Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போக்கிடமற்றவர்களின் புதிய கூட்டணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போக்கிடமற்றவர்களின் புதிய கூட்டணி

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 பெப்ரவரி 12

ஒரு வழியாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி,  ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.

புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட மறுநாள், யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தொலைக்காட்சியொன்றில், விக்னேஸ்வரனை அடுத்த தேசிய தலைவராகக் கடந்த காலத்தில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் மட்டத் தலைவர் ஒருவர், “விக்னேஸ்வரன் அமைத்திருப்பது நாற்காலிக்கான கூட்டணி. பொதுத் தேர்தல் முடிந்து ஆறு மாதங்களுக்குள் அந்தக் கூட்டணி கலைந்துவிடும்” என்று சவால் விட்டுக்கொண்டிருந்தார்.

இன்னொரு காணொளி ஊடகமொன்றில், விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் வரையில் கருத்துருவாக்கத்தைச் செய்துவந்த சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் ஒருவர், “விக்னேஸ்வரன் அமைத்திருக்கிற கூட்டணியில் சமத்துவம் இல்லை. அதுவொரு தேர்தல் கூட்டு. வெற்றிகளை ஈட்டாது” என்று கூறிக்கொண்டிருந்தார்.

புதிய கூட்டணி ஆரம்பமான அன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனின் 56ஆவது பிறந்ததினமாகும். அன்று, சமூக ஊடகங்களில் சுமந்திரனின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் ‘வாழ்த்துப்பா’ இசைத்துக் கொண்டிருந்தார்கள். என்றைக்கும் இல்லாத அளவுக்கு அது அதிகரித்தும் இருந்தது. ஆனால் ஒருசில இடங்களில், சுமந்திரனுக்கான பிறந்தநாள் பரிசே புதிய கூட்டணி என்று, எள்ளல் தொனியிலான பகர்வுகளையும் காணக் கிடைத்தது.

விக்னேஸ்வரன் அமைத்திருக்கிற புதிய கூட்டணி, அவருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும், கடந்த காலத்தில் அவரை நம்பியோருக்கும் நன்மை அளித்திருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம், ஒரு பருமட்டான முடிவுக்கு வரலாம். அதுவொன்றும், ஒருவருக்கும் தெரியாத முடிவு அல்ல. ஆனால், அந்த முடிவின் பின்னாலுள்ள பெரும் அவலத்தைப் பேசவேண்டிய தேவை ஏற்படுகின்றது. அது, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, தன்னை மீள்பரிசோதனை செய்து கொள்ளும்போது பரிசீலிக்க வேண்டிய கட்டங்களைக் கொண்டிருக்கின்றது.

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத நபரொருவரை, சமூகத்தின் முக்கியமான ஆளுமையாகவும் அரசியல் தலைவராகவும் முன்னிறுத்தியவர்கள் யாராக இருந்தாலும், அதற்காக அவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். ஏனெனில், உண்மையான ஆளுமைகளினதும் தலைவர்களினதும் எழுச்சியைத் தடுத்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், அப்படி மன்னிப்புக் கோரவேண்டிய தரப்பினர், ஏதும் அறியாதவர்கள் போல இன்றைக்கு அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமையாக விக்னேஸ்வரனைக் கடந்த காலத்தில் முன்மொழிந்தவர்கள்.

விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தரப்புக்கும் இடையிலான முட்டல் மோதல் ஆரம்பித்து, ஐந்து ஆண்டுகளாகின்றன. இந்தக் காலப்பகுதிக்குள், தமிழ் மக்கள் பேரவை என்கிற அமைப்பொன்று தமிழ்த் தேசியப் பரப்பில் எழுந்து அடங்கிவிட்டது. அதுபோலவே, மாற்றுத் தலைமைக்கான கோஷமும் என்றைக்கும் இல்லாதளவுக்கு எழுந்து, மெல்ல மெல்லக் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டது.

கடந்த பொதுத் தேர்தலில், கூட்டமைப்பின் ஏகநிலை வெற்றியின் பின்னரான நாள்களில், இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட சிலர், “கூட்டமைப்பின் ஏக நிலைக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை, இனிவரப்போகும் நாள்களில் அதிகரிக்கும். அந்த அதிருப்தியாளர்களைச் சரியான ஒரு புள்ளியில் இணைக்கின்ற ஆளுமைத் தரப்புகள், மாற்றுத் தலைமைக்கான வெளியை நிரப்ப முடியும்” என்று கூறிவந்தார்கள். கடந்த அரசாங்கத்தோடு கூட்டமைப்பு காட்டிய அதிகளவான இணக்கம், அதனை மெய்ப்பிக்கவும் செய்தது. கூட்டமைப்புக்கு எதிரான ஒரு திரட்சியைக் காட்டியது. ஆனால், அந்தத் திரட்சி பெரிய திரட்சியாக மாறுவதற்கு முன்னரே, அது கலைக்கப்படுவதற்கான காட்சியும் அரங்கேறியது. அதாவது, பேரவையின் (இணை) தலைவராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் என்று, யாழ். மய்யவாத அரசியல் தரப்பு காத்திருந்தபோதே ஆரம்பித்தது. அத்தோடு பேரவையானது, விக்னேஸ்வரனுக்கான தேர்தல் சார் அமைப்பு அல்ல என்ற பொய்யான அறிக்கையை வெளியிடும் போதே, எதிர்காலங்கள் குறித்த சிந்தனையற்ற, தனிநபர்களில் தங்கியிருக்கின்ற அமைப்பே அதுவென அம்பலப்பட்டுவிட்டது.
முள்ளிவாய்க்கால் முடிவு போன்றதொரு பேரழிவுக்குப் பின்னாலுள்ள சமூகத்தில் தோற்றம் பெறுகின்ற சிவில் சமூக அமைப்புகளோ செயற்பாட்டாளர்களோ, சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதன் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். ஆனால் சி.விக்காக, எல்லாவற்றையும் பேரவை விட்டுக்கொடுத்தது. அதனால், பேரவை மாத்திரமன்றி, சிவில் சமூக அமைப்புகள் குறித்த எதிர்கால நம்பிக்கைகளையே சமூகத்திடம் இருந்து காணாமல் ஆக்கிவிட்டிருக்கின்றது. ஆக, சி.வியை நம்பி முன்னிறுத்தி, பேரவை தோல்வியடைந்திருக்கின்றது; சிவில் சமூக அமைப்புகளுக்கான வெளியை காணாமலாக்கியிருக்கின்றது.

கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி தாமே என்று, 2010 முதல் முழங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சி.வி போன்ற ஒருவரிடம் எந்தவித அடிப்படைகளும் இன்றிச் சரணடைந்து, தங்களின் இடத்தைப் பறிகொடுத்திருக்கின்றது. மாற்றுத் தலைமைக்கான கோஷக்காரர்களின் முதல் தெரிவாக, ஒருகட்டம் வரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்தார். ஆனால், அதனை அவர் சி.வியிடம் இழந்தார். இன்றைக்கு, கூட்டமைப்புக்கு எதிரான உண்மையான மாற்றுத் தலைமை தாங்கள்தான் என்று பேசவேண்டிய கட்டத்துக்கு முன்னணி வந்திருக்கின்றது. பொதுத் தேர்தல் நேரத்தில், கூட்டமைப்புக்கு எதிராகப் பேசுவதைக் காட்டிலும், சி.வியின் கூட்டணிக்கு எதிராக அதிகமாக பேசவேண்டிய அபத்தம், முன்னணிக்கு நிகழ்ந்திருக்கின்றது.

கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை ஒரு பக்கத்தில் இணைப்பதற்குப் பதிலாக, விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் வருகை, இரண்டாக உடைத்திருக்கின்றது. முன்னணியிடம் ஒரு பங்கும் விக்னேஸ்வரனிடம் இன்னொரு பங்கும் என்று பிரியப்போகின்றது. அத்தோடு, அதிருப்தி வாக்குகளில் குறிப்பிட்டளவானவற்றை, மாற்றுக் கோஷக்காரர்களின் இந்தப் பிடுங்குப்பாடானது, மீண்டும் கூட்டமைப்பிடமே கொண்டும் சேர்ந்திருக்கின்றது. இன்னொரு பக்கம், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமையை உண்மையாக கட்டியெழுப்ப முயன்றவர்களும் அதற்கு ஒத்துழைத்த ஊடகங்களும், இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கவேண்டி வந்திருக்கின்றன. ஏனெனில், விக்னேஸ்வரனின் புதிய கூட்டணி என்பது, ஒரு கட்டத்தில் போக்கிடமற்றவர்களின் கூட்டாகவே காட்சியளிக்கின்றது. அதில் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் அமைப்பைத் தவிர ஏனைய தரப்புகள் அனைத்தும், கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் வரை, விக்னேஸ்வரனைக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. அதுவும், தமிழ்த் தேசியக் கட்சியின் என்.சிறிகாந்தா, விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் ‘பீ டீம்’ஐ அமைக்க முயல்வதாக, வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

விக்னேஸ்வரன் அமைத்திருக்கின்ற புதிய கூட்டணியின் திராணி, எந்த எல்லைவரை நீள்கின்றது என்றால், அதற்கான பதிலை உண்மையில் காணமுடியாது. ஏனெனில், அந்தக் கூட்டணியில் ஈபிஆர்எல்எப்புக்கே வவுனியாவில் ஓரளவு வாக்குப் பலம் உண்டு. மற்றைய தரப்புகள் எல்லாமே, யாழ்ப்பாணத்தை மய்யப்படுத்திய தரப்புகள். ஆனால், அவர்களால் கூட்டமைப்பு போன்ற கட்டமைப்புள்ள அமைப்புக்கு எதிராகப் பெரியளவில் வாக்குச் சேர்க்க முடியுமா என்றால், அது இல்லை. அப்படியானால், எவ்வாறான தரப்பின் வாக்குகளை நம்பிக்கொண்டு புதிய கூட்டணி உருவாகியிருக்கின்றது என்ற கேள்வி வரும். அதற்கான விடையை, விக்னேஸ்வரனால்கூட கூறமுடியாது.

ஏனெனில், கூட்டமைப்பைத் துரோகிகள் கட்டத்துக்கு விமர்சித்துக்கொண்டு புதிய கூட்டணியை ஆரம்பித்திருக்கும் விக்னேஸ்வரன், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றால், கூட்டமைப்போடு சேர்ந்து இயங்குவேன் என்கிறார். நாடாளுமன்றத்துக்குள் கூட்டமைப்போடு இணங்கி இயங்குவதற்குத் தயாராக இருக்கும் ஒருவர் தலைமையேற்றிருக்கும் கூட்டணிக்கு, ஏன் மக்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்கிற கேள்வி எழும். அதற்கு, நேரடியாகவே கூட்டமைப்புக்கு வாக்களித்துவிடலாம். இப்படியான கட்டங்களில் நின்றுதான், விக்னேஸ்வரன் புதிய கூட்டணியை அமைத்திருக்கின்றார்.

ஒப்பீட்டளவில் விக்னேஸ்வரன் அமைத்திருக்கின்ற கூட்டணி, கூட்டமைப்புக்கே அதிகளவான பலன்களை அளிக்கப்போகின்றது. அது, கூட்டமைப்புக்கு எதிரான பரந்துபட்ட ஆளுமையுள்ள தரப்புகளின் இணைவைத் தடுத்திருக்கின்றது. எதிர் வாக்குகளின் திரட்சியைப் பிரித்திருக்கின்றது. கூட்டமைப்புத் தலைமைத்துவம் மீதான விமர்சனங்களைப் பெரியளவில் குறைத்திருக்கின்றது. அப்படிப் பார்க்கும்போது, விக்னேஸ்வரன் தன்னுடைய முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் முன்னாள் மாணவன் சுமந்திரனுக்கும், மறைமுகமாக நன்மையையே செய்திருக்கின்றார். அது, ஏதேவொரு வகையிலான நன்றி விசுவாசமாக இருக்குமோ என்னவோ..!
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/போக்கிடமற்றவர்களின்-புதிய-கூட்டணி/91-245420

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.