Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய எதிர்பார்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய எதிர்பார்ப்பு

By VISHNU

16 SEP, 2022 | 01:58 PM
image

ஆர்.ராம்

இலங்கை, இந்திய மீனவர்கள் பரஸ்பரம் கடல் எல்லைகளை அத்துமீறுவதால் தொடரும் அவலங்களுக்கு தற்போது வரையில் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. குறிப்பாக, வடமாகாண மீனவர்களும், தமிழக மீனவர்களும் அத்துமீறல் விவகாரத்தின் பிரதான இரு பங்காளிகளாக உள்ளார்கள். 

RAM_09-18_01.jpg

இந்நிலையில் கடல் எல்லைகளை அத்துமீறும் மீனவர்கள் அந்தந்த நாடுகளின் கடற்படைகளால் கைது செய்யப்படுவதும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகிறது.

எனினும், அவர்கள் இலங்கை, இந்திய அரசுக்களுக்கு இடையிலான புரிந்துணர்வின்  காரணமாகவும், இராஜதந்திரத் தரப்பினரின் தலையீடுகள் காரணமாகவும் பரஸ்பரம் சொற்பநாட்களில் விடுவிக்கப்பட்டு தத்தமது தாயகத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படும் நடைமுறையொன்று பின்பற்றப்படுகின்றது. 

தற்போதைய நிலையில் அத்துமீறிய குற்றச்சாட்டில் 12 தமிழக மீனவர்கள் திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேநேரம், தமிழகத்தில் இலங்கையையோ அல்லது வடபகுதியைச் சேர்ந்த எவருமே தடுப்பில் இல்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இருநாட்டு மீனவர்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் விடுவிக்கப்பட்டாலும், அவர்களுடைய படகுகளும், ஏனைய மீன்பிடி உபகரணங்களும் மீளக்கையளிப்பதற்கான நடைமுறைகள் எதுவும் அண்மைய காலங்களில் முறையாக பின்பற்றப்பட்டிருக்கவில்லை. எல்லைகளைத் தாண்டும் குற்றச்சாட்டுக்களில் கைதாகும் மீனவர்களின் படகுகள் அந்தந்தப் பகுதி நீதிமன்றம், பொலிஸ் நிலையம் மற்றும் கடற்றொழில் நீரியல் திணைக்களம் ஆகியவற்றின் வளாகங்களிலேயே வைக்கப்பட்டுள்ளன. 

மேற்படி, பகுதிகளில் நீண்டகாலமாக படகுகள் வைக்கப்பட்டிருப்பதால், இயற்கையாகவே சேதமடைந்து போகின்றன. அதேநேரம், படகுகள் மீளளிக்கப்படாமையால் எல்லைதாண்டியமைக்காக கைது செய்யப்பட்டு மீண்டும் தாயகம் திரும்பும் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ள வழியின்றி நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர். 

இதேவேளை, இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைப்பதற்கு இருதரப்பு மீனவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், அரச தலைவர்கள் என்று அனைத்து மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதும் அதனால் பலனேதும் கிட்டவில்லை. 

மாறாக, தமிழக மீனவர்கள் உட்பட இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கடற்படையினருக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும் அனுமதி அளிக்கப்படுமளவிற்கே நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருந்தன.  அதுமட்டுமன்றி இழுவைப்படகுகள் உள்ளிட்ட சட்டவிரோதமான மீன்பிடி உபரகணங்களை பயன்படுத்துவதால் கடல்வளம் பறிபோகுவதாக வடமாகாண மீனவர்கள் தொடர்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டும் உள்ளனர்.

இந்நிலையில், இருநாட்டு மீனவர்களின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், நியாயமான கோரிக்கைளை புரிதலின் அடிப்படையில் அமுலாக்குதல் உள்ளிட்ட இலக்குகளை அடிப்படையாக கொண்டு சில திரைமறைவு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

கச்சதீவுப் பேச்சு

அதற்கான ஆரம்பம் கச்சதீவில் தான் நிகழ்ந்திருந்தது. கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற சந்திப்பே அதுவாகும். 

இந்தச்சந்திப்பில் பங்கேற்ற வடமாகாண பிரதிநிதிகளும், தமிழக மீனவப் பிரதிநிதிகளும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருந்தனர். மிக முக்கியமாக, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு மனிதாபிமான அடிப்படையில் விரைவில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றபோதும், கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்காமல் அரசுடமையாக்கப்பட்டு ஏலம் விடப்படுகின்றமை குறித்து கரிசனை வெளியிடப்பட்டது. 

குறிப்பாக, தமிழக மீனவர்கள், 2018இற்குப் பின்னரான காலத்தில் தமது படகுகள் மீளக் கையளிக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டிருந்தனர். அத்துடன் தமது படகுகளை ஏலம் விடும் செயற்பாட்டையும் மனிதாபிமான ரீதியில் கைவிடுமாறும் கோரியிருந்தார்கள். அந்தப்படகுகளை மீளக் கையளிப்பதற்காக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தனர். 

அத்துடன், தமிழகத்தில் உள்ள வடமாகாண மீனவர்கள் உள்ளிட்ட இலங்கை மீனவர்களின் படகுகளை மீள வழங்குவதற்கு தாம் மாநில, மத்திய அரசுகளை கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த விடயத்தில் இருநாட்டு மீனவர்களுக்கும் இடையில் புரிதலொன்று ஏற்பட்டதை அந்தப் புனித பூமியில் அன்று அவதானிக்க முடிந்திருந்தது. 

பின்னரான நாட்களில் அனைத்து விடயங்களும் கிடப்பில் போடப்பட்டிருப்பது போன்று தோற்றநிலைதான் காணப்பட்டது. இருப்பினும், படகுகளை மீளக் கையளிப்பது பற்றிய பல்வேறு பேச்சுக்கள் பல மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வழமையான ‘குணாம்ச ரீதியான அணுகுமுறையை’ இந்த விடயத்திலும் வெளிப்படுத்தியிருக்கின்றார் போலுள்ளது. தமிழக மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் படகுகளை விடுவிப்பது குறித்த நல்லெண்ண சமிக்கைஞையை வெளிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி இழுவைப்படகு பயன்பாட்டை நிறுத்தல்  மற்றும் அத்துமீறிய மீன்பிடியை தடுத்தல் ஆகியவற்றுக்கான மாற்றுவழிகளுக்குரிய நடவடிக்களை ‘கீரியும் பாம்புமாக’ இருக்கும் மாநில, மத்திய அரசுகள் விரைந்து முன்னெடுக்க ஆரம்பித்துள்ளமை ஒரு நல்ல சமிக்ஞையாகவே உள்ளது.  

செயற்பாடுகளும், கோரிக்கைகளும்

அதன்பலனாக, கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் தமிகழத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களின் படகுகள் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 35இலங்கைப்படகுகளில் 32படகுகள் தமிழகத்திலும், 2படகுகள் கேரளாவிலும் ஒருபடகு கர்நாடகாவிலும் காணப்படுகின்றன. அவற்றையும் மீளளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்திய மீனவர்களிடமிருந்து 2014முதல் 2018வரையில் பறிமுதல் செய்யப்பட்ட 65 படகுகள் காரைநகரிலும் 5 படகுகள் காங்கேசன்துறையிலும் கிளிநொச்சி கிராஞ்சியில் 24 படகுகளும் தலைமன்னாரில் 9 படகுகளும் கற்பிட்டியில் 2 படகுகளும் காணப்படுவதாகவும் அவற்றை கடந்த பெப்ரவரியில் ஏலம் விடுவதாகவும் கடற்றொழில் நீரியில் திணைக்களம் அறிவித்திருந்தது. பின்னர் அறிவிப்பைச் செயற்படுத்தியுமிருந்தது.

தொடர்ந்து 2019, 2020, 2021ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட படகுகளும் ஏலமிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு காரைநகரில் காணப்பட்ட 135 படகுகளில் 133 படகுகளும், காங்கேசன்துறையில் 5படகுகளும், 24 படகுகள் இருப்பதாக தெரிவித்த கிராஞ்சியில் 8படகுகளும் ஏலமிடப்பட்டன. மன்னரில் 9 படகுகள் இருப்பதாக கூறிய நிலையில் அங்கு ஒருபடகுகூட காணப்பட்டிருக்கவில்லை. இதனால், கைப்பற்றப்பட்ட படகுகளின் எண்ணிக்கைகள் மாறுபட்டதோடு, சில படகுகள் காணமலும் போயுள்ளன. ஆனால் அதற்கான உரியபதில் தற்போது வரையில் வழங்கப்படவில்லை. துலக்கப்படவில்லை. 

இந்நிலையில், 2018இற்குப் பின்னரான காலத்தில் விடுவிக்கப்படாதுள்ள தமது படகுகளை மீளக் கையளிக்குமாறு இராமேஸ்வரம் மீனவர்கள், காரைக்கால், நாகைப்பட்டணம் மீனவ பஞ்சாயத்துக்காரர்கள் உள்ளிட்டவர்கள் தற்போது கோரியுள்ளார்கள். இலங்கையில் உள்ள அவர்களின் 99படகுகளில் 80 இழுவைப் படகுகளாக இருக்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

நீலப்புரட்சி

அதேநேரம், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை தடுப்பதையும், தடைசெய்யப்பட்ட இழுவைப்படகுகளை பயன்படுத்தாது ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் முகமாகவும் பிரதமர் நரேந்திரமோடி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக ‘நீலப்புரட்சித்’ திட்டத்தினை ஆரம்பித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு மாநில அரசான தி.மு.கவும் பங்களிப்பைச் செய்கிறது.

இத்திட்டத்தின் கீழ் இரண்டாயிரம் படகுகளை முதற்கட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 800கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியினைப் பெறுவதற்கு நிபந்தனைகள் சில காணப்படுகின்றன.

அதில் இழுவைப்படகை வைத்திருக்கும் ஒருவர், தனது படகை முழுமையாக அழிக்க வேண்டும் அல்லது சென்னை, பாண்டிச்சேரி, கன்னியாக்குமாரி, விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது முக்கியமானது. 

அவ்வாறு செய்யும் பட்சத்தில் மீனவர் ஒருவருக்க தலா 80இலட்சம் ரூபா இந்திய மதிப்பிலான மீன்பிடிபடகுக்குரிய மனியம் வழங்கப்படவுள்ளது. குறித்த மானியத்தில் 50சதவீதத்தினை மத்திய அரசாங்கமும், 20சதவீதத்தினை மாநில அரசாங்கமும், 20சதவீதத்தினை குறைந்தவட்டியில் நிதி நிறுவனங்களும் வழங்கவுள்ளன. பயனாளி தனது பக்கத்திலிருந்து 10சதவீதத்தினை அதாவது 8இலட்சம் இந்திய ரூபாவையே முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த திட்டம் படிப்படியாக முன்னகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கையில், எதிர்வரும் காலத்தில் அத்துமீறல்கள் குறைவடைவதற்கே அதிகவாய்ப்புக்கள் உள்ளதாக தமிழக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப்புரிதலுடன் தமது படகுகளை மீளவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருகின்றார்கள். இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு இறுதி தீர்வு இருதரப்பினர்களிடையிலான புரிதல் மட்டுமே.

https://www.virakesari.lk/article/135767

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.