Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரில் தாத்தா... கதறும் பிஞ்சுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வு முழுவதும் தன் பிள்ளைகளுக்கு வழி காட்ட வேண்டிய ஒரு தாய் மூன்று பிஞ்சுகளை தவிக்கவிட்டுத் திடீரென தன் உயிரை மாய்த்துகொள்ள, ஆதரவாய் இருந்த பாட்டியும் அடுத்த ஒரு மாதத்தில் மரணத்தைத் தழுவ, ‘இனி தகப்பனை விட்டால் இந்தப் பிள்ளைகளுக்கு வேறு வழியில்லை...’ என்ற நிலையில் அவனும் தூக்கில் தொங்கினால்..?

p15ail5.jpg

&இப்படியரு மரண சாபத்துக்கு ஆளாகியிருக்கும் அந்தக் குடும்பத்தை நினைத்தால், நெஞ்சுக்குழிக்குள் ஒரு பிடி நெருப்பை அள்ளிக்கொட்டியது போலத்தான் இருக்கிறது!

தூத்துக்குடி&தாளமுத்து நகர் அருகேயிருக்கும் எம்.ஜி.ஆர். நகரில் நுழைந்து, பெரியவர் ஜெபமாலை வீட்டுக்கு வழி கேட்டால்... வார்த்தைகளில் சோகம் நிரப்பிதான் வழிகாட்டுகின்றனர். நாம் போனபோது, பேரப்பிள்ளைகளுக்கு சோறு பிசைந்து ஊட்டிக் கொண்டிருந்தார் ஜெபமாலை. ஆனால் குழந்தைகளோ ‘அம்மாவைக் கூப்பிடு...’ என அடம்பிடித்துக் கொண்டிருந்தன. அவர்களை தாஜா செய்து சோறு ஊட்டிய படியே, ‘‘ஒத்த இடி விழுந்தாலே தாங்காதுய்யா என் குடி... பத்து இடி சேர்ந்து விழுந்தா நான் என்ன செய்ய..? சாகப்போற வயசுல, என்னைச் சுத்தியிருந்த மூணு உசுரு களைப் பறிச்சுக்கிட்டு, புதுசா மூணு பிள்ளைகளைக் கொடுத்து ‘வளர்த்துக் காட்டுடா, பார்ப்போம்’னு சொல்லியிருக்கு அந்த சாமி. என்ன செய்யப்போறேன்னு தெரியலையே...’’ என்று தேம்பி வெடித்த அந்த எழுபது வயது பெரியவரைத் தேற்றிப் பேச வைத்தோம்.

‘‘எனக்கு மொத்தம் மூணு பிள்ளைக. அதுல ரெண்டு பொட்டைப் பிள்ளைக. எனக்கு வாட்ச்மேன் வேலை. எப்பிடியோ, பொண்ணுக ரெண்டையும் கட்டிக் குடுத்துட்டேன். ஆம்பளைப் பிள்ளை பொன்பாண்டியனுக்கு எட்டு வருஷத்துக்கு முந்தி எட்டையபுரத்துக்குப் பக்கத்துல ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் முடிச்சு வச்சேன். மகனும், மருமக சாந்தியும் தூத்துக்குடி திருவள்ளுவர் பஸ் டிப்போவுக்குப் பக்கத்துல தனியா குடியிருந்தாங்க. நானும், என் பொஞ்சாதி பெருமாளும் இங்கனயே இருந்தோம். கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே பையனுக்கும், மருமகளுக்கும் அடிக்கடி சண்டை வர ஆரம்பிச்சுது. வரிசையா மூணு பிள்ளைக பொறந்துச்சு. அப்பவும் சண்டை தீரலை. ‘வீடுன்னு இருந்தா சண்டை சச்சரவு சகஜம்தானே’னு சாதாரணமா நெனச்சேன். ஆனா, பாவிமக... குழந்தைங்களைக்கூட நெனைச்சு பார்க்காம ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தூக்குமாட்டி செத்துப்போயிட்டா.

ஆறு வயசுல ஒண்ணு, மூணு வயசுல ஒண்ணு, பத்து மாசத்துல ஒண்ணுனு மூணு பிள்ளைகளை வச்சுக்கிட்டு தவிச்ச என் மகன், அதுகளை தூக்கிக்கிட்டு இங்கயே வந்துட்டான். என் வீட்டுக்காரியும் அஞ்சாறு வருஷமா இடுப்பெலும்பு முறிஞ்சு அதிகம் நடமாட்டமில்லாம கெடந்தா. இருந்தாலும் பேரப்பிள்ளைகளை அவதான் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் பார்த்துக்கிட்டா. நான் என்னால முடிஞ்ச கஞ்சியைக் காய்ச்சிக் குடுப்பேன். இந்த நெலமையில என் பொண்டாட்டியும் போன 13&ம் தேதி போய் சேர்ந்துட்டா. சாவுக்கு வந்த சனமெல்லாம் செத்ததுக்கு அழுததை விட, இந்தக் குழந்தைக முகத்தைப் பார்த்துதான் அழுதுச்சு. அதுக்குப் பொறவு என் மகன் புத்தி பேதலிச்சவன் மாதிரி திரிஞ்சான். யார் கூடவும் பேசாம கொள்ளாம, சாப்பிடாம பிள்ளைக முகத்தைப் பார்த்துக் கரகரன்னு அழுதுகிட்டே இருந்தான். சரி, தேறி வந்துடுவான்னு நெனைச்சேன். ஆனா, அந்தப் படுபாவியும் நெஞ்சுல ஈரமில்லாம அடுத்த அஞ்சாவது நாள்ல தூக்குல தொங்கிட்டான். எந்த காலத்துலயும் யாருக்கும் சூது நெனைக்காத குடும்பம்யா இது. ஆனா, இப்போ வீடே மயானமா கெடக்கு. அடுத்து இருக்குறது என் உசுருதான். ‘நீயும் செத்துடுவியா தாத்தா?’னு மூணு வயசு பேரன் பிரசாத் கேக்கான். நான் என்னய்யா பதில் சொல்ல...?’’ &கண்ணீர் வடிய ஜெபமாலை இப்படிச் சொன்னபோது அவர் மடியில் தலைவைத்துப் படுத்திருந்த பிரசாத், தன் பெயர் கேட்டவுடன் சட்டென நிமிர்ந்து உட்கார்ந்து நம்மைப் பார்த்துச் சிரித்தபோது அடிவயிறு கலங்கியது. பக்கத்திலேயே வெள்ளந்தி சிரிப்போடு அமர்ந்திருந்தாள், ஆறு வயது ரேகா. ‘‘இதுகளுக்காவது ஏதோ லேசா வெவரம் தெரியுது. ஆனா, ஒரு வயசாகுற ஆதிலட்சுமி இன்னும் பால்குடியக்கூட மறக்கலை. அதுக்குள்ள தாயும், தகப்பனும் போய் சேர்ந்துட்டாக. நாலு நாளா வீச்வீச்சுனு அழுதுகிட்டே இருந்ததால மந்திரிக்கிறதுக்காக சொந்தக்காரம்மா ஒருத்தரு குழந்தையை கோவில்பட்டி பக்கம் தூக்கிக்கிட்டுப் போயிருக்கு. இந்தா, இப்ப வந்துடும்’’ என்று சொல்லிக்கொண்டே வந்தவர், வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார்.

‘‘ராத்திரி தூங்கும்போது இந்த மூணு பிள்ளைகளும் அழுவறதைப் பார்க்கப் பொறுக்க முடியலை. ஒண்ணு அம்மாங்கும்... ஒண்ணு அப்பாங்கும். தட்டித் தட்டி அதுகளைத் தூங்க வச்சுட்டு, ‘என்பாடு இப்படி ஆச்சே’னு விடியவிடிய அழுதுகிட்டிருப்பேன். இனிமே இந்தக் கெழவன்தான் இதுகளுக்கு எல்லாம். நானும் செத்துட்டா, இதுக கதை என்னாகுமோ... தெரியலை. என் ரெண்டு பொண்ணுங்களாலயும் எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில, காலு சொகம் இருக்குற வரைக்கும் பிச்சை எடுத்தாவது என் பேரப் பிள்ளைகளுக்கு ஒருவாய் சோறு போட்டுருவேன். ஆனா, நல்லது பொல்லது சொல்லி வளர்க்க ஒரு பொம்பளையாலதான முடியும்..? இந்தா இருக்காப் பாருங்க... ரேகா, இவதான் மூத்தவ. நல்லா இங்கிலீஸ் படிக்கா. ஒண்ணு ரெண்டுனு தமிழ்ல சொன்னா புரியலை. இங்கிலீஸ்ல படபடன்னு சொல்லுதா. இவளை மேற்கொண்டு இங்கிலீஸ் பள்ளிக்கூடத்துல படிக்க வைக்க இந்த கெழவன்கிட்ட ஏதுய்யா காசு..? இந்த பிஞ்சுகளுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப்போடக்கூட என்கிட்ட காசுபணமில்லை... இருக்குற இந்த இடம் மட்டும்தான் எனக்குன்னு இருக்குற ஒரே சொத்து. இதுகளை ஏதாவது ஹாஸ்டல்ல சேர்க்கலாம்னு நெனச்சா மூணும் பச்சைப் புள்ளைகளா இருக்குது. என்ன செய்யிறது? ஆண்டவன் எனக்கொரு நல்லவழி காட்டுவான்னு நம்புறேன். யாராவது நல்லவங்க... ஈர மனசு உள்ளவங்க இந்த மூணு பிள்ளைகளோட வாழ்க்கைக்கு எந்த வகையிலயாவது உதவுனா அவங்களைத் தெய்வமா கும்புடுவேன் ஐயா...’’ &கண்ணீர் வழிய அந்த முதியவர் கையெடுத்துக் கும்பிட்ட போது, மனம் கலங்கியது.

வாழ்க்கைப் போராட்டத்துக்குப் பயந்து அம்மாவும், அப்பாவும் கோழைகளாகி எடுத்த தற்கொலை முடிவால், அவர்களுக்கு ஒரு முறைதான் சாவு. இந்த பிஞ்சுகளுக்கோ இனி வாழ்க்கை முழுக்க மரணப் போராட்டம்தான்! -

பாரதி தம்பி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.