Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர் சசிகலா மட்டும் அல்ல... ஜெயலலிதாவின் நிழல் !

Featured Replies

இவர் சசிகலா மட்டும் அல்ல... ஜெயலலிதாவின் நிழல் !

jaya%20sasi.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்து விட்டது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளில் துவங்கி... தமிழக ஆளுநர், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றவர்கள், மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் நலம் குறித்து கேட்டு திரும்பினர். 'பார்த்தவர்களை பார்த்தோம். அவர்கள் சொன்னதை சொல்கிறோம்' என்பதை மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க சென்றவர்கள் சொல்ல முடிந்தது.

உண்மையில் மருத்துவர்களை தவிர்த்து ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்தித்திருப்பார்கள் என்றால், ஒருவர் பெயரைத்தவிர வேறு யார் பெயரையும் அறுதியிட்டு கூற முடியாது. அந்த ஒருவர் தான் சசிகலா.

ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் மருத்துவமனைக்குள் கூட அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக ஆளும் தமிழகத்தின் ஆளுநர் கூட அவரை சந்திக்க முடியவில்லை. மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் என யாரும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அறை பகுதிக்கு கூட சென்று விட முடியவில்லை. ஆனால் ரத்த உறவாக இல்லாமல், ஆட்சி, அரசியலில் எந்த நேரடித் தொடர்பும் இல்லாமல்... ஜெயலலிதாவை உடன் இருந்து கவனித்துக்கொள்பவர் சசிகலா தான். யார் இவர்? இவருக்கு ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு? அதைத்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

jaya%20sasi%201.jpg

ஜெ - சசிகலா அறிமுகமானது இப்படித்தான் !

ஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகமானது 1984-ம் ஆண்டு. அப்போது ஜெயலலிதா அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர். ஒவ்வொரு ஊராக பொதுக்கூட்டத்துக்கு செல்லும் ஜெயலலிதா, தனது நிகழ்வுகளை வீடியோக்களாக பதிவு செய்ய விரும்புகிறார். அப்போது வீடியோ கவரேஜ் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார் சசிகலா. கடலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த தனது கணவர் ம.நடராஜன் மூலம் கலெக்டர் சந்திரலேகாவின் தொடர்பை பிடித்து, சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகிறார் சசிகலா.

ஜெயலலிதாவுக்கு திரைப்பட வீடியோ கேசட்களை சசிகலா தரத்துவங்க... இருவருக்கு நட்பு உருவானது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி அதிகரித்திருந்தது. அந்த நேரத்திலும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்த போதும் ஜெயலலிதாவுடன் இருந்து நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டார் சசிகலா.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதா அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா தான். ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டப்பேரவையிலேயே தாக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் ஜெயலலிதா. இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்த சசிகலா, அதன்பின்னர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்கே வந்து தங்க ஆரம்பித்தார்.

sasi%20with%20j%201.jpg

உச்சம் தொட்ட மன்னார்குடி குடும்பம்

j%20sasi.jpg1991-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. அப்போது சசிகலாவுடன் அவரது உறவினர்கள் சிலரும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகினர். போயஸ் கார்டனில் சசிகலாவின் உறவினர்கள் தலைகாட்டத்துவங்கியது 1991-க்கு பின்னால் தான்.

இதன் ஒரு பகுதியாகத்தான் சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தத்தெடுத்தார் ஜெயலலிதா. சசிகலாவின் இன்னொரு சகோதரரான ஜெயராமன், ஹைதராபாத் தோட்டத்தில் தங்கி நிர்வாகப்பணிகளை கவனிக்க அனுமதிக்கப்பட்டார். ஹைதரபாத் தோட்டத்தில் நடந்த மின் விபத்தொன்றில் ஜெயராமன் இறந்துவிட... ஜெயராமனின் மனைவி இளவரசிக்கு ஆறுதல் சொல்லி... கைக்குழந்தையுடன் போயஸ் கார்டனுக்கு அழைத்து வந்தார். (அந்த கைக்குழந்தைதான் இப்போது போயஸ் கார்டனில் அதிகாரம் செலுத்தி வரும் விவேக் ஜெயராமன்)

இதோடு நிற்கவில்லை. சசிகலாவின் அண்ணன் மகன் டிடிவி தினகரனுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இப்போது ஓ.பன்னீர் செல்வத்தின் வசமுள்ள கட்சி பொருளாளர் பதவியையும் டிடிவி தினகரனுக்கு கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. எல்லாவற்றுக்கும் மேல் சசிகலா ஜெயலலிதாவின் நிழலாக பார்க்கப்பட்டார். எல்லாம் சசிகலாவின் கண்ணசைவிலேயே நடப்பதாக சொல்லப்பட்டது. சசிகலா மட்டுமில்லாமல், சசிகலாவால், சசிகலாவுக்கு நெருங்கியவர்களும் உச்சம் போனார்கள்.

sudhakaran%20marriage.jpg

நெருக்கடியான நேரத்திலும் ஜெ. உடன்...

ஜெயலலிதாவோடு இணைந்து சசிகலா ஆடம்பர வாழ்க்கையை மட்டுமில்லாமல் நெருக்கடி காலத்தையும் கழித்தார்.  1996-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சோதனையான ஆண்டு. வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடத்திய ஆடம்பர திருமணம், சொத்துக்குவிப்பு புகார் உள்ளிட்ட சில புகார்களும் ஜெயலலிதாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதானார். இந்த நேரத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலாவும் கைதானார். அதோடு ஜெயலலிதா மீது திமுக சேர்த்த அனைத்து வழக்குகளில் சசிகலாவும் சேர்க்கப்பட்டார்.

சசிகலாவின் தொடர்புதான் ஜெயலலிதாவின் சரிவுக்கு காரணம் என பரவலாக பேசப்பட்டது. வளர்ப்பு மகன் தத்தெடுத்தது துவங்கி, சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தியது வரை எல்லாம் சசிகலாவால்தான் என சொல்லப்பட... அதுவே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவித்தார் ஜெயலலிதா.

ஆனால் சில நாட்களில் நிலைமை தலை கீழானாது. எனது உடன்பிறவா சகோதாரி சசிகலா என அறிவித்தார் ஜெயலலிதா. அதோடு 'சசிகலா எப்போதும் என்னோடுதான் இருப்பார். அவரைப்பற்றிய எந்த கேள்வியும் அவசியமற்றது' என வெளிப்படையாகவே அறிவித்தார் ஜெயலலிதா.

sasi%20jaya.jpg

'சின்னம்மா'வான சசிகலா

இதன் பின்னர்தான் சசிகலா கட்சியில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினார். ஆட்சியிலும், கட்சியிலும் அவரது பிடி இறுகத்துவங்கியது அப்போதுதான். ஜெயலலிதாவை அம்மா என அழைத்த அதிமுகவினர், சசிகலாவை சின்னம்மா என அழைக்கத்துவங்கியது இதற்கு பின்னால் தான்.

2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா முதல்வராக முடியாத சூழலில், முதல்வர் இடத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தது சசிகலா தான் என சொல்வார்கள். அதோடு யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி என்பதை தீர்மானிப்பவராகவும் சசிகலா மாறினார் என சொல்லப்படுவதுண்டு. அம்மா என ஜெயலலிதாவுக்கு கிடைத்த அனைத்து மரியாதைகளும், 'சின்னம்மா' சசிகலாவுக்கும் கிடைக்கத்துவங்கியது 2001க்கு பின்னர் தான்.

ஒருபுறம் ஜெயலலிதாவின் நிழலாக இயங்கிய போதும், மறுபுறம் சசிகலாவின் உறவினர்கள் ஜெயலலிதாவினால் பல நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர். சசிகலாவின் கணவர் ம.நடராசனை ஒதுக்கி வைத்த ஜெயலலிதா, அவர் மீது பல்வேறு வழக்குகளை போட்டு கைது செய்தார். அப்போது எந்த சலனமும் இல்லாமல் ஜெயலலிதாவோடு இருந்தார் சசிகலா. கட்சியின் பொருளாளர், எம்.பி. என பதவி வழங்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் கட்சியில் இருந்தும், நிர்வாகத்தில் இருந்தும் முழுமையாக ஒதுக்கப்பட்டார். வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்ட சுதாகரன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது. சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டனர். கணவர் உட்பட உறவினர்கள் எல்லாம் விலக்கி வைக்கப்பட்ட நேரத்தில்கூட ஜெயலலிதாவை விட்டு விலகாமல் இருந்தார் சசிகலா.

sasi%20+ilavarasi.jpg

மீண்டும் மன்னார்குடி குடும்பம்

2011 மீண்டும் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர... சசிகலா குடும்பத்தினரின் ஆட்டம் மீண்டும் வேகமெடுத்தது. நிர்வாகத்தில் முன்னர் இருந்தவர்களுக்கு பதில் வேறு நபர்கள் இருந்தார்கள். எல்லோரும் மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.
பல மட்டங்களில் இவர்களது அட்டகாசம் தொடர... அதிர்ந்து போன ஜெயலலிதா, மீண்டும் சசிகலாவை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ராவணன், கலியபெருமாள், மிடாஸ் மோகன் என பலர் மீது வழக்குகள்  பாய்ந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவுடனும், அவரது குடும்பத்தினரிடமும் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என பகிரங்கமாகவே எச்சரித்தார் ஜெயலலிதா.

இத்தனை நடந்த போதும் சசிகலா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. தான் சார்ந்த யாரையும் எதிர் வினையாற்ற அனுமதிக்கவில்லை. இதுநாள் வரை செய்தியாளர்களை சந்தித்ததில்லை. எந்த கூட்டத்திலும் சசிகலா பேசியதில்லை. அரசியல் தலைவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதாக தெரியவில்லை. யூகங்களை கடந்து, சசிகலா பெயரை பழக்கத்தின் அடிப்படையில் யாரும் உச்சரித்து விடவில்லை.

j%20with%20sasi.jpg

சிறை வரை தொடர்ந்த நட்பு

இந்த பிரிவும் சில நாட்களே நீடித்தது. மீண்டும் போயஸ் கார்டன் வந்தார். ஜெயலலிதாவை கவனித்துக்கொள்ள சசிகலாவால் தான் முடியும். அவர் இல்லாமல் ஜெயலலிதாவால் தனித்து இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு சசிகலா ஜெயலலிதாவுடன் ஐக்கியமானார்.

மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல, அவருடன் சசிகலாவும் சென்றார். அரசியல் எதிர்காலம் என்னவென தெரியாதபோது, போயஸ் கார்டனில் அதிகாரத்தில் இருந்தபோது, தோல்வியை தழுவி நெருக்கடியான காலகட்டங்களில், சிறையில், கணவரை கைது செய்து சிறையில் அடைத்தபோது, குடும்ப உறவுகளை எல்லாம் விலக்கி வைத்தபோது ஜெயலலிதாவுடனே இருந்தார் சசிகலா.

கடைசியாக பரப்பன அக்ரஹார சிறையிலும் ஜெயலலிதா உடன் இருந்து அவரை கவனித்துக்கொண்ட சசிகலா தான், இப்போது அப்போலோ மருத்துவமனையிலும் இருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் துவங்கிய நட்பு, சசிகலாவுடன் 32 ஆண்டுகளை கடந்து தொடர்கிறது. ஜெயலலிதாவுக்கு இது மிக நெருக்கடியான கால கட்டம். இப்போது அவருடன் சசிகலா இருப்பது என்பது இந்த 32 ஆண்டுகால நட்பின் அடிப்படையில் தான்.

உண்மையில் அவர் சசிகலா அல்ல. ஜெயலலிதாவின் நிழல்.

http://www.vikatan.com/news/coverstory/69353-sasikala-is-jayalalithaas-shadow-.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.