Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சட்டப் புலமைக்காக - முன்னாள் நீதியரசர் என்பதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை' -அ.நிக்ஸன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சட்டப் புலமைக்காக - முன்னாள் நீதியரசர் என்பதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை' -அ.நிக்ஸன்-

21 அக்டோபர் 2013

 

 

"கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல்."

 

Wigneswaran-with-Sambanthan_CI.jpg

சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளும் விக்னேஸவரன் அறிய வேண்டிய தகவல்களும்

 

Notes—13 ஆவது திருத்தச் சட்டத்தை  தும்புத் தடியாலும் தமிழர்கள் தொட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று கூறி விட்டு அந்த சட்டத்தின் கீழான மாகாணசபை முறையை தூக்கிப் பிடித்து அதே மக்கள் முன்னிலையில் நீங்கள் கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது  60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல்.

சர்வதேச அரசியலில் என்ன நடக்கின்றது. இலங்கை இனப் பிரச்சினை விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டில் சர்வதேசம் செயற்படுகின்றது என்கின்ற எந்த ஒரு தகவல்களையும் அறியாத அல்லது அறிய விரும்பாத நிலைமைதான் தற்போதைய தமிழர் அரசியலில் காணப்படுகின்றது. வட மாகாணசபையின் பதவியேற்பு விழாவும் அதில் இடம் பெற்ற சம்பவங்களும் சர்வதேச நாடுகளை அதிகளவு நம்புகின்ற போக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் காணப்படுகின்றது என்ற ஒரு சந்தேகத்தையும் அது உறுதிப்படுத்தியுள்ளது. மாகாணசபை என்பது இனப் பிரச்சினைக்கு தீர்வு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தும்புத் தடியாலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று சம்பந்தன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கூறியுமிருந்தார்.

புலிகளுடனான பேச்சின் போது

நோர்வேயின் எற்பாட்டுடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் அதாவது 2002-2006 ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற விவாதங்களில் அல்லது வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக நடத்தப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைகள் மீதான விவாதங்களில் உரையாற்றிய சம்பந்தன் இந்தமாகாண சபை முறையை காரசாரமாக விமர்சித்திருந்தார். 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக்கட்சி இனப்பிரச்சினைக்கு திர்வாக முன்வைத்த யோசனை குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட சம்பந்தன் 'இது தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடி' என்று கூறியிருந்தார்.

1996ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான அரசியல் தீர்வு யோசனையில் இன்னும் அதிகாரங்கள் தேவை என்பதும் வடக்கு கிழக்கு இணைப்பு உறுதிப்படுத்தப் படவேண்டும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் 2009 ஆம் ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதிக்கு பின்னரான அரசியல் சூழலில் சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களில் பலர் முன்வைக்கின்ற கருத்துக்களில் மாறுதல்கள் உண்டு அல்லது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரங்களை பயன்படுத்தி ஏதோ செய்துவிட்டால் போதும் என்கின்ற மனநிலையும் உண்டு. சம்பந்தனை பொறுத்தவரை அவரது கடந்தகால பாராளுமன்ற உரைகள் தமிழர்களின் அரசியல் இருப்புக்களின் வரலாறுகளையும் அதன் நியாயப்பாடுகளையும் தெளிவாக கூறியிருந்தன.

பாராளுமன்ற உரைகள்

சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளை தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் செய்திகளாக எழுதியவன் என்ற அடிப்படையில் சம்பந்தனுடைய உரைகளில் அனேகமானவை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிகழ்த்தும் மாவீரர் தின உரைகளை விட காரசாரமாகவே அமைந்திருந்தன என்று கூறமுடியும். குறிப்பாக ஆங்கிலத்தில் இராஜதந்திர மொழியில் அது காரசாரமாகவே அமைந்திருக்கும். சம்பந்தன் உரை நிகழ்த்தினால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட மூத்த அமைச்சர்கள் அரச உயர் அதிகாரிகள் பலரும் செவிமடுத்துக் கொண்டிருப்பர். அந்தளவுக்கு அவருடைய உரை தமிழர்களின் அரசியல் நியாயப்பாடுகளை கூறியிருந்தது என்பதுடன் அதில் ஒரு நியாயத் தன்மையும் காணப்படுகின்றது என்ற ஒரு உணர்வும் அவர்களின் மனதில் பதிந்தது. சம்பந்தனுடைய நாடாளு மன்ற உரைகளை ஒருபோதும் சிங்கள அரசியல்வாதிகள் இனவாதமான பேச்சு என்று கூறமுடியாது. ஏனெனில் அந்தளவுக்கு ஆங்கில மொழியில் அந்தஉரை அரசியல் விளக்கங்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கூற்றுக்களுடன் அமைந்திருக்கும்.

வரலாறுகளை சுட்டிகாட்டுவார்.

இனவாத பேச்சு என்று கூற முடியாத அளவுக்கு சிங்கள அரசியல் தலைவா்கள்; தமிழர்களின் அரசியல் அபிலாஷை தொடர்பாகவும் அதனை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் குறித்தும் சமஷ்டி ஆட்சியை சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொண்ட சந்தர்ப்பங்கள் தொடர்பாகவும் சம்பந்தன் ஆதாரங்களுடன் தனது உரையில் சுட்டிக்காட்டி இருந்தார். 2000 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையான சம்பந்தனின் பாராளுமன்ற உரைகளை தொகுத்தால் இனப்பிரச்சினைக்கு அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள முழுமையான சமஷ்டி ஆட்சி முறைதான் தீர்வாக அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வரமுடியும்.

இனப் படு கொலைகள், சிங்கள குடியேற்றங்கள், குறிப்பாக சம்பூர் பிரதேசத்தை இந்தியாவுக்கு தாரைவார்த்தமை தொடர்பாகவும் வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்கும் திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையேயுள்ள தமிழர்களின் பிரதேசங்களை ஒன்றிணத்து தனியான சிங்கள மாவட்டம் ஒன்றை உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகள் — குறிப்பாக மணல் ஆறு பிரதேசத்தை வெலி ஒயா என பெயர் மாற்றி வடக்கு கிழக்கு இணைப்பை துண்டிக்க எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி சம்பந்தன் கூறிய கருத்துக்கள் சிங்கள அரசியல் தலைவர்களினால் நிராகரிக்க முடியாதவை.

மாவிரர் தினஉரை

'தமிழ் ஈழம் என்பது பிரபாகரனின் கோரிக்கை அல்ல. அது பிரபாகரனுக்கு முன்னர் தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை' என்று 2006ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சம்பந்தன் கூறிய போது எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவர்களும் எதிர்க்கருத்து கூறவில்லை. பிரபாகரன் ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் நிகழ்த்தும் மாவீரர்தின உரைகளை அடுத்த பாராளுமன்ற அமர்வில் சம்பந்தன் சுட்டிக்காட்டி உரையாற்றுவார். அந்த உரைகளை அப்படியே வாசிப்பார். அது பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டு விடும். பிரபாகரனின் உரைகள் பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் சம்பந்தன் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் பிரபாகரனுடைய உரையில் கூறப்பட்டுள்ள நியாயமான கருத்துக்கள் ஹன்சாட்டில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதும் அதனை எதிர்கால சிங்கள அரசியல் தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் சம்பந்தன் அந்த உரைகளை நிகழ்த்தினார் எனகூறலாம். எப்போதும் அந்த உரைகளை ஹன்சாட்டில் இருந்து  நீக்கிவிடமுடியாது..

இராஜதந்திரிகளிடம் கொடுங்கள்.

பிரபாகரனுடைய உரையை சம்பந்தன் வாசிக்கின்றார் அது ஹன்சாட் பதிவுப் புத்தகத்தில் பதிவாகிவிடும் நிறுத்துங்கள் என அன்று பாராளுமன்றத்தில் இருந்த எந்தவொரு சிங்கள அரசியல்வாதிகளும் இடையூறு செய்யவில்லை. அவ்வாறு இடையூறு செய்தாலும் சம்பந்தன் அதற்கு கொடுக்கும் விளக்கம் அவர்களை வாய்மூடச் செய்துவிடும். அந்தளவுக்கு சம்பந்தனுடைய நியாயப்பாடுகள் அமைந்திருந்தன. அந்த ஒன்பது ஆண்டுகளும் அவர் ஆங்கில மொழியில் ஆற்றிய உரைகளை தொகுத்து சர்வதேச நாடுகளிடம் கொடுத்தால் நிச்சயமாக அடுத்தகட்ட பேச்சுக்கு இடமில்லாமல் இனப்பிரச்சினைக்கு இலகுவான தீர்வுகிட்டும். அல்லது உண்மை வெளிப்படும்.

2006ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் உள்ள சிங்களக் கிராமம் ஒன்றில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் இரணுவ வீரர்களையும் அவர்களின் குடும்பங்களையும் ஏற்றிச் சென்ற பேரூந்து சிக்கியதில் 60பேருக்கும் அதிகமாகவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பாராளுமன்றத்தில் இருந்த தற்போதை அமைச்சர் விமல்வீரவன்ச பாராளுமன்றத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுந்து உயிரிழந்த இராணுவ வீரா்களுக்கும் உறவினர்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தார். சபாநாயகரும் இணக்கம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிட அஞ்சலி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அதற்கு அடுத்தநாள் இடம்பெற்ற அமர்வில் சம்பந்தன் சிறப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றிய பின்னர் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கும் போராளுகளுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு விமல்வீரவன்ச கடும்எதிர்ப்பு வெளியிட்டார். ஆனால் சம்பந்தன் முதல்நாள் இடம் பெற்ற அஞ்சலி தொடர்பாக சுட்டிக்காட்டினார். அதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் அஞ்சலி செலுத்துமாறும் இனிமேல் இவ்வாறான அஞ்சலிகளுக்கு பாராளுமன்றத்தில் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார்.

விமல் விரவன்சவும் எழுந்துநின்றார்.

சம்பந்தனின் வேண்டுகோளுக்கு அமைய வாகரையில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி இடம்பெற்றது. விமல் வீரவன்ச உட்பட அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மௌனமாக எழுந்து நின்றனர். இவ்வாறு சம்பந்தன் ஏட்டிக்கு போட்டியாக அன்று பாராளுமன்றத்தில் செயற்பட்டார். ஆனால் இன்று அவ்வாறான நிலைமை இல்லை. அன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கஜேந்திரக்குமார் செல்வாராஜா கஜேந்திரன் ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர். சம்பந்தனின் அவ்வாறான துணிச்சல் மிக்க செயற்பாடுகளுக்கு அதுவும் ஒருகாரணம். வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுகின்றது என சுட்டிக் காட்டி உரையாற்றிய சம்பந்தன் குடியேற்றங்கள் மூலமாக தமிழர்களின் நிலங்கள் துண்டாடப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுடன் தமிழர்களின் தேசியத்துக்கு அது அச்சறுத்தல் என்ற தொணியிலும் விடயங்களை நிதானமாக வெளிப்படுத்தியிருந்தார்.

இன்று மென்போக்கு அரசியல்

போரின் பின்னர் இன்று மென்போக்கு அரசியல் செய்பாடுகள் வந்தமைக்கு காரணம் என்ன? மாகாண சபையை நம்புவதற்கு காரணம் என்ன? இந்தியா என்பது பொதுவான குற்றச்சாட்டுக்கள் தான். ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் யாழ்ப்பாணத்தில் வைத்து விக்னேஸ்வரனிடம் கூறிய விடயங்கள் என்ன? மாகாணசபையுடன் அமைதியாக போங்கள் என்பதுதானே? பதவிப் பிரமாண நிகழ்வில் முடிவைத்து கையில் வேல் கொடுத்த கூத்துகள் தமிழர்களின் 60 ஆண்டு காலப் போராட்டத்தை கேவலப்படுத்தவில்லையா? இந்த நிகழ்வுக்கும் சம்பந்தனின் கடந்தகால பாராளுமன்ற உரைகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதை நீங்கள் உணரவில்லையா? 13 அவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் தமிழர்கள் தொட்டுப் பார்க்கமாட்டார்கள் என்று கூறி விட்டு அந்த சட்டத்தின் கீழான மாகாணசபை முறையை தூக்கிப் பிடித்து அதேமக்கள் முன்னிலையில் நீங்கள் கோமாளிகள் போன்றும் சந்தர்ப்பாவாதிகள் போன்றும் உருமாறி நிற்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் அவமானமாக உள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சட்டப் புலமைக்காக, முன்னாள் நீதியரசர் என்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. போரின் பின்னரும் இடம் பெறுகின்ற அநீதிகளுக்கு எதிராகவே மக்கள் வாக்களித்தனர். மாகாண சபைகளுக்காகவும் அல்ல. அதனை மறந்து விட்டு இணக்க அரசியலுக்கு செல்வதும் அரசியல் பிரச்சினைகளை சட்டத்தால் கையாள முடியும் என்ற சிந்தனைகளையும் கைவிடுங்கள். இந்த அரசியல் அமைப்புத்தான் தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானது என்ற அடிப்படையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கும், அதன் மூலமான அதிகாரப் பரவலாக்கத்திற்கும் வழி ஏற்படுத்துங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்து பேசித் தீர்மானம் எடுப்பதுதான் முறையானது. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அரசாங்கம் ஏனைய அரசியல் கட்சிகளின் தனித்துவத்தை சிதைப்பது போன்று நீங்களும் செயற்பட்டால் 60 ஆண்டுகாலப் போராட்டத்தின் மகிமை சாதாரண சந்தர்ப்பவாத அரசிலுக்குள் கலந்துவிடும். இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச சூழல் மாறிவிடும். நிலையான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகள் தமிழர்களுக்கு அவசியம் இல்லை. ஒரு தேசிய இயக்கம் என்ற அடிப்படையில் செயற்படுவதுதான் சிறப்பானது. நீங்கள் தேசியம் பேசுவதை விரும்பாது விட்டாலும் பாராளுமன்ற உரைகளின் போது சம்பந்தன் கையாண்ட இராஜதந்திர அணுகு முறைகளை பின்பற்றுங்கள். காலம் சென்றுவிடவில்லை.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97900/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.