Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளிர் தினத்தில் ஒரு தைரிய லட்சுமி...

Featured Replies

gallerye_165001306_928751.jpg

 

"...என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்ல... என்று அந்த இளம் பெண் தனது உருக்குலைந்த முகத்துடனும், உருக்கமான வார்த்தைகளாலும் பேசியதை கேட்ட போது மேடையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.


ஆனால் கண்ணீரைப் பெறவோ, யாருடைய கருணையையும் பெறவோ அவர் வரவுமில்லை பேசவுமில்லை.


காரணம் அவர் ஒரு சாதாரணமான பெண் அல்ல, மனதில் வீரம் மிகக்கொண்ட தைரிய லட்சுமி.

 

gallerye_165008142_928751.jpg


இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண்ணிற்கான விருதை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றவர். இதற்காக அமெரிக்காவில் அதன் வெளிவிவகாரத்துறை சார்பில் வாஷிங்டன் மாகாண சபையில் நடந்த மாபெரும் விழாவில், நாட்டின் பிரமுகர்கள் பலரும் கூடியிருந்த மேடையில், அந்நாட்டின் முதல் பெண்மணி மிக்கேல் ஒபாமா கையால் விருது பெற்றார்.


விருது பெற்ற கையோடு அவர் பேசிய வார்த்தைகள்தான் மேலே சொன்னது. அவர் பேசிய மேலும் சில வார்த்தைகள் பலரை யோசிக்கவைத்தது. அவை என்ன வார்த்தைகள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் அவர் யார் என்பதை பார்த்துவிடலாம்.


டில்லியை சேர்ந்தவர் பள்ளிக்கு துள்ளியபடி சென்று வந்தவர் படிப்பில், விளையாட்டில் இன்ன பிற துறைகளிலும் ஆர்வமும் திறமையும் கொண்டவர் கூடுதலாக அழகும் மிக்கவர்.


ஒரு சின்ன நந்தவனம் போல இருந்தவரை, தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பார்த்து பெருமைப்பட வேண்டிய வயதைக்கொண்ட உறவினர் ஒருவர் வயதையும், தகுதியையும் மீறி லட்சுமியிடம் மோகம் கொள்ள லட்சுமி மிரட்டி, விரட்டி இருக்கிறார்.


அப்படியே போயிருக்க வேண்டிய அந்த ஆண் என்ற நாகம் உடம்பெல்லாம் பொறாமை தீ பற்றி எரிய விஷத்தை கக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.


அந்த நாளும் வந்தது அனைவருக்கும் அது வியாழன் என்றால் லட்சுமிக்கு மட்டும் மறக்கமுடியாத ஒரு கறுப்பு நாள் அது.


கல்விக்கூடம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தவரை விசாரிப்பது போல நெருங்கிவந்த அந்த உறவுக்கார மிருகம் கண்ணிமைக்கும் நேரத்தில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை லட்சுமியின் முகத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டது.


இந்த சம்பவம் நடந்த ஆண்டு 2005 ஆகும், அப்போது லட்சுமிக்கு வயது 16.


முகமும், உடலும் பற்றி எரிய வேதனையால் துடிதுடித்து உருண்டு புரண்ட அந்த பதினாறு வயது சின்னஞ்சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடிய போது அங்கே உயிரைக் காப்பாற்ற முடிந்தது ஆனால் அழகான முகத்தை காப்பாற்ற முடியாமல் போனது.


இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் ஒன்று ஒளிந்து மறைந்தே தனது வாழ்க்கையை நடத்துவார்கள், வெளியில் வர அவமானப்பட்டு இருட்டிலும் தனிமையிலும் ஒடுங்கிக் கிடப்பார்கள், ஒரு நடைப்பிணமாக வாழ்வார்கள் அதுவும் முடியாத போது தற்கொலை செய்து கொள்வார்கள்.


இதுதான் இந்தியாவில் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகும் சராசரி பெண்களின் நிலமை.


ஆனால் லட்சுமி இந்த நிலையை உடைத்தெறிய முடிவெடுத்தார். தனது கோரமான முகத்துடன் எல்லா இடங்களுக்கும் போய்வந்தார். காரணம் ஆசிட் வீச்சின் கொடூரம் எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியட்டும் என்பதற்காக.


கத்தி துப்பாக்கியைவிட கொடூரமான இந்த ஆசிட்டை சாதாரணமாக யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலையை மாற்ற மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தார், அதன் அடிப்படையில் நீதிமன்றம் இது பற்றிய ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.


மேலும் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள் ஏதோ தப்பு செய்தவர்கள் போல ஒளிந்து வாழும் நிலமை மாற வேண்டும் அவர்களுக்கு உரிய இழப்பீடு, அரசு வேலை, சமூக அங்கீகாரம், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் வெற்றியும் பெற்றார். முதல் கட்டமாக தன் மீது ஆசிட் வீசியவரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தந்தார்.


இப்போது 24 வயதாகும் லட்சுமி தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு அரணாக இருந்து வருகிறார், இனியும் இப்படி ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


இதையெல்லாம் பார்த்த பிறகுதான் இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண் என்ற விருதினை இவருக்கு வழங்கி அமெரிக்கா தன்னை கவுரவித்துக் கொண்டுள்ளது.


எனக்கு விருதை விட இது தரும் வெளிச்சம் பிடித்திருக்கிறது காரணம் எனக்கு ஏற்பட்ட வலியும், வேதனையும் வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நான் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இந்த நிகழ்வு உதவும் என்பதால்.


பேசிவிட்டு இறங்கிய லட்சுமியை அனைவரும் ஓடிப்போய் கைகுலுக்கி பாராட்டினார்கள், பெண்கள் கட்டி அனைத்து முத்தமிட்டு பாராட்டினார்கள்.


அப்போது அந்த அவையிலேயே அழகான முகமாய் பிரகாசித்தது நமது தைரிய லட்சுமியின் முகம்தான்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=928751

 

சதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்

 

gallerye_234631195_913154.jpg

 

gallerye_234721652_913154.jpg

நக்சசல்பாரிகள்
உள் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று பிரதமராலேயே சொல்லப்படுபவர்கள்.

இவர்களை சமாளிப்பதுதான் மாநிலத்தின் மிகப்பெரிய சவால் என்று மாநில முதல்வரால் விவரிக்கப்படுபவர்கள்.
இவர்களுக்கு ஜனநாயக வழியிலான தேர்தல் முறையில் விருப்பமில்லை. சட்டத்தின் ஆட்சி என்பது பிடித்தமானதல்ல. தேர்தலை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை முன் நிறுத்துபவர்கள். தேர்தலுக்கு ஆதரவானவர்களை அடிப்பது உதைப்பது கடத்திச் செல்வது கொடூரமாய் கொல்வது என்பதெல்லாம் இவர்களது வழிமுறைகள்.
வாக்குச்சாவடியை கைப்பற்றுவது, ஓட்டளிக்க வருபவர்களை ஆயுதங்களால் தாக்குவது, ஒட்டுப் பெட்டியை உடைத்து சுக்கு நூறாக்குவது என்பது இவர்களுக்கு பழகிப்போன ஒன்று.
அதிலும் சதீஷ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டம் என்பது ஐம்பது சதவீதம் அடர்த்தியான காடுகள் நிறைந்த மாவட்டம். இதன் காரணமாக இங்குதான் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம். இந்த மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு சவலான விஷயம். இந்த சவாலான விஷயத்தை ஒருவர் கையாண்டு வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.
அவர்தான் கான்கேர் மாவட்டத்தின் கலெக்டர் அலர்மேல் மங்கை, கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் ஆனவர்.
கடந்த 2004ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அலர்மேல் மங்கை வடமாநிலங்களில் பல்வேறு பணிகளில் இருந்துவிட்டு தற்போது கான்கேர் மாவட்டத்தின் கலெக்டராகியுள்ளார்.
கலெக்டரானதும் இவர் முன் வந்து நின்ற சவாலான விஷயம் நக்சல்களின் ஆதிக்கத்தை தாண்டி இங்கு வெற்றிகரமாக தேர்தலை நடத்தவேண்டும் என்பதுதான். அதற்காக பல இரவுகளை பகலாக்கி திட்டமிட்டு வேலை செய்தார். இதற்காக மக்களை சந்தித்து ஓட்டளிப்பதன் அவசியத்தை அவர்கள் மொழியிலேயே சொல்லி ஊக்கப்படுத்தினார். இவரது துணிச்சசலும், திட்டமிடலும், சுறுசுறுப்பும் நக்சல்களை ஓரங்கட்டியது.
இதன் விளைவு யாருமே எதிர்பாராத விதமாக நடந்து முடிந்த தேர்தலில் நக்சல்களின் ஆதிக்கத்தை தாண்டி இங்கு 78 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது கடந்த முறையைவிட 13 சதவீதம் அதிகமாகும். ஜனநாயக பாதைக்கு மக்கள் மேற்கொண்ட வெற்றிகரமான பயணமாகும்.
இந்த சாதனையை பாராட்டி கடந்த 25ம்தேதி வாக்களர் தினத்தன்று டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் அலர்மேல் மங்கைக்கு விருதும்,ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கி, ஜனாதிபதி கவுரப்படுத்தி உள்ளார். இந்த பெருமை, பரிசு அனைத்தும் எனது அணிக்கே சேரும் என்று தன் அணியை பாராட்டி அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரண்டு நாள் தமிழ் மாநிலம் தாண்டி போனாலே "ஹோம் சிக் 'என்று சொல்லக்கூடிய மனிதர்கள் நிறைந்திட்ட காலத்தில் கடந்த பத்து வருடங்களாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கேற்ப வடமாநிலங்களில் பணியாற்றும் கலெக்டர் அலர்மேல் மங்கை பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்தான்.
எனது (கான்கேர்) மாவட்ட மக்கள் சுகாதாரம் மற்றும் கல்விப்பணியில் பின்தங்கி உள்ளனர். இவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றது, அத்துடன் இவர்களுக்காக உழைப்பதில் மனம் நிறைவாகவும் இருக்கிறது. இங்குள்ள மக்கள் மிகவும் பாசமானவர்கள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள் எனக்கு இங்கு வேலை பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவமே என்று கூறினார்.
தனது கலெக்டர் பணியை பெரிதும் நேசித்து செயல்படும் அலர்மேல் மங்கையை போனில் பாராட்டிய போது மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு நன்றி கூறினார்.
தனது பணிக்கு பெரிதும் உந்துதலாக இருந்து உற்சாகம் தருபவர் தனது கணவர் அன்பழகனும், சகோதரர் ஆனந்தகுமாரும் என்றார். கணவர் அன்பழகன் இதே மாநிலத்தில் ஜாங்கீர் மாவட்ட கலெக்டராக பணியாற்றுகிறார். குழந்தைகளுக்கு அகிலன் நிலவரசு, அமுதினி என்ற அழகான தமிழ் பெயர்களை சூட்டியுள்ளனர். கலெக்டர் அன்பழகன் சிறந்த தமிழ் ஆர்வலரும் கூட.
கலெக்டர் அலர்மேல் மங்கைக்கு தமிழ் ஆங்கிலம் தாண்டி நீண்ட காலம் வடமாநிலங்களில் இருப்பதால் இந்தி மொழியும், இந்தியை கொஞ்சம் திரித்து பேசக்கூடிய சசதீஷ்கரி என்ற மொழியும் நன்கு தெரியும். நக்சல்களின் ஆதிக்கத்தில் உள்ள பழங்குடி மக்களிடம் பேசுவதற்காக அவர்களின் மொழியான கொவுண்டி மொழியும் கொஞ்சம் தெரியும்.
விருது பரிசு பாராட்டு இவைகளை ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட மக்கள் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள கலெக்டர் அலர்மேல் மங்கையின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதுதான் இருந்தாலும் இப்படி ஒரு சாதனை படைத்திட்டவரை குறைந்தபட்ச நேரம் எடுத்துக் கொண்டு பாராட்டினால் அவர் மேலும் சாதனை படைப்பார் என்பதால் முடிந்தவர்கள் குறைந்த பட்ச அவகாசம் எடுத்துக்கொண்டு பாராட்டலாம் அவரது எண்: 09425532380.
இவரை நமது தினமலர்.காம் இணையதளத்திற்கு அறிமுகம் செய்துவைத்த சென்னை ரயில்வே உயரதிகாரி இளங்கோவனுக்கு சிறப்பான நன்றிகள்.
- எல்.முருகராஜ்

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=913154

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.