Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடக தேர்தல்: தமிழர்கள் அதிகமுள்ள KGF தொகுதியில் தமிழ் வேட்பாளர்கள் வெல்ல முடியாதது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்
 
படக்குறிப்பு,

கோலார் தங்க வயல் தொகுதியில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்தாலும் 2004க்குப் பிறகு இந்தத் தொகுதியில் தமிழர்கள் யாரும் வெல்ல முடியவில்லை.

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள கோலார் தங்க வயல் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் தமிழர் சட்டமன்ற உறுப்பினராக முடியுமா என்ற கேள்விக்கும் இந்த சட்டமன்றத் தேர்தல் விடையளிக்கவிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலேயே, மிகவும் வித்தியாசமான தொகுதி, கோலார் தங்க வயல் (கே.ஜி.எஃப்) தொகுதி. இது ஒரு சுரங்க நகரம் என்பதால் மற்ற பகுதிகளில் இருந்து மாறுபட்ட நிலப்பரப்பைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கும் தொகுதியாகவும் இருக்கிறது இந்த கேஜிஎஃப்.

பழமையான தங்கச் சுரங்கம், ஐந்து ரயில் நிலையங்கள், சினிமா படப்பிடிப்புகள் என வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் கேஜிஎஃப், நிஜத்தில் பல பிரச்சனைகளோடு தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

நீண்ட காலமாகவே இந்தப் பகுதியில் தங்கம் எடுக்கப்பட்டுவந்தாலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் நிறுவனம் இங்குள்ள சுரங்கங்களை வாங்கியது. 1956வரை அந்த நிறுவனமே சுரங்கங்களை நடத்திவந்த நிலையில், அந்த ஆண்டு இந்த சுரங்கங்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்குப் பிறகு பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிட்டட் (பிஜிஎம்எல்) இந்த சுரங்கங்களை நடத்த ஆரம்பித்தது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தச் சுரங்கத்தில் பணியாற்றுவதற்காக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் இருந்து ஆட்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் இங்கு குடியேறியதும் கேஜிஎஃப் நகரியம் உருவாக்கப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் இங்கு தங்கம் எடுப்பதற்கான செலவு அதிகரித்துக்கொண்டே வந்ததால், பிஜிஎம்எல்லின் கடன் அதிகரித்துக்கொண்டே போனது. இதையடுத்து 2001ஆம் ஆண்டில் இந்தச் சுரங்கங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அப்போது இந்தச் சுரங்கத்தில் அதிகாரபூர்வமாக சுமார் 3,100 பேர் பணியாற்றிவந்தனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்

சுரங்கம் மூடப்பட்ட பிறகு, சுரங்கத் தொழிலாளர்கள் மட்டுமல்லால் அதைச் சார்ந்திருந்த பிற தொழில்கள் மூடப்பட்டது, பணப் புழக்கம் குறைந்தது ஆகியவற்றால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இங்கிருந்து வெளியேறி பெங்களூர் மற்றும் பிற நகரங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். தற்போதும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தினமும் சுமார் 95 கி.மீ. பயணம் செய்து, பெங்களூர் வரை சென்று வேலை பார்த்துத் திரும்புகின்றனர்.

இந்தியாவிலேயே முதன் முதலில் மின்சாரம் பெற்ற வெகு சில பகுதிகளில் ஒன்றான கேஜிஎஃப் தற்போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறது. இருந்தபோதும் இங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் இரண்டு விஷயங்களையே முக்கியப் பிரச்சனைகளாக முன்வைக்கிறார்கள்.

"ஒன்று, வேலைவாய்ப்பின்மை. சுரங்கம் மூடப்பட்ட பிறகு இந்தப் பகுதியில் வேலை வாய்ப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி, வேலை வாய்ப்புகளை இங்கு உருவாக்க வேண்டும். அடுத்ததாக, சுரங்கத்தில் வேலைபார்த்த தொழிலாளர்கள் தாங்கள் வசித்த இடங்களில் வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளனர். அந்த இடத்தை அவர்கள் பெயருக்கே மாற்றித்தர வேண்டும். இது ஒரு நீண்ட காலக் கோரிக்கை" என்கிறார் கோலார் தங்க வயல் தமிழ் சங்கத்தின் தலைவரான கலையரசன்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்
 
படக்குறிப்பு,

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் எஸ். ராஜேந்திரன் இந்த முறை தமிழரான தனக்கு வெற்றி நிச்சயம் என்கிறார்.

கேஜிஎஃப் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, பாரம்பரியமாகவே பட்டியலின மக்களின் செல்வாக்கும் இடதுசாரி சிந்தனையின் ஆதிக்கமும் கொண்ட பகுதியாகத்தான் இருந்துவந்தது. தனித் தொகுதியான கே.ஜி.எஃப் தொகுதியில் அகில இந்திய பட்டியலின சம்மேளனம் இரண்டு முறையும் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா மூன்று முறையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ் நான்கு முறை வெற்றிபெற்றுள்ளது. அ.தி.மு.கவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதால், அக்கட்சி மூன்று முறை இங்கு வெற்றிபெற்றுள்ளது. பா.ஜ.க. இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளது.

2008ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசியக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தும் இந்தத் தொகுதியில் இந்த முறை பா.ஜ.கவின் சார்பில் அஸ்வினி சம்பங்கியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம். ரூபகலாவும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் ரமேஷ் பாபுவும் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் எஸ். ராஜேந்திரனும் போட்டியிடுகின்றனர். சி.பி.எம்., சி.பி.ஐ., ஆகியவையும் களத்தில் உள்ளன. இதில் கடும் போட்டி காங்கிரஸ் - பா.ஜ.க. - ஆர்.பி.ஐ. ஆகிய கட்சிகளிடையேதான் நிலவுகிறது.

ஏற்கனவே இரண்டு முறை ரிபப்ளிகன் பார்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ். ராஜேந்திரன் இந்த முறையும் களத்தில் இறங்கியிருக்கிறார். "தொகுதி மறுசீரமைப்பால் கடந்த சில தேர்தல்களில் என்னால் வெற்றிபெற முடியலவில்லை. எனக்குப் பின்னால் இந்தத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எதையும் செய்யவில்லை. நான் எவ்வளவோ இந்தத் தொகுதிக்குச் செய்திருக்கிறேன். அதனால், அதையெல்லாம் மக்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். இந்த முறை எனக்கு வெற்றி நிச்சயம்." என்கிறார் ராஜேந்திரன். பொது மக்கள் மத்தியில் அவர் பேசும் இயல்பான பேச்சுக்கு நல்ல வரவேற்பும் காணப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்
 
படக்குறிப்பு,

பெரும் வேலைவாய்ப்பை உருவாக்கப்போவதாகச் சொல்லி வாக்குகளைச் சேகரித்துவருகிறார் தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான எம். ரூபகலா.

2018ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபகலா வெற்றிபெற்றார். அவரது வெற்றியின் மூலம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தத் தொகுதியைக் கைப்பற்றியது காங்கிரஸ். இந்த முறையும் தானே வெற்றிபெறுவோம் என்று நம்புகிறார் அவர். தன்னுடைய முயற்சியால் விரைவில் தொழிற்சாலைகள் வரும் என்கிறார் அவர்.

"தங்க வயலில் மக்களுக்கு இருக்கும் வேலை இன்மை பிரச்சனை குறித்து அரசிடம் விளக்கியதால் BEML நிறுவனத்தின் வசமிருந்த 1,000 ஏக்கர் நிலம் புதிய நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் எங்களுடைய அரசுதான் வெல்லும் எனக் கருதுகிறேன். புதிய அரசு அமைந்த பிறகு அரசைச் சேர்ந்தவர்களை இங்கு அழைத்துவந்து, பார்க்கச் சொல்லி, தொழிற்சாலைகளை அமைத்து 50,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித்தர முடியுமென நினைக்கிறேன்" என்கிறார் அவர்.

பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஒய். சம்பங்கியின் மகள் அஸ்வினி சம்பங்கிதான் இந்த முறை அந்தக் கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கிறார். தான் எம்எல்ஏவாக இருந்தபோது செய்த சாதனைகளைச் சொல்லி தன் மகளுக்கு வாக்கு சேகரிக்கிறார் சம்பங்கி.

கோலார் தங்க வயல் தொகுதியில் உள்ள ஒரு கோவிலில், பட்டியலினத்தவருக்கு தேர் திருவிழா நடத்த ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. ஆனால், தேர் செய்யப்படாமலேயே இருந்ததால், அந்தத் திருவிழா நடத்தப்படவேயில்லை. சம்பங்கி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்தத் தேரைச் செய்துகொடுத்தார். அதனைத் தனது சாதனையின் முக்கிய அம்சமாக முன்வைத்து, மகளுக்காக வாக்கு சேகரிக்கிறார் சம்பங்கி.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்- கோலார்
 
படக்குறிப்பு,

பா.ஜ.கவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அஸ்வினி சம்பங்கி, தந்தையின் பணிகளை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்கிறார்

மதச்சார்பற்ற ஜனதா தளம் டாக்டர் ரமேஷ் பாபு என்பவரைக் களமிறக்கியிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜோதி பாசு போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தங்கராஜ் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் போட்டியிடுபவர்களில் எஸ். ராஜேந்திரன், ஜோதிபாசு, தங்கராஜ் ஆகிய மூன்றுபேரும் தமிழர்கள்.

2004ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர்கள் யாரும் இந்தத் தொகுதியில் இருந்து வெற்றிபெறவில்லை. கடந்த முறை போட்டியிட்ட 16 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். ஆனால், முதல் இரண்டு இடங்களை தமிழரல்லாதவர்களே பிடித்தனர். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

2001ல் கோலார் தங்க வயல் மூடப்பட்ட பிறகு, அந்த தொகுதியில் வசித்த தமிழர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி பெங்களூரிலும் அதைச் சுற்றிலும் குடியேற ஆரம்பித்தனர். இது அந்தத் தொகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. பிறகு, 2008ல் தொகுதி சீரமைப்பின்போது அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் பல அந்தத் தொகுதியோடு இணைக்கப்பட்டன. இதனால், தமிழரல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

மத்திய அரசின் 'பெமல்' நிறுவனம் துவங்கப்பட்டதும் அங்கு கன்னடம் பேசுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது. இது போன்ற காரணங்களால், காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் எதுவும் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் கவனம் செலுத்தவில்லை.

கே.ஜி.எஃப் தொகுதியைச் சுற்றிவந்தால், சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. சுவரோட்டிகளோ, வாக்குசேகரிக்கும் வாகனங்களோ கண்ணில் படவில்லை. ஆனால், தேர்தல் களம் மிக விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/ce407zye1j9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக அரசியலில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாதது ஏன்? அவர்களது பிரச்னைகள் என்ன?

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 8 மே 2023, 03:27 GMT

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழ் பேசக்கூடிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களும் தங்களைத் தமிழர்கள் என அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு என தனித்துவமான பிரச்சனைகள் உள்ளனவா?

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் கர்நாடகம்தான். இதற்கு அடுத்த நிலையில்தான் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வருகின்றன. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சுமார் 22 லட்சம் பேர் இங்கு தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இது 3.46 சதவீதம்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர், மைசூர், ஷிவமோகா, உடுப்பி, கோலார், பத்ராவதி, கொல்லேகால் பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

கர்நாடகத் தமிழர்களுக்கென பிரத்யேகமான பிரச்சனைகள் உள்ளனவா?

இந்தக் கேள்விக்கு பெரும்பாலான தமிழர்கள் 'இல்லை' என்றே பதிலளிக்க விரும்புகிறார்கள். தனியாக நிறுத்திக் கேட்டால்கூட, "அப்படி ஏதும் சொல்ற மாதிரி இல்லை. எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனைதான் நமக்கும்" என்கிறார்கள்.

சிலர், அரசுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் ஆசிரியர் பதவிகள் நிரப்பப்படாதது குறித்துப் பேசுகிறார்கள்.

"40 ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூரில் மட்டும் சுமார் 300 பள்ளிகளில் தமிழ் படிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இப்போது அது வெறும் 10 பள்ளிக்கூடங்களாகக் குறைந்துவிட்டது" என்கிறார் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான தாமோதரன்.

இது தவிர, வேறு எந்தப் பிரச்சனையையும் பிரத்யேகப் பிரச்சனைகளாக இங்கிருக்கும் தமிழர்கள் சொல்வதில்லை.

ஆனால், அரசியல் களத்தில் தங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்த வருத்தம் பலருக்கும் இருக்கிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று பிரதான கட்சிகளிலும் மாநில அளவில் அறியப்பட்ட தலைவர்களாக தமிழர்கள் யாரும் கிடையாது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்
 
படக்குறிப்பு,

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தமிழரை மட்டும் களமிறக்கியுள்ளது.

இத்தனைக்கும் பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளன. குறிப்பாக மத்திய பெங்களூர் மக்களவை தொகுதியில் உள்ள சுமார் 14 லட்சம் வாக்காளர்களில் சுமார் 5 லட்சம் வாக்காளர்கள் தமிழர்கள். அதேபோல, சிவாஜி நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 1.67 லட்சம் வாக்காளர்களில் 92 ஆயிரம் பேர் தமிழர்கள். புலிகேசி நகர், கோலாரில் உள்ள தங்கவயல் ஆகிய தொகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

இருந்தபோதும் 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு, எந்த சட்டமன்றத் தொகுதியிலும் தமிழர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குச் செல்லவில்லை. 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது கே.ஜி.எஃப் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் பக்தவத்சலமும் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சாரப்பில் ராஜேந்திரனும் பெங்களூரின் சி.வி ராமன் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சம்பத் ராஜும் போட்டியிட்டனர். ஆனால், இவர்களில் யாரும் வெற்றிபெறவில்லை.

இந்த முறை கே.ஜி.எப். தொகுதியில் ராஜேந்திரன் உள்ளிட்ட சில தமிழ் வேட்பாளர்களும் சி.வி. ராமன் நகர் தொகுதியில் காங்கிரசின் சார்பில் ஆனந்த் குமாரும் களத்தில் தமிழர்களாக இருக்கின்றனர். கடந்த முறை மூன்று பேரை நிறுத்திய அ.தி.மு.க. இந்த முறை போட்டியிடவில்லை.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் பெங்களூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், பிரதான அரசியல் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து தமிழர்களை வெற்றிபெறக்கூடிய தொகுதிகளில் நிறுத்த வேண்டும் எனக் கோருவது வழக்கம். இந்த முறையும் அதைச் செய்திருக்கிறார்கள். இருந்தபோதும், காங்கிரஸ் சார்பில் ஒருவர் நிறுத்தப்பட்டதைத் தவிர, வேறு ஏதும் நடக்கவில்லை.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்
 
படக்குறிப்பு,

2004ஆம் ஆண்டிற்குப் பிறகு கர்நாடக சட்டமன்றத்திற்கு தமிழர்கள் யாரும் தேர்வுசெய்யப்படவேயில்லை

1956ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து தி.மு.க. தொடர்ச்சியாக இங்கு வேட்பாளர்களை நிறுத்திவந்தது. 1970களில் தி.மு.க. உடைந்த பிறகு, அ.தி.மு.கவும் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இருந்தபோதும் கர்நாடக சட்டப்பேரவையில் தமிழர்கள் ஒருபோதும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்ததில்லை.

சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் காந்தி நகர் எம்.எல்.ஏவாக இருந்த முனியப்பாவும் கோலார் தங்கவயலைச் சேர்ந்த பெருமாளும் குறிப்பிடத்தக்கவர்கள். பெருமாள் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் இருந்தார். கோலார் தொகுதியிலிருந்து பக்தவத்சலம், ராஜேந்திரன் ஆகியோரும் தொடர்ந்து சில வெற்றிகளைப் பெற்றனர்.

ஆனால், காவிரி விவகாரம் பெரிதாக உருவெடுக்க ஆரம்பித்த பிறகு, தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது குறைய ஆரம்பித்து. 1991ல் நடந்த காவிரி தொடர்பான கலவரத்திற்குப் பிறகு மாநிலத்தின் பெரிய கட்சிகள் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்தன. அப்படியே நிறுத்தினாலும், அந்த வேட்பாளர்கள் தங்கள் தமிழ் அடையாளங்களைச் சொல்லி வாக்கு சேகரிப்பதில்லை. சட்டமன்றத்திலும் தங்களைத் தமிழர்களாக முன்னிறுத்தி கோரிக்கைகளை ஏழுப்புவதில்லை.

"இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மொழிவாரி சிறுபான்மையினர் சிறிய சதவீதத்தில் இருந்தால்கூட மதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மொழிவாரி சிறுபான்மையினர் பெரும் எண்ணிக்கையில் சட்டமன்றத்திற்கும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தில் சுமார் 50 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் நிலையில் தமிழ் பேசும் மக்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் தமிழர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இரண்டு தேசியக் கட்சிகளும் தமிழர்களைக் கணக்கிலேயே கொள்வதில்லை" என்கிறார் கர்நாடக தமிழ் குடும்ப கூட்டமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார்.

ஆனால், தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவதில்லையே எனக் கேள்வியெழுப்பினால், அவர்கள் வெற்றிபெறும் தொகுதிகளில் நிறுத்தப்படுவதில்லை என்கிறார் செந்தில்குமார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்
 
படக்குறிப்பு,

கர்நாடக சட்டப்பேரவை

"சரியான தொகுதியைக் கொடுக்காமல், ஏதோ ஒரு தொகுதியில் நிறுத்தினால் எப்படி வெற்றிபெற முடியும்? ஜெயிக்கக்கூடிய தொகுதியில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியும், தாங்கள் நிச்சயமாக வெல்வோம் எனக் கருதக்கூடிய தொகுதியில் தமிழர்களை வேட்பாளர்களாக ஆக்குவதே கிடையாது. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக எந்தத் தொகுதியிலும் தமிழர்கள் எம்.எல்.ஏக்கள் ஆவதே கிடையாது" என்கிறார் அவர்.

பிரதான அரசியல் கட்சிகள் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை என்று கூறினாலும், கர்நாடக அரசியலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில், தமிழர்களுக்கு பெரிதாக அரசியல் ஈடுபாடு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சி. ராஜன்.

"இன்றைய சூழலில் கர்நாடக அரசியலில் தமிழர்களின் பங்களிப்பு என்பது சுத்தமாக இல்லாமல் போயிருக்கிறது. சட்டமன்றத்திலோ, மாநகராட்சியிலோ அவர்கள் உறுப்பினராக இல்லை. எந்த அரசியல் கட்சியிலும் பெரிய ஆளுமையாகவோ, தலைவர்களாகவோ இல்லை. கடந்த காலத்தில் அண்ணாவைப் போல பேசக்கூடிய அல்போன்ஸ் போன்ற ஆளுமைகள் இருந்தார்கள். அப்படி இப்போது யாரும் இல்லை. கீழ்மட்டத்தில் கொடி பிடிக்கும் தொண்டர்களாக ஏதோ சிலர் இருக்கிறார்கள். இதுதான் கர்நாடகத்தில் தமிழர்களின் அரசியல் நிலைமை" எனக் குறிப்பிடுகிறார் ராஜன்.

மேலும், பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிரண்டு பேருக்குத்தான் வாய்ப்பளிக்கின்றன என்பதால், அவர்கள் வெற்றிபெற்றுவந்தால்கூட சட்டமன்றத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் ராஜன் சுட்டிக்காட்டுகிறார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்
 
படக்குறிப்பு,

கோலார் தங்க வயல் தொகுதியில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்தாலும் 2004க்குப் பிறகு இந்தத் தொகுதியில் தமிழர்கள் யாரும் வெல்ல முடியவில்லை.

"1982ல் பள்ளிக்கூடங்களில் முதன்மை மொழியாக எதனை வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக வெளிவந்த கோகக் அறிக்கைக்குப் (Gokak Report) பிறகு கன்னட மொழிக்கு முதலிடம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழ்க் குழந்தைகள் தமிழைக் கற்கும் வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. மாநில அரசுதான் சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழியைக் கற்பதற்கு உதவ வேண்டும்" என்கிறார் அவர்.

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் மீறி பிரதான கட்சிகள் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தினாலும், அவர்கள் தமிழர்களாக தங்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பதில்லை. தொலைக்காட்சிகளுக்கு தமிழில் பேட்டியளிக்கவே அவர்கள் தயங்குகின்றனர். தற்போது சி.வி. ராமன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஆனந்த் குமார் தமிழர் என்றாலும் தமிழில் ஊடகங்களிடம் பேசத் தயங்குகிறார்.

அவர் சார்பில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் இளைஞர் காங்கிரசின் முன்னாள் நிர்வாகியுமான முருகன் முனிரத்னம், "நாங்கள் இங்கே மொழியின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ வாக்கு கேட்க மாட்டோம். வளர்ச்சி அடிப்படையில்தான் கேட்போமே தவிர, தமிழுக்கு ஓட்டுப் போடுங்கன்னு 'அஜெண்டா' வச்சு கேட்கமாட்டோம்" என்கிறார்.

தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக எந்த பலமும் இல்லை என்பதை சமீபத்தில் ஷிமோகாவில் நடந்த சம்பவத்தில் இருந்தே புரிந்துகொள்ளலாம் என்கிறார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான தாமோதரன். "தமிழர்களின் வாக்குகளை சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட பா.ஜ.கவின் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டது. சூழல் இப்படியிருக்கும்போது என்ன செய்வது?" என்கிறார் அவர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்

மதச் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு மொழிச் சிறுபான்மையினரான தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை என்கிறார் தாமோதரன். "தமிழர்களால் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு கவுன்சிலர்களாக முடியும். அதைத் தாண்டி பெரிதாக எதுவும் செய்ய முடிவதில்லை" என்கிறார் அவர்.

ஒரு தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பதற்காக அந்தத் தொகுதியில் தமிழர்களை அரசியல் கட்சிகள் நிறுத்தினால், அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதற்கு சிறந்த உதாரணம், கேலார் தங்கவயல் தொகுதி. சுமார் 80 சதவீத வாக்காளர்கள் தமிழர்களாக இருக்கும் இந்தத் தொகுதியில், தமிழர்கள் போட்டியிட்டும் கடந்த மூன்று தடவைகளாக தமிழரல்லாதவர்களே வெற்றிபெற்று வருகின்றனர்.

ஒரு தொகுதியில் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள், அந்தத் தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்பாளராகப் போட்டியிட்டால், அவர் தமிழர் என்பதற்காக ஒட்டுமொத்தமாக திரண்டு அவருக்கே வாக்களிப்பதில்லை. தமிழர்கள் பெரும்பாலும் கட்சி அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள் என்பதும், அரசியல் கட்சிகளின் இந்தப் போக்கிற்கு ஒரு காரணமாக அமைகிறது. "பெங்களூரில் உள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் 14 தொகுதிகளில் தமிழர்கள்தான் முடிவெடுக்கும் சக்தியாக இருக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் கட்சி சார்ந்தே வாக்களிக்கிறார்கள். இதனால், அரசியல் கட்சிகள் தமிழர்களை நிறுத்துவது குறித்து அலட்டிக்கொள்வதில்லை" என்று சுட்டிக்காட்டுகிறார் தாமோதரன்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்
 
படக்குறிப்பு,

பெங்களூர் தமிழ்ச் சங்கம், பெங்களூர் நகருக்குள் போட்டியிடுபவர்களில் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்று குறிப்பிட்டு சிலரை அடையாளம் காட்டியிருக்கிருக்கிறது.

இந்த முறை பெங்களூர் தமிழ்ச் சங்கம், பெங்களூர் நகருக்குள் போட்டியிடுபவர்களில் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்று குறிப்பிட்டு சிலரை அடையாளம் காட்டியிருக்கிருக்கிறது. குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்த தமிழர்கள், இவர்களுக்கே வாக்களிக்க வேண்டுமெனவும் கூறியிருக்கிறது.

கவுன்சிலரான தன்ராஜ் என்பவரை சிக்பேட்டை தொகுதியில் நிறுத்த வேண்டுமென பா.ஜ.கவிடம் கோரிக்கை விடுத்தது தமிழ்ச் சங்கம். ஆனால், அது நடக்கவில்லை. மேலும், பெங்களூர் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள சிவாஜி நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ரிஷ்வான் அர்ஸத், திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் பூங்காவை மேம்படுத்த தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 2 கோடி ரூபாயை செலவழித்து பணிகளைத் துவங்கியிருந்தார்.

ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.கவினர் அதற்கு தடை உத்தரவு வாங்கியதோடு கட்டிய சில பகுதிகளையும் இடித்துவிட்டதாக தமிழ்ச் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், இந்த முறை ரிஷ்வானுக்கே ஆதரவளிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் அங்குள்ள கன்னட சமூகத்தோடு ஒருங்கிணைந்து வாழவே விரும்புவதால், அரசியல் பிரதிநிதித்துவம் குறித்துப் பெரிதாக பேச விரும்புவதும் இல்லை.

மற்றொரு பக்கம், கன்னட மொழி உணர்வை அடிப்படையாக வைத்து தேர்தலைச் சந்திக்கும் கன்னட சலுவாலி வடால் பக்ஷவின் தலைவரான வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியையே சந்தித்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ், சுமார் 6,000 வாக்குகளையே பெற்று படுதோல்வியடைய நேரிட்டது.

https://www.bbc.com/tamil/articles/cd1rm4v62ydo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.