Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹோல்ம்ஸின் கருத்தால் ஐ.நா.வின் பக்கசார்பின்மை கேள்விக்குறி-சிறிலங்கா பிரதமர்.

Featured Replies

மனிதாபிமானப் பணியாளர்களுக்கு இலங்கை ஆபத்தான இடமென்று ஐ.நா.வின் பிரதிச் செயலாளர் நாயகம் சேர்.ஜோன் ஹோல்ம்ஸ் ராய்ட்டருக்கு வழங்கிய பேட்டியை முழுமையாக நிராகரித்திருக்கும் அரசாங்கம் நியாயமான வரையறையை மீறும் இத்தகைய கருத்துகள் ஐ.நா.வின் பக்கச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கும் செயற்பாடு என்று கடும் விசனத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;

மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் இணைந்து வியாழக்கிழமை மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டுக்கு முன்னராக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோல்ம்ஸ் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியொன்றை வழங்கியிருந்தார். அந்தப் பேட்டியில் சேர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்திருந்த எதிர் பாராத கருத்துக்களையிட்டு இலங்கை அரசாங்கம் ஆச்சரியம் அடைந்துள்ளது. அந்தப் பேட்டியானது நிவாரணப் பணியாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக இலங்கையென்று தலைப்பிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், செய்தியாளர் மாநாட்டுக்கு பின்னரே அந்தப் பேட்டி வெளியிடப்படும் என்ற தடை உத்தரவுடன் ஐ.நா. முன்கூட்டியே ஆதாரத்துடன் தெரிவித்திருந்தது. ஜோன் ஹோல்ம்ஸின் இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கமே செய்து கொடுத்திருந்தது. ஐ.நா.வுடனான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடனேயே அரசாங்கம் இந்த அனுசரணையை வழங்கியது. அதேசமயம் சேர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ள கருத்துக்களையிட்டு அரசாங்கம் அதிகளவில் கவலையை தெரிவிக்கின்றது.

அந்தப் பேட்டியில் சேர் ஜோன் ஹோல்ம்ஸ் குறிப்பிட்டதை இங்கு கூறுகிறேன். "மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான கவலை அவர்கள் மத்தியில் காணப்படுகிறது. உலகத்திலேயே மிகவும் மோசமானதொன்றாக இங்கு நிலைமை உள்ளது என்பதற்கான பதிவு இங்கு உள்ளது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் தெரிவித்திருந்த கருத்துகளின் முழுக்கனதியும் இலங்கை பற்றியதாகவே உள்ளது. ஐ.நா.வின் அறிக்கைக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கும் முரண்பட்டதாக உள்ளது.

மனிதாபிமானப் பணியாளர்களுக்கு இலங்கை பாதுகாப்பான இடமாக இல்லையென்ற ஹோல்ம்ஸின் கருத்தை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. ஜோன் ஹோல்ம்ஸுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி மனிதாபிமானப் பணியாளரின் பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கம் முழுமையான ஈடுபாட்டுடன் செயற்படுவதாக உறுதியாக அழுத்தி உரைத்திருந்தார். வடக்கு, கிழக்கில் பணியில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளரின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையிட்டு ஜோன் ஹோல்ம்ஸுடம் பாராட்டுத் தெரிவித்தார். அத்துடன், பாதுகாப்பு செயலாளரும் ஜோன் ஹோல்ம்ஸுனான சந்திப்பின்போது கிழக்குக்கு நேர்மையான மனிதாபிமானப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கும் மேலாக ஜோன் ஹோல்ம்ஸ் வடக்கு, கிழக்குக்கு நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளையும் மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளையும் நேரடியாக பார்த்திருந்தார். அத்துடன், பிரெஞ்சு தன்னார்வ நிறுவனத்தின் 17 பணியாளர்கள் கொலைகள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலைமை குறித்தும் ஜோன் ஹோல்ம்ஸிடம் அரசாங்கம் விளக்கமாக எடுத்துரைத்துள்ளது. இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. விசாரணைகளின் பிரகாரம் வெளிவரும் உண்மைகள் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த பயன்படுத்துவோருக்கு அசௌகரியமான ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும்.

இத்தகைய சூழ்நிலையில் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்திருந்த கருத்துகள் இலங்கைக்கு அவமதிப்பையும் சர்வதேச ரீதியான பிரதிமைக்கு களங்கத்தையும் ஏற்படுத்துவோருக்கு பங்களிப்பினையும் வழங்கும் என்பது குறித்து அரசாங்கம் கவலைப்படாமல் இருக்க முடியாது.

மனிதாபிமான விவகார ஒத்துழைப்புக்கான ஐ.நா. அலுவலகத்தின் அறிக்கை மற்றும் செய்தியாளர் மாநாட்டில் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்தமை என்பவற்றை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் விரும்புகின்ற அதேவேளை, ராய்ட்டருக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகளை முழுமையாக நிராகரிக்கிறது. சுருக்கமாக இதனை நோக்கினால் கடந்த கால அனுபவத்தைக் கொண்டு பத்திரிகையாளர் புலன் உணர்ச்சிகளின் அடிப்படையில் உண்மையை விலைபேசியிருப்பதாக இது உள்ளது.

ஊடகங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு ஜோன் ஹோல்ம்ஸின் விஜயத்தின்போது அரசாங்க அதிகாரிகளால் அவருக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரின் விஜயமானது துரதிர்ஷ்டவசமாக ஊடகத்துக்கு அவர் வழங்கிய பேட்டியின் மூலம் பாரதூரமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடகமானது உணர்ச்சிகரமான தலைப்புகளை முன்னெடுத்து உண்மையை மேலோட்டமாக வெளிவிடுவதை வழமையாகக் கொண்டதாகும்.

ஐ.நா. மற்றும் அதன் நிறுவனங்களுடன் இதயசுத்தியுடன் பணியாற்றும் விருப்பத்தை அரசாங்கம் கொண்டிருக்கிறது. அதேவேளை, நியாயமான வரையறைகளை மீறிய கருத்துகளும் சிபாரிசுகளும் இந்த நிறுவனத்தின் பக்கச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்குவது என்பதை அரசாங்கம் மிகவும் தயக்கத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

-தினக்குரல்(11.08.07).

  • தொடங்கியவர்

நாகரிகமற்ற பண்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜோன் ஹோல்ம்ஸ்: சிறிலங்கா பிரதமர்

[ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2007, 15:33 ஈழம்]

சிறிலங்கா குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரணங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் கருத்து தெரிவித்தமையானது அவரது நாகரிகமற்ற பண்பையே வெளிப்படுத்தியிருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹொரன நகரசபை சமுர்த்தி சங்கத்தின் 10 ஆம் ஆண்டு நிகழ்வில் நேற்று சனிக்கிழமை பங்கேற்ற ரட்ணசிறி விக்கிரமநாயக்க பேசியதாவது:

ஜோன் ஹோல்ம்சின் அறிக்கையானது நாகரிகமற்ற பண்பையே வெளிப்படுத்துவதாக உள்ளது. பல்வேறு தரப்பினரைச் சந்தித்த போது அவர் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது நாகரிகமற்ற தன்மையைத்தவிர வேறு எதனையும் வெளிப்படுத்தவில்லை. கருணா குழுவினரின் ஆயுதங்களைக் கைளய வேண்டும் என்கிறார் அவர்.

ஏன் பிரபாகரனை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. பயங்கரவாதம் எனில் பயங்கரவாதம்தான். அதே ஆயுதங்கள் எனில் ஆயுதங்களேதான் என்றார் ரட்ணநாயக்க.

இதனிடையே ஹோல்ம்சின் ரொய்ட்டர்ஸ் நேர்காணல் குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புனேவையும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் வாலெண்டைன் கட்ஜின்ஸ்கியையும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்தித்துப் பேசியுள்ளார். ஹோல்ம்ஸ் தெரிவிக்க விரும்பிய கருத்துகளை ஊடகவியலாளர்கள் கூட்டத்திலேயே தெரிவித்திருக்கலாம் என்று இச்சந்திப்பில் மகிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

-புதினம்.

  • தொடங்கியவர்

கருணாவின் ஆயுதங்களை களையுமாறு கோரும் ஹோம்ஸின் கண்களுக்கு பிரபாகரனை தெரியவில்லையா?

[12 - August - 2007]

உலக நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளை அரசு ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா தெரிவித்துள்ளார்.

ஹொரணையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

சர்வதேச சமூகம் நிபந்தனையின்றி நிவாரணம் வழங்க முன்வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளது. ஆனால், இவற்றை எமக்கு எவரும் நிபந்தனை விதித்து வழங்க வேண்டியதில்லை.

ஐ.நா. அதிகாரி ஜோன் ஹோம்ஸ் இலங்கையில் நிவாரண நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதாக ஊடக மாநாட்டில் கூறினார். ஆனால், பின்னர் மற்றுமொரு நிகழ்வில் வேறோன்றைக் கூறியுள்ளார்.

கருணா குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமெனவும் ஐ.நா. அதிகாரி கூறியுள்ளார். ஆனால், அவரின் கண்களுக்கு பிரபாகரனைத் தெரியவில்லை. அவர்கள் ஆயுதங்களை வைத்துக் கொண்டு ஏற்படுத்தும் அழிவுகள் அவருக்கு தெரியவில்லை.

புலிகளை நிராயுதபாணிகளாக்குமாறும் எந்தவொரு கருத்தையும் அவர் கூறவில்லை எந்நிலைப் பாடாகினும் அது ஒன்றாக இருக்க வேண்டும் பயங்கரவாதமென்றால் பயங்கரவாதம் ஆயுதமென்றால் ஆயுதம்.

ஆயுதங்களை பாவிக்கும் உரிமை அரசாங்கத்திற்கு மாத்திரமேயுண்டு ஏன் இவர்கள் இவ்வாறு பக்கச் சார்பாக செயற்பட வேண்டும் ?

இலங்கை சுயாதிபத்தியம் கொண்ட நாடு நாட்டின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையிடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

-தினக்குரல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.