Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. 1988 / 1989 இல் எமது புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் குறைந்தது 22 உத்தியோகத்தர்கள் [இரண்டு பக்கமும் / அரசு அல்லது இயக்கம் சார்பான] சுட்டு கொல்லப்பட்டனர். புத்தளம் பாலாவி சந்தியில், ஒரு சூட்டுடன், நிலை குலைந்து விழுந்ததும், tyre / உருளிப்பட்டை அவரில் போட்டு எரித்தது கண்ணால் பார்த்துள்ளேன்
  2. [1] அறம் பாடுதல் என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு கவிஞன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணரும்போது அநீதி இழைத்தவர் அழியவேண்டும் என்று சாபமிட்டு பாடல் எழுதும் செயலாகும். ஆனால் இங்கு அப்படி இல்லை. ஒரு சவம், தனது இறுதி சடங்கில் காணும் அனுபவமே தொகுக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் இறுதி வேண்டுகோளுடன் [2] அதற்கு முன் இறுகிப் போயிருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாமல் விரலை வெட்டி எடுத்ததைக் காணேலையோ? கட்டாயம் என் அனுபவத்தில், நான் கண்டதில், அப்படியான தரம் குறைவான நிகழ்வு ஒன்றும் இல்லை. நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  3. எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து, இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு. பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி, கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை. கடவுளை உருவாக்கி இருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில், மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப்புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ - இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க, அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை, மதத்தை உண்டாக்கியது எனலாம். அந்த ஆதி மனிதனிடம் தன்னைப் பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவ கால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது? - கதிரவனின் நாளாந்த அசைவா?, விண்மீன்களின் அசைவா?, கடந்து செல்லும் கால நிலைகளா? .... எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது? - எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது? / ஏற்படுத்துகிறார்கள்? ... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது? - தமது இனத்தின்?, தமது வளர்ப்பு பிராணியின்?, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை? ... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை? ... எல்லாத்திற்கும் மேலாக, முக்கியமான கேள்வி, ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது? .. . விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது. ஏன்? இன்றும் கூட, கடைசிக்கு முதல் கேள்விக்கு - அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு - இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு - மறுமைக்கு - இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கை அமைப்பு முறை [சமயம்] தோன்றவும், முதலாவது சமய குருமார் அமைப்பு தோன்றவும், கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும், கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும், இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமை த்தது. ஆகவே சுருக்கமாக கடவுளை மனிதன் தான் உண்டாக்கினான். அன்றைய சூழலில், ஒரு கட்டுப்பாட்டை, ஆறுதலை, நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு சிலர் செய்த சூழ்ச்சி என்று கூட சொல்லலாம். அதனால் அந்த ஒரு சிலர் சாதாரண மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் ஒரு தூதுவராக , குருவாக தன்னை திடப்படுத்திக் கொண்டான். அவனுக்கு கடவுள் என்று ஒன்று இல்லை என்று நன்றாகத் தெரியும், ஆனால் இருக்கு என்றால்த் தான் அவனின் இருப்பும் இருக்கும். அது தான் உண்மை! உலகின் முதல் நாகரிகம் கண்ட சுமேரியரின் இலக்கியத்தில் இருந்து இலகுவாக இதற்கு உதாரணம் கொடுக்கலாம். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  4. கேள்வி: உங்கட வலைப்பூவை கொஞ்சம் சொல்லுங்கோவன். பதில்: [1] முகநூல் : Kandiah Thillaivinayagalingam [2] https://www.facebook.com/groups/978753388866632/?ref=group_header கேள்வி: கூடவே கம்யூனிசமும் வந்திருக்குமே? பதில்: இல்லை, ஆனால் சாதி, சமயம், மூட நம்பிக்கைகள் தவிர்த்த எளிய வாழ்வும், தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டில் ஒரு நாட்டமும், அதே நேரம் மாற்றான் வீட்டு மல்லிகையும் மணக்கும் என்பதிலும் நம்பிக்கை வந்தது. நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  5. உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 1,200, ஆனால் அதிகாரப்பூர்வமற்ற நம்பிக்கையான எண்ணிக்கை 4,000-5,000
  6. "என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது வாழ்வை நினைத்தேன் ஆத்திரம் வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!" "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு!" இது என்னைப் பற்றி நான் ஒரு முறை எழுதியதின் சில வரிகள் ஆமா உங்க கருத்து "பதவி வரும்போது .... " நல்ல எடுத்துக்காட்டு! வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் கருத்து வழங்கிய அல்லது பார்வையிட்ட எல்லோருக்கும்!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  7. முதலாவது மக்கள் விடுதலை முன்னணி போராட்டட்டின் போது நான் இரண்டாம் ஆண்டு, ரஜவத்தையில் இருந்தேன், அப்பொழுதும் கண்ணீர் தந்த சம்பவம் நடந்தது. அதை விட , பல்கலைக்கழ வளாகம் மூடியதால், யாழ்ப்பாணம் திரும்பும் பொழுது, இரவு ஆறு மணியுடன் போட்ட ஊரடங்கில் , கிளிநொச்சியில் அகப்பட்டு சில இன்னல்களும் அனுபவித்தேன். அப்பொழுது நான் மீசை தாடியுடன் இருந்ததும் அதற்கு ஒரு காரணம். என்றாலும் சிங்களம் தெரியாதது, என்னை தமிழன் என்று காட்டியதால், ஒரு பெரும் பிரச்சனை வரவில்லை. என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இருந்தார். அவர் மலை நாட்டில் பிறந்து வளர்ந்ததால், சிங்களம் தாராளமாக தெரியும். நான் யாழ்ப்பாணம் என்பதால் சிங்களம் அறவே தெரியாது. அவர் ஓய்வு நேரத்தில், எங்களுடன் வந்து கேரம் பலகை அல்லது சீட்டு விளையாடுவார். ஜே.வி.பி அரசுக்கு எதிராக ஆயுத புரட்சி செய்து கொண்டு இருந்த ஒரு கட்டத்தில், ஒரு நாள், அவர் எம்முடன் வந்து ஓய்வை பொழுதுபோக்காக கழித்துவிட்டு, இருள தொடங்க தன் விடுதிக்கு சென்றார். நாம் இருட்டுக்குள் போகவேண்டாம். இது பல்கலைக்கழக வளாகம் என்பதால், ஜே.வி.பி க்கு கூடுதலான ஆதரவு இங்கு இருப்பதால், ஒரு வேளை ராணுவம் பதுங்கி இருக்கலாம், விடிய போவது நல்லது என்று கூறினேன். ஆனால் அவர் இது சிங்களவரும் சிங்களவரும் அடிபடும் போராட்டம், ஆகவே பயம் இல்லை என்று கூறிவிட்டு போனார். நான் அப்பொழுது ரஜாவத்த என்ற வளாகத்துடன் அண்டிய பகுதியில், பல்கலைக்கழக ஊழியர் ஒருவரின் விடுதியின் மேல் வீட்டில் வாடகைக்கு இருந்தேன். என்னுடன் அங்கு சக பொறியியல் பீட மாணவன் விக்னேஸ்வரன் & ஜெயசீலனும் மற்றும் மருத்துவ பீட நான்காம் ஆண்டு மாணவன் குழந்தைவேல் இருந்தனர். குழந்தைவேல் என்னை மிஸ்டர் நோ [Mr No] என்று பகிடியாக கூப்பிடுவது வழமை. [தில்லை - இல்லை]. ஆறுமுகமும் என்னை அப்படியே கூப்பிடுவார். அவர் ஒரு படி மேலே போய் தில்லை - தொல்லை என்றும் பகிடியாக கூப்பிடுவார். 'தில்லை - தொல்லை' இன்றுவரை நிலைத்து நிற்கிறது. குறிப்பாக எமது சக மாணவன் தணிகாசலத்தை குறிப்பிடலாம். ஆனால் அடுத்த நாள் என் நண்பர் ஆறுமுகத்தின் உடல், மகாவலி ஆற்றங் கரையில் துப்பாக்கி சூடுகளுடன் கண்டு எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ந்தே போய்விட்டேன். அவர் தமிழர். ராணுவத்தாலும் ஜே.வி.பி யாலும் சந்தேகப்பட கூடியவர் அல்ல. அப்படி என்றால் உண்மையில் என்ன நடந்தது. அதன் மர்மம் என்ன ?. என்னையும் என் நண்பர்களையும் வாட்டியது. ஆகவே மதியப்பொழுது, அவர் உடல் இருந்த மகாவலி ஆற்றங்கரைக்கு போய், அங்கு அருகாமையில் குடி இருக்கும் கிராமத்தவர்களிடம், சிங்கள நண்பர்களின் உதவியுடன் விசாரித்தோம். அப்பொழுது அங்கு வாழும் ஒரு குடும்பம், துப்பாக்கி காயங்களுடன், தங்கள் வீட்டை வந்து தட்டி, தன்னை ராணுவம் சுட்டு, மகாவலியில் எறிந்து விட்டு போனதாகவும், ஆம்புலன்ஸ்க்கு அறிவிக்கும் படி, நல்ல சிங்களத்தில் கூறியதால், தாம் இவர் புரட்சி செய்யும் இளைஞர் கூட்டம் என நினைத்து, ஆம்புலன்ஷை கூப்பிடாமல், ராணுவத்துக்கு செய்தி அனுப்பினார்கள் என்று கூறினர். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம் [1969 batch ]
  8. உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் நன்றிகள் பல. நான் ஓய்வின் பின், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதில் பொழுது போகிறது. மாறி மாறி ஒவ்வொரு பிள்ளைகளுடனும் இருக்கிறேன் என்னை நண்பர்கள் சுருக்கமாக 'தில்லை' என்றே கூப்பிடுவார்கள். ஆகவே உங்கள் முடிவு சரியே! சிலவேளை 'தில்லை ஒரு தொல்லை' என்று பகிடியாக சொல்வதும் உண்டு! நான் எழுதத் தொடங்கி பத்து ஆண்டு அளவில் இருக்கும், தொடக்கத்தில் எழுதி பழகியதில் சில ஆண்டுகள் மெதுவாகச் சென்றது. இன்னும் பெரிய ஓட்டம் இல்லை, ஆனால் தங்கு தடை குறைவு. மீண்டும் உங்களுக்கு எனது அன்பு வணக்கங்கள்!
  9. "அப்பாவின் பேனா..!" அப்பாவின் படம் சுவரில் அழகாக தொங்குகிறது. அதில் அவரின் சட்டை பையில், அந்த பேனா எட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறது. இன்று அவரின் நினைவு தினம். நான் அவரின் அந்த படத்துக்கு மலர் மாலை அணிவித்துவிட்டு, அவரின், அவர் என்றும் தன்னுடன் எடுத்து செல்லும் அந்த பேனாவை, அவரின் படத்துக்கு அருகில் கொழுந்துவிட்டு எரியும் தீபத்தின் ஒளி அதிலும் படக்கூடியதாக வைத்தேன். அப்படி என்ன இந்த பேனாவில் உள்ளது? இந்த பேனாவின் வலிமை உண்மையில் என் அப்பாவின் எண்ணத்தின் வலிமை, அவரின் சொல்லின் வலிமை! ஆமாம். என் அப்பாவின் பேனா நீதி பேசும் , கதை சொல்லும், கவிதை பாடும், ஏன் புரட்சி கூட செய்யும்!! அது தான் அதன் பெருமை!! பேனா என் அப்பாவின் வாழ்வில் இரண்டறக் கலந்த்துடன் அவரை யார் என்று உலகத்துக்கு காட்டியதும் அதுவே! கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது!! என் அப்பா கட்டை என்றாலும், கம்பீரமான தோற்றம் உள்ளவர். அவரை 'க க' அல்லது 'கட்டை கந்தையா' என்றே பொதுவாக எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெரிதாக படிக்கவில்லை, ஆனால் வாசிப்பதில் குறிப்பாக ஊர் புதினம், அரசியல் நிலைப்பரம் மற்றும் சாதாரண மக்களின் அல்லது தொழிலாளர்களின் பிரச்சனைகள் அறிவதில் ஆர்வம் உடையவர். ஆரம்பத்தில் ஒரு சுருட்டு தொழிலாளியாக நல்லூர் வடக்கு வீதியில் உள்ள அன்னலிங்கம் சுருட்டு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தார். அத்தியடியில் உள்ள எமது வீட்டில் இருந்து, அவரின் வேலை நிலையம் ஒரு மைல் தூரத்துக்குள் தான் இருக்கும். அவர் நடந்தே போவார். அவர் கணக்கில் புலி என்பதால், அங்கு வேலை செய்யும் மற்றவர்களுக்கான கூலியையும், மற்றும் தனதையும் சேர்த்து, கணக்கிட்டு கொடுப்பார். நாளடைவில் அவர் கணக்குப் பிள்ளையாகவும் தொழிற்படத் தொடங்கினார். அப்பொழுது தான் அவருக்கு பேனாவில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. சுருட்டு கம்பெனியின் முதலாளி ஒரு 'மை பேனா' அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அன்றில் இருந்து பேனாவை தனது சட்டை பையில் வைக்கும் பழக்கமும் ஆரம்பித்தது எனலாம். சக தொழிலாளர்களுடன் இதனால் நெருக்கமாக பழகும் சூழ்நிலையும் ஏற்பட்டது. அவர்களின் பிரச்சனைகளை அப்பாவிடம் ஆலோசிக்க தொடங்க, அவர் ஒரு தொழிலாளர் ஆலோசகராக, ஏன் தலைவனாக கூட பரிணமிக்க தொடங்கினார். இது தான் அவரை மாற்றிய பெரும் நிகழ்வு எனலாம் தான் கேள்விப்பட்ட நிகழ்வுகளை, பிரச்சனைகளை இப்ப சிறு சிறு கவியாக கதையாக எழுத தொடங்க, அவை நல்லூர், அன்னலிங்கம் சுருட்டு கம்பனிக்கு வெளியேயும் பரவத் தொடங்கி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் வரத் தொடங்கி, பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியது. அப்பாவை, யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட, ஒன்றிணைந்த தொழிலாளர் சங்கம், தமது செயலாளராக நியமித்ததுடன், அன்றைய ஆண்டு, யாழ் பத்திரிகைகள் நடத்திய கதை கவிதை போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்றார். அந்த நிகழ்வில் தான் அப்பாவுக்கு இந்த தங்க பேணா, யாழ்ப்பாண முதல்வரால் பரிசாக அளிக்கப் பட்டது. அன்றில் இருந்து அவர், சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லும் மட்டும், இந்த பெருமைக்குரிய பேனா, அவருடனே என்றும் பயணம் செய்தது. "ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் ஆள வந்தவனின் ஊழல் சொல்ல ஆகாயம் தொடும் வன் செயலை ஆபத்து வரும்முன் தடுத்து நிறுத்த!" இது தான் என் அப்பாவின் பேனா, யார் எவர் என்று பாகுபாடு காட்டாமல் பேசியது. அவர் பேணா எடுத்தல் தீப்பொறி பறக்கும். ஒவ்வொரு வசனமும் சிந்திக்க வைக்கும்! ஆமாம் , கடலில் ஏற்படும் சுனாமிகளை விட, அப்பாவின் பேனாவின் எழுத்துக்கள் மிக வலிமை வாய்ந்தவை. அது கரையிலும் கூட சூராவளி காற்றை உண்டாக்கியது. கள்ளர்கள் , ஊழல் அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் கரைகளிலும் ஒதுங்க முடியாத நிலை ஏற்படுத்தியது இந்த தங்க பேனாதான்! அதுதான் அப்பாவின் பேனா ! நான் அப்ப பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரே ஒரு முறை தான், அப்பா அதே பேனாவால், என் அம்மாவின் பிறந்த நாளுக்கு, ஒரு காதல் பாட்டு எழுதியதை பார்த்தேன். நானே அசைந்துவிடேன். அத்தனை இனிமை. ஆனால் எம் முன்னால் இருக்கும் பிரச்சனையே பேனாவில் பொறியாக பறக்கவேண்டும் என்று நம்புபவர் என் அப்பா. "உச்சங் கொண்டையும் கரும் விழிகளும் உகவைதரும் உன் உடல் வனப்பும் உள்ளம் கவரும் உன் புன்னகையும் உரிமை கொண்டு என்னை அழைக்கிறது" "ஓவியமாக வந்தாய் கவிதை தந்தாய் ஓசை இன்றி என்னில் கலந்தாய் ஓரமாய் இழுத்து முத்தம் தந்தாய் ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்" 'பேனாவின் வலிமை கத்திக்கு இல்லை' இப்படித்தான் அப்பா அடிக்கடி சொல்லுவார். ஆனால் அன்று நால்வர், அப்பா வேலை முடிந்து, வீடு திரும்புகையில், வைமன் வீதி, அரசடி வீதி சந்திக்கும் பருத்தித்துறை வீதியில், மாறி மாறி கத்தியால் குத்தி கொலைசெய்தனர். இத்தனைக்கும் அரச ராணுவத்தின் வீதித்தடையும் காவலும் கூப்பிடு தூரத்திலேயே! அப்பாவின் பேனா ஓய்ந்துவிட்டதாக, அந்த நால்வரையும் ஏவிய அரசியல்வாதி இன்றும் நம்பிக்கொண்டு இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. பாவம் காசுக்கு மார்தட்டும் இந்த நாலு கொலையாளிகளும்! "வாருங்கள், வந்து கை கொடுங்கள் இமைகள் மூடி பல நாளாச்சு ... தாருங்கள், தீர்வை தந்து கவலைதீருங்கள் கேள்விகள் கேட்குது அப்பாவின் பேனா ..." "எழுதுங்கள் உரக்க எங்கும் ஒலிக்கட்டும் உண்மைகள் வாழ வழி தேடுங்கள் ... கூடுங்கள் ஒன்றாய் அநியாயத்துக்கு எதிராக அப்பாவின் பேனா என்னிடம் மாறுது .." நான் அந்த தங்க பேனாவை, அப்பாவை வணங்கிய பின் என் சட்டை பையில் வைத்தேன், கண்ணாடியில் என்னை ஒருமுறை பார்த்தேன். அப்பாவின் மிடுக்கு என்னில் தெரிந்தது. நான் இதுவரை கீறிய வரைபடங்கள், செய்த கணக்குகள், போட்ட பொறியியல் திட்டங்கள் , இனி எனக்கு தேவை இல்லை. என் அப்பாவின் பேனா, நீதி கேட்கும். உரிமை கேட்கும். தட்டிக்கழித்தால் வழக்கு உரைக்கும். அது அப்பாவின் ஆன்மா. உலக சாதாரண மக்களின் குரல். கொலையால், மிரட்டலால் அது ஓயாது! அது தான் அப்பாவின் பேனா!! "அப்பாவின் பேணா என் பையில் அத்து மீறியவர்களை பிடுங்கி எறியும் அடித்து துரத்த கூட்டம் சேர்க்கும் அயர்ந்து தூங்க உனக்கு முடியாது!" "அழகான பெண்ணை அளவோடு பாடும் அகிலம் எங்கும் உண்மை உரைக்கும் அறிவு வளர்த்து மனிதம் பேணும் அன்பு விதைத்து நீதி கேட்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை] ஒரு உயர்ந்த மனிதன் என்பவன், உண்மையை விரும்பி, சரியானதை செய்து, எதிரியையும் நேர்மையாக கையாண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயநலத்துக்காக, கௌரவமான பண்புகளை விட்டு கொடுக்காமல், கைவிடாமல் வாழ்பவன். அப்படியான என் நண்பர்கள் தான் பொறியாளர்கள் தவராஜாவும் ராஜரத்னாவும். இதில் தவராஜா என்னை விட கொஞ்சம் வயது கூட. அவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஆனால் ராஜரத்னா தெற்கை சேர்ந்த, ஒரு சிங்கள பாடசாலை அதிபரின் மகன். என்னைவிட கொஞ்சம் வயது குறைவு. நாம் மூவரும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த காலம் அது. நாம் எல்லோரும் சிங்களம் தமிழ் என்ற பாகுபாடு இன்றி நிர்வாக ஊழியர் விடுதிகளில் தங்கி இருந்து அங்கு வேலை செய்து வந்தோம். எனவே மாலை பொழுதிலும், வார இறுதியிலும் துடுப்பாட்டம் [கிரிக்கெட்], பூப்பந்தாட்டம் [பேட்மிண்டன்], மேசைப்பந்தாட்டம் [டேபிள் டென்னிஸ்], சுண்டாட்டப் பலகை [கரம் பலகை] .. இப்படி வசதியை பொறுத்து விளையாடுவோம். துடுப்படியில் இரு குழுவாக பிரித்து ஆடுவோம், அதில் ஒரு அணிக்கு தவராஜாவும், மற்ற அணிக்கு நானுமே தலைவர்கள். பல நேரம் அங்கு வாக்குவாதம் வரும். நான் கொஞ்சம் முரடு என்பதால், விட்டுக்கொடுக்காமல் வாதாடுவேன், ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் மிக அமைதியாய் இருந்து விட்டுக்கொடுப்புகளுடன் அங்கு ஒழுங்காக விளையாட்டை தொடர்வதில் மிக கைதேர்ந்த, சாமர்த்தியம் நிறைந்தவர் தான் தவராஜா. அது மட்டும் அல்ல, ஒருவருக்கு எந்த உதவி தேவை என்றாலும், வேலையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆயினும் யாரும் அவரை இலகுவாக அணுகலாம். கட்டாயம் தன்னலம் பார்க்காமல், நேரகாலம் பார்க்காமல் உடனடியாக உதவ கூடியவர். இன்றும் இன்னும் என்னுடன் நண்பராக இருக்கிறார். ஆனால், எனது மற்ற நண்பரான ராஜரத்னா, இன்று எம்மிடம் இல்லை. அவர் சாக்கடிக்கப் பட்டுவிட்டார். அவர் ஒருமுறை உதவி தொகைப்பெற்று ஜப்பான் சென்று, திரும்பி வரும் பொழுது எனக்கு கொண்டுவந்து தந்த பரிசு மட்டும் இன்னும் என்னிடம் உள்ளது, வடக்கிலும் தெற்கிலும் அரசுக்கு எதிராக, ஆனால் வேறு வேறு இரு குழுக்களால் போராட்டம் நடந்து கொண்டு இருந்த ஒரு காலத்தில், நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் கதைக்கும் பொழுது என்னிடம் கூறினார், தெற்கில் போராடும் சிங்கள இளைஞர்களுக்கு ஆதரவாக, எமது தொழிற்சாலையிலும் சிலர் இருப்பதாகவும், அது தனக்கு தெரியும் என்றும், எம் நாட்டிற்கு அமைதி வேண்டும். அது தொழிற்சாலையில் வளரவிடக் கூடாது என்றும் கூறினார். அவரும் ஒரு சிங்கள சமூகம் என்பதால், நான் கூறினேன், இதில் நீ தலையிடாமல் நடுநிலையாக நிற்பதே நல்லது என்று. அதன் பின் நான் அந்த விடயங்களைப்பற்றி கதைக்காமல் அமைதி காத்தேன். வீண் பிரச்சனைக்குள் ஏன் போவான் என்று, ஏன் என்றால், வடக்கில் நாம் பெற்ற, கண்ட, கடைபிடித்த அனுபவம் தான்! இருள தொடங்கிய ஒரு மாலை பொழுது, நாம் துடுப்பாட்டம் வழமை போல் விளையாடிவிட்டு, இரவு சாப்பாட்டிற்கு முன், நானும் ராஜரத்னாவும், விடுதியில் கரம் பலகை விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, திடீரென ஒரு பதினைந்து இருப்பது சிங்கள இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் எமது உத்தியோகத்தர் விடுதிகளுக்கு புகுந்து, எம்மை எல்லோரையும் துப்பாக்கி முனையில் ஒரு வரிசையில் நிற்பாட்டினார்கள். அவர்களில் ஒருவர் சிங்களத்தில், நீங்கள் பயப்படவேண்டாம். நாம் சில விசாரணை செய்யவேண்டி உள்ளது. அதற்கு உங்களில் சிலரை கூட்டிக்கொண்டு போகிறோம். விசாரணையின் பின் அவர்களை விடுவோம் என்றனர். சிலரின் பெயர்களை வாசித்து, மூவரை கூட்டி சென்றனர். அதில் ஒருவராக என் நண்பன் ராஜரத்னாவும் இருந்தார். அன்று நாம் விளையாடிய துடுப்பாட்டத்தில், ராஜரத்னா என் குழுவில் இருந்ததுடன், அன்று திறமையாக பந்து வீசி, தவராஜாவை தவிர மற்ற எல்லோரையும் ஆட்டம் இழக்கச் செய்தார். நான் அப்பொழுது தான் யோசித்தேன், அவருக்கு நான் கூறிய அறிவுரைகளை அவர் ஒரு வேளை, செவிசாய்க்கவில்லை என்று. அவருக்கு எப்பவும் ஒரு அமைதியான ஒழுங்கு முறை வேண்டும். அது குழம்பிடுமோ என்ற கவலை கொண்டவர், நாட்டின் மேல் உள்ள பற்றாலும், தனது தன்னலம் அற்ற கொள்கையாலும், எதாவது அரசுக்கு சொல்லி இருக்கலாம் என்று எண்ணினேன். அப்படி இருக்காது, விசாரணையின் பின் அவர் வருவார் என்று என்னையே நான் தேற்றினேன். எமக்கு வடக்கில் இருந்த அனுபவம் அவருக்கு இல்லை. ஏன் என்றால், தெற்கில் ஒரு முறை 1971 இல் ஒரு எழுச்சி வந்து, அந்த ஆண்டே அரசு அதை அடக்கி விட்டது. அதன் பின் அது வெளிப்படையாக இயங்கவில்லை. அது மீண்டும் 1988 /1989 இப்ப தான் வந்துள்ளது. ஒரு பத்து இருப்பது நிமிடத்தின் பின் துப்பாக்கி சத்தங்கள் அடுத்து அடுத்து கேட்டன, அவரின் மனைவி, அவரின் சில மாதமே கொண்ட குழந்தையுடன் ஓடிவந்து , எம்மில் சிலராவது சத்தம் வந்த திசை பக்கம் போய் பார்க்கும்படி, ஒரே அழுதபடி கேட்டார். எதுக்கும் முன்னுக்கு நிற்பவர் தவராஜா தானே. எனவே நானும் தவராஜாவும் முன்னுக்கு செல்ல மற்றும் சில சிங்கள நண்பர்களும் எம்மை தொடர, இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு புறப்பட்டு சென்றோம். எம் தொழிற்சாலை ஒரு சிறு காட்டு பிரதேசத்தில் இருந்ததால், சுற்றிவர பத்தை பத்தையாகக் இருந்தன. அப்படி ஒரு பத்தைக்கு அருகில் அவரின் உடல் துப்பாக்கி சூடுகளுடன் விழுந்து இருந்தது. அந்த உயர்ந்த மனிதன் தன் கொள்கைக்காக அங்கு இறந்து கிடந்தான். அவருக்கு அண்மையாக ஒரு எச்சரிக்கை தூண்டும் இருந்தது. அது சிங்களத்தால் , 'இவன் ஒரு காட்டி கொடுத்த துரோகி, இவனின் இறுதி சடங்கிலோ மரண ஊர்வலத்திலோ கலந்து கொள்பவர்களும் துரோகிகளே!' என்ற வாசகம் இருந்தது. ஆகவே நாம் எல்லோரும் அதில் தொடர்ந்து நிற்பதோ அல்லது அவரின் உடலை எடுப்பதோ பிரச்னையை ஏற்படுத்தும் என்று, உடனடியாக திரும்ப முற்பட்டோம். ஏன் என்றால், அந்த இளைஞர்கள் அங்கு எங்கேயாவது ஒளிந்து இருந்து எம்மை நோட்டமிடலாம் என்பதால். ஆனால், அங்கு நிலவும் சூழலையும் பொருட் படுத்தாமல், தவராஜா அவரை தொட்டு வணங்கினார் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Comments from S Thavaraja, Former Electrical Engineer, Puttalam cement works: Dear Thillai: You have expressed the memorable heartfelt painful events at PCW. Let' Rajaratna's Soul is BLESSED. I Think we played the CRICKET match just before this event on this match Late Rajaratna got all the wickets except mine. Dear Thillai i am humbled by your Expressions about me I feel your kindness and compassion about merit forced you to over expressing my simple human dealings. Thank you dear. I am very proud to have a friend in you which started very late in our life. Manitham Enpatu Itukkinratu. Om Shanthy Shanthy OM. Rajaratna, Jayaweera etc. we remember and Respect you all dear Late PCW friends who were lost on both side then. Regards
  11. "அறம் பேசுமா?" அறம் பேசுமா? என்று என்னை கேட்டால், கட்டாயம் இல்லை என்று தான் சொல்வேன். கர்ணன் படம் பார்த்து விட்டு, அரங்கிற்கு வெளியே வந்த பொழுது என் மனம் அப்படித்தான் இருந்தது. நான் அப்பொழுது பாடசாலை இளம் மாணவன். விஸ்ணுவின் எட்டாவது அவதாரம் என கருதப்படும் கிருஷ்ணர், நிராயுதபாணியாக நிலத்தில் இறங்கி, மண்ணில் புதைந்த தேர் சக்கரத்தை வெளியே எடுக்க முயற்சித்துக்கொண்டு இருக்கும் கர்ணனை கொல்ல. யுத்த தர்மத்திற்கு எதிராக, அருஜுனனை அம்பு விட தூண்டுகிறான். ஆனால் அவன் சாகவில்லை. எனவே, பொய் வேடம் போட்டு, அம்பு துளைத்த கர்ணனை ஏமாற்றி புண்ணியங்களை (ஆயுள் முழுக்க தானம் செய்ததால் பெற்ற புண்ணியம் முழுவதையும்) தானமாக கேட்கிறான். அவனோ அந்த நிலையிலும் கொடுக்கிறான். அதன் பின் கர்ணன் இறந்து விடுகிறான். அறம் அவனை காக்கவில்லை. அறத்திற்கு எதிரானவனின் பக்கம் போய், அவனை கடவுளாகவும் பிற்காலத்தில் ஆக்கிவிட்டது. புண்ணியம் செய்தவன் இறந்து விட, அந்த புண்ணியத்தை ஏமாற்றி பெற்றவன் கடவுளாகிறான். இது தான் என் மனதை குழப்பிக் கொண்டு இருந்தது. அன்று தீபாவளியை எம் பாடசாலை கொண்டாடிக்கொண்டு இருந்தது. என் மனக் குமுறல் எரிமலையாக வெடித்தது. நான் எப்படியோ துணிவை வரவழைத்து, அதிபரிடம், மிக பணிவாக என் கருத்தை கூறி, நான் இன்று இரவு நடக்க போகும் மகாபாரத நாடகத்தில் கிருஷ்ணர் வேடம் போட மாட்டேன் என்று திடமாக, ஆனால் அடக்கமாக கூறினேன். அதிபர் என்னை தனது அலுவலகத்திற்கு கூட்டி சென்று, நீ நடிக்கிறாய் , இல்லை என்றால் பாடசாலையில் இருந்து விலத்துவோம் என்று வெருட்ட தொடங்கினார். நான் மிக பணிவாக என் நிலையை காரணத்துடன் கூறினேன். அவர் என்னை பிரம்பால் அடித்து, ஒரு மாதம் பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டேன். நான், என் மனதில் இருந்த உண்மையை, பொய் கூறாமல், உண்மைக்கு புறம்பாக நடிக்காமல், அதை அப்படியே கடைபிடிக்க விரும்பினேன். அதையும் அடக்கத்துடனும் பணிவுடனும். ஆகவே எனக்கு இந்த தண்டனைகள் ஒரு வேதனையையும் தரவில்லை. பொய் பேசாமலிருப்பது சிறந்த அறம். அதை நிஜமாகவே கடைபிடிப்பவர்களுக்கு தர்மங்கள் செய்யத் தேவையே இல்லை என்ற திருவள்ளுவரின் குறள் தந்த இன்பத்துடன் வீடு சென்றேன். "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று." (குறள் – 297) அதன் பின் நான் பல்கலைக்கழகம் நுழைந்து பொறியியலாளராகவும் பட்டம் பெற்றேன். என் முதல் நேர்முகப் பரீடசைக்கு அன்று சென்று இருந்தேன். என் பாடசாலை அல்லது பல்கலைக்கழக வாழ்வில் நடந்த, மறக்க முடியாத சம்பவம் ஒன்றை கூறச் சொன்னார்கள். நானும் எந்த பொய்யும் சொல்லாமல், எனக்கு நடந்த பிரம்படியையும், தற்காலிக நீக்கத்தையும் அதற்கான காரணத்தையும் கூறினேன். அவ்வளவுதான், நீங்க போகலாம் என ஏளன சிரிப்புடன் உடனடியாக முடித்து விட்டார்கள். அது ஏன் என்பது ஒரு மாதம் கழித்து வந்த ' உங்கள் தேர்வு வெற்றி பெறவில்லை' என்ற வாசகம் எனக்கு தெரிய படுத்தியது. அங்கு ஒரு பொய் சொல்லி இருந்தால் அல்லது மறைத்து இருந்தால் கட்டாயம் வேலை கிடைத்து இருக்கும். ஆனால் நான் கவலைப் படவில்லை. அறம் பேசுதோ பேசவில்லையோ, முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கை என்னை மீண்டும் விண்ணப்பம் செய்ய வைத்தது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?" தமிழர் அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விடயங்களில் கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?" என்னையும் கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை; உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை. அப்படியிருந்தும், ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய நாம், குறிப்பாக கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பை இன்னும் ஏனோ கற்றுக் கொள்ள வில்லை. தமிழர்களில் பெரும் பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள், ஆளுமைகள், சாதனையாளர்களாக இருந்தாலும் சரி - இந்தப் பலவீனத்தை அதிகமாக இன்னும் கொண்டு உள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால், இந்த விடயத்தில், சாமானியர்களைக் காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள். ஒற்றுமையாக வாழத் தெரியாமல், இருப்பதையும் போட்டு உடைக்கிறார்கள்! அவர்களிடம் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" ஆனால் தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது கி மு 300 அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்? இத்தனை அழிவு கண்ட பின்பாவது திரிந்தினோமா ? வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப் பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற் கடித்துச் சிறைப் பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது. என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி, 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது. அது, அந்த ஒற்றுமை, வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார். “பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடைய எழாஅல் கோடியர் தலைவ கொண்டது அறிந அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது ஆற்று எதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே போற்றிக் கேண்மதி புகழ் மேம் படுந (53 – 60) பெருமையுடைய செல்வத்தையும், பெரிய பெயரையும், வலிய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல, பாடல்களையும் பற்றித் தோன்றும் இசைப் பயனையுடைய யாழினையும் உடைய கூத்தர்களின் தலைவனே! பிறர் மனதில் கொண்டதைக் குறிப்பால் அறிய வல்லவனே! அறியாமையினால் வழியைத் தவறிச் செல்லாது, இந்த வழியில் என்னைக் கண்டது உன்னுடைய நல்வினையின் பயனே! நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக புகழை உடையவனே! {(பொரு. ஆற். படை: 53-60) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.} மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாக பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை. இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ? ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." [புறநானூறு 58] நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு. இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக. இதை ஏன் எம் இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்னும் உணரவில்லை. அன்று ஒரு கட்சியில் ஆரம்பித்து ஒரே ஒரு தமிழ் தலைவன் இருந்தான், இன்று எத்தனை காட்சிகள், எத்தனை தலைவர்கள் ? இது இன்னும் வேண்டுமா எமக்கு ?? "இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. "பால் கடல் கடைதல்" [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்! ] வேதகால தொடக்கத்தில் [கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம்] அசுரரும் தேவர்களும் சிறு தெய்வங்களாகவே கருதப்பட்டார்கள். சிலர் இரண்டு நிலையையும் கொண்டிருந்தார்கள் [வருணன்]. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் [வேதம்= மறை] பயன்படுத்தப் பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் [தேவர்] என்ற சொல்லை உருவாக்கினார்கள். பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள், யோக்கியர்கள் என்றுள்ளது. வேதப் பாடல்களில் உள்ள துதிகள் இயற்கையையே பாடுகின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே. அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். பிந்திய பிரமாண நூல்களான புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள், கீதை என்பனை சமஸ்க்ருதத்தில் எழுதும் போதே இருக்கு வேதத்தில் உயர்வாக சொல்லப்பட்ட அசுரர் என்ற சொல், உயர்ச்சிப் பொருளை மாற்றி, இதற்கு அரக்கர் என்று பொருளிட்டு விட்டார்கள். மேலும் தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள் எதிர்மறை சக்திகளாகவும் சித்தரித்தார்கள். புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டி இருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம் [கள்ளு / மது] அதாவது சைவம் உண்பவர்கள், அப்பாவிகள். இது நாம் சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்த பக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே. உதாரணமாக யாகத்தைத் [வேள்வி] தடுப்பார்கள். ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், சூதாடுவார்கள், துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தேவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் தீயவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா? மேலும் உண்மையில் இருவரும் மிகவும் கடின மூர்க்கத்தனமான ஒற்றுமை இல்லாத தொடருந்து எதிர் அணியுடன் முட்டி மோதும் வீரர்களாகும். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென அறிந்த மகா விஷ்ணு, தேவர்களிடம் உங்கள் முன் இருக்கும் வேலை மிகவும் கடினமானது, உங்களால் மட்டும் தனியாக பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். அதனால் உங்களுக்கு அசுரர்களின் உதவி வேண்டும் என்று எடுத்து கூறினார். அதனால் தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். திரண்டெழும் சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்தில் சரிபகுதி என்றனர். நம்பினர் அசுரர்கள். ஆனால் இது ஒரு தந்திரமே! அசுரர்கள் ஆக தமது ஆற்றலை மட்டுமே பயன் படுத்துவார்கள், அவர்களின் பங்ககான "சாவ வரம்" கிடைக்காது, நான் அதை பார்த்துக் கொள்வேன் என மகா விஷ்ணு உறுதி கூறினார் தேவர்களுக்கு. மேலும் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை - அரக்கர்களைக் எமாற்றி கொல்லத் தான். இராவணனைக் கொன்றதும் அப்படியே! ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே? சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன். கடைசியில் இராமன் ஏமாற்றுகளால் சீதையை மீட்டான். எனினும்,சீதையின் தூய்மையை நம்பவில்லை. சீதையை "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று ராமன் குற்றம்சாட்டு கின்றான். இராவணனின் சிறையில் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து, "இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?" என மேலும் ராமன் கூறுகிறார். கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள் நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை. "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல் ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்" அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான். "நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக" "மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து" அன்று நடந்தது என்ன? இன்று நடப்பது என்ன ? அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம்? மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா? "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல - தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்." என்றல்லவா? சிறிதளவு உழைப்புக்கு பெருமளவு பயன்களை அனுபவிப்பது ஆளும் வர்க்கம். உழைக்கும் வர்க்க மக்களுக்கு மிகக்குறைந்த பயன்களையே அது அனுமதிக்கும். இது நாம் அறிந்த உண்மை. இப்ப கூறுங்ககள் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" இருவரும் தமது நம்பிக்கைக்காக கொலை செய்யக் கூடியவர்கள். இருவருமே தமது சுய நலத்திற்க்காக தமது வித்தியாசங்களை ஒரு புறம் தள்ளியவர்கள், இருவருமே கொடூர வீரர்கள். இன்றைய நவீன உலகில், ஒரு உதாரணத்திற்கு இஸ்ரேலியர்களையும் பலஸ்தீனியர்களையும் எடுங்கள். "வெஸ்ட் பாங்கில்" [மேற்குக் கரை பகுதியில்] ஒரு பகுதி நிலத்திற்காக வருடக்கணக்காக ஒரு மோதலில் இடுபட்டுள்ளார்கள். இருவருமே அந்த இடத்திற்கு தாமே உரிமை உடையவர்கள் என நம்புகிறார்கள். இருவருமே ஒரு கூர்மையான விரோதிகள். இரு பக்கத்திலும் உள்ள தீவீரவாதிகள் மிகவும் கொடூர தந்திரங்களை தமது இலக்கடைய பாவிக்கிறார்கள். என்றாலும் ஒரு சமாதானத்தின் அடிப்படையில் தமது வேறுபாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கி கொள்கையளவில் ஏற்றுள்ளார்கள். ஆகவே மீண்டும் உங்களை கேட்கிறேன் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" மீண்டும் நாம் "பால் கடல்" பக்கம் போவோம். இது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு கூட்டு முயற்சி. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தனர். கயிறான பாம்பின் தலைப் பக்கம் பற்றி, வலிந்து கடைந்தோர் (கதைப்படி) அசுரர்கள். வாலைப் பிடித்து கடைந்தோர் தேவர்கள். தலைப்பக்கமாக அசுரர்கள் இருந்ததால் பாம்பின் விஷக்காற்று பட்டு, அசுரர்களின் சிவந்தமேனி கறுப்பாகி விடுகிறது. சிவந்தமேனி கறுப்பாகிற அளவிற்கு அசுரர்கள் கடுமையாக உழைத்து பொருட்களை உருவாக்கு கிறார்கள். அப்போது பாற்கடலை கடைய, கடைய காமதேனு, கற்பக விருட்சம், உலக அழகியான லக்ஷ்மி என்று ஒவ் வொன்றாக பாற்கடலில் இருந்து வெளியே வருகிறது. அவை எதற்குமே அசுரர்கள் ஆசைப்படவில்லை. எல்லா வற்றையும் தேவர்களே எடுத்துக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வருகிறது. சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்திற்கு மட்டுமே அசுரர்கள் ஆசைப்பட்டார்கள். அதைக் கூட முழுதாக தமக்கே வேண்டு மென அசுரர்கள் கேட்கவில்லை. தங்களுக்கும் கொஞ்சம் அமுதம் தரப்பட வேண்டு மென்று தான் கேட்டார்கள். இடையில் வந்த பொருளையெல்லாம் தம தாக்கிக் கொண்ட தேவர்கள், இறுதியிலும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அமுதம் அசுரருக்குத் தர மறுத்து விட்டனர். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை ஏற்பட்டபோது, மோகினி வடிவத்தில் வந்த மகாவிஷ்ணு தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள், மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக் கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. மேனியெல்லாம் கருக கடுமையாக உழைத்து அசுரர்கள் பாற்கடலை கடைந்தது உயிர் வாழ உதவும் அமுதத்திற்காகத்தான். அதைக் கூட தராமல், தேவர்கள் மகாவிஷ்ணு உதவியுடன் ஏமாற்றி விட்டர்கள். ஏமாற்றுவது மகாவிஷ்ணுவிற்கு கை வந்த கலை. இன்னும் ஒரு அவதாரத்தில் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார். ஒரு தனிப்பட்ட உதவியை பெற, எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் ? இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும் ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை, தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே, பறித்து எடுத்தான். இப்ப ராமர் போல் ஒரு அரசன் இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன ? பிராமண இந்து சாதி அமைப்பு, இந்தியாவின் அரசியல் அமைப்பால் ஒழிக்கப்பட்டாலும், தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்களின் கொடூரத் தாக்குதல் இன்னும் தொடர்கிறது. தை,17,2017 இல், ஆந்திரப் பிரதேசத் தலைநகர் ஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்து ஆய்வு மாணவர், ரோஹித் வேமுல தற்கொலை, அப்படியான சூத்திரர்களின் கதியின் பிந்திய செய்தியாகும். சாதிக்கொள்கை, தமிழரின் சமயமான சைவ சித்தாந்தத்தின் கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள் .மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை / இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். எனினும் காலப் போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க் கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன் ... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இப்படி, தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள்வாங்கப்பட்டது. ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பன வற்றினை முலமாக, அடிப்படையாக, கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ, உயரமோ குட்டையோ, பணக்காரனோ ஏழையோ, எல்லோரிடமும் ஒரே தன்மை, நிலை பாட்டை உடையதாக இருக்க வேண்டும். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக, ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப் படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. "அனுராத புரத்தில் தமிழர்" கி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை "திஸ " என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அவன் அவ் மதத்தில் கவரப் பட்டு, தனது மக்களுடன் மதம் மாறினான். அத்துடன் தனது பெயரையும் "தேவ நம்பிய திஸ " [King Devanampiya Tissa/307-267 BC ] என்று மாற்றினான். இவ் மன்னன் இறந்த சில ஆண்டுகளின் பின்பு, கி.மு 237 ஆம் ஆண்டு அளவில், சேன [ஈழசேனன் / சேனன்],குத்தக [நாககுத்தன் / குத்திகன்] [Sena and Guththika/ 237-215 BC] என்ற இரு தமிழ் மன்னர்கள் மொத்தம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் அனுராத புரத்தில் இருந்து ஆட்சி செய்தனர். இவ்விரு தமிழ் மன்னர்களின் பின் சில காலம் கழித்து, எல்லாளன் [Elara] என்ற தமிழ் மன்னன் கி மு 205–161 ஆண்டு அளவில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் துட்ட காமினி [Dutthagamani] யால் தோற்கடிக்கப் பட்டான். மீண்டும் கி மு 103 ஆண்டு அளவில், ஐந்து தமிழ் மன்னர்களால் [அநுராதபுரத்தின் பஞ்ச பாண்டியர் என அழைக்கப்பட்ட புலஹத்தன், பாகியன், பணயமாறன், பிலயமாறன் மற்றும் தத்திகன் ஆகும்] கி மு 89 ஆண்டு வரை ஆளப்பட்டது. இப்படி தமிழ் மன்னர்களால் நீண்ட காலம் அனுராத புரம் ஆளப்பட்டதை பாளி நூலில் கூறப் பட்டுள்ளது. மேலும் சிங்கள மொழி எந்த ஒரு நாட்டிலும் முன்பு பேசப் படவில்லை. கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதி யீடாக ஹெள மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. அதன் பின் கி பி ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில், பிராகிருதம், பாளி, தமிழ் போன்ற மொழிகளையும் உள்வாங்கி சிங்கள மொழியாக முதல் முதல் வளர்ச்சி அடைய தொடங்கியது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை. ஆனால் கி மு 300 ஆண்டு அல்லது அதற்கு முன்பே தமிழ் ஓர் இலக்கிய மொழியாக, இன்று உள்ளது போலவே வளர்ச்சி பெற்றிருப்பதை காண்கிறோம். அதே போல, மகிந்தன் அல்லது மகிந்தரின் வருகைக்கு முன்பு [கி.மு.3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி] பௌத்த மதம் இலங்கையில் கட்டாயம் இருந்து இருக்காது. ஆகவே அதற்கு முன்பு இலங்கை மக்கள் என்ன மதத்தினராக இருந்தனர் என்பது அவர்களின் இன அடையாளத்தை ஓரளவு காட்டும். கி மு 247 இல் முடி சூடிய மன்னன் தேவ நம்பிய திஸவின் தந்தையின் பெயர் பாளி நூல்களில் மூதசிவன் [மூத்தசிவன் / Mutasiva] எனக் குறிக்கப் பட்டுள்ளது. இவன் கி மு 367 தொடக்கம் கி மு 307 வரை அனுராத புர அரசனாக இருந்துள்ளான். மேலும் மகாசிவன் [Mahasiva] என்பவனும் கி மு 257-247 காலப் பகுதியில் அனுராதபுர அரசனாக இருந்துள்ளான். இங்கு சிவன் என்ற பெயர் வழக்கில் இருந்தமை அக் காலத்தில் சிவ வழிபாடு இருந்ததை உறுதிப் படுத்துகிறது. அதாவது சைவ சமயம் அனுராதபுரத்தில் இருந்தமை எமக்கு இதனால் தெரிய வருகிறது. சைவ மதம், தமிழ் பண்பாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை நிலவும் பாரம் பரியமாகும். இதற்கு மேலும் எடுத்துக் காட்டாக, வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயனின் [Walagamba ] ஆட்சியின் போது [கி மு 103 -கி மு 89], பிராமணர்களின் குடியிருப்புக்களையும் வேதம் ஓதும் மண்டபங்களையும் யாக சாலைகளையும் அவன் அமைத்தான் என மகாவம்சத்தில் இருந்து அறிய முடிகிறது. இதுவும் தமிழர்கள் அனுராத புரத்தில் அன்று வாழ்ந்ததை சுட்டிக் காட்டுகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது போல, மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலிலும் கி.மு. 109 தொடக்கம் கி.மு. 103 வரை இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனான கல்லாட நாகன், மற்றும் சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன் போன்ற மன்னர்களையும் காண்கிறோம். நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். மற்ற பகுதிகளில் வாழும் நாகர்கள் போல் இவர்களும் பாம்பு வணக்கத்தையும் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு நாகம் என்று பொருள்படும் பெயரையும் வைத்துள்ளதாகவே தெரிகிறது. இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து ஆகும். இந்த நாகர்கள் [Naga people ], மற்றும் இயக்கர்கள் [ Yaksha ], வேடர்கள் [Veddas] ஆதிதிராவிட இனமக்கள் [Adi-Dravida people] என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.[.According to the mahavansa, yakkhas confined to the center of the Island and Naga dominated the northern and western parts in sixth century B.C.]. ராணி அனுலா [Queen Anula], சிவா 1 [Siva I]என்ற அரண்மனை இரவுக்காவலாளி [doorman], பின் வடுகன் [Vatuka] என்ற தமிழ்த் தச்சன், அதன் பின் நிலிய [Niliya] என்ற தமிழ்ப் பிராமணப் பூசாரியையும் திருமணம் செய்தார். இதனால் தமிழ் மன்னர்கள் அக் காலப்பகுதியில் அனுராத புரத்தில் ஆட்சி செய்தார்கள் எனவும் அறிய வருகிறது. அது மட்டும் அல்ல அக்காலத்தில் அரண்மனையில் தமிழர்கள் கடமை புரிந்ததும் தெரிய வருகிறது. இவை நடை பெற்ற காலம் கி மு 47 -42 ஆகும். அத்தோடு, அப் பிரதேசத்தில் பெருமளவு தமிழ் மக்களும் செல்வாக்குடன் வாழ்ந்து இருக்க வேண்டும். அல்லாவிடில் தமிழ் மன்னர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. மேலும் அங்கு பல சிற்றரசுகள் இருந்ததும் தெரிய வருகிறது. அவைகளில் கட்டாயம் சில தமிழ் அரசுகளும் இருந்து இருக்கலாம். மேலும் பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியதும் குறிப்பிடத் தக்கது [993–1077]. இவை எல்லாம் அநுராத புரத்தில் ஆதி காலம் தொடக்கம் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை காட்டுகிறது. அத்தோடு, கி பி 1658 இல் இருந்து ஆட்சி செய்த ஒல்லாந்தர் [Dutch] காலத்தில் நடை பெற்ற சம்பவம் அக் காலம் வரை தமிழர் அங்கு வாழ்ந்ததை மிகத் தெளிவாக வரலாற்று உண்மையை நிருவிப்பதாக உள்ளது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயன் கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்க வில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று. இதனை இவர் Historical Relation of Ceylon என்ற தனது நூலில் இப்படி எழுதி உள்ளான்- "To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV / page 322-323] இவை எல்லாம் தமிழர்கள் பெருமளவு அனுராத புரத்தில் வாழந்ததையும், மற்றும் ஆட்சி செய்ததையும் எந்த வித ஐயத்திற்கும் இடம் இன்றி எடுத்துக் காட்டு கின்றன. என்றாலும் இன்று நிலைமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது. இன ஒற்றுமையும் உருக் குலைந்து விட்டது. இவை வருத்தத்திற்கு உரியனவே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  16. "என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதையில் தவழ்ந்து முட்டாளாய் வாழாதே மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே" "நான் தீயில் சங்கமிக்கும் பொழுது நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது நான் என்னை சற்று பார்த்தேன் நாமம் அற்ற சடலமாக கண்டேன்" "உறவினர் நண்பர்கள் முகங்களைப் பார்த்தேன் உவகை இழந்த சிலரை கண்டேன் உறக்கம் துறந்த பிள்ளைகளை கண்டேன் உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்" "உடம்பு கெட்டால் உயிருக்கு மரியாதையில்லை உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில் உண்மையை நான் இன்று அறிகிறேன்" "காமம் தெளித்த உடலும் படுத்திட்டு காதல் தந்த மனதும் உறங்கிற்று காதற்ற ஊசியும் வர மறுக்குது காலனின் வருகையால் எல்லாம் தொலைந்திட்டு" "என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன் என் பெயரை மறக்க வேண்டாம் என் பெயர் எம் அடையாளம் எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. "என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது" "அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய காலமும் உண்டு அறிவு கொண்டு உணர்ந்ததும் உண்டு!" "ஆரம்பித்த எதுவும் முடிவு காணுமே ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்குமே ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்!" "இன்பம் துன்பம் நீயே தேடியது இருப்பதைக் கொண்டு வழியை அமை இதயம் திறந்து வரவேற்க பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்!" "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை என்பது வறியவர்க்கு கொடுப்பதே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!" "உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உரிமை கெடாமல் ஒப்பந்தம் செய்க உயிர் பிரிந்தால் திரும்ப பிறக்காது உண்மை நேர்மை உன்னில் இருக்கட்டும்!" "ஊக்கம் இல்லையேல் தோல்வி நிச்சயம் ஊடல் இல்லையேல் கூடல் சுவைக்காது ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் ஊமை வாழ்வு பிணத்துக்கு சமமே!" "எய்யாமை எவருக்கும் கேடு தரும் எதிரொலித்து உன் பலவீனத்தை காட்டிவிடும் எழுச்சி கொண்ட வாழ்வை அமை எரிவனம் போவது எவருக்கும் திண்ணம்!" "ஏழை பணக்காரன் தற்காலிக நிலையே ஏற்றம் இறக்கம் வாழ்வில் பொதுவே ஏமாற்றம் தடுமாற்றம் நிறைந்த வாழ்வில் ஏணை பழக்கம் சுடுகாடு வரைக்குமே!" "ஐதீகம் என்றாலும் திருப்பிக் கேள் ஐயம் தவிர்த்து துணிந்து நில் ஐம்புலனை அடக்கினால் மதி கெடும் ஐயனே நெறிப்படுத்தி அறிவை வளர்த்திடு!" "ஒடுங்கி அடங்கி வாழ்வது வாழ்வல்ல ஒல்லார் நாண உன்னை உயர்த்து ஒளியார் முன் ஒள்ளியர் ஆகு ஒற்றுமை கொண்ட இனமாய் வாழு!" "ஓதுபவன் சொல்வதை அறிந்து கேளு ஓந்தி போல நிறம் மாறாதே ஓசையுடன் அன்று அழுது பிறந்தாய் ஓரமாய் இன்று ஒதுங்கிப் போறாய்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. "என்னைப் பற்றி மனதில் பட்டவை" "என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது வாழ்வை நினைத்தேன் ஆத்திரம் வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!" "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு!" "உண்மை தேடி உலகம் சுற்றினேன் வேஷம் போட்ட மனிதர் கண்டேன் மாற்றி அமைத்த வரலாறு பார்த்தேன் காசுக்கு மாறும் காதல் கண்டேன்!" "ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன் மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன் பதவி ஆசை பிரித்து விளையாடுது பணம் தேடி வியாபாரம் செய்யுது!" "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் பிரிந்து கிடப்பவன் மரித்து போவான் மதம் கடந்து பிரதேசம் கடந்து ஒன்றாய் சேரு உய்யும் தமிழினம்!" "ஆலம் விழுதின் அற்புதம் பார் தாங்கி நிற்கும் உறுதியைப் பார் இடர் பல எமக்கு வந்தாலும் இணை பிரியா ஒற்றுமை காண்!" "நானாய் வாழ முடிவு எடுத்தேன் சாதி சமயம் இரண்டும் தவிர்த்தேன் அண்ணாவும் தம்பியும் கனவில் வந்தினம் பெற்ற அனுபவத்தை எனக்கு தந்தினம்!" "ராமனை வெறுத்து பூமியுள் குதித்தாள் யுத்தத்தை வெறுத்து புத்தன் ஆனான் அன்பை போதித்து சமயம் பிறந்தது வெறுப்பை வளர்த்து கொலை செய்யுது!" "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" "கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் நீதி வேண்டி சிலம்பை உடைத்தாள் நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்!" "விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும் தட்டிக் கேட்டும் பெற வேண்டும் நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!" "ஒன்றாய் கூடு உண்மையை உரை நியாயம் நிறுத்து விசாரணை எடு கவலை மறக்க தீர்வைத் தா கேள்வி கேட்டு நடுகல் முழங்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.