Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Surveyor

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by Surveyor

  1. வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் ! “லெப்.கேணல்.சிரித்திரன் (முருகுப்பிள்ளை சிவரூபன்) வீரனாய் – 07.09.1979 வித்தாய் – 20.04.2009 பிறந்த இடம் – இடைக்காடு கல்வி கற்றது – இடைக்காடு மகாவித்தியாலம்” ‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன். சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின் விவேகத்தின் ஆற்றலின் ஆதாரம்.விடுதலையின்றேல் வாழ்வில்லை போராட்டமே வாழ்வென்று ஆகியிருந்த காலத்தின் கட்டளையை ஏற்றுச் சிரித்திரனும் புலி வீரனாகியது 1996ம் ஆண்டு. யாழ்மண்ணிலிருந்து வேரறுக்கப்பட்டு வீழ்ந்த வீரம் வன்னியில் புதுப்பிக்கப்பட்ட தருணமது. விழவிழ எழும் வீர மரபைக் கொண்ட வீரத்தின் வேர்களின் வழியில் தன்னையும் இணைத்த சிரித்திரன் விசுவமடுவில் அமைந்திருந்த மாறன் 1 பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டான். முதல் கள அனுபவம் கிளிநொச்சி ஊடறுப்புச் சமராகும். சமர் முனையில் சிரித்திரன் சிறந்த வீரனாய் தனது திறனை வெளிக்காட்டிய போராளி. போர்க்களத்தையே அதிகம் விரும்பிய தாய்மண் விரைவில் வெல்லப்பட வேண்டுமென்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த காரியப்புலியவன். முதல் கள அனுபவம் முடிந்து வந்த வீரன் 1998 இல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் பயிற்சிக்குத் தெரிவாகினான். சிறப்பாய் பயிற்சிகள் முடித்து விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ வீரனாகினான். கவசங்களை உடைத்து எதிரியை நிலத்திலிருந்து விரட்டி விடியலைத் தேடி விழித்திருந்த தென்றல் அவன். 000 000 000 RPG என்ற ஆயுதத்தை சிறிலங்காப் படையினருக்கு அறிமுகம் செய்தவர்கள் புலிகள். ஏனெனில் புலிகள் இவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கிய பின்னரேயே சிறிலங்கா படை RPGஐ பாவிக்கத் தொடங்கியது. யாழ் மண் எதிரியிடம் பறிபோன பின்னர் வன்னியில் 1996 நடுப்பகுதியில் RPGகொமாண்டோப் பயிற்சிகள் நடைபெற்று RPG அணியொன்று உருவாக்கப்பட்டது. முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருந்த காலத்தில் அந்த RPG அணியானது கிளிநொச்சியைக் கைப்பற்ற முனைந்த சத்ஜெய நடவடிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக களமிறக்கப்பட்டது. சிறு அணியாக உருவாக்கம் பெற்றிருந்த RPG அணியானது அப்போது சிறப்பான பெயர் எதுவும் சூட்டப்பட்டிருக்காமல் ஒரு படையணியின் சிறு அணியாகவே செயற்பட்டிருந்தது. சத்ஜெய சமரில் எதிரி அதிகம் டாங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டே படை முன்னேற்றங்களை மேற்கொண்டான். அந்தக் காலத்தில் எதிரியின் டாங்கிகளை எதிர்பார்த்த அளவு அழித்தொழிக்கும் வலுவை RPG படையணி கொண்டிருக்கவில்லை. அப்போது தான் RPG கொமாண்டோ அணியை புதிதாய் வடிவமைக்கும் நோக்கம் தலைவர் பிரபாகரன் அவர்களால் வித்திடப்பட்டது. எப்போதுமே எதிர்காலத்தேவைகளை முற்கூட்டியே உணர்ந்து செயற்படும் தலைவரின் நேரடியான கவனிப்பில் உருவாகியதே RPG கொமாண்டோ அணி. (விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி) இம்ரான் பாண்டியன் படையணியின் கீழ் ‘கவசத்தை உடைப்போம் நாட்டினை மீட்போம்’ எனும் சுலோக வாக்கியங்களைக் கொண்டு ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ உருவாக்கம் பெற்றது. 1997 தொடக்கத்தில் முதலாவது ‘விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாறு ஆரம்பமாகியது. இப்படையணியின் சீருடை நெடுக்கு வரிச்சீருடையாகும். ஏனைய படையணிகளிலிருந்து இப்படையணியானது வித்தியாசமாகவே அறிமுகமானது. இப்படையணியின் முதல் களம் ஜெயசிக்குறு களமாகும். ஜெயசிக்குறு ஆரம்பித்து முடிவதற்கிடையில் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி வீரர்கள் அதிகளவில் வீரச்சாவடைந்தார்கள். எனினும் புதிய புதிய அணிகள் வேகவேகமாகப் பயிற்சிகளை முடித்துக் களத்தில் நின்றார்கள். ஜெயசிக்குறு வெற்றியில் இப்படையணியின் பங்கும் காத்திரமானது. கிளிநொச்சிச் சமரில் வீரச்சாவடைந்த மேஜர் நவச்சந்திரன், ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் மணிவண்ணன், சமாதான காலத்தில் சுகவீனமடைந்து சாவடைந்த லெப்.கேணல் சுட்டா போன்றோர் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளாக இருந்தார்கள். வன்னியின் மீட்பில் கவசப்படையணியின் பங்கு உணரப்பட்டு தலைவரால் உருவாக்கப்பட்ட இப்படையணியின் பொறுப்பாளராக நியமனம் பெற்று இறுதிவரை ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வேராக விழுதாக வாழ்ந்து வீரச்சாவடைந்தார் தளபதி லெப்.கேணல்.அக்பர் அவர்கள். ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாற்றில் அக்பர் அவர்களைத் தவிர்த்து வரலாற்றை எழுத முடியாத அளவு அக்பர் அவர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆணிவேராகியதை என்றென்றும் வரலாறு சுமந்து கொண்டே செல்லும். இவ்வாறு பல தளபதிகள் போராளிகள் மாவீரர்களின் தியாகத்தால் உருவாகிய ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் சிரித்திரனும் இணைந்து கொண்டதும் கவசங்களை உடைத்ததும் இன்னொரு வரலாற்றின் பரிணாமம் தான். யுத்தம் சமாதானம் இரண்டிற்கும் இடைப்பட்ட காலமொன்றை சர்வதேசத்தலையீடு உருவாக்கிய காலம். 2001 சிங்கள ஆளஊடுருவும் படையணி ஆதிக்கம் வன்னி நிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அது RPGகொமாண்டோக்களின் தேவைகளும் அவசியமும் குறைந்த காலம். சிங்கள ஆள ஊடுருவும் படையணியின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய சவால் நிறைந்த நேரமது. RPGகொமாண்டோவில் இருந்த போராளிகள் தரைக்கரும்புலியாவதற்கு தங்களை இணைக்குமாறு தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தார்கள். அவர்களில் சிரித்திரனும் தரைக்கரும்புலியாக தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தான். கரும்புலிகளுக்கு நிகரான ஆள ஊடுருவும் படையணியின் உருவாக்கத்தை தலைவர் தனது நேரடி நெறிப்படுத்தலில் ஆரம்பிப்பதற்கான தருணமும் வந்தது. அப்போது திடீரென ஒருநாள் கரும்புலிகளுக்காக கடிதம் எழுதிய போராளிகளைச் சந்தித்தார். கரும்புலியாக விரும்பிய அனைவரையும் புதிதாக உருவாக்கம் பெறும் ஆளு ஊடுருவும் அணிக்கான பயிற்சிக்கு தயாராகுமாறு அழைத்தார். தலைவன் அருகாமையில் தலைவனின் கண்காணிப்பின் கீழ் அமைந்த அந்த சிறப்பு அணியில் எங்கள் சிரித்திரனும் இணைந்து கொண்டான். குறித்த நேரத்தில் செய்து முடிக்கப்பட்ட வேண்டிய தெரிவுப்பயிற்சிகளில் சிரித்தின் தனது திறனை வெளிப்படுத்தி தெரிவாகி சிறப்புப் பயிற்சியினை முடித்திருந்தான். இக்காலத்தில் திறமையாகச் செயற்பட்ட சிரித்திரனின் திறமையை அவதானித்த ரட்ணம் மாஸ்ர் தலைவரின் பாதுகாப்புப் பணியில் சிரித்திரனை இணைத்துக் கொண்டார். அவனது ஆற்றலும் எடுத்த காரியத்தை சாதிக்கும் வல்லமையும் தலைவரின் பிரத்தியேக உதவியாளராகத் தெரிவு செய்யப்பட்டு தலைவரின் நன் மதிப்பையும் அன்பையும் பெற்றான் எங்கள் சிரித்திரன். சிரித்திரன் என்றால் அவனை யாரும் மறந்துவிடமாட்டார்கள் அந்தளவு எல்லோருக்கும் பிடித்த போராளி. அவனது சிரித்த முகம் , அவனில் சிறப்பாயமைந்த பண்புகள் , எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் பன்முக ஆற்றலுமே எல்லோரிடத்திலும் அவனை அடையாளப்படுத்தியது. சிறந்த சண்டைக்காரன் மிகப்பெரும் ஆற்றலையெல்லாம் அள்ளி வைத்திருந்த பெருமைக்குரியவன் ஆனாலும் தனது கரும்புலிக் கனவை கைவிடாமல் தலைவரின் பிரத்தியேக செயலாளர் பணியின் இடையிலும் தனது கரும்புலியாகும் விருபத்தை தெரிவித்துக் கொண்டேயிருந்தான். குறைந்த இழப்பில் பெரும் இழப்பை எதிரிக்கு வழங்கி பெரிய வெற்றிகளைக் குவிக்கும் சிந்தனையே அவனது செயல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் இருந்தது. தனது தரைக்கரும்புலியாகும் எண்ணத்தை தலைவருக்கு எழுதிவிட்டு கரும்புலியாகும் கனவோடு தான் தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தான். வெளியில் தென்றலாய் சிரிப்பவன் உள்ளுக்குள்ளே எரிமலையை வளர்த்துக் கொண்டேயிருந்தான்.இதயத்தில் ஈரமும் விழிகளில் நெருப்பையும் ஒன்றாய் கொண்ட தேசப்புயல் அவன். சிரித்திரனின் இனிமையான சுபாவம் , அன்பு , ஆழுமை , ஆற்றலை அவதானித்த தலைவர் சிரித்திரனையும் மேலும் சில போராளிகளையும் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்குள் பணிக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்தார். காரணம் சிரித்திரனின் வல்லமையும் ஆற்றலும் தமிழீழ தேசத்திற்கு மேலும் பயனையும் பன்முக ஆற்றலையும் கொண்டவர்களை உருவாக்கும் திறiனையுடையது. அத்தகைய திறமையாக தலைவரின் எண்ணத்திற்கு ஏற்ப சிரித்திரன் தன்னை ஆற்றலாளன் ஆக்கியிருந்தான். தலைவர் அதிகளவில் அவனிடமிருந்து எதிர்பார்த்தார். ஏனெனில் அவனது ஆற்றல் அந்தளவு பெறுமதியானவை. ஆனால் தனது பணியை தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து செய்ய மறுத்து மண்ணில் நிற்பதையே விரும்பினான். தனது முடிவில் தளம்பாமல் ஒரே முடிவாக தாயகத்தில் இருந்து பணி செய்யப்போகிறேன் என்றே வெளிநாட்டுப் பயணத்தை மறுத்திருந்தான். கடைசியில் அவனது விருப்பமே நிறைவேறியது. அவன் வெளிநாடு சென்றிருந்தால் ஆயிரம் சிரித்திரன்களை அவனால் உருவாக்கியிருக்க முடியும். ஆனால் தான் நேசித்த தலைவனை தளபதிகளை போராளிகளைப் பிரிய விரும்பாமல் அவர்களுடனேயே வாழ விரும்பிய இனியவன். இக்காலத்தில் தான் சிரித்திரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு வான்புலிகள் அணியில் இணைவதற்கான அழைப்பு வந்தது. வான்புலிகளின் தேவையை உணர்ந்த சிரித்திரன் மகிழ்ச்சியோடு வான்புலிகள் பயிற்சிக்குச் சென்றான். பின்னால் உலகையே வியக்க வைக்கும் வான்கரும்புலியாகப் போவானென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவன் கரும்புலியாகவே தன்னை வளர்த்துக் கொண்டான். 000 000 000 வான்புலிகளின் வரலாறு 1985 – 1986களில் உருவாக்கம் பெற்று விமானம் கட்டும் பணிகளும் ஆரம்பித்த காலமது. மெல்ல மெல்ல கால ஓட்டத்தோடு புலிகளின் வான்புலிகள் அணியானது உயிர் பெற்று உருவாக்கப்பட்டது. முதல் முதலாக 1998 மாவீரர் நாள் மாவீரர் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்களால் வான்புலிகள் படையணி தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 2000ம் ஆண்டு வான்புலிகள் ஆண்டாக விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டு வான்புலிகள் வரலாறு எழுதப்படத் தொடங்கியது. வான்புலிகளின் வேராகவும் அந்தப் படையணியின் உருவாக்கத்திலும் முக்கிய பங்காக இருந்து இயங்கியவர் தளபதி கேணல் சங்கரண்ணா அவர்கள். சென்னையில் பொறியியல் கல்லூரியில் ஏறோனோட்டிக்ஸ் பிரிவில் BA படித்து முடித்த தளபதி சங்கரண்ணா அவர்கள் கனடா நாட்டிற்குச் சென்று கனடா விமான நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணி புரிந்தார். வெளிநாட்டு வாழ்வை விட்டு தாயகம் திரும்பியவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து புலியாகிப் பல போராளிகளை வளர்த்தெடுத்ததோடு நின்று விடாமல் வான்புலிகளின் தோற்றமும் அவராகினார். வான்புலிகள் உருவாக்கத்தில் உறக்கம் மறந்து இறுதிவரை உழைத்த வீரன் தளபதி சங்கரண்ணா. 2001 செப்ரெம்பர் தியாகி திலீபனின் நினைவுநாளில் சங்கரென்ற இமயம் இலங்கையரசின் ஆழ ஊடுருவும் படையணியால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். எனினும் வானுயர்ந்த புலிவீரம் வான்புலிகள் வளர்சியில் வெகவேகமாக முன்னேற்றமடைந்து வளர்ந்தது. 000 000 000 விமானப்பயிற்சியை முடிப்பதற்கு சாதாரணமாக 2வருடங்கள் வரை செல்லும். ஆனால் சிரித்திரனும் அவனுடனான போராளிகளும் இரவு பகல் ஓய்வு ஒளிவின்றி இயங்கி 3மாதத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டார்கள். அதுவும் வன்னி நிலத்திலேயே வான்புலிகள் பயிற்சியினையும் பயின்று பயிற்சியை நிறைவு செய்தார்கள். பின்னாளில் வான்புலிகளின் வரலாறும் பயிற்சிகள் எங்கே பெற்றிருக்கலாம் என்ற இராணுவ ஆய்வாளர்களின் புனைவுகளும் கற்பனைகளும் ஊடகங்களை நிறைத்தது. எனினும் எவராலும் கண்டறிய முடியாது வான்புலிகளின் வீரம் நிமிர்ந்தது தான் உண்மை வரலாறு. உலகில் எங்குமே நிகழ்ந்திராத மாற்றத்தை புலிகளின் வான்புலி வீரர்கள் நிகழ்த்திக்காட்டினர். வானோடிக்கான பயிற்சியில் சிரித்திரனின் ஆற்றலை நேரிலிருந்து பார்த்த சாட்சியங்கள் இன்றும் அவனை அதிசயிக்கும் அதிசயமாய் அவன் நிமிர்ந்து நிற்கிறான். சிங்கள தேசத்தினால் வன்னி வான்பரப்பில் பறக்க அனுப்பப்படும் ஆளில்லாத வேவு விமானங்களின் தொல்லைகள் அதிகரித்திருந்த காலமது. இவ் ஆளில்லா விமானங்களை சிங்கள தேசம் மிகப்பெரும் செலவில் கொள்வனவு செய்திருந்தது. இவ் ஆளில்லா வேவு விமானத்தை அழிக்க சிரித்திரனும் சக வான்புலி ஒருவரும் மேற்கொண்ட தாக்குதல் பற்றி சிங்கள தேசம் கூட செய்தியை வெளியில் விடாமல் இயந்திரக்கோளாறென்று கதையை முடித்த சம்பவம் ஒன்று வன்னி வான்பரப்பில் நிகழ்ந்திருந்தது. தனது நவீன தொழில்நுட்பத்தினை எவராலும் அழிக்க முடியாதென்று இறுமாந்திருந்த சிங்கள தேசத்திற்கு எங்களால் எதுவும் முடியும் என்று செய்து நிரூபித்துக்காட்டிய சம்பவம் :- அன்றொருநாள் வன்னி வானில் திமிரோடு பறந்த ஆளில்லா வேவுவிமானத்தை சிரித்திரனும் அவனது தோழனும் சுட்டு வீழ்த்தியிருந்தார்கள். அந்த ஆளில்லா விமானத்தை புலிகளின் விமானத்திலிருந்தே சுட்டு வீழ்த்தியிருந்தார்கள் என்பதனை இன்று வரை சிங்கள தேசம் கூட அறிந்திருக்காத உண்மை. இத்தாக்குதலானது மிகவும் ஆபத்தும் சவாலும் நிறைந்தது. புலிகளின் விமானப்பறப்பு அடையாளம் காணப்பட்டால் அவர்களின் தரையிறக்கும் இடம் அடையாளம் காணப்படும். அடையாளம் காணப்படும் போது கிபிர் விமானங்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலமையும் உருவாகும். வான்புலிகளின் விமானமும் பாதுகாப்பாக தரையிறங்க வேண்டும் அதேநேரம் தரையிறங்கும் இடமானது எதிரி அறியாமல் பாதுகாக்கப்பட வேண்;டும். எல்லா பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே தாக்குதலை நிகழ்த்த வேண்டும். ஆளில்லா வேவு விமானங்கள் வீதியில் வேகமாக செல்கின்ற இரு சக்கர ஊர்தியின் இலக்கத்தைக் கூட துல்லியமாகக் கணிக்கக் கூடிய தொழில்நுட்பத் திறனைக் கொண்டது. இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஆளில்லா வேவு விமானம் வன்னியின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது. ஒரு விமானம் பறத்தலில் ஈடுபடும் பகுதியில் அந்த விமானத்தின் உயரத்திற்கு மேல் பறந்து தாக்குவது என்பது இலகுவானது அல்ல. ஆனால் வான்புலிகளால் எங்கும் செல்லவும் வெல்லவும் முடியும் என்பதனை சிரித்திரனும் அவனது தோழனும் நிரூபித்துக் காட்டினர். எதிரி விமானம் பறந்து கொண்டிருந்த சமநேரம் சிரித்திரனும் , அவனது தோழனும் தங்கள் விமானத்தை எதிரி விமானத்திற்கு மேலாக உயரப்பறந்து மேலிருந்து ஆளில்லா வேவுவிமானத்தைச் சுட்டுவீழ்த்தித் தரையிறங்கினார்கள். சிங்கள தேசம் இயந்திரக்கோளாற்றினால் வீழ்ந்ததாகச் சொல்லி தனது இழப்பை வெளியில் தெரியாமல் மறைத்துக் கொண்டது. இந்த மர்மம் பற்றி ஆய்வுகளும் அறிக்கைகளும் பல வடிவங்களின் அப்போது ஆராயப்பட்டது வேறுகதை. வார்த்தைகளை விடவும் வரலாற்றைப் படைத்தவர்கள் புலிகள். அவ்வரலாற்றின் சுவடுகளில் சத்தமின்றிச் சாதித்துவிட்டு தரையிறங்கிய சிரித்திரனும் அவன்கூட அத்தாக்குதலில் இணைந்திருந்த தோழனும் அன்றைய ஆய்வுகளின் கதாநாயகர்கள். ஆனால் அந்த வேர்கள் வெளியில் வராமல் வெற்றியைத் தந்துவிட்டு அமைதியானார்கள். 000 000 000 1998 மாவீரர் நாளன்று வான்புலிகள் பயிற்சியை முடித்த வான்புலி மறவர்கள் விமானத்திலிருந்து முதல் முதலாய் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பூத்தூவி தங்கள் முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள். அன்றைய நாள் தலைவரினால் அதிகாரபூர்வமாக வான்புலிகள் படையணியின் உருவாக்கம் பற்றிய அறிவிப்பு நிகழ்ந்தது. வான்புலிகள் உருவாக்கப்பட்டு முதல் முதலாக எரித்திரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 2 விமானங்கள் முதல் முதலாக வான்படையை உருவாக்கிய எங்கள் தலைவனும் தளபதிகளும் நேரில் பார்வையிட்டு வான் புலிவீரத்தின் அடையாள முகங்களை வாழ்த்தி வரவேற்றார்கள். அவ்விமானங்கள் பின்னர் வரிநிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயார் செய்யப்பட்டது. சிறிய ரக விமானம் நெடுந்தூரம் சென்று வருவதற்குப் போதியளவு எரிபொருள் போததது. ஆனால் தாக்குதலுக்குச் சென்று திரும்புவதற்குத் போதியளவு எரிபொருளை மீதப்படுத்த அவர்கள் மேற்கொண்ட உத்திகளை உலகம் அறிந்ததில்லை. விமானத்தை வழங்கிய நிறுவனத்தால் கூட நெடுந்தூரத்துக்கான பயணத்தினைச் செய்ய முடியாதெனத் தெரிவிக்கப்பட்டும் வான்புலிகள் எரிபொருளை சேமிக்கும் வகையில் விமானத்தை மேலேற்றிப் பறந்து வெற்றியுடன் தாக்குதல்களை நடாத்திவிட்டுத் திரும்பும் வீரத்தையும் வித்தியாசமான உத்தியையும் எவரும் அறிந்திருக்கவே இல்லை. வான்புலிகளின் தோற்றமும் தாக்குதல் வியூகங்கள் வெற்றிகள் உலகிற்குப் புரியாத புதிர்களாகவே அமைந்தது. 000 000 000 தமிழர் நிலத்தைத் தேடி வந்து தாக்கி உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருந்த அரசின் தலைமை மையத்தினுள் „’காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என விடுதலைப்புலிகளின் வான்புலிகள் 26.03.2007அன்று கட்டுநாயக்கா இராணுவ விமானப்படைத்தளத்தின் மீது தாக்குதலை நடாத்தி வான்புலிகளின் இருப்பை உலகிற்கும் அதேவேளை இலங்கையரசிற்கும் அறிவித்தனர். இதுவே முதல் முதல் புலிகள் உரிமையேற்ற முதல் வான்தாக்குதல் ஆகும். அந்தத் தாக்குதலில் சிரித்திரனும் விண்ணிலேறி வீரனாய் நீலப்புலியுடையில் வானோடியாய் போனான். எங்கள் நிலத்தில் வந்து எங்கள் குடிமனைகளையும் குழந்தைகளையும் அழித்தவர்களின் வானில் நின்று தாக்குதல் மேற்கொண்டு திரும்பிய வான்புலிகளில் எங்கள் சிரித்திரனும் ஒருவன். 22.10.2007 அன்று அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வான்புலிகளின் பங்கும் அளப்பரியது. திங்கள் அதிகாலை அனுராதபுரத்தினுள் ஊடுருவிய 21 சிறப்பு ஆண் பெண் கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அனுராதபுரம் வான்படைத்தளம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வீழ்ந்தது. புலிகளின் வான்படையினர் துணையாக அனுராதபுர வான்படை மையத்தினுள் குண்டுகளை வீசி சேதத்தை விளைவித்தனர். திங்கள் பகல் 11மணிவரையும் கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனுராதபுரத்தளத்திற்கு ஆதரவு வழங்க வவுனியாவிலிருந்து அனுப்பப்பட்ட பெல் 212 உலங்குவானூர்தி மிகிந்தலைப்பகுதியில் வைத்து விமான எதிர்ப்பு அணியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி இலங்கையரச வானோடிகளும் உலங்குவானூர்தியும் அழிந்து போனது. இலங்கையரசின் வான்படைபலமானது பெரும் வீழ்ச்சி கண்டது இப்பெரும் அழிவில்தான். 22.10.2007 அன்று 21 விசேட கரும்புலிகள் அணிக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டு எல்லாளன் வாழ்ந்த மண்ணில் புலிவீரத்தை அறியச்செய்த மாவீரர்களின் தியாகத்தில் உலகமே திகைத்தது. அந்த வரலாற்று வெற்றியில் சிரித்திரனும் பங்கேற்றுத் தளம் திரும்பியிருந்தான். வான்புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பயிற்சி பெற்றிருக்கலாம் என தனது இராணுவ ஆய்வில் இராணுவ ஆய்வாளரெனப்படும் இக்பால் அத்தாஸ் கட்டுரையெழுதியிருந்தார். அதேபோல மேலும் சில ஊடகங்கள் மலேசியாவில் பயிற்சிகள் பெற்றிருக்கலாம் எனவும் ஆளாளுக்கு ஆய்வுகள் செய்து கொண்டிருந்தார்கள். எல்லா ஆய்வுகளையும் விஞ்(மி)சிய வான்புலிவீரத்தை இதுவரையில் எந்த ஆய்வுகளும் ஆராட்சிகளும் அதன் அடி முடியைக் கண்டறியவில்லை. தென்னிலங்கையை கலங்கடித்து தென்னிலங்கையில் மட்டும் 7தடவைகள் சென்று தாக்குதலை நடாத்திவிட்டுத் திரும்பினர் வான்புலிகள். அனைத்து நவீன வளங்களையும் அறிகருவிகைளயும் பொருத்தி வானிலேறும் வான்புலிக்கலங்களைத் தேடிக்கொண்டிருந்தது சிங்கள தேசத்தின் தொழில்நுட்பம். அவற்றையெல்லாம் தாண்டி கட்டுநாயக்கா , அனுராதபுரம் ,கொலன்னாவை என வான்புலிகளின் வீரம் உலகை வென்றிருந்தது. ஓரிடத்திலிருந்து மேலெழும் விமானம் திரும்பி வருகிற போது போதிய எரிபொருளைக் கொண்டிராது. எனினும் பிறிதொரு இடத்தில் தரையிறங்கி பாதுகாப்பாக வான்கலங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் திறன் வான்புலிகளுக்கானது. சாவல்களைத் துணிச்சலோடு ஏற்று சாதிக்கவும் , முடியாதென்ற எல்லாவற்றையுமே மனபலத்தால் செய்து முடித்துக் காட்டிய புலிவீரத்தின் வரலாற்றில் வான்புலிகள் வீரமும் வித்தியாசமானது. வவுனியா கூட்டுப்படைத்தளம் மீதான வான்புலிகளின் தீரமிகு தாக்குதலை நடாத்தியதற்காக „நீலப்புலி மறவர்’ விருதினை வான்புலிவீரர்களுக்கு வழங்கி மதிப்பளித்துக் கௌரவித்தார் தேசியத்தலைவர். அதேபோல களனிதிச அனல்மின் நிலையத்தின் மீதான தாக்குதல் உட்பட 5தடைவைக்கு மேல் வான்தாக்குதல்களை நடாத்தி சிங்களத்திற்கு பெரும் பொருளாதார அழிவையும் இழப்பையும் ஏற்படுத்திய வான்புலிகளுக்கு ‚’நீலப்புலி’ விருதினையும் , இத்தாக்குதல்களுக்கு துணையாக செயற்பட்டு தாக்குதல் நடாத்திய துணை வானோடிகளுக்கு ‚’மறவர்’ விருதினையும் வழங்கினார் தலைவர். இப்படித்தான் வான்புலிகளின் வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. தரை கடல் பலத்துக்கு நிகராக எங்கள் தலைவன் படைத்த வான்புலிகளின் சாதனைகளை வெற்றிகளை என்றென்றும் பெருமையுடன் நினைவு கொள்கிறோம். 000 000 000 ஈழத்தமிழர் வரலாற்றில் கண்ணீரையும் துயரையும் அவலத்தையும் தந்த மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழனத்தின் அரசியல் வெளியில் பெரும் வெற்றிடத்தையும் இட்டு நிரப்ப முடியாத இழப்புகளையும் தந்த 2009ம் ஆண்டில் வீரமும் எங்கள் விடுதலையின் அடையாளங்களும் ஒன்றாய் அழிக்கப்பட்டு ஏதிலிகளாக நாங்கள் ஆகிப்போன விதியை எழுதியதும் இதே வருடம் தான். அவலங்கள் நிறைந்த 2009இல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மெல்ல மெல்ல எதிரியின் கையில் இழக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு விடுதலையமைப்பிற்கு எதிராக உலகம் கூட்டுச்சேர்ந்து 30ஆண்டுகால விடுதலைப் பயிரை அதன் வீரியத்தை வீரத்தை பலியெடுத்துக் கொண்டிருந்தது. எதிரியின் கொலைவலயத்தினுள் வன்னி நிலம் முழுமையாகி இழக்கப்பட்டு எஞ்சிய முல்லைத்தீவும் இதோ அதோ என்ற நிலமையில் இருந்த போது மாற்று வழி ஏதோவொன்றைத் திறக்க வேண்டுமென்று திட்டமிடலில் இறங்கியது வான்புலிகள் அணி. புதுக்குடியிருப்பு எதிரியிடம் பறிபோனால் மீள்வதற்கான வழிகள் யாவும் போய்விடும் என்பதனை உணர்ந்த வான்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல்.சிரித்திரன் இருவரும் ஏதாவது செய்ய வேண்டுமென்று முன்வந்து வான்கரும்புலிகளாகினார்கள். கேணல் ரூபன் தனது கடைசிப் பயணத்திற்கு தயாராகிய நேரம் தான்நேசித்த மக்களுக்கு தனது இறுதி மடலை எழுதிவிட்டு தோழன் சிரித்திரனோடு புறப்பட ஆயத்தமானான். 2002களிலிருந்து ஒருநாள் வானேறி பகைவன் பலத்தையழிப்பேனென்று சொல்லிக் கொண்டிருந்த ரூபன் கனவும் அன்று கைகூடும் நாளாக….! விமானத்தை வானேற்றக்கூட பொருத்தமான வான்தளமோ வசதியோ எதுவுமில்லாத சுற்றிவர எதிரியின் கொலைவளையத்தினுள் இருந்து கொலைஞர்களின் கோட்டையில் பேரிடியை இறக்கும் கனவோடு நந்திக்கடல் வெட்டையிலிருந்து புறப்பட்டார்கள் சிரித்தின்,ரூபன். 3லட்சத்துக்கும் மேலான மக்கள் , போராளிகள் சாட்சியாக கேணல் ரூபன், லெப்.கேணல். சிரித்திரன் வானேறினார்கள். அந்த நேரத்து மனவுணர்வுகளையும் அவர்களது தூய்மையான தேசத்தின் மீதான அன்பையும் விடுதலைக் கனவையும் இன்றுவரை உலகம் புரிந்ததில்லை. அவர்கள் புரியாத புதிர்களாகவே என்றும்….! ஆனால் எங்களால் புரிந்து கொள்ளப்பட்ட புனிதங்களாக நெஞ்சம் முழுதும் அவர்கள் நினைவுகள்…..! கொழும்பு நகரம் வான்புலிகள் வரவில் விழித்துக் கொண்டது. சிங்களத்தின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளத்தை அழிக்கும் கனவோடு ரூபன், சிரித்திரன் எதிரியின் மையத்தை நெருங்கியிருந்தனர். கொழும்பு மாநகரம் பயத்தில் உறைந்தது. வெளிச்சம் நிறைந்த தெருக்கள் இருளில் நிறைந்தது. சிரித்திரன் , ரூபன் வரவில் சிங்களம் திகைத்தது. மரண வாசனையைக் கொழும்பு உணர்ந்தது. சாவின் பயத்தைக் சிங்கள தேசம் நுகர்ந்தது. தமிழனித்தின் வரலாற்றை அதன் வீரத்தை 30ஆண்டு விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடும் முனைப்போடு ஆயிரக்கணக்கில் வன்னியைத் தின்று கொண்டிருந்த படைகளின் நெஞ்சிலும் ரூபன், சிரித்திரன் பூகம்பச்சுழியாய் பயமுறுத்திக் கொண்டிருக்க வான்புலிவீரர்கள் இருவரும் வானிலே வரலாறு படைத்திட சிங்கள வான்பரப்பில்….! வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தது வன்னிமண். வான்கரும்புலிகள் இருவரும் எதிரியின் இலக்கை மிகவும் அண்மித்திருந்தார்கள். இலக்கை எட்டும் தொலைவில் புலிகளின் வானுர்தி சிங்களதேசத்து வானில்….! சிரித்திரன், ரூபன் கனவு நனவாகும் கணங்கள் இலக்கு மிக அண்மையாகியிருந்தது. எல்லாம் சரியாக அமைந்து இறுதிக்கட்டத்தில் தாயகக்கனவோடு தமிழரின் சேனையின் வீரத்தைச் சுமந்து புறப்பட்ட வான்கலம் எதிரியின் வானெதிர்ப்பு ஆயுதங்களால் அழிக்கப்பட்டு எங்கள் ரூபனும், சிரித்திரனும் தாயகத்திற்கான பயணத்தில் தங்கள் உயிர்களைத் தந்து எதிரி தேசத்தில் உயிரை விதைத்து காற்றிலேறி விண்ணையும் சாடும் வீரத்தை எழுதிவிட்டு அமைதியாகிப் போனார்கள். அவர்களது தாக்குதல் நினைத்தபடி வெற்றியில்லாது போனாலும் சிங்கள தேசத்தை சேதப்படுத்தி அச்சமூட்டி எங்கள் வீரத்தை அடையாளப்படுத்திவிட்டு இருவரின் மூச்சும் சிங்கள தேசத்தில் நிறைந்தது. தலைவனின் நிழலில் வளர்ந்து வென்றுவரப்போன சிரித்திரனையும் ரூபனையும் எங்கள் தேசம் இழந்தது. ஒருகணம் சுவாசத்துடிப்பெல்லாம் நின்றுவிட்டாற்போலவே அவர்களது தியாகம் அவர்களை நேசித்த எல்லோரின் நெஞ்சிலும் துயரிடி. வானில் பறந்தவர்கள் வானிலே தங்கள் வீரத்தையெழுதிய விலாசம் மறந்த விடிவெள்ளிகள். தங்களின் தாக்குதலில் போர்க்கள நிலமையில் மாற்றம் வருமென்று நம்பிப்போன இரு வீரர்களின் நம்பிக்கையும் கானலாகிப் போனதையும் அறியாமல் ஒருநாள் ஈழம் விடியும் எனும் கனவோடு போன ரூபன் , சிரித்திரன் கனவுகள் உலகெங்கும் வியாபித்துக் கிடக்கிறது. இறுதியாய் சிரித்திரன் ,ரூபன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளும் , எங்கள் முன்னால் விதைத்துச் சென்ற கனவுகளும் இன்னும் ஆறாத , மாறாத காயத்தைத் தந்த போதும் அவர்கள் கனவை நனவாக்கும் வேகத்தோடும் விடுதலையின் மீதான தாகத்தோடும் நகர்கிறது. ஒவ்வொரு மாவீரரின் நெஞ்சிலும் மூண்ட நெருப்பு ஒருநாள் பிரளமாய் எங்களை ஏமாற்றி எங்கள் தேசத்தை அழித்தவர்கள் வீடுகளில் நிச்சயம் இடியாகும். அழிவைத் தந்த ஒவ்வொரு வீட்டிலும் எங்களது விடுதலைக்காய் இழக்கப்பட்ட லட்சக்கணக்கான உயிர்களின் பேரோசை ஒலித்தபடியே இருக்கும்….அது விடுதலையடையும் வரையும் விழித்தபடியே….! உயிர்த்தபடியே….! நினைவுப்பகிர்வு சாந்தி ரமேஷ் வவுனியன் http://mullaimann.blogspot.qa/2014/02/blog-post_14.html
  2. உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில், உணர்வுமிக்க ஊடகவியலாளர் கப்டன் நித்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும். இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச் செய்திருக்கின்றார்கள். இந்த வகையில் பார்க்கின்றபோது மட்டக்களப்பில் 1980 களில் பிரபல்யமான பத்திரிகையாளர்களில் ஒருவரான நித்தியானந்தன் அவர்களையும் முதன்மையாகக் குறிப்பிட முடியும். காலத்தால் அழியாத காவிநாயகர்கள் வரிசையில் மட்டு மண்ணில் பத்திரிகையாளானாக மக்களுக்கு அறிமுகமான நித்தியை மக்கள் சேவையாளனாக, விடுதலையை நேசித்த எழுத்தளானாக, ஒரு போராளியாக, ஒரு மாவீரானாக எமது மக்கள் கண்டுகொண்டது வரலாற்றுப் பதிவின் சிறப்பம்சமாகும். மட்டு மண் போராளியாக, சட்டவாளரை, பொறியிலாளரை, மருத்துவரை, ஆசிரியர்களை மற்றும் பொதுப்பணியாளர்களை பெற்று இழந்திருக்கின்றது, இந்த வரிசையில் ஒரு பத்திரிகையாளன் போராளியாகி மாவீரனாக வீழ்ந்த வரலாற்றுப்பதவில் நித்தியின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கின்றது. ஓர் இனத்தின் எழுச்சி எப்போதும் பாவலர்கள், எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் சார்ந்ததாக இருக்கும். இவர்களால் ஒரு இனத்தின் புரட்சிகர மாற்றத்தையும் உண்டுபண்ண முடியும் என்பது வரலாற்றின் ஒரு பதிவாகும். எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இவர்களுடைய பங்கு இல்லாமல் இருந்ததில்லை என்றாலும் தமிமீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இவ்வகையான எல்லோருடைய பங்கும் இருந்ததென்றும் குறிப்பிட முடியவில்லை. எண்ணற்ற இவ்வகையானவர்கள் எம் மத்தியில் வாழ்த்த போதும், எல்லோரும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கைகோர்த்துச் செல்லவில்லை. காலத்தின் மாற்றமும், எமது இனத்தின் பொருளாதாரப் பண்பாடும் சிலரை போராட்டத்திலிருந்து தள்ளியே வைத்திருந்தது என்பது உண்மையான ஒன்றாகும். உணர்ச்சிப் பாவலன் காசி ஆனந்தன் அவர்கள் தனது கவிதைகளால் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பினார் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இவர்களில் தங்களை இழந்து, தங்கள் குடும்ப சுமைகளைத் துறந்து, வாழ்க்கையில் வசந்தத்தை எமது எதிர்காலச் சந்ததி பெறவேண்டுமென்று தாய் நாட்டின் விடுதலையை நேசித்தவர்களில் நித்தி அவர்களும் ஒருவராவார். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வடிவம் போர்க்கருவிகளைப் பயன்படுத்த தொடங்கிய போராட்டமாக மாறிய காலத்தில் மட்டக்களப்பில் ஆரம்பகாலப் போராளிகளின் செயல்பாடுகளுக்கு பத்திரிகைத் துறைமூலம் தான் ஆற்ற வேண்டிய பங்கை முழுமையாக நித்தி அவர்கள் நிறைவு செய்திருந்தார். மக்களுக்கான சமூகக் பணியையும், அதனோடு இணைந்ததான விடுதலைப் பணியையும் தான் சார்ந்த பத்திரிகை ஊடாக மிகவும் தீவிரமாகவும் செய்து வந்திருந்தார். மட்டக்களப்பில் ஒரு பத்திரிகையாளன் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக தன்னை இணைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டது முன்மாதிரியான முதல் செயல் என்று கூறமுடிகின்றது. மட்டக்களப்புத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு அதன்வழியில் செயல்படத்தொடங்கிய காலம் 1956 ம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகியது. அதற்கு முன்பு படித்தவர்கள், பணக்காரர்கள், அதிகாரமிக்கவர்கள் என்ற சுயநலப்போர்வையில் முழ்கிக்கிடந்த மட்டக்களப்பு தமிழ் சமூகத்தை 1956 ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் புரட்சி புரட்டிப் போட்டதனால் தமிழ்மக்களின் விடுதலையோடு இணைந்ததாக அரசியல் மாறியது. அந்த அரசியலினுடாக விடுதலைப் பயணத்தில் நித்தியைப் போன்றவர்களும் கால்பதித்தனர். மடக்களப்பு மாநகரப் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மஞ்சந்தொடுவாய் ஊரைச் சேர்ந்த நித்தி அவர்கள் 25 .05 .1957 ம் ஆண்டு அன்று பிறந்தார். இவருடைய சொந்தப் பெயர் இராசையா நித்தியானந்தன் ஆகும்.எல்லோராலும் நித்தி என்று அழைக்கப்பட்டார். மட்டக்களப்பில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களையும், மக்களுக்கெதிரான அனைத்து ஒடுக்கு முறைகளையும் வெளி உலகிற்கு தெரியும் வகையில் கொண்டு வந்ததன் மூலம் துணிந்து செயல்பட்ட பத்திரிக்கையாளனாக இனம் காணப்பட்டார். தொழிலாக மாத்திரம் கருதாமல் மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்பட்ட பத்திரிகையாளர்களில் நித்தியும் ஒருவராவார். 1983 ம் ஆண்டுக்குப் பிறகு மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது. எவரும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் அம்மக்கள் குழு அமைந்திருந்தது. இம் மக்கள் குழுவிலும் நித்தி அவர்களின் பங்கு மிகையாக இருந்தது என்றும், எதற்கும் அஞ்சாது துணிந்து கருத்துக்களைத் தெரிவிக்கும் நித்தி தேசிய விடுதலையில் மிகவும் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தார். சொந்தநாடு இழக்கப்பட்டு, அடிமைநிலையில் தாழ்ந்து கிடக்கின்ற தமிழினம் விழித்தெழுந்து, வீரத்துடன் போராடி விடுதலை பெறவேண்டும் என்று தமிழ் இளைஞர்கள் உறுதியாக களத்தில் நின்ற காலத்தில் எழுதுகோல் ஒன்றுடன் எழுந்த தமிழ்த் தேசியத்தின் பத்திரிகையாளராக நித்தி அவர்களை உறுதியாக இன்று பதிவு செய்யமுடியும். சிங்கள ஆக்கிரமிப்புக்கெதிராக போராடிக் கொண்டிருந்த எம்மக்கள் அயல் நாடான இந்தியாவின் படைகளுக்கெதிராக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் களத்தில் நின்ற வேளையில் இந்தியப் படையினரின் தமிழீழம் மீதானஆக்கிரமிப்பு எமது தேசிய விடுதலை இயக்கத்தை அவர்களுக்கெதிராக போராடும் நிலைக்கு காலம் தள்ளியது. இவ்வுலகில் வாழ்கின்ற மனிதஇனம் ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசி, பிரித்துப்பார்க்கக் கூடிய பண்பாடுகளை தம்வாழ்வில் வைத்திருந்தும் விட்டுக்கொடுக்கும் மனமில்லாமல் மனித இனத்தையே மனிதர்களாகியவர்கள் அடிமைப்படுத்த எண்ணுகின்ற போது விடுதலையென்பது வேண்டியதொன்றாகின்றது. மனிதனேயே மனிதன் எதிர்த்துப் போராடுமளவுக்கு இச்செயல் அமைந்து விடுகின்றது. அடிமைப்படுத்தப்படுகின்ற ஓர் இனம் விடுதலை பெறுவதற்கு எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். உலகில் எங்கு வாழ்ந்தாலும் மனிதஇனம் ஏற்றத் தாழ்வில்லாமல் சமனாக வாழும் நிலைக்கு அங்கீகாரம் வழங்க படவேண்டும். இவ்வாறான ஓர் நிலைதான் எமது தாய் நாட்டிலும் ஏற்பட்டது. எமக்கு விடுதலை வேண்டும் என்று சொல்லிக் கொண்டுடிருக்க முடியும். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு போராடமுற்படுபவர்தான் தலைவராகின்றார். அர்பணிப்புகளுக்கு மத்தியில் உருவாகும் தலைவர்தான் அவ்வினத்தினால் தேசியத் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுகின்றார். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது எமது மத்தியிலிருந்து பல இயக்கங்கள் உருவாகின. ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு கொள்கையோடும், ஒவ்வொரு இலக்கோடும் செயல்பட்டதனால் உறுதியான அடிப்படையில் எமது விடுதலைப் போராட்டத்தை நகர்த்த முடியாத நிலையிலிருந்தன. இதனால் கொள்கைப்பிடிப்பற்ற, ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நாற்காலிகளுக்காக, இதனைப் பயன்படுத்த எண்ணிய அமைப்புக்கள் தமிழீழ மண்ணில் செயல்படுவது எமது இலட்சியப் பயணத்தில் இடையூறுகள் ஏற்படும் என்பதால் அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு அனைத்துக் தமிழ்மக்களும் தேசிய விடுதலை இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் கேட்கப்பட்டிருந்தனர். ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு உட்பட ஏனைய அமைப்புக்களிலிருந்தும் குறிப்பிட்ட இளைஞர்கள் இயக்கத்துடன் இணைந்து கொண்டனர். இந்தியப் படையினரின் தமிழீழ வருகையோடு மாறுபட்ட கொள்கையோடு இயங்கியவர்களும் ஒட்டுக் குழுக்களாக தமிழீழ மண்ணில் கால்பதித்தனர். இந்திய, ஸ்ரீலங்கா அரசுகளின் கூட்டுச்சதிக்கு உடந்தையாக செயல்படுத்துவதற்கும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்கும் இவர்களைப் போன்றவர்களைப் பயன்படுத்த இரண்டு அரசுகளும் தொடங்கியது. இதனால் தமிழீழ மண்ணில், தமிழ் மக்களின் தேசிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட அறிவாற்றல் மிக்கவர்களை அழிக்க வேண்டும் என்ற முதல் திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினர். இவ்வரிசையில் மட்டக்களப்பில் மக்கள் குழுவில் செயல்பட்ட வண. பிதா சந்திரா பெர்னாண்டோ, தமிழர் ஆசிரியசங்கத் தலைவர் டி.எஸ். கே வணசிங்க, அதிபர் கணபதிப்பிள்ளை போன்றோர் இந்தியப் படையினரின் ஆதரவில் அவர்களின் அரவணைப்பில் ஒட்டுக்குழுக்களாக செயல்பட்டவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மேற்கூறப்பட்டவர்களின் அளப்பரிய சேவையை மட்டக்களப்புத் தமிழ் மக்கள் இழந்து தவித்தனர். 1988 ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ மண்ணில் தலைவிரித்தாடிய படுகொலைத்தாக்குதல்களுக்கு பல அறிவாற்றல் மிக்கவர்கள் பலியாகினர். உரிமைக்காக, உரத்து ஒலிக்கும் குரல்கள் நசுக்கப்பட்டன. இவ்வரிசையில் மட்டக்களப்பு மாவட்ட வீரகேசரி பத்திரிகையின் நிருபரான நித்தி அவர்களுக்கெதிராகவும் படுகொலை முயற்சியொன்று மடடக்களப்பு பயனியர் வீதியில் அரங்கேறியது. நித்தி அவர்களின் தேசப்பற்று, மக்களுக்கான சமூகப்பணி ஆகியவற்றோடு இணைந்த பத்திரிகைத் துறைச் செயல்பாடு இந்தியப் படையினருக்கும் அவர்களோடு இணைந்திருந்த தேசத்துரோகிகளுக்கும் பெரும் சவாலாக இருந்தது. இதனால் நித்தி அவர்களை படுகொலை செய்வதற்கு முயற்சி எடுத்தனர். 1988 .08 .15 நாள் அன்று நித்தி மிதி வண்டியில் பயனியர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது.அவரை வழிமறித்த தமிழீழ தேசத்துரோகிகள் அவரைத்தாக்கி அவரின் ஆண்ணுறுப்பில் அசிட் திரவத்தை ஊற்றி, குரல்வளையை அறுத்து சாவடைந்து விட்டார் என்ற நிலையில் விட்டுச் சென்றனர். வீதியில் சென்ற பாதசாரிகளின் அவதானத்தில் நித்தி அவர்களுக்கு உயிர் இருப்பது அசைவின் மூலம் தெரிய வந்ததனால் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நித்தி அவர்களின் பத்திரிகைத் துறை நண்பர்களுக்கு சம்பவம் தெரியவந்தவுடன் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பது மேலும் ஆபத்தை உண்டுபண்ணும் என்பதால் தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றியதனால் நித்தி அவர்கள் உயிர் பிழைத்தார். அதன் பின்பு தனது பத்திரிகைத்துறை நண்பர் ஒருவருடன் கொழும்பில் தங்கி இருந்தார். தமிழ் மக்களையும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஆழமாக நேசித்த நித்தி அவர்கள் மட்டக்களப்பில் தனக்கு நேர்ந்துள்ள ஆபத்தை உணர்ந்ததனால் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக தன்னை இணைத்துகொள்ள முடிவு எடுத்தார். இச் சந்தர்பத்தில் கொழும்பில் நித்தி அவர்களைச் சந்தித்த ஒருவர் எமக்கு தெரிவித்த கருத்தின் பிரகாரம் பார்க்கின்ற போது, ஒரு தெளிவான நிலையில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்தது எமக்கு தெரியவந்தது. 1988 ம் ஆண்டு பிற்பகுதியில் மட்டக்களப்பு விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போதைய பொலநறுவ மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழரின் பூர்வீக சொந்தநிலமான மன்னம்பிட்டி என்று அழைக்கப்படுகின்ற தம்பன்கடவை வட்டத்திற்குட்பட பகுதியில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பிரதான முகாம் அமைந்திருந்தது. வெலிக்கந்தைக்கு கிழக்கே திருகோணமடு என்ற இடத்தில் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை நித்தி அவர்களும், சரவணபவான் அவர்களும் (இவர் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக செயல்பட்ட மேஜர்.பிரான்சிஸ் அவர்களின் அண்ணன்) சந்தித்து 1989 ம் ஆண்டு முற்பகுதியில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக தங்களை இணைத்துக் கொண்டனர். அதன் பின்பு நித்தி அவர்களும், சரவணபவான் அவர்களும் கொழும்பு நகரில் தேசிய விடுதலை இயக்கத்திற்கு தேவையான சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டனர். இக்காலத்தில் சரவணபவான் அவர்களும் மேலும் இருவரும் ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டனர். அவர்கள் பற்றி எந்தவித தகவலும் அறிய முடியாததனால் சரவணாபவான் வீரச் சாவடைந்து விட்டார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. விடுதலைப் போராட்டத்தின் வெற்றி நான்கு வருடங்களும் செல்லலாம், நாற்பது வருடங்களும் செல்லலாம், அல்லது அடுத்த தலைமுறைக்கும் நகர்த்தப்படலாம் என்று எமது தேசியத்தலைவர் கூறியதற்கிணங்க விடுதலைப் பயணத்தில் தொடந்தவர்களும் உண்டு, தடம் புரண்டவர்களும் உண்டு என்பதற்கமைய மட்டக்களப்பில் தனது இறுதிக்காலம் வரை பயணத்தில் தொடந்தவர்தான் கப்டன் நித்தி அவர்களாகும். இந்திய படையினர் தமிழீழ மண்ணைவிட்டு வெளியேறிய பின்பு மட்டக்களப்பு இந்துக்கல்லுரி மைதானத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய மாபெரும் கூட்டத்திற்கு நித்தி அவர்கள் ஒரு போராளியாக தலைமை தாங்கினார். 1990 ம் ஆண்டு முற்பகுதியில் தமிழீழமெங்கும் மக்கள் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மிதந்தனர். தமக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்ற உணர்வில் உலாவினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது காவல் தெய்வங்களாக ஏற்றனர். தமிழீழமெங்கும் விடுதலை முழக்கம் ஒலித்தன. விடுதலைப்புலிகள் இயக்கம் தமது நிருவாகப் பணிகளை எங்கும் செய்யத்தொடங்கினர். நித்தி அவர்கள் “கொண்டல்” என்னும் மாதப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார். இப் பத்திரிகை மட்டக்களப்பில் தமிழ் மக்களின் தேசிய பத்திரிகையாக விளங்கியது. எழுது கோலுடன் தமிழ் தேசியத்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கியிருந்த நித்தி அவர்கள் ஒருகையில் எழுதுகோலும் அடுத்தகையில் விடுதலையின் திறவுகோலான ஆயுதமும் ஏந்தி வரலாற்றில் முதல் ஒருவராக பதிவானார். மட்டக்களப்பின் அரசியல், விடுதலை வரலாறு இவ்வாறு உறுதியானவர்களை வைத்து எழுதப்படுகின்றபோது, உதிரிகளான, தடம்புரண்ட உணர்வற்றவர்களால் மாற்றியமைக்கப்படக்கூடாது என்பதுதான் தமிழ்த் தேசியத்தையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழனின் பெருவிருப்பாகும். இதனைத்தான் எமது தேசிய விடுதலை இயக்கமும் கடைப்பிடித்து வந்தது. உறுதியான போராளிகளின் வரலாறு உறுதியான பதிவாக அமையவேண்டும்.போராளிகள் என்றும் ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நாற்காலிகளுக்கு ஆசைப்பட்டவர்கள் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். நித்தி என்ற பத்திரிகைத் துறையைச் சார்ந்த ஒருவர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்துகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு விடுதலைக்கான தடைகளை அகற்றும் பணியில் சாதனையோடு அமைந்த சில தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தினார். அன்றைய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளராக பணியாற்றிய மூத்த போராளி நியூட்டன் அவர்களுடன் இணைந்து மிகவேகமாக, தனது நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலாற்றினார். நித்தி அண்ணன் என்றால் தனிமரியாதையொன்று பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவரிடமும் இருந்தது. தன்னுடன் ஒட்டிக்கொண்டிருந்த குடும்பம் சம்பந்தமான அனைத்து சுமைகளையும் இறக்கிவிட்டு களத்தில் அவர் நின்றதைப் பார்க்கும்போது, பத்திரிகைத்துறையைச் சார்ந்த ஒருவரால் விடுதலைப் போராளியாக மாறி எவ்வளவு சாதிக்கமுடியும், இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் எவ்வாறு தன்னை இழந்து பணியாற்ற முடியும் என்பதை நித்தி அவர்களின் வாழ்க்கையிலிருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளனாக இன்று கூறக்கூடிய நிலையிலிருந்த நித்தி அவர்கள் சுயநலமற்ற ஓர் சிறந்த மனிதராகக் காணப்பட்டார். இன்று இருந்திருந்தால் 32 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பார். மட்டக்களப்பின் பெருநிலப்பரப்பு என்று கூறக்கூடிய மட்டக்களப்பு வாவிக்கு மேற்கே அமைந்துள்ளபகுதிகள் படுவான்கரை என்று அழைக்கப்படுகின்றன. வவுணதீவு,பட்டிப்பளை, போரதீவுப்பற்று என்கிற மூன்று வட்டத்தினைக் கொண்டதாகவும் இப்பகுதி அமைந்துள்ளது. சிற்றூர்களையும், வயல்களையும், சிறிய பரப்பிலான காடுகளையும் உள்ளடக்கிய இப்பகுதியில் விடுதலைப் போராளிகள் பல இடங்களில் தங்கியிருந்தனர்.குறிப்பாக சொல்லப்போனால் இப் பெருநிலப்பரப்பு போராளிகளின் கட்டுப்பாட்டிலும், நிருவாகத்திலும் இருந்தது. 26 04 .1992 நாள் அன்று கொத்தியவலை ஊரின் அருகாமையில் அமைந்த வயல் வட்டத்திலிருந்து புறப்பட்ட நித்தி அவர்கள் குறிஞ்சாமுனை ஊரிலிருந்து கன்னன்குடா ஊருக்கு பணியின் நிமிர்த்தம் செல்கின்றபோதுதான் எதிர்பார்க்காத அந்நிகழ்வு நடந்தது. குறிஞ்சமுனைக்கும் கன்னன்குடாவுக்கும் இடையில் பதுங்கி, மறைந்திருந்த சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் கப்டன் நித்தி அவர்களும், வீரவேங்கை பாலுமகேந்திரா ( கணபதிப்பிள்ளை உருத்திரா, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை ) வும் வீரச்சாவடைந்தனர். இந் நிகழ்வு போராளிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருந்தது. நித்தி போன்றவர்களை போராளியாக பெற்றதையிட்டு பெருமிதம் கொண்டிருந்த அனைவரும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஆண்டுகள் பல உயிருடனிருந்து பணிகளை செய்யவேண்டிய நித்தி குறுகிய காலத்தில் எம்மை விட்டு பிரிந்தது மட்டக்களப்பில் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்றாகும். இவரைப் போன்றவரை நாம் இழந்ததினால் பதவியை குறிவைத்த பலர் உள்ளே நுழைவதற்கு வழியாக அமைந்ததையும் இன்று பார்க்கமுடிகின்றது. ஆண்டுகள் பல கடந்தும், விடுதலைப் புலிகளின் போர்கருவி மௌனிக்கப்பட்டும், விடுதலைப் போராட்ட வடிவம் மாறியிருக்கின்ற நிலையிலும் தமிழ் மக்களை மிகவும் ஆழமாக நேசித்த தன்னலமற்ற உண்மைத் தொண்டனை எண்ணாமல் வரலாற்றில் இருக்க முடியாது. மட்டக்களப்பு மண் ஈன்றெடுத்த தமிழ் விடுதலைப் பற்றாளர்களில் ஒருவரான கப்டன் . நித்தி என்றும் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் எழுத்தும், செய்திகளும் இணைகின்ற இடத்தில் போராளி என்ற புனித ஆன்மாவின் நாயகனாக வரலாற்றில் வலம் வருவார். மக்களுக்கு தேவையான ஒரு நல்ல மனிதரை இழந்தோம், பிரிந்தோம். போராளியாக மாறிய மகத்தான சேவையாளன், தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு ஊடகப்பாலமான சிறந்த பத்திரிகையாளன் கப்டன். நித்தி என்றும் எம் நினைவில் நிலைத்து நிற்பார். எழுகதிர் http://www.asrilanka.com/2015/04/26/28487
  3. சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் – தளபதி பிரிகேடியர் தீபன் தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் தீட்டிய சிங்களப்படை, 2009 ம் ஆண்டு சமர்க்களத்தில், ஆனந்தபுரம் பெட்டிச்சமர் தாக்குதலைத் தலைமை தாங்கிய தளபதி தீபனின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவரையும் அவரது படையணியையும் போரில் தடைசெய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களைக் கொண்டு அழித்தது. போரியல் விதிகளுக்கு எதிராக, மானுடதர்மத்திற்கு முரணாக அமைந்த சிங்களப்படையின் இச்செயற்பாடானது, அவர்களின் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.தளபதி பிரிகேடியர் தீபன், ஈழப்போரின் பல இமாலய வெற்றிகளின் நாயகர்களாகப் பரிணமித்த தளபதிகளில் தனியிடம் பதித்த தளபதி. ஆர்ப்பாட்டமில்லாத ஆளுமையின் வடிவமாக விளங்கிய அவரின் பன்முகப்பட்ட தலைமைத்துவம் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வகிபாகத்தைக் கொண்டிருந்தது. முக்கியமானதும், கடுமையானதுமான சமர்க்களங்களில் தனது ஆளுமையையும் சிறந்த திட்டமிடலையும் வெளிப்படுத்தி, சவாலான களமுனைகளில் தனிமுத்திரை பதித்து, அதனூடாக தன்னை வெளிப்படுத்தி சிறந்த நம்பிக்கையான தளபதியாக பரிணமித்தவர். தளபதி தீபன் அவர்களின் தாக்குதல்களையும் அவரின் செயற்பாடுகளையும் சொல்ல விளையும்போது, தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு போகமுடியும். ஏனெனில், சமர்க்களச் செயற்பாடுகளினூடாக தனக்கென ஒரு தனித்துவத்தை நிலைநிறுத்திய தளபதியாக மிளிர்ந்த தீபன், தளபதி பால்ராஜ் அவர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவரது பாசறையில் இருந்து வெளிவந்தவர். தளபதி தீபன் அவர்களின் ஆளுமை என்பது தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கிலிருந்தும் திட்டமிடும் தன்மையிலிருந்தும் சிறிது மாறுபட்டிருக்கும். ஆனால் இந்த தன்மைகளே இவர்களிருவரும் இணைந்து பல வெற்றிகளை பதிவு செய்வதற்கான தளத்தைக் கொடுத்திருந்தது. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தனித்துவமாக பல போரியல் வெற்றிகளைப் பெற்றதனூடாக தனது தனித்துவத்தை பல இடங்களில் பதிவுசெய்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையைப் பிறப்பிடமாக கொண்ட தீபன் அவர்களின் பூர்வீகம் யாழ்மாவட்டம், தென்மராட்சியின் வரணியாகும். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், விடுதலைக்காக கல்வியை இடைநிறுத்திவிட்டு, 1985 வருடம் மேஜர் கேடில்ஸ் அவர்களிடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தனது விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்தார். கிளிநொச்சியில் தனது ஆரம்பகாலப் பணிகளை தொடங்கினார். இலங்கை இராணுவத்திற்கெதிராக கிளிநொச்சியில் நடைபெற்ற தாக்குதல்களில் பங்குகொண்டதுடன் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தளபதி தீபன் அவர்கள் காட்டிய தீவிரத்தன்மையும் செயற்பாடும் அவரை வன்னி மாவட்ட துணைத் தளபதியாக்கியது. 1990 ம் ஆண்டு, தீவிரமடைந்த ஈழப்போர் இரண்டு காலப்பகுதியில், மிகவும் காத்திரமான போரியல் பங்கை வகித்து, முன்னுதாரணமாக விளங்கிய வன்னிக் களமுனையில், மைல் கற்களாக விளங்கிய பல சண்டைகளில் தளபதி பால்ராஜ் அவர்களிற்கு உறுதுணையாக தலைமைதாங்கிய பெருமை தளபதி தீபன் அவர்களையே சாரும். குறிப்பாக, தாக்குதல்கள் நடைபெறும் சமயங்களில் சில முனைகளில் சண்டை நிலைமை இறுக்கமடையும். அப்போது, தளபதி பால்ராஜ் களமுனைக்கு சென்று நிலைமையை சீர்செய்வார். அச்சமயங்களில், தலைமைக் கட்டளைப் பொறுப்பை தளபதி தீபன் அவர்களிடமே கொடுத்துவிட்டு செல்வார். அந்தளவிற்கு தளபதி தீபன் அவர்களின் தலைமைத்துவத்தில், ஒழுங்குபடுத்தலில் நம்பிக்கையுடையவராகவும், பால்ராஜ் அவர்கள் வழிநடாத்திய தாக்குதல்களில் பலவற்றில் முதுகெலும்பாகவும் செயற்பட்டவர். 1990ம் ஆண்டு, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலை களத்தில் நேரடியாக நின்று வழிநடாத்தினார். இந்த தாக்குதலில், பெரல்களில் மண்ணை நிரப்பி அதனை உருட்டிக்கொண்டு காப்பாகப் பயன்படுத்தி முன்நகர்ந்தே சண்டைசெய்யப்பட்டது. இதன்போது தீபன் அவர்கள் களத்திற்கான தலைமைக்கட்டளையை வழங்கியது மட்டுமல்லாமல், தானும் ஒரு பெரலை உருட்டிக் கொண்டு முன்னேறி சண்டையிட்டார். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதே கையில் காயமடைந்தார். உடனேயே களத்திற்கு விரைந்த தளபதி பால்ராஜ் அவர்கள் சண்டையை தொடர்ந்து நடாத்தி கொக்காவில் முகாமை வெற்றி கொண்டார். பின்னர் மாங்குளம் முகாம் தாக்குதல், வன்னிவிக்கிரம தடுப்புச்சமர் போன்றவற்றிலும் தனது தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கியவர் தளபதி தீபன் அவர்கள். 1991 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்புத்தளபதியாக பால்ராஜ் அவர்கள் பொறுப்பை எடுக்கும் போது, வன்னி மாவட்டத் தளபதியாக தீபன் அவர்கள் நியமிக்கப்பட்டார். வன்னி பெருநிலப்பரப்பின் சிறப்புத் தளபதியாக செயற்பாடுகளைத் தொடங்கிய தீபன் அவர்கள், வண்ணாக்குளம், கெப்பிட்டிக்கொல்லாவையில் எல்.3 எடுத்த சமர், முல்லைத்தீவு முகாமின் காவலரண்களைத் தகர்த்து 50 கலிபர் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைக் கைப்பற்றியது போன்ற பல தாக்குதல்களை தனித்துச் செய்தார். மேலும் மின்னல், ஆ.க.வே தாக்குதல், இதயபூமி ஒன்று, தவளைப்பாய்ச்சல், யாழ்தேவி என பல பாரிய சமர்களில் வன்னி மாவட்ட படையணிகளுக்குத் தலைமை தாங்கினார். இவற்றில், நான்குமணி நேரத்தில் நடத்தி முடித்த மாபெரும் சமரான யாழ்தேவிச் சமரானது எமது போராட்ட வரலாற்றில், மரபுவழிச் சண்டை முறையில் முக்கியத்துவமானதாக அமைந்த தாக்குதல். இதில் தளபதி தீபன் அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ் குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்திய இந்த வரலாற்றுச் சமரில் தளபதி பால்ராஜ் அவர்கள் காயப்பட்ட வேளையிலும், அவரது களமுனையை வழிநடாத்தி வெற்றியை எமதாக்கிய பெருமையில் தீபன் அவர்களிற்கு பெரும் பங்குண்டு. இத்தாக்குதல் பற்றி தீபன் அவர்கள் தெரிவிக்கையில் ‘ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்து கொண்டிருந்தது. எனவே, வரப்போரங்களிலும் பற்றைக் கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும் உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி, எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்து சண்டையிட்டோம்’ என்றார். பாரிய இழப்புகளுடன் சிங்களப்படைகள் பின்வாங்கிய இச்சமரில் ராங்கிகள், கவசவாகனங்கள் அழிக்கப்பட்டதுடன் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பூநகரி தவளை நடவடிக்கையில் பிரதான கட்டளை முகாம் தாக்குதலுக்கான தலைமையைப் பொறுப்பெடுத்து தாக்குதலை வழிநடாத்தினார். பல அடுக்குப் பாதுகாப்பு வியூகத்தைக் கொண்டமைந்த பிரதான முகாமைக் கைப்பற்றும் தாக்குதல் மிகவும் சவாலாக இருந்தது. எதிரி கட்டளை மையத்தை தக்கவைக்க கடுமையாகப் போராடினான். முகாமின் பலபகுதி கைப்பற்றப்பட்டபோதும், இறுதியாக ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்த கடும் சண்டை மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது. பகல்வேளையில் அங்கு சிதறியிருந்த இராணுவத்தினரும் ஒன்றுசேர, முகாமின் எதிர்ப்பும் மிகவும் வலுப்பெற்றது. என்றாலும் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி தாக்குதலை தீவிரப்படுத்தினார். இறுதியில் முகாமிலிருந்து மோட்டார்களை கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நவநீதன் தலைமையில் அணிகளை ஒழுங்கமைத்து மோட்டார்களை கைப்பற்றினார். இச்சம்பவத்தில் லெப் கேணல் நவநீதன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். 1993 ம் ஆண்டு தவளைப்பாய்ச்சல் நடவடிக்கை முடிந்த பின்னர், சிறப்பு வேவுப்பிரிவு தளபதியாக பொறுப்பேற்று யாழ் தீவுப்பகுதித் தாக்குதலுக்கான முழு வேவுப்பணியையும் நிறைவு செய்தார். ஆயினும் அத்தாக்குதல் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் கொக்குத்தொடுவாய்ப் பகுதி முகாம் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, 1995 ம் ஆண்டு சூரியகதிர் பாதுகாப்புச் சமரில் பல களமுனைகளைத் தலைமை தாங்கினார். இதன்போது தனது கையில் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து களமுனைத் தளபதியாக தனது பங்கை வழங்கினார். வலிகாமத்திலிருந்து பின்நகர்ந்ததைத் தொடர்ந்து தளபதி தீபன் அவர்கள் முல்லைத்தீவு முகாம் தாக்குதலுக்கான வேவுப்பணியை செய்வதற்காக தலைவரால் பணிக்கப்பட்டார்;. முல்லைத்தீவு முகாம் வேவு சவாலான விடயமாகவே இருந்தது. இங்கு சிங்களப்படையினர் முகாமின் காவல்நிலைகளை மிகவும் நெருக்கமாக அமைத்து உச்ச அவதானிப்பில் வைத்திருந்தனர். தாக்குதலுக்கான வெளிப்பகுதி வேவுகள் முடிந்திருந்தாலும், சண்டையைத் தீர்மானிக்க முகாமிற்குள் நுழைந்து வேவு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேவுப்பிரிவினர் கடுமையாக முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இதற்கு மாற்றுவழி ஒன்றைச் சொன்னார் தளபதி தீபன் அவர்கள். எதிரியின் ‘டம்மிக் காவலரணை’ இனம் கண்டு, எதிரியின் ரோந்து செல்லும் நேரத்தைக் கணிப்பிட்டு, அந்த நேர இடைவெளிக்குள் காவரணின் சுடும் ஓட்டைக்குள்ளால் காவலரணுக்குள் உட்புகுந்து, இராணுவத்தின் ரோந்தை அவதானித்துவிட்டு முகாமிற்குள் செல்லுமாறு திட்டம் வகுத்தார். அவ்வாறே உள்முகாம் வேவுகளை துல்லியமாகச் செய்து முடித்தனர். முல்லைத்தீவுத் தாக்குதல் நடவடிக்கையின் போது, முகாமின் மேற்குப்பகுதியைக் கைப்பற்றி, முகாமின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பு தளபதி தீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லெப் கேணல் தனம், லெப் கேணல் பாக்கியராஜ், லெப்கேணல் ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி படையணியுடன் களமிறங்கினார் தீபன். தாக்குதல் ஆரம்பித்து முன்னணிக் காவலரண் கைப்பற்றப்பட்டவுடன், உட்தாக்குதல் அணியுடன் சென்று மிகவேகமாக முகாமின் மையப்பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தார். ஏனெனில் எதிரியின் இரண்டாவது காவலரண் தொகுதியானது நீரேரியின் கரையில் அமைந்திருந்தது. கடற்கரைப்பக்கத்தால் உள்ள சிறிய தரைப்பாதையாலேயே படையணிகள் உள்நுழைய வேண்டும். அதில் பலமான காவலரண்களை எதிரி அமைந்திருந்தான். அந்தப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட கரும்புலிப்படகால் வேகமாக வந்து பாய்ந்து வெடிக்கவைப்பதனூடாக எதிரியை அழித்து படையணியை நகர்த்துவதாக திட்டமிருந்தாலும், அந்த நடவடிக்கை சாத்தியமில்லாமல் போகும் நிலையேற்பட்டால் மாற்று வழி படையணிகளிடமே கொடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான களத்தில் தான் நிற்கவேண்டும் என்பதை கருத்தில் வைத்து, முன்னணிக் காவலரண்கள் சரியாக பிடிபடாத நிலையிலும், 2 கிலோ மீற்றர் பின்னால் உள்ள தாக்குதல் முனைக்கு படையணிகளுடன் வேகமாக நகர்ந்து தாக்குதலில ஈடுபட்டார். மையப்பகுதி தாக்கப்பட்டதால் நிலைகுலைந்த சிங்களப்படை, ஆட்லறிகளையும் மையப்பகுதியையும் பாதுகாக்க முடியாமல் விட்டுவிட்டுப் பின்நகர்ந்தது. இராணுத்தினரின் மையக் கட்டளைப்பகுதி ஆட்டங்காணத் தொடங்கியதுடன் இராணுவத்தின் ஒழுங்கமைப்புத்திறன் பாதிக்கப்பட்டது. இதுவே முல்லைத்தீவு முகாமின் தாக்குதல் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது. சத்ஜெய – 03 நடவடிக்கையில் பாதுகாப்புச் சண்டையை வழிநடாத்திய போது, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான சண்டையாக உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் எள்ளுக்காட்டுப் பகுதியைக் கைப்பற்றி நிலைகொண்ட சிறப்புப் படையணி மீது நடாத்தப்பட்ட உடனடி ஊடறுப்புத் தாக்குதல் அமைந்தது. உருத்திரபுரம் பகுதியை சிறிலங்கா சிறப்புப்படைகள் கைப்பற்றியபோது அதனால் ஏற்படக்கூடிய பாதக நிலையை உணர்ந்து, உடனடி ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டார். சிறிலங்காவின் சிறப்புப்படைகள் வாய்க்கால் வரம்பை தமக்கு சாதமாக்கி நிலையெடுத்திருந்தது. எதிரியின் முன்பகுதி வயல் வெட்டை என்பதுடன் அக்காலப்பகுதி நிலவுகாலம். நிலவு கிட்டத்தட்ட அதிகாலை 4.30 மணிக்கு மறையும். 6 மணிக்கு விடிந்துவிடும். அந்த இடையில் கிடைக்கும் 1.30 மணிநேர இடைவெளிக்குள் நகர்ந்து தாக்குதலை நடாத்த வேண்டிய நிலைமை. என்றாலும் தளபதி லெப் கேணல் தனம் தலைமையில் அணிகளை ஒழுங்குபடுத்தி, நிலவிற்குள் நகரக்கூடியளவிற்கு படையணிகளை நகர்த்தி, காப்புச் சூடுகளை ஒழுங்குபடுத்தி, நிலவு மறையும் அத்தருணத்திற்குள் திடீர் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடாத்தினார். வேகமான இத்தாக்குதலில் 150 இராணுவத்திற்கு மேல் கொல்லப்பட்டதுடன் இராணுவத்தின் நகர்வு சில காலம் முடக்கப்பட்டது. தளபதி தீபன் அவர்களின் தொடர்ச்சியான தாக்குதல் பங்கேற்புகளும் அவருடைய தலைமைத்துவமும், ஒருங்கிணைக்கும் தன்மையும், தாக்குதல்களை திட்டமிடும் இலாவகமும் இன்னுமொரு பரிணாமத்தையடைந்தது. களமுனைகளில் நிலைமைக்கேற்றவாறு தாக்குதல் வியூகங்களை வகுப்பது, களங்களில் நேரடியாகச் சென்று வழிநடாத்தும் தன்மை, தனது பொறுப்பை நிறைவேற்றும் பாங்கு, ஒருங்கிணைத்து வழிநடாத்தும் பாங்கு என தளபதியின் ஆளுமை போராளிகளிடத்தில் நல்ல அபிப்பிராயத்தைக் கொடுத்ததுடன் அவருடைய தலைமைத்துவத்தையும் வலுப்படுத்தியது. 1997 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியாக தீபன் அவர்கள் பொறுப்பேற்றார். சாள்ஸ் அன்ரனி படையணியுடன் தீபன் அவர்களின் போர் நடவடிக்கைகள் இன்னுமொரு கட்டத்திற்குள் நகர்ந்தது. இந்தநேரத்தில்தான் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது. இந்த இராணுவ நடவடிக்கையைத் தடுக்கும், வவுனியா களமுனையை வழிநடாத்தும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையின் பிரதான போர்முனையான ஏ-09 பாதையால் முன்னேறும் எதிரியைத் தடுக்கும் சண்டையென்பது அந்த எதிர்ச்சமரின் பிரதான பகுதியாக இருந்தது. ஓமந்தையில் தொடங்கிய மறிப்புத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்ட பெருமை நிச்சயமாக தீபன் அவர்களையே சாரும். இப்பாரிய படைநகர்வை எதிர்கொண்டபோது ஓமந்தை, இரம்பைக்குளம், பன்றிக்கெய்தகுளம், பனிக்கநீராவி போன்ற இடங்களில் பல ராங்கிகளை அழித்து சிங்களப்படைக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார். இதில் புளியங்குளம் சண்டை என்பது ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு பலத்த இழப்பைக் கொடுத்த சண்டையாகும். புளியங்குளம் சந்தியை மையப்படுத்தி முகாம் ஒன்றை அமைத்து எல்லாத் திசைகளிலும் இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடியவாறு படையணிகள் தயார்படுத்தப்பட்டன. இராணுவம் பல திசைகளிலும் மாறிமாறி புளியங்குளத்தில் விடுதலைப்புலிகளின் படையணியைப் பின் நகர்த்த கடும்பிரயத்தனப்பட்டது. இலகுவில் வன்னியை ஊடறுக்கலாம் என கங்கணம் கட்டிய சிங்களப்படைக்கு புளியங்குளத்தில் தளபதி தீபன் தலைமையில் வீழ்ந்த அடியானது, ஒட்டுமொத்த ஜெயசிக்குறு இராணுவத் தலைமையினதும் சிங்களச் சிப்பாய்களினதும் மனோதிடத்தை பலவீனமாக்கியது. மிகவும் கடுமையான சண்டையாக வர்ணிக்கப்பட்ட இச்சண்டை ஜெயசிக்குறுவின் தலைவிதியை மாற்றியமைத்தது. இந்த கடுமையான போர்க்களத்தை கடும் உறுதியுடன் புலிகள் எதிர்கொண்டனர். தளபதி தீபன் அவர்கள் புளியங்குளம் ‘பொக்ஸ்’ பகுதிக்குள் தனது கட்டளை மையத்தை நிறுவி அங்கிருந்தே தடுப்புத்தாக்குதலை ஒழுங்கமைத்து தெளிவான, நிதானமான, உறுதியான கட்டளையை வழங்கினார். ஒரு பாரிய படைவலுவைக் கொண்ட சிங்களப்படையை நிர்மூலமாக்கியதுடன் மூன்று மாதங்களிற்கு மேல் எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி பாரிய பின்னடைவுக்குள்ளாக்கினார். ஒருதடவை விடுதலைப்புலிகளின் நிலையை ஊடறுத்துவந்த துருப்புக்காவியையும் கைப்பற்றினர். இது சராசரி 60 பேருக்கு மேல் தினசரி காயமடையும் களமுனையாக இருந்தது. அங்கு 3 அல்லது 4 தடவைகளிற்கு மேல் மாறிமாறி காயப்பட்டாலும் தொடர்ந்து ‘புளியங்குளத்திற்கு தீபண்ணையிட்ட போகப் போறம், எங்களுக்கு மருத்துவ ஓய்வு தேவையில்லை’ என தீவிரமாக போராளிகள் செயற்பட்டு புளியங்குளத்தை புலிகளின் குளமாக மாற்றினர். இதன் நாயகனாக விளங்கியவர் தளபதி தீபன் அவர்களே! ஒரு வருடங்களுக்கு மேல் நடந்த ஜெயசிக்குறுச் சமரில் புளியங்குள மறிப்பு என்பது விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதலாவது வெற்றிகரமான தடுப்புச் சமர் என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் மனோதிடத்தை பாரியளவில் பலவீனப்படுத்திய, எதிரிகளாலும் வியந்து பார்க்கப்பட்ட சமராகும். பின்னர், கிளிநொச்சியை மீளக்கைப்பற்ற நடாந்த சமரில் டிப்போச் சந்திவரை கைப்பற்றிய தாக்குதலை தலைமை தாங்கியதுடன், அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-02 எனப் பெயரிடப்பட்ட தாக்குதலில் எதிரியை ஓடவிடாமல் தடுத்து, வரவிடாமலும் மறிக்கும் பொறுப்பை தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடாத்த, முற்றுகைக்குள் வைக்கப்பட்ட கிளிநொச்சி முகாம்களைத் தகர்த்தழிக்கும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் வழிநடாத்தினார். கிளிநொச்சி நகரப்பகுதியை மையப்படுத்தி பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை கொண்டமைந்த பாதுகாப்பு அரண்களை உடைத்து தாக்குதல் நடைபெற்றது. சில இடங்களில் காவலரண்களைக் கைப்பற்றுவதும் பின்னர் சிங்களப்படைகள் அதை மீளக் கைப்பற்றுவதும் என கடுமையான சண்டைகள் நடைபெற்றன. தளபதி தீபன் அவர்கள் பூநகரி, முல்லைத்தீவு முகாம் தாக்குதல்களில் ஏற்பட்ட சிரமங்கள், சாதகங்கள் போன்றவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை வழிநடாத்தினார். இறுதியாக பிரதான மைய பாதுகாப்பு காவலரண் பகுதியில் கடுமையான எதிர்பை எதிர் கொண்டார். ஏற்கனவே பூநகரி சண்டையில் பிரதான முகாமை கைவிட வேண்டி புலியணிகளுக்கு ஏற்பட்டதன் காரணங்களைப் புரிந்த அவர், இதுபோன்ற ஒரு தோல்வி மீள ஏற்படக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இறுதியான ஒரு முயற்சியை செய்யத் தீர்மானித்தார். தளபதி லெப் கேணல் சேகர் தலைமையில், தளபதி லெப் கேணல் வீரமணியின் நேரடி வழிகாட்டலில் எதிரி எதிர்பார்க்காத வண்ணம் பகல் நேர உடைப்புத் தாக்குதல் ஒன்றை ஒழுங்குபடுத்தினார். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை இருந்தும் கூட, பகல் நேர உடைப்பை வெற்றிகரமாக செய்யலாம் என திடமாக நம்பி, சாள்ஸ் அன்ரனி படையணியை களமிறக்கி அதில் வெற்றியடைந்தார். ஆனையிறவிலிருந்து உதவியணியும் வரவில்லை என்பதுடன் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணும் உடைக்கப்பட்டதை உணர்ந்த இராணுவம் பின்வாங்கலைச் செய்தது. இதில் பெறப்பட்ட வெற்றியானது அவரது தலைமையின் காத்திரத்தன்மையை வெளிப்படுத்தியது. சமநேரத்தில் கிளிநொச்சியின் வெற்றியை கொண்டாட முடியாத வகையில் சிங்களப்படைகள் கருப்பட்டமுறிப்பு, மாங்குளம் பகுதியைக் கைப்பற்றியது. தலைவரின் திட்டத்திற்கமைவாக, தளபதி பிரிகேடியர் சொர்ணம் தலைமையில் ஓயாத அலைகள் -03 தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதிக் களமுனை ஒட்டிசுட்டானில் திறக்கப்பட்டது. அதன் இன்னுமொரு முனை, தளபதி தீபன் தலைமையில் மாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டது. பல மாதங்களாக முன்னேறிய ஜெயசிக்குறு படையணி சில நாட்களுக்குள் மீள வவுனியாவிற்கே பின்நகர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-03 இன் தாக்குதல் முனைகள் பரந்தனிலும் சுண்டிக்குளப் பகுதியிலும் தனங்கிளப்புப் பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பரந்தன் பகுதியிலிருந்து ஆனையிறவை நோக்கிய படைநகர்வு தளபதி தீபன் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது. பரந்தனில் பகல் பொழுதில் தாக்குதலைத் தொடங்கி, பரந்தன் காவலரண்களைத் தகர்த்து முன்னேறி புலியணிகள் நிலைகொண்டனர். மறுநாள் தாக்குதலுக்கான நகர்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தவேளை, எதிரி பின்னால் உள்ள வீதியில் புதிய அரண்களை அமைத்து நிலையெடுத்தான். தன் பலத்தில் அதிக நம்பிக்கை கொண்டு, தளபதி தீபன் அவர்கள் வோக்கியில் குறுக்கிட்டு ‘உன்ர தளபதி 5.2ஜ (லெப் கேணல் ராகவனின் சங்கேதப்பெயர்) ஒட்டிசுட்டானில் போட்டிட்டம், இனி என்ன செய்யப் போகிறாய்’ என்று கேட்டான். ‘அதுக்குத்தான் இப்ப உன்னட்ட வந்திருக்கிறம், எங்களையென்ன ஒட்டிசுட்டான் ஆமியெண்டு நினைச்சியே, நடக்கப்போறத பொறுத்திருந்து பார், என்று நிதானமாகவும் சவாலாகவும் சொன்ன தளபதி தீபன், மறுநாள் அதை செய்தும் காட்டினார். அதைத்தொடர்ந்து ஓயாத அலைகள்-04 நடவடிக்கையில் குடாரப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் தரையிறங்கி எதிரியை ஊடறுத்து நிலையமைத்து நிற்கும் மூலோபாய நகர்வின் வெற்றியானது, அச்சமருக்காக தரைவழியாக ஏற்படுத்தப்போகும் விநியோகப் பாதையில் தங்கியிருந்தது. அதற்கான உடனடி வெற்றியை பெறவேண்டிய முக்கியமான களமுனையை தளபதி தீபன் வழிநடத்தினார். ஆனையிறவு வீழ்ச்சியின் அடிப்படைக்கு மிகவும் முக்கியமான களத்தை செயற்படுத்துவது சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆரம்பத் தாக்குதலில் சில பிரதேசங்களை கைப்பற்றி தக்கவைக்க முடிந்தது. மறுநாள் தாக்குதலுக்கான உத்திகளை வகுத்து தீர்க்கமான முடிவுடன் இருந்த தளபதி தீபன் அவர்கள், தளபதி பால்ராஜ் அவர்களிடம் ‘நாளைக்கு விடிய பாதையை திறந்து உங்களுக்கு விநியோகம் அனுப்பி வைப்போம்’ என உறுதியுடன் தெரிவித்து அதை செய்து முடித்தார். பின்னர் ஆனையிறவுத் தளத்தை தடுக்கும் நோக்குடன் செய்யப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல் முயற்சிகள் பல செய்தாலும் அவை வெற்றியைத் தரவில்லை. இறுதியில் மருதங்கேணிப் பாலத்தை அண்மித்த பகுதியில் தளபதி தீபன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் ஒழுங்குபடுத்திய ஒரு ஊடறுப்பு முயற்சி வெற்றியைக் கொடுக்க, நகர்ந்த புலியணிகள் புதுக்காட்டுச் சந்தியை சென்றடைந்தன. தாம் சுற்றிவளைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்த படையினர் ஆனையிறவுத் தளத்தை விட்டுப் பின்வாங்கினர். இச்சமரின் வெற்றிக்கு கணிசமான பங்கை தளபதி தீபன் அவர்கள் வழங்கியிருந்தார். விடுதலைப்புலிகளினால் ஓயாத அலைகள் என்று பெயரிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் அனைத்திலும் பங்கு கொண்டவர் என்ற பெருமை பெற்ற ஒரே தளபதி தீபன் அவர்கள் மட்டுந்தான். 2001 ம் ஆண்டு சிங்களப்படை ஆனையிறவை மீளக் கைப்பற்ற தீச்சுவாலை என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டிருந்தது. வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் இருதரப்பினருக்கும் பலப்பரீட்சையாக அமைந்த தாக்குதல் அது. அதிகாலையில் இரண்டு பக்கத்தால் விடுதலைப்புலிகளின் நிலைகளை ஊடறுத்த படையினர் இரண்டாவது நிலையை அண்மித்து தமது நிலைகளை அமைத்தனர். களத்தின் இறுக்கத்தை உணர்ந்த தளபதி, ‘எமது நிலைகளிலில் இருந்து பின்வாங்காமல் அப்படியே இருந்து சண்டையிடுங்கள்’ என்ற கட்டளையை வழங்கி அணிகளை ஒழுங்குபடுத்தி கடுமையான சண்டையை மேற்கொண்டார். தளபதி தீபன் அவர்களின் கட்டளை மையத்தைத் தாண்டி இராணுவம் நகர்ந்த போதும் பின்வாங்காமல், எதிரியால் கைப்பற்றப்பட்ட எமது முதலாவது நிலைகளை பக்கவாட்டால் தாக்குதல் செய்து மீளக் கைப்பற்றினார். தாங்கள் உள்நுழைந்த பாதை மூடப்படுகின்றது என்பதை அறிந்த எதிரி, பின்வாங்கி ஓட்டமெடுத்தான். இச்சமரில் பலத்த இழப்பைச் சந்தித்த இராணுவம் நூற்றுக்கு மேற்பட்ட உடல்களை கைவிட்டு பின்வாங்கியது. இத்தாக்குதல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தளபதி தீபன் அவர்கள் முன்னரங்க நிலைகளிற்குப் பொறுப்பாக இருந்தபோது இதேவகையான நகர்வை எதிரி மேற்கொண்டான். இதன்போது விடுதலைப்புலிகளில் 75 பேரின் உடல்கள் விடுபட்டிருந்தது. இந்தச் சம்பவம் தளபதி தீபன் அவர்களின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக தலைவர் கொடுத்த புதிய கைத்துப்பாக்கியை கழற்றி வைத்துவிட்டு, இராணுவத்தின் 100 உடல்களை எடுக்காமல் அந்தக் கைத்துப்பாக்கியைக் கட்டமாட்டேன் என்ற கொள்கையில் இருந்தார். இந்த சமரில் தனது சபதத்தை நிறைவேற்றினார். மீண்டும் ஆரம்பித்த ஈழப்போர்-04 இல் முகமாலைச் சமரின் கட்டளைத்தளபதியாக பல சண்டைகளைத் தலைமை தாங்கினார். எதிரியின் பல நகர்வுகளை முறியடித்து, முகமாலையிலிருந்து பின்வாங்குவதற்கான கட்டளை கிடைக்கும்வரை அந்தக்களமுனையில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்காமல் களமுனையை வழிநடாத்தியவர் தளபதி தீபன் அவர்கள். தளபதி தீபன் அவர்கள் காலமாற்றத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு செல்லும் தலைமைப்பாங்கு கொண்டவர். தாக்குதல்களின்போது எந்த இக்கட்டுக்குள்ளும் தெளிவான நிதானமான கட்டளை அவரிடமிருந்து கிடைக்கும். நிலமைகள் இறுக்கமடையும் போது நிதானமாக வரும் கட்டளையானது ‘இடத்தைவிட்டு அரக்காமல் சண்டையிடுங்கள்’ என்பதாக இருக்கும். பல சிக்கலான சந்தர்ப்பங்களில் தருணத்திற்கேற்றவாறு திட்டங்களைக் கொடுத்து அந்தச் சூழலை தனதாக்கும் தன்மை அவருடையது. அத்தகைய தளபதியை வெல்லமுடியாது என்பதால்தான் கோழைத்தனமாக நச்சுக்குண்டால் எதிரி அழித்தான். தீபன் அவர்களின் சகோதரனான கில்மன், ஆரம்பத்தில் பால்ராஜ் அவர்களின் மெய்ப்பாதுகாவலராக இருந்தார். பின்னர் சாள்ஸ் அன்ரனி படையணிக்கு தளபதியாக பால்ராஜ் அண்ணை பொறுப்பெடுக்கும் போது, அவருடன் சாள்ஸ் அன்ரனி படையணிக்குச் சென்று, தனது கடுமையான முயற்சியினாலும் போர்ப் பங்கேற்புகளினாலும் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியானார். 1994 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான காலப்பகுதியில் மணலாற்றில் சாள்ஸ் அன்ரனி படையணியுடன் வந்திருந்தார் கில்மன், அச்சமயங்களில் தீபன் அவர்கள் வேட்டைக்குச் சென்று தினசரி மிருகங்களை வேட்டையாடி வருவார். ஆனால் கில்மனும் வேட்டைக்கு போவார், ஆனால் வேட்டையாடுவதில்லை. இதையறிந்த தீபன் அவர்கள், மரையின் படம் ஒன்றை கொடுத்தனுப்பி, ‘உண்மையான மரையை சுடமுடியாட்டி இந்த படத்தில இருக்கிற மரையையாவது சுடுமாறு கூறியிருந்தார்’. தமையனின் கிண்டலைப் புரிந்து, எப்படியாவது வேட்டையாடியே ஆக வேண்டும் என முயற்சியெடுத்து இரண்டு மரைகளை வேட்டையாடினார். பின்னர் அம்மரைகளின் ‘குரை’ களை வெட்டி தீபன் அவர்களிடம் அனுப்பிவைத்தார். பின்னர் கில்மன் திருமலைக்கு படையணிகளுடன் புறப்பட்டபோது தீபன்ணை வழியனுப்பி வைத்தார். அதுவே அவர்களது இறுதிச் சந்திப்பென காலம் தீர்மானித்தது போலும். திருமலையில் பலவெற்றிகரமான தாக்குதல்களை வழிநடாத்திய லெப்.கேணல் கில்மன் திருகோணமலையில் வெடிவிபத்தொன்றில் வீரச்சாவடைந்தார். தளபதி தீபன் அவர்களின் ஆளுமையும் வீரமும் தமிழ் இனத்தின் இரத்தத்தில் எப்போதும் கலந்திருப்பவை. இன்றைக்கு ஈழப்போராட்டத்தின் பின்னடைவு நிலையிலும் தளபதி தீபன் அவர்களின் வீரவரலாற்றை மீட்டுப்பார்ப்பது என்பது தமிழர்களின் வீரப்பண்பை, போரிடும் ஆற்றலை நினைவுபடுத்திக் கொண்டிருப்பதற்காகவும், தாம் கொண்ட கொள்கைக்காக எத்தகைய சவால்களை எதிர்கொண்டார்கள் என்பதை தொடர்ச்சியாக நினைவு கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவும் தான். எமது வீரம் சிங்களத்திடம் தோற்றுப் போகவில்லை, உலகத்திடம் தான் தோற்றுப்போனது. ஈழத்தமிழினம் தோல்வியடைந்தது என்ற மனப்பான்மை கொள்ளாது, தொடர்ந்து நம்பிக்கையுடன் தீரமாக விடுதலைக்கான வழிமுறைகளை நோக்கி திடசங்கற்பத்துடன் பயணிக்க வேண்டும். இன்றைக்கு எத்தனையோ ஆயிரம் மாவீரர்களை விதைத்த கல்லறைகள்கூட எதிரியினால் அழிக்கப்படுகின்றன. எமக்காக மரணித்த மாவீரர் கல்லறைகளின் அடையாளங்கள் அகற்றப்பட்டாலும் ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் வாழும் அந்த ஜீவன்களின் தூய்மையான தியாகத்திற்கு கொடுக்கப்போகும் வெகுமதி என்ன? வெறுமனே நினைவுகூறல்களுடன் முடித்துக் கொள்ளப்போகின்றோமா? அல்லது உண்மையான இலட்சிய மைந்தர்களின் கனவுகளிற்காக தொடர்ந்து ஒற்றுமையாகவும் கடுமையாகவும் உழைக்கப் போகின்றோமா என்பதே எம்முன் உள்ள கேள்வி! அபிஷேகா. http://www.asrilanka.com/2012/04/04/287
  4. நன்றி வாத்தியார் மற்றும் தமிழரசு. அனைத்து உறவுகளையும் இதில் பங்குகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
  5. லெப். சீலன் , வீரவேங்கை ஆனந் வீரவணக்கம்….! ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர். சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது. தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார். 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை. அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன். 1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது. 1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது. 1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர். 1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது. 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர். இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார். திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர். லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுநடை போட்டுச் செல்கின்றது. இவ்விரு வேங்கைகளின் 27 வது ஆண்டின் நினைவின் இன்றைய தினத்திலே லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் இருவருக்கும் எமது அகவணக்கத்தை செலுத்தி அவர்கள் விட்டுச் சென்ற வழியிலே ஒன்றிணைந்த தமிழினத்தின் பலமாக எமது விடியலின் கதவினைத் திறக்க அயராது பாடுபடுவோம்.. விடுதலையடைவோம்!! சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை. சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர். தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார். இது பற்றி ‘நாராயணசாமியும்’ எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை. பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. பிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மானிப்பாயில் மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர். (வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது. இதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான். அக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது. மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது. சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.) புலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர். தீவிர பொதுவுடமைவாதி. அவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.) அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘அதோ அந்தப்பறவை போல…’. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம். தலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார். அவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது. புலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார். சீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் ‘இதயச்சந்திரன்’. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான். புலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது. ——— லெப் .செல்லக்கிளி, லெப்.சீலன் 1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன. 1982, அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சாலையைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல்நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், ஒன்பது 303 ரைபிள்கள், இரண்டு எந்திரத் துப்பாக்கிகள், ஒரு சுழல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் இறந்தனர். தாக்குதலுக்குத் தலைமை ஏற்ற சீலன் உள்ளிட்ட இரு போராளிகள் அப்போது காயமுற்றனர். தனது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொடிய அடக்குமுறைகளையும், இனவெறியையும் கட்டவிழ்த்துவிட்ட ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் வாக்குக் கேட்க (1982 செப்டம்பர்) யாழ்ப்பாணம் வந்த அதே நாளில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் வாகனங்கள் வருகையில் கொரில்லா வீரர்கள் தாக்கினர். பாலமும் நிலக்கண்ணி வெடிமூலம் தகர்க்கப்பட்டது. கொடுமைகள் இழைப்பதில் பேர்போன பருத்தித்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிளிநொச்சியருகே, உமையாள்புரத்தில் ராணுவப்படையினருடன் நடந்த நேரடி மோதலில் ராணுவத்தினர் காயத்துடன் தப்பி ஓடினர். புலிகளை ஒழிக்க 1983 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, யாழ் மாவட்ட அமைச்சர் விஜயக்கோன் தலைமை ஏற்க, முப்படை அதிகாரிகள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. அம்மாநாட்டு மண்டபத்தையும், யாழ் செயலகத்தையும் மாநாடு தொடங்கச் சில மணி நேரம் முன்னதாய் புலிகள் வெடிகுண்டுகளால் (1983 ஏப்ரல்) தகர்த்தனர். 1983 மே 18-இல் உள்ளூராட்சித் தேர்தலை வடக்குப் பகுதியில் நடத்த இருப்பதான அறிவிப்பை சிங்கள அரசு வெளியிட்டது. இத்தேர்தலை, தமிழர்கள் போட்டியிடாமலும், வாக்களிக்காமலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், மக்கள் ஸ்ரீலங்காவின் தேர்தல் மாயையிலிருந்து முற்றிலுமாக விடுபடுமாறும் அதன் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் மக்கள் பங்கெடுக்கும் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகுமாறும் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டார். “தேர்தலில் வெற்றிபெற தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இதுபோன்ற தேர்தல்களில் மீண்டும் பங்கெடுப்பது, ஸ்ரீலங்கா இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்’ என்றும் கடுமையாகக் கண்டித்தார் பிரபாகரன். அவரின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தலில் போட்டியிட்ட மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தமிழீழ அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று, மக்கள் தேர்தலை முற்றாகப் புறக்கணித்தனர். விடுதலைப்புலிகளின் கோரிக்கையை புறந்தள்ளி தேர்தல் களத்தில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2 சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே மதிப்பிழந்தனர். இந்நிலையில் இலங்கை அரசியலின் போக்கை மாற்றும்விதத்தில், யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது. இதன் காரணமாக அரசின் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் போக்கும் தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவும், கொலைகளும், தமிழ்க் கோயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதும் அதிகரித்தது. “தமிழர்களின் உயிரைப் பற்றியோ, தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை’ என லண்டன் நாளிதழுக்கு ஜெயவர்த்தனா பேட்டியளித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார். அதே வேளை, 1983 ஜூலை 15-ஆம் தேதி ராணுவக்கூலிகளால் விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதிகளில் ஒருவரான லூகாஸ் சார்லஸ் ஆண்டனி என்கிற சீலன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க, திருநெல்வேலி பலாலி வீதியில், புலிகளின் லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமையில் யுத்தச் சீருடையுடனும் நவீன ரக ஆயுதங்களுடனும் 14 பேர் சென்று மாதகல் முகாமைச் சேர்ந்த ராணுவத்தினர் நள்ளிரவில் ரோந்துபுரியச் சென்றபோது தாக்கி அழித்தனர். தாக்குதலில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் கலந்துகொண்ட 14 போராளிகளுள் ஒருவராக பிரபாகரனும் இருந்தார். தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல், தனது தோழர்களும் அந்தப் பயிற்சியைப் பெற வேண்டும் என்று செல்லக்கிளியைத் தலைமை தாங்கச் செய்தார். வெற்றிபெற்ற நிலையில், தாக்குதலின் இறுதியில், செல்லக்கிளி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். “பயங்கரவாதத்தை ஒழிப்போம்’ என்று முழங்கிய ஜெயவர்த்தனா, தான் அவமானமுற்றதாகக் கருதி, 1983 ஜூலை கலவரம் என்று அழைக்கப்படும் பயங்கர கலவரத்தைத் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் கட்டவிழ்த்துவிட்டார். ஜூலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் தேவை தமிழீழத்தில் உணரப்பட்டதால், பல்வேறு சமூகத்தாரும் அதில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டினர். கொரில்லா யுத்தக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை உயரவும், ராணுவத்துக்குண்டான பலவகைப் பிரிவுகளாக, கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கடற்புலிகள் எனப்படும் கடற்படை, கடற்கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கிட்டு பீரங்கிப்படை, விக்டர் வாகனப்படை, சோதியா மகளிர் அணி, சார்லஸ் அந்தோனி அதிரடிப்படை எனப் பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன. http://www.asrilanka.com/2015/07/15/29458
  6. மாவீரர் தினம் 2015 நினைவுகளும், நிகழ்வுகளும் நம் தேசத்திட்காய் உயிர்நீத்த உறவுகளுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திரியை ஆரம்பித்துவைக்கின்றேன். வித்தாகிப்போன மாவீரச்செல்வங்கள் பற்றிய குறிப்புக்கள், மாவீர்களுக்குரிய சிறப்புப்பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 2015 மாவீரர்தின நிகழ்வுகளை இத்திரியில் என்னுடன் இணைந்து பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். இம்முறை யாழில் மாவீர்கள் தினத்தை பற்றிய கதையே இல்லாதது பெரும் வருத்தத்தை கொடுக்கின்றது. ------- நன்றி
  7. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  8. முகர்ஜி முகர்வதில் அதிகம் நேரத்தை செலவிடுவார் போலுள்ளது
  9. எல்லாம் பணம் செய்யும் வேலை. நாதம் அண்ணோய் "இந்தி(ய)ராணி" என்னும் தலைப்புக்கு copy right வாங்கிவிடுங்கோ. அல்லது யாராவது இந்திய பிலிம் டைரக்டர் உந்த ராணியின் கதையை படமாக எடுக்கும்போது (இப்ப பெரும்பாலும் உப்பிடியான உண்மைச்சம்பவங்களை படமாக எடுப்பது ஒரு பேஷன்) உங்கடை தலைப்பை பாவித்துவிடுவினம்.
  10. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  11. நோட்டிபிகேஷன் வாறது நல்ல விஷயம்
  12. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  13. மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.