Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் தலைவர்களும் தமிழர் தலைவர்களும்-ஒரு ஒப்பீடு - தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

இலங்கை அரசியலில் கடந்த சில தினங்களாக பேசு பொருளாக உள்ள விடயம் தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புச் சம்பவமாகும். முஸ்லிம் மக்களின் மத வழிபாட்டுத் தலமாகிய இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் மக்களும் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டமையானது இலங்கையில் முஸ்லிம்களின் ஆழமான இருப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் வசிக்கின்ற மக்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாம் நிலையிலுள்ளது. சிங்களவர்களுக்கு அடுத்ததாக தமிழர்களும் மூன்றாம் நிலையில் முஸ்லிம்களும் உள்ளனர். ஆயினும் இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் செல்வாக்கு உயர்ந்த நிலையிலேயே உள்ளது. முஸ்லிம்களின் நிலை இவ்வாறு இருக்கின்ற போது தமிழ் மக்களின் நிலை பெரும் கவலைக்கிடமாகவே உள்ளது.

தமிழ் மக்களின் தலைமைகள் தமிழ் மக்களை வழிப்படுத்துகின்ற நிலைக்கும் முஸ்லிம் மக்களின் தலைமைகள் முஸ்லிம்களை வழிப்படுத்துகின்ற நிலைக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. தம்புள்ளயில் ஒரு பள்ளிவாசலை பௌத்தர்கள் இடிக்க முற்பட்டபோது அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். ஆளும் கட்சியில் முக்கிய அமைச்சுப் பதவிகளை அலங்கரிக்கின்ற அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியுதீன் உட்பட அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் கிளர்ந்தெழுந்தனர். அனைத்து மத ரஸாக்களும் உலமா சபைகளும் ஒற்றுமைப்பட்டன.

தம்புள்ள பள்ளிவாசலை இடிக்க வேண்டாமென்று 18 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். பள்ளிவாசல் இடிக்கப்படுமாயின் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் அமைப்புகளும் அரசை எச்சரித்திருந்தன. முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையடுத்து பள்ளிவாசல் விவகாரம் தற்போது சற்று அமைதியாக உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

இந்த விடயங்களுடன் எமது தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் ஏராளமான பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ-9 நெடுஞ்சாலை நெடுகிலும் சிறியதும் பெரியதுமாக ஏராளம் புத்த விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலாக தமிழர் தாயகப் பகுதியெங்கும் புத்த விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Srilanka%20Muslim.jpg

இந்த விடயங்கள் தொடர்பில் எமது தமிழ் அமைச்சர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ இதுவரையில் எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பிரதியமைச்சர் கருணாவும் கேவலம் பதவிக் கதிரைகளை மட்டும் கட்டியணைத்துக்கொண்டிருகின்றனர். ஆனால், இவர்களைப்போல ஆளுங் கட்சியில் அமைச்சர் பதவிகள் பெற்றிருக்கின்ற ரவூப் ஹக்கீமும் றிசார்ட் பதியுதீனும் தமது மதத்துக்கு ஆபத்து வந்தபோது பதவிக் கதிரைகளைப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை.

உடனடியாக வீதிக்கு இறங்கத் தயாரானார்கள். மக்களைத் திரட்டிப் போராட்டங்களை நடத்தினார்கள். இதனை விடுத்து, அதிகாரமில்லாத ஒப்புக்காக உருவாக்கப்பட்ட பாரம்பரியக் கைத்தொழில்கள் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவிற்கு அந்தப் பதவி பெரிதாகத் தெரிகின்றது. இனத்தின் பண்பாடுகளும் கலாசாரங்களும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற போது டக்ளசிற்கும் கருணாவிற்கும் கேவலம் எதிர்த்து ஓர் அறிக்கை விடக்கூட லாயக்கில்லை.

இவர்களுக்கு மேலாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஓடி ஓடித் தெரிவு செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பௌத்த விகாரை கட்டுகிறார்கள் கட்டுகிறார்கள் என்று அறிக்கை விடுவதில் மட்டும் இவர்கள் சமத்தர்கள். ஆக்கபூர்வமான வேலைகள் எவையுமே இவர்களுக்குத் தெரியாது.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று இன்று வரை சொல்லிக்கொள்ளப்படுகின்றது. இந்த நாட்டில் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எவருக்கும் தடையில்லை. இந்த நிலையில் தம்புள்ள பள்ளிவாசலை இடிக்க வேண்டாமென்று முஸ்லிம்கள் குரல் கொடுப்பதைப் போன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியிருக்க முடியும்.

கட்சி வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட்டதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்களை அல்லது அமைதிப் போராட்டங்களை நடத்தியிருக்க முடியும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இந்த நிலைமை இவ்வாறே தொடருமாயின் இலங்கையில் தமிழ் மக்கள் முஸ்லிம்களை விடவும் அடிமட்டத்திற்குத் தள்ளப்படக்கூடிய வாய்ப்புகளே உள்ளன.

இது தமிழ் மக்களுக்கு ஓர் ஆரோக்கியமான சூழலாக அமையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் பிரச்சினை என்ன என்பது இன்றுவரை தெரியாத நிலையிலுள்ளதாகவே பலரும் கருத்து வெளியிடுகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்ற முனைப்புடனேயே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வே இன்று அவசர தேவையாக உள்ளன. தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. ஆங்காங்கே பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஏராளமான குடும்பங்கள் இன்றுவரை மீளக்குடியமர்த்தப்படவில்லை. மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை. தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் கொலை, கொள்ளை, கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகங்கள், பாலியல் வல்லுறவுகள் போன்றன சமூக விரோதச் செயல்கள் தலைவிரித்தாடுகின்றன.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவேளை உணவுக்கே வழியற்றவர்களாக உள்ளனர். போர் காரணமாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விதவைகள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் ஒரணியில் திரண்டு நின்று அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் கிளர்ந்தெழுந்ததைப் போல தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறுகின்ற நில ஆக்கிரமிப்பு மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தமிழ் மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைச் செயற்படுத்த வேண்டுமென்று அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் புலம்பெயர் சமூகத்திற்கு உண்டென்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.