்போடும் திமிரோடும் விதைத்ததை கண்ணீரோடு இலங்கையில் அறுவடை செய்தார்கள் அவர்களில் வெளிநாடு வந்தவர்கள் 45 வயதில் கான்சர் 50 வயதில் ஹாட் அற்றாக் இறப்பு என்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள் 🙄
-
காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு.
காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு. சனி, 10 ஜனவரி 2026 06:30 AM காரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் சனிக்கிழமை மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் 2018ம் ஆண்டு காரைநகர் சின்னாலடி வீதியை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2022 டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் த. செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான 10ஆம் திகதி ஆகிய இன்று காலை 10.30 மணிக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணன் கோவிந்தராஜ், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது https://jaffnazone.com/news/54120
-
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!
கனடாவில் கனரக வாகனம் மோதி - இலங்கை பெண் உயிரிழப்பு! ஜனவரி 09, 2026 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான திருமதி.ராஜகாந் அனுஷா (வயது-35) உயிரிழந்துள்ளார். இன்று(09.01.2026) காலை Etobicoke Dixon வீதியில் வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://www.battinatham.com/2026/01/blog-post_634.html
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
மனதை விட்டு மறையாத ஓவியம் ரமணி நினைவாஞ்சலி ------------------------- 1972 ஆம் ஆண்டு என ஞாபகம் எழுத்தாளர் டானியலின் பஞ்சமர் நாவல் வெளிவருகிறது. பலரை ஒரு உலுப்பு உலுப்பிவிட்ட நாவல் அது’ பேசாமல் இருந்த ஒருசாரார் அதில் பேசினர், அந்த நூல் வெளியீட்டுக்கு டானியல் என்னை யாழ்ப்பாணம் அழைத்திருந்தார், அப்போது நான் கொழும்பில் வசித்துக் கொண்டிருந்தேன், அப்படிச்சென்றபோது டானியலின் ஸ்ரார் கரேஜில் நான் சந்தித்த ஒரு இளஞைர்தான் புதுவை இரத்தினதுரை, திருநெல்வேலியில் அதன் வெளியீட்டை ஒழுங்கு செய்தவர் புதுவை இரத்தினதுரை டானியலின் அபிமானி அப்போதுதான் அவரது காலம் சிவக்கிறது எனும் கவிதை நூல் வந்த காலம் என நினைக்கிறேன் பஞ்சமரின் அட்டைப்படம் வித்தியாசமாக இருந்தது பஞ்சமர் ஒருவரின் உடல் மொழி வெளிப்பட அது வரையப்ட்டிருந்த்து அந்த உடலினுள் அடக்க ஒடுக்கமும் காணப்பட்டது அதற்குள்ளால் மீறி எழுந்த அடக்குமுறைக்கு எதிரான ஒரு ஓர்மமும் காணப்பட்டது சமூக உணர்வுள்ள ஓர் ஓவியக் கலைஞனின் பார்வை அது அந்தப் அட்டைப்பத்தை வரைந்தவர் ஓவியர் ரமணி எனும் இளம் ஓவியர் என அறிந்தேன் ரமணியை நான் அறிந்த கதை இது ரமணி என் மதிப்புக்குரிய ஒருவர் ஆனார் ரமணியின் தொடர்பும் ஏற்படுகிறது ஏற்படக் காலாக இருந்தவர் டானியல் 1976 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணம் வருகிறேன் கொழும்பில் கல்வி டிப்ளமோ கோர்ஸ் முடித்த கையோடு எனக்கு யாழ்ப்பாண த்திற்கு மாறுதல் கிடைக்கிறது மனைவி ஏற்கனவே மகனோடு அங்கு சென்று விட்டாள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளராக நான் ஆசிரியராக மாற்றலாகி யாழ்ப் பாணக் கல்வி அலுவ லகம் செல்கிறேன் நகரில் உள்ள பாடசாலைகள் எல்லாம் பட்டதாரிகள் நிரம்பி வழிகிறார்கள் எந்த பாடசாலையிலும் இடம் கிடைக்க வில்லை ஒரே ஒரு இடம் இருக்கிறது ஒஸ்மானியா கல்லூரி அங்கு செல்லுங்கள் என்று நியமனக் கடிதம் தரப்படுகிறது ஒஸ்மானியாக் கல்லூரி செல்கிறேன் அதிபர் ஹமீம் அதிபர் அறையில் நியமனக் கடிதத்தைக் கொடுத்து உத்தியோகம் ஏற்கும் சடங்குகளை முடித்த பின்னர் ஆசிரியர் அறைக்குச் செல்கின்றேன் பலர் இருக்கிறார்கள் பேராயிரவர் பெயர் , ஞாபகம் வருகிறது. அவர்களோடு பத்மநாதன் , கவிதாயினி சிவரமணியின் அப்பா சிவான ந்தன் இன்னும் பல இஸ்லாமிய அசிரிய ர்கள் தமிழ் ஆசிரியரக்ள் தெரிந்த முகம் ஒன்றும் தென்படுகிறது ஏற்கனவே நான் அறிந்திருந்த ரமணி அவர்கள் வாருங்கள் வாருங்கள் என்று வாஞ்சையோடு வரவேற்கிறார் அங்கே அவர் ஓவிய ஆசிரியராக இருக்கிறார் நான்கு வருடங்கள் அவருடன் அங்கு பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கிறது ஓரளவு முன்னரேயே அறிந்திருந்த ரமணி இப்போது மிக நெருக்கமாகி விடுகிறார் நாலு வருடங்கள் தினமும் அருகே இருந்து உறவாடி உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அந்தக் காலங்கள் ஞாபகம் வருகின்றன யாழ்ப்பாண வாழ்வில் மிக அருமையான காலங்கள் ஓஸ்மானியாக் கல்லுரியில் கற்பித்த அந்தக் காலஙக்ள் அக்காலத்தில் சிறுகதை நாவல் எழுதுவோர் கைலாசபதியிடம் ஒரு முன்னுரை வாங்குவதைப் பெறுமதியாகக் கருதினார்கள் . அதேபோல பல எழுத்தாளர்கள் ரமணி யிடம் ஒரு அட்டைப்படம் வாங்குவதையும் பெறுமதியாக க் கருதினார்கள் அவர் டானியல், செங்கை ஆழியான், தெணியான், போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கெல்லாம் படம் வரைந்தவர் அந்த அட்டைப் படங்களில் ல் வரும் கோடுகள் ரமணியின் அடையாளம். அவர் அட்டையில் வரையும் உருவங்களும் அவற்றின் பரிமாணங்களும் அவர் வரையும் நடனமிடும் எழுத்துக்களும் இந்த ஓவியம் ரமணியின் ஓவியம் என்பதை உடனே காட்டி விடும் மல்லிகை ஜீவாவின் ஆஸ்தான ஓவியர் போல அவர் அன்று செய்ற்பட்ட தாக ஞாபகம் அந்த காலத்திலேயே தான் நான் சங்காரம் நாடகம் போடுகிறேன் அந்த நாடகத்திலே ஒரு கட்டம் வருகிறது மனிதர் விலங்கோடு வேட்டையாடும் கட்டம் மிருக ங்களுக் க்கான வேட முகங்களைத் தயாரித்து எனக்கு தந்தவர் ரமணி அவர்கள் அந்த நாடகத்துக்கான உடை அமைப்பை நான் திட்டமிட்ட போது அவற்றை கோடுகளில்ல் வரைந்து காட்டி அதற்கான ஆலோசனைகளை வழங்கியவர் ரமணி அவர் வரைந்த ஸ்கெட்சுகளை நான் அரசையாவிடம் காட்ட அதனை அடிப்படையாக வைத்து சங்காரம் நாடகத்தில் வரும் இன மத சாதி வர்க்க அரக்ரக்ளுக்கான உடை தயாரித்தவர் அரசையா சங்காரம் நாடக் உருவாக்கலில் ரமணிக்கும் மிகுந்த பங்குண்டு அந்த நாடகத்தில் நான் தொழிலாளர் தலைவன் பாத்திரம் ஏற்று ஆடிப்பாடி நடித்தேன் அந்த நாடகம் பார்க்க வந்த அவர் என்னை அணைத்துக்கொண்டதும் பின்னர் நாம் அதுபற்றி ஆசிரிய அறையில் உரையாடியமையும் ஞாபகம் வ்ருகிற து எவ்வளவோ பேசுவோம் எல்லாம் பேசுவோம் அரசியல் இலக்கியம் ஓவியம் நாடகம் சமூகம் என அவ்வுரையாடல் விரியும் அவ்ர் ஒரு பரந்த வாசகரும் கூட மிக மிக மென்மையாக பேசுவர் அவர் முகமும் பேசும் பின்னால் நான் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆகிய பின்னரும் அந்த நட்பு தொடர்ந்தது அவர் உரையாடும் பாணி வித்தியாசமானது அது அவருக்கே உரியது அவர் வரையும் சித்திரங்களில் அவர் தெரிவார் அது அவருக்கான கோடுகளும் கோலங்களும் ரமணி ஸ்டைல் அதுதான் என்பது அது காட்டிக்கொடு காட்டிவிடும் பின்னால் அவர் அவர் பல ஓவியங்கள் வரைந்தார் புகழ் பெற்ற சிலைகளைச் செய்தார் புகழ் பெற்றவ்ரானார் அந்தச் சிலைகளில் அவர் வாழ்கிறார் இருவரும் 80 வயது தாண்டி விட்டோம் நான் இறக்கு முன்னர் சிலரை கண்டு பேச வேண்டும் என்று ஆவல் அடிக்கடி எனக்கு எழுவதுண்டு அதில் முக்கியமானவராக இருந்தவர் ரமணி அவர்கள் பேசாமலேயே சென்று விட்டார் இப்படிக் காணமலேயே பேசாமலேயே சென்று விடுவோர் அதிகம் நேற்றுத்தான் மதிப்பிற்குரிய பெரியவர் பஞ்சலிங்கத்தைப் பற்றி ஒரு பதிவிட்டேன் இன்று அன்பிற்குரிய ரமணி பற்ற எழுத வேண்டியது ஆயிற்று எழுத இன்னும் நான் இருந்துகொண்டிருக்கிறேன் இது துயரா மகிழ்ச்சியா என யோசிக்கிறேன் துயரமும் சோகமும் மகிழ்வும் கலந்த ஒரு மனோநிலையில் நண்பரை நினைக்கிறேன் நண்பரே சென்று வருக உங்கள் நினைவு நெஞ்சில் அழியாது நிலைத்து நிற்கும் அவர் அட்டை ஓவியங்கள் சிலவற்றை நண்பர் முகநூலில் பதிந்திருந்தார் அவருக்கு எனது நன்றிகள் -பேராசிரியர் சி. மௌனகுரு
-
கதைப்படங்கள்
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்! 10 Jan, 2026 | 02:05 PM கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமர் என்கிற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கிற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றபோதிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://web.facebook.com/profile.php?id=61567246753629 https://www.virakesari.lk/article/235661
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
என்ன செய்வது? இளமையில் அக்களிப்போடும் திமிரோடும் விதைப்பதை முதுமையில் கண்ணீரோடுதான் அறுவடை செய்யவேண்டியிருக்கிறது. "ஏழை அழுத கண்ணீர் ஏழுதலைமுறைக்கும்." என்பார்கள். "ஏழை விட்ட கண்ணீர் கூரிய வாளை ஒத்தது." என்றும் சொல்வார்கள். "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்."
-
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
“அப்பன் குதிருக்குள் இல்லை” அத்தியடிக் குத்தியனும் குற்றவாளி இல்லை.🧐
-
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில்
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில் மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது. நேற்றைய (09) நிலவரப்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் நால்வர் மயக்கமடைந்தும், 04 பேர் வாந்தி எடுத்த நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நான்காம் ஆண்டில் (2019/2020 கல்வியாண்டு) பயிலும் மாணவர்கள், தமக்குக் கற்பிக்கும் விரிவுரையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குறித்த விரிவுரையாளர் முறையாக வகுப்புகளை நடத்துவதில்லை என்றும், மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், சில மாணவர்களின் உடலமைப்பைக் கேலி செய்து அவமானப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், முறையான காரணமின்றி விரிவுரை நேரங்களில் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கடந்த 2025 மார்ச் 4ஆம் திகதி, நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடியிடம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக முறையிட்டனர். இதற்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுத் தருவதாகப் பணிப்பாளர் உறுதியளித்த போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, 2025 ஓகஸ்ட் 12ஆம் திகதி மீண்டும் கடிதம் மூலமாகவும் நேடியாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முயற்சி செய்தும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த பாடத்திற்கான பரீட்சகராக அந்த விரிவுரையாளரை நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை (07) முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு பகலாக கடும் மழை மற்றும் குளிர்காற்றுக்கு மத்தியில் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய மாணவர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதியாக உள்ளனர். https://adaderanatamil.lk/news/cmk7p3rpo03qqo29npq6qq4wu
-
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது 2026 ஜனவரி 09 , பி.ப. 09:00 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தப்பட்ட-பயங்கரவாத-பெயர்-பட்டியல்-வெளியானது/175-370814
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
ஈழத்தின் ஓவிய சகாப்தம் ஒன்று ஓய்வு பெறுகிறது! oசிவகுமாரன் முதல் சிவசிதம்பரம் வரை தமிழர் அரசியல் வாழ்வில் தம் கலையால் இணைந்த கலைஞர். oதாம் படைத்த படைப்புகள் தம் கண் முன்னே அழிக்கப்பட்டதைக் கண்ட ஒரு கலைஞர். oதமது பெயருக்குள்ளேயே நவீனத்தைப் புகுத்திய கலைஞர். -------------------------------------------------------------------------- அறிமுகம்: சின்ன வயதிலிருந்தே நான் 'ரமணி'யின் இரசிகன். அப்பா கொண்டு வரும் சிரித்திரன் இதழ்களிற் தான் அந்த 'ரமணி' யைக் கண்டேன். படங்களின் கீழே 'ரமணி'அல்லது ' RAMANI' என்று எழுதப்பட்டிருக்கும் பெயரைத்தான் குறிப்பிடுகிறேன். அம்புலிமாமா வில் வரும் சித்ரா ( Chithra) சங்கர் ( Sankar) தினபதி- வீகே, தினகரன் மூர்த்தி போன்றவர்களின் ஓவியங்களை விட ரமணியின் ஓவியத்தில் எம்மைக் கவர்ந்த ஏதோ ஒன்று அப்போதிருந்தது. பாடசாலை நாட்களில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பெற்ற மாணவர் சஞ்சிகையான 'வளர்மதி' யில் அவர் வரைந்த ஓவியங்கள் எம்மை ஏனோ கவர்ந்தவை. துப்பறியும் தொடர் ஒன்றுக்கு வரைந்திருந்தார். பிற்காலத்தில் க.பொ.த உயர்தர மாணவர் பௌதிகம் என்ற கருணாகரரின் புத்தகத்திலும் அதன் அட்டைப்படத்தில் வந்தெமைக் கவர்ந்தார். இலங்கைத் தீவு முழுதும் பெயர் பெற்ற நூல் அது. பின்னர் அவரை 'ரமணி மாஸ்டராக' நேரில் சந்தித்தபோது இதனைச் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் நான் புதுமையாக ஏதும் செய்ய வேண்டும்; யாரையும் பிரதி பண்ணக் கூடாது என்று நினைத்து நினைத்து என் கைகள் அப்படியே உணரத் தொடங்கிவிட்டன...' பெயரிலும் நவீனம்: அவரது பெயரிலும் அந்த நவீனத்தைப் படைத்தார். பொதுவாக சிவசுப்பிரமணியம் சிவநாதன், சிவகுமார், சிவராஜா போன்ற பெயருடையவர்களை நாம் 'சிவா' என்றே அழைப்பது வழக்கம். ஆனால், நானறிந்த வரையில், சிவசுப்பி[ரமணி]யம் என்ற தமது பெயரில் உள்ள [ரமணி] யை எடுத்து, 'ரமணி' என்று மட்டும்- தமது ஓவியங்களின் கீழே இட்டு வந்தவர் ரமணி மாஸ்டர். அது பற்றியும் எனது முதற் சந்திப்பிற் கேட்டபோது ' அதுவும் ஒரு புதுமைதான்; கொழும்பில் அழகியற் கல்லூரியிற் படிக்கும் போது வெளியில் நாங்கள் வெளிப்புற, வெளிக்களச் சுற்றுலா போகும் போது 'ரமணி' என்று ஒவ்வொருவரும் கூப்பிடும் போது அறிமுகமில்லாதவர்கள் முதலில் 'சிங்களவர்' என்றுதான் உணர்ந்தனர் என்று சுவையாகச் சொன்னார். ரமணியின் ரசிகன் நான்:- 'நீங்கள் வரையும் பாத்திரங்கள் உங்களைப் போன்றே அடர்ந்த முடியுடன் மேவிச் சீவியிருப்பர் என்று நான் சொல்ல..' என் படங்களை உற்று இரசித்திருக்கிறீர்கள் ' என்று சொன்ன அவர், அப்படி வேறு பலரும் குறிப்பிட்ட தாகவும் அது ஒரு கலைஞர் உணர்ந்து ஊறிப் படைக்கும் போது அப்படி வரலாம் என்று மூத்த கலை உளவியலாளர் ஒருவர் சொன்ன தாகவும்- குறிப்பிட்டார். நான் பண்டாரவளையிலிருந்து கரவெட்டி வரை அவரது ஓவியங்கள் வந்த பக்கங்களைச் சேமித்த ஒருவன். அதனால் அவர் எனக்கு ஒரு வேலை தந்தார். அதனைப் பிறகு வேறு ஒரு தருணத்திற் தருவேன். தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழர் வரலாற்றில் இணைந்த பல நினைவுச் சின்னங்களையும் அடையாளங்களும் தலையங்கங்களையும் வரைந்தவரும் வடித்தவரும் எழுதியவருமான அவரது ஓவியங்களின் கீழுள்ள ரமணி என்பதும் RAMANI என்பதும் என்றும் எம்மில் நிற்கும் நினைவுச் சின்னங்களாகும். ரூபவாஹினியில் ரமணி:- எண்பதுகளில் நான் ரூபவாஹினியிற் பணியாற்றிய காலத்தில் 'டெலிதுட' என்ற ஓவிய நிகழ்ச்சித் தொடரின் தயாரிப்பாளரான காமினி அபேகோனுக்கும் அவரது சில நிகழ்ச்சிகளில் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பை நான் பெற்றேன். அப்போது அவர் - காமினி- தெற்கின் பல ஓவியர்களை நேரிற் கண்டு ஒளிப்பதிவு செய்யும் அந்த நிகழ்ச்சியை இயக்கினார். அதனால் பல ஓவியர்களைச் சந்திக்கும்,ஊடாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அவர்களில் சிலருக்கு ரமணி யைத் தெரிந்திருந்தது. அவர்கள் நுண்கலைக் கல்லூரியில் அவருடனும் அவரது கற்கைக் காலத்திலும் கற்றதனால் அந்த அறிமுகமிருந்தது. சர்வதேசக் கண்காட்சிகளில் பங்கேற்ற பிரபல ஓவியர் விமலசார ரமணி பற்றிக் குறிப்பிடும்போது - ' ரமணி ஒரு சிறந்த ஓவியர். நவீனத்துவம் விரைவு என்பன அவரிடமிருந்தவை. அபாரமான கலைஞன். ஆனால்.. commercial artist ஆகிவிட்டார். அவரிடம் நிறைய ஆற்றல் உண்டு.' என்றார். ' நல்ல சிற்பி ...ஆனால் அவர் வர்த்தக மயமான ஓவியராகிவிட்டார்' என்றும் ஒருவர் சொன்ன நினைவு. ஒருவர் சொன்னதல்ல இரண்டொருவர் சொன்ன விமர்சனம் அது. அவர்களும் இவருடன் ஸ்ரான்லி அபேசிங்க, கருணாரட்ன போன்ற தெற்கின் மூத்த ஓவியர்களிடம் பயின்றவர்கள்; ஓவிய உலகில் புகழ் மிக்கவர்கள். அவர்கள் அவரை 'வர்த்தக மயத்துக்குள் உள்ளான' ஒருவர் என்று கருதியது- அவர்கள் அன்று கண்ட ரமணியையே. அவர்களின் அளவுப் பரிமாணத்தில் நியாயமிருக்கலாம். அது எழுபதுகளிலான கணிப்பு. காரணம், ரமணி மாஸ்டர் ஜெர்மனிக்குப் போகும் வரையில் அட்டைப் படங்கள் , வர்த்தக விளம்பர அடையாளங்கள், விளம்பரப் பலகைகள், என Commercial sector இற்குள்ளேயே Commercial designs, Logos, Illustrations என்ற வரையறைக்குள் தமது கலைப் பயணத்தைக் கடந்துள்ளார். தியாகி சிவகுமாரன் சிலை தியாகி பொன்.சிவகுமாரனின் சிலையை அன்றைய இளைஞர்களான முத்துக்குமாரசாமி, தவராசா முதலானோர் அவர் மறைந்து சில நாட்களிலேயே நிறுவவேண்டும் என்று கேட்டபோது அதே அரசியற் சூழலின் சமாந்தர உணர்வுடனிருந்த இவரும் அதனை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். அடிமை விலங்குச் சங்கிலியை உடைத்தபடி நிற்பதுபோன்ற சிலை அது. அந்தச் சிலை உடைத்து நொறுக்கப்பட்டு, இரண்டு தடவை திருப்பி நிறுவப்பட்ட மை தமிழர் வரலாறு. சிவகுமாரனின் சிலை வரை,தமது பணியை ஒரு தொழில் சார் பணியாக இதழ்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மட்டுமே வழங்கிக் கொண்டிருந்தார். தேசிய நூதன சாலையிற் தொழில்:- தேசிய நூதன சாலையில் பணியாற்றிய காலத்தில் பகுதிநேரமாகவே சில வர்த்தக விளம்பரப் பணிகளைச் செய்தார். அதனாலேயே தெற்கின் ஓவியர்கள் எனக்கு அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். அங்கு பணியாற்றும் போதுதான் எழுத்தாளர் நடராசன் என்பவருக்கு முதலாவது அட்டைப் படத்தை வரைந்ததையும் பின்னர் சிரித்திரன் சுந்தரின் நட்பும் அவர்தம் பணிகளும் கிடைத்ததாகவும் சொல்லியுள்ளார். சிரித்திரன் சுந்தரும் கூட- இவர் அப்போது செய்யும் வேலைகளை விடவும் இன்னும் நிறையச் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவரெனப் பாராட்டினாராம். ஓவிய இரசனையும் ஆதரவும் - வடக்கும் தெற்கும்: தென்னிலங்கையைப் போல அரச ஆதரவும் மக்களின் ஓவியம் மீதான அக்கறையும் புரிதலும் ஓவிய ரசனையும் தெற்கின் ஊடகங்கள் அந்த ஓவியர்களுக்குக் கொடுத்த மதிப்பும்- இருந்திருந்தால் அவர் அவர்கள் எதிர்பார்த்த 'ஓவியராக' அவர்கள் பார்வையிற் பரிமளித்திருக்கலாம். இந்த வகையில், இடதுசாரிகளுக்கும் ரமணிக்கும் உள்ள தொடர்பு கூட நீண்ட ஒன்றெனத் தோன்றும். தேசாபிமானி: இடதுசாரிப் பத்திரிகையான 'தேசாபிமானி' தான் அவரை முதன் முதலிற் பாவித்துள்ளது. சிரித்திரன் சுந்தரின் ஆசியும் நட்பும்:- பின்னர் சிரித்திரன் சிவஞான சுந்தரம் தமது சஞ்சிகையின் பட , தலைப்புகள் வேலைக்குப் பயன்படுத்தியுள்ளார்; தம்மை உற்சாகமூட்டி ஊக்குவித்தவர் அவர் என்பார் ரமணி. பின்னர் டானியல், டொமினிக் ஜீவா, செங்கை ஆழியான், தெணியான்,செம்பியன் செல்வன், கல்வயல் குமாரசுவாமி, கலாமணிஎனப் பல இலககியவாதிகளும் கல்விமான்களும் இவரின் கலைத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மல்லிகை ஜீவா மல்லிகை இதழின் முகத் தலைப்பு என்றும் ரமணியை நினைவூட்டும். ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆரம்பகாலம் முதல் அதன் ஆண்டு மலர்களிலும் ரமணி மாஸ்டரின் ஓவியங்களைப் பாவித்து வந்ததைக் காணலாம். திருமறைக் கலாமன்றம்:- அடுத்து அவர் குறிப்பிடுவது திருமறைக் கலா மன்றத்தின் காப்பாளரான கலாநிதி மரியசேவியர் அடிகளாரை. மன்றத்தின் இலச்சினை அட்டைப்படம் சஞ்சிகையான கலை முகத்தின் முகத்தலைப்பு( Masthead) யாவையும் ரமணியே வரைந்துள்ளார் ரஜனி வெளியீடு ஈழநாட்டில் அப்போது உதவி ஆசிரியராகப் பணியாற்றிய குகநாதன் அவர்கள் தமது ரஜனி வெளியீட்டகத்தின் கதைகளுக்கு ரமணியைப் பாவித்துள்ளார். செங்கை ஆழியானின் கிடுகுவேலி, மழைக்காலம் போன்றன நூல்களாக வந்தபோது ரமணியே அவற்றை அலங்கரித்தார். செங்கை ஆழியான் தமது கல்வி நூல்களின் அட்டைப்படங்களுக்கு ரமணியையே பெரிதும் பாவித்துள்ளார். ஈழமுரசு:- ஈழநாடு மட்டுமே பிராந்திய நாளிதழாகக் கோலோச்சிய காலத்தில் புரட்சிகரமாக ஈழமுரசு நாளிதழ் யாழ்ப்பாணத்தில் வெளிவந்தபோது அதன் ஆசிரியர் எஸ்.திருச்செல்வம ரமணி அவர்களிடமே அதன் Masthead ஐப் படைக்கும் வேலையை ஒப்படைத்தார். ஈழமுரசின் தாய் நிறுவனமான 'தமிழர் நிதியத்தின்' இலச்சினை முகப்புப் பலகை எழுத்தமைப்பு யாவும் ரமணியினுடையவை. ரமணி வரைந்த ஈழமுரசு முகஅடையாளமே இன்று அப்பெயர் வெளிவரும் உலக நாடுகளில் வருவது குறிப்பிடத்தகது. நிறங்களும் சுரங்களும்:- ரமணி மாஸ்டர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் பணியாற்றியபோது நான் அவரை ஊடகர் என்ற வகையிலும் மாற்கு மாஸ்டர் மூலமாயுமிருந்த தொடர்பால் அறிவேன். அதுதான் அவருடனான எனது நேரடி அறிமுகம். அவ்வேளைகளில், எமது வீட்டுக்கு வந்தால் அம்மாவுடன் இசை பற்றி ஆர்வத்துடன் அளவளாவுவார். ஒரு முறை மேளகர்த்தா பற்றிக் கதை வந்தபோது எனது தாயார் மேலோட்டமாக 'தியறி' மூலமும் பாடியும் விளக்கினார். 'எங்களது வண்ணங்கள் போலத்தான். ஒரு ராகத்துக்குரிய சுரங்களை நாம் மாற்றினால் அது வேறாகிவிடும். அதுபோலத்தான் எங்கள் தூரிகை களும்.. மாறிக் கீறிக் கொஞ்சம் கூட வேறு நிறத்தை என்ன ஒரு நிறத்தையே கூடக் கொஞ்சம் சேர்த்தால் அது மாறிவிடும்.. சிறுவருக்கானது, தொழிலாளருக்கு, புரட்சி , சோகம் என்று எங்களுக்குள்ளேயே ஒரு ராகம் போய்க் கொண்டிருக்கும்.. அது சுருதி மாறாமல் போகும்போது தான் நல்ல படைப்பாக வரும்...மாறி வேறு நிறத்தை ...' என்று அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இதைப் பின்னர் எமது தாயாரின் நினைவாக வெளியிடப்பெற்ற நூலின் அட்டைப்படம் தொடர்பாக அவரிடம் போனபோது நினைவுபடுத்தினேன். என்ன நிறத்தில் வேண்டும்? என்று அவர் கேட்ட போது இந்தக் கதையைச் சொன்னேன். அவரையே பொருத்தமான நிறத்தைத் தீர்மானிக்கும்படி சொன்னேன். சிரித்திரன், பாதுகாவலன், மல்லிகை, ஈழமுரசு ஈழநாதம் மட்டுமன்றி தினகரன், வீரகேசரி, உதயன், சஞ்சீவி என்பனவற்றிலும்,தொண்ணூறுகளில் தாயகத்தில் வெளிவந்த வெளியீடுகள் பலவற்றிலும் அவரது எழுத்தோவியங்களைக் காணலாம். சஞ்சீவியில் , செங்கை ஆழியான் தாம் எழுதிய தொடர் கதைக்கு இவரே வரைய வேண்டும் என்று கோரியபோது, பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் அதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார். முதலுதவி நூல். எண்பதுகளில், கட்டை வேலி நெல்லியடி பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரணையில், மருத்துவர் சுகுமார் அவர்களின் மூலம் எழுதப்பட்ட முதலுதவி நூலுக்கான பல செய்முறை ஓவியங்களை வரைய ரமணி மாஸ்டரை அணுகினோம். நான் அப்போது சென்.ஜோன்ஸ் முதலுதவிப் படையின் வடமராட்சி ஒருங்கிணைப்பு அலுவலர்( தன்னார்வலர்). ஏலவே ஓர் ஊடகராகப் பழகிய எனக்கு,அப்போது தான் அவருடன் மேலும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. நான் எங்கள் குடும்பத்தவரால் எமது தாயாரின் நினைவு நூல் விடயமாகச் சென்றபோது நூலில் உள்ள அம்சங்களை மட்டும் சொன்னேன். வழக்கமாக இலக்கிய நூல்களுக்கு- நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு களுக்கு-அட்டைப்படம் வரையும் போது அவற்றைப் பல தடவை வாசித்த பின்னரே வரைவதாகச் சொன்னார். 'வாசிக்கத் தான் நேரம் போகும்; ஆனால் கவர் கை வைத்தவுடன் ஸ்கெட்ச் வந்துவிடும் ' என்றார். நான் நூலின் பிரதான கட்டுரையை பேராசிரியர் சிவத்தம்பி எழுதியிருந்தார். அதனை முழுமையாக அவரிடம் பெறப் பல மாதங்கள் பிடித்தன. சிவத்தம்பி சேரின் கட்டுரையை மட்டும் கொண்டு சென்றேன். ' எப்போ கொழும்பு திரும்புகிறீர்கள் ? என்றார். நான் நாளைச் சொன்னதும் அதற்கு இரண்டு நாள் முன்னதாக நாளைக் குறிப்பிட்டு வரச் சொன்னார். அட்டைப்படம் ' ரெடியாக' இருந்தது. சிவத்தம்பி சேரின் கட்டுரையையும் உங்கள் அம்மாவுடன் பழகியபோது பேசியவற்றையும் மனதில் வைத்து வரைந்தேன்' என்றார். அந்த நூலில் எனது தாயாருக்குள்ள ஆற்றல்களை எல்லாம் சுருக்கமாகப் பிரதிபலிக்கும் வகையில் அட்டைப் படமாக வரைந்து தந்தார். ஆவணமான ( விவரணமான) நூல் என்பதால் அட்டையின் பெயரை Notation- சுர வடிவிலான ( music score) கணினி எழுத்திலேயே அமைப்பதாகச் சொன்னார். 'நான் உங்கள் எழுத்தையே வரவேண்டும் என்று விரும்பினேன் சேர்' - என்றேன். நான் எழுதினாலும் அப்படித்தான் எழுதுவேன். அதைவிடக் கணினி எழுத்து அமைப்பானதாகவே இருக்கும்' என்றார். கணினிகளில் வெவ்வேறு எழுத்தமைப்புகள்( fonts) பல வர முன்னதாக, தசாப்தங்களுக்கு முன்னரேயே அவற்றைத் தமது கற்பனையிலிருந்து தந்த கலைத் தீர்க்கதரிசி அவர் என்பேன் . ரமணி மாஸ்டர் ஈழத்தமிழ் ஓவியத்தில் நாம் கண்ட விண்ணர்களின் வழி வந்த விண்ணர்களில் ஒருவர். ஆனால் அவர்களின் மரபு ஓவியப் பாணியிலிருந்து மாறியவர். சங்க காலப் பாடல்கள் படித்தவர்களுக்கு பாரதி தோன்றியது போலவே ரமணியின் வருகை எமக்கு அமைந்தது எனலாம். அப்படியான உணர்வையே அவரது கோடுகளும் தூரிகைகளும் ஏற்படுத்தின. யாழ் ஓவியப் பரம்பரை என்றால் நான் அறிந்தளவில் பெனடிகற் மாஸ்டரைக் குறிப்பிடலாம். சென் சார்ள்ஸ் மகாவித்தியாலயத்தில் பணியாற்றியபோது அவர் மாலை நேர வகுப்புகளை நடத்தியவர்.( எனது தந்தையாரும் அப்போது புனித சார்ள்சில் படிப்பித்தவர்; பெனடிக்ட் மாஸ்டரின் ஓவியங்கள் சில எங்கள் வீட்டிலுமிருந்தமை- நினைவு) பெனடிக்ற் மாஸ்டரின் வகுப்புகளில் மாணாக்கராயிருந்தவர்களில் ஒருவர் மார்க் மாஸ்டர். மார்க் மாஸ்டர் புகழ் பெற்ற ஓவியர் டேவிற் பெயின்ரரின் மாணவர்; அவரின் மதிப்பையும் பெற்றவர். ஐம்பதுகளில் அவர் தமது மாணாக்கரின் ஓவியங்களை வைத்து நடத்திய கண்காட்சிக்கு மார்க்கரின் இருபதுக்கு மேற்பட்ட ஓவியங்களை வைத்தார். ஏனைய மாணவர்களின் இவ்விரண்டு ஓவியங்கள் தான் வைக்கப்பட்டனவாம். அப்படிப்பட்ட மார்க் மாஸ்டரின் விடுமுறைக் கால வகுப்பு ( Holiday Painters Group )மாணவர்களில் ஒருவர் தான் ரமணி. மார்க் மாஸ்டர் அந்தக் குழுமத்தின் மூலம் யாழ் மாநகர சபை மண்டபத்திலும் யாழ் மத்திய கல்லூரியிலும் ஓவியக் கண்காட்சிகளை அறுபதுகளில் நடத்தியிருந்தாராம். ஆனால் பொதுமக்களினதும் பத்திரிகைகளினதும் ஆதரவு கிடைக்காமையால் அவற்றைத் தொடர்ந்து நடத்த முடிவில்லை என்பார். அதுபோல மார்க் மாஸ்டரின் கனவு யாழ்ப்பாணத்தில் தெற்கைப் போல ஒரு நுண்கலைக் கழகம் வந்து அதில் ஓவியம், சிற்பம் கைப்பணி போன்றன பயிற்றப்படல் வேண்டும் என்பதும் ஆகும். அந்தக் கனவை ரமணி மாஸ்டர் நனவாக ஏற்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன். ரமணி மாஸ்டர் அழகியலுக்கான உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றியதுடன், இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மார்க் மாஸ்டர் இப்போதிருந்தால் சந்தோசப்படுவார் என்றும், பல சிற்பக் கலை ஆர்வலர்களான மாணவர்களும் உள்ளதாயும் ரமணி மாஸ்டர் என்னிடம் குறிப்பிட்டார். மரபு ஓவியம்:- ரமணி மாஸ்டர் மரபு ஓவியத்திலும் தமது கைவண்ணத்தை பல ஆலயங்களின் திரைச் சேலைகள் சிற்பங்களில் காட்டத் தவறவில்லை. சிலைகளில் நினைவாய் நிற்கிறார்:- அவரது கலைத்துவத்தைப் பேசும் படைப்புகளாக அவர் ஆக்கிய நினைவுச் சிலைகள் பலவும் அமைந்துள்ளன. நல்லை நகர் ஆறுமுகநாவலர், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி தாபகப் பெரியார் சூரன் சேர். பொன். இராமநாதன் மருத்துவ நிபுணர் சுப்பிரமணியம் கந்தையா உபாத்தியாயர் என்பவற்றுக்கப்பால், விடுதலைப் போராட்ட காலத்தில் யாழ் குடாநாட்டிலிருந்து மாங்குளம் வரை தோன்றி நிமிர்ந்துநினற பல சிலைகள் அவர் தம் கைவண்ணத்தைக் காட்டி நின்றன. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முதன் முதலில் நிறுவப்பட்ட போராளி மில்லரின் சிலை, தீருவிலில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவான எழுவர் என்பன அவரது உச்சகாலப் படைப்புகள். தீருவிலில் அமைக்கப்பட்ட சிலைகள் அவை அமைந்த மைதானத்தின் முன்னே உள்ள பாடசாலையில் அவர் பாட விளக்க அதிகாரியாகப் பணியாற்றிய நேரத்தில் அவர் கண் முன்னாலே உடைத்தழிக்கப்பட்ட காட்சியைக் கண்ட உளக் கொடூரத்தையும் தாண்டியுள்ளார். அது போல அழிப்பட்ட அவர் படைத்த சிலைகள் பல. கலைகளில் கண்களோடும் கரங்களோடும் உறவாடும் கலைஞர் ஓவியர் என்பர். அந்த உறவின் துயரைத் தம் வாழ்வில் அனுபவித்த ஒரு கலைஞர் அவர். தொடக்கமும் முடிவும்:- நெல்லியடியில் அமைக்கப்பெற்ற தமிழர் தலைவர் சிவசிதம்பரம் அவர்களது சிலையே ரமணி அவர்கள் கடைசியாகச் செதுக்கிய சிலை ஆகும். நான் முதலில் குறிப்பிட்டதுபோல தமது பெயரின் சுருக்கத்தில் அவர் பொதுமையான வழமைபோல சிவா என்று இடாமல்விட்டிருந்தாலும் அவரது கலையுலக வாழ்வில் அவருக்குப் பிடித்த சிற்பக் கலையில், அவர் வடித்த முதலாவது சிலை சிவகுமாரனுடையது. கடைசியாக வடித்ததும் உடுப்பிட்டி சிவா! இரண்டு சிவாக்கள்!! தொடக்கமும் முடிவும் சிவாவே! சென்று வாருங்கள் சேர்!! - வரதராஜன் மரியாம்பிள்ளை
-
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
பல காரணங்கள். அதில் ஒன்றையாவது சொல்லவேண்டியது, நாங்களும் தெரிந்துகொள்வோம் அவர் எப்படியான நல்ல மனிதர் என்று. ராஜபக்ச குடும்பத்தை காட்டிக்கொடுக்கிறேன் என்று பேரம் பேசியிருப்பாரோ, அல்லது காட்டிக்கொடுத்துவிட்டுதான் பிணையில் வந்தாரோ? "துரோகி துரோகத்தாலேயே அழிவான்." வெடிகொழுத்தியதை மறைக்கிறாரோ?
-
வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் பலத்த மழை வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்தோடு, வடக்கு மாகாணத்தில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-பலத்த-மழை/175-370826
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
ஓவியர், சிற்பக் கலைஞர் கலாபூஷணம் ரமணி (முன்னாள் வருகைதரு விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்) கலைகளும், கலைப்படைப்புகளும், கலைஞர்களும் இல்லாமல் உலகைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்... வேண்டாம் அந்த விபரீதக் கற்பனை. மரணமில்லா வாழ்வு கலைஞனுக்கு மட்டும்தான். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் என்ற பன்முகக் கலைஞன் கம்பீரமாக நிமிர்ந்து நின்று தன்னை "மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என உறுதிபடப் பாடியதோடு மட்டுமின்றி விடாது "பாமர ஜாதியில் தனிமனிதன் - நான் படைப்பதனால் என்பேர் இறைவன்" எனப் பிரகடனமும் செய்துவிட்டுப் போயுள்ளான். இது உண்மையான ஆற்றல்மிகு கலைஞரின் புவிசார் தகைமையை அர்த்தபூர்வமாகச் சொல்லும் யதார்த்த வரிகளாகும். ஒரு மனிதன் அவன் எப்படியானவனாக இருந்தாலும் அவன் ஒரு படைப்பியல் திறன் கொண்ட கலைஞனாகத் தன் சுயத்தை வெளிப்படுத்தி நிற்பவனேயானால் அவனது சாகாவரம் பெற்ற கலைப்படைப்புகள் தரும் பிரமிப்பும், ரசனையும் அவனது அனைத்துக் குறைபாடுகளையும் மறக்கவைத்து அவனை வணங்க வைத்துவிடும் என்பதே நிசம். "நாளும் நலியாக் கலையுடையோம்" என எம்மண்ணின் கவிஞனும் அத்தகைய ஒரு அமர கலைஞனுமான மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்கள் பாடிய வரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. "யாழ்பாடி" என்ற பார்வையற்ற இசைக்கலைஞனின் கலாகீர்த்தியைப் பாராட்டி அவருக்கு அன்பளிப்பாக வெகுமதியாக அரசனால் வழங்கப்பட்ட பிரதேசமே யாழ்ப்பாணம் என இன்று எம்மால் எம் தந்தையர் பூமியாகப் போற்றப்படுகிறது. எனவே யாழ்ப்பாணத்தின் தோற்றமே கலைஞனோடு தொடர்பு கொண்டதாக இருப்பது புளங்காகிதம் தரும் விடயமாகும். பழம்பெரும் தமிழ் பேரகராதி ஒன்றில் யாழ்ப்பாணம் என்ற பெயருக்கு (சொல்லுக்கு) "வீணாகான புரம்" என அழகான - கலைத்துவமான விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதை இங்கு கூறவே வேண்டும். இலங்கை வேந்தன் தேவ கலைஞன் இராவணேஸ்வரன் வீணை வாசிப்பதில் நிகரற்றவன் என்பதை புராண, இதிகாச, மற்றும் தேவாரப் பதிகங்கள் பதிவு செய்துள்ளமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தத் தசமுகவை வீணைக் கொடியுடை வேந்தன் எனவே இதிகாசம் வர்ணிக்கிறது. எனவே கலைகளுக்கும் ஈழத் தமிழனுக்கும் இடையேயான தொடர்பின் அடிப்படையில்தான் கவிஞர் "மஹாகவி" அவர்கள் "நாளும் நலியாக் கலையுடையோம்" எனப் பாடியிருக்கிறார் எனக் கருதலும் பொருத்தமேயாகும். எமக்கென்று தனித்துவமான கலை, பண்பாட்டு மற்றும் கலாசாரப் பாரம்பரியம் உண்டென்பது வரலாற்றுரீதியாக நிர்ணயமான விடயமாகும். மிகப்பெரிய அறிஞர்களை, கலாவிற்பன்னர்களை, இலக்கியப் பெருமக்களை உலகிற்கு குறிப்பாகத் தமிழுலகிற்கு வழங்கி வருகின்ற பெருமை ஈழ மண்ணுக்குண்டு. இத்தகைய மாண்புமிகு மனிதர்களுள் இன்று நம்மிடையே வாழ்ந்து தமிழுக்கும், தாய் மண்ணிற்கும் கௌரவம் பெற்றுத் தரும் கலைஞர்களுள் - சிற்ப, ஓவிய நுண்கலைத் துறையில் தனக்கென ஒரு தனித்துவமும் கலைத்துவமும் மிக்க இடத்தை வகித்து வரும் வாழ்நாள் சாதனையாளரான "ரமணி" என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அமைதியும், ஆழமும் மிக்க கலைஞனாக நாம் பெருமைப்படக்கூடிய கலாவிற்பன்னராக விளங்கும் வைத்தீஸ்பரன் சிவசுப்பிரமணியம் ரமணி முக்கியத்துவம் பெறுபவராகிறார். நல்ல கலைஞன் மிகப்பெரிய அடையாளம் அவர் கலைச்செருக்கு, வித்துவக்கிறுக்கற்ற நல்ல மனிதனாகவும் அவர் விளங்குவதுதான். அந்தவகையில் ரமணி அவர்களின் அடக்கமும், அமைதியும் மிக்க மனிதநேயப் பண்புதான் அவரது கலாசிருஷ்டிகளின் கலைத்துவ தனித்துவத்திற்கும் மூலகாரணியாகும். முதலில் அவர் நல்ல மனிதர், நல்ல ஆசான், அது அவரது கலைப் படைப்புக்களின் ஆத்மாவாக வெளிப்பட்டு நிற்பதை அனைவரும் உணர்வர். அந்த கலைவளம் மலிந்த ஊரில் கல்வி, மற்றும் இசைக்கலைத் துறையில் பேரார்வம் கொண்டவரான அட்சலிங்கம் வைத்தீஸ்பரன் என்பவருக்கும் மங்கையற்கரசி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ரமணி. அவரது இயற்பெயர் சிவசுப்பிரமணியம். இப்பெயரின் இடையே வரும் "ரமணி" என்ற பெயர் இவரது கலையுலக பெயராக இவரே வைத்துக்கொண்டதாகும். 1942 ஆவணி 3ஆம் நாளில் பிறந்த இவரிடம் பரம்பரை கலையார்வம் இயல்பாகவே இணைந்து கொண்டதில் வியப்பில்லை. இவர் மட்டுமல்ல இவர் குடும்பத்தவர் அனைவருமே கலைத்துவ ஆளுமை கொண்டவர்கள் தான். இவரது அண்ணா சச்சிதானந்தசிவம் மிகச்சிறந்த ஓவியர். அற்புதமான இலக்கியப் படைப்பாளி, ஞானரதன் என்ற பெயரில் சிறுகதைகள் - நாவல்கள் பலவற்றை படைத்தவர். திரைப்படத் துறையில் சாதனை படைத்த இயக்குநர். இந்தியாவில் இணையற்ற இயக்குநராக, ஒளிப்பதிவாளராக விளங்கும் பாலு மகேந்திராவின் பள்ளித்தோழர், பல பல்துறைக் கலைஞர்களை உருவாக்கிய நல்லாசான். "கலாகீர்த்தி" விருது பெற்றவர். ஏனைய சகோதரர்களும் சகோதரிகளும் கூட அவரவர் வாழ்வியல் தொழிற்றுறைகளுடன் மேலதிகமாக கலைத்துறை ஈடுபாடுகளையும் கொண்டவர்கள். அவர்களின் வாரிசுகளும் அப்படியே... வாழையடி வாழையாக கலைஞானம் கொண்டவர்களாக விளங்குவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆகவொரு பெரும் கலாவிருட்சத்தின் அங்கங்களாக அவரவர் தனித்துவத் திறனை வளர்த்துக்கொள்ள அந்தக் கலைக் குடும்பத்தில் தடையேதும் இருக்கவில்லை. தந்தையின் ஆதரவும், தமையனின் வழிகாட்டலும், சக நண்பர்கள், அயலவர்களின் உற்சாக ஊக்குவிப்பும் "ரமணி" அவர்களை அவர் துறையில் உச்சத்தை நோக்கி உயர வழிவகுத்தது. அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் தனது இளமைக் காலக் கல்வியை மேற்கொண்ட "ரமணி" அவர்கள் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தி பெற்று உயர்தரப் பேறு பெறுவதற்கான கல்வியைத் தொடர நினைத்த வேளை அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. கலைத்துறைசார் கல்வியை மேற்படிப்புக்காக தெரிவு செய்ய திரு.எஸ்.பொன்னம்பலம் (ஆதவன்) என்பவரின் வழிகாட்டல் ஊக்குவிப்பு காரணியாகியது. இவர் அக்காலத்தில் அளவெட்டியில் புகழ்பெற்ற பல்துறைக் கலைஞராகவும், சித்திர ஆசிரியராகவும் விளங்கியவர். இவரை ரமணி அவர்களுள் மிளிர்ந்து கொண்டிருந்த ஓவியக் கலையை துல்லியமாக இனங்கண்டு அவரைப் பாராட்டி ஊக்குவித்து உயர்தரப் பரீட்சையில் ஓவிய பாடத்தில் விசேட சித்தி பெற வழிவகுத்தார். தன் இன்றைய கலைசார் பெருமைகளுக்கான காரணகர்த்தா திரு. பொன்னம்பலம் அவர்களே என மிக நன்றியுடன் நினைவு கூறுகிறார் "ரமணி". 07.03.1978 இல் "கலைஞானக் கதிர்" என்ற விருதினை ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் இவர் ஆற்றும் சேவைக்காக பருத்தித்துறை பிரதேசசபை வழங்கிக் கௌரவித்தது. 01.10.2000 அன்று வடமராட்சி கலைஞர் வட்டம் சிறப்புக் கேடயம் வழங்கிக் கௌரவித்தது. 18.11.2001 ஆம் ஆண்டு வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தமிழ் விவகாரங்களுக்கான அமைச்சினால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினூடாக “கலைஞான கேசரி” என்ற கௌரவ விருது வழங்கப்பட்டது. 05.05.2002 இல் : யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவையால் "சிவ கலா பூஷணம்" என்ற விருது வழங்கப்பட்டது. 22.05.2006 : கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் "கலாபூஷணம்" எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 2008 இல் இவருக்கு வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சால் "ஆளுநர் விருது" வழங்கப்பட்டது. 2010 இல் : மன்னார் தமிழ்ச்சங்கம் நடாத்திய செம்மொழி மாநாட்டில் கலாயோகி ஆனந்தக் குமாரசாமி ஞாபகார்த்த "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டது. 2011 இல் : பருத்தித்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவை "கலைப்பரிதி" என்ற விருதை வழங்கியது. 2012 இல் : வடமராட்சி கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட நிறைமதி விழாவில் ஓவிய-சிற்பத் துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக "கலைவாரிதி" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள் அனைத்தும் "ரமணி" என்ற அற்புதமான கலைஞனுள் ஆளுமை பெருமிதச் செருக்கைப் புறந்தள்ளி அடக்கத்தையும், பணிவையும் மட்டுமே வளர்த்துள்ளமையை அனை வரும் ஆச்சரியத்துடன் நோக்குவது வழமை. நிறைகுடம் தளும்புவதில்லையே. ஓவியர்-சிற்பி என பன்முகத்திறன் கொண்ட ரமணி அவர்களை ஆரம்பத்திலேயே அவரது திறனை இனங்கண்டு ஊக்குவித்து அவரது வளர்ச்சியில் மகிழ்வும் நிறைவும் கொண்டு அவருக்குரிய அங்கீகாரத்தை வழங்கிய புகழ்பெற்ற ஓவியரும், கேலிச் சித்திர விற்பன்னருமான சிரித்திரன் சுந்தர் அவர்கள் "ரமணி" குறித்து கூறிய கருத்தை இங்கு முத்தாய்ப்பாகக் கூறமுடியும். "ரமணி இலங்கையில் அதுவும் தமிழ்க் கலைஞனாக பிறந்தபடியால் அவரது முழுமையான ஆளுமைதிறன் வெளிவராமல் இருக்கிறது. இவர் மட்டும் வெளிநாட்டில் பிறந் திருப்பாரேயானால் இவரது தூரிகையும், உளியும் பெரும் அற்புதங்களைப் படைத்திருக்கும்....." உண்மையில் இது ஓவிய, சிற்ப ஆளுமை மிகு "ரமணி" அவர்கள் பற்றிய சுந்தரின் துல்லியமான மதிப்பீடேயாகும். ஒரு பெரும் கலைஞனை இன்னொரு பெருங்கலைஞனால்தான் இனங்காணவும் மதிப்பிடவும் முடியும் என்பது உண்மை தான். -ராதேயன் [தமிழ் முற்றம் 2015] இம்மாபெரும் கலைஞன் கடந்த 29/12/2025 அன்று காலமானதைத் தொடர்ந்து இக்கட்டுரை பதிவேற்றம் செய்யப்படுகிறது.
-
இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம்
கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம் | 🤣 இந்த மதவாதிகளின் செயற்பாடுகள் உலகில் மனிதர்களுக்கு எவ்வளவு இடையூறுகளை சேதத்தை விளைவிக்கின்றது என்பது நேரடியாக காண்கின்ற உண்மைகள்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
சிறப்பான கருத்து வசி 👍
-
உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்தும் அமெரிக்காவுக்கு ஏன் இன்னும் எண்ணெய் தேவை?
உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்தும் அமெரிக்காவுக்கு ஏன் இன்னும் எண்ணெய் தேவை? பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மற்ற எந்த நாட்டை விடவும் அதிக அளவிலான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வது அமெரிக்காதான். அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை விற்பனை செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி எண்ணெயைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் அமெரிக்க எண்ணெயைப் பற்றி மட்டும் பேசுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவே இவ்வளவு பெரிய அளவில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் போது, அதற்கு ஏன் இன்னும் கூடுதல் எண்ணெய் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க கச்சா எண்ணெயில் 80% இலகுரக எண்ணெயாகும். அமெரிக்காவிற்கு அதிக எண்ணெய் தேவைப்படுவது ஏன்? அமெரிக்கா தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயை நம்பி செயல்பட முடியாதா? எண்ணெய் வணிகத்துடன் வெனிசுவேலா எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? உண்மையில் இதற்கான காரணம் கச்சா எண்ணெயின் வகையை அடிப்படையாகக் கொண்டது. பூமியிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் அதன் அடர்த்தி, சல்பர் அளவு மற்றும் பாயும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு தரங்களாகப் பிரிக்கப்படுகிறது. பரந்த அளவில் பார்த்தால், கச்சா எண்ணெய் இரண்டு வகைப்படும்: 1. இலகுரக கச்சா எண்ணெய் 2. கனரக கச்சா எண்ணெய் "உலகில் 160-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் வகைகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு சுத்திகரிப்பு நிலையங்கள் வெவ்வேறு தரத்திலான கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கின்றன," என்று எரிசக்தி ஆய்வாளர் கௌரவ் சர்மா விளக்குகிறார். கனரக எண்ணெயை விட இலகுரக கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பது எளிது. சுத்திகரிப்புக்குப் பிறகு, இது பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் (விமான எரிபொருள்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கனரக எண்ணெய் கப்பல்களுக்கான எரிபொருள், சாலை அமைக்கும் பொருட்கள் மற்றும் லிப் பாம் போன்ற பல பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இலகுரக கச்சா எண்ணெய் கனரக எண்ணெயை விட அதிக மதிப்புடையது, எனவே அதன் விலையும் அதிகம். 2025-ல், அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் எண்ணெயை விற்பனை செய்தது. அதே சமயம், பிற நாடுகளிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் பேரல் எண்ணெயை வாங்கியது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா தான் உற்பத்தி செய்யும் எண்ணெயை ஏன் தனக்காக வைத்துக் கொள்வதில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது. இதற்கெல்லாம் காரணம் இலகுரக மற்றும் கனரக எண்ணெய் விவகாரம்தான். அமெரிக்க பெட்ரோலிய இன்ஸ்டிடியூட்டின் தகவல்படி, அமெரிக்காவின் எண்ணெய் 80 சதவீதம் இலகுரக வகையைச் சேர்ந்தது. ஆனால், அமெரிக்காவின் பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கனரக எண்ணெயைச் சுத்திகரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான எண்ணெய் லத்தீன் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கனரக கச்சா எண்ணெய் ஆகும். பின்னர் 2000-களின் முற்பகுதியில், அமெரிக்க எண்ணெய் உற்பத்தியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால், 'ஷேல்' பாறைகளிலிருந்து இலகுரக கச்சா எண்ணெயை அதிக அளவில் பிரித்தெடுப்பது சாத்தியமானது. இப்போது அமெரிக்கா எடுக்கும் கச்சா எண்ணெய் வகைக்கும், அதன் சுத்திகரிப்பு நிலையங்கள் கையாளும் கச்சா எண்ணெய் வகைக்கும் இடையே ஒரு பொருத்தமின்மை உள்ளது. அதாவது, அமெரிக்கா பெரும்பாலும் இலகுரக எண்ணெயை எடுக்கிறது, ஆனால் கனரக எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறனை கொண்டுள்ளது. "ஒருமுறை ஒரு சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுவிட்டால், அதை மாற்றுவது மிகவும் கடினம். அதற்கு கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடு தேவைப்படும்," என்று கௌரவ் சர்மா கூறுகிறார். அதே நேரத்தில், கனரக எண்ணெயை விட இலகுரக எண்ணெயின் விலை அதிகம் என்பதால், அமெரிக்கா தனது இலகுரக எண்ணெயை அதிக விலைக்கு விற்றுவிட்டு, கனரக எண்ணெயை மலிவான விலைக்கு வாங்குகிறது. பட மூலாதாரம்,Getty Images எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்க-வெனிசுவேலா உறவுகள் வெனிசுவேலா, செளதி அரேபியா, இரான், கனடா, இராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளன. இதில் பல நாடுகள் கனரக கச்சா எண்ணெயை எடுப்பதில் பெயர் பெற்றவை. இந்த பட்டியலில் உள்ள மூன்று நாடுகளான வெனிசுவேலா, இரான் மற்றும் ரஷ்யா ஆகியவை தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளன. இருப்பினும், வெனிசுவேலாவிலிருந்து சில எண்ணெய் விநியோகங்கள் தொடர்ந்து அமெரிக்காவை சென்றடைகின்றன. ஏனெனில், வெனிசுவேலாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டின் எண்ணெய் தொழில்துறையை கட்டமைப்பதில் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்தன. 20-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரை, அமெரிக்கா அங்கிருந்து கனரக கச்சா எண்ணெயை எடுத்து வந்தது. நவர்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கார்மென் பீட்ரிஸ் பெர்னாண்டஸ் இதுகுறித்துக் கூறுகையில், "மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலன்றி, வெனிசுவேலா 1976-ல் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கிய போதும் அமெரிக்காவுடன் நல்ல உறவைப் பேணி வந்தது. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அந்த உறவு எப்போதும் சீராக இருந்தது," என்கிறார். 1999-ஆம் ஆண்டு சோசலிசத் தலைவர் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்தபோது இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, எண்ணெய் துறையின் மீதான அரசாங்க கட்டுப்பாட்டை அவர் வலுப்படுத்தினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லத்தீன் அமெரிக்க ஆய்வக மையத்தைச் சேர்ந்த முனைவர் கிரேஸ் லிவிங்ஸ்டோன் இதுகுறித்துக் கூறுகையில், "வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது அவர் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். இது அமெரிக்க அரசுக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கும் பிடிக்கவில்லை," என்கிறார். 2013-ல் ஹியூகோ சாவேஸ் மறைந்த பிறகு, நிக்கோலஸ் மதுரோ வெனிசுவேலாவின் அதிபரானார். அவர் சாவேஸின் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றினார். 2019-ஆம் ஆண்டில், உலக வங்கி தீர்ப்பாயம் வெனிசுவேலா அரசாங்கத்தை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதைக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் எண்ணெயை வெனிசுவேலா திருடிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். எனினும், வெனிசுலா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. 2025-ன் பிற்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைமை மேலும் மோசமடைந்தது. அமெரிக்க ராணுவம் எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றியதுடன், வெனிசுவேலா துறைமுகங்களையும் முற்றுகையிட்டது. போதைப்பொருள் கடத்தப்படுவதை ஒடுக்குவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images அமெரிக்கா வெனிசுவேலாவின் எண்ணெய் விவகாரத்தில் தலையிடுமா? ஜனவரி 3, 2026 அன்று, அமெரிக்க ராணுவம் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பான விசாரணையை எதிர்கொள்வதற்காக அவர்கள் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு டிரம்ப் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களை அங்கு பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய நாங்கள் அனுப்புவோம். அங்கிருந்து ஈட்டப்படும் பணம் அங்கேயே பயன்படுத்தப்படும், அதன் மூலம் வெனிசுவேலா மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள்," என்றார். கடந்த பல ஆண்டுகாலமாக, வெனிசுவேலா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யா, இரான் மற்றும் முக்கியமாக சீனா ஆகிய நாடுகளுக்கு அங்கு இடமளித்தன. கிரேஸ் லிவிங்ஸ்டோன் கூறுகையில், "வெனிசுவேலாவுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளுக்கும் சீனா ஒரு மிக முக்கியமான வர்த்தகக் கூட்டாளியாக மாறியுள்ளது. குறிப்பாக, அது எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்களை பெரிய அளவில் வாங்குகிறது" என்கிறார். வெனிசுவேலாவின் எண்ணெயில் சுமார் 90 சதவீதத்தை சீனா வாங்கி வந்தது. இதைத் தடுப்பதே டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது. "நாங்கள் அங்கு பாதுகாப்பை விரும்புகிறோம். உலகெங்கிலும் உள்ள நமது எதிரிகளுக்கு அடைக்கலம் தராத அண்டை நாடுகளையே நாம் விரும்புகிறோம்" என்று அவர் கூறியிருந்தார். வெனிசுவேலாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு (சுமார் 303 பில்லியன் பேரல்கள்) உள்ளது. இருப்பினும், வெனிசுவேலா ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல்களுக்கும் குறைவான எண்ணெயையே ஏற்றுமதி செய்கிறது. இதற்குக் காரணம் பொருளாதாரத் தடைகள், பல ஆண்டுகாலமாக நிலவும் நிதிப்பற்றாக்குறை மற்றும் மோசமான நிர்வாகம் ஆகும். கௌரவ் சர்மா கூறுகையில், "பல இடங்களில் உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டியிருக்கும். வெனிசுவேலா கச்சா எண்ணெய் விநியோகம் போதுமான அளவில் தொடங்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம்" என்கிறார். "கடந்த நூற்றாண்டில், எண்ணெய் தொழில் பல நாடுகளுக்கு மகத்தான செல்வத்தை ஈட்டித் தந்துள்ளது. இது பல நாடுகளின் தலையெழுத்தையே ஒரே இரவில் மாற்றியமைத்த பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்துறையாகும்"என்கிறார் கௌரவ் சர்மா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxjgnnjz9lo
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
ரஷ்யா - சீனா ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா கிரீன்லாந்தை “சொந்தமாக்க வேண்டும்” - டிரம்ப் 10 Jan, 2026 | 12:19 PM ரஷ்யா மற்றும் சீனா கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதைத் தடுக்க, அமெரிக்கா அந்தத் தீவை “சொந்தமாக்க வேண்டும்”** என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். “நாடுகள் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும், நீங்கள் உரிமையைத்தான் பாதுகாக்க முடியும்; குத்தகை ஒப்பந்தங்கள் போதுமானவை அல்ல. நாம் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கும்,” என்றும் டிரம்ப் கூறினார். மேலும், இதை “எளிதான வழியிலும், கடினமான வழியிலும்” முன்னெடுக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை அண்மையில், டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை வாங்குவது குறித்து தனது நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தது. ஆனால், தேவையானால் பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தும் விருப்பத்தையும் அது நிராகரிக்கவில்லை. இருப்பினும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் தெளிவாக, “கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை” எனக் கூறி இருக்கின்றனர். டென்மார்க் எச்சரித்தது, இதுபோன்ற இராணுவ நடவடிக்கை அட்லாண்டிக் பாதுகாப்புக் கூட்டணிக்கு (NATO) விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்தாலும், வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளுக்கிடையேயுள்ள கிரீன்லாந்து மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமாகும். ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து முன்னெச்சரிக்கை அமைப்புகளை நிறுவவும், அந்தப் பிராந்தியத்தில் செல்லும் கப்பல்களை கண்காணிக்கவும் இது சிறந்த இடமாகும். டிரம்ப் மீண்டும் மீண்டும் “கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியம்” என்று கூறி வருகிறார். ஆதாரங்களை வழங்காமல், கிரீன்லாந்தில் “ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிரம்பியுள்ளன” என்று குற்றச்சாட்டும் அவர் முன்வைத்துள்ளார். இரண்டாம் உலகப் போரிலிருந்து அமெரிக்கா இயக்கி வரும் பிட்டுஃபிக் (Pituffik) தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் நிரந்தரமாக நிலைகொண்டுள்ளனர். தற்போதைய ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்கு தேவையானளவு வீரர்களை கிரீன்லாந்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. ஆனால் டிரம்ப், “குத்தகை ஒப்பந்தங்கள் போதுமானவை அல்ல; உரிமை (Ownership) வேண்டும்” என்றும் கூறினார். டிரம்ப், “நான் சீன மக்களையும் ரஷ்ய மக்களையும் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் கிரீன்லாந்தில் என் அண்டை வீட்டாராக இருப்பதை நான் விரும்பவில்லை. அது நடக்கப்போவதில்லை,” என்று கூறினார். மேலும், “நேட்டோ இதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். டென்மார்க் நாட்டின் நேட்டோ நட்பு நாடுகளான முக்கிய ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, இந்த வாரம் டென்மார்கிற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். அவை, “டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மட்டுமே தங்கள் உறவுகள் தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க முடியும்” எனக் கூறியுள்ளன. மேலும், ஆர்க்டிக் பாதுகாப்பில் அமெரிக்காவைப் போலவே ஆர்வம் கொண்டுள்ள நாடுகள், இதை அனைத்து நட்பு நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் ஈர்க்கூடல், பிராந்திய ஒருமை, எல்லைகளை மீறாமை ஆகிய கொள்கைகளையும் நிலைநிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளன. பிபிசி (BBC) செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235670
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனில் ரஷ்யாவின் ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்: 4 பேர் பலி, 23 க்கு மேற்பட்டோர் காயம் 10 Jan, 2026 | 11:48 AM ரஷ்யா-உக்ரைன் இடையிலான போராட்டத்தை முடிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, ரஷ்யா புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடந்த தாக்குதலில், கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். கத்தார், ரஷ்யா-உக்ரைன் சிறைக்கைதிகள் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய நாடாகும். குறிப்பாக, ஒரேஷ்னிக் ஏவுகணை கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் பகுதியில் பரிசோதிக்கப்பட்டு, கடந்த வாரம் செயல்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன்போது நடத்தப்பட்ட தாக்குதல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/235667
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
ஈரானில் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு : இணைய சேவை முடக்கம் ! 10 Jan, 2026 | 11:37 AM ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்தது. இந்த நாணய வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனை எதிர்த்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களும் வியாபாரிகளும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். பல இடங்களில் ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறி நிலைமை மேலும் தீவிரமடைந்தது. நிலைமை கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, மத்திய வங்கி ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள், தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. தொடர்ந்து இடம்பெறும் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் தொடர்பாடல்கள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானில் நிலவும் இந்த அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம், அடுத்தகட்டமாக எத்தகைய திருப்பத்தை எடுக்கும் என்பது குறித்து சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகின்றது. https://www.virakesari.lk/article/235666