Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் விடயங்கள் பொதிந்த சரத் பொன்சேகாவின் இராஜனமா கடிதம்

Featured Replies

பொன்சேகாவின் இராஜனமா கடிதமானது இலங்கை இராணுவ வரலாற்றில் மிக நீண்ட இரஜனமா கடிதமாக பார்க்கப்படுகின்றது மட்டுமன்றி வழமைக்கு மாறாக அந்த கடிதம் பகிரங்கமாகவும் ஊடகங்களுக்கு விடப்படுகின்றது. இதற்கு காரணம் இந்த கடிதத்தில் பொதிந்துள்ள அரசியல் உட்கிடக்கைகள் எனலாம். சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் மழுப்பலாக செவ்வி வழங்கினாலும் அவரது அரசியல் எதிர்காலத்தினையும் திட்டத்தினையும் வைத்தே கடிதம் எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது அந்த கடிதத்தில் குறிப்பிட்ட காரணங்களில் முக்கியமாக இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய கரிசனையே தற்போதைக்கு முக்கியமாக பார்க்கப்படவேண்டியுள்ளது.

அதாவது நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக படையினரின் மிகப்பெரிய தியாகத்தால் பெறப்பட்ட வெற்றி இன்று, அரசின் ஆற்றலற்ற போக்கினால் நாட்டுமக்களுக்கு எதையும் வழங்காத நிலையை ஏற்படுத்தியுள்ளது. போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் துன்பப்படும் மக்களது விடயத்தில் அரசிடம் முறையான திட்டமில்லை. அவர்களை அவர்களது உறவினர்களது வீடுகளிலாவது தங்க அனுமதிக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. இந்த காரணமே எல்லோரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த கருத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு இராணுவம் சரத் பொன்சேகா தலைமையில் செய்த அனைத்து கொடுமைகளையும் கழுவி துடைத்து அதன் மூலம் தமிழ் மக்களிடம் இருந்து தனக்கான வாக்குகளை பெறுவதற்காகவே இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்துலக ரீதியாகவும் தான் மனிதாபிமானமுள்ள மனிதன் என்பதனை காப்பாற்றவும் போர் புலிகளுக்கு எதிரானது என்றும் ஆனால் அப்பாவி மக்களுக்கு எதிரானது அல்ல எனவும் காட்ட முற்படுவதாகவும் பொன்சேகாவின் கடிதம் அமைந்துள்ளது.

அடுத்ததாக அனைத்துலகம் கூறும் கருத்தான தமிழ் மக்களை வெல்வதற்கான அரசியல் தீர்வு என்ற அதே கருத்தினை உள்வாங்கி அவரது 15 வது காரணம் அமைந்துள்ளது. அதாவது ” எனது தலைமையின் கீழ் எமது படைகள் இராணுவ வெற்றியை பெற்றுத்தந்துள்ளன. இதன் மூலம் தமிழ்மக்களது மனங்களை வெல்லும்வகையில் நாட்டில் அமைதியை ஏற்படுத்தாவிட்டால், இந்த வெற்றி உதாசீனப்படுத்தப்பட்டு, எதிர் காலத்தில் மீண்டும் கிளர்ச்சிக்கு முகம் கொடுக்க நாடு தள்ளப்படும்.”

இந்த கருத்து அமெரிக்காவின் ஆசிய விவகாரங்களுக்கான அதிகாரி ரொபேட் பிளேக் அவரது கருத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் அவர்களது கருத்தும் ஆக இருந்து வந்துள்ளது. இதனையே பொன்சேகாவும் உள்வாங்கி இருக்கின்றார்.

அடுத்ததாக “போரின் முடிவில் இந்த நாட்டில் அமைதி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டுமக்கள் உள்ளனர். ஆனால், லஞ்சமும் ஊழலும் அதிகரித்து ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறை மிதமிஞ்சி ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இதனால், தாய்நாட்டுக்காக எமது படையினர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் நிச்சயம் துஷ்பிரயோகமாகப் போகின்றன.”என்ற கருத்து மனித உரிமைகள் அமைப்புக்களின் குற்ற சாட்டுக்களுக்கு ஆமோதித்து அதற்கு மஹிந்த அரசே காரணம் என சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

ஆகவே சரத் பொன்சேகாவின் இந்த இராஜனமா கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கு எதிரான தனது இரத்த கறை படிந்த கரங்களிற்கு வெள்ளை கையுறை போட்டு தமிழ் மக்களுக்கே கையசைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்கும் அதே நேரம் அனைத்துலக நாடுகள், மனித உரிமைகள் அமைப்பின் குற்ற சாட்டுக்களை மற்றவர்கள் மீது போட்டுவிட்டு தான் நல்ல பிள்ளை பாத்திரம் எடுக்க முனைவதாகவும் தெட்ட தெளிவாக காட்டுகின்றது.

அடுத்ததாக இராணுவத்தினரிற்காக பேசுவது போலவும், தனக்கு துரோகம் இழைக்க பட்டதாக கூறி சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவது. மஹிந்த குடும்பத்திற்கு சேறு பூசுவது ஆகிய நடவைக்கைகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது.

இந்த கடிதம் குறிப்பாக அவரது ஜனாதிபதி தேர்தலினை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது என்பது புலனாகின்றது அத்துடன் அமெரிக்கா உட்பட வெளியுலகம் மற்றும் எதிரணிகளின் ஆலோசனைக்கு அமைவாகவே இது தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் தெரிகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் இந்த மாயைக்குள் சிக்கு படாமல் இருப்பதே நல்லது அதே நேரம் சிங்களம் தமக்கிடையே முட்டி மோதுவதனை ஊக்குவித்து உதவுதல் என்பது தமிழர்களின் இராஜதந்திரமாக தற்போதைக்கு இருப்பதும் நல்லது. இலங்கை அரசியலில் மேற்குலகம் தனது நாடகத்தை அரங்கேற்ற தொடங்கியுள்ளது. முடியுமாயின் மஹிந்தவினை அகற்றி ரணிலை கொண்டுவருவது என்ற அடிப்படையில் மும்முரமாக வேலை செய்கின்றது. இந்த திட்டத்திற்கு தமிழர்களின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. இந்த நேரத்தில் தமிழர் தரப்பு சிந்தித்து செயற்படவேண்டும்.

-----------------------------------

சரத் பொன்சேகாவின் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள 16 காரணங்களும் வருமாறு

இணைக்கப்படுகின்றது

1. விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுற்ற பின்னர் அரசுக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடவுள்ளது என உங்களிடம் தெரிவிக்கப்பட்ட ஆதாரமற்ற கதைகளை நம்பி, என்னை இராணுவத்தளபதி பதவியிலிருந்து நீக்கினீர்கள். சிறிலங்கா இராணுவத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னர் நான் இராணுவத்தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டமை எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்துள்ளது.

2. யாழ்.மாவட்ட தளபதியாக மூன்று வருடங்கள் பணியாற்றிய திறமை வாய்ந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறியை அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு நான் பிரேரித்தும்கூட, அந்தப் பிரேரணை நிராகரிக்கப்பட்டு, படைக்கட்டமைப்பில் எனது உத்தரவுக்கு மரியாதை அற்ற சூழ்நிலையைத் தாங்கள் ஏற்படுத்தினீர்கள்.

3. படைகளின் பிரதானி என்ற பாரிய பொறுப்பு வாய்ந்த பதவியை எனக்கு வழங்கியமை போன்று மக்கள் ஏமாற்றப் பட்டார்களே தவிர, அந்தப் பதவியில் எந்த அதிகாரமும் எனக்குத் தரப்படவில்லை. போர் முடிவுற்ற இரண்டு வாரங்களிலேயே இந்தப் பதவியை என்னிடம் திணிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலர் என்னை இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் தந்தார்.

அதிகாரம் உள்ள பதவியைத்தர என் மீது நம்பிக்கை இல்லை

4. மேற்படி பதவி, எனக்கு முன்னர் இருந்த அதிகாரங்களை விட அதிகமான அதிகாரங்களை வழங்கும் என்று கூறி புதிய பதவிக்கான நியமனக்கடிதம் தரப்பட்டு அதில் எனது அதிகாரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், பதவி எனக்குத் தரப்பட்ட பின்னர், அது தனியே படைகளின் பொறுப்புக்களை ஒழுங்கு செய்யும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அதிகாரங்களை உடைய பதவியைத் தருவதற்கு உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கவில்லை. அது எனக்குப் பாரிய மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது.

5. தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்ட மொன்றில் எல்லா படைத்தளபதிகளுக்கும் முன்னால், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் பேசுகையில் " எல்லா அதிகாரங்களையும் படைகளின் பிரதானி என்ற பதவிக்கு வழங்குவது ஆபத்தானது'' என்று கூறியமை, என்னை எல்லாப் படைத்தளபதிகளுக்கும் முன்னால் வைத்து அவமதித்தமை போல அமைந்தது.

6. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது தேசியப் பாதுகாப்புச்சபை கூட்டத்தில் நீங்கள் பேசுகையில் இராணுவத்திற்கு இனி ஆள்சேர்ப்பு அவசியமில்லை என்று குறிப்பிட்டு " நாடு சக்தி வாய்ந்த இராணுவத்தின் பிடியில் உள்ளது என்று மக்கள் எண்ணுகிறார்கள்'' என்று ஒரு வார்த்தை கூறினீர்கள். இந்த விடயத்தை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. பல்லாயிரக்கணக்கான படையினரின் உயிரை காணிக்கையாக்கி மிகப்பெரிய இராணுவ வெற்றி ஒன்றை ஈட்டித்தந்த படையினரின் மீது நம்பிக்கையில்லாமல், நீங்கள் பேசிய இந்த விடயத்தை மிகவும் அருவருக்கத்தக்கதாகவே நான் உணர்ந்தேன்.

7. தற்போது இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ளவர், எனது மனைவி பணிபுரியும் இராணுவ அமைப்பில் வேலை செய்யும் கனிஷ்ட இராணுவ உத்தியோகத்தர்கள் முதல் போரின்போது முக்கிய பங்காற்றிய முக்கிய தளபதிகள்வரை அனைவரையும் தனது இஷ்டத்துக்கேற்ப இடமாற்றம் செய்துவருகிறார். அதனை தடுத்து நிறுத்தமுடியாத அதிகாரமற்றவராக என்னைக் காண்பிப்பதாகவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

ஆட்சி கவிழ்ப்புக்கு திட்டம் எனக் கூறி இந்தியாவிடம் உதவி கோரியதுஏன்?

8. இந்த மனவேதனைகள் ஒருபுறமிருக்க, நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த இராணுவத்தினரே ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு திட்டமிடுகிறார்கள் என்ற ஒரு வதந்தியை நம்பி, கடந்த ஒக்ரோபர் 15 ஆம் திகதி இந்திய அரசிடம் உதவிகோரிச் சென்று, அந்நாட்டு அரச படைகளும் இங்கு வந்து ஆட்சிக்கவிழ்ப்பிலிருந்து அரசைப் பாதுகாக்கத் தயாராகியிருந்தன எனத்தெரிவிக்கப்பட்டது. இது எமது இராணுவத்தினரின் நன்மதிப்பையும் அவர்களது தொழில் பக்தியையும் அவமதிக்கும் செயலாகும்.

9. என்னால் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட படையணி என்ற காரணத்திற்காக இராணுவத்தின் சிங்க ரெஜிமெண்ட் அணி பாதுகாப்பு அமைச்சுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இந்தப் பணியிலிருந்த சிங்க ரெஜிமெண்ட் அணியினரின் பணிகள் நான் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தவேளை எனக்குத் தெரியாமல் மாற்றப்பட்டிருக்கின்றன. இது என் மீதும் படையினர் மீதும் உள்ள நம்பிக்கையீனத்தையே காண்பிக்கிறது.

10. சிங்க ரெஜிமெண்ட் படையணி நீக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்புக்கு கஜபாகு படையணி வரவழைக்கப்பட்டுள்ளமை, இராணுவத்தின் படையணிகளுக்கு மத்தியில் விசுவாச ஏற்றத்தாழ்வு உண்டு என்று காண்பிப்பது போன்ற நடவடிக்கையாகும்.

11. நாட்டின் பெருவெற்றிக்கு நான் இவ்வளவு பெரிய பங்களிப்பை நல்கியிருந்தும் கூட, நான் ஒரு துரோகி என்று செய்தியாகவும் வதந்தியாகவும் அரசின் பக்கமுள்ள அரசியல்வாதிகளும் மற்றும் பலரும் கதைகளைப் பரப்பிவருகின்றனர்.

12. நான் அண்மையில் வெளிநாடு சென்றிருந்த காலப்பகுதியில் ஏகபோக அதிகாரங்கள் உள்ள பதவியாக அரசால் வர்ணிக்கப்பட்ட எனது படைகளின் பிரதானி என்ற இடத்துக்கு எவருமே பதில் அதிகாரியாக நியமிக்கப்படவில்லை. இதிலிருந்து இந்தப் பதவிக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது என்பது புலனாகிறது.

இடம்பெயர்ந்தோர் குறித்து முறையான திட்டம் இல்லை

13. மிகவும் கட்டுக்கோப்புடனும் ஒழுக்கத்துடனும் நான் கட்டிவளர்த்த சிறிலங்கா இராணுவம் இன்று சின்னா பின்னப்பட்டுப்போயிருக்கிறது. படைகளிலிருந்து இராணுவத்தினர் தப்பியோட்டம், படைக்கட்டமைப்புகளிடையே சீரற்ற நிலை, தளபதிகளிடையே முரண்பாடு என எத்தனையோ பிரச்சினைகளால் சிறிலங்கா இராணுவம் இன்று ஈடாடுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இராணுவத்துக்குப் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப் பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களின் எண்ணிக்கை அதிகம்.

14. நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக படையினரின் மிகப்பெரிய தியாகத்தால் பெறப்பட்ட வெற்றி இன்று, அரசின் ஆற்றலற்ற போக்கினால் நாட்டுமக்களுக்கு எதையும் வழங்காத நிலையை ஏற்படுத்தியுள்ளது. போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் துன்பப்படும் மக்களது விடயத்தில் அரசிடம் முறையான திட்டமில்லை. அவர்களை அவர்களது உறவினர்களது வீடுகளிலாவது தங்க அனுமதிக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை.

15. எனது தலைமையின் கீழ் எமது படைகள் இராணுவ வெற்றியை பெற்றுத்தந்துள்ளன. இதன் மூலம் தமிழ்மக்களது மனங்களை வெல்லும்வகையில் நாட்டில் அமைதியை ஏற்படுத்தாவிட்டால், இந்த வெற்றி உதாசீனப்படுத்தப்பட்டு, எதிர் காலத்தில் மீண்டும் கிளர்ச்சிக்கு முகம் கொடுக்க நாடு தள்ளப்படும்.

16. போரின் முடிவில் இந்த நாட்டில் அமைதி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டுமக்கள் உள்ளனர். ஆனால், லஞ்சமும் ஊழலும் அதிகரித்து ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறை மிதமிஞ்சி ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இதனால், தாய்நாட்டுக்காக எமது படையினர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் நிச்சயம் துஷ்பிரயோகமாகப் போகின்றன.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட ....... சரத்பொன்சேகாவை பற்றி ஒரு கிழமையிலை பத்து பதிவு பாத்து ....

பாத்து விசர் பிடிச்சு போட்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில அறிக்கை விட்டிருக்கிறார், எங்களின்ட உரிமை பற்றியும் எடுத்து விட்டிருக்கிறார். வோட்டு போட சொல்லலாமோ? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.