Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிர்க்கப்பட வேண்டிய அப்பாவிகளின் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்கப்பட வேண்டிய அப்பாவிகளின் மரணம்

[06 - April - 2007]

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் விமானப்படை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்புச் சதிக்கு அருகில் மக்கள் குடியிருப்புப் பகுதியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதை இது உறுதிப்படுத்துவதாக இருக்கும் அதேவேளையில், இவ்விதம் பொதுமக்கள் பலிக்கடாவாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவையையும் இச்சம்பவம் தெளிவாக உணர்த்தியிருக்கின்றது.

யுத்தம் ஒன்று இடம்பெறும்போது இடையே அகப்பட்டு அப்பாவிப் பொதுமக்கள் பலியாவது வழமையான ஒரு சம்பவம்தான். இது ஒரு தற்செயலான சம்பவமாகக் குறிப்பிடப்பட்டாலும் கூட, இதனைக் கூட தவிர்க்க வேண்டும் என்பதைத் தான் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்கப்படுவதென்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். நேற்று முன்தினம் இடம்பெற்ற புதுக்குடியிருப்புத் தாக்குதலைப் பொறுத்தவரையில், இங்குள்ள கடற்புலிகளின் பாரிய தளம் ஒன்று அழிக்கப்பட்டதாகப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும், புதுக்குடியிருப்புப் பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியொன்றிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் வீடுகளிலிருந்து விமானத் தாக்குதலுக்கு அஞ்சியோடிய பொதுமக்களே உடல் சிதறிப் பலியானதுடன் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

`அடையாளங் காணப்பட்ட இலக்குகள்' எனக்கூறி விமானப் படையினர் நடத்திவரும் குண்டு வீச்சுத் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது இலங்கையைப் பொறுத்தவரையில் வழமையான ஒரு நிகழ்வுதான். யுத்த நிறுத்தம் நடைமுறையிலிருப்பதாகக் கூறப்படும் காலப் பகுதியில் கூட இவ்வாறான கொடூரமான மரணங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனை! இலங்கையில் இடம்பெறும் யுத்தம் ஒரு உள்நாட்டு யுத்தமாக வரையறுக்கப்பட்டிருப்பினும் கூட, இரு நாடுகளுக்கிடையேயான யுத்தத்துக்கான தன்மையிலேயே அது வளர்ச்சியடைந்து செல்கின்றது. உள்நாட்டு யுத்தங்களின்போது விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் இந்தளவுக்குத் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டதில்லை. விமானக் குண்டு வீச்சுகளும் ஆட்லறி பீரங்கித் தாக்குதல்களும் இந்தளவுக்குத் தீவிரமாகப் பயன்படுத்தப்படுவது இரு நாடுகளுக்கிடையிலான யுத்தங்களில் மட்டும்தான்!

இரு நாடுகளுக்கிடையேயான யுத்தங்களின் போது கூட, யுத்தத்தில் சம்பந்தப்படாத அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐ.நா. சபை உட்பட மனித உரிமை அமைப்புகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. அதற்கான பிரகடனங்கள் பலவற்றையும் அவை வெளியிட்டுள்ளன. இந்தப் பிரகடனங்கள் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகவுள்ள அதேவேளையில், இலங்கை அரசும் இவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களாகவும் இவைதான் தோற்றம் பெற்றுள்ளன. இந்தச் சட்டங்கள், பிரகடனங்கள் மற்றும் மனிதாபிமானக் கோட்பாடுகளையிட்டு எவ்வகையிலும் கவனத்தைச் செலுத்தாமலேயே வடக்கு, கிழக்குப் பகுதிகளில் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புவதாகவே அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் அமைந்துள்ளன. புதுக்குடியிருப்பிலுள்ள பாடசாலை ஒன்றின் மீது சில மாதங்களின் முன்னர் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலிலிருந்து கிழக்கு மாகாணத்தில் அகதி முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஆட்லறித் தாக்குதல்கள் வரையில் அனைத்திலும் அப்பாவிப் பொதுமக்களும் மாணவர்களும்தான் பெருமளவுக்குப் பலியானார்கள் என்பது உண்மை!

இந்தநிலை இனியும் தொடரக்கூடாது என்பதையும் அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்பதையும் நேற்று முன்தினம் இடம்பெற்ற விமானக் குண்டுவீச்சு மீண்டும் ஒரு தடவை உணர்த்தியிருக்கின்றது. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய முடியும். யுத்தம் நடைபெறும் பிரதேசங்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுவதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு அப்பாவி பொதுமக்கள் பலியாகும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அரச தரப்பு பொதுமக்கள் கொல்லப்படும் சந்தர்ப்பங்களில் புலிகளின் இலக்குகளே தாக்கப்பட்டதாக நியாயப்படுத்திக் கொள்கின்றது. மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு இவ்வாறான நியாயப்படுத்தல்களை அரசு பயன்படுத்த முற்படுகின்றது. இவற்றுக்கப்பால் அப்பாவிப் பொதுமக்கள் தொடர்ந்தும் பலியாவதைத் தடுப்பதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகமே கொடுக்க வேண்டும். இல்லையெனில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கும்!

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.