Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் இலங்கை T20 தொடர் செய்திகள்

Featured Replies

பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணியின் தலைவர் உபுல் தரங்க உட்பட பல மூத்த வீரர்களும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவிருக்கும் மூன்றாவது T20 போட்டிக்கு பாகிஸ்தான் செல்வதற்கு தயக்கம் காட்டிய நிலையில், சகலதுறை வீரர் திசர பெரேரா இலங்கை அணி தலைவராக செயற்படவுள்ளார்.

பெரேரா உலக பதினொருவர் அணியுடன் T20 தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக கடந்த மாதம் பாகிஸ்தான் பயணித்திருந்தார். இந்த தொடர் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகளை ஆரம்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுடனான முதல் இரு போட்டிகளும் அபுதாபியில் ஒக்டோபர் மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதோடு கடைசிப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி லாஹூருக்கு பயணிக்கவுள்ளது.

இந்த தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் முதல் இரு போட்டிகளுக்கும் மற்றைய போட்டிக்கும் வெவ்வேறு இலங்கை குழாமை அறிவிக்கும்படி அணியின் மூத்த வீரர்கள் கோரியபோதும் ஒட்டுமொத்த தொடரருக்கும் ஒரே குழாமை தேர்வு செய்ய இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்தது.

இதன்படி தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருக்கும் இலங்கை ஒருநாள் குழாமின் ஒன்பது வீரர்கள் T20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். திசர பெரேரா, இளம் விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம, வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு கமகே, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களான ஜெப்ரி வன்டர்செய், சீகுகே பிரசன்ன தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாடவுள்ளனர். மேலும் இலங்கை A அணியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தசுன் சானக்க உட்பட ஏனைய வீரர்கள் அடுத்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லவுள்ளனர்.

 

தில்ஷான் முனவீர, அஷான் பிரியஞ்சன், இசுரு உதான மற்றும் சதுரங்க டி சில்வா ஆகிய T20 போட்டிகளின் சிறப்பு வீரர்களுடன், நடத்தை விதி மீறல் காரணமாக இடைக்கால தடைக்கு முகங்கொடுத்த இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க இப்போட்டித் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பவுள்ளார்.

இலங்கை அணிக்காக கடைசியாக 2009ஆம் ஆண்டில் விளையாடிய 31 வயதுடைய துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்தவும் இலங்கை குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். புதுமுக வீரரான விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் மினோத் பானுக்க முதல் முறை தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

லாஹூரில் 2009ஆம் ஆண்டு இலங்கை அணியினர் பயணித்த பஸ் வண்டி மீது இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது தடைப்பட்டதோடு, பாகிஸ்தான் அணி தனது சர்வதேச போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே விளையாடி வருகிறது.

 

இலங்கை T20 குழாம்: திசர பெரேரா (தலைவர்), தில்ஷான் முனவீர, தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, மினோத் பானுக, அஷான் பிரியஞ்சன், மஹேல உடவத்த, தசுன் ஷானக்க, சச்சித் பதிரன, சீகுகே பிரசன்ன, ஜெப்ரி வன்டர்செய், சதுரங்க டி சில்வா, விகும் சன்ஜய, லஹிரு கமகே, விஷ்வ பெர்னாண்டோ, இசுரு உதான

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்
 

இலங்கை அணி பாகிஸ்தானை T-20 தொடரில் எப்படி சமாளிக்கும்?  

PAK-v-SL-T20I-Preview.jpg

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு எந்தவகையிலும் எதிர்பார்த்தவிதமாக அமையவில்லை. அடுத்தடுத்த வைட் வொஷ் தோல்விகள், பெறுமதிமிக்க வீரர்களின் உபாதைகள், ஏழு தடவைகளுக்கு மேலாக அணித் தலைவர் மாற்றங்கள் போன்ற விடயங்கள் அனைத்தும் இலங்கை கிரிக்கெட் ஒரு ஸ்தீர நிலையில் இல்லாது இருப்பதனையே காட்டுகின்றது.

 

 

எனினும் இந்த வருடத்தில் ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் என்பவற்றோடு ஒப்பிடும் போது T-20 போட்டிகளில் இலங்கை அணியின் அடைவுகள் நல்ல நிலையிலேயே காணப்படுகின்றன.

இவ்வாறாக காணப்படும் இலங்கை அணிக்கு  பாகிஸ்தானுடன் வியாழக்கிழமை (26) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடர் மற்றுமொரு சவாலாக காணப்படுகின்றது.

இலங்கைபாகிஸ்தான் T-20 போட்டிகள் வரலாறு

ஆசியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்களான இந்த இரண்டு நாடுகளும் குறைந்த ஓவர்கள் கொண்ட இவ்வகைப் போட்டிகளில் முதற்தடவையாக 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T-20 உலகக் கிண்ணத்தில் மோதியிருந்தன.

குறித்த அப்போட்டியில் 33 ஓட்டங்களால் இலங்கை அணியினை பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தது. அதேவருடத்தில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் இடம்பெற்ற போட்டியில் மஹேல ஜயவர்தன தலைமையிலான இலங்கை தரப்பு பாகிஸ்தானை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அவ்வணிக்கு எதிரான தமது முதல் வெற்றியினை சுவைத்திருந்தது.

இதுவரையில் இரண்டு அணிகளும் மொத்தமாக 15 T-20 போட்டிகளில் மோதியுள்ளதோடு அதில் 10 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதோடு இலங்கை அணி 5 போட்டிகளை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானும், இலங்கையும் 2016ஆம் ஆண்டின் ஆசிய கிண்ண சம்பியன்ஷிப் தொடரில் இறுதியாக T-20 போட்டியொன்றில் சந்தித்தித்திருந்தன. குழுநிலைப் போட்டியாக அமைந்த அந்த ஆட்டத்தில் இலங்கை அணியினை பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களால் வீழத்தியிருந்தது.

 

 

அணிகளது அண்மைய ஆட்டங்களின் நிலவரங்கள்

கடந்த 2014ஆம் ஆண்டின் T-20 உலக சம்பியன்களான இலங்கை அணியினர் கடந்த வருடத்தில் (2016) தாம் விளையாடிய போட்டிகளில் 18.75%  வெற்றியை மாத்திரமே காட்டியிருந்தனர். இது அவ்வாண்டில் கிரிக்கெட் அணியொன்றினால்  காட்டப்பட்ட மிகவும் மோசமான பதிவாக அமைந்திருந்தது. இதனால் T-20 தரவரிசையிலும் முதலிடத்தில் நீண்ட காலமாக நீடித்த இலங்கை அணி அதனை பறிகொடுத்து தற்போது 8ஆம் இடத்தில் காணப்படுகின்றது.

எனினும் இலங்கை அணியினை பொறுத்தவரையில் இந்த வருடம் T-20 போட்டிகளில் அவ்வளவு மோசமாக அமைந்திருக்கவில்லை. இந்த வருடம் மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கை அவற்றில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது. அதோடு தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற திறமைமிக்க அணிகளுடனான T-20 தொடர்களையும் இலங்கை கைப்பற்றியிருக்கின்றது.

இவை இலங்கை அணி இந்த வருடத்தில் T-20 போட்டிகளில் முன்னேற்றத்தினை காண்பித்து வருவதையே காட்டுகின்றது. எனவே இத்தொடரிலும் இலங்கை பாகிஸ்தானுக்கு சவால் தருவதை எதிர்பார்க்க முடியும்.

இதேவேளை, T-20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் பாகிஸ்தானும் எதனையும் எதிர்பார்த்து கூறமுடியாத ஒரு அணியாக காணப்படுகின்றது. ஏனெனில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில்  இலங்கையினால் வைட் வொஷ் செய்யப்பட்ட அவர்கள், ஒரு நாள் தொடரில் இலங்கை அணியினை வைட் வொஷ் செய்து அதற்காக பதிலடி தந்திருந்தனர்.

மேலும், இவ்வருடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, உலக பதினொருவர் அணி ஆகிவற்றுக்கு எதிராக தாம் பங்குபற்றிய இரண்டு தொடர்களிலும் சிறப்பாக செயற்பட்ட பாகிஸ்தான் அணி அவற்றைக் கைப்பற்றியிருந்தது.

 

 

2016ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 22 போட்டிகளில் ஆடியிருக்கும் பாகிஸ்தான் அவற்றில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது. இன்னும் தமது இரண்டாம் தாயகமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் எப்போதும் பலமாகவே காணப்படும்.

இந்த விடயங்கள் அனைத்தும் இலங்கை  அணிக்கு  பாகிஸ்தான் மிகவும் கடினமாக அமையும் என்பதையே உணர்த்துகின்றது.

இலங்கை அணி

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரின் இறுதிப் போட்டி பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டினை மீளக்கொண்டுவரும் நோக்கோடு லாஹூர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அந்நாட்டில் பாதுகாப்புக் காரணங்களை கருதி இலங்கை அணி வீரர்கள் சிலர் தொடரின் மூன்றாவது போட்டியில் விளையாட மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

எனினும், மூன்று போட்டிகளிலும் விளையாட சம்மதம் தெரிவிப்பவர்களையே இந்த T-20 தொடருக்காக அறிவிப்போம் எனக் கூறியிருந்த இலங்கை கிரிக்கெட் வாரியம், தற்போது திசர பெரேரா தலைமையிலான இளம் வீரர்கள் உள்ளடங்கிய குழாமொன்றினை அறிவித்துள்ளது.

பெரும்பாலான அறிமுக வீரர்களுடன் காணப்படும் இந்த இலங்கை குழாத்தில் நடத்தைவிதி மீறல் காரணமாக போட்டித் தடையினைப்பெற்ற தனுஷ்க குணத்திலக்க இந்த T-20 தொடர் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் மறுபிரவேசத்தினை மேற்கொள்ளவுள்ளார். நிரோஷன் திக்வெல்ல இத்தொடரில் இலங்கை அணிக்காக இடம்பெறாததன் காரணமாக தனுஷ்க குணதிலக்க இலங்கை அணியின் ஆரம்ப வீரராக களமிறங்க எதிர்பார்க்க முடியும்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை இத்தொடரில் வலுப்படுத்த மற்றொரு வீரராக ஆரம்ப வீரர் தில்ஷான் முனவீரவினை எதிர்பார்க்க முடியும். அதிரடி வீரர்களில் ஒருவரான முனவீர இறுதியாக இந்தியாவுடன் நடைபெற்ற T-20 போட்டியில் அரைச்சதம் ஒன்றினை விளாசி  (53) இலங்கை அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.

Munaveera-300x200.jpgஇன்னும் தசுன் சானக்க, அணித் தலைவர் திசர பெரேரா ஆகியோர் அணியின் மத்தியவரிசையினை பலப்படுத்தக்கூடியவர்கள். உலக பதினொருவர் அணி சார்பாக  கடந்த மாதம் பாகிஸ்தானில் விளையாடியிருந்த திசர பெரேரா மொத்தமாக 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தோடு பாகிஸ்தானுக்கு எதிரான அந்த மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் 96 ஓட்டங்களினையும் குவித்திருந்தார்.

Tp-200x300.jpgஇன்னும் அணியில் காணப்படும் இசுரு உதான, சீக்குகே பிரசன்ன போன்ற வீரர்கள் விரைவாக ஓட்டங்கள் சேர்க்கக் கூடியவர்கள் என்பதோடு இலங்கை அணியின் பந்துவீச்சிலும் பெறுமதி சேர்க்கக் கூடியவர்கள்.

லஹிரு கமகே, விக்கும் சஞ்சய, ஜெப்ரி வன்டர்சேய், விஷ்வ பெர்னாந்து ஆகிய வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சினை இத்தொடரில் முன்னெடுக்கவுள்ளனர். இவர்களில் T-20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினைப் பெறாத லஹிரு கமகே பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரில் சிறப்பான பந்துவீச்சினை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இளம் வீரர்களுடன் காணப்படும் இலங்கை அணி பாகிஸ்தானை என்ன செய்யும் என்பதை நாம் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

தில்ஷான் முனவீர, தனுஷ்க குணத்திலக்க, சதீர சமரவிக்ரம, திசர பெரேரா (அணித் தலைவர்), தசுன் சானக்க, சீக்குகே பிரசன்ன, இசுரு உதான, ஜெப்ரி வன்டர்சேய், லஹிரு கமகே, விஷ்வ பெர்னாந்து

பாகிஸ்தான் அணி

சர்பராஸ் அஹ்மட் தலைமையிலான பாகிஸ்தான் அணி தமது வழமையான T-20 வீரர்களுடன் இலங்கையினை எதிர்கொள்கின்றது. அனுபவமிக்க அஹ்மத் ஷேசாத் பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்டத்தினை பலப்படுத்தக்கூடிய ஒருவர். இதுவரையில் 1,300 இற்கு மேலான ஓட்டங்களினை T-20 போட்டிகளில் கடந்திருக்கும் ஷேசாத் மொத்தமாக ஒரு சதத்துடன் 7 அரைச் சதங்களினையும் பெற்றிருக்கின்றார்.

Ahmad-Shehzad-300x200.jpgபாகிஸ்தான் அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விசேட நிபுணராக செயற்படும் பாபர் அசாமும் இலங்கை அணிக்கு நெருக்கடி தரக்கூடிய மற்றொரு வீரராக அமைகின்றார். இந்த வருடத்தில் T-20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (316) குவித்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் காணப்படும் அசாம், உலக பதினொருவர் அணிக்கெதிராக நடைபெற்ற சுதந்திர கிண்ண T-20 தொடரில் அதிக ஓட்டங்கள் (179) சேர்த்தமைக்காக தொடர் நாயகன் விருதினையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Babar-300x200.jpgஇன்னும் அணித் தலைவர் சர்பராஸ் அஹ்மட், சொஹைப் மலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரின் துடுப்பாட்டத்துடன் பாகிஸ்தான் தமது மத்தியவரிசையினை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியும்.

 

 

பாகிஸ்தானின் பந்துவீச்சினை எடுத்துப்பார்க்கும் போது காயத்தில் இருந்து மீண்டிருக்கும் மொஹமட் அமீர் கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் T-20 போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றுள்ளார். அதோடு இலங்கை அணியினை ஒரு நாள் தொடரில் வைட்-வொஷ் செய்ய முக்கிய காரணமாக அமைந்த ஹசன் அலியினையும் பாகிஸ்தான் கொண்டிருக்கின்றது. இந்த வீரர்களினால் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சுத்துறை இத்தொடரில் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Hasan-1-300x200.jpgஇன்னும் சுழல் வீரர்களாக ஒரு நாள் தொடரில் இலங்கைக்கு நெருக்கடி தந்த  சதாப் கான், இமாத் வஸீம் போன்ற வீரர்களும் பாகிஸ்தானுக்கு  பந்துவீச்சுத் துறையில் மேலும் வலுச்சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, இந்த பலமிக்க பாகிஸ்தான் குழாம் இலங்கை அணிக்கு ஒரு நாள் தொடர் போன்று மிகவும் சவால் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

பக்கார் ஷமான், அஹ்மட் ஷேசாத், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், சர்பராஸ் அஹ்மட், இமாத் வஸீம், சர்பராஸ் அஹ்மட்(அணித் தலைவர்), சதாப் கான், மொஹமட் அமீர், ஹசன் அலி

இலங்கை கிரிக்கெட்டில் இருண்ட காலமாக மாறியிருக்கும் 2017ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடனான இத்தொடர் மூலம் இலங்கை ஒளியினை தேடுமா? இல்லை தொடர்ந்தும் இதே நிலைமையே நீடிக்குமா என்பதை நாம் அறிய இந்த தொடர் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 

மலிக், ஹசன் அலியின் சிறப்பாட்டத்தினால் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டியில் இலங்கை அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கும் பாகிஸ்தான், மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது. 

 

அபுதாபி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான T-20 போட்டிகளுக்காக விஷேடமாக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை அணியில் இந்தப் போட்டிக்காக நீண்ட காலத்தின் பின்னர் துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்த அழைக்கப்பட்டிருந்ததோடு, இளம் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரமவும்  தனது கன்னி T-20 போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்தார்.

இவர்களோடு, போட்டித் தடையினைப் பெற்றிருந்த தனுஷ்க குணத்திலக்கவும் அணிக்கு திரும்பியிருந்தார். இன்னும், இப்போட்டி மூலம் திசர பெரேரா இலங்கை T-20 அணியின் 9ஆவது தலைவராக பொறுப்பேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தமது துடுப்பாட்டத்தினை ஆரம்ப வீரர்களான தனுஷ்க குணத்திலக்க மற்றும் தில்ஷான் முனவீர ஆகியோருடன் தொடங்கிய இலங்கை அணிக்கு போட்டியின் மூன்றாவது பந்திலேயே இமாத் வஸீம் அதிர்ச்சியளித்தார். இதனால் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக போல்ட் செய்யப்பட்ட தில்ஷான் முனவீர ஓட்டமேதுமின்றி மைதானத்திலிருந்து நடந்தார்.

மோசமான ஆரம்பத்தினை இலங்கை பெற்றிருப்பினும் அதனை கருத்திற்கொள்ளாது அதிரடியாக ஆடிய தனுஷ்க குணத்திலக்க அணியின் ஓட்டங்களை விரைவாக அதிகரித்திருத்தார். எனினும்  பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கானினால் அவரது இன்னிங்ஸ் 18 ஓட்டங்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

 

இலங்கை அணியின் மத்தியவரிசை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் மிகவும் நெருக்கடிக்குள்ளாகியது. மஹேல உடவத்த, சஜித் பத்திரன, தசுன் சானக்க ஆகிய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 68 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்கு சென்றது. இந்நிலையில் களமிறங்கிய அணித் தலைவர் திசர பெரேராவும் இலங்கை அணிக்கு கைகொடுக்கவில்லை.

எனினும், இறுதியில் போராட்டத்தினை காட்டிய சீக்குகே பிரசன்னவினால் சரிவில் இருந்து சற்று மீண்டு கொண்ட இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 102 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சீக்குகே பிரசன்ன 2 சிக்ஸர்கள் அடங்கலாக 23 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காது நின்றிருந்ததோடு சதீர சமரவிக்ரமவும் அதே ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு மொஹமட் ஹபீஸ் மற்றும் உஸ்மான் கான் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து, இலகு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 103 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி, ஆரம்பத்தில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஒரு தடுமாற்றத்தினை காண்பித்திருப்பினும் சொஹைப் மலிக்கின் சிறப்பாட்டத்தினால் வெற்றி இலக்கினை 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

 

பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தில் அவ்வணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்திய அனுபவ வீரர் சொஹைப் மலிக் மொத்தமாக 31 பந்துகளில் 4 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்ததோடு, முன்னாள் தலைவர் மொஹமட் ஹபீசும் 25 ஓட்டங்களுடன் அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான விக்கும் சஞ்சய 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறப்பான பந்துவீச்சிற்காக உஸ்மான் கானுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T-20 போட்டி இதே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெறும்.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 102/10  (18.3) சீக்குகே பிரசன்ன 23*(23), சதீர சமரவிக்ரம 23(23), ஹசன் அலி 26/3(3.3), மொஹமட் ஹபீஸ் 10/2(2), உஸ்மான் கான் 20/2(4)

பாகிஸ்தான் –  103/3 (17.2) சொஹைப் மலிக் 42(31)*, மொஹமட் ஹபீஸ் 25(23)*, விக்கும் சஞ்சய 20/2(4)

போட்டி முடிவு – பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

இலங்கை 61/1 10 ஓவர்களில்

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான 2-வது டி20: 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
இலங்கைக்கு எதிரான 2-வது டி20: 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
 
அபுதாபி:

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை, ஒருநாள் தொடரை 0-5 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகாவும், தில்ஷான் முனவீராவும் களமிறங்கினர். முனவீரா 19 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சதீரா சமரவிக்ரமாவும், குணதிலகாவும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். சமரவிக்ரமா 32 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். மற்ற வீரர்கள் பாகிஸ்தான் அணியினரின் பந்துவிச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

201710280358176944_1_pak-vs-sri1._L_styvpf.jpg

இதனால் இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்கள் சேர்த்தது. ஒரு முனையில் நிலைத்துநின்று விளையாடிய சமரவிக்ரமா 51 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் பஹிம் அஷ்ரப் 3 விக்கெட்களும், ஹசன் அலி 2 விக்கெட்களும், ஷதப் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 19-வது ஓவரை வீசிய பஹிம் அஷ்ரப் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவர் இசுரு உடனா, மகிலா உதவாடே, தசுன் ஷனகா ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார்.

அடுத்து 20 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பகர் சமானும், அகமது ஷெசாத்தும் களமிறங்கினர். பகர் சமான் 11 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கியவர்களும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

அகமது ஷெசாத் 27 ரன்களிலும், சோயப் மாலிக் 9 ரன்களிலும், முகமது ஹபீஸ் 14 ரன்களிலும், இமாத் வாசிம் 2 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். சற்று நிலைத்து நின்று விளையாடிய சர்பராஸ் அகமது 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் அணி, 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

இறுதியில் பாகிஸ்தான் அணி ஒரு பந்து மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷதப் கான் 16 ரன்களுடனும், ஹசன் அலி 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணியின் திசாரா பெரேரா 3 விக்கெட்களும், விகும் சன்ஜெயா, சச்சித் பதிரானா, இசிரு உடானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என பாகிஸ்தான் கைப்பற்றியது. பாகிஸ்தானின் ஷதப் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையேயான 3-வது டி20 போட்டி பாகிஸ்தானின் லாகூர் நகரில் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/28035817/1125467/Pakistan-beat-Srilanka-by-2-wickets-in-2nd-t20.vpf

  • தொடங்கியவர்
 

பாகிஸ்தானால் T-20 தொடரிலும் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை

 

இன்று (29) நடைபெற்று முடிந்திருக்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T-20 போட்டியில் 36 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியிருக்கும பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட  தொடரையும் 3-0 என வைட் வொஷ் வெற்றியுடன் கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானின் லாஹூர் நகரின் கடாபி மைதானனத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு லாஹூரில் வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி அந்நாட்டிற்கு சென்று விளையாடும் முதலாவது கிரிக்கெட் போட்டி இதுவாக அமைந்திருந்தது.

இன்றைய போட்டிக்காக இலங்கை அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அஷான் பிரியஞ்சனுக்குப் பதிலாக சகலதுறை வீரரான சத்துரங்க டி சில்வா இலங்கை அணிக்காக T-20 போட்டிகளில் அறிமுகமாயிருந்தார்.

மறுமுனையில் பாகிஸ்தான் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. காயமுற்ற உஸ்மான் கான் மற்றும் அஹ்மட் ஷேசாத் ஆகிய வீரர்களுக்கு பதிலாக உமர் அமீன் மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து தமது சொந்த மண்ணில் துடுப்பாட்டத்தை பாகிஸ்தான் அணி உமர் அமீன் மற்றும் பக்கார் ஸமான் ஆகியோருடன் ஆரம்பித்திருந்தது. இரண்டு வீரர்களும் சிறப்பான ஆரம்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தனர்.

 

 

பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை தில்ஷான் முனவீர கைப்பற்றியிருந்தார். 27 பந்துகளில் 31 ஓட்டங்களைக் குவித்திருந்த பக்கார் ஸமான் பாகிஸ்தானின் முதல் விக்கெட்டாக மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

தொடர்ந்து பாகிஸ்தானின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உமர் அமீன் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் உதவியிருந்தார். எனினும், இசுரு உதானவின் பந்துவீச்சினால் அவரது சிறப்பான இன்னிங்ஸ் நிறைவடைந்தது. ஆட்டமிழக்கும் போது அமீன் 37 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இதனையடுத்து சொஹைப் மலிக் காட்டிய அதிரடியோடு பாகிஸ்தான் 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் அதிரடியாக ஆடிய சொஹைப் மலிக் 24 பந்துகளில் தனது ஆறாவது T-20 அரைச்சதத்தோடு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 51 ஓட்டங்களைப் பெற்றார். அத்தோடு பாபர் அசாமும் 34 ஓட்டங்களைக் குவித்து பாகிஸ்தானுக்கு வலுச்சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் விக்கும் சஞ்சய, இசுரு உதான மற்றும் தில்ஷான் முனவீர ஆகிய வீரர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து சவலான வெற்றி இலக்கான 181 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியிருந்தது.

எனினும், இந்த நிலையில் மத்தியவரிசை வீரராக களம் நுழைந்திருந்த தசுன் சானக்க சிறிது நேரம் போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் ஏனைய வீரர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவற 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணியானது 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 144 ஓட்டங்களை மாத்திரம் குவித்து போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தினை பூர்த்தி செய்த தசுன் சானக்க 36 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

 

 

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் அமீர் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி T-20 போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சை பதிவு செய்திருந்தார். அத்தோடு பாஹிம் அஷ்ரப் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை சுருட்டி தனது அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் தொடர் போன்று T-20 தொடரிலும் பாகிஸ்தானினால் வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கும் இலங்கை அணிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இது 16 ஆவது தொடர் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 180/3 (20)சொஹைப் மலிக் 51(24), பாபர் அசாம் 34(31), தில்ஷான் முனவீர 26/1(4)

இலங்கை – 144/9 (20)தசுன் சானக்க 54(36), சத்துரங்க டி சில்வா 21(20), மொஹமட் அமீர் 13/4(4), பாஹிம் அஷ்ரப் 19/2(4)

போட்டி முடிவு பாகிஸ்தான் 36 ஓட்டங்களால் வெற்றி

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் : அபுதாபியில் ஆரம்பித்து லாகூரில் முடிந்தது : இருபதுக்கு -20 இலும் இலங்கைக்கு வெள்ளையடிப்பு

 

 

இலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் 36ஓ ட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி இலங்கையை வெள்ளையடிப்புச் செய்தது.

269381.jpg

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20  கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் லாகூர் கடாபி விளையாட்டரங்களில் நேற்று இடம்பெற்றது.

269376.jpg

கடந்த 8 வருடங்களின் பின்னர் நேற்று பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது.

23113413_10208403912090100_1599580845_n.

இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்  ஆர்வத்துடனும் பெரும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்து காத்திருந்தமை அரங்கில் இருந்த ரசிகர்களின் முகத்தில் தெரிந்தது.

22901650_10208403912130101_1426818053_n.

இரு அணிகளுக்கு மிடையிலான 2போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியிருந்த நிலையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 5-0 என கைப்பற்றியிருந்தது.

22901438_10208403911770092_1541224884_n.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெற்றன.

22894997_10208403911730091_1737207771_n.

முதலிரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதிதியுமான போட்டி பல இழுபறிகளுக்குமத்தியில் பாகிஸ்தானின் லாகூரில் நேற்று இடம்பெற்றது.

22894834_10208403911610088_1059784610_n.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மாலிக் ஆட்டமிழக்காது  24 பந்துகளில் 51 ஓட்டங்களையும் உமர் அமின் 37 பந்துகளில் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சஞ்சய, முனவீர மற்றும் உதான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு தடுமாறி ஆரம்பம் முதலே சீரான இடை வெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய சானக 36 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அமிர்  4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், 3 ஆவது இருபதுக்கு -20 போட்டியில் 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 -0 என வெள்ளையடிப்புச் செய்து தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்.

இப் போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் பாகிஸ்தான் அணியின் சொயிப் மாலிக் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் 8 ஆண்டுகளின் பின் இடம்பெறும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/26429

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.