Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையில் தொடரும் இழுபறிநிலை

Featured Replies

  • தொடங்கியவர்

வட மாகாண சபை மக்களின் தேவைகளை நிறைவேற்றுமா?

 

வட மாகாண சபை மக்களின் தேவைகளை நிறைவேற்றுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே பிளவை ஏற்படுத்தும் ஒரு விடயமாகி விட்டது வடக்கு மாகாணத்தில் அமைச்சர்கள் நியமனம்.

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமன விடயத்தில் தற்போது வரை  தொடர்ந்தும் முரண்பாடுகள் நிலவி வருகின்றன. வட மாகாணத்தில்  அமைச்சர்களாயிருந்த பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன்  மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குழுவொன்றை நியமித்தார். அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் முதலமைச்சர் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைந்ததையடுத்து வட மாகாண சபையில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு அமைச்சர்களில் இருவர் மீது நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஏனையோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் முதலமைச்சருக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் பிரேரணை கொண்டு வந்தார்கள்.

கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு கட்சிகளில்  இலங்கை தமிழரசுக் கட்சி  முதலமைச்சருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தாலும் ஏனைய கட்சிகளான டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன முதலமைச்சருக்கு  ஆதரவாகவே செயற்பட்டிருந்தன.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன்  சமரச முயற்சியில் ஈடுபட்டதுடன், ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட காரணங்களால் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீள பெறப்பட்டது.

இதனையடுத்து அமைச்சர்களான பொ.ஐங்கரநேசனும், த.குருகுலராஜாவும் பதவி விலகியிருந்தனர். இவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்களாக கலாநிதி சர்வேஸ்வரனும், அனந்தி சசிதரனும் முதலமைச்சரால் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கான அமைச்சுப் பதவி விடயத்திலும் தமிழரசுக் கட்சி  என்னவோ கடும் எதிர்ப்பையே வெளிட்டிருந்தது.

ஏனைய அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் , பா.டெனிஸ்வரன் ஆகியோர் மீதான விசாரணைகளில்  முதலமைச்சர் ஈடுபட்டிருந்ததுடன், கொழும்பில்  முதலமைச்சருக்கும் கூட்டமைப்பின் தலைவருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில்  இரு அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில்  கூட்டமைப்பில்  அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

தீர்மானத்திற்கமைய வடக்கில் முதலமைச்சரை கூட்டமைப்பின் தலைவர் தலைமையில்  நான்கு கட்சிகளின்  தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

எனினும், இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் விசாரணைக்குள்ளான அமைச்சர்களின் நிலைப்பாடு தொடர்பில் வடக்கு முதலமைச்சருக்கே இறுதி  தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளது என இணக்கம் காணப்பட்டது.

இதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஒன்று கூடிய இலங்கை தமிழரசுக் கட்சி  மாகாண சபையின் அமைச்சரவையில் தமிழரசுக் கட்சியினர் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதில்லை எனவும்,  சுகாதார அமைச்சராகவிருந்த சத்தியலிங்கம் பதவியை இராஜினாமா செய்வது எனவும் தீர்மானித்தது.

இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சராகவிருந்த பா.டெனீஸ்வரனையும்  பதவி நீக்க வேண்டும் என அவரது கட்சியான டெலோ முதலமைச்சரிடம் கோரியிருந்தது.

ஆனால் அமைச்சுப் பதவியில் இருந்து தான் பதவி விலக போவதில்லை எனவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால் வழிநடத்தப்பட்ட இந்த நாட்டுக்காகவும்,  மக்களுக்காகவும் உயிர்களை , உறுப்புகளை இழந்த முன்னாள் போராளிகளே அதனை தீர்மானிக்க வேண்டும் எனவும் டெனீஸ்வரன் அறிவித்திருந்தார்.

எனினும், அவரை கட்சியிலிருந்து இடை நிறுத்துவதற்கு டெலோ முடிவு செய்திருந்ததுடன், புதிய அமைச்சராக தனது கட்சியின் உறுப்பினரான விந்தன் கணகரட்னத்தை நியமிக்குமாறும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

தற்போது, புதிய அமைச்சர்களாக டெலோவின் சார்பில்  வைத்திய கலாநிதி குணசீலனையும், புளொட் அமைப்பின் சார்பில் க.சிவநேசனையும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்  அமைச்சர்களாக நியமித்துள்ளார்.

இதற்கமைய புதிய அமைச்சர்கள் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்கள்.

விந்தன் கணகரட்னத்திற்கு அமைச்சுப் பதவியை வழங்குமாறு டெலோ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமையால் முதலமைச்சருக்கும் டெலோ அமைப்பிற்குமிடையில்  ஒரு முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா வடக்கு முதலமைச்சருக்கு இது தொடர்பில்  கண்டன கடிதமொன்றையும் நேற்றுமுன்தினம் அனுப்பி வைத்துள்ளார்.

தமது கட்சியின் பரிந்துரைக்கு மாறாக இன்னொரு உறுப்பினர் நியமிக்கப்பட்டால் அதனை தாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனவே,  தங்களது முடிவை பரீசீலனை செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, குற்றம் சாட்டப்பட்ட மற்றுமொரு அமைச்சராகவிருந்த   ப.சத்தியலிங்கம் வடக்கு முதலமைச்சரை சிலர் தவறாக வழி நடத்துவதாகவும், இதனால் வடமாகாண சபையில் ஏற்பட்ட அமைச்சர்கள் தொடர்பான குழப்பத்திற்கு முதலமைச்சரே பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சரியான தகைமை அடிப்படையிலேயே இந்த அமைச்சு நியமனங்கள் வழங்கப்பட்டதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்திருக்கின்றார்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளை சேர்ந்த நால்வர் அமைச்சுப் பதவிகளை பெற்றிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், மகளிர் விவகார அமைச்சரான அனந்தி சசிதரனின் நியமனம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சி தனது அதிருப்தியை பகிரங்கமாகவே வெளியிட்டிருந்தது.

இவ்வாறு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தகைமை அடிப்படையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டாலும், எதிர்வரும் காலங்களில்  வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் முழு ஆதரவும் கிடைக்க வேண்டும் என்பது இன்றியமையாததாகி விட்டது.

இந்த நிலையில், அடுத்த வருடம் முடிவடையவுள்ள வடமாகாண சபை தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள்  வடக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியே..

https://news.ibctamil.com/ta/internal-affairs/north-province-news-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.