Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்மாந்தர் வாழ்விடமான குடியம் குகைகள் - பயணக் குறிப்புகள்

Featured Replies

kudiyam caves 1

தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இரண்டு இலட்சம் முதல் பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மனிதர்கள் (தமிழர்கள், திராவிடர்கள், இந்தியர்கள், ஆசியர்கள். உலக மாந்தர்கள்..) – மூதாதையர் வாழ்ந்த குடியம் குகைகளுக்கு (Kudiyam Caves) கல்விப் பயணம், அறிவு சுடர் நடுவம் சார்பில் திட்டமிட்டோம். இணையத்தை தட்டினால் போக வர 14 கி.மீ காட்டு ஒற்றையடி மலைபாதை நடைபயணம் என்று காட்டியது பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆஸ்த்துமா நோய், கால் ஊனம்.. நடக்கமுடியுமா..? கேள்விகள் வந்து வந்து எச்சரித்தது. இதையும் மீறி இந்த மலைக்குகைக்கு போக வேண்டுமா என்ற கேள்வியும் எழுவது இயல்புதான்! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா ..சரணம் அப்ப்பப்பா… என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து மண்டலம் விரதம் இருந்து, முடியாவிட்டாலும் மனிதர்கள் தூக்கி சுமக்கும் பல்லக்கில் ஏறியாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அய்யப்பன் என்ற மனிதனை காண ஏன் செல்கிறார்கள்..? இலட்சக்கணக்கில் செலவு செய்து புனித ஹஜ் யாத்திரைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள் வாழ்ந்த முகம்மது நபியின் சமாதியை காண ஏன் செல்ல வேண்டும்? பிணங்கள் மிதக்கும் அசுத்த கங்கை நீரில் நீராட வயதான காலத்தில் காசி யாத்திரைக்கு போவது அவசியமா..? இதெல்லாம் அவசியமெனில், இவைகளை விட ஆயிரம் மடங்குகள்… இலட்சம் மடங்குகள் நியாயம், அவசியம், தேவைகள் இந்த 2 லட்சம் முதல்12 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எம் மூதாதையர் வாழ்விடத்திற்கு இருக்கிறது. அதை காணும் பொழுது எழும் உள்ளக்கிளர்ச்சி நமது வைராக்கியத்தை மேலும் உறுதிப்படுத்தும். ஏனெனில், இந்த குடியம் குகை மாந்தர்கள் இல்லையெனில் இன்று நான் இல்லை…நீங்களும் இல்லை!!

வழக்கம் போல வருவதாக வாக்களித்த நண்பர்கள் கைவிட்டு விட …. ஆர்வமாய் வருகிறோம் என்ற நண்பர்களை நாங்கள் கைவிட… ஆரம்ப சொதப்பல்கள் “இனிதே” இந்த பயணத்திலும் இருந்தது. அன்று பூத்த புத்தம் புதிய சிகப்பு குல்மாஹார் மரத்தின் கிளைகளில் மலர்கள் பரப்பி கிடந்த வீடும், வரவேற்ற தோழர் வெற்றிவீர பாண்டியனின் முகமனும் அந்த சோர்வை இருந்த இடம் தெரியாமல் செய்தது. காலை சிற்றுண்டிக்கு பின்பு பசுமை விரிந்த, குளுமை பரப்பிய வயல்கள், மரங்கள், புல்வெளிகள், புதர்செடிகள் இருபக்கங்களும் சூழ்ந்த சாலைகள் வழியாக பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து சுமார் 10 கி.மீ பயணித்தது சுகமான அனுபவம்..

குடியம் கிராமத்தை காலை 10 மணிக்கு அடைந்தோம். கோடைகாலமான ஜீன், ஜீலை மாதங்கள் வழக்கத்திற்கு மாறாக மழைகாலமாக இப்பொழுது மாறி விட்டிருந்தது. பருவநிலை மாற்றங்கள், புவி வெப்பமடைதல், எல்ஈநோ ..என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. தென்மேற்கு பருவ காற்று தமிழகம் முழுவதும் நிறைய மழையை கொண்டு வந்து சேர்த்து கொண்டிருக்கும் அதிசம் நிகழ்ந்த நேரம் இது. வானம் சாம்பலும், கருமையுமான மேகங்களால் மூடப்பட்டு இருந்தது. இதமான குளிர் தென்றல் அனைவரையும் வருடிச் சென்றது. நீண்ட தொலைவில் பரந்துவிரிந்த பசும்புதர்காடுகளுக்கு அப்பால் குடியம்குகை குன்றுகள் தெரிந்தது. கூழாங்கற்களாலான செம்மண் மாட்டு வண்டி பாதையும் ஒற்றை அடி பாதையுமாக நீண்ட பாம்பு போல் நெளிந்து விரிந்து கொண்டிருந்தது. இயல்பான தயக்கம் எழுந்து மற்றவர்கள் போகட்டும் நாம் வேனில் இருந்து விடுவோமா என்று ஒரு கணம் தோன்றியது. ஆனாலும் பசுமை ஒளிரும் காட்டின் வசீகர கொள்ளையழகு வா..வா.. என்று சுண்டி இழுத்தது. ஆதித்தாயின் கம்பீரமான ஒங்கார குரல்கள் ஒலித்த அந்த மலைகுகைள் கைகளை நீட்டி அழைப்பது போல தோன்றியது.

இரண்டு குழந்தைகள் உட்பட 16 பேர் கொண்ட குழு புறப்பட்டது. எல்லாரும் முன் செல்ல நானும், காலில் அறுவைசிச்சை செய்துள்ள பயணப்பிரியர் நண்பர் ஆனந்தும் சிறிது பின் தங்கினோம். காட்டிற்குள் வாகனங்கள் செல்ல கூடாது என்று இரு இடங்களில் பெரிய பள்ளங்களை வன துறையினர் பாதையின் குறுக்காக வெட்டி வைத்து இருந்தனர். பாதை முழுவதும் வழுப்பான சிறியதும், பெரியதுமான கூழாங்கற்களாலானதாக இருந்தது. மலை பிரதேசங்களுக்குள் செல்லும் ஆறுகளில், அவற்றின் படுகைகளில் இப்படியான கூழாங்கற்கள் இருக்கும். இந்த பகுதி கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கினுள் வருகின்றது. இங்கு நான்கு படிவுப் படுக்கைகள் (Four Fold Terrace System) உள்ளன என்றும்,கூழாங்கற்திரளை அடுக்கின் பகுதி (Boulder Conglomerate Horizon) ஒன்று காணப்படுகிறது என்றும் தெரியவருகின்றது. மேலும், இப்பகுதியில் இரண்டு வகை மண்பரப்புகளைஅடையாளம் கண்டு வெளிப்படுத்தினர். அவை - இப்பகுதியில் சிறப்பாகக் காணப்படும் செம்மண் படிவங்களின் பரப்பு (Latrite Formation), மற்றும் பிளைஸ்டோசின் கால சிதைந்தசெம்மண் படிவப் பரப்பு என்பன ஆகும். மலைகள், பாறைகள் எரிமலை வெடிப்பு குழம்பினால் உருவானவையாகும். இவற்றில் பல வகைகள் உள்ளன. அதில் ஒருவகையான வெடித்து சிதறும் எரிமலை குழம்பில் உருவானது குடியம்குகை மலையும், இந்த பகுதியுமாகும் என்று வெற்றிவீர பாண்டியன் விளக்கினார்.. சிலர் புரியாமல் கருதுவது, எழுதுவது போன்று இது ஆற்றினாலோ, கடலினாலோ உருவான நிலவியல் அமைப்பு கிடையாது.

பூவுலகின் நண்பர்கள் சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரத்தின் குடிநீர் ஆதாரமான ஏரிகள் கல்வி பயணத்தில் குடியம்குகைகள் செல்வதாக திட்டமிடப்பட்டது. செம்ம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு சென்ற பிறகு மாலை 4.30 க்கு மேல் குடியம்குகைகள் செல்வதா, இல்லையா என்று விவாதிக்கப்பட்டு பின்பு நிறுத்தப்பட்டது. அப்படியான பயணம் சாத்தியமே கிடையாது. சென்னையில் இருந்து குடியம்குகைகள் செல்வது ஒரு முழுநாள் பயணமாகும். காலை 9 மணிக்கு குடியம் கிராமத்தில் இருந்து பயணம் செய்தால்தான் முழுமையாக குடியம் குகைகளை அதோடு இணைந்த புதர்காட்டையும் முழுமையாக அனுபவதித்து பார்க்க இயலும். காலை 10 மணிக்கு மேல் புறப்பட்ட எங்கள் குழு 12.30 மணிக்கு பிறகுதான் பெரிய குடியம்குகையை அடைய முடிந்தது. இடையில் அய்ந்து அய்ந்து நிமிடங்கள்தான் இரண்டு இடங்களில் நின்றோம். குகையினுள் ஒன்றரை மணிகள் பார்வையிடல், உரையாடல்கள், உணவுக்கான நேரம் போனது. மாலை 4.30 மணிக்குதான் குடியம் கிராமத்திற்கு குழு வந்து சேர்ந்தது. காட்டின் வளத்தை, வனப்பை நின்று பார்க்க கூட நேரமில்லை. ஓட்டமும் நடையுமாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வர மாலை 5.30 மணியாகி விட்டது. எனவே, குடியம் குகைகளை, அதனுடன் இணைந்த காட்டை காண சென்னையில் இருந்து முழுநாள் பயணம்தான் யதார்த்தம் என்பதை இந்த பயணம் உணர்த்தியது. இனி குடியம் வருபவர்கள் இதற்கான புரிதலுடன் வரவேண்டும் என்பதற்கே இந்த பதிவு

விட்டு விட்டு பெய்த மழைகளால் காடு குளித்து புத்தாடைகள் அணிந்து கொண்டிருந்தது. காட்டின் பல்லுயிர்களும் புத்துயிர்ப்பு பெற்று புது பொலிவுடன் செழுமை பூரித்து கிடந்தன. வழுப்பான கூழாங்கற்களாலான பாதை என்பதால் சில விநாடிகள் கூட நிலம் நோக்கி பார்க்காமல் நிமிர்ந்து நடக்க முடியாது. நிமிர்ந்த நடை சவடால் இங்கு வேலைக்கு ஆகாது. அசந்தால் சறுக்கி மண்ணை கவ்வச் செய்து விடும். வெண்மைக்கும் கருமைக்கு இடையில் இருக்கும் எண்ணற்ற வண்ண கலவைகளால் இக்கூழாங்கற்கள் காட்சி அளித்தன. பலவகை வட்டங்கள், பல்வேறு சதுர – முக்கோண – அறுகோண - பற்பலக் கோண….ங்களால் இந்த கூழாங்கற்கள் இருந்தன. சில கூழாங்கற்களில் விண்மீன்கள், பிறைநிலாகள் என்று பல ஒவியக்காட்சிகளும் வரையப்பட்டு இருந்தன. எரிமலை குழம்பும், மழை வெள்ளங்களும் இணைந்து தீட்டிய அழகோவியங்கள் இவைகள்!

kudiyam caves 2

பெரிய காட்டு கலாக்காய், காட்டு கலாக்காய் பழம், சூரப்பழம் புதர் செடிகள், நெல்லி, நாகப்பழம் மரங்கள், லெமன்கிராஸ் புற்புதர்கள் .. .. என்று பல்வகை புதர்களாலான காடாக குடியம் குகை வழிபாதை இருந்தது. வானுயர்ந்த பெரிய மரங்கள் எதுவும் கிடையாது. வனத்துறையினர் எவனோ முதலாளிக்காக பல இடங்களில் நட்டு வளர்க்க முயலும் மரங்கள் கூட இருபது அடிகளுக்கு மேல் வளராமல் குட்டையாக ஆண்டுகணக்கில் இருக்கின்றன. பாதை எங்கும் இனிமையான குரல்களில் மகிழ்ச்சியுடன் பலவித பறவைகள் இசைத்து குழைத்து பாடுவதை கேட்பதற்கு தனியாக ஒருநாள் பயணப்பட வேண்டும். ஒட்டு மொத்தமாக பல்லுயிர் சூழலில் அமைந்திருந்த இந்த ஆதிமனிதன் குகைகள் இருந்தன. கொற்றலை ஆற்றின் பள்ளத்தாக்கு புதர்காடுகள், பெருமரக்காடுகள், சமவெளிகள், மலைக்காடுகள் என்று பல்வகை நிலவியல்கள் ஒருங்கிணைத்தாக இன்றும் கூட இருக்கின்றது. உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு இயைந்ததான சுற்றுபுறச்சூழல் அமைந்த பகுதி இது என்பதை இயல்பாக உணர முடிந்தது.

வண்டிபாதை முடிந்து காட்டு ஒற்றையடி பாதை தொடங்கியது. வேர்க்கடலை உருண்டை போன்று பாறைகள் இருந்த பகுதி இது. வெற்றிவீரபாண்டியன் எங்களை வழிநடத்தி சென்றார். கொற்றலை ஆற்றில் மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிராக கொற்றலை பாதுகாப்பு இயக்கத்தை ஒருங்கிணைத்து வருகிறார். சாந்தி பாபு என்ற தொல்லியல் ஆய்வாளரின் ஆய்வுக்கு உதவியாளராக இப்பகுதிக்கு வந்துள்ளார். பல தொல்லியல் ஆய்வாளர்களுக்கு இவர் உதவி உள்ளார். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இப்பகுதி மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். ஒன்றரை கோடி செலவில் பூண்டிநீர்த்தேக்கத்திற்கு செல்லும் தார்சாலை இவரது சமூக பணிக்கு சான்றாக உள்ளது.

மிகவும் பின்தங்கி போனதால் வழக்கறிஞர் மனோகரன் அவர்கள் எனது பையை வாங்கி உரையாடிக் கொண்டு கூடவே நடந்தார். கையில் இருந்த காமிரா தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது. ஆதித்தாயின் பெரும்குகை குளுமையான தூறலை வானில் இருந்து பொழிந்து எங்கள் வரவேற்றது. அந்த குளுமையிலும் இலேசாக வியர்த்தது. குகையில் கால்வைத்த அந்த கணம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்று விட்டு மீண்டேன்.

மூன்று திருமண மாஹால்கள் அளவிற்கு பெரிய குகை மையமாகவும் , அதை சுற்றிலும் “ப” வடிவதில் இருந்த மலை குன்றுகளில் 15 குகைகளும் இருக்கின்றன. தொல்மாந்தர்கள் பெரும் மக்கள் சமூகமாக வாழ்த்தற்க்கான அடையாளமாக இந்த குகைகளும், காடும், சமவெளி, ஆற்று படுகையும் இருக்கின்றன. பெரும்குகையின் உயரமானதொரு மூலையில் பல மலைத்தேனிக் கூடுகள் இருந்தன. மலைத்தேனிக் கூடுகள் கலைக்க கூடாது. இரண்டு மூன்று தேனிகள் கொட்டினால் கூட மயக்கமடைய நேரிடும் என்று வெற்றிவீரபாண்டியன் குழுவினரை எச்சரித்தார். அங்காங்கே குழுக்களாக, தனியாக நண்பர்கள் காமிராக்களை கிளிக்கினர். குகையின் மறுபக்கம் சிறு மரங்களாலும், புதர்களாலும் குகைகயின் மேலிருந்து தொங்கிய பசும் கொடிகளாலும் இயற்கை சொர்க்கபுரியை படைத்திருந்தது.(காணொளி1)

வெற்றிவீரபாண்டியன் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், தனது அனுபவங்களையும், இன்றைக்கு இதை கவனிப்பார் அற்ற நிலையையும் விளக்கினார். இங்கு கிடைத்த தொல்மாந்தர் எலும்பு கூட்டை எந்த வரையரையும், கணக்கும் இல்லாமல் வெளிநாட்டு ஆய்வாளர்கள் எடுத்து சென்ற அவலத்தை பகிர்ந்தார். இந்திய தொல்பொருள் துறை இந்த குகைகள் பாதுகாக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. ஒரு அறிவிப்பு பலகை கூட வைக்கப்பட வில்லை. இதன்விளைவாக கிராம மக்கள் சிலர் அம்மன் சிலையை, சூலாயுதத்தை, சில கடவுளர் படங்களை இங்கு வைத்து வழிபட தொடங்கி உள்ளனர். அடுத்ததாக புதிய கட்டுமானங்களை கட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும். சிலை வழிபாடு, உருவ வழிபாடு அப்பொழுது கிடையாது. இரண்டு இலட்சம் ஆண்டுகள் வரலாற்றை மறைப்பதில் அல்லது குழப்புவதில் இவை கொண்டு சென்று சேர்த்து விடும் என்றார்.

தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம் என்ற கட்டுரையில் ச. செல்வராஜ் அவர்களின், “திருவள்ளூர் மாவட்டம், பூண்டியை அடுத்து, குடியம் எனும் பழங் கற்கால மக்கள்வாழ்விடமான, இயற்கையான குகைத்தலத்துடன் கூடிய ஊர்ப்பகுதி அமைந்துள்ளது. இக்குடியம் குகைத்தலம், கூனிபாளையம், பிளேஸ்பாளையம் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்டபகுதியில் அமைந்துள்ளது. இவை, பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. இக்குடியம் குகையின் உட்பகுதியில், ஒருஅகழ்வுக் குழியும், வெளியில் இரண்டு அகழ்வுக் குழிகளும் இடப்பட்டன*.

இவ்வாய்வில், இரண்டு வகையான கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. குழியின் அடிப்பகுதியில், அச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும்; மேல்பகுதியில், இடைக்காலஅச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அச்சூலியன் வகைக் கற்கருவியில் இருந்து, நுண் கற்காலக் கருவிகளின் வளர்ச்சி நிலைகள் வரைதொடர்ச்சியாக இடைவெளியின்றி இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள மண்ணடுக்குகளும், முறையான வளர்ச்சி நிலையையே காட்டுகின்றன.

இங்கு கிடைத்த கைக் கோடாரி, கிழிப்பான்கள் (Cleaver), சுரண்டிகள் (Scrapper), வெட்டுக்கத்திகள் (Blade) போன்ற கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவை. இக் கற்கருவிகளில், அதிக அளவில்சில்லுகள் பெயர்த்த நிலையைக் காண முடிகிறது. இவையே பின்னர், நுண் கற்கருவிகள் தொழிற்கூடத்துக்கு வழிவகுக்கக் காரணமாக அமைந்துள்ளதை இதன்மூலம்அறியமுடிகிறது. குகைகளில் வாழ்வதைவிட வெளியிலேயே அதிகமாக வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை, இங்குக் கிடைத்த கைக் கோடாரிகளின் அளவை வைத்து, இங்கு அகழாய்வுமேற்கொண்ட கே.டி.பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இங்கு கிடைத்துள்ள பழைய கற்காலக் கற்கருவிகள் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டவை. வடிவத்தில் இதயம் போன்றும், வட்ட வடிவிலும், நீள்வட்ட வடிவிலும்,ஈட்டிமுனை போன்ற கற்கருவிகளும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூர்மையான முனைகளும், பக்கவாட்டின் முனைகளும் கருவியை மிகவும்;கூர்மைபடுத்துவதற்காக நுண்ணிய சில்லுகளைப் பெயர்த்துள்ளதும் நன்கு தெளிவாக அறியமுடிகிறது. இவை அனைத்தும் சென்னை கைக் கோடாரி மரபைச் சார்ந்தவை என்பதுதொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். அடுத்து, இங்கு சேகரிக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய ஓர் கற்கருவி மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தொழில்நுட்பஅறிவு காண்போரை வியக்கச் செய்கிறது. இக்கற்கருவி ஆமை வடிவத்தில் அமைந்துள்ளது. இதனை து.துளசிராமன் அவர்கள் தனது கள ஆய்வின்போது கண்டறிந்தார். இக்கருவியைஆமை வடிவ (Micoqurin) கைக் கோடாரி என்றே குறித்தனர். இவை மட்டுமின்றி, கற்கருவிகள் செய்யப் பயன்படுத்திய கல் சுத்திகள் பலவும் இவ்வாய்வில் சேகரிக்கப்பட்டன. இக் கல்சுத்திகள், பல வடிவங்களில் கிடைத்துள்ளன. இவை அனைத்தும், தமிழகத்தில் பரிக்குளம் அகழாய்வில்தான் முதன்முதலாக கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன…” என்ற கருத்துகளை தோழரும் வழிமொழிந்து விரிவாக விளக்கினார்.( காணொளி 2 )

பழங்கற்காலத்தின் பல்வேறு கால கட்டங்களும், புதிய கற்காலத்தின் பல்வேறு கால கட்டங்களும், நுண் கற்காலம், அதை தொடர்ந்து வர்க்க சமூகங்களாக உருவான காலம், அதன் பல்வேறு வளர்ச்சி கட்டங்கள் என்று வரலாற்று தொடர்ச்சிகளுக்கான தொல்லியல் தரவுகள், ஆதாரங்கள் கொற்றலை நதி படுகையில் மட்டுமல்ல கூவம் நதி, பாலாற்று படுகைகள் என்று திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுவதும் எண்ணற்ற இடங்களில் விரவிக் கிடக்கின்றன. இது பற்றி தமிழ்நாடு தொல்லியல் துறை தனியாக ஒரு நூலையும் வெளியிட்டுள்ளது. இந்த இடங்கள் அனைத்தும் கவனிப்பார் இல்லாமல் இன்று பெரும் அழிவுகளை சமூக விரோத சக்திகளால் சந்தித்து வருகின்றன. இதில் முக்கியமானதாக குடியம் குகைகள் இருக்கும்.

ஆதிதாய் தலைமையிலான வர்க்கமற்ற புராதான கம்யுனிச சமூகம் நிலவிய இந்த கற்கால மாந்த சமூகத்தை பற்றி தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர் செல்வியும், நானும் குழுவினருடன் பகிர்ந்து கொண்டோம்.(காணொளி3) தொடர்ந்து கோழிக்கறி குழம்புடன் தக்காளி சாதம், தயிர்சாதம், வடை, உருளைக்கிழங்கு பொறியல் என்று எங்கள் அனைவருக்கும் வெற்றிவீரபாண்டியன் குடும்பத்தினர் ஒரு விருந்து படைத்தனர் என்றால் மிகையல்ல. பெரிய பாத்திரங்களில் இவ்வளவு தூரம் சுமந்து வந்த தோழர் மணிமாறன் துணைவியார் பஞ்சவர்ணம், வெற்றிவீரபாண்டியனுக்கு குழுவினர் நன்றி கூறினர். வெற்றிவீரபாண்டியன் குழந்தைகள் அக்கா-தம்பி விளையாடிய நேரம் போக மற்ற நேரங்களில் நடந்த பஞ்சாயத்துகளையும் மகிழ்ச்சியுடன் குழு நண்பர்கள் தலைமைதாங்கி தீர்த்து வைத்துக் கொண்டிருந்தனர். மழை தொடர்ந்து பெய்தாலும் இந்த பகுதி முழுவதும் எங்கும் தண்ணீர் தேக்கி இருக்கும் குட்டைகளுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அவரவர் சுமந்து வந்த குடிநீரை அனைவரும் அருந்தினர். நீண்ட நடைபயணத்திற்கு குடிநீர் அதிகம் தேவை இருப்பது புரிந்தது. மீதமிருந்த உணவை (சென்னைவாசிகளை நம்பி இவ்வளவு உணவு சமைக்கலாமா நண்பரே..) பல்லுயிர்களுக்கும் பகிர்ந்து அளித்தோம். மதியம் 2 மணிக்கு மேல் தாய்வழி சமூகத்தை போற்றுவோம் என்று முழங்கி விட்டு கிளம்பினோம்!

அனைவரும் வேக வேகமாக நடக்க நாம் காட்டின் ஒவ்வொரு அசைவைகளையும் நிதானமாக இரசித்தவாறு நடந்தோம். குழுவினர் காட்டு கலாக்க பழங்களை பறித்து தின்று கொண்டே சென்றனர். ஒரு புதர்செடியில் நிறைய பழங்கள் இருந்தன. குழுவினர் சிலர் அதை பறிக்க பாய்ந்தனர். வெற்றிவீரபாண்டியன் அதை தடுத்து, இதைச் சாப்பிடக்கூடாது. காட்டு கலாக்க பழத்தின் போல் காட்சி அளிக்கும் வேறு நச்சு பழங்கள் இவை… இதே போல போலிகள் கலந்துதான் காடும் இருக்கும், பறவைகள் உண்ணும் பழங்களைதான் மனிதர்கள் சாப்பிட வேண்டும் என்றார் வெற்றி வீரபாண்டியன்.

காமிராக்குள் காட்டை அடைக்கும் நமது முயற்சியில் மிகவும் பின் தங்கி விட்டோம். கால்வலியும் இதற்கு கூடுதல் காரணமாக இருந்தது. குழுவினர் காட்டின் ஒற்றை அடிப்பாதையில் எங்களுக்காக காத்து கிடந்தனர். இப்படி போனால் இருட்டி விடும் என்று தோழர் வெற்றி காமிரா பையை பறித்து கொண்டு நடந்தார். திரும்பவே மனம் இல்லாமல் மழையில் புத்தொளி வீசும் அந்த புதர் காட்டிற்கு டா..டா..காட்டி விட்டு திரும்பினேன். இறுதியாக முன்னோர்கள் வாழ்ந்த மண்ணை முத்தமிட்டு விட்டு விடை பெற்றோம்.( கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதையுடன் இதை இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். )

பூண்டி நீர்தேக்கத்தையும், அங்கு அமைத்துள்ள கற்கால தொல்லியல் அருங்காட்சியகத்தையும் ஒரு எட்டு பார்த்து விட்டு வெற்றிவீரபாண்டியன் வீட்டிற்கு சென்றோம். சூடான தேநீர் அனைவருக்கும் கிடைத்தது. பல ஆண்டுகள் கொற்றலை ஆற்று படுகையில், குடியம் குகைகள் காட்டில் வெறும் பனம்பழங்களை தின்று பசியாறி தானும் தனது தம்பியும் அலைந்து திரிந்து கண்டெடுத்த கற்கால கல் கருவிகள், ஆயுதங்களான கைக்கோடாரிகள், கிழிப்பான்கள்(Cleaver), சுரண்டிகள்(Scrapper), வெட்டுக்கத்தி(Blade)களில் ஒவ்வொன்றை குழுவினர் ஒவ்வொருவருக்கும் பரிசளித்தார்.

இலட்டசம் ஆண்டுகளுக்கு முன் ஆதிதாய்மார்கள் தங்களின் உழைப்பினால், அறிவுதிறத்தால் வடிவமைத்த வேல்வடிவ கல் ஆயுதங்களை தனதுமகன்களுக்கு அளித்தாள். அவைதான் பின்நாட்களில் முருக கடவுள்களுக்கான வேலாயுதங்களாக பரிமாற்றங்கள் அடைந்தன. அத்தகையதொரு கல் ஆயுதங்களை தோழர்வெற்றிவீர பாண்டியன் அறிவு சுடர் நடுவ கல்வி பயணத்தில் பங்கெற்றவர்களுக்கு பரிசளித்தார். கல் என்ற வேர்சொல்ல்லில் இருந்து கல்வி என்ற சொல் உருபெற்றதை விளக்கி, கல்வி பயணத்தை நிறைவு செய்தார்.(காணொளி4) இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித உழைப்பின் முதல் தொழில்நுட்ப அறிவின் அற்புத படைப்பு இந்த கல் கருவிகள்! அதை கைகளில் ஏந்திய பொழுது இலட்சம் ஆண்டு வரலாற்றை சுமக்கும் பெருமிதத்தினால் கண்கள் பனித்தன!!

1. https://www.youtube.com/watch?v=rZMiw2l1qAc

2. https://www.youtube.com/watch?v=E9a93Hyh7yk

3. https://www.youtube.com/watch?v=nCn1eVUJDFw

4. https://www.youtube.com/watch?v=5VSVwM0vBtE

- கி.நடராசன்

 

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/31131-2016-07-02-08-42-16

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.