Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா போட்ட முத்துமாலையும் அமெரிக்கா போடும் பாதுகாப்பு வளையமும் - விவேகன்

Featured Replies

சீனா தனது இந்து சமுத்திரப் பிராந்திய நடவடிக்கைகளுக்காக மிக நீண்டகாலத் திட்டமிடலுடன் மேற்கொண்ட குறிப்பாக இந்தியாவைச் சுற்றி போட்டுவைத்த முத்துமாலைத் திட்டத்தைப் சிதறடிக்கும் வகையில், அந்த முத்துமாலையைச் சுற்றி அமெரிக்கா பாரிய வளையம் ஒன்றை அமைத்துவருவது தற்போது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

மலாக்கா ஜலசந்தி ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நுழையும் தமது கப்பல்களுக்கு பாதுகாப்பாக சீனா சில நாடுகளில் துறை முகங்ளை அமைத்துவந்தது. இது String of pearls (முத்துமாலை) திட்டம் என பரவலாக அறியப்பட்டது.

உலக அளிவில் 75 வீதமான எரிபொருள் வளைகுடாவின் ஊடாகவே வெளியேறுகின்றது. இந்த எரிபொருளைப் பாதுகாப்பாக சீனா கொண்டுசெல்வதற்காக, வளைகுடாவில் இருந்து தென் சீனா வரையான கடற்பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பிய சீனா, அதற்காக அமைத்ததே இந்த முத்துமாலைத் திட்டம். அதாவது இந்தியாவை சுற்றி வளைத்து இந்தியப் பெருங்கடலிலும், அரபு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்துவது தான் இதன் முக்கிய நோக்கம் என்கின்ற போதிலும், இதில் சீனாவின் எதிர்காலத்திற்கான பல பாதுகாப்புத் திட்டங்களும் உள்ளடங்கியிருப்பதாக கருதப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் மியன்மாரில் சிட்வே என்னும் இடத்திலும், பங்களாதேசத்தில் சிட்டகொங்கிலும், சிறீலங்காவில் அம்பாத்தோட்டவிலும், பாகிஸ்தானில் குவாடாரிலும் ஏற்கனவே சீனா துறைமுகங்களை அமைத்துவிட்டது. அதேவேளை, மலாக்கா ஜலசந்தி ஊடாக தென் சீனாவிற்கான கடற்பிராந்தியிந்திலும் தனக்குப் பாதுகாப்பான துறைமுகங்களை அது கொண்டிருக்கின்றது. இந்தத் துறை முகங்கள் வர்த்தக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டவை எனக் கூறப்பட்டாலும், இவை கடற்படைத் தளங்களாக மாற்றப்படக் கூடியவை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு வர்த்தக நோக்கம் என்ற அடிப்படையில் சீனா முத்துமாலையை அணிந்துவிட்ட நிலையில்தான், அமெரிக்கா அதனைச் சுற்றி இன்னொரு பாரிய வளையத்தைப் பின்னத் தொடங்கியது. அமெரிக்காவின் இந்த வளையத்தை அறிந்துகொண்ட சீனா விரைவாகச் செயற்பட்டு அந்த வளையத்திற்கு வெளியேயும் ஒரு பாதுகாப்பான துறைமுகத்திற்கான ஒப்பந்தத்தைபோட்டுவிட்டது.

அது கிழக்கு ஆபிரிக்க கண்டத்திற்கு அருகேயுள்ள சிசெல் தீவில்தான். இங்கு தற்போது சீனாவின் நீர்மூழ்க்கிக் கப்பல்களும் நங்கூரமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அமெரிக்கா போட்டுவரும் வளையம் சீனாவிற்கு அதிர்ச்சியளிக்காமல் இல்லை. அந்த வகையில் அமெரிக்கா அமைத்துவரும் முத்துமாலைக்கு வெளியேயான வளையம் குறித்து இங்கு பார்ப்போம். ஏற்கனவே தென் சீனக் கடற்பிராந்தியத்தில் உள்ள ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் அமெரிக்கா 10ற்கும் மேற்பட்ட கடல், வான், தரை என முப்படைகளுக்குமான தளங்களைக் நீண்டகாலமாக வைத்திருக்கின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா அந்நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையடுத்து அந்நாட்டின் வட பகுதியிலும் அந்நாட்டுக்கு சொந்தமான தீவுகளிலும் அமெரிக்கப் படையினர் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளனர். அமெரிக்கப் படைகள் அவுஸ்திரேலியாவில் குவிக்கப்படுவதை சீனா ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றது.

china%20in.jpg

இந்து சமுத்திரப் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோகோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அமெரிக்காவிற்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது. இங்கிருந்து நவீன வேவு விமானங்களை அமெரிக்கா பறக்கவிடவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே டியகோ கார்சியா தீவில் கடற்படைத்தளத்தை வைத்திருக்கும் அமெரிக்கா, இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்னொரு தீவிலும் தனது படைத்தளத்தைக் கொண்டிருக்கவுள்ளது.

கோகோஸ் தீவில் கடற்படைத் தளத்தை அமைக்க முடிவு செய்திருப்பதற்கு சீனா கடும் அதிருப்தியை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. ஏனெனில் வளைகுடா நாடுகளிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் எரிபொருள் கொண்டுவரப்படும் மிக முக்கியமான கடற்பாதையான மலாக்கா ஜலசந்தியை கோகோஸ் தீவிலிருந்து போர்க் கப்பல்கள் எளிதில் சென்றுவிட முடியும்.

எதிர்காலத்தில் இந்தியா - சீனா அல்லது அமெரிக்கா - சீனா இடையே ஒரு போர் அல்லது பதற்ற நிலை உருவானால் மலாக்கா ஜலசந்தியை போர்க்கப்பல்கள் வழிமறித்தாலே சீனாவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகின்றது. இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் வடபகுதித் துறைமுகமான டார்வின் பகுதியில் கடந்த வாரம் 200 அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கியுள்ளனர். இவர்களுக்கு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.

அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல்கட்டமாக வடக்கு அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்கப்படைகள் தரையிறங்கியுள்ளன. சீனாவின் பெரும் கப்பல்கள் ஆழ்கடற்பகுதியற்ற இந்தோ - மலேசியா இடையேயான மலாக்கா ஜலசந்தியூடாகப் பயணிக்கமுடியாத நிலையில் அவுஷ்திரேலியாவிற்கும் தீமோருக்கும் இடைப்பட்ட இந்தக் கடற்பாதையையே பயன்படுத்துகின்றன.

தற்போது இந்தக் கடற்பரப்பின் கண்காணிப்பும் அமெரிக்காவின் நேரடிக் கண்காணிப்பிற்குள் வந்துள்ளது. அமெரிக்கப் படையினரை வரவேற்கும் நிகழ்ச்சியில் பேசிய அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி ப்ளீச், சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் திமோர் கடற்பரப்பை எளிதில் எட்டக் கூடியவகையில் டார்வின் துறைமுகம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது என்று கூறினார்.

இதேவேளை, தமது கடற்படையினர் இப்பிராந்தியத்தில் எங்கும் பயிற்சி பெறுவதற்கு தமக்குக் கிடைத்திருக்கக் கூடிய அற்புதமான வாய்ப்பு இதுவென்று அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கடற்படை தளபதி டுயானே திசென் மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

தற்போது 200 அமெரிக்கக் கடற்படையினர் டார்வின் துறைமுகத்தில் நிலைகொண்டுள்ளனர். இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017ம் ஆண்டில் 2500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. வியட்நாம் போருக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய முதலாவது இராணுவ நடவடிக்கை இதுவென்கின்றனர் அரசியல் வல்லுனர்கள். தற்போது டார்வின் துறைமுகத்தில் அமெரிக்காவின் போர்க் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் எடுத்துச் செல்லும் சீனாவின் கப்பல்கள் வழக்கமாக மலாக்கா ஜலசந்தி வழியேதான் சீனாவின் கிழக்கு பிராந்தியத்தியக் கடற்பகுதிக்குச் செல்லும்.

ஆனால் பெரிய கப்பல்கள் அனைத்துமே அவுஷ்திரேலியாவிற்கு அருகிலுள்ள திமோர் கடற்பரப்பின் ஊடாகச் சுற்றிச் செல்வதைத் தவிர வேறு இலகுவான வழியில்லை. டார்வின் துறைமுகத்திலிருந்து மிகவும் அருகில்தான் இந்தத் திமோர் கடற்பரப்பு உள்ளது. சீனாவின் அசைவுகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் டார்வின் துறைமுக நகரில் முதல் காலடி வைத்திருக்கிறது அமெரிக்கா என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்தியாவுடன் தனது நட்புறவை அதிகரித்துள்ள அமெரிக்கா அடிக்கடி கூட்டுக் கடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றது. இரு நாடுகளும் 1992ம் ஆண்டு முதல் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற போதும் அண்மைக் காலமாக இது மேலும் அதிகரித்துள்ளது. சீனாவின் பிரசன்னம் அதிகமுள்ள வங்கக் கடற்பரப்பில் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் கடற்படையினரும் ஒரு வார கால கூட்டுப் பயிற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். ‘மலபார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இக்கூட்டுப் பயிற்சி கடந்த சனிக்கிழமை தொடங்கியுள்ளது.

china%20in%2001.jpg

இப்பயிற்சியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட, அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். கார்ல்விஷன், யு.எஸ்.எஸ். ஹார்லே. யு.எஸ்.எஸ்.பங்கர் ஹில் ஆகியவை பங்கேற்றுள்ளன. அமெரிக்காவின் கார்ல்விஷன் போர்க் கப்பலானது ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அல்குவைதா தலைவர் பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க படைகள் தாக்கிக் கொன்றன. அப்போது கைப்பற்றப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடலை கார்ல்விஷன் கப்பலில் எடுத்துச் சென்றுதான் கடலில் வீசப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தியக்கடற்படை சார்பில் ஐ.என்.எஸ்.சத்புரா, ஐ.என்.எஸ்.ரன்விஜய், ஐ.என்.எஸ்.ரன்விர், ஐ.என்.எஸ்.குலிஷ், ஐ.என்.எஸ்.ஷக்தி ஆகிய 5 போர்க் கப்பல்கள் பங்கேற்றுள்ளன. இக்கூட்டுப் பயிற்சியின் முதல் 3 நாட்கள் சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கும் நடைபெறுகின்றது. தொடர்ந்து 10ம் திகதி முதல் 16ம் திகதி வரை வங்கக் கடற்பரப்பில் இரு நாடுகளின் கடற்படைகளும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடும். கப்பல் மேற்தளச் செயற்பாடுகள், வான் பாதுகாப்புப் பயிற்சிகள், ஒருங்கிணைந்த நீர்மூழ்கி கப்பல் தடுப்புப் போர்ப் பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளில் இரு நாடுகளின் கடற்படைகளும் ஈடுபடுட உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவுடன் இவ்வாறு தனது உறவை அமெரிக்கா வலுப்படுத்திவரும் நிலையில், இலங்கையில் தமிழர்களின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான உடன்படிக்கையையும் அமெரிக்கா சிறீலங்காவுடன் ஏற்கனவே செய்துகொண்டுள்ளது.

இதேவேளை, வளைகுடாவிற்கு மிக நெருக்கமாகவுள்ள பாகிஸ்தான் குவாடாரில் ஏற்கனவே சீனா தனது துறைமுகத்தை அமைத்துவிட்டது. அத்துடன், அமெரிக்கா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டு வரும் முரண்பாடுகளால் அந்நாட்டில் தனது தளத்தை அமைக்க அமெரிக்காவினால் முடியாதிருக்கின்றது. இதனால், இப்பிராந்தியத்தில் தனது தளத்தை அமைப்பதற்கான திட்டங்களை அங்கு வகுக்கத்தொடங்கிவிட்டது. பாகிஸ்தானின் தென் பகுதி பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்கனவே தனிநாடு கோரிப் போராட்டம் நடந்து வருகின்றது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரித்துள்ளதுடன், பலுசிஸ்தானுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கக்கோரி அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்தும் உள்ளனர். பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு இந்தியாவும் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தை தமது நலன்களுக்காக எதிர்த்த, உரிமை கேட்டுப் போராடியவர்களை அழித்த அதே உலகம்தான் பாகிஸ்தானில் சுயநிர்ணய உரிமை கேட்டுப் போராடும் மக்களுக்காக அம்மாகாணத்தை தனிநாடாகப் பிரிக்க முயன்றுவருகின்றார்கள் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, இது குறித்து அடுத்த தொடர்களிலும் பார்ப்போம்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.