Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்கோட்டை சிறுவன் தலையில் இருந்த தோட்டா அகற்றம் - உடல்நிலை எப்படி உள்ளது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கோட்டை சிறுவன் தலையில் இருந்த தோட்டா அகற்றம் - உடல்நிலை எப்படி உள்ளது?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

துப்பாக்கி சுடும் பயிற்சி தளம்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்த துப்பாக்கி தோட்டா, நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அகற்றப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தோட்டாவை அகற்றினர். இருப்பினும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவன் புகழேந்தியின் உடல்நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்துகுப் பிறகே தெரிவிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

துப்பாக்கி தோட்டா பாய்ந்த விவகாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்) மீது புதுக்கோட்டை வெள்ளனூர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.

இங்கு மாநில காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் உள்ளது. இங்கு இன்று காலை காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பகுதி மைதானத்தில் துப்பாக்கியொன்றில் இருந்து பாய்ந்த தோட்டா, மலையடிவாரத்தில் உள்ள வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி (11) தலையில் பாய்ந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர்.

இதற்கிடையே, சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிராமப் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள அரசு துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மாவட்ட கண்காணிப்பாளர் விசாரணை

 

புதுக்கோட்டை சிறுவன்

 

படக்குறிப்பு,

நிஷா பார்த்திபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சம்பவ பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும். அது போல் தான் இந்த இடமும் உள்ளது. ஆனால் ஏதோ தவறுதலாக இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பசுமலைபட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது," என்று கூறினார்.

தொடரும் சம்பவங்கள் - கந்தரவகோட்டை எம்எல்ஏ

இந்த சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழ் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரையிடம் பேசியபோது, இதுபோன்ற சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளது என்று கூறினார். "ஏற்கெனவே ஒரு பஞ்சாயத்து செயலர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டபோது பெரும் பிரச்னை கிளம்பியது. இந்த பயிற்சி மையம் வேண்டாம் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், பிரச்னை ஏற்படும் சமயங்களில் மட்டும் கோரிக்கை வைப்பதும் பின்னர் மறந்து விடுவதுமாக உள்ளது. இப்போது 11 வயது சிறுவனுக்கு இப்படி நடந்துள்ளது," என்று கூறினார்."சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை டீனுடன் பேசியபோது, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டேன். ஆனால், டீன் அங்கு இல்லை. பொறுப்பு டீன் ராஜ்மோகன் தலைமையில் ஒரு மருத்துவர் குழு அந்தப் பையனுக்கு சிகிச்சை அளித்தது," என்று சின்னச்சாமி தெரிவித்தார்."முன்பே சம்பவம் நடந்தபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என்று கேட்டதற்கு, "இது குறித்து நான் மாவட்ட ஆட்சியரிடமும் பேசினேன். இந்த பயிற்சி மையத்தை ஆள் நடமாட்டமில்லாத வேறு ஒரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். நான், தற்போது பெரம்பலூரில் ஒரு கூட்டத்துக்காக வந்துள்ளேன். மாலை மருத்துவமனைக்குச் சென்று விடுவேன்" என்று தெரிவித்தார்.

பயிற்சி தளத்துக்கு ஆட்சியர் தடை

இந்த நிலையில், புதுக்கோட்டை பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் செயல்படுவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் பாதுகாப்புடன் உள்ளதா? என ஆய்வு செய்யப்படும். அந்த மையம், துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு உகந்ததுதானா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

துப்பாக்கி சுடும் பயிற்சித்தளத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டா, 600 மீட்டர் தூரம் பாயும் தன்மையைக் கொண்டது. அந்த பயிற்சி தளத்தில் இருந்து சிறுவன் இருக்கும் இடம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அந்த தோட்டா எப்படி இத்தனை தூரம் கடந்து சிறுவனின் தலைக்குள் பாய்ந்தது என்பது புதிராக உள்ளது. இது குறித்த விசாரணையையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

https://www.bbc.com/tamil/india-59827924

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கோட்டையில் தோட்டா தலையில் துளைத்த சிறுவன் உயிரிழப்பு - கோபத்தில் உறவினர்கள் சாலை மறியல்

3 ஜனவரி 2022
 

புதுக்கோட்டை சிறுவன்

புதுக்கோட்டையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.

தலையில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாவை அகற்றிய அறுவை சிகிச்சை முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி சாலையில் நார்த்தாமலை அருகில் உள்ள அம்மாசத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தில் மத்திய, மாநில காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் வழக்கமாக ஈடுபடுவர்.

இந்த நிலையில் திருச்சியில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் டிசம்பர் 30ஆம் தேதி காலையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நார்த்தாமலை கிராமத்தில் உள்ள வீட்டில் சாப்பாட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலை மற்றும் காலில் தோட்டா பாய்ந்தது.

இதனால் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக கீரனூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுவனை கொண்டு சென்றனர் .

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் நிலைமை கவலைக்கிடமானது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் பற்றி சிறுவனின் தந்தை கலைச்செல்வன் கூறுகையில் மகன் தனது பாட்டியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் திடீர் என சத்தம் கேட்டதாகவும் பிறகு கவனித்தபோது மகனின் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததாகவும் தெரிய வந்தது என்றார்.

 

துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம்

இந்த சம்பவம் பற்றி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துப்பாக்கி சுடும் தளத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும்

இதற்கிடையே, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை காவலர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.

அப்போது திடீர் திருப்பமாக மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் ஒரு பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதேவேளையில் மற்றொரு பகுதியில் அகில இந்திய அளவில் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக மத்திய மண்டல காவல் துறையைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் பயிற்சி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

 

போராடும் மக்கள்

இதையடுத்து அதில் பங்கேற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி மாலை உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிறுவனுக்கு சரியாக சிகிச்சைஅளிக்கவில்லை எனக் கூறி அவரது உறவினர்கள் புதுக்கோட்டை அருகே கொத்தமங்கலம் பட்டியில் உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவனின் மறைவையடுத்து அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தற்காலிகமாக மூடப்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் கிராமவாசிகள் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்ய வைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-59861293

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு: சம்பவ தினத்தன்று நடந்தது என்ன? - கள ஆய்வு

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக
6 ஜனவரி 2022, 06:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராசாத்தி

 

படக்குறிப்பு,

"துப்பாக்கி குண்டுகள் தனது வீட்டுக் கூரையிலும் இதற்கு முன்னர் விழுந்துள்ளது," என்கிறார் ராசாத்தி

புதுக்கோட்டை துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்திலிருந்து வந்த குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக செய்தி சேகரிகக் களத்திற்கு சென்றபோது, பயிற்சி தளத்தில் சுடப்படும் குண்டுகள் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி வந்து விழுவது வாடிக்கையாக இருந்துள்ளது என கிராம மக்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சூடும் பயிற்சி தளத்திலிருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி காவல் துறையினர் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பயிற்சியின்போது சுடப்பட்ட குண்டு 11 வயதான புகழேந்தி என்கிற சிறுவனின் மீது பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுவன் புகழேந்திக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 3-ம் தேதி புகழேந்தி உயிரழந்தார். இந்த நிலையில் பசுமலைப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் செயல்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது தொடர்பாக அப்போது பயிற்சியில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாச்சியர் தண்டபானி விசாரணை நடத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்பித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டி என்கிற இடத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு காவல்துறையினர் மட்டுமல்லாது மத்திய பாதுகாப்பு படையினரும் சமயங்களில் இராணுவத்தினரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது.

பயிற்சி மையத்தில் அதிகாலையிலே பயிற்சி தொடங்கிவிடும். பயிற்சி நடைபெறுகிற போது சுற்றியுள்ள மலைகளில் சிவப்பு கொடி முன்னெச்சரிக்கைக்காக நடப்பட வேண்டும், பொதுமக்கள் வந்தால் எச்சரிக்கை செய்ய காவலர்கள் விசிலுடன் நிறுத்தப்பட வேண்டும், சம்பவ இடத்தில் மருத்துவ குழு அடங்கிய ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட வேண்டும் என்கின்றன காவல்துறையின் வழிமுறைகள்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கடந்த டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பசுமலைப்பட்டியில் துப்பாக்கி பயிற்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்று தமிழக காவல்துறையினரும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பயிற்சி நடைபெறும் எல்லையையும் தாண்டி தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களை துப்பாக்கி குண்டுகள் தாக்கியிருக்கிறது.

பயிற்சி தளத்தில் 350 மீட்டர் தொலைவில் இலக்கு வைத்து பயிற்சி மேற்கொள்ளப்படுகையில் பசுமலைப்பட்டியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் இருக்கும் நார்த்தாமலையில் உள்ள புகழேந்தியின் வீட்டில் வந்து குண்டு தாக்கியது தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்தை நேரில் பார்த்த நார்த்தாமலையைச் சேர்ந்த ராசாத்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், 'காலை எட்டு மணி இருக்கும்போது புகழேந்தி வீட்டில் அவனுடைய அம்மா மற்றும் தங்கை அழுகின்ற சத்தம் கேட்டு சென்று பார்த்தோம். அப்போது புகழேந்தி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து கிடந்தான். அப்போது நான் தான் வீட்டிலிருந்து வெளியில் தூக்கி வந்தேன். துப்பாக்கி குண்டு தலையில் தாக்கியது அப்போது தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதித்த பிறகு தான் தெரியவந்தது. இது போல குண்டுகள் வந்து விழுவது வழக்கம். எங்கள் வீட்டு கூரையிலும் ஒருமுறை குண்டு வந்து விழுந்துள்ளது. அதன் தடம் தற்போதும் இருக்கிறது. இதே பகுதியில் ஒரு சிறுமிக்கும் கடந்த சில வருடங்கள் முன்பு குண்டு தாக்கியுள்ளது. குழந்தைகள் வெளியில் தான் அதிகம் விளையாடுகிறார்கள். யார் மீது எப்போது குண்டு வந்து தாக்கும் என அச்சமாக உள்ளது. மக்கள் பாதுகாப்பிற்கு அந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்' என்றார்.

இந்த பயிற்சி தளத்தில் பயிற்சியின் போது சுடப்படும் குண்டுகள் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி வந்து விழுவது வாடிக்கையாக இருந்துள்ளதாக நார்த்தாமலை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். புகழேந்தியைப் போல கடந்த காலங்களில் வேறு சிலரும் இந்த பயிற்சி தளத்திலிருந்து வந்த குண்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நார்த்தாமலை அடுத்து உள்ள சித்துப்பட்டியில் வசித்து வருகிறார் முருகேசன். இவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் ஊராட்சி செயலராக பணி புரிந்து வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி அவ்வாறு முருகேசன் ஊரப்பட்டி என்கிற இடத்தில் பணியில் இருந்தபோது பசுமலைப்பட்டி பயிற்சி தளத்தில் சுடப்பட்ட குண்டு ஒன்று முருகேசன் நெஞ்சில் பாய்ந்து முதுகெலும்பில் ஏறியுள்ளது.

 

முருகேசன்

 

படக்குறிப்பு,

குண்டு அடிப்பட்டு சிகிச்சையில் இருந்த தனக்கு இப்போது வரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்கிறார் முருகேசன்

பிபிசி தமிழிடம் பேசிய முருகேசன், 'துப்பாக்கி பயிற்சி நடைபெற்ற இடத்திற்கும் ஊரப்பட்டிக்கும் 3 கி.மீ தொலைவு இருக்கும். குண்டு அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த எனக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 19 நாட்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குண்டு அகற்றப்பட்டது.

அப்போது ஒரு லட்சம் ரூபாய் வரை என் சிகிச்சைக்காக செலவு செய்தேன். ஆனால் எனக்கு நிவாரணமோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. எனக்கான இழப்பீடு தொகையை நான் கேட்கவில்லை. என் சிகிச்சைக்காக நான் செலவு செய்த தொகையில் ஒரு பகுதியையாவது கேட்டுப் பெறலாம் என ரூ.60,000 கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு வழங்கியிருந்தேன். அதற்குப் பதில் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் என் மருத்துவ செலவு தொகை பெற உயர்நீதிமன்றத்தில் 2002-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். 20 ஆண்டுகளாக அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.' என்றார்.

 

ரமேஷ்

 

படக்குறிப்பு,

தற்போது தமிழக அரசு வழங்கியுள்ள இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என புகழேந்தியின் உறவினர் ரமேஷ் கூறுகிறார்.

புகழேந்தி மரணமடைந்தைத் தொடர்ந்து அந்த பயிற்சி தளம் நிரந்தமாக மூடப்பட வேண்டும் என புகழேந்தியின் உறவினர்களும் ஊர் மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய புகழேந்தியின் உறவினர் ரமேஷ், 'இது போல் நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே பல்வேறு இடங்களில் இது போல் குண்டுகள் வந்து விழுந்துள்ளன. ஆடு, மாடுகள் கூட குண்டுகளால் அடிபட்டுள்ளன. ஆனால் தற்போது தான் இந்த பிரச்னை வெளியில் தெரிந்துள்ளது. வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் மீது குண்டு வந்து விழுந்துள்ளது. இதுவே கடைசியாக இருக்க வேண்டும். அந்த துப்பாக்கி பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது, இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். புகழேந்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்' என்றார்.

தங்களின் போராட்டத்தை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் நிரந்தரமாக மூடப்படும் என அதிகாரிகள் வாய்மொழி உத்திரவாதம் அளித்துள்ளதாக தெரிவிக்கும் கிராம மக்கள் அதை விரைவில் செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-59891158

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.