Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 25 புதன்கிழமை, பி.ப. 01:00

கொடுக்கில் இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று, திங்கட்கிழமை (23) நீதிமன்றத் தீர்ப்பின் மீது, ஏறி நின்று, நர்த்தனமாடி இருக்கின்றது.   

நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதைப் புறந்தள்ளி, பிக்குகளின் ஆட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கின்றனர்.  

முல்லைத்தீவு, செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு, நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த விகாரையின் விகாராதிபதி, அண்மையில் சுகவீனம் காரணமாக மரணமடைந்தார்.   

பௌத்த பிக்குகள் குழுவொன்று, அந்தத் தேரரின் உடலை எடுத்துக் கொண்டு, கொழும்பிலிருந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை நோக்கி வந்தது. தேரரின் உடலை, ஆலய வளாகத்துக்குள் எப்படியாவது எரியூட்டிவிட வேண்டும் என்பதே, அவர்களின் நோக்கம். நீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளி, அந்த நோக்கத்தை, அவர்கள் நிறைவேற்றியும் இருக்கிறார்கள்.  

‘எந்தவொரு காரணம் கொண்டும், நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்குள், தேரரின் உடல் எரியூட்டப்படக்கூடாது’ என்று, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், கோவிலுக்கு முன்பாகவுள்ள, இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள கடற்கரையில் எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸாருக்கு பணித்திருந்தது. 

ஆனால், பொலிஸார் அதனை நிறைவேற்றவில்லை. மாறாக, நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு, மனுதாரரின் சட்டத்தரணிகள் பொலிஸாரைக் கோரிய போது, சட்டத்தரணிகளை அச்சுறுத்தி, அங்கிருந்து அகற்றும் வேலைகளைச் செய்திருக்கிறார்கள்; நீதிமன்ற அவமதிப்புக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள்.  

அந்தச் சமயத்தில், “...இது பௌத்த பூமி; தேரர்களுக்குத்தான் முதலிடம். இங்கு நீதிமன்றத்துக்கு வேலையில்லை...” என்று, தேரர் ஒருவர், சட்டத்தரணி ஒருவரைப்  பார்த்து அச்சுறுத்துகிறார். 

நீதிமன்றங்கள் தங்களுக்கு கீழ்த்தான் என்கிற, அடிமட்ட ஒற்றைச் சிந்தனையின் வழி நின்று, எதையும் சாதித்துவிடுவோம் என்கிற இறுமாப்பையும் அந்தத் தேரர் வெளிப்படுத்திய விதம் அருவருப்பானது; அச்சுறுத்தக்கூடியது. 

இது, இன்றைக்கு நேற்றைக்கு உருவான ஒன்றல்ல; இந்த நாட்டின் பெரும் பிரச்சினைகளுக்குக் காரணமான பௌத்த பேரினவாதச் சித்தாந்தத்தின் வழி வருவதாகும்.  

பௌத்த பேரினவாதத்தை நிலைநிறுத்துவதற்காகவே, நாட்டின் அரசமைப்பில்: பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. நாட்டு மக்கள் அனைவரையும், சமமாக வரையறுக்க வேண்டிய அரசமைப்பு, ஒரு தரப்பினரை முதலிடத்திலும் மற்றைய தரப்பினரை இரண்டாம் இடத்திலும் வைப்பது, நீதி பற்றிய அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்கும் செயலாகும். 

இப்படியான நிலையில், பேரினவாதத்தின் வழி நடக்கிற மக்களுக்கு, இயற்கை நீதி பற்றிய அடிப்படைகளோ, சித்தாந்தமோ இருக்க வேண்டியதில்லை. அவர்கள், அதன்பால் வளர்க்கப்படவும் வாய்ப்புகள் இல்லை. ஒரு கட்டத்துக்கு மேல், பௌத்த பேரினவாதம் என்பது, கேள்விகளுக்கு அப்பாலானது; சரியானது என்று, அவர்கள் முழக்கத் தொடங்கிவிடுகிறார்கள். 

நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்குள், அத்துமீறி விகாரை கட்டுவதற்கும், கன்னியாவில் தனியாருக்குச் சொந்தமான காணியைப் பறித்து விகாரை கட்டுவதற்கு வழங்குவதும், அந்தச் சித்தாந்தத்தின் வழி வருவதாகும்.  

தொல்லியல் திணைக்களம் தொடங்கி, இலங்கை அரச இயந்திரங்கள் அனைத்தும், பௌத்த பேரினவாதத்தை நிலைநாட்டுவதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றன. எப்போதாவது, இயற்கை நீதி காக்கப்பட்டாலும், அதன் மீதேறி நடப்பதற்கு, அரச இயந்திரமோ, பேரினவாதத்தின் வேட்டை நாய்களோ தயங்குவதில்லை. 

ஏனெனில், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் கௌரவிப்பதற்கும், ஆட்சியாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனை ஒத்தூதுவதற்கும், சிறைச்சாலைகளுக்குச் சென்று நலம் விசாரிப்பதற்கும், தலைவர்கள் என்ற போர்வையில், சிறுபான்மைத் தரப்பினரும் தயாராக இருக்கிறார்கள்.  

ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழு, நீதிமன்றத் தீர்ப்பை மீறிச் செயற்பட்டதை, நீதிமன்ற நடைமுறைகள் ஊடாகத் தண்டிக்க வேண்டியதும், அதற்காக இயங்க வேண்டியதும் தமிழ்த் தலைவர்களதும் சட்டத்தரணிகளதும் கடமை. அதை அவர்கள், எந்தவித விட்டுக்கொடுப்பும் இன்றி, முன்னெடுக்க வேண்டும்.  

ஆனால், மறைந்த தேரரின் உடலைக் கொழும்பில் இருந்து, நீராவியடிப் பிள்ளையார் கோவிலை நோக்கிக் கொண்டு வந்ததன் பின்னால், முக்கியமான சில விடயங்களும் இருக்கின்றன. 

அதாவது, “....இது பௌத்த சிங்கள நாடு...’ என்கிற மதவாத அடிப்படையை நிலைநிறுத்தும் எண்ணம் சார்ந்தது மாத்திரமல்ல, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சார்ந்ததுமாகும். 

விகாரை தொடர்பிலான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அங்கு தேரரின் உடலை எரியூட்ட முனைந்தால், தமிழ் மக்கள் அதற்கு எதிராகத் திரள்வார்கள் என்பது, இலகுவான ஊகிப்பு. அதன்வழி, தமிழ் மக்களுக்கு எதிராகத் தென் இலங்கையில் பேரினவாதத்தை, இன்னும் தூண்டிவிடலாம் என்பது, அதைத் திட்டமிட்டு அரங்கேற்றிய ஞானசாரர் குழுவின் எண்ணம். 

ஆனால், தமிழ் மக்கள் விடயத்தை, நீதிமன்றம் ஊடாகக் கையாண்ட போது, அது அவர்களின் எண்ணத்தைக் குறிப்பிட்டளவில் தடுத்துவிட்டது. ஆனாலும், எப்படியாவது நீதிமன்றத் தீர்ப்பின் மீதேறி நின்று, தங்களின் ‘வெட்டி’ வீரத்தை நிலைநாட்டி இருக்கிறார்கள்.  

ஞானசார தேரர், பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையானதை வரவேற்ற தரப்புகளில், தமிழ் அடையாளத்தோடும் இந்து அடையாளத்தோடும் இருக்கிற சிலரும் உண்டு. குறிப்பாக, சிவசேனா அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன், நீராவியடிக் கோவில்ப் பிரச்சினை தொடர்பாக, எந்தக் கருத்துகளையும் வெளியிடவில்லை; ஞானசாரர் குழுவின் அடாவடித்தனம் குறித்தும் பேசவில்லை. 

மாறாக, சிறுபான்மை இனங்களுக்கு இடையில், ஞானசாரர் தரப்பு முன்னெடுத்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, ஒத்தூதிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழர்களைத் திருப்பிவிடவும் துணிந்தார்கள். அதற்கு இந்த ஒத்தூதிகள் இணங்கிச் செயற்பட்டார்கள். 

தென் இலங்கையின் அரசியல், சிறுபான்மை மக்களை, இனங்களாக மாத்திரமல்இ, மதங்களாகவும் வர்க்கங்களாகவும் வாக்குகளாகவும் பிரிப்பதில், மிகஅக்கறையுடன் கவனம் செலுத்தி வருகிறது. அதன்போக்கிலும், இதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியிருக்கிற நிலையில், அதற்கு எதிராகப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டி, அதன்பால் சிங்கள வாக்குகளை, ஒற்றைத் தரப்பை நோக்கித் தள்ளுவது ஒன்றும், புதிய விடயம் அல்ல. 

மேற்கூறப்பட்ட விடயங்கள், தமிழ் மக்களுக்கு புரியாதவை அல்ல; ஆனால், உணர்ச்சி வசப்படுகின்ற நிலையில், தடுமாறும் சந்தர்ப்பமும் ஆற்றாமைச் சூழலும் அலைக்கழிக்கும். அது, பிழையான பக்கங்களை நோக்கித் தள்ளிவிடும். அப்போதுதான், மிகவும் நிதானமாகவும் நடைமுறைகள் வழியும் பயணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் தூண்டல்களுக்கு துலங்குவதால் என்றைக்குமே வெற்றி வந்து சேராது; அது, தோல்வியின் பக்கமே தள்ளும்.  

இறுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இந்தப் பத்தியாளர் சொல்லிக் கொள்வது, ‘...புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்த தாங்கள் இருவரும், அரசமைப்பில் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கும் விடயத்துக்கு எதிராக, வாதங்களை முறையாக வைத்திருக்கவில்லை என்பது, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களதும் குற்றச்சாட்டு. புதிய அரசமைப்புக்கான இடைக்கால வரைவிலும் தற்போதுள்ள அரசமைப்பில் பௌத்தத்துக்கு என்ன இடம் வழங்கப்பட்டிருக்கிறதோ, அதுவே மீள உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அப்படியான நிலையில், தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு என்கிற ஒன்றைப் பற்றி, உண்மையாக உரைக்கும் தார்மிகத்தைத் தாங்கள் கொண்டிருக்கிறீர்களா என்பது தொடர்பில், வெளிப்படுத்த வேண்டும். புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் சூழல் தற்போது இல்லை. ஆனாலும், ஜனாதிபதி வேட்பாளர்களுடனானதும் கூட்டணிகளுடனானதுமான தங்களின் கலந்துரையாடல்களில், புதிய அரசமைப்புத் தொடர்பிலான விடயத்தை, முக்கிய பேசு பொருளாக முன்வைக்கிறீர்கள். அப்படியான தருணத்திலாவது, ஒரு தரப்பை மாத்திரம் மேன்மைப்படுத்தும் விடயங்களைப் புறந்தள்ளி, அனைவரையும் சமமாக மதிக்கும் அரசமைப்புப் பற்றி பேசுவீர்களா?  

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒழிப்பு முறைக்காகத் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டுமிருக்கிற தாங்கள், இனியாவது, பௌத்தத்துக்கு முதலிடம் என்ற விடயத்துக்கு எதிரான, தமிழ் மக்களின் சாதாரண குரல்களையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், அதுதான் இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான வேர். அந்த வேரை வெட்டாமல், எதுவுமே செய்ய முடியாது. அது, தொல்லியல் திணைக்களத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும், கன்னியா வழக்கில், மகாவம்சத்தில் இந்த இடத்தில் பௌத்த விகாரை இருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது என்ற கதைகளை, ஆதாரங்களாகச் சொல்ல வைக்கும். அப்போது, நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டியும் வரலாம்’.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நீராவியடியில்-எரிந்த-பேரினவாதத்-தீ/91-239193

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.