அறிவிலி
பற்றி எரிகையிலும் பூ பூக்க
உன்னால் மட்டுமே முடியும்!
'மத்தாப்பூ'!
சுற்றி எரிகையிலும்
உள்ளே,
பூகம்பம் வெடிக்கையிலும்
சொர்க்கத்தில் இருப்பதாய்
பாசாங்கு பண்ண
என்னால் மட்டுமே முடிகிறது!
எள்ளி நகையாடும் எல்லோரையும்
ஏதேதோ கதைக்கிறாரென
செவிடு பாய்ச்சுவது
எப்படி அகந்தையாகும்?
புறம் பேசுதல் தவறெனப்படாத
உலகத்தில்....
பாசமுடன் விரல் பிடித்து நடக்க
குழந்தைகளே பிடிக்கிறது எனக்கு!
கோரிக்கையோ கட்டளையோ
இல்லாத செல்லச் சிணுங்களில்
சிக்குண்டு சிரிப்பதை
மன முதிர்ச்சி இல்லையென்பதா?
செயற்கையாய் சிரித்து சிரித்து
கண்ணில் நீர்வர மெய்யாய்
சிரித்தது எப்போது?
நினைவேயில்லை!!
வலி நிரப்பி வடித்த
வார்த்தைச் சித்திரமெல்லாம்
அரிதாய் வாசிக்கக் கிடைக்கையில்
அதே காயாத குருதி வாசனை!
கிழிக்கப்பட்ட இதயம் இன்னும்
தைக்கப்படவேயில்லை!
சுயமெனும் இருள்வெளி தாண்டி
புறவெளி உலவக் கிடைத்த
வாய்ப்புகளெல்லாம் வாகாய்
வரிசையில் நிற்கின்றன!
விரும்பிய திசை எதுவென
தேர்ந்து செல்லும் மனதிடமின்றி....
கிழிக்கப்பட்ட நாட்குறிப்புகளை
கணக்கெடுக்கும் மனசாட்சி
ஏனோ,
வாழப்படாத எஞ்சிய காலத்தை
வசப்படுத்த முயல்வதேயில்லை!
கூர்மங்கிய நாக்குகளினால்
குத்தப்பட்ட சொற் காயங்கள்!
உயிர் நீங்கலாக
மற்றதை மாய்த்தும்
அவர் மனம் நோகுமென
பதிலடி தராத பரிதாப தருணங்கள்
இந்த அறிவிலி வாழ்க்கையில்
அனேகம் நிகழ்வதால்
இப்பெயர் பெற்றேன்
காரணம் அறிக!
http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_19.html