Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பிள்ளை நிலா"

ஒரு முன்னிரவு அன்று, வெள்ளி நிலவின் ஒளியின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், சுந்தர் மற்றும் மீனாட்சி இருவரினதும் திருமணம், அவர்களது குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் திருமணம் ஆராவாரத்துடன் கொண்டாடப்பட்டாலும், மணமக்கள் இருவரிடமும் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. பொறியியலாளரான சுந்தர், விருப்பு வெறுப்பற்ற, அமைதியான இயல்புடன், சிந்தனைகள் அல்லது ஆசைகளை விட, உண்மையான உலக நடைமுறைகளில் அதிக அக்கறை கொண்டவரும் எதையும் துல்லியமாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவருமாவார். அதே வேளை, உணர்ச்சிமிக்க கலைஞரான மீனாட்சி, உணர்ச்சிகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டவள். அவர்களது கருத்து வேறுபாடுகள் அடிக்கடி, அவர்களுக்கிடையில் உராய்வுக்கு வழிவகுத்தன. அவர்களது வீட்டில் சிரிப்பை விட கருத்து வேறுபாடுகள் தான் பெரிதாக எதிரொலித்தன.

மீனாட்சியின் ஓவிய வண்ணங்கள் மற்றும் கவிதைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ள சுந்தரால் முடியவில்லை. அவன் அதை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் வேண்டா வெறுப்புடன் இருந்தான். மீனாட்சி, அதேவேளை, அவனது கடுமையான நேரம் தவறாத திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் மற்றும் வேலை ஒழுக்கங்களில் கண்டிப்பான கடைப்பிடிப்பு அவளை மூச்சுத் திணற வைத்தது. ஒவ்வொருவரும் தங்களிடம் இல்லாதவற்றை மற்றவரில் பார்ப்பது, அவர்களுக்குள், முரண்பாட்டை அதிகரித்துக்கொண்டே இருந்தது. மேலும் மனக்கசப்புகள் களைகளைப்போல அவர்களின் வாழ்க்கை என்ற தோட்டத்தில் வளர்ந்தன. அவர்களின் இதயங்கள் தவறான புரிதலால் தடுமாறின, தாக்கப்பட்டன.

அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களுக்கிடையில் ஒரு உடன்பாடு அல்லது நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்காக ஒரு நடுவராக இருந்து இணக்குவிக்க முயன்று, ஆலோசனைகளையும் ஆறுதலையும் வழங்கினர். ஆனால் தம்பதியரின் வேறுபாடுகள் தீர்க்க முடியாததாகத் தோன்றியது. சுந்தர் தன் வேலையில் முழுதாகத் தன்னைப் புதைத்துக்கொண்டான். மீனாட்சி மணிக்கணக்கில் ஓவியம் வரைந்தாள். புயல் நிறைந்த வானம் மற்றும் கொந்தளிப்பான கடல்கள் நிறைந்த ஓவியங்கள் மீது தனது எண்ணக்குலைவுகளை அல்லது விரக்திகளை ஊற்றினாள்.

"பிள்ளை நிலா என்றும் வெள்ளை நிலா

அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே

மண்மேலே துள்ளும் மான்போலே"

என்றாலும் சில ஆண்டுகள், வாழ்க்கை குழப்பத்தில் கழிந்த பின், விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது போல, மீனாட்சிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் இருவரும் அந்த மழலைக்கு நிலவன் என்று ஒற்றுமையாகப் பெயரிட்டனர், அதாவது "நிலாவைப் போன்ற அழகும் ஒளிரும் கொண்டவன்" என்று! அவன் புதிதாகப் பிறந்த குழந்தையாக இருந்தாலும் அவன் அமைதியான இயல்புடையவனாக, ஒரு புத்திசாலிப் பிள்ளையாக இருந்தான். அதுமட்டும் அல்ல, நிலவனின் வருகை, முதன்முறையாக சுந்தரையும் மீனாட்சியையும் தங்கள் தங்களின் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைக்க வழிவகுத்துக், குழந்தை மீதான கவர்ச்சியாலும் அன்பாலும் ஒன்றுபட வைத்தது.

நிலவன் வளர வளர அவனுடைய வசீகரம் எல்லோருக்கும் தெரிந்தது. அவனது தந்தையின் கூர்மையான கண்களும், தாயின் வெளிப்படையான புன்னகையும் அவனிடம் இருந்தது. அவனது சிரிப்பு இதயங்களை மென்மையாக்கும் ஒரு மெல்லிசையாக இருந்தது. மேலும் அவனது விளையாட்டுத்தனமான குறும்புச் செயல்கள் ஒரு காலத்தில் அமைதியாக இருந்த அவர்களின் வீட்டை மகிழ்ச்சியின் புகலிடமாக மாற்றியது. அவன் ஒரு குழந்தை மட்டுமல்ல, இரண்டு இதயங்களுக்கும் இடையே ஒரு பாலமாகவும் இருந்தான்.

அவன் உண்மையில் ஒரு 'பிள்ளை நிலா'. அவர்கள் இருவரின் இருண்ட காலத்திற்குப் பிறகு, பிள்ளை நிலாவாகப் பிறந்து, வாழ்க்கைக்கு ஒளியேற்றி, அதன் ஒளிர்வைத் தன் வளர்ச்சியுடன் அதிகரிக்கத் தொடங்கி, அதனால் தன் பெற்றோர் இருவரினதும் இதயத்தில் காதல் தீபத்தை ஏற்றி வைத்தான்.

நிலவனின் குரலாலும் உடல் மொழியாலும் துடுக்குத்தனத்தையும் குறும்புத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பார்த்த சுந்தர் தன் மகனின் கண்களால் உலகைப் பார்க்க ஆரம்பித்தான். மீனாட்சியின் ஓவியங்களில் இப்போது அவன் மகிழ்ச்சியைக் கண்டான் அவளின் ஓவியமும் இப்போது பெரும்பாலும் ஒரு ஒளிரும் நிலவு அல்லது விளையாட்டுத்தனமான குழந்தையைச் சித்தரிக்கத் தொடங்கியது, மேலும் மேலும் சுந்தரை அதன் பக்கம் இழுத்தது. மீனாட்சி, சுந்தரின் அர்ப்பணிப்பையும், அவர்களது குடும்பத்திற்கு அவன் அளிக்கும் அளவுகடந்த பாதுகாப்பையும் ஆதரவையும் பாராட்டிடத் தொடங்கினாள். நிலவனின் இருப்பு அவர்களின் வேறுபாடுகளிலும் ஒரு அழகை ஒளிரச்செய்தது.

பெற்றோர் இருவரும் தங்கள் மகிழ்வையும் சவால்களையும் கடந்து செல்லும்போது அவர்களது பிணைப்பு மேலும் மேலும் ஆழமடைந்தது. இரவு நேர உணவுகள் பகிரப்பட்ட புன்னகையின் தருணங்களாக மாறியது. மேலும் அவர்களின் உரையாடல்கள் நிலவனின் எதிர்காலத்திற்கான கனவுகளாக மாறியது. அவர்களுக்கிடையில் முன்பு குடிகொண்டிருந்த, ஒருவரின் மேல் ஒருவர் பழி தூற்றுதல் அற்றுப்போய், அவர்கள் ஒருவரையொருவர் காதலர்களாக நெருங்கி வரத் தொடங்கினர். சுந்தர், மீனாட்சியைக் கடற்கரை உலா மற்றும் நிலவொளி இரவு உணவென வியப்படையச் செய்தான். அதே நேரத்தில் அவளும் அவர்களின் சிறிய குடும்பத்தின் உருவப்படத்தை வரைந்தாள். சிறிய குடும்பத்தின் உருவப்படத்தை வரைந்து அதில்;

"மழலையின் மொழி கேட்டு

நாம் பேசும் மொழி மறந்தோம்

மழலையின் மொழி பேசி

நாமும் காதல் குழந்தையானோம்!"

"மழலையின் குறும்பு கண்டு

வேறுபாடு ஓடி மறைந்தன

மழலையின் புன்னகை பார்த்து

இருவரும் இணைந்து மகிழ்ந்தோம்!"

"குழவி தளர்நடை கண்டு

நாமும் குதூகலித்து கட்டிஅணைத்தோம்

குழவியின் கொஞ்சிக் குலாவுதலில்

நாமும் இன்பத்தின் உச்சியடைந்தோம்!"

என்ற கவிதை ஒன்றையும் எழுதிச் சுந்தருக்குக் காட்டி மகிழ்ந்தாள். நிபந்தனையற்ற மழலை அன்பிற்கு அப்படம் சான்றாக வீட்டுச் சுவரை அலங்கரித்தது.

ஆண்டுகள் கடந்தன, நிலவன், அவர்களின் பிள்ளை நிலாவாக, அவர்களின் மகிழ்ச்சியின் இதயமாகத் தொடர்ந்தான். அவனது குறும்புகளும் எல்லையற்ற ஆர்வமும் அவர்களையும் நெருக்கமாக்கியது. அவர்களின் வீட்டை அன்பின் சரணாலயமாக மாற்றியது. சுந்தரும் மீனாட்சியும் பிரிக்க முடியாதவர்களானார்கள். அவர்களின் காதல் கதை, அவர்களை முதலில் ஒன்றாகக் கொண்டுவந்த சிறு கைகளால், மீண்டும் எழுதப்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அடிக்கடி அவர்களின் மாற்றத்தைக் கண்டு வியந்தனர். ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்ட சுந்தர், இப்போது விண்மீன்களின் கீழ் மீனாட்சிக்கு கவிதைகள் வாசித்தான். முன்பு ஒருமுறை கோபத்தால் தீப்பிடித்த மீனாட்சி, சுந்தரின் நிலையான அன்பினில் ஆறுதல் கண்டாள். தங்களுடைய ஆரம்பப் போராட்டத்தின் இருளைப் போக்கிய நிலாவைப் போன்ற தங்கள் குழந்தை நிலவனே, தங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம். அவனே தங்களை ஒன்றாக ஒட்டி வைத்திருக்கும் பசையாக இருந்திருக்கிறான் என்பதை உணர்ந்து, சுந்தரும் மீனாட்சியும் உள்ளமுருகினர்.

அவர்களின் பொழுதுபோக்குகளாக, யாழ்ப்பாணத்து கடற்கரைகளிலும் பூந்தோட்டங்களிலும் நிலவின் கீழ், நிலவனுடன் அடிக்கடி அமர்ந்து, தங்கள் நிலவு போன்ற குழந்தை, தங்கள் உலகத்தை ஒளி மற்றும் மகிழ்ச்சியின் புகலிடமாக மாற்றிய கதையை, மீண்டும் மீண்டும் மீட்டு மகிழ்ந்தார்கள்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.