Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் சிவகுமாரின் சிறப்புப் பேட்டி

Featured Replies

Dscn3639.jpgதமிழின் இன்றைய ஆளுமைகளில் மட்டுமின்றி சூர்யா, கார்த்தி போன்ற இன்றைய இளைய தலைமுறையின் தந்தையாக அறியப்படுவதோடு இன்றைக்கு மிக முக்கியமானவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து நல்ல பெயர் ஈட்டியது மட்டுமின்றி அதிகமான மக்களால் ‘விரும்பிக்கேட்கப்படும்’ புகழ்பெற்ற பேச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார் அவர். முக்கிய அரங்குகளில் அவர் நிகழ்த்தும் உரைகள் யாவும் ஏதாவது ஒரு பெரிய டிவி சேனலால் பண்டிகை தினங்களில் ஒளிபரப்புவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிடுகின்றன. கோடிக்கணக்கான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட அந்த உரைகள் மோசர்பியர் போன்ற நிறுவனங்களால் வாங்கப்பட்டு சிடிக்களாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்பனை ஆகின்றன. இதுவரை எந்த ஒரு பிரபல பேச்சாளருக்கும் ;தலைவர்களுக்கும் கூடக் கிடைக்காத வாய்ப்பு இது. இது எப்படி இவருக்குக் கைவந்தது? இந்தத்துறையை எப்படித் தேர்ந்தெடுத்தார் இவர்?

 
இதுவரை எங்கும் பேசியிராத விஷயங்களாகவும் பத்திரிகைகள் எதிலும் கொடுத்திராத பேட்டியாகவும் இருக்கவேண்டும் அப்படிப்பட்ட விஷயங்களைத் தமிழ் இணைய நேயர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியுமா என்று அவரிடம் வேண்டுகோள் வைத்தேன். மகிழ்வுடன் ஒப்புதல் தெரிவித்த சிவகுமார் இரண்டே நாட்களில் கேள்விகளுக்கான பதில்களைத் தம் கைப்பட எழுதி அனுப்பிவைத்தார்.

002%2B%25281%2529.jpg

கே; நினைவாற்றலுக்குப் பெயர் போனவர் நீங்கள்.... உங்கள் பால்யகால அனுபவங்களின் நினைவுகள் எங்கிருந்து தொடங்குகின்றன?

சிவகுமார்;- பூஜ்ஜியத்தில் என் பிறப்பு துவங்கினாலும் சாகசங்கள் நிறைந்ததாக உள்ளது மட்டுமின்றி இன்னும் வாழ வேண்டும், முழுமையாக இதை வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற வேட்கை என்னுள் கூடிக்கொண்டே போகிறது

வறுமையில் கழிந்த இளமையும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த ஓவியக்கலை நாட்களும் ஆரம்பகாலத் திரையுலகில் பெற்ற அடித்து வீழ்த்தும் அவமானங்களும் அழகிய படிப்பினையாக எதையும் துணிந்து எதிர்கொள்ளும் துணிவையும் தந்தன.

.

kumarez.jpg

பத்துவயதில் சூலூர் ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை சந்தைக்கு வரும் குளத்தூர் பெரியம்மா நாலணா நாணயம் கொடுத்துவிட்டுப் போவார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் தலை முன்பக்கம், புலியின் உருவம் பின்பக்கம் அச்சாகியிருக்கும் வெள்ளி நாணயம். கையில் வைத்துக்கொள்ளவே கௌரவமாக இருக்கும்.

கோவை திருச்சி சாலையில் பள்ளி முடித்து வீட்டுக்குப் போகும் வழியில் சீனிவாசா காபி கிளப் ஓட்டல் இருக்கும்.உள்ளே இருந்து வீசும் உருளைக்கிழங்கு போண்டா வாசனை உயிரையேவருடி அழைக்கும். உருளைக்கிழங்குபோண்டா நாலணா என்று விலைப்பட்டியலிம் போட்டிருக்கும். ஒரு போண்டா நாலணாவா, இரண்டு போண்டா நாலணாவா?......................தட்டில் இரண்டு போண்டா வைத்துத் தருகிறார்கள். கையில் இருப்பதோ நாலணா மட்டுமே. சாப்பிட்டு முடித்தவுடன் இரண்டு போண்டா விலை எட்டணா என்று சர்வர் சொல்லிவிட்டால் மீதி நாலணாவுக்கு எங்கே போவது? இந்தத் தயக்கத்திலேயே உருளைக்கிழங்கு போண்டாவை நான் ஒரு நாளும் சாப்பிடவே இல்லை.

 

005.jpgமாரியம்மன் கோவிலை ஒட்டிய கந்தசாமித்தேவர் பெட்டிக்கடையில் கைமுறுக்கும் குச்சிமிட்டாயும் வாங்கிச் சாப்பிட்டு மனதைத் தேற்றிக்கொள்வேன்.

பொழுது விடியுமுன் அம்மாவுடன் தோட்டம் சென்று இடுப்பில் நாலுமுழ வேட்டி கட்டி, அதை மடியாக மாற்றி இரண்டு மடி பருத்தி எடுத்து அம்பாரத்தில் சேர்த்துவிட்டு, பரபரப்பாக பூக்குடலை எடுத்துக்கொண்டு நாலு பர்லாங் தூரத்திலுள்ள மிளகாய்க்கார பெரியம்மா தோட்டத்திற்கு ஓடி வெள்ளரளி, செவ்வரளி, சாமந்தி, அந்திமல்லிப் பூக்கள் என்று பறித்துக்கொண்டு வந்து வாழை நாரில் மாலை கட்டி மொட்டையாண்டி முருகனுக்குச் சாற்றி-

அன்பே அப்பா அம்மையே அரசே அருட்பெரும் சோதியே


அடியேன் துன்பமெலாம் தொலைத்த துறைவனே

இன்பனே எல்லாம்வல்ல சித்தாகி என்னுளே இயங்கிய பொருளே

வன்பனேன் பிழைகள் பொருத்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே – என்ற வள்ளலார் வரிகளைச் சொல்லி வேண்டிக்கொண்டு நேற்றைய சோளச்சோற்றில் கட்டித்தயிர் விட்டுக் கரைத்துக்குடித்துவிட்டு, உள்ளே ஈயம் பூசியிருக்கும் பித்தளைத் தூக்குப் போசியில் அக்கா செய்து கொடுக்கும் அரிசியும் பருப்பும் சோற்றைப் போட்டுக்கொண்டு வெறும் காலில் விரைசலாய் நடந்து எட்டு முப்பது மணிக்கு சூலூர் போர்டு உயர்நிலைப்பள்ளி போய்ச் சேருவேன்.

Copy%2Bof%2B004.jpg

கே ; ஆரம்பநாட்களில் சினிமா மீது ஒரு ஈர்ப்பு இருந்ததா உங்களுக்கு?

சிவகுமார் ; சினிமா பார்க்கும் வாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு முறையே கிடைக்கும் என்பதால் திருச்சி ரோடு கலங்கல் பிரிவில் சொக்கப்பன் பீடிக்கடையை ஒட்டி இரண்டு மரக்கட்டைகளில் தொங்கும் சினிமா தட்டிகளில் சிவாஜியின் பராசக்தி போஸ்டர்களையும், மனோகரா போஸ்டர்களையும், தேவதாஸில் தாடியுடன் காட்சியளிக்கும் நாகேஸ்வரராவ் போஸ்டர்களையும், கவர்ச்சிகரமான ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ போஸ்டரையும் பார்த்து பொங்கியெழும் சினிமா ஆசையை அடக்கிக் கொள்வேன்.

வெள்ளிக்கிழமை பள்ளிவிட்டதும் சூலூர் ஷண்முகதேவி தியேட்டரில் புரொஜக்டரை ஒட்டிய காம்பவுண்டுக்கு வெளியே வெட்டி எறியப்பட்ட துண்டுப் பிலிம்களை நானும் நண்பர்களும் பொறுக்கி எடுப்போம். சங்கிலியால் பிணைத்த சிவாஜியும், குஷ்டரோகியாக எம்.ஆர்.ராதாவும், மலைக்கள்ளனாக தலையில் ஸ்கார்ஃபும் இடுப்பில் பெல்டுமாக இருக்கும் எம்ஜிஆர் படமும் கிடைக்கும். புதையல் எடுத்த சந்தோஷத்தில் ஊர் சென்று பூதக்கண்ணாடிக்கு பதிலாக பியூஸ் ஆன மின்சார பல்பின் உள்ளே நீர் ஊற்றிவைத்து இருண்ட வீட்டிற்குள் சாவித்துவாரத்தின் வழி முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம் சூரிய வெளிச்சம் பாய்ச்சி நாலு அடிக்கு மூணு அடி சைஸில் சுண்ணாம்புச் சுவற்றில் தெரியும் நடிகர்களைப் பார்த்துச் சிலிர்ப்போம்.

கூட்டணி சேர்ந்து சினிமா காட்டியது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி சண்டையில் முடிந்துவிட்டது.

பல்ப் என்னுடையது, கண்ணாடி அவனுடையது, பிலிம் உன்னுடையது என்று பாகப்பிரிவினை நடந்தது. அடுத்து பள்ளி இறுதி ஆண்டுவரை ஐந்து ஆண்டுகள் ஊரிலிருந்து புறப்படும் ஐந்து மாணவர்கள் ஒரு கட்சி, நான் தனிக்கட்சி என்று வைராக்கியமாக பகைமைத் தொடர்ந்தது. என்னமாதிரி பகைமை தெரியுமா?

அக்காவுக்கு பதினைந்து வயதில் திருமணம். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது. காலை ஆறு மணியிலிருந்து ஏழரை வரை முகூர்த்த நேரம். தாலி கட்டி சடங்குகள் முடிந்ததும் சும்மா இருக்கப் பிடிக்காமல் அன்றும் பள்ளிக்குச் சென்றுவிட்டேன். சண்டைப் போட்டுக்கொண்டிருந்த மாணவர்களில் ஒருவனின் அண்ணன்தான் என் அக்கா கழுத்தில் தாலி கட்டினார். அதனால் இதோடு சமாதானம் ஆகிவிடுங்கள் என்று சொல்லிப்பார்த்தார்கள். அக்காவை மணந்து கொண்டார் என்பதற்காக

004.jpg

மச்சானின் தம்பியுடன் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை என்று எஸ்எஸ்எல்சி முடியும்வரை பிடிவாதம் காட்டினேன்.

கே ; சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இருந்ததா? கோவில்களுக்கு அடிக்கடி போவீர்களா?

சிவகுமார் ; மாதத்தில் ஒரு கிருத்திகைத் தவறாமல் என் அப்பா பழனிமலை சென்று முருகனைத் தரிசித்து வந்தார். முப்பத்து மூன்று வயதில் அவர் விடைபெற்றுக் கொண்டார். அவர் வாங்கிவைத்துக் கும்பிட்ட மொட்டை ஆண்டி படம் எண்பது ஆண்டுகள் கழித்து இன்னமும் பூஜை அறையில் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை அம்மாவோடு பழனிக்குப் பயணமாவேன். இரவு பத்துமணி தாண்டி கோவை ரயிநிலையத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் திண்டுக்கல் பாசஞ்சர் புறப்படும். கோவை வழி எல்லா ரயில்களும் வந்துபோனபின் கடைசியாகப் புறப்படும் ரயில் அது.

பாக்குமட்டையைத் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவி பக்குவமாய்ச் செய்த புளிச்சாதத்தை அதில் கொட்டி பார்சல் செய்து எடுத்துப்போவோம். பாசஞ்சர் ரயில் என்பதைவிட நடைவண்டி என்று சொல்லலாம். வண்டி போய்க்கொண்டிருக்கும்போதேயே வழியிலே இறங்கி சிறுநீர் கழித்துவிட்டு ஓடிப்போய் ஏறிக்கொள்ளலாம். அவ்வளவு வேகம்.

அதிகாலை நாலு மணிவாக்கில் பழனிரயில் நிலையத்தில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு திண்டுக்கல் நோக்கி அது நகரும். குழந்தைகள் கூட கிழவர்கள்போல கிடுகிடுவென்று நடுங்கும் குளிரில் பற்கள் தடதடக்க அரை டிராயர்வழி குளிர் உடம்பைத் தாக்க ரோமக்கால் குத்திட ஓட்டமும் நடையுமாக அடிவாரம் செல்வோம். கருப்பட்டிச் சத்திரம், மங்கம்மா சத்திரம் என்று தனவான்கள் தர்மசத்திரங்களை அரண்மனைப்போலக் கட்டிப்போட்டிருப்பார்கள். திருமலை நாயக்கர் மகால் தூண்கள் போன்று பல தூண்கள் தாங்கிய அகண்ட ஹாலில் ஒரு மணிநேரம் சுருண்டு படுப்போம் விடியுமுன் புறப்பட்டு மலையைச் சுற்றி நடக்க ஆரம்பிப்போம். தென்பகுதியில் வரத்தாற்றில் சிலிர்க்கும் தண்ணீரில் விழுந்து எழுவோம். திரும்பிய பக்கமெல்லாம் ஜடாமுடியும் காவியுமாய் சாமியார்கள். மலை ஏறுமுன் தேங்காய் பழம் பிரம்புத்தட்டில் வாங்கி எடுத்துப் போவோம்.

அனுமன் இலங்கையை அடைய ஆகாயத்தில் பறந்ததுபோல எங்கிருந்தோ பறந்துவரும் குரங்குகள் – கழுகு கோழிக்குஞ்சைப் பறித்துச் செல்வதுபோல் ஒரே தாவில் பழக்கூடையைப் பறித்துக்கொண்டு மதிற்சுவர் மீது ஏறி அமர்ந்து அழகு காட்டும். வெறும் கையோடு வியர்வை சொட்டச்சொட்ட ஆயிரம் படிகளைத் தாண்டி உச்சி செல்வோம். தென்கிழக்குப் பகுதி காம்பவுண்டில் ஒரு சிறு வழி...கீழே இறங்கினால் ‘ராமர் பாதம்’ என்றொரு கல்வெட்டு.

கொடைக்கானல் மலையிலிருந்து வீசும் கூதல் காற்று, நெஞ்சுக்குள் புகுந்து நனைந்த ஆடையை ஐந்து நிமிடத்தில் காயவைக்கும்.

முருகன் சந்நிதிக்குள் அனுபவித்த அந்த விபூதி வாசனையும் பஞ்சாமிர்த சுவையும் இன்னமும் அச்சு அசலாக மனதிற்குள் பதிவாகி இருக்கின்றன.

பன்னிரண்டு மணிக்கு பாக்கு மட்டையைப் பிரித்தால் அசுரப்பசியில் புளிசாதம் அமிர்தத்தை மிஞ்சும் ருசியில் இருக்கும்

Dscn3647.jpgகே ; உங்களால் மறக்கமுடி
யாத அனுபவமாக எதைச் சொல்லுவீர்கள்?

சிவகுமார் ; எங்கள் ஊருக்குள் மிகவும் பழமையானது பிள்ளையார் கோவில், அடுத்து மாகாளியம்மன் கோவில், மூன்றாவது அரச மரத்தடியில் வேல் குத்தி பாம்புப் புற்றுடன் விளங்கும் பரமசிவன் கோவில். மாதம் ஒண்ணாம்தேதி ஆனால் மில் முதலாளி படியளப்பதால் எதிர்காலம் பற்றிய பயம் எங்கள் மக்களுக்கு இருக்கவில்லை. ஆகவே இறை பக்தி தேவைப்படவில்லை. ஆடிக்கு ஒரு பூஜை, அமாவாசைக்கு ஒரு பூஜை மட்டுமே கோவில்களில் நடைபெறும். மற்ற நேரங்களில் இவை பாழடைந்த கோவில்கள்தாம்.

ஒரு நாள் பக்கத்து வீட்டிலிருந்த தச்சு ஆசாரி மகன் என்னுடைய தோழன் – சாமி கும்பிட பிள்ளையார் கோவிலுக்குள் நான் போக பின்னால் வந்தவன், விளையாட்டாக மரக்கதவை உதைத்துச் சாத்திவிட்டான்.

மழைக்காலங்களில் மரக்கதவுகள் இறுக்கம் காட்டும். உதைத்த உதையில் கதவுகள் வலுவாகக் கோர்த்துக் கொண்டன. உள்ளே இருந்து இழுத்துத் திறக்க கைப்பிடி எதுவுமில்லை.

உட்சுவர் உயரம் பதினைந்து அடி. அதற்குமேல் ஓடு வேய்ந்த கூரை. கதவே ஏழு அடி உயரம். மாட்டிக்கொண்ட இடம் இப்போது சவுண்ட் புரூஃப்.

நாங்கள் கத்த ஆரம்பித்தோம்.

இது விசேஷ நாளில்லை. சாமி கும்பிட யாரும் வரமாட்டார்கள். என்ன கத்தினாலும் பாதையில் போகிறவர்களுக்கு எங்கள் கூக்குரல் எட்டவில்லை. அகப்பட்டுக் கொண்டது காலை பதினோரு மணிக்கு. அப்போதிருந்து ஆரம்பித்து மாலைவரை கூச்சல் போட்டு தொண்டைக்கட்டிச் சுவற்றில் சரிந்து விட்டோம். மின்சார வசதி கிடையாது. மாலையிலும் கோவிலுக்குள் விளக்கேற்ற யாரும் வர மாட்டார்கள். அழுகை வந்தது.

003.jpg

நேரம் சென்றுகொண்டே இருந்தது. பூஜை அறையும் இருண்டது. கண்களும் இருண்டன. முதன்முதலாக மரணபயம் தொற்றியது. அவ்வளவுதான் நம் கதை முடிந்தது என்ற எண்ணம் வந்தது.

அந்தி மயங்கிய நேரம்...காடு கரைகளில் வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிலரின் குரல்கள் மங்கலாகக் கேட்டது.

இதுதான் கடைசி சந்தர்ப்பம். சாவிலிருந்து விடுபடும் முயற்சியாக ஓங்கிக் குரலெடுத்து – “அக்கா....அம்மா.....அய்யா........கோவிலுக்குள்ளே நாங்க மாட்டிக்கிட்டிருக்கோம். வந்து கதவைத் திறந்து விடுங்கோ” என்று கத்தினோம்.

ஏதோ ஒரு மகராசி காதில் எங்களின் குரல் விழுந்து ஓடிவந்து கதவைத் திறந்துவிட்டார். ஒரு வழியாக உயிர்பிழைத்து வெளியில் வந்தோம்.

அன்றைக்கு அடைபட்டு அவதிப்பட்ட அந்தப் பிரமை, அந்த திகில், அந்த தவிப்பு பின்னாளில் விமானத்தில் ஏறி அமர்ந்ததும், விமானத்தின் கதவை ஏர்ஹோஸ்டஸ் மூடியதும் வந்துவிடும். ‘ஓ, நாம் அகப்பட்டுக்கொண்டோம். இப்போது முயன்றாலும் வெளியே போக முடியாது. அதோ ஏணியையும் அகற்றிவிட்டார்கள். கூச்சல் போட்டாலும் திறக்க மாட்டார்கள்’ என்று ஆழ் மனத்தில் ஒரு பய உணர்ச்சி பதட்டத்தை ஏற்படுத்தும். ஏ.சி குளிரிலும் உடம்பு வியர்க்கும்.

‘பயப்படாதே, அடங்கு. நீ பாதுகாப்பாக இருக்கிறாய். உனக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாய் இரு’ என்று உணர்ச்சிவசப்படும் மனதை அறிவு அடக்கப் போராடும். பல நாட்கள் போராடித்தான் இதிலிருந்து மீண்டிருக்கிறேன்.

கே ; ஆரம்ப நாட்களில் ஒரு ஓவியராக வருவதுதான் உங்கள் நோக்கமாக இருந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஓவியராக வருவது என்ற பொறி முதன்முதலாக உங்களுக்குள் எப்போது விழுந்தது என்பது நினைவிருக்கிறதா?

சிவகுமார் ; ஒண்ணாங்கிளாசில் அ , ஆ , எழுதிப் பழகும் போதே பூனை, மாடு, ரயில் என்றெல்லாம் வரைந்த நினைவு. எட்டாம் வகுப்புப் படிக்கும்போது முதுகுத்தண்டை நான் வரைந்த வேகத்தைப் பார்த்து வகுப்பே ஆச்சரியப்பட்டது. அதிகப் பட்சமாக ஐந்து நிமிடத்தில் தண்டுவடத்திலுள்ள அத்தனை எலும்புகளையும் அச்சாக வரைந்தபோது என் முதுகு நிமிர்ந்து நின்றது. நாம் கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான் என்ற எண்ணம் அப்போதுதான் ஏற்பட்டது.

கே ; நீங்கள் அதிகம் சந்தோஷப்பட்ட முதல் தருணம் என்று எதைச் சொல்வீர்கள்?

சிவகுமார் ; ஆயிரம் முறை என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்திருந்தாலும் ஆறாம் வகுப்பில் ஆசிரியர் விஜயராகவ அய்யங்கார் என்னை உட்கார வைத்து இடது பக்க முகத்தோற்றத்தை பென்சிலால் வரைந்து காட்டியபோது – கந்தன்கருணையில் முருகனாக நடித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிகமாக உணர்ந்தேன்.

கே ; உங்களிடம் எப்போதுமே எச்சரிக்கை உணர்வு ரொம்பவும் அதிகம். இது எப்படி சிறுவயதிலிருந்தே வந்ததா?

சிவகுமார் ; சென்னைக்கு ரயில் ஏறும்போது பாக்கெட்டில் இருக்கிற பத்துப் பதினைந்து ரூபாயை யாராவது பிக்பாக்கெட் செய்துவிடுவார்கள் என்று என் தாய்வழிப் பாட்டி டிராயரின் உள் பகுதியைத் திருப்பி பின் ஊசியால் பாக்கெட் வழியை ‘டாக்கா’ போட்டு அனுப்புவார்கள். ஐந்தரை ரூபாய் கட்டணச் சலுகையில் சென்னையிலிருந்து கோவைக்குப் பயணம் செய்த காலத்திலும் சரி, ஏ.சி முதல்வகுப்பில் 1800 ரூபாய் டிக்கெட்டில் பயணம் செய்த நாட்களிலும் சரி என்றுமே நான் ரயிலில் தூங்கியதே இல்லை.... எச்சரிக்கை உணர்வு!

கண்களை மூடி படுத்திருந்தாலும் ரயில் நிற்கும் இடங்களில் இது அரக்கோணம், இது காட்பாடி, இது ஜோலார்பேட்டை, இது சேலம் என்று மூளைக்குள்ளே மணி அடித்துக்கொண்டே இருக்கும். அப்படி எச்சரிக்கையாக இருக்கும் என்னிடமே கோவை ராஜா தியேட்டரில் 1956-ல் வணங்காமுடி படம் பார்க்கச் சென்றபோது டிக்கெட் கவுண்ட்டரை நோக்கி கூட்டம் மோதிய தருணத்தில் யாரோ ஒருவன் நாலணாவை என் டிராயர் பாக்கெட்டிலிருந்து திருடிவிட்டான். மூன்று நாட்களுக்கு அழுதேன்.

நண்பன் கிருஷ்ணசாமி தன் பணத்தில் டிக்கெட் வாங்கிக் கொடுத்தான். ஆனாலும் என் மனம் ஆறவில்லை. நாம் மனமுவந்து நாலணா தானம் செய்வது வேறு; நம்மை ஏமாற்றி ஒருவன் திருடிச்செல்வது வேறு.

அன்று அலட்சியமாக இருந்த என்னை என்னால் மன்னிக்க முடியாது.

 

 
 
 
marrage.jpg
 
 
 
006.jpg
க்தி வாய்ந்த ஊடகங்களில் ஒன்றான இணைய தளத்துக்கு நடிகர் சிவகுமார்வழங்கும் முதல் சிறப்புப் பேட்டி இது. தமதுபால்யகால நினைவுகளைப் பற்றிப் பேசிய சிவகுமார் தொடர்ந்து தமது மகன்கள், இலக்கியம், மேடைப்பேச்சு, உடல் ஆரோக்கியம், கடவுள் நம்பிக்கை என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து பேசுகிறார்
 
கே ; பொதுவாக நடிகர்கள் என்றால் தம்மைச்சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அது நண்பர்கள் கூட்டமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் உங்களைப் பொருத்தவரை அப்படி ஒரு கூட்டத்தை எப்போதுமே வைத்திருப்பதுபோல் தெரியவில்லை. உங்களுடைய நட்பு வட்டம் மிகப்பெரியது என்றாலும் அவர்களிடம்கூட ஒரு வரைமுறையுடன்தான் பழகுவீர்கள் என்றே தோன்றுகிறது. இது எப்படி நீங்களாக அமைத்துக்கொண்டதா? திரையுலகில் பட்டும்படாமலும் நட்பு பாராட்டுவது எப்படி சாத்தியமாயிற்று?

 

சிவகுமார் ; எளிமையான கிராமத்து வாழ்க்கை ஏழைகளை நேசிக்கப் பழக்கியது. இயற்கையோடு இணைந்து எட்டு மணிநேரம் பத்து மணிநேரம் என்று ஓவியங்கள் தீட்டிய காலங்களில் தனியே இருந்தது தனிமை வசப்பட காரணமாக அமைந்தது. அந்தத் தனிமை உள்முகப் பார்வை பார்ப்பதற்கு என்னைப் பழக்கிவிட்டது. உடன் படிப்பவர்களாயினும், உடன் நடிப்பவர்களாயினும் அவர்களை எட்ட நின்று கூர்ந்து கவனித்து அவர்கள் பலம் என்ன, பலவீனம் என்ன நம்மிடம் இருக்கும் தகுதிகள் என்ன என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க தனிமை வசதியாக இருந்தது. Loneliness என்பது வேறு; alone என்பது வேறு. வேறு யாரும் நம்மோடு இல்லாமல் நாம் மட்டும் தனியாக இருப்பதுஒன்று. மற்றவர்களால் கைவிடப்பட்டுத் தனிமையில்வாடுவது வேறு. Loneliness என்ற சோகம் என்னைத் தீண்டியதே இல்லை. பத்தாயிரம் பேரை மகிழ்விக்க பல மணிநேரம் பேசவும் தெரியும், பத்து நாட்கள் யாரோடும் பேசாமல் தனிமையில் இனிமை காணவும் முடியும்.

கே ; உங்களைத் திரையுலக மார்க்கண்டேயன் என்கிறார்கள். அதற்கேற்ப எப்போதும் இளமையாய் காட்சியளிக்கிறீர்கள். இதற்கு உங்களுடைய கட்டுப்பாடான வாழ்க்கை மற்றும்யோகா இவைதான் காரணமா அல்லது மனம் ஒரு பெரிய பங்கைச் செலுத்துகிறதா?

 

 

 
சிவகுமார் ; உயிரும் அறிவும் இணைந்த சூக்கும் உடல் வேறு, ஐந்து புலன்களுடன் கூடிய இந்த உடல் வேறு. நான் என்ற வார்த்தை இந்த இரண்டு உடம்புகளின் கூட்டு வடிவம். முதலில் சொன்ன உயிரும் அறிவும் இணைந்த ‘நானுக்கு வயதாவதே இல்லை. அது என்றும் சுறுசுறுப்பாகச் செயல்பட, ஆரோக்கியமாக இருக்க பௌதிக உடம்பை நாம் தளர்ச்சியடையவிடாமல் உடல் உறுப்புக்களை உடற்பயிற்சி யோகா செய்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.எனக்கு என்றுமே வயதாகாது. வயோதிகம் எனக்கு வராது. காலண்டரில் பிறந்த வருடம் கூடிக்கொண்டே போகலாம். நான் என்றும் இளமையாக நிரந்தரமாக இருப்பேன். என்னைச் சுற்றியுள்ளோர் வயதாகி இறக்கலாம். பூமிக்கும் அழிவு ஏற்படலாம். நான் அழிவற்றவன், நிரந்தரமானவன் என்ற எண்ணம் என் ஆழ்மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுதான் எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இளமைத்தோற்றத்தைக் காப்பாற்றத் தூண்டுகிறது. அறிவு பூர்வமாக யோசித்தால் இது முட்டாள்தனம் என்று எனக்குத் தெரியும். இங்கு நான் அறிவைப் பயன்படுத்துவதில்லை. மனம் அலாவுதீனுக்கு உதவும் பூதம் போல. அது நீ கேட்டதைபபெற்றுக்கொடுக்கும். மனது லாஜிக் பார்க்காது. மனதில் நீ ஒரு நாள் கோடீஸ்வரனாகலாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அது முயற்சியாகி ஒரு நாள் உன்னைப் பணக்காரனாக்கிவிடும். மனதில் நீ உன் நண்பனைக் கொலை செய்யப்போகிறாய் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் நீ நிச்சயம் கொலைகாரனாகிவிடுவாய் என்று காப்மேயரும் தம்முடைய நூலில் சொல்கிறார்.
ஒரு நாள் நான் போற்றப்படுவேன் என்றுபதினாறு வயது முதல் ஒரு குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. முடிந்தவரை நல்லவனாக, அனைவரையும் நேசித்து அன்பு காட்டுபவனாக வளர்வேன் என்பதையும் ஆழ்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அது என்னுடைய ஆழ்மனதின் லட்சியம்தான்.

 

 

scan0044.jpg

 

 

 

 

கே ; சரி, திரைபடத்துறையிலிருந்து சட்டென்று தொலைக்காட்சிக்கு வந்த பெரிய கதாநாயகன் நீங்கள்தான். தொலைக்காட்சி சீரியல்களில் வெற்றிகரமாக நடித்துக்கொண்டிருந்தபோதே அதிலிருந்து வெளிவந்து மேடைகளில் பேச ஆரம்பிக்கிறீர்கள். இப்போது இதையே தொடரவும் செய்கிறீர்கள். இந்த மாற்றத்திற்கும் மனம்தான் காரணமா?

சிவகுமார் ; ஆமாம் மனம்தான் காரணம்....... உனக்கு எழுபது வயதாகிறது. நீ என்ன பெரிதாகச் சாதித்துவிட்டாய்? நீ காந்தியில்லை, காமராஜர் இல்லை, கம்பன் இல்லை. உன்னுடைய துறையில் எம்ஜிஆரும் சிவாஜியும் அரசியலிலும் கலையுலகிலும் சாதித்ததை நீ நெருங்க முடியாது என்று தலையில் அடித்துச் சொல்கிறது மனம்.

 

ஏழு ஆண்டுகள் ஓவியம் தீட்டியவன், நாற்பது ஆண்டுகள் ஐம்பது இயக்குநர்களின் படங்களில் பணியாற்றியவன், எண்பத்தேழு கதாநாயகிகளோடு இணைந்து நடித்தவன் என்று பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காதே. பழைய குப்பைகளை மூட்டைகளாக்கிச் சுமக்காதே. புகழுக்கு மயங்காதே. இன்னமும் நீ போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. நூறு படங்களில் நீ காட்டிய திறமையை உன் பிள்ளைகள் பத்தே பத்து படங்களில் காட்டிவிட்டார்கள். இருநூறு படங்களில் நீ சாதித்ததை இருபத்தைந்து படங்களில் அவர்கள் தாண்டிவிட்டார்கள்.

S%2BK%2Bb.jpg

பிள்ளைகள் புகழில் குளிர் காயாதே.உனக்கு என்று ஒரு வழியைத் தேர்ந்தெடு. யாரும் போகாத வழியாக, எளிதில் யாரும் நெருங்க முடியாத வழியாகப் பார் என்று சொல்லிக்கொண்டே இருந்தது. அதனால்தான் நாற்பது வருடங்கள் நடித்தது போதும். அடுத்தவர் எழுதிக்கொடுத்த வசனங்களை கிளிப்பிள்ளையாய் ஒப்புவித்துக் காசு வாங்கியது போதும். உனக்கு நீயே எசமான். உனக்கு நீயே படைப்பாளி. இலக்கியங்களைப் படி; வரலாற்றைப் படி; வாழ்க்கையைப் படி; உன்னுடைய கோணத்தில் அதனை உரையாக்கு. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிதொட்டியெல்லாம் போய் ஆயிரம் நாடகங்களில் நடித்த அனுபவம் உனக்கு இருக்கிறது. மக்களை – இந்தியாவின் பல பகுதி மக்களை – மேடை நடிப்பில் மகிழ்வித்தவன் நீ. இப்போது நீயே உரையை எழுது! என்றும் உலகுக்குப் பயன்படும் இலக்கியத்தை, வரலாற்றை, உண்மைச் சம்பவங்களை உரையில் கொண்டு வா என்கிறது.அதன் விளைவுதான் பத்தாயிரத்திற்கும்மேலான கம்பனின் பாடல்களில் ஆயிரம் பாடல்களைப் படித்து, அவற்றில் நூறு பாடல்களைத் தேர்வுசெய்து கம்ப ராமாயணக் கதையை அந்த நூறு பாடல்களுக்கிடையேயும் நூலிழைப்போல் வரவழைத்து பேச்சுமொழியில் இரண்டு மணி பத்து நிமிட நேரத்தில் சொல்லிமுடித்தேன்.

இதற்குக் கிடைத்த பாராட்டுக்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்தியாவை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த 2011-ல் முன்னணி நாடாக ஊ.ழலில் திளைக்க வைத்து உலகின்முன் தலைகுனியவைத்த இன்றைய அரசியல்வாதிகளைக் கண்டு உடைந்து நொறுங்கி அன்றைய அரசியல் தலைவர்கள் ஏழு பேரைப்பற்றி ‘தவப்புதல்வர்கள் என்ற தலைப்பில் பதினாறாயிரம் பேர் முன் ஒரு உரை நிகழ்த்தி டிவிடி வடிவமாக்கினேன். தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது போக பள்ளி கல்லூரிகளில் அதனைத் திரையிட்டுக்காட்ட ‘அகரம்முயற்சி செய்துவருகிறது.

S%2BK%2Bf.jpg

கே ; அடுத்து மகாபாரதத்தையும் கம்பராமாயணம் போல் பேச நீங்கள் தயாராகி வருகிறீர்கள் என்பதாக ஒரு பேச்சு இருக்கிறதே....மகாபாரதம் கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட் அல்லவா......?

சிவகுமார் ; ஆமாம் மகாபாரதத்தையும் கம்பராமாயணம் பாணியில் சொல்லவேண்டும் என்ற முயற்சியில் தற்சமயம் என்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன். பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் சீரியலே எழுபது மணிநேரம் ஓடுகிறது. சோ எழுதிய மகாபாரதமோ 1500 பக்கங்கள் கொண்டது. இவற்றையெல்லாம் பார்த்து, படித்து உள்வாங்கி இன்றைய தலைமுறைக்கும் எக்காலத்திற்கும் சொல்லப்பட்ட தத்துவங்களைப் பிரித்தெடுத்து கதையோடு சேர்த்து அதன் மொத்த சாரமும் வருகிறமாதிரி மூன்று மணி நேரத்தில் சொல்லவேண்டும் என்பதற்காக அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்.

கே ; உங்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?

சிவகுமார் ; எனக்கென்று தெளிவான, முடிவான, முழுமையான அடையாளம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எதிலும் நான் பூரணத்துவம் பெற்றுவிடவில்லை.

 

நான் ஓவியன்தான். ஆனால் சரித்திரம் படைத்த ஓவியனல்ல. நான் நடிகன்தான். ஆனால் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவனல்ல. நான் யோகா பயிற்சியாளன்தான். ஆனால் என்னைவிட அதிகம் யோகாசனங்கள் செய்து என்னைவிடவும் ஆரோக்கியமாக இதே எழுபது வயதில் இருப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். நான் புத்தகங்கள் வழி அறிவை அதிகம் வளர்த்துக்கொண்டவனல்ல. வாழ்க்கை அனுபவங்கள் அதிகம் பெற்றவன். ஆனால் சிவாஜியும் எம்ஜிஆரும் பெற்ற அனுபவங்கள் இன்னமும் கடுமையானவை. ஆழமானவை.நான் படித்தவனல்ல, படிக்கிறவன்.படிக்கப் படிக்க என் அறியாமையின் விஸ்தீரணம் கூடிக்கொண்டே போகிறது. அறிய வேண்டிய எல்லை தொடுவானமாகத் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.என்னை நல்ல பேச்சாளனாக நான் கருத முடியாது. உயர்ந்த தமிழ் நடையில் உணர்வுபொங்கப் பேசி மக்களை மயக்கும் பேச்சாளர்கள் இங்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

என்னுடையது பேச்சு மொழி. கம்பனின் கரடுமுரடான கவிதை வரிகளை கைவண்டி இழுப்பவனும் புரிந்துகொள்ளும் எளிய பேச்சு மொழியில் சொல்லியுள்ளேன் என்பதே உண்மை...............ஆகவே, எதிலும் நான் முழுமை அடைந்துவிடவில்லை. இந்த வயதில் இன்னமும்கூட ஆரோக்கியமாக இருந்திருக்கலாம். இன்னும் மிகச்சிறந்த ஓவியங்கள் தீட்டியிருக்கலாம். இன்னும் ஆழமான வேடங்கள் ஏற்று அற்புதப் படைப்புகளைத் திரையில் தந்திருக்கலாம். ஆக நானே என் முதுகைத் தட்டிக்கொள்ளக்கூடிய சாதனை எதையும் நான் செய்துவிடவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கே ; உங்களுடைய பேச்சுக்களில் பெண்களைக் கொஞ்சம் அதிகமாகத் தூக்கிவைத்துப் பேசுகிறீர்கள் என்பதுபோன்ற தொனி இருக்கிறதே......?

சிவகுமார் ; உண்மைதான். நான் பெண்களை அதிகமாகப் போற்றிப் பேசுவதாகச் சொல்கிறார்கள். அது பாராட்டா விமர்சனமா என்று தெரியவில்லை. எதுவாக இருப்பினும் பெண்களை நான் படைத்து, காக்கும்- பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும்தான் பார்க்கிறேன். பஞ்சம் நிரம்பிய காலத்தில் என்னைப் பெற்று, கணவனைப் பறிகொடுத்தபின், பாழும்வெயிலில் காய்ந்து, கூலி வாங்காத வேலைக்காரியாய் பொழுது புலர்ந்ததிலிருந்து மறையும்வரை மண்ணோடு மல்லாடி என்னை உருவாக்கிய தாய் தனக்கென்று எந்த சந்தோஷத்தையும் அனுபவித்ததில்லை.

எனக்கு மனைவியாக வந்தவளும் மாமியார் வழியில் நின்று ஏணிமீது நான் மென்மேலும் ஏறிட துணை நின்றாளே தவிர, தன் தேவை, தன்னுடைய விருப்பம், தன்னுடைய சுகம் என்று நினைத்து அதற்காக அவள் எதுவும் செய்துகொள்ளவில்லை. எதையும் என்னிடம் இதுவரைக் கேட்டதும் இல்லை. சாதாரணத் தோற்றத்துடன் ஒரு சராசரிப் பெண்ணாக இறைவன் என்னைப் படைத்துவிட்டான் என்று சலித்துக்கொண்டாலும் இரண்டு அசாதாரணமான பிள்ளைகளை உருவாக்கியதன் மூலம்இன்று பெருமைக்குரிய தாயாக உயர்ந்துவிட்டாள். இன்று அந்தப் பிள்ளைகளிடம் காணப்படும் அத்தனைச் சிறப்புக்களுக்கும் இந்த அம்மையாரே பெரிதும் காரணம்.

 

scan0025.jpg

 

 

 

 

 

கே ; முத்தாய்ப்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சிவகுமார் ; இந்த வீடு, வாசல், குடும்பம், குழந்தைகள் அவர்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி, உன்னுடைய ஓவியங்களாலும் உன்னுடைய சிறந்த படைப்புக்களாலும் கிடைக்கின்ற பெருமிதம் இதெல்லாம் மாயை அல்ல, இதுதான் உண்மை. பிறவிகளில் மகத்தானது, முழுமையானது, உயர்வானது, மனிதப்பிறவிதான். தேவர்கள், கடவுளர்கள் எல்லாம் நம் முன்னோர் சிருஷ்டித்த கதாபாத்திரங்களே. வானுலகம் சென்று தேவர்களுடன் கைகுலுக்கி கடவுள் பாதத்தில் பூப்போட்டு வணங்கிவிட்டு வந்தேன் என்றெல்லாம் யாரும் இங்கு சொல்லிவிட முடியாது. சென்ற பிறவியில் என்னவாக இருந்தோம், என்னவெல்லாம் செய்தோம் என்பதையோ, அடுத்த பிறவியில் யாராகப் பிறக்கப்போகிறோம் என்ன செய்யப்போகிறோம் என்றோ யாரும் சத்தியமாகச் சொல்லிவிட முடியாதுமகத்தான இந்த மனிதப்பிறவியில் மண்ணுலக வாழ்வில் மக்கள் போற்றும் மனிதனாக, சமுதாயத்திற்குப் பயன்படும் சத்தியவானாக அன்பு கருணை வடிவமாக விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போவோம் என்பதைத்தான் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.

 

http://amudhavan.blogspot.com.au/2012/01/2_07.html

 

 

எனக்கு பிடித்த நல்ல நடிகர். இவரின் குடும்ப வாழ்க்கை பலருக்கு பாடம். நல்ல காலம் லட்சுமியை திருமணம் செய்யவில்லை



"ஒரு நாள் நான் போற்றப்படுவேன் என்றுபதினாறு வயது முதல் ஒரு குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. முடிந்தவரை நல்லவனாக, அனைவரையும் நேசித்து அன்பு காட்டுபவனாக வளர்வேன் என்பதையும் ஆழ்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அது என்னுடைய ஆழ்மனதின் லட்சியம்தான்."
 
எம் பிள்ளைகளுக்கு இந்த தன்னம்பிக்கை & நல்ல எண்ணத்தை ஊட்டனும்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.