Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகவும் மோசமான ஊழல் நிறுவனம்.....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மோசமான ஊழல் நிறுவனம்.....!

  வீ.தனபாலசிங்கம்

 பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் (1965 -- 70 ) கம்பஹா தொகுதி எம்.பி.யாக இருந்த எஸ்.டி.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றுகையில் ' இந்த பாராளுமன்றம் ஒரு கள்வர் குகை ' ( A den of thieves) என்று கூறியதற்காக சபைக்குள் இருந்து கதிரையோடு தூக்கிவெளியே போடப்பட்டதுடன் ஒரு வார காலத்துக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்கமுடியாதவாறு அன்றைய சபாநாயகரால் தடைசெய்யப்பட்டார்.

parliment.jpg

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும்,  சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுகளில் பண்டாரநாயக்க தன்னை ஈடுபடுத்தியிருந்த காலகட்டம் அது. நாட்டின் அதியுயர் சட்டவாக்கசபையை அவ்வாறாக ' அகௌரவப்படுத்தியதற்காக ' அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், இன்று அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்துக்குப் பின்னர் பாராளுமன்றத்தைப் பற்றி மிகவும் கேவலமாக  சபைக்கு உள்ளேயும் வெளியேயும்  உறுப்பினர்கள் சர்வசாதாரணமாக  பேசுகிறார்கள்.ஆனால், அவர்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்நோக்குவதில்லை. அவ்வாறு பேசிவிட்டு தாங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏதோ ஒரு பெரிய ' உண்மையைக் ' கூறியதாக பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள் போலும்.

சுமார் 15 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் விஜேதாச ராஜபக்ச கடந்த வாரம் இலங்கையில் மிகவும் மோசமான ஊழல் நிறுவனமாக பாராளுமன்றம் விளங்குவதாக கூறியிருந்தார். அவ்வாறு கூறிவிட்டு அவர் தனது எம்.பி.பதவியிலிருந்து விலகிவிடவில்லை. தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார். அமைச்சர் பதவியை நாளையதினம்  கொடுத்தாலும்  மறுக்காமல் அவர்  ஏற்றுக்கொள்ளவும் கூடும்.

பாராளுமன்றம்  நாட்டின் மிகவும் மோசமான ஊழல் நிறுவனம் என்ற அவரின் கூற்று குறித்து கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது  2000 ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர் என்ற வகையில்  தன்னால் அத்தகைய மதிப்பீடு நேர்மையானது என்று ஒருபோதும் கூறமுடியாது என்று குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களில் சிலர் ஊழல்காரர்களாக இருக்கிறார்கள். அந்த சிலரை அடிப்படையாக வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தை முழுமையாக நாட்டின் மிகவும் மோசமான ஊழல் நிறுவனம் என்று வகைப்படுத்தமுடியாது என்றும் அவர் கூறினார்.

அதுபோக, கடந்த வாரம் கொழும்புக்கு  வெளியே கடுவெலவில் புதிய பாலம் ஒன்றை திறந்துவைத்த பின்னர் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தைப் பற்றி குறிப்பிடுகையில் மொத்தமாகவுள்ள 225 உறுப்பினர்கள் தொடர்பிலும் மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதே தனது மதிப்பீடு என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. மக்கள் வெறுக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பார்க்கும்போது பிரதமர் தன்னையும் தவிர்க்கவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பாராளுமன்றம் ஊழல் நிறைந்த நிறுவனம் என்றால் அதற்கு காரணம் அதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு உறுப்பினர்களாக இருக்கும்  அரசியல்வாதிகளே காரணம். அடுத்த பொதுத்தேர்தலில் இந்த அரசியல்வாதிகள் முழுப்பேரையும் மக்கள் நிராகரிக்கவா போகிறார்கள்? இவர்களில் அதிகப்பெரும்பான்மையினா் அடுத்த பொதுத்தேர்தலிலும் அதே மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றத்துக்கு நிச்சயம் வருவார்கள். அதற்கு யார் மீது குற்றஞ்சாட்டுவது ?

அரசியல் ஒரு மக்கள் சேவை என்ற நிலையில் இருந்து இன்று எளிதாகப் பெரும்பணம் பண்ணுவதற்கான துறையாக மாறிவிட்டதே பாராளுமன்றம்உட்பட  ஜனநாயக நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றவற்றின் இன்றைய சீரழிவுக்கு அடிப்படைக் காரணமாகும். 

புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுகின்றவர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து விளக்குவதற்காக கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கமாகும். முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் காலஞ்சென்ற  சாம் விஜேசிங்க அத்தகைய கருத்தரங்குகளுக்கு  அழைக்கப்படுவதுண்டு. அத்தகைய நிகழ்வுகளில் புதிய எம்.பி.க்களுடனான தனது  கலந்துரையாடல் அனுபவங்கள் பற்றி ஒரு தடவை அவர் பத்திரிகையொன்றுக்கு பல வருடங்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்த சுவாரஸ்யமான கருத்து இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.

புதிய எம்.பி.களிடம் " நீங்கள் ஏன் பாராளுமன்றத்துக்கு வந்திருக்கிறீர்கள் ? " என்று விஜேசிங்க கேட்பாராம். உடனே அவர்கள் முண்டியடித்துக்கொண்டு நாங்கள் மக்களுக்குச் சேவைசெய்யவதற்காகவே தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்திருக்கிறோம் என்று   ஒருமித்துக் கூறுவார்களாம். ஆனால், விஜேசிங்கவோ  அவர்களை இடைநிறுத்தி " அதை நான் நம்பப்போவதில்லை.நீங்கள் எல்லோரும் சுலபமாக பெரும்பணம் சம்பாதிப்பதற்கும் சொத்துக்களைக் குவிப்பதற்குமே எம்.பி.யாகியிருக்கிறீர்கள் " என்று தயக்கமில்லாமல் முகத்துக்கு நேரே கூறிவிடுவாராம். அவர் கூறியவாறே உண்மைநிலை என்னவென்பதை நாம் அனுபவவாயிலாகக் காண்கிறோமல்லவா?

 எந்தவிதமான ஒழுக்கப்பண்புமே இல்லாத ஒரு கூடடத்தினராக அரசியல்வாதிகள் நோக்கப்படுகின்றார்கள்.அவர்கள் அது பற்றி கிஞ்சித்தும் கவலையோ வெட்கமோ படுவதிலலை.எளிதாகப் பணம்பண்ணுவதற்கான ஒரு தொழில்துறையாக அரசியல்மாற்றப்பட்டுவிட்ட நிலையில் , அரசியல்வாதிகள் இன்று கொள்கை கோடபாடுகள் பற்றியோ, மக்களின் நலன்களைப்பற்றியோ அக்கறைப்டுவதில்லை.குறைந்தபட்சம் தனிமனித ஒழுக்கத்தையாவது  கடைப்பிடிக்கவேண்டுமென்ற அக்கறை கூட அவர்களுக்கு இல்லை.சட்டையை கழற்றி மாற்றுவதைப் போன்று அரசியல்வாதிகள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கட்சிக்கு தாவிக்கொண்டிருக்கிறார்கள்.சமூகவரோதச்செயல்களில் ஈடுபடுபவர்கள், சட்டவிரோதமானதும் நெறிமுறைக்கும் புறம்பானதுமான வழிகளில் பணம் சேர்த்துக்கொண்டு தனவந்தர்களாகிக்கொண்ட பேர்வழிகள் நிரம்பியதாக அரசியல்அரங்கு  இன்று காணப்படுகிறது.

நீதிமன்றங்களில் கொலை, பாலியல் வலலுறவு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களும் கூட பாாளுமன்றம் வந்துபோகிறார்கள்.படுமோசமான குற்றப்பின்னணியைக் கொண்ட பலர் இன்று மககளினால் தெரிவுசெய்யப்படும் சபைகளில் உறுப்பினர்களாக பலத்த பாதுகாப்புடன் பவனிவந்துகொண்டிருக்கிறார்கள்.கடந்தவாரம்கூட தென்பகுதியில் மேயர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி வன்முறையில் ஈடுபட்டதற்காக ஐந்து வருட கடூழியச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. 

மக்களினால் தெரிவுசெய்யப்படும்  உறுப்பினர்களுக்கு சபைக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியிலும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதையும் தங்களது நடத்தைகள் சமூகத்துக்கு முன்னுதாரணமானவையாக இருக்கவேண்டும் என்பதையும் உணராதவர்களாகவே அதிகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று ஒரு மறைப்புக்குள் நின்று வாக்குச்சீட்டில் ஒரு சின்னத்துக்கு நேரே புள்ளடியைப் போடுவதுடன் வாக்களப்பெருமக்களின் ' மகோன்னதமான உரிமையும் இறைமையும் ' முடிவடைந்துவிடுகிறது.தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்பவர்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டாலும், அதற்குப்பிறகு அவர்களின் செயற்பாடுகள் மீது பொது மக்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை.இதுவே பாராளுமன்ற ஜனநாயகம் என்று சொல்லப்படுவதன் மிகப்பெரிய ஏமாற்றுமோசடியாகும்.இதில் இருந்துதான் சகல துஷ்பிரயோகங்களும் மக்கள் விரோத நடவடிக்கைகளும் பிரவாகம் எடுக்கின்றன. 

இதைத் தடுக்க வழி என்ன?

மக்களினால் தெரிவுசெய்யப்படுகின்ற பிரதிநிதிகள் எந்தநேரத்திலும் மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்களாகவும் பதில் கூறக்கடமைப்பட்டவர்களாகவும்  இருப்பதை உறுதிசெய்யக்கூடிய சட்டரீதியான ஏற்பாடுகள் இல்லாதவரை அரசியலில் கிறிமினல்களினதும் ஊழல்மோசடிக்காரர்களினதும் ஆதிக்கத்தை இல்லாமல் செய்வது சாத்தியமில்லை. இந்திய  லோக்சபாவின் சபாநாயகராக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஒரு தடவை கூறியது போன்று ' ஒழுங்காக செயற்படாத தங்களின் பிரதிநிதிகளை அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே திருப்பியழைப்பதற்கான உரிமையை வாக்காளர்களுக்கு வழங்கக்கூடியதாக மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.' 

https://www.virakesari.lk/article/61901

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.