Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரேவாடிரவாகக எமக்குத் தெரியாமலேயே நாடு பிரிந்து விட்டதோவென நினைத்தோம்- (தேசியன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரேவாடிரவாகக எமக்குத் தெரியாமலேயே நாடு பிரிந்து விட்டதோவென நினைத்தோம்- (தேசியன்)

[10 - June - 2007]

கொழும்பிலுள்ள தங்குமிடங்களில் (லொட்ஜ்களில்) பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்த பல நூற்றுக்கணக்கான வட, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத்தினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வட, கிழக்கு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

கடந்த மே மாதம் 31 ஆம் திகதி மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்குமிடங்களின் உரிமையாளர்களை அழைத்த புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மறுநாள் வெள்ளிக்கிழமை காலைவேளைக்குப் பின் வட, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள் எவரும் உங்கள் `லொட்ஜ்'களில் இருக்கக் கூடாது. அவ்வாறு தங்கியிருந்தால் நாம் அவர்களை வெளியேற்ற வேண்டிவருமென எச்சரித்திருந்தார். இதனால் தமிழ் மக்களிடையே பெரும் பதற்றம் உருவானது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஆடிப்போய் விட்டனர்.

ஆனால், மறுநாளான ஜூன் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கையின் பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா, பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவென வேண்டுமென்றே கட்டப்பட்ட கதையெனவும் அவ்வாறு தாங்கள் கூறவில்லையெனவும் கூறிய பின்னர், காரணமின்றி கொழும்பில் தங்கியுள்ள வட, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் கொழும்பை விட்டு உடனடியாக வெளியேறி விட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

வட, கிழக்கு தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென்பதுடன் ஏனைய மக்களுக்கும் அது அச்சுறுத்தலான விடயமென கூறியிருந்தார். பொலிஸாரின் இவ்விதமான பொறுப்பற்ற பேச்சுகளால் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான அராஜக அறிவிப்புகள் வெளிவந்து சரியாக ஒரு வார காலப்பகுதியிலேயே நன்கு திட்டமிடப்பட்டு தமிழ் மக்கள் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்ற வேறுபாடுகளின்றி, சுகவீனமுற்றவர்கள், இயலாதவர்களென்ற எதுவித கரிசனையுமில்லாமல் அனைவரும் பேருந்துகளில் மந்தைகள்போல் ஏற்றப்பட்டு வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

உண்மையில் என்ன நடந்தது? கொழும்பின் தங்குமிடங்களிலிருந்து இரவோடிரவாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் மனக் குமுறல்கள் இங்கே....

யாழ்ப்பாணம்- மானிப்பாயிலிருந்து கட்டார் போக தனது அம்மாவுடன் மார்ச் 29 ஆம் திகதி கொழும்பு வந்தவர் கந்தையா நவநீதன் (வயது- 24). கொழும்பு- 12 இல் தங்குமிடமொன்றில் தங்கியிருந்த இவரும் இவரது தாயாரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு திருகோணமலை மக்கேசர் விளையாட்டு அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமக்கேற்பட்ட அனுபவம் குறித்து நவநீதன் இவ்வாறு கூறுகின்றார்.

"முதலும் நான் கட்டார் போய் வந்தனான். இங்க வந்த பின்னர் `விசா' முடிந்துவிட்டது. கட்டார் போக வந்தனான். விசாவுக்காகவே பார்த்துக் கொண்டிருந்தேன். 10 நாளில் விசா வந்திடும். ஆனால், வியாழக்கிழமை காலை விடிய 4.30 மணியிருக்கும் பொலிஸ் வந்து நித்திரைப் பாயிலிருந்த எங்களை, சாமான்களை எடுத்துக் கொண்டு உடனடியாக வெளியே வருமாறு சொன்னது. முகம் கழுவவோ பல்லை மினுக்கவோ விடேல்ல.

`10 நாளில் வெளிநாடு போயிடுவேன். விட்டு விடுங்க என்றேன் கேட்கவில்லை.'

காலை 5.30 மணியிருக்கும் மருதானை பொலிஸுக்கு கொண்டுபோய் வவுனியா போகப் போகின்றீர்களா? திருகோணமலை போகப் போகின்றீர்களாவெனக் கேட்டார்கள். திருகோணமலை என்றோம். இங்கே அனுப்பி விட்டார்கள். விசா வந்துவிடும், நான் வெளிநாட்டுக்கு போயிடுவேன், விட்டு விடுங்க என்று கெஞ்சிக் கேட்டேன். எதையும் கேட்கவில்லை.

இப்ப இங்க ஸ்ரேடியத்தில் எல்லாமாக 13 பேர் இருக்கின்றோம். ஒரு 6 வயது குழந்தையும் என் அம்மாவும் (வயது- 59) இன்னொரு அக்காவும் இருக்கிறா. எம்மைச் சுற்றி ஆமியும் பொலிஸும் நிற்கினம். வெளியே யாரும் போக முடியாது. கைதிகள் போல இருக்கிறோம் அண்ணை.... இனி என்ன நடக்குமோ தெரியாது. யாழ்ப்பாணம் போனால் திரும்பியே வர முடியாது. ஒரு 10 நாள் தந்தால் போதும் நான் கட்டார் சென்றிடுவேன். காரணமில்லாமல், நாங்கள் கொழும்பில் நிற்கவில்லை." நவநீதனின் குரலில் விசா பறிபோய்விடுமோ என்ற ஏக்கம் தெரிந்தது.

நவநீதனின் அம்மா செல்லம்மா,"விடியப்பறம் கதவை யாரோ தட்டினார்கள். பார்த்தால், பொலிஸ் உடன வெளியேறுங்கள் என்றார்கள். என்ர மகனை கட்டாருக்கு அனுப்பத்தான் இங்க வந்தனான். அனுப்பிப்போட்டு ஊருக்கு போயிடுவன் தம்பி. கொழும்பில் இருக்கிற ஆசையில் நான் இங்க வரேல்ல. சரியா கஷ்ரப்பட்டு போனோம். கொழும்பில் இருக்க விடுங்கோவென்று நாங்கள் கேட்கவில்லை. மகனை அனுப்புறதுக்கு 10 நாட்கள் ஆகும். அதுக்குப் பிறகு போயிடுவேன்... இருக்க விடுங்கள் என்றுதானே கேட்கின்றோம்." என்றார் திருமதி கந்தையா செல்லம்மா.

இதேவேளை, திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கில் தனது 6 வயது மகனுடனும் தனது கணவருடனும் செய்வதறியாதுள்ளார் ஜீவராஜா அமிர்தஜோகம் (வயது- 35).

"4 மணியிருக்கும் பொலிஸ்காரர் வந்து எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வரச் சொன்னார்கள். உடுப்புகளை கூட மடித்து வைக்கவிடவில்லை. எல்லாத்தையும் அள்ளி அடைஞ்சு கொண்டு வந்தோம்.

எங்களுக்கு ஒரு அக்காதான் வெளிநாட்டில் இருக்கின்றா. வீட்டில் கஷ்டம். இவர் (கணவன்) வெளியில் போனால்தான் சமாளிக்கலாமென எண்ணித்தான் இங்கு வந்தோம். அத்துடன், எனக்கு `கால் வீக்கம்' இருக்கு. அப்பலோவில் காட்டினேன். டொக்டர் இந்தியாவைச் சேர்ந்தவர். அவர் ஊருக்குப் போட்டாராம். திரும்ப 15 ஆம் திகதி வருவாராம். வந்தால் ஒப்பிரேஷன் செய்யலாமென சொன்னார்கள். அதற்காகவும் பார்த்துக் கொண்டிருந்தேன். பொலிஸ்காரர்களுக்கு வைத்தியசாலை ஆவணங்கள் எல்லாவற்றையும் காட்டி எங்களை இருக்க விடச் சொன்னோம். கேட்கவில்லை.

எனது 6 வயது குழந்தைக்கு ஒரு சொட்டு தண்ணி கூட கொடுக்கவில்லை. ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலயும் நிப்பாட்டி நிப்பாட்டித்தான் எங்களை கொண்டு வந்தார்கள். எனக்கு சிங்களம் தெரியாது. குழந்தை வீரிட்டு அழுது கொண்டேயிருந்தது. (அழுகிறார்) கைப்பாசையால் தண்ணி கேட்டேன். பிஸ்கற் கூட குழந்தைக்கு கொடுக்க முடியவில்லை. குழந்தைக்கு பசிக்கிது என்று கைப்பாசையால் கேட்டேன். கடைசியாக ஒரு பொலிஸ் நிலையத்தில் நிப்பாட்டி தண்ணி தந்தார்கள்." என்ற அமிர்தஜோகம், பட்ட கஷ்டங்கள் எவ்வளவு தூரம் கொடுமையானது என்பதை அவரது அழுகையிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

இதேவேளை, வெள்ளைவத்தைப் பகுதியில் தங்குமிடமொன்றில் தங்கியிருந்த வர்த்தகரொருவர் இவ்வாறு வலுக்கட்டாயமாக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டார். தனது பெயரை கூற விரும்பாத அவர் ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறுகையில்:

"காலை 4.30 மணியிருக்கும் யாரோ கதவைத் தட்டினார்கள். முதலில் நான் திறக்கவில்லை. தொடர்ந்து தட்டியதனால் கதவைத் திறந்தேன். அறைவாசலில் இராணுவமும் பொலிஸும் நின்றது. சோதனை செய்ய வேண்டுமெனக் கூறி அடையாள அட்டையை கேட்டார்கள். ஏன் இங்க நிற்கின்றாய்? எனக் கேட்டார்கள். வர்த்தகரென அத்தாட்சிப்படுத்தும் அடையாள அட்டையையும் காட்டினேன். எவ்வளவு காலமாக இங்கு தங்கியிருக்கின்றாய் எனக் கேட்டார்கள். இரண்டரை மாதமாக என்றேன். அப்ப இனி எப்ப திரும்பி போவாய் என்றார்கள். 2 கிழமையில் போய்விடுவேன் என்றேன். பொருட்கள் வாங்கியவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும். காசுக்காக பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றேன். பின்னர் என்னை படுக்குமாறு கூறிவிட்டு போய்விட்டார்கள்.

அரை மணித்தியாலத்துக்குப் பின்னர் மீண்டும் வந்து உடைமைகளை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வருமாறு கூறிவிட்டு, அவர்களும் என் அறைக்குள் வந்து ஒரு துரும்பைக்கூட விடாமல் எல்லாவற்றையும் எடுத்து தந்து வெளியே வரச் சொன்னார்கள்.

ஒரு பேருந்து வந்தது. முதலில் நான் தங்கியிருந்த தங்குமிடத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும்தான் கொண்டு போகப் போகின்றார்களென நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது. ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலிருந்தும் பெருமளவிலான மக்கள் ஏற்றப்பட்டார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஏற்றினார்கள். புட்டுப்பானைகள், அகப்பைகள் என பேருந்து முழுவதும் பொருட்கள் கால் வைக்கவே இடமில்லாமல் எல்லோரையும் ஏற்றினார்கள். பெண்கள், குழந்தைகள் பயத்தினாலும் பசியினாலும் கதறியழுதனர்.

உண்மையில் பார்க்கவே பரிதாபமாகயிருந்தது. எவரும் காலை முகம் கூட கழுவவில்லை. ஒரு சொட்டு தேநீர் கூட குடிக்கவில்லை. அப்படியே மந்தைகள் போல ஏற்றி வவுனியா காமினி சிங்கள மகாவித்தியாலயத்துக்கு அனுப்பிவிட்டார்கள்." எனத் தெரிவித்த அவர், இதுதான் தனிநாட்டுக்கான அத்திவாரம் எனவும் தெரிவித்தார். நாடு பிரிந்தது போல எமக்கு இருந்தது என்றார்.

அருகில் நின்று கொண்டிருந்த இன்னுமொருவர், "நாடு கடத்துறது என்று பேப்பரில படிச்சிருக்கிறம். அதை இன்றைக்குத் தான் நேரடியாக பார்த்தோம். இரவோடிரவாக எமக்குத் தெரியாமல் நாடு இரண்டாகப் பிரிந்து விட்டதோவென நினைத்தேன்." என்றார் அவர்.

இது இவ்வாறிருக்க, கொழும்பில் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியான நிலையில் மணமகன் வெளிநாட்டிலிருந்து வந்ததும் கல்யாணம் எனவிருந்த பெண்ணொருவரும் இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பரிதாப நிகழ்வும் நடந்தேறியுள்ளது.

இவ்வாறு வியாழன் அதிகாலை கொழும்பில் தமிழினம் எதிர்கொண்ட அவலங்கள் பல. அரசின் இந்த அடாவடித்தனத்தை பல நாடுகள் கண்டித்துள்ளபோதும் மக்களுக்கு ஏற்பட்ட வலியை எவராலும் போக்க முடியாது.

தமிழினம் இலங்கையெனும் தீவில் இறைமையற்று, இரவல் நாட்டில் வாழ்வதைப் போலவே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றது என்பதையும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதையும் உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது இவ்வாறிருக்க, கடந்த வியாழக்கிழமை அதிகாலை முதல் இவ்வாறு வலுக்கட்டாயமாக கொழும்பிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்ற அரசு எடுத்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட அனைவரையும் மீளவும் கொழும்புக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறிருப்பினும், எது நடக்காதென தமிழர்கள் கருதியிருந்தார்களோ, அதை தற்போதைய அரசு செய்து காட்டிவிட்டது. பேரினவாதத்தின் ஓரினவாத முகம் தெளிவாக வெளிக்காட்டப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த தமிழினமும் தனது திடமான நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமிழரின் இறைமையும் அவர்களின் பாதுகாப்பும் அவர்களின் தன்னாட்சியில் தான் தங்கியுள்ளதென்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா?

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.